search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vande Bharat Express"

    • நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • ரெயிலில் உள்ள 6 பெட்டிகளில் கண்ணாடிகள் சேதமடைந்தது.

    நெல்லை:

    நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் நெல்லையில் இருந்து வழக்கம்போல் நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்றுவிட்டு பின்னர் மதியம் 2.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு நெல்லைக்கு வந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில் இரவு 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே வாஞ்சி மணியாச்சிக்கும், நாரைக்கிணறுக்கும் இடையே வந்தே பாரத் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் ரெயில் பெட்டிகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ரெயிலில் உள்ள 6 பெட்டிகளில் கண்ணாடிகள் சேதமடைந்தது.

    உடனே பெட்டிகளில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் ரெயில் வேகமாக வந்ததால் சிறிது நேரத்தில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

    இதுகுறித்து நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வந்தே பாரத் ரெயில்பெட்டிகளை ஆய்வு செய்தனர்.


    அதில் 6 பெட்டிகளின் இடது புறங்களில் சுமார் 9 இடங்களில் கண்ணாடிகள் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்திருந்தது.இதுதொடர்பாக நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் அதில் மர்ம நபர்கள் உருவம் எதுவும் பதிவாகவில்லை.

    தொடர்ந்து சேதம் அடைந்த ரெயில் பெட்டிகளில் பயணித்த பயணிகளிடம் அவர்கள் விசாரித்தனர். அப்போது நாரைக்கிணறு பகுதியில் வைத்து இந்த கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு சென்று ஆய்வு செய்தனர். மர்ம நபர்கள் யாரேனும் அந்த பகுதியில் பதுங்கி உள்ளார்களா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    சம்பவ இடம் முட்புதர்கள் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்தது. மேலும் அந்த இடத்தில் மதுபாட்டில்கள் உள்ளிட்டவையும் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால் மதுபோதையில் கும்பல் ஏதேனும் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாமா? அந்த கும்பல் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே இன்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் வந்தே பாரத் ரெயில் மீண்டும் தனது இயக்கத்தை தொடங்கி சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செப்டம்பர் 9 முதல் சென்னை-திருநெல்வேலி மார்க்கத்தில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது
    • வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 5 மணி 50 நிமிடங்களாக உள்ளது

    இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்திய ரெயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டது 'வந்தே பாரத்' ரெயில் சேவை. பகல் நேர ரெயில் சேவையான இதன் மூலம் ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தில் பயணிகள் நாட்டின் ஒரு நகரிலிருந்து மற்றொரு முக்கிய நகரத்தை அடைய முடியும். மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த சேவை தமிழ்நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை-மைசூரு மற்றும் சென்னை-கோயம்புத்தூர் ஆகிய மார்க்கங்களுக்கிடையே முன்னரே இந்த சேவை அறிமுகமான நிலையில் செப்டம்பர் 9 முதல் சென்னை-திருநெல்வேலி மார்க்கத்தில் 'வந்தே பாரத்' ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஆனால், இதன் காரணமாக ஏற்கெனவே இந்த மார்க்கத்தில் இயங்கி வந்த பிற ரெயில்களின் பயண நேரம் அதிகமாக தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் ரெயில்களின் புதிய பயண நேரப்படி மதுரை-சென்னை மார்க்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் 15 நிமிடங்கள் அதிகமாகவும், பாண்டியன் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் பயண நேரம் 10லிருந்து 15 நிமிடங்கள் வரையும் அதிகரிக்கப்படுகிறது.

    'வந்தே பாரத்' ரெயிலின் பயண நேரம் (சென்னை-மதுரை) 5 மணி 50 நிமிடங்களாகவும், பிற அதி விரைவு (Super Fast) ரெயில்களின் பயண நேரம் 7 மணி 45 நிமிடங்கள் எனவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    பத்து வருடங்களுக்கு முன்பு, சதாப்தி ரெயில்களில் பயணிப்பதை ஊக்குவிக்க அதே தடத்தில் பிற ரெயில்களின் பயண நேரங்களை அதிகரிக்க செய்த முயற்சியை போலவே பயணிகளால் இது பார்க்கப்படுகிறது.

    பெரும் பொருட்செலவில் ரெயில் பாதைகளை மேம்படுத்தி விட்டு அதன் பயன் மற்ற அதி விரைவு ரெயில் பயண கட்டணங்களை விட 15 சதவீதம் அதிகமுள்ள ரெயில்களுக்கு மட்டுமே பலனளிக்கும் வகையில் மாற்றியமைத்திருப்பது ஒரு வகையில் மக்களின் பணத்தை வீணடிப்பதாகும் என ரெயில் பயணிகள் விமர்சிக்கின்றனர்.

    • ரெயில்வேயில் பயணிகளுக்கு நல்ல உணவு வழங்கப்படுகிறதா என்பதைக் கண்டறிய குழு நியமனம்.
    • ஐஆர்சிடிசி எடுத்த நடவடிக்கையால் பயணிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல உணவு கிடைக்கும்.

    மும்பை- கோவா இடையேயான சிஎஸ்எம்டி- மட்கான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயணிக்கு வழங்கிய உணவில் மனித விரல் நகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வீடியோ எடுத்த பயணி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

    இந்த வீடியோ வைரலானதை அடுத்து, ரெயில்வே அளிக்கும் உணவின் தரத்தால் பாதிக்கப்பட்டதாக பலரும் தங்களின் மோசமான அனுபவத்தை பகிர்ந்தனர்.

    இதுகுறித்து இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்திற்கு தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட கேட்டரிங் ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தது.

    மேலும் இதுதொடர்பாக, ஐஆர்சிடிசி கூறுகையில், "ரெயில்வேயில் பயணிகளுக்கு நல்ல உணவு வழங்கப்படுகிறதா என்பதைக் கண்டறிய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    சில நெறிமுறைகள் உருவாக்கப்பட்டன. இதில் அதிகாரி ஒருவர் வந்தே பாரத் விரைவு ரெயிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த முறை ஐஆர்சிடிசி ரத்னகிரியில் உள்ள கிச்சனை முழுமையாக சோதனை செய்தது.

    ஐஆர்சிடிசி எடுத்த நடவடிக்கையால் பயணிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல உணவு கிடைக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தது.

    • வந்தே பாரத் ரெயில் டெல்லியில் இருந்து டேராடூனுக்கு 4 மணி 45 நிமிடங்களில் சென்றடையும்.
    • டெல்லியில் இருந்து டேராடூனுக்கு செல்ல ஏ.சி. சேர் கார் டிக்கெட் விலை ரூ. 1065 ஆகும்.

    பிரதமர் நரேந்திர மோடி டெல்லி - டேராடூன் இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை இன்று துவங்கி வைக்கிறார். இது உத்தராகண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரெயில் ஆகும். ரெயில் சேவை இன்று துவங்கப்படும் நிலையில், டெல்லி மற்றும் டேராடூன் இடையேயான முதல் ரெயில் சேவை மே 29 ஆம் தேதி துவங்கும் என்று ஐஆர்சிடிசி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    டெல்லியில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் 302 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள டேராடூனுக்கு 4 மணி 45 நிமிடங்களில் சென்றடையும். வார நாட்களில் புதன் கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட இருக்கிறது.

     

    கட்டண விவரங்கள்:

    டெல்லியில் இருந்து டேராடூனுக்கு செல்ல ஏ.சி. சேர் கார் டிக்கெட் விலை ரூ. 1065 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எக்சிக்யூடிவ் சேர் கார் டிக்கெட் விலை ரூ. 1890 ஆகும். 22457 எண் கொண்ட இந்த ரெயில் ஆனந்த் விகார் ரெயில்வே நிலையத்தில் இருத்து 17.50 (5.50) மணிக்கு புறப்பட்டு டேராடூனுக்கு 22.35 (10.35) மணி அளவில் சென்றடையும்.

    டேராடூனில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் ஆனந்த விகார் ரெயில் நிலையத்திற்கு 11.45 மணிக்கு வந்தடையும். இடையில் மீரட், முசாபர்நகர், சகாரன்பூர், ரூர்கி மற்றும் ஹரித்வார் போன்ற ரெயில் நிலையங்களில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும். இந்த ரெயிலில் மொத்தம் எட்டு கோச்கள் உள்ளன.

    தற்போதைய நிதியாண்டில் ஆறு வந்தே பாரத் ரெயில்கள் ராணி கமலாபேட்-ஹசரட் நிசாமுதீன், செகந்தராபாத்- திருப்பதி, சென்னை - கோயம்புத்தூர், அஜ்மீர் - டெல்லி கண்டோன்மெண்ட், திருவனந்தபுரம் செண்ட்ரல்-கசர்கோட், ஹவுரா- பூரி ஆகிய வழித்தடங்களில் துவங்கப்பட்டு இருக்கிறது.

    • வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் நேரத்தையும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.
    • வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 5 மணி நேரம் 50 நிமிடங்கள்.

    கோவை:

    கோவை-சென்னை இடையே புதிதாக வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்படுகிறது. இந்த ரெயில் சேவையை நாளை (8-ந் தேதி) மாலை பிரதமர் மோடி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தொடங்கி வைக்கிறார்.

    இதற்கிடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் நேரத்தையும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் புதன்கிழமையை தவிர மற்ற 6 நாட்களிலும் இந்த வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.

    நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே பாரத் ரெயில் இரவு 10 மணிக்கு கோவை ரெயில் நிலையத்திற்கு வருகிறது.

    பின்னர் மறுநாள் காலை 6 மணிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு கோவையில் இருந்து சென்னை நோக்கி வந்தே பாரத் ரெயில் (ரெயில் எண்:20644) புறப்படுகிறது.

    இந்த ரெயில் 6.35 மணிக்கு திருப்பூர், 7.12 மணிக்கு ஈரோடு, 7.58-க்கு சேலம், 9.35-க்கு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு சென்று, பின்னர் முற்பகல் 11.50 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் சென்னை சென்டிரல்-கோவை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (20643) மதியம் 2.25 மணிக்கு புறப்படுகிறது. 4.40 மணிக்கு ஜோலார்பேட்டை, 5.48 மணிக்கு சேலத்துக்கும், 6.32க்கு ஈரோடு, 6.13 மணிக்கு திருப்பூர் வந்து, இரவு 8.15 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை வந்தடைகிறது.

    இந்த வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 5 மணி நேரம் 50 நிமிடங்கள்.

    வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் நேரம் அறிவித்ததை அடுத்து இன்று முதல் முன்பதிவும் தொடங்கியுள்ளது. இந்த ரெயிலில் பயணிக்க பலரும் ஆர்வம் காட்டி வருவதால் இன்று காலை முதலே முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கோவை-சென்னை இடையே நாளை முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 8 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

    குளிரூட்டப்பட்ட இந்த ரெயிலில் 450 இரண்டாம் நிலை இருக்கைகளும், 56 முதல் நிலை இருக்கைகளும் உள்ளன.

    முதல் நிலை இருக்கைக்கு ரூ.2,310-ம், இரண்டாம் நிலை இருக்கைக்கு ரூ.1215 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. வந்தே பாரத் ரெயில் 110 கி.மீ வேகத்தில் இயக்கப்படும்.

    தற்போது இந்த ரெயிலில் பயணிப்பதற்கான முன்பதிவுகள் தொடங்கி உள்ளது. பயணிக்க விரும்புவோர் இணையம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

    புதன்கிழமையை தவிர வாரத்தில் 6 நாட்களும் இந்த ரெயில் இயக்கப்படும். இந்த ரெயிலின் பராமரிப்பு பணிகள் அனைத்தும் கோவையிலேயே நடக்கும். பயணிகளின் வரவேற்பை பொறுத்து பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக கோவை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் 2 கட்டமாக நடந்தது. கடந்த 30-ந் தேதி காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட ரெயில் காலை 11.20 மணிக்கு கோவைக்கு வந்தது.

    முதல் சோதனை ஓட்டத்தின்போது சுமார் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் வந்தே பாரத் ரெயில் கோவை வந்தது.

    தொடர்ந்து நேற்று முன்தினம் 2-வது கட்டாக சோதனை ஓட்டம் நடந்தது. காலை 5.40 மணிக்கு புறப்பட்ட ரெயில் காலை 11.40 மணிக்கு கோவைக்கு வந்தது. 2 கட்டமாக நடத்தப்பட்ட சோதனை ஓட்டங்களும் வெற்றியடைந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்.
    • சென்னை-கோவை இடையேயான 'வந்தே பாரத்' அதிவிரைவு ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திரமோடி நாளை சென்னை வருகிறார். நாளை மதியம் 3 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திரமோடி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை செயல்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார்.

    இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐ.என்.எஸ். அடையாறு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்று சென்னை-கோவை இடையேயான 'வந்தே பாரத்' அதிவிரைவு ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    இந்நிலையில் சென்னை - கோவைக்கு இருமார்க்கத்திலும் வந்தே பாரத் ரெயில் சேவை முன்பதிவு தொடங்கி உள்ளது. 6 மணி நேர பயணத்திற்கு ரூ.1,057 முதல் ரூ.2,310 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தினசரி இந்த ரெயில் காலை 6 மணிக்கு கோவையில் புறப்பட்டு, 11.50 மணிக்கு சென்னையை வந்தடையும்.

    அதேபோல, தினசரி மதியம் 2.25-க்கு சென்னையில் புறப்பட்டு இரவு 8.15-க்கு கோவையை சென்றடையும்.

    உணவுடன் சேர்த்து, குளிர்சாதன சேர் கார் கட்டணம் ரூ.1215, எக்ஸ்கியூட்டிவ் சேர் கார் கட்டணம் ரூ.2310 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    உணவு வேண்டாம் என்பவர்களுக்கு, முறையே ரூ.1057 மற்றும் ரூ.2116 வசூல் செய்யப்படும்.

    • ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.
    • ரெயில் மீது கல்வீசி தாக்கியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம் வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    ரெயில் சேவை தொடங்கப்பட்ட சிறிது நாட்களிலேயே அடுத்தடுத்து 2 முறை வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்குதல் சம்பவம் நடந்தது.

    நாளை மறுதினம் தெலுங்கானா ஆந்திரா இடையே செகந்திராபாத்தில் இருந்து திருப்பதி வரை 2-வது வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரே ஒரு வந்தே பாரத் ரெயில் சேவை மட்டுமே தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஆந்திரா தெலுங்கானா இடையே 2-வது வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு சென்ற வந்தே பாரத் ரெயில் மீது தண்டவாளம் அருகே பதுங்கி இருந்த மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் ரெயில் மீது கல்வீசி தாக்கியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வந்தே பாரத் ரெயில் மீது 3-வது முறையாக கல் வீசி தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • லக்னோவில் நாளை உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
    • மகாராஷ்டிராவில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 4 ஆக உயரும்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி நாளை உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலீட்டாளர் மாநாடு, வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

    காலை 10 மணியளவில் லக்னோவில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும், உலகளாவிய வர்த்தகக் கண்காட்சி மற்றும் முதலீட்டாளர்களுக்கான இன்வெஸ்ட் உ.பி. 2.0 என்ற அமைப்பையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நாளை தொடங்கி 3 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    லக்னோ நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிற்பகல் மகாராஷ்டிரா வரும் பிரதமர் மோடி, மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் இருந்து மும்பை-சோலாப்பூர் வந்தே பாரத் மற்றும் மும்பை-சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் ஆகிய ரெயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் மகாராஷ்டிராவில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 4 ஆக உயரும்.

    புதிய இந்தியாவுக்கான சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இது ஒரு முக்கியமான படியாக இருக்கும் என ரெயில்வே அமைச்சகம் கூறி உள்ளது. 

    • மேற்கு வங்காள மாநிலத்தில் வந்தே பாரத் அதிவேக ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • குமார்கஞ்ச் ரெயில் நிலையம் அருகே விஷமிகள் சிலர் வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசி தாக்கினர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் ஹவுரா-புது ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் அதிவேக ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கிவைத்தார்.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை அந்த ரெயில் புது ஜல்பைகுரியில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்றது. மால்டா மாவட்டத்தின் குமார்கஞ்ச் ரெயில் நிலையம் அருகில் சென்றபோது அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர் வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசி தாக்கினர். அதில் ஒரு பெட்டியின் கண்ணாடி கதவில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் ரெயில் தொடர்ந்து இயக்கப்பட்டு, அடுத்து வந்த வழக்கமான நிறுத்தமான மால்டா ரெயில் நிலையத்தில்தான் நிறுத்தப்பட்டது. அந்த ரெயில் நிலைய ரெயில்வே போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், மேற்கு வங்காள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ.க. தலைவருமான சுவேந்து அதிகாரி, 'இந்த ரெயில் தொடக்க விழாவில் 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷம் எழுப்பப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் கல் வீசி தாக்கப்பட்டுள்ளதா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலன் விசாரணை அமைப்பின் விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா, வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
    • பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    பெங்களூரு:

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி பெங்களூரு வருகிறார். அவர் அன்றைய தினம் காலை 10 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வருகிறார். சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-வது முனையத்தை திறந்து வைக்கிறார். அதே விழாவில் கெம்பேகவுடாவின் 108 அடி உயர வெண்கல சிலையையும் திறந்து வைக்க இருக்கிறார். அதன் பிறகு பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் அன்றைய தினம் பிரதமர் மோடி இந்தியாவின் 5-வது மற்றும் தென்இந்தியாவின் முதல் அதிவேகமாக செல்லும் சென்னை - மைசூரு இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் சேவையை பெங்களூருவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா, வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

    விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு வந்து பட்டமளிப்பு விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மர்ம ஆசாமிகள் சிலர் கற்களை வீசி எறிந்ததால் ரெயிலின் முகப்பு பெட்டியின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. #VandeBharatExpress
    புதுடெல்லி:

    சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலை தயாரித்த நாட்டின் முதல் அதிவேக ரெயிலான ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலை, கடந்த 15-ந்தேதி டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லி-வாரணாசி இடையே தனது முதல் வர்த்தக பயணத்தை கடந்த 17-ந்தேதி தொடங்கியது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வாரணாசியில் இருந்து டெல்லி நோக்கி ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது மர்ம ஆசாமிகள் சிலர் அந்த ரெயிலின் மீது கற்களை வீசி எறிந்தனர். இதில் ரெயிலின் முகப்பு பெட்டியின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது.

    அதேபோல் பயணிகள் பெட்டிகள் சிலவற்றின் ஜன்னல் கண்ணாடியும் சேதம் அடைந்தது. இந்த கல்வீச்சில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் மீது இப்படி கல் வீசப்படுவது இது 4-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
    நாட்டின் அதிவேக ரெயிலான ‘வந்தே பாரத்’ ரெயில் தனது முதல் பயணத்திலேயே காசியாபாத்-துண்ட்லா இடையே கடும் பனிமூட்டம் காரணமாக தாமதமாக வந்தடைந்தது. #VandeBharatExpress #Varanasi
    புதுடெல்லி:

    நாட்டின் அதிவேக ரெயிலான ‘வந்தே பாரத்’ ரெயில் கடந்த 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. மணிக்கு சராசரியாக 130 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரெயில் டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தனது வர்த்தக ரீதியான பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கியது.

    இந்த முதல் பயணத்திலேயே தடங்கல் ஏற்பட்டது. அதாவது காசியாபாத்-துண்ட்லா இடையே கடும் பனிமூட்டம் இருந்ததால் ரெயில் மணிக்கு 60 கி.மீ. வேகத்திலேயே இயக்கப்பட்டது. இதனால் முதல் பயணமாக வாரணாசி சென்ற போது 1.25 மணி நேரம் தாமதமாகவே வாரணாசியை அடைந்தது.

    இதைப்போல அங்கிருந்து டெல்லி திரும்பிய போதும் இதே நிலை நீடித்ததால் டெல்லிக்கு 1.48 மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது. பயணிகளின் பாதுகாப்பு கருதியே இந்த வேகக்குறைப்பு எடுக்கப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.  #VandeBharatExpress
    ×