search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN"

    • மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.

    அந்தக் கடிதத்தில், 'பிப்ரவரி மாதத்தில் (இம்மாதம்) நெல் அறுவடை செய்ய தயாராக இருந்த நேரத்தில் துரதிஷ்டவசமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் சுமார் ஒரு லட்சம் எக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன என்று ஆரம்ப மதிப்பீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்து.

    வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி அறுவடை பணியை மீண்டும் தொடங்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் நிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பதம் அளவு அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சி அடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை தளர்த்தவும், சேதம் அடைந்த நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை தளர்த்தவும் தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

    இந்தக் கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உள்ளது. அதாவது, மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளனர். அதன்பின்பு, மத்தியக்குழு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ‘சிட்ரங்' புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வங்காளதேச கடற்கரைப் பகுதிகளில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையைக் கடக்க உள்ளது.
    • புயல் கரையை கடந்தபிறகுதான், வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்குவதற்கு சாத்தியக்கூறு இருக்கும் என்பதை கணிக்க முடியும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நேற்று அதிகாலையில் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுவடைந்து இருக்கிறது. இந்த புயலுக்கு 'சிட்ரங்' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பெயரை தாய்லாந்து நாடு வழங்கியிருக்கிறது.

    'சிட்ரங்' புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வங்காளதேச கடற்கரைப் பகுதிகளில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையைக் கடக்க உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லாத நிலையிலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், நாளை முதல் 27-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    இந்த புயல் காரணமாக, வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதில் சற்று தாமதம் ஆகியிருக்கிறது. வழக்கமாக அக்டோபர் மாதம் 3-வது வார இறுதியிலோ அல்லது 4-வது வார தொடக்கத்திலோ வடகிழக்குப் பருவமழை தொடங்கும். இந்த புயல் கரையைக் கடந்தபிறகுதான், வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்குவதற்கு சாத்தியக்கூறு இருக்கும் என்பதை கணிக்க முடியும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காலம், செப்டம்பர் மாதம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டாலும், அது இந்தியப் பகுதிகளில் இருந்து முற்றிலும் விலகும்வரையில் அந்த பருவமழைக் காலம் கணக்கில் கொள்ளப்படும். அந்தவகையில் நேற்று தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து முற்றிலும் விலகிவிட்டதாக தெரிவித்த ஆய்வு மையம், இந்த காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 49 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    • கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் நேற்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 252.3 மி.மீ. அளவுக்கு மழை இயல்பாக பதிவாகவேண்டும்.
    • இயல்பான அளவையும் தாண்டி 455.2 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.

    சென்னை:

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 16-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் நேற்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 252.3 மி.மீ. அளவுக்கு மழை இயல்பாக பதிவாகவேண்டும். ஆனால் இயல்பான அளவையும் தாண்டி 455.2 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இது 80 சதவீதம் அதிக மழைப்பொழிவு ஆகும்.

    • சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். குமரி கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நிலக்கோட்டையில் 9 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக விராலிமலையில் 8 செ.மீ., அணைப்பாளையம், திருவாரூர், பெரியகுளம், சின்னக்கல்லார், ஓசூரில் தலா 7 செ.மீ., அஞ்சட்டி, ஏற்காடில் தலா 6 செ.மீ., சிவகிரி, பாலக்கோடு, சின்கோனாவில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராகுல்காந்தி 148 நாட்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார்.
    • ராகுலுடன் 300 முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து நடைபயணம் செய்வார்கள்.

    சென்னை:

    அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்துள்ளது. காங்கிரசை சரிவில் இருந்து மீட்கவும், பலப்படுத்தவும் நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்த ராஜஸ்தான் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ராகுல்காந்தி 148 நாட்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த யாத்திரைக்கான ஏற்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.

    ராகுலுடன் 300 முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து நடைபயணம் செய்வார்கள். இது தவிர அந்தந்த மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் பாத யாத்திரையில் பங்கெடுப்பார்கள். அவர்கள் மாவட்ட எல்லை வரை உடன் செல்வார்கள். அங்கிருந்து அடுத்த மாவட்ட தொண்டர்கள் வரவேற்று யாத்திரையில் பங்கெடுப்பார்கள். இப்படியே இந்த பாத யாத்திரை காஷ்மீர் வரை நடைபெறுகிறது.

    நாள் ஒன்றுக்கு 25 முதல் 35 கிலோமீட்டர் தூரம் ராகுல் நடந்து செல்லும் வகையில் பயணத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.

    ராகுலின் பாதயாத்திரை தமிழகத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ளது. அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் கன்னியாகுமரியில் காந்தி அஸ்தி கட்டிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு பாதயாத்திரை புறப்படுகிறார்.

    அங்கிருந்து நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை வழியாக கேரள மாநிலம் செல்கிறார். கன்னியாகுமரியில் இருந்து தமிழக எல்லையான களியக்காவிளை வரை 70 கி.மீ. தூரம் உள்ளது.

    எனவே 2 நாட்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதயாத்திரை செல்கிறார். 3-வது நாள் களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்கிறார்.

    கேரள மாநில சுற்றுப்பயணத்தின்போது அவரது தொகுதியான வயநாட்டிலும் யாத்திரை செல்லும் வகையில் பயணப்பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

    ராகுல் பாதயாத்திரையை எழுச்சியுடன் நடத்த மாநில அளவில் விரைவில் கமிட்டி அமைக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலையில் தினமும் 500 முதல் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளதாக பெண் சாமியார் ஸ்ரீ பவித்ரா காளி மாதா கூறினார்.
    திருவண்ணாமலை:

    திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீ பவித்ரா காளிமாதா. இவர் காளிமாதா அகில இந்திய யுவ மோட்சா தர்மசார்யா பட்டம் பெற்றவர்.

    இவர் திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். முகத்தில் சாயம் பூசி உதட்டில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு நிறைய தங்க நகைகளை அணிந்து இருந்தார். சொகுசு காரில் வந்தார். தலைமுடியிலும் சாயம் அடித்திருந்தார்.

    திருவண்ணாமலை ரமணாஸ்சிரமம் அருகில் உள்ள காளி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றார். முன்னதாக அவர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு குங்கும திலகமிட்டு ஆசி வழங்கினார்.

    சிறுவயதில் காளிமாதா மீது எனக்கு பக்தி ஏற்பட்டது. அதுமுதல் காளிமாதா வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறேன். இரவில் மயானம் சென்றும் வழிபாடு செய்வேன்.

    உலகில் அதர்மம் தலைதூக்கும்போது சிவன், காளியை அவதாரம் எடுக்க செய்வார். உண்ணாமலை அம்மன் போல் காளியும் சிவனுக்கு மிகவும் விருப்பமானவள். அண்ணாமலையார் உத்தரவின்பேரில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் சென்று வந்துள்ளேன்.

    உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. தமிழகத்தில் 3 மாதத்திற்கு பிறகு பயங்கர பிரளயம் ஏற்படும். 3 நாட்கள் முழு கடையடைப்பு நடக்கும். பின்னர் அமைதியான சூழ்நிலை உருவாகும்.

    விரைவில் திருவண்ணாமலையில் தினமும் 500 முதல் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    சமையல் கூடத்திலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் விதமாக பெற்றோர்களிடம் கல்விச்சீராக சமையல் கூடத்திற்கு தேவையான எவர்சில்வர் மற்றும் மண் பாத்திரங்கள் பெறப்பட்டது.
    ஈரோடு:

    தமிழகத்தில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகள் உள்கட்டமைப்பு வசதியுடன் இருந்து வருகிறது. இதற்காக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோட்டில் ஒரு தலைமையாசிரியர் முயற்சியால் சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ் கிடைத்துள்ளது.

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 1061 மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் சமையல் கூடம் சுகாதாரமற்ற முறையில், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்துவதை கண்டு தலைமை ஆசிரியர் மாலா அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து சமையல் கூடத்தை அழகுப்படுத்தும் முயற்சியில் அவர் இறங்கினார். இதையடுத்து சமையல் கூடம் முழுவதும் டைல்ஸ் கொண்டு செப்பனிட்டு வர்ணம் அடிக்கப்பட்டது.

    மேலும் பிளாஸ்டிக் பொருட்களை சமையல் கூடத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கும் விதமாக பெற்றோர்களிடம் கல்விச்சீராக சமையல் கூடத்திற்கு தேவையான எவர்சில்வர் மற்றும் மண் பாத்திரங்கள் பெறப்பட்டது.

    மேலும் மாணவிகளுக்கு சுகாதார முறையில் சமைக்கும் பொருட்டு ஆர்.ஓ தண்ணீர் பொருத்தி, அந்த நீரில் மட்டுமே சமைக்க தலைமை ஆசிரியர் மாலா நடவடிக்கை எடுத்தார். மேலும் காய்கறிகளை சமைப்பதற்கு முன்பு மஞ்சள் நீரால் கழுவியும், சமைக்கும் சமையலர்கள் நகங்கள் வெட்டி இருக்க வேண்டும், வளையல் மற்றும் மோதிரங்கள் அணிந்து இருக்கக்கூடாது என்றும் முடி உணவில் விழாமல் இருக்க தலையில் தொப்பி அணிந்து மாணவிகளுக்கு சமையல் செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார்.

    ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற கருங்கல்பாளையம் மாநகராட்சி பள்ளி சமையல் கூடம்

    அதை முறையாக சமையலர்கள் கடைப்பிடிக்கிறார்களா? என்பதை அறிய ஆசிரியர் குழு ஒன்றை நியமித்தார் தலைமை ஆசிரியர். மேலும் பள்ளியிலேயே ஆர்கானிக் காய்கறி தோட்டம் அமைத்து அதில் விளையும் காய்கறிகளை வாரத்தில் ஒரு நாள் சமையலுக்கு பயன்படுத்தி வரப்படுகிறது. மேலும் மாணவிகள் சாப்பிட பயன்படுத்தும் தட்டுகள் வெந்நீரில் சுத்தம் செய்து தரப்படுகிறது. மேலும் அவர்களுக்கு வெந்நீர் மட்டுமே கொடுக்க உத்தரவிட்டார். மேலும் இவை அனைத்தும் முறையாக தவறாமல் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை அறிய 2 சிசிடிவி கேமராவை சமையல் கூடத்தில் பொருத்தி தனது அறையிலிருந்து தலைமை ஆசிரியர் கண்காணித்து வருகிறார். மாணவிகளின் பெற்றோர்களும் எந்த நேரமும் சமையல் அறையை சென்று பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே ஆய்வுக்கு வந்த சத்துணவு ஒருங்கிணைப்பாளர்கள் கொடுத்த உற்சாகத்தில் சமையல் கூடத்திற்கு என ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பள்ளியின் சமையல் கூடத்தில் 4 முறை ஆய்வு செய்த ஐ.எஸ்.ஓ தரச்சான்று அதிகாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை என்பதாலும், பணியாளர்களின் நேர்த்தியாலும், உணவின் சுவையாலும், மாணவிகளின் சுகாதாரத்தில் அக்கறை செலுத்துவதாலும் கடந்த மாதம் இந்த பள்ளியின் சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ் வழங்கினர்.

    தமிழகத்தில் முதன்முறையாக மாநகராட்சி பள்ளி சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் கிடைக்க ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் தலைமையாசிரியர் மாலா நன்றியை தெரிவித்துக்கொண்டார். சமையல் கூடம் மட்டுமின்றி பள்ளியில் ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் தமிழகத்தின் வீர மங்கைகள் பெயரும், பள்ளியின் நேரத்தில் ஏற்படும் மன அழுத்ததை போக்க வகுப்பு அறைகளின் முன் தூரி கட்டி விளையாடவும், மாணவிகளுக்கு இரும்புச்சத்து கிடைக்க முருங்கை சூப் வழங்குதல், டிஜிட்டல் நூலகம் அமைத்தல் என இந்த மாநகராட்சி பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராகவே திகழ்ந்து வருகிறது.



    தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்குமா? என்பது குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு டெல்லி செல்கிறேன். பா.ஜனதா சார்பாக 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விழாவில் கலந்து கொள்ளகிறார்கள். கூட்டணி கட்சித் தலைவர்கள் அத்தனை பேரும் கலந்து கொள்கிறார்கள். அதையும் தாண்டி பல முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அது ஒரு பெரிய பட்டியல் அதில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை சொல்ல முடியாது.

    பா.ஜனதா ஆட்சியில் தமிழ்நாடு என்றுமே புறக்கணிக்கப்படாது. தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை எடுத்து வர இருக்கிறோம். இனிமேலாவது பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச்சை திரித்து பேசி எதிர்க்கட்சிகள் லாபம் அடைய வேண்டாம். தமிழகத்திற்கு அதிகமான இடம் கிடைத்து இருந்தால் அதிக பலன் பெற்று இருப்போம் என்று சொன்னால், அதற்கு தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது என்று தவறாக முகநூல்களில் பரப்பி வருகிறார்கள். கண்டிப்பாக பா.ஜனதாவினருக்கு தமிழகத்தின்மேல் அக்கறை உண்டு. திமுக-காங்கிரஸ் அல்லாத ஆட்சி காலத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. கோதாவரி, காவிரி இணைப்பு திட்டம் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தமிழக மக்களின் நீர் தேவையை போக்க இருக்கிறது.

    காங்கிரஸ் தமிழகத்திற்கு எவ்வளவு கொடுமை செய்தது என்றும், இலங்கை தமிழர்களை இந்திய தமிழர்களை பாதுகாக்கவில்லை என்பதை இன்னும் மக்களிடம் வலிமையாக எடுத்துச் சொல்வோம்.



    தமிழக மக்களுக்காக தான் தமிழக பா.ஜனதா இருக்கிறது. தமிழக மக்களுக்கு என்னென்ன திட்டம் கொண்டு வர வேண்டுமோ அதை கொண்டுவரக்கூடிய முதன்மை கட்சியாக தமிழக பா.ஜனதா இருக்கிறது. ஆனால் இவர்கள் தமிழ், தமிழ் என்று தமிழர்களை ஏமாற்றி வந்தார்கள். தமிழகத்திற்கு ஆதரவான திட்டங்கள் இல்லை என்றால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொல்லும் துணிச்சலும் எங்களிடம் உண்டு.

    தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்குமா? என்பதை என்னால் சொல்ல முடியாது. அது பிரதமர் மோடியின் முடிவு. இந்தக் கூட்டணியில் பல பேர் வெற்றி பெற்றிருந்தால் அதை என்னால் சொல்ல முடியும்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரிவினை பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார். இந்த தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பது என்றால் அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் அக்கறை கொண்டவர்கள் பா.ஜனதாவினர்.

    தூத்துக்குடி தவிர வேறு எங்கு சென்றாலும் ஜெயித்து இருப்பேன் என்ற மனநிலை எனக்கு கிடையாது. எனக்கு வாக்களித்த அனைவருக்கும் தூத்துக்குடி மக்களுக்கும் என்றுமே நன்றியுள்ளவளாய் இருப்பேன். அடுத்த வாரம் அங்கு ஒரு மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    தமிழகத்தில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி மேல்-சபை எம்.பி. ஆக இருக்கிறார். இதற்காக, தி.மு.க.விடம் இருந்து ஒரு இடத்தை வாங்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
    சென்னை:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மேல்-சபை(மாநிலங்களவை) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரது பதவி காலம் ஜூன் 14-ந் தேதி நிறைவடைகிறது. மீண்டும் அங்கிருந்து அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இல்லை.

    காரணம், அசாம் சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 126 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 25 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் உள்ளனர். ஆனால், ஒரு மேல்-சபை எம்.பி.யை தேர்ந்தெடுக்க 43 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதை வைத்து பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு மேலும் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.

    எனவே, அசாம் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேல்-சபை இடம் கூட கிடைக்க முடியாத நிலை இருக்கிறது. ஆனால், 1991-ம் ஆண்டு முதல் அங்கிருந்து தான் மேல்-சபை உறுப்பினராக மன்மோகன்சிங் இருந்து வருகிறார். கவுகாத்தியில் வாடகை வீட்டில் தங்கியுள்ள அவருக்கு ஓட்டும் அங்கு தான் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது அவருக்கு ஓட்டு கவுகாத்தியில் தான் இருந்தது.

    தற்போதைய நிலையில், கர்நாடகா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்- சபை உறுப்பினர்களின் பதவி எதுவும் காலியாகவில்லை. இதனால், மன்மோகன்சிங் மீண்டும் மேல்-சபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அதே நேரத்தில், தமிழகத்தில் தான் 6 மேல்-சபை எம்.பி.க்களின் பதவி காலம் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதாவது, அ.தி.மு.க.வை சேர்ந்த வி.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், டி.ரத்னவேல், ஆர்.லட்சுமணன், தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த டி.ராஜா ஆகியோரது பதவி காலம் முடிகிறது.



    தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால், கூடுதலாக ஒரு மேல்-சபை எம்.பி. பதவி அக்கட்சிக்கு கிடைக்கிறது. அந்தப் பதவியை காங்கிரஸ் கட்சி கேட்டுப்பெற முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசுவார்கள் என்று தெரிகிறது.
    பிளஸ்-2 விடைத்தாள் திருத்துவதில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 500 ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    சென்னை:

    உயர்கல்வியை நிர்ணயிப்பதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    ஒரு மதிப்பெண்ணால் சிறந்த கல்லூரியையும், படிப்பையும் கூட கைவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாணவர்களின் தலைவிதியை ஒவ்வொரு மதிப்பெண்களும் நிர்ணயிப்பதால் எதிர்பார்த்த மார்க் கிடைக்காத மாணவர்கள் மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பது வழக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்துவதில் கவனக்குறைவாக ஆசிரியர்கள் செயல்படுவதால் மாணவர்களின் வாழ்க்கை திசை திரும்பி போய் விடுகிறது. விடைத்தாள் திருத்தி மதிப்பெண் அளித்ததை ஒவ்வொரு பக்கம் வாரியாக கூட்டல் செய்யும்போது தவறு ஏற்படுகிறது.

    இந்த வருடமும் நிறைய மாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் கூட்டலில் தவறு ஏற்பட்டுள்ளதை விடைத்தாள் நகல் வாங்கிய மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 100-க்கு 72 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனுக்கு 27 மதிப்பெண் பெற்றதாக கூட்டலில் தவறு இழைத்து தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.



    அதே போல ஒரு பாடத்தில் 81 மார்க் எடுத்த மாணவனுக்கு 57 பெற்றதாக கொடுத்துள்ளனர். இந்த தவறுகள் எல்லாம் மதிப்பெண்களை கூட்டும்போது ஏற்பட்ட பிழையாகும். இதுபோல பல மாணவர்களுக்கு கூட்டல் பிழையுடன் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு 72 மையங்களில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 60 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. 50 ஆயிரம் மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட விடைத்தாள் நகலை பார்த்தபோதுதான் கூட்டலில் பிழை ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    மேலும் ஒரு சில விடைத்தாள்கள் முறையாக திருத்தப்படாமல் மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்ததும் தெரிய வந்தது. 4,500 பேர் மறு மதிப்பீடு செய்யுமாறு விண்ணப்பித்து இருந்த நிலையில் ஆசிரியர்களின் தவறுகள் கண்டு பிடிக்கப்பட்டன.

    ஒரு விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு 4 பேர் ஆசிரியர்கள் பொறுப்பாகிறார்கள். தவறு ஏற்படும்போது அவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அந்த அடிப்படையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.

    விடைத்தாள் திருத்தம் செய்வதில் ஆசிரியர்கள் எவ்வாறு தவறு செய்திருக்கிறார்கள் என்பதை இணை இயக்குனர்கள் கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல் கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    500 ஆசிரியர்களுக்கும் மேலாக தவறு குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி கூறியதாவது:-

    மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்யும்போது ஆசிரியர்களின் தவறு தெரிய வருகிறது. கடந்த காலங்களை விட படிப்படியாக தவறுகள் குறைந்துள்ளது. கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை இயக்குனர் தான் நடவடிக்கை எடுப்பார். நாங்கள் அவர்களின் பட்டியலை கொடுத்து விடுவோம்.

    தலைமை கண்காணிப்பாளர், எஸ்.ஒ, வி.ஒ உள்பட 4 பேர் விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு பொறுப்பாளர்கள். அவர்களை மீறி தவறு நடந்திருக்காது என்றால் அதற்கு அவர்களும் பொறுப்பாவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவர்கள் மதிப்பெண் தவறுக்கு காரணமாக உள்ள ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கின்றது.
    தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. புதுச்சேரியிலும் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது.
    தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், தர்மபுரி, கரூர், நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 113.18 டிகிரி வெயில் கொளுத்தி எடுத்தது. புதுச்சேரியிலும் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. முக்கிய நகரங்களில் நேற்றைய வெயில் நிலவரம் வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

    சென்னை மீனம்பாக்கம் - 104.54 டிகிரி (40.3 செல்சியஸ்)

    கோவை - 98.6 டிகிரி (37 செல்சியஸ்)

    குன்னூர் - 79.7 டிகிரி (26.5 செல்சியஸ்),

    கடலூர் - 100.94 டிகிரி (38.3 செல்சியஸ்)

    தர்மபுரி - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    கன்னியாகுமரி - 90.68 டிகிரி (32.6 செல்சியஸ்)

    கரூர் - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)

    கொடைக்கானல் - 73.22 டிகிரி (22.9 செல்சியஸ்)

    மதுரை - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)

    நாகை - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)

    நாமக்கல் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    பாளையங்கோட்டை - 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்)

    புதுச்சேரி - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    சேலம் - 104.54 டிகிரி (40.3 செல்சியஸ்)

    தஞ்சை - 95 டிகிரி (35 செல்சியஸ்)

    திருச்சி - 107.24 டிகிரி (41.8 செல்சியஸ்)

    திருத்தணி - 113.18 டிகிரி (45.1 செல்சியஸ்)

    தூத்துக்குடி - 91.76 டிகிரி (33.2 செல்சியஸ்)

    ஊட்டி - 53.42 டிகிரி (11.9 செல்சியஸ்)

    வால்பாறை - 81.5 டிகிரி (27.5 செல்சியஸ்)

    வேலூர் - 110.48 டிகிரி (43.6 செல்சியஸ்)

    தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன.
    சென்னை:

    தமிழகத்தில் வேலூர் தவிர 38 பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. தமிழகத்தின் அரசியல் தலைவர்களாகத் திகழ்ந்த, தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் நடந்த முதல் தேர்தல் இதுவாகும்,

    இந்தத் தேர்தலில் தேனி தவிர மற்ற அனைத்து தொகுதி களிலும் தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் (விடுதலைச் சிறுத்தை கட்சி போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியைத் தவிர), அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளன.

    சிதம்பரத்தில் தி.மு.க. கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, 3,219 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை வீழ்த்தியது. இது குறைந்தபட்ச வித்தியாசமாகும். அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியான பா.ம.க.வை தி.மு.க. 5 லட்சத்து 38 ஆயிரத்து 972 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இந்தத் தேர்தலில் தி.மு.க. அதிகபட்சமாக 7 லட்சத்தைத் தாண்டியும், குறைந்தபட்சமாக 4 லட்சத்துக்கு மேலாகவும் ஓட்டுகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு 7 லட்சத்து 93 ஆயிரத்து 281 ஓட்டுகளைப் பெற்றுள்ளார். குறைந்தபட்சமாக தேனியில் 4 லட்சத்து 28 ஆயிரத்து 120 ஓட்டுகளை தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் பெற்றது.

    ஆனால் அ.தி.மு.க. அதிகபட்சமாக 5 லட்சத்துக்கு மேலாகவும், குறைந்தபட்சமாக ஒரு லட்சத்துக்கு அதிகமாகவும்தான் ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. அந்த வகையில், தேனியில் அ.தி.மு.க. 5 லட்சத்து 4 ஆயிரத்து 813 ஓட்டுக்களையும், குறைந்தபட்சமாக திருச்சியில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 999 ஓட்டுக்களையுமே அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க. பெற்றிருக்கிறது.

    தமிழகத்தில் மொத்தமுள்ள 5.98 கோடி ஓட்டுகளில் 4 கோடியே 23 லட்சத்து 66 ஆயிரத்து 721 ஓட்டுகள் செலுத்தப்பட்டு இருந்தன. அவற்றில் தி.மு.க. கூட்டணி, 2 கோடியே 23 லட்சத்து 3 ஆயிரத்து 310 ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. இதன் சதவீதம் 52.64 ஆகும்.

    ஆனால் அ.தி.மு.க. கூட்டணி, ஒரு கோடியே 28 லட்சத்து 30 ஆயிரத்து 314 ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளது. இதன் சதவீதம் 30.28 ஆகும்.

    தி.மு.க. மட்டும் 32.76 சதவீத ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் 12.76 சதவீத ஓட்டுக்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2.40 சதவீதம், இந்திய கம்யூனிஸ்டு 2.43, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1.11 சதவீதம் ஓட்டுக்களைப் பெற்றுள்ளன. (விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒரு வேட்பாளர் மற்றும் ம.தி.மு.க. ஐ.ஜே.கே., கொங்கு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர்கள், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். இந்தக் கட்சிகளுக்கான ஓட்டு சதவீதம் பிரித்துக் காட்டப்படவில்லை. ஆனாலும் 1.19 சதவீத ஓட்டுக்களை தி.மு.க. கூட்டணிக்கு இந்தக் கட்சிகள் அளித்ததாக கணக்கிடப்படுகிறது).

    அ.தி.மு.க. மட்டும் 18.48 சதவீத ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க. 3.66 சதவீதம், தே.மு.தி.க. 2.19, பா.ம.க. 5.42 சதவீதம் ஓட்டுக்களைப் பெற்றுள்ளன. (புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ் போன்ற சில கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டனர். இந்த கட்சிகளுக்கான ஓட்டு சதவீதம் பிரித்து காட்டப்படவில்லை. ஆனாலும் 0.53 சதவீத ஓட்டுக்களை இந்தக் கட்சிகள் பங்களித்ததாக கணக்கிடப்படுகிறது).

    இந்தத் தேர்தலில் அ.ம.மு.க. கட்சியின் பலம் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டது. அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதத்தை அதிக அளவில் அ.ம.மு.க. பெற்றிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. பெரிய கட்சிகளுக்கு இணையாக பேசப்பட்ட இந்தக் கட்சி, தமிழகம் முழுவதுமே 22 லட்சத்து 25 ஆயிரத்து 377 ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளது. இது 5.25 சதவீதமாகும்.

    தேனியில் அதிகபட்சமாக அ.ம.மு.க. ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 50 ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 8,867 ஓட்டுக்களை மட்டுமே அந்தக் கட்சி வாங்கியுள்ளது.

    முதன் முறையாக தேர்தலில் குதித்து தமிழகம் முழுவதும் 15 லட்சத்து 75 ஆயிரத்து 620 ஓட்டுக்களை மக்கள் நீதி மய்யம் பெற்றிருக்கிறது. இதன் சதவீதம் 3.72 ஆகும்.

    அதுபோல நாம் தமிழர் கட்சியும் ஒவ்வொரு தேர்தலிலும் விடாப்பிடியாக போட்டியிட்டு இந்தத் தேர்தலில் ஓட்டு சதவீதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி, 16 லட்சத்து 45 ஆயிரத்து 185 ஓட்டுக்களை, அதாவது 3.88 சதவீத ஓட்டுக்களை அந்தக் கட்சி பெற்றுள்ளது.



    ஒவ்வொரு தேர்தலிலும் நோட்டாவுக்கு (யாருக்கும் வாக்களிக்கவில்லை) தனி இடம் கிடைப்பதுண்டு. இந்தத் தேர்தலில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 ஓட்டுக்களை நோட்டா பெற்றுள்ளது. இது 1.28 சதவீதமாகும். அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் 23 ஆயிரத்து 343 ஓட்டுக்களும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 6,131 ஓட்டுக்களும் நோட்டாவுக்கு விழுந்தன.

    இதன் ஓட்டு சதவீதத்தைப் பார்க்கும்போது நோட்டாவும் இன்னும் தேர்தல் களத்தை இழக்கவில்லை என்றே தெரிகிறது. இதன் மூலம் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்கள், 1.28 சதவீதம் பேருக்கு பிடிக்கவில்லை என்றே கணிக்க முடிகிறது.
    ×