search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trinamool Congress"

    • இதுவரை இரு அவைகளிலிருந்தும் 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
    • எம்.பி.க்கள் வெளியேற்றம் ஏன் என மக்கள் புரிந்து கொள்வார்கள் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது

    நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், டிசம்பர் 13 அன்று மக்களவைக்கு உள்ளேயும், பாராளுமன்ற வளாகத்திலும் நடந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து அவையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்றும் இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, அவையில் கண்ணிய குறைவாக நடந்து கொண்டதாக எதிர்கட்சி எம்.பி.க்கள் 141 பேர் இதுவரை "சஸ்பெண்ட்" செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நடவடிக்கையை கண்டித்து எதிர்கட்சி எம்.பி.க்கள் அவைக்கு வெளியே வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதிய பாராளுமன்றத்தின் "மகர் த்வார்" வாயிலில் உள்ள படிக்கட்டுகளில் அவர்கள் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது மேற்கு வங்க செரம்போரே (Serampore) தொகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (TMC) மக்களவை உறுப்பினர் கல்யாண் பேனர்ஜி (Kalyan Banerjee) மாநிங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தங்கர் (Vice president Jagdeep Dhankhar) பேசுவதை போல் மிமிக்ரி செய்து நடித்து காண்பித்தார். அத்துடன் அவர், "எனது முதுகெலும்பு நேராக உள்ளது. நான் மிக உயர்ந்து இருக்கிறேன்" என கூறினார். உடலசைவகளையும் துணை ஜனாதிபதியை போலவே செய்து காட்டினார்.

    நகைச்சுவையாக அவர் மிமிக்ரி செய்ததை பல எம்.பி.க்கள் ரசித்தனர்; சிலர் தங்கள் மொபைல் போனில் வீடியோ பதிவும் செய்தனர்.

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தியும் இதனை தனது போனில் பதிவு செய்தார்.

    இச்சம்பவம் குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.

    மீண்டும் பாராளுமன்றம் மதியம் கூடிய போது ராகுலின் இந்த நடவடிக்கை குறித்து, "மாநிலங்களவை தலைவர் பதவியும் சபாநாயகர் பதவியும் வெவ்வேறானவை. அரசியல் கட்சிகளுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், உங்கள் கட்சியின் (காங்கிரஸ்) மூத்த தலைவர் மற்றொரு கட்சியின் உறுப்பினரின் நடத்தையை வீடியோ எடுக்கிறார். மக்களவை தலைவரை மிமிக்ரி செய்வது எவ்வளவு அபத்தமானது? எவ்வளவு வெட்கக்கேடானது? இதை ஒருக்காலும் ஒப்பு கொள்ள முடியாது" என ஜக்தீப் தங்கர் தெரிவித்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க. தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் நடவடிக்கையையும், அதன் தலைவர் மம்தா பானர்ஜியையும், ராகுல் காந்தியையும் விமர்சித்து, "எம்.பி.க்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என நாட்டு மக்கள் இப்போது புரிந்து கொள்வார்கள்" என பதிவிட்டுள்ளது.


    • மேற்கு வங்க பா.ஜனதா தலைவர் டாக்டர் சுகந்தோ மஜும்தார் தனது எக்ஸ் தளத்தில் ஒரு படத்தை வெளியிட்டார்.
    • தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லலித்ஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தபஸ்ராயுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் அத்துமீறிய வழக்கில் மூளையாக செயல்பட்ட லலித்ஜாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. தபஸ்ராயுடன் நீண்ட காலமாக தொடர்பு இருந்ததாக பா.ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இது தொடர்பாக மேற்கு வங்க பா.ஜனதா தலைவர் டாக்டர் சுகந்தோ மஜும்தார் தனது எக்ஸ் தளத்தில் ஒரு படத்தை வெளியிட்டார்.

    அதில், தபஸ்ராயுடன், லலித்ஜா செல்பி புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி உள்ளது. அந்த புகைப்படத்துடன் மஜும்தாரின் பதிவில், நமது ஜனநாயக கோவில் மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லலித்ஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தபஸ்ராயுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

    எனவே அவரது உடந்தையை விசாரிக்க இந்த ஆதாரம் போதாதா? என பதிவிட்டு இருந்தார்.

    இதே போல பா.ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறுகையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இப்போது திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்பு வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது என கூறியதோடு, இந்தியா கூட்டணி மீதும் புகார் கூறியுள்ளார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. பார்வையாளர்களாக வந்தவர்களுக்கு பாஸ் வழங்கிய பா.ஜனதா கட்சியின் மைசூர் எம்.பி. பிரதாப் சிம்ஹாவை விசாரிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

    அதே நேரம் பாஸ்களை வழங்கியதை தவிர குற்றம் சாட்டம் பட்டவர்களுடன் தனக்கு எந்த தொடர்பு கிடையாது என பிரதாப் சிம்ஹா மறுத்துள்ளார். 

    • பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த நிகழ்வின்போது இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு எங்கே இருந்தார்?
    • புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை மாற்றுவதற்கான விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன்?

    புதுடெல்லி:

    பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் விழா பழைய கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தங்கர் தலைமை தாங்கினார். இந்த நிலையில் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை மாற்றுவதற்கான விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த நிகழ்வின் போது இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு எங்கே இருந்தார்? அவர் அழைக்கப்பட்டாரா? ஜனாதிபதி புறக்கணிக்கப்பட்டது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

    கடந்த மே மாதம் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் 21 எதிர்க்கட்சிகள் அந்த விழாவை புறக்கணித்தன.

    • எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்படுவதாக காலையில் அறிவிக்கப்பட்டது.
    • ஒரு மணி நேரம் கழித்து அவை கூடியபோது அவைக்கு வந்து அவரது இருக்கையில் அமர்ந்திருந்தார்.

    மாநிலங்களவையில் இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். 267-வது விதியின் கீழ் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஒபிரையன் இருக்கையைவிட்டு எழுந்து ஆவேசமாக பேசினார். அவைத்தலைவர் உத்தரவிட்டும் கேட்கவில்லை.

    இதையடுதது, சபை நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைத்ததாக கூறி அவர் மீது அவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் நடவடிக்கை எடுத்தார். டெரிக் ஒபிரையன் எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்படுவதாக அறிவித்தார்.

    டெரிக் ஓ பிரையன் அவையைவிட்டு வெளியேற வேண்டும் என கூறிய அவைத்தலைவர், அதன்பின்னர் அவையை ஒத்திவைத்தார். ஒரு மணி நேரம் கழித்து அவை கூடியபோது டெரிக் ஓ பிரையன் அவைக்கு வந்து அவரது இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த அவைத்தலைவர், தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால் ஓ'பிரையன் மீண்டும் சபைக்குள் நுழைந்திருக்க முடியாது. டெரிக்கை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடாததால் அவை நடவடிக்கையில் அவர் பங்கேற்கலாம் என அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார். எந்தவொரு உறுப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பது வேதனைக்குரியது என்றும் அவர் கூறினார்.

    • மேல்சபை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தை கிளப்பினார்கள்.
    • ஒபிரையனை சஸ்பெண்டு செய்யும் தீர்மானத்தை மத்திய மந்திரி பியூஸ்கோயல் முன்மொழிந்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியது.

    காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, "பா.ஜனதா உறுப்பினர் நிஷிகாந்த் துபே கூறிய கருத்துக்களில் நீக்கப்பட்ட பகுதி மீண்டும் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தை எழுப்பினார்.

    2005 மற்றும் 2014-க்கு இடையில் சீன அரசு காங்கிரசுக்கு பணம் கொடுத்துள்ளது. காங்கிரஸ் இந்தியாவை பிரிக்க விரும்புகிறது என்று எதிர்க்கட்சிகளின் கூச்சலுக்கு மத்தியில் துபே நேற்று பேசினார். பின்னர் பாராளுமன்ற செயலகம் வெளியிட்ட கடிதத்தில் துபே பேச்சின் சில பகுதிகள் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    ஆனாலும் நீக்கப்பட்ட பகுதிகளின் சில பகுதிகள் பாராளுமன்ற இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டன.

    இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லா கூறும்போது, கேள்வி நேரம் முக்கியமானது. ஆனால் நீங்கள் (எதிர்க்கட்சிகள்) அதில் பங்கேற்க விரும்பவில்லை என்று கூறி சபையை 12 மணி வரை ஒத்தி வைத்தார். 12 மணிக்கு பிறகு அவை தொடர்ந்து நடைபெற்றது.

    மேல்சபை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தை கிளப்பினார்கள். 267-வது விதியின் கீழ் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஒபிரையன் ஆவேசமாக பேசினார். அவர் இருக்கையை விட்டு எழுந்து பேசினார். சபையின் நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைத்ததாக கூறி அவர் மீது அவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் நடவடிக்கை எடுத்தார்.

    டெரிக் ஒபிரையன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். வெள்ளிக்கிழமை வரை கூட்டத்தொடர் நடக்கிறது.

    ஒபிரையனை சஸ்பெண்டு செய்யும் தீர்மானத்தை மத்திய மந்திரி பியூஸ்கோயல் முன்மொழிந்தார். பின்னர் குரல் ஓட்டெடுப்பு மூலம் சஸ்பெண்டு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

    • பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.
    • இதற்கு மேற்கு வங்காள மக்களுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் ஜில்லா பரிஷத், பஞ்சாயத்து சமிதி மற்றும் கிராம பஞ்சாயத்து ஆகிய மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்புக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

    இதில் கிராம பஞ்சாயத்து அளவில் திரிணாமுல் காங்கிரஸ் 29,665 இடங்களில் வெற்றி பெற்று 1,527 இடங்களில் முன்னிலை வகித்தது.

    எதிர்க்கட்சியான பா.ஜ.க. 8,021 இடங்களில் வெற்றி பெற்று 406 இடங்களில் முன்னிலை வகித்தது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2,472 இடங்களில் வெற்றி பெற்று 239 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2,094 இடங்களிலும் வெற்றி பெற்று 131 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதற்கு மேற்கு வங்காள மக்களுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக மம்தா வெளியிட்டுள்ள பேஸ்புக் செய்தியில், கிராமப்புற வங்காளத்தில் அனைத்து வழிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தான் உள்ளது. திரிணாமுல் மீதான மக்களின் அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மாநில மக்களின் இதயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே உள்ளது என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட 696 வாக்குச்சாவடி களில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது.
    • ஆளுங்கட்சிக்கு கடும் போட்டியாக விளங்கிய பாஜக 3,790 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

    மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர் வன்முறைகளுக்கு மத்தியில் கடந்த 8-ந்தேதி சனிக்கிழமை உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வன்முறைக்கு இடையிலேயும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினார்கள். 80.71 சதவீத ஓட்டுகள் பதிவானது. வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட 19 மாவட்டங்களுக்கு உள்ளிட்ட 696 வாக்குச்சாவடிகளில் நேற்று பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு நடந்தது. சில இடங்களில் இந்த மறுவாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு கிளம்பிய போதிலும் 69.85 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.

    இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் இன்று எண்ணப்படுகின்றன.

    காலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து  முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. மதியத்திற்கு பிறகு முடிவுகள் வெளியாகத் தொடங்கின. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது.

    மாலை நிலவரப்படி முடிவுகள் அறிவிக்கப்பட்ட 23,344 இடங்களில் 16,330 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. மேலும் 3,002 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. கடும் போட்டியாக விளங்கிய பாஜக 3,790 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. 802 இடங்களில் முன்னிலை பெற்றது. மொத்தம் 63,229 கிராம பஞ்சாயத்து இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

    இடது முன்னணி 1365 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்டும் 1206 இடங்களை பிடித்தது. இடது முன்னணி 621 இடங்களில் முன்னிலை0யில் இருந்தது. காங்கிரஸ் கட்சி 886 இடங்களில் வெற்றி பெற்றதுடன், 256 இடங்களில் முன்னிலையில் இருந்தது.

    புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்திய மதச்சார்பற்ற முன்னணி 937 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. 190 இடங்களில் முன்னிலையில் இருந்தது. திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர்கள் உள்ளிட்ட சுயேட்சைகள் 418 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். 73 இடங்களில் முன்னிலையில் இருந்தனர்.

    ஜில்லா பரிசத் முடிவுகளைப் பொருத்தவரை இதுவரை 18 ஜில்லா பரிசத் முடிவுகள் வெளியிடப்பட்டன. அனைத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 30 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் 928 ஜில்லா பரிஷத் இடங்கள் உள்ளன. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    தேர்தல் முடிவுகளால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியானது, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மாநில அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாகவும், பாஜகவின் பிரித்தாளும் அரசியலையும், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்மறை அரசியலையும் மக்கள் நிராகரித்ததை காட்டுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்தார்.

    வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிய இரண்டு நாட்கள் ஆகலாம் என்றும், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளை தொகுத்து வெளியிடுதற்கு அதிக நேரம் ஆகும் எனவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 22 மாவட்டங்களில் உள்ள 339 மையங்களில் இந்த ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
    • மேற்கு வங்காள மாநிலத்தை பொறுத்தவரை வங்க புலி என அழைக்கப்படும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 8-ந்தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. 22 ஜில்லா பரிஷத் 9,730 பஞ்சாயத்து சமிதி 63,229 கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட மொத்தம் 73,887 பதவிகளுக்கான ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 2 லட்சத்து 6 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியதில் இருந்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாரதியஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கட்சி தொண்டர்கள் இடை யே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது. இதில் சிறுவன் உள்பட 15-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

    இதனால் வாக்குப்பதிவு நாளில் வன்முறை சம்பவங்களை தடுக்க 70 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் 65 ஆயிரம் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஆனாலும் இதனை மீறி தேர்தல் நாளில் வரலாறு காணாத வகையில் கலவரம் மூண்டது. வாக்குச்சாவடிக்கு தீ வைப்பு, ஓட்டுச்சீட்டுகள் தீ வைத்து எரித்தல், வாக்குச் சாவடி சூறை , துப்பாக்கி சூடு, மறியல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன.

    இந்த வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ், பாரதியஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தொண்டர்கள் உள்ளிட்ட 20 பேர் பலியானார்கள்.

    இந்த வன்முறைக்கு இடையிலேயும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினார்கள். இதனால் சனிக்கிழமை நடந்த உள்ளாட்சி தேர்தலில் 80.71 சதவீத ஓட்டுகள் பதிவானது.

    வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட 19 மாவட்டங்களுக்கு உள்ளிட்ட 696 வாக்குச்சாவடி களில் நேற்று பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு நடந்தது. சில இடங்களில் இந்த மறுவாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு கிளம்பிய போதிலும் 69.85 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.

    உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் அனைத்தும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எண்ணப்பட்டன. 22 மாவட்டங்களில் உள்ள 339 மையங்களில் இந்த ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது.

    இன்று காலை நிலவரப்படி மேற்கு மெதினிபூரில் உள்ள 211 கிராம பஞ்சாயத்துகளில் 26 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. அவுராவுக்கு உட்பட்ட 157 பஞ்சாயத்துகளில் 29 இடங்களில் அக்கட்சி முன்னணி பெற்று உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னணியில் உள்ளனர்.

    சில இடங்களில் மற்ற கட்சிகளை விட அக்கட்சி வேட்பாளர்கள் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி முகத்தில் உள்ளனர். பாரதிய ஜனதா, காங்கிரஸ். கம்யூனிஸ்டு கட்சிகள் பின் தங்கி உள்ளன. இது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.

    இந்த தேர்தலில் ஓட்டுச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டதால் ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது முன்னிலை நிலவரம் மட்டுமே வந்துள்ளது.

    ஓட்டு எண்ணிக்கை முழுமையாக முடிய இன்னும் 2 நாட்கள் ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னணியில் உள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.பட்டாசுகள் வெடித்து அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    ஒட்டு எண்ணிக்கையின் போது சில பகுதியில் அசாம்பாவித சம்பவங்களும் நிகழ்ந்தது. டைமண்ட் ஹர்பர் பகுதியில் ஓட்டு எண்ணிக்கை மையத்தின் மீது குண்டு வீசப்பட்டது. இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த குண்டு வீச்சில் யாரும் காயம் அடையவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    மேற்கு வங்காள மாநிலத்தை பொறுத்தவரை வங்க புலி என அழைக்கப்படும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார். அவரை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்பதில் பாரதியஜனதா வெறித்தனமாக உள்ளது.

    இதன் காரணமாக தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது.

    அடுத்த ஆண்டு நடை பெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இது முன்னோட்டமாக கருதப்பட்டதால் யார்? வெற்றி பெறுவார்கள் என்பதில் நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பரபரப்பு தொற்றியது.

    கடந்த 2018-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது திரிணமுல் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.. ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து பதவிகளில் 90 சதவீத இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது.

    பாரதியஜனதாவால் 2-வது இடத்தை தான் பிடிக்க முயன்றது. இதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பா.ஜ.க தொண்டர்கள் இருந்தனர். ஆனால் இன்று நடந்த தேர்தல் முடிவு அவர்கள் கனவை தகர்த்துவிட்டது.

    உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் தனது செல்வாக்கை நிரூபித்து உள்ளது.

    • மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வான பேரோன் பிஸ்வாஸ் கட்சி தாவினார்.
    • யாருடன் மோத வேண்டும் என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும் என சுகெந்து சேகர் ராய் தெரிவித்துள்ளார்.

    மத்தியில் வலுவாக உள்ள பாஜகவை வரும் பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இதனை முன்மொழிந்துள்ளனர். எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தல் முடிவுகள் இதற்கு அச்சாரமாக அமைந்துள்ளதாகவும், இந்த வெற்றி தொடரும் என்றும் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வான பேரோன் பிஸ்வாஸ், திடீரென ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, பெய்ரோன் பிஸ்வாசை திரிணாமுல் காங்கிரஸ் தங்கள் பக்கம் இழுத்திருருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார். மேலும், இது அவரை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் ஆணைக்கு முற்றிலும் துரோகம் செய்வதாகும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இந்த குற்றச்சாட்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் மீதான நம்பிக்கையை காங்கிரஸ் மீறுவதாக கூறியது.

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில், "தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். மாநில கட்சிகளுக்கென சில கடமைகள் உள்ளன என்பதை அனைத்துக் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் மேகாலயா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் மட்டுமே போட்டியிட்டோம். ஆனால் காங்கிரஸ் கட்சியோ ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் போட்டியிட்டது. அப்போது, நாங்கள் அவர்களுக்கு இடையூறு செய்யவில்லை. அவர்களுக்கு ஆதரவளித்தோம்" என்றார்.

    தேர்தலில் யாருடன் மோத வேண்டும் என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும் என திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர் சுகெந்து சேகர் ராய் கருத்து தெரிவித்துள்ளார். இதேபோல் திரிணாமுல் காங்கிரசின் மேலும் சில தலைவர்களும் காங்கிரசுக்கு எதிராக தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

    மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வரும் நேரத்தில், முக்கியமான இரண்டு கட்சிகளுக்கு இடையேயான வார்த்தை மோதல் சலசலப்பை உருவாக்கி உள்ளது.

    • கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
    • வாகனங்களில் சென்றவர்கள் கண்டும், காணாமல் சென்றது போலவும் இடம் பெற்று இருந்தது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் தன்பான் பகுதியை சேர்ந்த பழங்குடி இனத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதியஜனதா கட்சியில் இணைந்தனர்.

    இதற்கிடையில் அந்த பெண்களை ரோட்டில் தவழ வைத்து நூதன தண்டனை கொடுப்பது போன்ற வீடியோவை மேற்கு வங்காள மாநில பாரதிய ஜனதா தலைவர் சுகந்தா மஜூம்தார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

    அந்த வீடியோவில் 3 பெண்களும் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் ரோட்டில் படுத்து தவழ்ந்து ,தவழ்ந்து செல்வதும், இதனை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கண்டும், காணாமல் சென்றது போலவும் இடம் பெற்று இருந்தது.

    இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 3 பழங்குடி இன பெண்கள் பாரதியஜனதா கட்சியில் சேர்ந்ததால் ஆத்திரம் அடைந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களை மீண்டும் தங்கள் கட்சியில் சேருமாறு இந்த தண்டனையை கொடுத்ததாக பா.ஜனதா குற்றம்சாட்டி உள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது. 

    • ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் தேசிய கட்சி என்ற அந்தஸ்தை வழங்கி உள்ளது.
    • இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய அந்தஸ்து திரும்ப பெறப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய அந்தஸ்தும் திரும்ப பெறப்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தளம், ஆந்திராவில் பாரத் ராஷ்டிர சமிதி, மணிப்பூரில் பிடிஏ கட்சி, புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கடசி, மேற்கு வங்காளத்தில் ஆர்எஸ்பி, மிசோரமில் எம்பிசி ஆகிய கட்சிகளுக்கு வழங்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்தையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

    அதேசமயம், டெல்லி, கோவா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் மற்றும் செயல்திறனின் அடிப்படையில், ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தற்போது டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது.

    சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் செயல்திறனின் அடிப்படையில், நாகாலாந்தில் தேசியவாத காங்கிரசும், மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரசும் மாநில கட்சிகளாக அங்கீகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

    பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகள் இப்போது தேசிய கட்சிகளாக உள்ளன. 

    • அர்பிதா வீடுகளில் நடந்த சோதனையின்போது ஏராளமான தங்க நகைகள் மற்றும் கோடிக்கணக்கான ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • குந்தன் கோஷ் பலரிடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி கொண்டு ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் பணி நியமன மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமீபத்தில் முன்னாள் கல்வி மந்திரி பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அர்பிதா வீடுகளில் நடந்த சோதனையின் போது ஏராளமான தங்க நகைகள் மற்றும் கோடிக்கணக்கான ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக மேற்கு வங்காள மாநில திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் பிரிவு தலைவர் குந்தன் கோஷ் பலரிடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி கொண்டு ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

    இதையடுத்து அவருக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்நிலையில் இன்று குந்தன்கோஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×