search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM Narendra Modi"

    • 520 மீட்டர் நீளத்திற்கு ஹூக்ளி நதியின் கீழே இந்த சுரங்கப் பாதை அமைகிறது
    • செக்டார் வி பகுதியிலிருந்து ஹவுரா நகரை 27 நிமிடத்தில் அடைந்து விடலாம்

    மெட்ரோ ரெயில் சேவை திட்டங்களில் ஒன்றாக இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ பாதையை, கொல்கத்தாவில், பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 6 அன்று தொடங்கி வைக்கிறார் என இந்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    நதிக்கு அடியில் ரெயில்களில் பயணிக்கும் புதிய அனுபவத்தை நாட்டிலேயே முதல் முறையாக, கொல்கத்தா நகர மக்கள் பெற உள்ளனர்.

    520 மீட்டர் நீளத்திற்கு நதியின் கீழே இந்த சுரங்க பாதை அமைகிறது.

    இந்த சுரங்கப்பாதையின் உள்-விட்டம் 5.55 மீட்டராகும்; வெளிப்புற விட்டம் 6.1 மீட்டராகும். ஹூக்ளி நதியில் 32 மீட்டருக்கு கீழே இதை உருவாக்கி உள்ளனர்.

    பயணிக்கும் போது சுமார் 1 நிமிடத்திற்கும் குறைவாகவே பயண நேரம் அமையும்.


    கொல்கத்தா மக்களுக்கு இது கணிசமாக பயண நேரத்தை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது, கிழக்கு கொல்கத்தாவில் இருந்து செக்டார் வி (Sector V) எனும் இடத்திலிருந்து ஃபூல்பகன் (Phoolbagan) எனும் இடத்திற்கு இடைப்பட்ட 6.97 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ள பசுமை தட (Green Line) மெட்ரோ சேவை, இப்புதிய நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ சேவை தொடங்கப்பட்டதும், ஹூக்ளி நதியின் கீழே, செக்டார் வி பகுதியிலிருந்து ஹவுரா (Howrah) நகரை 27 நிமிடத்தில் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஹூக்ளி நதிக்கு 35 மீட்டருக்கு கீழே தடையில்லாத இணைய சேவை வழங்கப்படும் என இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல் (Airtel) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த சேவை நடைமுறைக்கு வந்ததும் இந்தியாவிலேயே ஆழமான மெட்ரோ சேவை தரும் ரெயில் நிலையமாக ஹவுரா ரெயில் நிலையம் உருப்பெறும். அத்துடன் ஒரு நதியின் கீழ் செயல்படும் முதல் மெட்ரோ சேவையாகவும் இது விளங்கும்.

    • மோடி, 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரு முறை கூட பேட்டியளித்ததில்லை
    • சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து கேட்டால் முகத்தை திருப்பி கொள்வார் என்றார் ஜஃப்ரெலாட்

    கடந்த 2014ல் முதல்முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி.

    அவரது முதல் பதவிக்காலம் முடிந்ததும் மீண்டும் 2019ல் பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றார்.

    காங்கிரஸ் கட்சி அல்லாத, காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெறாத ஒரு கட்சியில் இருந்து தொடர்ந்து 2 முறை ஒருவர் பிரதமர் ஆனது நாட்டிலேயே அப்போதுதான் முதல்முறையாக நடந்தது.

    இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் மீண்டும் பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க.வினால் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒருவர் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதும், தொலைக்காட்சியில் மக்களுக்கு செய்தியளிப்பதையும் கடந்து ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நடைமுறையை ஒரு முறை கூட கடைபிடிக்கவில்லை.


    பலரும் இதனை விமர்சித்து வரும் நிலையில், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளின் அரசியல் குறித்து விமர்சித்து வருபவரான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 60 வயதான கிறிஸ்டோஃப் ஜஃப்ரெலாட் (Christophe Jaffrelot) இதனை விமர்சனத்துள்ளார்.

    கிறிஸ்டோஃப் விமர்சனத்தில் தெரிவித்ததாவது:

    பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் மோடி, ஊடகவியலாளர்கள் சந்திப்பையோ, கலந்துரையாடல்களையோ ஏன் தவிர்க்கிறார்? ஏனென்றால், அவர் பேச்சில் குறிப்பிடும் "இந்தியா" என ஒரு இந்தியா இல்லவே இல்லை.

    இல்லாத ஒரு இந்தியா இருப்பதாக மிக அழகாக நீங்கள் கற்பனை செய்து வைத்துள்ள நிலையில், கற்பனையை உடைக்கும் வகையில் எந்த கேள்வி எழுப்பப்பட்டாலும், அது ஒரு வெற்றிடத்தை காட்டி விடும்.

    பொருளாதாரம் சிறப்பாக இல்லை. சீனாவுடனான உறவுமுறை சரியாக இல்லை. இது குறித்து கேட்கப்பட்டால் அவர் முகத்தை திருப்பி கொள்வார்.

    சீனா நம் நாட்டை ஆக்கிரமித்துள்ளது என்பதை அவர் எவ்வாறு ஒப்பு கொள்வார்? அவரால் பதில் சொல்ல முடியாது.

    அதைத்தான் அவர் மாதந்தோறும் "மன் கி பாத்" (Mann ki baat) நிகழ்ச்சியில் செய்து வருகிறார். அது ஒரு ஒன்வே டிராஃபிக்.

    ஆனால், பத்திரிகையாளர்கள் அவரிடம் அவர் நம்பிக்கைக்கு எதிரான கேள்விகளை எழுப்பினால் அவரால் சமாளிக்க முடியாது.

    இவ்வாறு கிறிஸ்டோஃப் கூறினார்.

    • எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரையும் மோடி பாராட்டி பேசினார்
    • 2024ல் அதிமுக தோற்றால் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பலாம் என்கின்றனர் விமர்சகர்கள்

    அடுத்த சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.

    கடந்த 2023 செப்டம்பர் மாத இறுதியில் பா.ஜ.க.வுடன் கொண்டிருந்த கூட்டணி, முறிவுக்கு வந்ததாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக அறிவித்தார்.

    இந்நிலையில் இன்று, தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள மாதப்பூரில், பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றினார்.

    அவர் தனது உரையில், அ.தி.மு.க.வின் முன்னாள் தலைவர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரையும் தனித்தனியே பெயரை குறிப்பிட்டு பாராட்டி பேசினார்.

    தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவற்றுடன் கூட்டணி வைக்க இயலாத சூழ்நிலையில் பா.ஜ.க. இருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் உரை சில சந்தேகங்களை எழுப்புவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


    பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து எடப்பாடி தரப்பில் எவரையும் இதுவரை குறிப்பிட இயலவில்லை.

    2016ல் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை குறித்து ஏதும் கூறாமல் "ஜெயலலிதாவின் ஆட்சிதான் தமிழகத்தில் கடைசியாக நிலவிய நல்லாட்சி" என கூறியதன் மூலம், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளான அ.தி.மு.க. வாக்காளர்கள் மனதில், "நடைபெற போவது பிரதமருக்கான தேர்தல். அதில் அ.தி.மு.க.விற்கு வேட்பாளர் இல்லை என்பதால் மோடிக்கே வாக்களித்தால் என்ன?" எனும் சிந்தனை ஓட்டத்தை விதைக்க முனைகிறாரா என சில விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    தனது உரையில் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டா விட்டாலும், விமர்சிக்கவும் இல்லை என்பதை சுட்டி காட்டும் சில விமர்சகர்கள் மோடியின் வியூகம் இரண்டு விதமாக இருக்கலாம் என கருத்து தெரிவிக்கின்றனர்.


    ஒன்று, கூட்டணிக்கான கதவு இன்னமும் திறந்துதான் உள்ளது என உணர்த்தி அ.தி.மு.க.வை கூட்டணிக்கு அழைக்கும் முயற்சியாக இது இருக்கலாம்.

    மற்றொன்று, தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.வை அ.தி.மு.க. ஆதரிக்கலாம் எனும் கருத்தை விதைப்பதன் மூலம் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் அ.தி.மு.க.விற்கு கிடைப்பதை தடுத்து, தி.மு.க.விற்கே செல்ல வழிவகுத்து இத்தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைய வியூகம் வகுக்கிறாரா என சந்தேகம் எழுப்புகின்றனர்.

    இவ்வாறு நடந்தால் சட்டசபை, உள்ளாட்சி, இடைத்தேர்தல் என தொடர் தோல்வியை கண்ட எடப்பாடி பழனிச்சாமி மக்களவை தேர்தலிலும் தோல்வியடைந்தால், அவருக்கு எதிராக கட்சியில் எதிர்ப்பு கிளம்பி, அவர் பதவி விலக நேரிட்டு வேறொரு பா.ஜ.க. ஆதரவாளர் பதவி ஏற்கலாம், அல்லது கட்சியில் பிளவு ஏற்படலாம்.

    இதன் மூலம் அ.தி.மு.க. தேயத் தொடங்கலாம்.

    2026ல் தி.மு.க.விற்கு எதிராக பா.ஜ.க. மட்டுமே என சட்டசபை தேர்தல் களம் அமைய வழி பிறக்கலாம்.

    இவையனைத்தும் விமர்சகர்களின் கணிப்புகள்தான் என்றாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே பிரதமர் மோடி தமிழகத்தில் காய் நகர்த்த தொடங்கி விட்டதாகவே சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • 1984ல் 2 எம்.பி.க்களை கொண்டிருந்த பா.ஜ.க. 2014ல் ஆட்சி அமைத்தது
    • ஜெயலலிதா 39 மக்களவை தொகுதிகளையும் வெல்வதற்கு வியூகம் அமைத்தார்

    2014 மக்களவை தேர்தல் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல திருப்புமுனைகளை உருவாக்கியது.

    அந்த தேர்தலில் ஆட்சியை இழந்த தேசிய கட்சியான காங்கிரஸ், பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ஆனால், 1984ல் 2 எம்.பி.க்கள் மட்டுமே பெற்றிருந்த பா.ஜ.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

    2014ல் காங்கிரஸ் சார்பில் பிரதமரான மன்மோகன் சிங்கின் ஆட்சி, 2ஜி மற்றும் காமன்வெல்த் உள்ளிட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ள நேர்ந்தது.

    தி.மு.க., காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருந்தது.

    மன்மோகன் சிங் தேர்தலில் போட்டியிட விருப்பமின்றி விலகிய நிலையில், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பா.ஜ.க., பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்தி நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது.

    அந்த காலகட்டத்தில் தமிழகத்தில், ஜெயலலிதா 39 மக்களவை தொகுதிகளையும் வெல்வதற்கு வியூகம் அமைத்தார்.


    நாடெங்கிலும் "மோடி, மோடி" எனும் பா.ஜ.க. ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் "மோடியா, இந்த லேடியா?" என ஜெயலலிதா தமிழக வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பி வாக்கு சேகரித்து வந்தார்.

    பிற மாநில அரசியல் தலைவர்கள் காங்கிரஸ் கூட்டணி (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) அல்லது பா.ஜ.க. கூட்டணி (தேசிய ஜனநாயக கூட்டணி) எனும் நிலைப்பாட்டை எடுத்து வந்த நிலையில் ஜெயலலிதாவின் "மோடியா?, லேடியா?" முழக்கம், அரசியல் விமர்சகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

    ஆச்சரியம் அளிக்கும் வகையில் அ.தி.மு.க. 37 இடங்களில் வென்றது.


    இந்நிலையில், 18-வது மக்களவைக்கான தேர்தல் வரும் மாதங்களில் நடைபெறவுள்ளது.

    இன்று, தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில், மாதப்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அவர் தனது உரையில், "ஜெயலலிதா ஆட்சிக்கு பிறகு நல்லாட்சி தமிழகத்தில் அமையவில்லை" என கூறியது அரசியல் விமர்சகர்களால் பெரிதும் விவாதிக்கப்படுகிறது.

    தன்னை எதிர்த்து "மோடியா? இந்த லேடியா?" என முழக்கமிட்டு வென்ற ஜெயலலிதாவை புகழ்வதன் மூலம் ஜெயலலிதாவின் ஆளுமைக்கு முன் தனது ஆளுமை தமிழகத்தில் வெற்றிக்கு வழிவகுக்காது என மோடி கருதுகிறாரா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், கல்லூரி மாணவர்களுக்கும் மாணவியர்களுக்கும் மடிக்கணினி, தாலிக்கு தங்கம் திட்டம்,  பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறை என ஜெயலலிதாவின் பெரும்பாலான திட்டங்கள் அவருக்கு கணிசமாக பெண்கள் வாக்குவங்கியை உருவாக்கி இருந்தது.

    பெண்கள் வாக்குகள் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.விற்கு செல்லாமல் பா.ஜ.க.விற்கே கிடைக்க செய்யும் முயற்சியாகவும் இது இருக்கக் கூடும் என சில விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • 2014 அக்டோபர் 2 அன்று 'ஸ்வச் பாரத் மிஷன்' திட்டம் தொடங்கப்பட்டது
    • 'ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம்' என அழைப்பு விடுத்தார்

    மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி எனும் பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தியா முழுவதும் சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 2014-ல் அக்டோபர் 2 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி 'ஸ்வச் பாரத் மிஷன்' (SBM) எனும் 'தூய்மை இந்தியா' திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள கிராமங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவை முழுவதிலும் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நாளை காந்தி ஜெயந்தியையொட்டி 9-வது ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்க, "ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம்" (ஏக் தரீக், ஏக் கண்டா, ஏக் சாத்) என நாட்டு மக்கள் அனைவருக்கும் மோடி அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய செயலாளர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நாடு முழுவதும் இதில் பங்கேற்றனர்.

    இதன் தொடர்ச்சியாக மல்யுத்த வீரர் அங்கித் பையன்புரியாவுடன் இணைந்து பிரதமர், தூய்மை பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

    தூய்மையே சேவை இயக்கத்தில் நாடு கவனம் செலுத்தி கொண்டிருக்கிறது. இன்று நான் அங்கித்துடன் தூய்மை பணியில் ஈடுபட்டேன். தூய்மையை தாண்டி உடற்தகுதி மற்றும் நல்வாழ்வு குறித்த கருத்துக்களை பரிமாறி கொண்டோம்.

    இவ்வாறு அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

    அரியானா மாநிலத்தை சேர்ந்த அங்கித் ஒரு உடற்பயிற்சி ஆர்வலர். இவர் வெளிநாட்டு உபகரணங்களின் உதவி இல்லாமல் இந்திய வழிமுறைகளிலேயே உடற்கட்டையும், உடல் நலத்தையும் பெற முடியும் என வலியுறுத்தி வருபவர். 75 நாட்கள் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சியின் மூலம் மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் வளர்த்து கொள்ள முடியும் என்பது இவரது சித்தாந்தம்.

    • பெண்கள் சார்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அழைக்கப்பட்டிருந்தார்
    • மலைவாழ் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஜனாதிபதியை அழைக்கவில்லை

    கடந்த செப்டம்பர் 2 அன்று தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சனாதன எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, "சனாதனம் எதிர்க்க வேண்டிய விஷயம் அல்ல; டெங்கு, மலேரியா போல ஒழிக்கப்பட வேண்டிய ஒரு நோய்" என கருத்து தெரிவித்தார். இவரது கருத்திற்கு ஆளும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், தமிழ்நாட்டின் எதிர்கட்சியான அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக உதயநிதி மீது உத்தர பிரதேசத்திலும், மகராஷ்டிரத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 28 அன்று திறந்து வைத்தார். நேற்று அக்கட்டிடத்தில் அதிகாரபூர்வமாக அலுவல்களை தொடங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உறுப்பினர்கள் சென்றனர். முதல் நாள் கூட்டத்தில் முதல் மசோதாவாக பெண்களுக்கு மக்களவையிலும் மாநில சட்டசபைக்களிலும் 33 சதவீத இட ஒதுக்கீடு செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த முதல் நாள் நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளராக பெண்கள் சார்பில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அழைக்கப்பட்டிருந்தார்.

    மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இதை விமர்சித்து உதயநிதி பேசினார்.

    அதில் அவர் கூறியதாவது:

    புதிய பாராளுமன்றக் கட்டிட திறப்பு விழாவிற்கு இந்தியாவின் ஜனாதிபதியான திரவுபதி முர்மு அழைக்கப்படவில்லை. அவர் மலைவாழ் மக்கள் சமுதாயத்தை சேர்ந்தவர். அத்துடன் கணவனை இழந்தவர். அதனால் அவரை அழைக்கவில்லை. நேற்றைய பாராளுமன்ற முதல் கூட்டத்திற்கு இந்தி நடிகையையெல்லாம் அழைத்திருக்கிறார்கள். இதுதான் சனாதனம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு உதயநிதி பேசினார்.

    புதிய கட்டிடத்தை இந்திய ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜெயா சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது குறிப்பிடத்தக்கது.

    • உதயநிதியின் கருத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது
    • எந்தவிதமான சட்ட நடவடிக்கைக்கும் தயார் என்றார் உதயநிதி

    கடந்த 2-ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் எனும் அமைப்பு, "சனாதன ஒழிப்பு கருத்தரங்கம்" எனும் பெயரில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மகனும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    அதில் உரையாற்றும் போது, இந்து மத கோட்பாடுகளில் ஒன்றான சனாதனம் குறித்து பேசுகையில், "சமூக நீதிக்கும் சமநீதிக்கும் எதிரானது சனாதனம். சனாதன தர்மம் என்பது வெறுமனே எதிர்க்கப்பட வேண்டியது அல்ல; அது டெங்கு, மலேரியா போன்று ஒழிக்கப்பட வேண்டியது" என கருத்து தெரிவித்தார்.

    இந்த கருத்துக்கு தி.மு.க.வில் உள்ள தலைவர்களும் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினரில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    ஆனால், மாநில எதிர்கட்சியான அ.தி.மு.க.வின் தலைவர்களும், அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான பா.ஜ.க.வின் தமிழக தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே போல், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களும், நாடு முழுவதும் உள்ள இந்து மத ஆன்மிக அமைப்புகளின் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தான் தெரிவித்த கருத்திலிருந்து தான் பின் வாங்க போவதில்லை என்றும், எந்தவிதமான சட்ட ரீதியான நடவடிக்கையையும் சந்திக்க தயார் என்றும் கூறி வரும் உதயநிதி, தனது கருத்திற்கு ஆதாரமாக புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைக்கப்படாததை சுட்டிக்காட்டி, "சனாதனத்தில் சாதி ரீதியான பாகுபாடு நிலவுகிறது" என கூறியிருந்தார்.

    இது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்து இருக்கிறார். அப்போது, "பா.ஜ.க.வின் எதிர்கட்சிகள் அரசியலமைப்பு சட்டத்தை நன்றாக படித்து பார்க்க வேண்டும். உதயநிதியின் கருத்திற்கு தக்க வகையில் பதிலடி தரப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

    இந்த சர்ச்சை உருவானதில் இருந்து தற்போது தான் பிரதமர் மோடி, முதல் முறையாக இது குறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, மத நம்பிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் எதிராக கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உத்தர பிரதேச ராம்பூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அழைப்பிதழில் "இந்திய ஜனாதிபதி" என்பது "பாரத்தின் ஜனாதிபதி" என இருக்கிறது
    • அடுத்த 1000 வருடங்கள் நாடு பயணிக்கும் திசையை "அம்ருத் கால்" முடிவு செய்யும்

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது.

    "அவசியமான சில மசோதாக்கள் தாக்கல் செய்வது உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். அவை குறித்து விரைவில் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்" என பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஆகஸ்ட் 31-ம் தேதி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இக்கூட்டத்தொடரில் நமது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

    தலைநகர் புது டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு வரும் தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்தளிக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழில் அவரை குறிப்பிடும் இடத்தில், "இந்தியாவின் ஜனாதிபதி" என்பதற்கு பதிலாக "பாரத்தின் ஜனாதிபதி" என குறிப்பிடப்பட்டுள்ளதை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சுட்டி காட்டியுள்ளார். இவரது கருத்து இக்தகவலுக்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளது.

    "இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள், அதில் 'பாரத்' என்றும் 'இந்தியா' என்றும் 2 பேரையும் வைத்திருந்தது தவறு. 'பாரத்' என்பது நமது நாட்டின் தொன்மையான கலாசாரத்தை குறிப்பதாக உள்ளது. ஆனால் 'இந்தியா' என்பது நம்மை அவமானப்படுத்த பிரிட்டிஷ்காரர்களால் உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை. அதை மீண்டும் 'பாரத்' என மாற்ற வேண்டும்" என பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்நாத் சிங் யாதவும் கூறியுள்ளார்.

    "மக்கள் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் நாம் 'இந்தியா' என நம் நாட்டை அழைக்க கூடாது. அதற்கு பதிலாக 'பாரத்' என அழைக்க தொடங்க வேண்டும்," என ராஷ்ட்ரீய சேவா சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    இதே விவகாரத்தை பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் நரேஷ் பன்ஸால், மாநிலங்களவையில் எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    "வெள்ளையர்களின் ஆதிக்க ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட அடிமை மனப்பான்மை, சுதந்திரம் பெற்றும் நமக்கு நீங்கவில்லை. அதனை நீக்கும் முயற்சியாக பல முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த 'அம்ருத் கால்' காலகட்டத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் அடுத்த 1000 ஆண்டுகளுக்கான பயணிக்கும் திசையை நாட்டுக்கு காட்டுவதாக இருக்கும்" என சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். இதன் ஒரு பகுதியாகவே நாட்டின் பெயரை மாற்றும் திட்டம் கொண்டு வரப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

    • இந்திய வேகப்பந்து வீச்சாளரின் தந்தை பிப்ரவரி 22 அன்று நாக்பூரில் காலமானார்.
    • பிரதமர் மோடி கடிதம் மூலம் கடந்த மாதம் 27-ந் தேதி இரங்கல் தெரிவித்திருந்தார்.

    உமேஷ் யாதவின் தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவர் பிப்ரவரி 22 அன்று தனது 74 வயதில் காலமானார்.

    இதனையடுத்து உமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் கடந்த மாதம் 27-ந் தேதி இரங்கல் தெரிவித்திருந்தார். அதில் தனது மகனை வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக மாற்றியதில் திலக் யாதவின் பங்கைப் பாராட்டினார். உமேஷின் தந்தையின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

    இந்நிலையில் தந்தையில் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடிக்குக்கு உமேஷ் யாதவ் நன்றி தெரிவித்தார். அதில், எனது தந்தையின் மறைவுக்கு இரங்கல் செய்தி அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு நன்றி. இந்த கடிதம் எனக்கும் என் குடும்பத்துக்கும் ஆறுதலாக உள்ளது என கூறினார். அந்த பதிவில் பிரதமரின் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது.


    உமேஷ் யாதவ் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியா சார்பில் விளையாடி வருகிறார். இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் உமேஷ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உமேஷ் யாதவ் இதுவரை இந்தியாவுக்காக 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011 ஆம் ஆண்டு டெல்லியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட்டில் அறிமுகமானார். உமேஷ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 168 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • பிரதமர் நரேந்திர மோடி வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்.
    • நடிகையும் ஆந்திர மந்திரியுமான ரோஜா பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

    ஆந்திரப்பிரதேச மாநிலம் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசு திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் பிரதமர் மோடி புறப்பட்டு செல்லும்போது நடிகையும் ஆந்திர மந்திரியுமான ரோஜா, பிரதமரிடம் செல்ஃபி எடுக்க அனுமதி கேட்டு அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார்.


    செல்ஃபி புகைப்படம்

    அப்போது ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உடனிருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவியும் கலந்து கொண்டார். ரோஜா அவருடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டார். ரோஜாவின் இந்த செல்ஃபி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    தலைநகர் டெல்லியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான ஆட்சி 352 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, மோடி 30-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் முக்கிய பிரமுகர்களை கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.



    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், பாராளுமன்ற தேர்தலில் வென்று பிரதமராக மீண்டும் பொறுப்பேற்க உள்ள நிலையில், பிரணாப்ஜி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என பதிவிட்டுள்ளார்.
    சூறாவளி தேர்தல் பிரசாரத்தை முடித்துள்ள பிரதமர் மோடி இன்று கேதார்நாத் சென்று சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.
    டேராடூன்:

    இமயமலைத் தொடரில் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில் அமைந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில், கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

    அவ்வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு கடந்த 9-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.  ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



    பிரமதர் மோடி பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நேற்றுடன் ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரமும் நிறைவடைந்துள்ளது. பிரசாரம் முடிந்துவிட்டதால் நான் சற்று ஓய்வெடுக்கலாம் என்று பிரதமர் கூறியிருந்தார்.

    இந்நிலையில் அவர் இன்று கேதார்நாத் சென்று சாமி தரிசனம் செய்ய இருக்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    ×