search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்தியக்குழு"

    • நாடெங்கும் வெப்ப அலைகளை சந்திப்பதற்கான தயார் நிலை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
    • பல்வேறு மாநிலங்களின் வெப்ப அலை நிலவரம், தேவையான வினியோக பொருட்கள், ஆஸ்பத்திரிகளின் படுக்கை கட்டமைப்பு பற்றி சுகாதாரத்துறை மந்திரி விளக்கினார்.

    புதுடெல்லி:

    வடமாநிலங்களான உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் இன்னும் பல மாநிலங்களிலும் வெயில் தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறது. தினமும் சராசரியாக 108 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை பதிவாகி வருகிறது.

    இந்த வெயிலால் வெப்ப அலைகளும் தாக்கி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். பல்வேறு வெப்ப நோய்களின் தாக்குதலுக்கும் மக்கள் ஆளாகி வருகின்றனர்.

    இது குறித்து ஆலோசிப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உயர் மட்டக்குழு கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.

    இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

    நாடெங்கும் இந்த வெப்ப அலைகளை சந்திப்பதற்கான தயார் நிலை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கிறபோது விரைவான நடவடிக்கை எடுக்கவும் என்னென்ன வழிமுறைகளை மேற்கொள்வது என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    வெப்ப அலைகளினால் மக்களின் ஆரோக்கியம் லேசான அளவில் மட்டுமே பாதிக்கக்கூடிய அளவில் பார்த்துக்கொள்ள ஆராய்ச்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. வெப்ப அலைகளை எதிர்கொள்வதில் குறைந்த, நடுத்தர நீண்டகால செயல் திட்டங்கள் என்ன என்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    காலநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியம் பற்றிய தேசியத்திட்டத்தின்கீழ், வெப்பம் தொடர்பான உடல்நிலை பாதிப்புகள் குறித்து தினமும் எல்லா மாநிலங்களிலும் கண்காணிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    பல்வேறு மாநிலங்களின் வெப்ப அலை நிலவரம், தேவையான வினியோக பொருட்கள், ஆஸ்பத்திரிகளின் படுக்கை கட்டமைப்பு பற்றி சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா விளக்கினார்.

    வெப்ப அலையை எதிர்கொள்வதற்கும், அதனால் ஏற்படுகிற உடல்நல பாதிப்புகளை சந்திக்க உதவுவதற்காகவும் பீகாருக்கும், உத்தரபிரதேசத்துக்கும் மத்தியக் குழுவை விரைவில் அனுப்பி வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் குழுவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய பேரிடர் மேலாண்மை, இந்திய வானிலை ஆராய்ச்சி அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்கள் இடம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.

    அந்தக் கடிதத்தில், 'பிப்ரவரி மாதத்தில் (இம்மாதம்) நெல் அறுவடை செய்ய தயாராக இருந்த நேரத்தில் துரதிஷ்டவசமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் சுமார் ஒரு லட்சம் எக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன என்று ஆரம்ப மதிப்பீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்து.

    வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி அறுவடை பணியை மீண்டும் தொடங்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் நிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பதம் அளவு அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சி அடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை தளர்த்தவும், சேதம் அடைந்த நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை தளர்த்தவும் தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

    இந்தக் கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை மத்திய அரசு உடனடியாக பரிசீலித்து உள்ளது. அதாவது, மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து நேரில் பார்வையிட உள்ளனர். அதன்பின்பு, மத்தியக்குழு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×