என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கவர்னர் ஆர்என் ரவி"
- ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது.
- பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார்.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.45 மணியளவில் சட்டசபைக்கு வந்தார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி 9.55 மணிக்கு வந்தார். அவருக்கும் பேண்டு வாத்தியம் முழங்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சட்டசபை வளாகத்தில் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபைக்குள் அழைத்து செல்லப்பட்டார். கவர்னர் சபைக்குள் வந்ததும் சரியாக காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது.
தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை கவர்னர் ஆர்.என்.ரவி படிக்காமல் புறக்கணித்தார். இதையடுத்து அந்த உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல் மையமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும், மக்கள் தொகையில் 6 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ள நமது மாநிலம் இந்தியாவின் பொருளாதாரத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்கினை அளிக்கிறது.
2022-2023-ம் ஆண்டில் 7.24 சதவீத நிலையான வளர்ச்சி வீதத்தை விஞ்சி நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் சராசரி பண வீக்கத்தை பொறுத்தவரை 2022-23-ம் ஆண்டிலும் நாட்டின் 6.65 சதவீத பண வீக்கத்துடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97 சதவீதமாக உள்ளது. இந்திய நாட்டை விட தமிழ்நாடு வேகமாக வளர்ச்சி அடைவதோடு அதே கால கட்டத்தில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் நமது மாநிலம் திறம்பட செயல்பட்டு வருவதை இது மெய்ப்பிக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையின் கீழ் இந்த அரசின் அயராத முயற்சியின் விளைவாக குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியினை கண்டுள்ளது.
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால் 2021-2022-ல் 4-ம் இடத்தில் இருந்த நமது மாநிலம் 2022-2023-ம் ஆண்டில் நாட்டிலேயே முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது 14.54 லட்சம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முன் எப்போதும் இல்லாத அளவில் மொத்தம் 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்வதற்கு, சாதனை படைக்கும் வகையில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.
6-வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்தி காட்டியது பெருமை அளிக்கிறது. இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. ஜி.எஸ்.டி. காரணமாக தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட பணிகளுக்கு உறுதி அளித்தபடி மத்திய அரசு நிதி அளிக்கவில்லை. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாததால் மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
மக்களுடன் முதல்வர் திட்டத்தால் 2.40 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகிறது. புயல் பாதிப்பு நிவாரணத்துக்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. பண வீக்கத்தை கட்டுப்படுத்தி விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களின் வருமான ஆதாரம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை ரூ.24,926 கோடி சுய உதவிக்குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டு உள்ளது.
அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் முகவரியாக தமிழகம் உள்ளது. மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்கி நிதி உதவி வழங்க வேண்டும். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான முழு செலவினமும் தமிழக அரசின் நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது.
மகளிருக்கு மாதம் ரூ.1000 என்ற தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவுத் திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டியாகும்.
ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.
மத்திய அரசு அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக எடுக்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, கற்றல் திறன் அதிகரித்துள்ளது.
நாட்டிற்கே முன்னோடியாக காலை சிற்றுண்டி திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை சிற்றுண்டி திட்டம் 16.85 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
முதலமைச்சரின் கனவுத் திட்டமாக காலை சிற்றுண்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிறுபான்மையினர், மீனவர்களை காப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுகிறது.
பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது நாட்டிற்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது. 5.59 லட்சம் ஏக்கராக குறுவை சாகுபடியை உயர்த்தி தமிழக வேளாண்துறை சாதனை படைத்துள்ளது.
வரலாற்றிலேயே முதல் முறையாக பால் கொள்முதல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொடர் முயற்சியால் இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும். 3 லட்சம் பெண்களை கொண்டு புதிதாக 27 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 அளிக்கப்பட்டு வருகிறது.
2.17 லட்சம் பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் பலன் அடைந்துள்ளனர்.
மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். இல்லம் தேடி கல்வித் திட்டம் 1.65 லட்சம் மையங்களில் நடைபெறுகிறது. இதன் மூலம் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.
சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4671 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. சரக்கு சேவை வரிக்கான இழப்பீட்டை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும்.
மருத்துவ சுற்றுலாவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. விளையாட்டை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பரவலான வளர்ச்சியை கொண்டு வர அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 24.86 லட்சம் மாணவர்கள் இல்லம் தேடி கல்வி திட்டத்தால் பயன் அடைந்து வருகின்றனர்.
3 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூ.18,228 கோடியில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் 1 கோடிக்கும் மேலான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.294 கோடியில் திட்டம் உள்ளது.
ரூ.76 கோடியில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு மூலம் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்த்தி தமிழக வேளாண் துறை சாதனை படைத்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இயற்கை பேரிடரால் பாதித்த 24.25 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.6000, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 6.63 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.6000 வழங்கப்பட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு மேம்பாட்டு செயல் திட்டம்-2024 எனும் சட்ட முன்வடிவை நடப்பு கூட்டத் தொடரின் போது அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தை இந்த அரசு தொடங்கியுள்ளது.
கிண்டியில் 1000 படுக்கைகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ரூ.240 கோடி செலவில் அரசு கொண்டு வந்து சானை புரிந்துள்ளது.
ஸ்டார்ட் அப் இந்தியா 2022 தரவரிசையில் நம் மாநிலம் சிறந்த செயலாற்றும் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இணைய வசதி தற்சார்பு தெழிலாளர்கள் நல வாரியத்தை தொடங்கி உள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. விரிவான சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3059 கி.மீ. நீள சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.4861 கோடி செலவிலும் 187 பாலங்கள் கட்டுமான பணிகளை ரூ.553 கோடி செலவிலும் இந்த அரசு நடப்பாண்டில் மேற்கொண்டு வருகிறது.
விடுதிகளில் மாதாந்திர உணவுக் கட்டணத்தை பள்ளி மாணவர்களுக்கு 1000 ரூபாயில் இருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயில் இருந்து ரூ.1500 ஆகவும் அரசு உயர்த்தி உள்ளது. இதன் மூலம் 1.71 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உரை எனது மனசாட்சிக்கு விரோதமாக இருக்கிறது என்று சொல்லி கவர்னர் வராமல் இருந்திருக்கலாம்.
- தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளது என்பதை புள்ளி விவரத்தோடு நாங்கள் சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம்.
சென்னை:
சட்டமன்ற பேரவையில் இன்று கவர்னர் உரை தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் உரையோடு சட்டமன்ற பேரவை தொடங்கப்படும் என்ற அறிவிப்பு தரப்பட்டு, ஜனநாயகத்தை மதிக்கின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னரை முறைப்படி அழைத்து இன்று சட்டமன்றத்தில் முதல் கூட்டத்தைக் கூட்டினார்.
கேரள கவர்னர் இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசி விட்டுச் சென்றுவிட்டார். நம்முடைய தமிழ்நாட்டின் கவர்னர், கவர்னர் உரையிலிருந்து பேசாமல் தனது சொந்த சில கருத்துகளை பேசிவிட்டு அமர்ந்து விட்டார்.
தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்றார். ஆனால், மரபுப்படி முதலில் தமிழ்த் தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும். இதனை கடந்த ஆண்டிலேயே நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
ஆனால், தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய கவர்னர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் அங்கிருக்கக் கூடிய அரசாங்கங்களுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
நிச்சயமாக கவர்னரின் நடவடிக்கைகள், வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு வலிமையை உருவாக்கும் வண்ணம் இன்று அவர் பதிலளித்திருக்கிறார். ஜனநாயகத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு கொடுத்த உரையில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் கேட்கலாம். உரையில், உண்மைக்கு மாறாக இருக்கிறது, சரியாக இல்லை என்று அவர் கூறினால் அதற்கு விளக்கம் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழ்நாடு அனைத்து விதத்திலும் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது என்பதை புள்ளி விவரங்களோடு நாங்கள் சொல்லுகின்றபோது, அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவமும், அதனைத் தாங்கிக் கொள்கிற சக்தியும் கவர்னருக்கு இல்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.
தான் ஒரு மாநிலத்தின் தலைவராக, தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு மாநிலம், இந்திய ஒன்றியத்தில் பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கிறது, தேசிய அளவில், தமிழ்நாட்டின் ஜி.டி.பி. உயர்ந்திருக்கிறது.
விளையாட்டுப் போட்டிகளில் ஐந்தாவது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு வந்திருக்கிறோம், பல துறைகளில் முதலிடத்திற்கு வந்துள்ளோம், இவற்றையெல்லாம் கவர்னர் உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ளவோ, படிக்கவோ மனமில்லாமல், இந்த அரசின் சாதனைகளை தான் வாசிக்க விருப்பமில்லாமல், பொய்யான கருத்துகளை தெரிவித்து, தனக்கு ஏற்றாற்போல அவர் படித்திருக்கின்றார்.
தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளது என்பதை புள்ளி விவரத்தோடு நாங்கள் சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம். கவர்னர் விளக்கம் கேட்டிருந்தால் நிச்சயமாகக் கொடுத்திருப்போம்.
ஆனால், அவர் ஏதும் விளக்கங்கள் கேட்கவில்லை. அதனால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன. இந்த உரை எனது மனசாட்சிக்கு விரோதமாக இருக்கிறது என்று சொல்லி கவர்னர் வராமல் இருந்திருக்கலாம். ஆனால், ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கவர்னர் என்ற அந்தப் பதவிக்கு ஜனநாயகத்தில் நாம் உரிய மரியாதை தர வேண்டும் என்று மதிப்புக் கொடுக்கின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் இருக்கின்ற காரணத்தினால்தான், இன்று நடைபெற்ற இத்தனை நிகழ்வுகளையும் நாங்கள் தாங்கிக் கொண்டிருக்கிறோம்.
தேசிய கீதத்தை வாசிக்க வேண்டுமென்று சொல்கின்ற கவர்னர் நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் உரையை படிக்கின்றவரை அங்கேயே பொறுமையோடு இருந்தவர் இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்திருக்கலாம், சபாநாயகர் தமிழில் பேசுவது என்னவென்று அவருக்குத் தெரியாது. ஆனால், சபாநாயகர் பேசும்போது, திடீரென்று கவர்னர் எழுந்து சென்று விட்டார். இரண்டு நிமிடம் பொறுத்திருந்து, இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்பு உரிய மரியாதையோடு அவர் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர் மரியாதையை அவரே தவற விடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருச்சியில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று தோழர்கள் விருப்பம்.
- தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கப்படும் தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
திருச்சி:
திருச்சி மத்திய மண்டல ம.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் நிதி வழங்கும் விழா இன்று திருச்சியில் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டசபையில், கவர்னர் உரையை வாசிக்காமல் புறக்கணித்தது இதுவே முதல் முறை. தமிழ் தாய் வாழ்த்து பாடியதை தொடர்ந்து உரையும், நிறைவாக தேசிய கீதம் பாடுவதை அவர் முரண்பாடு என்கிறார்.
அவரைப் பொறுத்தமட்டில் தொடக்கத்திலும் நிறைவிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என விரும்புகிறார்.
கடந்த முறை தலைவர்கள் காமராஜர், அண்ணா, பெரியார், கலைஞர் ஆகியோர் பெயரை தவிர்த்து உரையை வாசித்தார். அதற்காக விளக்கத்தை கவனத்தில் அளிக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் செய்து வருகிறார்.
அவருக்கு கவர்னராக இருப்பதற்கான அடிப்படை தகுதி இல்லை. பா.ஜ.க., அரசின் பிரதிநிதி போல் செயல்படுகிறார்.
தமிழகம் மட்டுமின்றி பா.ஜ.க. அல்லாத கேரளா, பஞ்சாப் போன்ற மாநில அரசுகளிலும் பா.ஜ.க அரசின் தலையீடு உள்ளது. லோக்சபா தேர்தலுக்காக, நெருடல் எதுவும் இல்லாமல் கூட்டணியில் செயல்பட்டு வருகிறோம்.
நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மை வெற்றி பெறுவோம் என்று பா.ஜ.க. கூறுவதும் தமிழ்நாட்டில் 20 சதவீத வாக்குகளை வாங்குவோம் என்று கூப்பிட்டாங்க சொல்வதும் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் ஏதேனும் முறைகேடு செய்வார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
18 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, எரி பொருள் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகள் பாஜக அரசு நிறைவேற்றப்படவில்லை. எரிபொருளுள் விலை உயர்வு தான் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் காரணம்.
பல விஷயங்களில் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருப்பதால், பாஜக மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அதனால் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.
திருச்சியில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று தோழர்கள் விருப்பம். கட்சித் தலைமையும் கூட்டணி தலைமையும் ஆணையிட்டால் திருச்சியில் போட்டியிடுவேன்.
கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு ராஜ்யசபா தொகுதியையும் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது கூடுதலாக ஒரு மக்களவைத் தொகுதி கேட்டிருக்கிறோம்.
இன்னும் 10 நாட்களில் திமுக இறுதி முடிவு எடுக்கும். இந்த தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கப்படும் தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
இதில் நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிமுக திட்டங்களை தங்கள் திட்டங்களாக கூறுகிறார்கள், அதை கவர்னரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அழகாக வடிவமைத்து திட்டமிட்டிருந்தோம்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில், சபாநாயகர் அவை மரபை கடைபிடிப்பார் என நம்புகிறோம்.
* சட்டசபை தலைவர் நடுநிலையாக செயல்படவேண்டும், ஆனால் அவரே ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்.
* தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக கவர்னர் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
* கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தால் கவர்னர் புறக்கணித்துள்ளார்.
* இது கவர்னருக்கும், அரசுக்கும் இடையே உள்ள பிரச்சனை.
* அதிமுக திட்டங்களை தங்கள் திட்டங்களாக கூறுகிறார்கள், அதை கவர்னரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
* கவர்னர் உரையில் எதிர்வரும் ஆண்டில் அரசு என்ன செய்ய போகிறது என்பதை சுருக்கமாக சொல்வதுதான் மரபு.
* கவர்னர் உரை உப்பு சப்பில்லாத உரை.
* கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அழகாக வடிவமைத்து திட்டமிட்டிருந்தோம். திமுக அரசு அவசர அவசரமாக கிளாம்பாக்க்ம பேருந்து நிலையத்தை திறந்ததால் அடிப்படை வசதிகள் இல்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- துரைமுருகன் பேச தொடங்கியதும் சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றார்.
- துரைமுருகன் முன்மொழிந்த தீர்மானம், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
சென்னை:
தமிழக சட்டசபை இன்று காலை கூடியதும் தமிழில் பேச தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நிமிடங்களில் தனது உரையை கேரள பாணியில் 2 நிமிடத்தில் முடித்துக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அரசின் உரையை முழுமையாக கவர்னர் ஆர்.என்.ரவி வாசிக்காத நிலையில், சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது, உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுடன் முரண்படுகிறேன். தேசிய கீதத்தை தொடக்கத்திலும், இறுதியிலும் வாசிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். அரசின் உரையை வாசித்தால், அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை என்றார்.
இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டசபையில் எதிரான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் பேச தொடங்கியதும் சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றார். துரைமுருகன் முன்மொழிந்த தீர்மானம், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில்,
* அரசு தயாரித்த உரை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும்.
* கவர்னர் பேசியது அவை குறிப்பில் இடம்பெறாது.
* கவர்னர் முறைப்படி சட்டசபைக்கு அழைக்கப்பட்டார்.
* முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடுவது தான் தமிழ்நாடு சட்டசபையின் மரபு.
* கொள்கை முரண்பாடு இருந்தாலும் மாண்புடன் அவை நடத்துவதுதான் மரபு.
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேசினார்.
- சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
- தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது.
சென்னை:
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியின் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைமைச்செயலகத்திற்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழில் பேசி உரையை தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி கேரள பாணியில் 2 நிமிடத்தில் உரையை முடித்துக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அரசின் உரையை முழுமையாக கவர்னர் ஆர்.என்.ரவி வாசிக்காத நிலையில், சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
இதுகுறித்து கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது:-
* உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுடன் முரண்படுகிறேன்.
* தேசிய கீதத்தை தொடக்கத்திலும், இறுதியிலும் வாசிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்.
* அரசின் உரையை வாசித்தால், அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை.
- கவர்னர், சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
- பட்டமளிப்பு விழாவில் 40622 பேர் பட்டம் பெறுகின்றனர். 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டத்தை பெறுகின்றனர்.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30 வது பட்டமளிப்பு விழா இன்று கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் தொடங்கியது. கவர்னர், சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 40622 பேர் பட்டம் பெறுகின்றனர். 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டத்தை பெறுகின்றனர்.
இந்நிலையில், மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்துள்ளார்.
- பொருளாதார வளர்ச்சியில் 5-வது நிலையை எட்டி உள்ளோம்.
- கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும் போது பல நிலைகளில் நம் நாடு முன்னேறி உள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழ் சேவா சங்கம் சார்பில் தமிழர் திருவிழா, கிராமப்புற பொருளாதார மேம்பாடு, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வீடு வழங்குதல் மற்றும் மீனவர் மேம்பாட்டு திட்டம் வழங்கும் விழா நாகை பொரவாச்சேரியில் நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு முதல்கட்டமாக 25 பேருக்கு வீட்டிற்கான சாவி, 250 பேருக்கு தையல் எந்திரம் ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது:-
தமிழ் சேவா சங்கம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தல், மகளிருக்கு தையல் எந்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்த பணிகள் தொடர வேண்டும்.
நான் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு சென்றேன். பூர்வகுடி மக்களையும், மீனவர்களையும் சந்தித்தேன். அவர்களுடைய ஏழ்மை நிலை என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலைமாற வேண்டும்.
நமது நாடு உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் 5-வது நிலையை எட்டி உள்ளோம். தமிழ்நாடும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இருந்தபோதும் இங்கு இருக்கக்கூடிய ஏழ்மை நிலையை பார்க்கும் போது வருத்தம் அளிக்கிறது. கீழவெண்மணி கிராமத்திற்கு சென்று அங்கு தியாகி பழனிவேலை சந்தித்து உரையாடினேன்.
நமது நாடு உலக அளவில் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. புதிய கோட்பாட்டின்படி மனிதர்கள் அனைவரையும், உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் பயணிக்கின்றோம்.
எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் அதன் நோக்கம். மத்தியில் உள்ள தலைமை இதை நோக்கிய வீரநடை போட்டு வருகிறது. இந்த புதிய பாரத அவதாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 35 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டு உள்ளனர்.
புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு இங்குள்ள பூர்வகுடி மக்களின் பங்களிப்பும், மீனவர்களின் பங்களிப்பும் முக்கியத்துவமாக உள்ளது. அப்படிப்பட்ட பங்களிப்புடன், இருந்தால் நமது நாட்டை 25 ஆண்டுகளில் நாம் முன்னேறிய நாடாக மாற்றிவிடலாம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும் போது பல நிலைகளில் நம் நாடு முன்னேறி உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களை நம் நாட்டின் முன்னேற்றத்தின் சிற்பிகளாக உருவாக்கும் பணியை ஸ்ரீதர் வேம்பு திறமையாக செய்து வருகிறார். அரசியலால் நாம் பிரச்சினைகளையும், பிரிவைவும் மட்டுமே செய்ய முடியும்.
ஆனால் சேவை செய்யக்கூடிய நல்ல உள்ளங்கள், அமைப்புகள் மூலம் தான் நமது நாட்டை முன்னேற்ற முடியும். அந்த சேவையை தமிழ் சேவா சங்கம் திறமையாக செய்து வருகிறது. இளைஞர்களின் புதிய கனவுகளுடன் புதிய தமிழ்நாட்டை படைப்போம்.
இவ்வாறு கவர்னர் ஆர்.என். ரவி பேசினார்.
- 348 மாணவ, மாணவர்கள் நேரடியாக பட்டங்களை பெற்றனர்.
- உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக் உள்பட அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 34-வது பட்டமளிப்பு விழா பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடந்தது. பல்கலை துணைவேந்தர் ரவி வரவேற்றார்.
விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். சென்னை இந்திய தொழில் நுட்ப கழக இயக்குனர் வீ.காமகோடி பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
இதில் 116 பேர் முனைவர் பட்டமும், பல்கலையின் பல்வேறு துறைகளில் பயின்ற 1863 மாணவர்கள், இணைப்புக் கல்லூரிகளில் பயின்ற 12,839 மாணவர்களும், இணைவுக் கல்லூரியில் பயின்ற 4181 மாணவர்களும், தொலை நிலைக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பயின்ற 21,443 மாணவர்களும் பட்டங்கள் பெற்றனர். இதில் 348 மாணவ, மாணவர்கள் நேரடியாக பட்டங்களை பெற்றனர்.
அதில் 164 முனைவர் பட்ட ஆய்வாளர்கள், 184 பேர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றவர்கள் ஆவார்கள். இதற்கான ஏற்பாடுகளை பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
இணைவேந்தரும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் விழாவில் பங்கேற்பதாக அழைப்பிதழில் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் அவர் பட்டமளிப்பு விழாவுக்கு வராமல் புறக்கணித்தார். இதேபோல் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக் உள்பட அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.
- படுகொலை செய்யப்பட்ட 44 ஏழைத் தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில் நினைவுச்சின்னம்.
- தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமும் கூட.
சென்னை:
கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.
பாட்டாளி வர்க்க சாம்பியனாக அழைத்துக்கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால் கீழ்வெண்மணி கிராமத்தில் சுற்றிலும் ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில், படுகொலை செய்யப்பட்ட 44 ஏழைத் தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில் விலையுயர்ந்த கான்கிரீட் கட்டுமானம் ஒரு நினைவுச்சின்னமாக அமைந்திருப்பது முரணானது மட்டுமின்றி தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமும் கூட."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
"நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. பாட்டாளி வர்க்க சாம்பியனாக அழைத்துக்கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால் கீழ்வெண்மணி கிராமத்தில்…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 29, 2024
- கவர்னர் தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என சிலர் கூறுகின்றனர்.
- உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான கருத்து இது.
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
1857 இல் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் கடந்த 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் உள்ளது.
கவர்னர்-அரசு இடையே ஏற்பட்டுள்ள நிலைப்பாடுதான் காரணம்.
தமிழகத்தில் பல சர்ச்சைகளுக்கு மையமாக தமிழக கவர்னர் இருப்பது ஏன்? கவர்னர் தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என சிலர் கூறுகின்றனர்.
உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான கருத்து இது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Among the first three Universities of India established in 1857, the University of Madras is without a Vice Chancellor for the last 5 months
— P. Chidambaram (@PChidambaram_IN) January 27, 2024
The reason given is the Governor-government stand off
Why is the Governor of Tamil Nadu in the centre of many controversies in the State?…
- சர்வதேச விளையாட்டுக்களில் சாதனை படைக்கும் அளவுக்கு பதக்கங்களை வென்ற நமது தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன்.
- நமது விஞ்ஞானிகள் நாட்டிற்குப் பெருமை தேடித்தந்திருக்கிறார்கள்.
சென்னை:
நாட்டின் 75-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
பாரதக் குடியரசின் 75-வது ஆண்டு மங்கலகரமான தருணத்தை முன்னிட்டு, நான் தமிழ்நாட்டின என் சகோதர, சகோதரிகளுக்கு என் வாழ்த்துகளையும், நல்விருப்பங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது நாட்டினை அந்நிய ஆட்சியிடமிருந்து மீட்டு, நமக்கு சுதந்திரத்தை அளித்த கணக்கில்லாத உயிர்த்தியாகிகள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆகியோரின் தியாகங்களுக்கு நான் என் இதயம் நெகிழ்ந்த அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
நமது இராணுவத்தினர், பாதுகாப்பு அமைப்புகள், காவல்துறையினர் ஆகியோருக்கு என் அக்கறையான வணக்கங்களைத் தெரிவிக்கிறேன். அவர்கள் இடைவிடாத விழிப்புடன் இருந்து, சாகசம் மற்றும் தியாகங்களை புரிந்து நமது நாட்டின் இறையாண்மையையும் ஆள்புலக் கட்டுறுதியையும் பாதுகாக்கிறார்கள்.
மேலும் உள்நாட்டில் அமைதி, ஸ்திரத்தன்மை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதி செய்து இயற்கை பேரிடர்களின் போது பாதிக்கப்படுவோரை மீட்டு, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
சூறாவளிப் புயலான மிச்சாங் மற்றும் நமது மாநிலத்தின் தென் மாவட்டங்களில் பெய்த இடைவிடாத மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை மீட்டு நிவாரணம் அளிப்பதிலே, தன்னலமற்ற, தலைசிறந்த சேவை புரிந்த தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நான் என் ஆழமான பாராட்டுக்களையும், முனைப்பான நன்றிகளையும் தெரிவிக்கிறேன்.
நிலவுக்கு மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான பயணமான சந்திரயான் 3, சூரியனுக்கு மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான பயணமான ஆதித்யா எல்1 ஆகியவை மூலம் நமது விஞ்ஞானிகள் நாட்டிற்குப் பெருமை தேடித்தந்திருக்கிறார்கள். இது தேசத்திற்குப் பெற்றுத்தந்த பெருமிதத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
சர்வதேச விளையாட்டுக்களில் சாதனை படைக்கும் அளவுக்கு பதக்கங்களை வென்ற நமது தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன்.
சில நாட்கள் முன்பாகத்தான் குழந்தை ஸ்ரீ ராமனுக்கு அயோத்தியில் மகோன்னதமான ஸ்ரீராமர் ஆலயத்தில் பிராண பிரதிஷ்டை என்ற யுகாந்தர புனித நிகழ்வு நிறைவேறியது. இந்த வரலாற்றுப் பூர்வமான நிகழ்ச்சி, நாடு முழுவதிலும் சக்தியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் மக்களின் மனங்களில் ஒரு முழுமையான வளர்ந்த பாரத்தை உருவாக்கத் தேவையான தன்னம்பிக்கை, புதிய ஆற்றல் ஆகியவற்றையும் இட்டு நிரப்பியது. ஸ்ரீராமன் நமது தேசியச் சின்னமாக, உத்வேகமாக இருந்து வந்திருக்கிறார். பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும் வாசம் செய்யும் அவர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாகவும் இருக்கிறார்.
அவர் கருத்தூக்கத்தின் மொத்த உருவம், நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டிருக்கம் ஆதர்சங்களான நல்லாளுகைக்கான முழுப்பெரும் எடுத்துக்காட்டாக ராம ராஜ்ஜியம் விளங்குகிறது.
இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
ஆளுநர் ரவி அவர்களின் 75வது குடியரசு தின விழா உரை.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 26, 2024
Governor Ravi's address on 75th Republic Day.https://t.co/GYzQJRplAF@rashtrapatibhvn @PMOIndia @HMOIndia @MinOfCultureGoI @EBSB_Edumin @IndiaSports @isro @HSVB2047 @PIB_India @PIBCulture @pibchennai @DDNewslive…
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்