search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Budget"

    • வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இலக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஹால் டிக்கெட் மறந்துவிட்டு பதற்றம் அடைய கூடாது என்று அதை தேர்வு எழுதும் போது மாணவர்களுக்கு கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஷிவ் நாடார் பவுண்டேஷன் இணைந்து, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைத்து பராமரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கையெழுத்தானது.

    தொடர்ந்து, மணற்கேணி இணையம் இனி கணினியிலும் காணும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஷிவ் நாடார் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளையுடன் இணைந்து ஒரு வருடத்திற்கு 6ம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களுக்கு உலக தரம் வாய்ந்த கல்வி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    மணற்கேணி செயலியார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 2 லட்சம் அளவில் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


    அதேபோல், 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை ஒரு கான்செப்ட் எப்படி வந்துள்ளது என்பது போல் அந்த வீடியோக்கள் இருக்கும். தனியார் பள்ளி கொரோனா காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வியை கொண்டு சேர்த்தார்கள். அதை அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்போது கொண்டு சேர்த்து வருகிறது.

    வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இலக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒன்றரை லட்சம் கோடி தி.மு.க. ஆட்சி தொடங்கியதில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற வரலாற்றிலேயே இந்த ஆண்டு தான் 44 ஆயிரம் கோடி பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    கோடை காலம் தொடங்கியதால் பள்ளிகளில் பந்தல் அமைப்பது, குடிநீர் வைப்பது உள்ளிட்ட கோடைகால தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் செய்வது போல் இந்த ஆண்டும் தயாராக உள்ளது.

    ஹால் டிக்கெட் மறந்துவிட்டு பதற்றம் அடைய கூடாது என்று அதை தேர்வு எழுதும் போது மாணவர்களுக்கு கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வில் ஒவ்வொரு முறையும், செய்வது போல் இந்த ஆண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், நிதி நிலைமை சீர் அடையும் போது அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறைக்கு நடப்பு ஆண்டில் ரூ. 44,042 கோடி ஒதுக்கி உள்ளார்.
    • அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    'கல்வி மட்டுமே சமத்துவம் மலர்ச்செய்யும் மிகப்பெரிய ஆயுதம்' என்ற கலைஞரின் கூற்றை மெய்ப்பித்திடும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்.

    பல்வேறு புதிய திட்டங்களால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெற்றிநடை போட்டு வருவதைக் காணலாம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகப்படுத்தி உள்ளார். எந்த நோக்கத்திற்காக நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளதோ அதை மனதிற்கொண்டு, அந்நோக்கத்தைச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறைக்கு நடப்பு ஆண்டில் ரூ. 44,042 கோடி ஒதுக்கி உள்ளார்.

    தமிழ்நாடு அரசு கல்வித் துறைக்கென இதுவரை 57-திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருவதால் மாணவர்களின் கல்வித் தரம் உயரும் வகையில் மிகப்பெரிய வளர்ச்சியை கல்வித்துறை பெற்றுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளது. இடைநிற்றல் மிகவும் குறைந்துள்ளது.

    அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 28 பள்ளிகள் தகை சால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

    மேலும் நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் உயர்தர கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்கவும், அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8 ஆயிரத்து 209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் 22 ஆயிரத்து 931 தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    மேலும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட உள்ளது. இதனால் வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வசதிகளுடன் கற்றல் கற்பித்தல் பணிகள் நடைபெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து அனைத்து பள்ளி வயதுடைய குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்த்திட பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் விளையாட்டுத் திடல், தேவையான அளவு அரசு பள்ளிகள் இல்லை.
    • தென் சென்னையில் இருப்பதுபோல அரசின் எந்த சேவைகளும் வடசென்னையில் இல்லை.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்ட அரசுகள், வட சென்னை பகுதியை புறக்கணித்தே வந்துள்ளன. தென் சென்னையையும், வட சென்னையையும் ஒருமுறை சுற்றிப் பார்த்தாலே வட சென்னையை எந்த அளவுக்கு 'மாற்றான்தாய்' மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்தியிருக்கிறது என்பது தெரியவரும். சரியான சாலை வசதிகள், முக்கியமான இடங்களில் கூட மேம்பாலங்கள் இல்லாதது, சுகாதாரமான குடிநீர் கிடைக்காதது, கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லாதது, அதிக மாசு ஆகியவைதான் வட சென்னையின் முக்கிய பிரச்சனைகள்.

    வடசென்னை பகுதியில்தான் அதிக மாசை ஏற்படுத்தும் அனல் மின் நிலையங்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ரசாயன ஆலைகள் அதிக அளவில் உள்ளன. சமீபத்தில்கூட மழைநீரில் கச்சா எண்ணெய் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உர ஆலை ஒன்றில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால், ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    வட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் விளையாட்டுத் திடல், தேவையான அளவு அரசு பள்ளிகள் இல்லை. தென் சென்னையில் இருப்பதுபோல அரசின் எந்த சேவைகளும் வடசென்னையில் இல்லை. வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது அரை நூற்றாண்டுக்கும் மேலாக வட சென்னை மக்களின் கோரிக்கை. இப்போதுதான் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. அது எப்போது முடியும் என்று தெரியவில்லை.

    பெரம்பூரில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம், பேப்பர்மில்ஸ் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, ஐ.சி.எப்., அயனாவரத்தை இணைக்கவில்லை. இதனால் அரசு பேருந்துகள் மட்டுமே மேம்பாலத்தில் செல்கின்றன. இப்படி, வட சென்னையில் பல்வேறு கட்டமைப்புகள் அரைகுறையாகவே உருவாக்கப்பட்டுள்ளன. புளியந்தோப்பில் உள்ள ஆடுகள் வெட்டும் இடம் இன்னும் நவீன மயமாக்கப்படவில்லை. வடசென்னை பகுதியில் குறிப்பாக முதலமைச்சரின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கூட மயானங்களின் பராமரிப்பு படுமோசமாக உள்ளது.

    வட சென்னையின் பெரும்பான்மையான இடங்களில் குடிநீரில் சாக்கடை கலந்துதான் வருகிறது. கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் போதுமானதாக இல்லை. மழைநீர் கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்களாக மாறியுள்ளன. இதனால் மழை நீர் வெளியேற முடியாமல், மழை காலங்களில் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

    வட சென்னையின் இதுபோன்ற பிரச்சனைகளை பட்டியலிட்டு அதற்கு தீர்வு காண வேண்டும் என பா.ஜ.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 'என் மண் என் மக்கள்' யாத்திரை வட சென்னை பகுதிக்கு வந்தபோது, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வட சென்னை எப்படி வஞ்சிக்கப்படுகிறது என்பதை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி பேசினார்.

    ஆனால், 2024-25-ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையில், வட சென்னையின் பிரச்சனைகள், தேவைகளுக்கு தீர்வு காண எந்தத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. வட சென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி வழங்கப்படும் என, நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு புதிதாக கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், கடந்த நிதிநிலை அறிக்கையிலும் இதே ரூ. 1000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டதற்கான தடயங்களே இல்லை. மக்களை ஏமாற்ற மீண்டும் அதே அறிவிப்பை செய்துள்ளனர். இப்படி மக்களை ஏமாற்ற நினைக்காமல், வட சென்னையின் வளர்ச்சிக்கு, அம்மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை, கோவை, மதுரையில் ரெயில்வே, வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
    • விருதுநகர், சேலத்தில் ரூ.2483 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

    மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். ராமநாதபுரத்தில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும். பழங்குடி மக்களின் மொழி வளங்களை ஆவணப்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 70 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். சென்னை, கோவை, மதுரையில் ரெயில்வே, வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும். சுகாதார மையங்கள் முதல் மருத்துவ கல்லூரிகள் வரை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கு 1000 பேருக்கு 6 மாத உறைவிடப்பயிற்சி தரப்படும்.

    மகளிர் வேலைவாய்ப்பை பெருக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். தஞ்சையில் ரூ.120 கோடியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும். அனைத்து சிப்காட் பகுதிகளிலும் பணிபுரியும் பெண்களுக்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். விருதுநகர், சேலத்தில் ரூ.2483 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • நீர்நிலை மாசுபாட்டைத் தவிர்ப்பதற்கும் 946 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டம் நிறைவேற்றப்படும்.
    • சென்னையை ஒட்டி பூந்தமல்லிக்கு அருகில் அதிநவீனத் திரைப்பட நகரம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

    நாட்டிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் நகரங்களில் ஒன்றான சென்னை மாநகரத்தின் சில பகுதிகளில், குறிப்பாக, வடசென்னையில் போதிய அளவு அடிப்படை வசதிகளும் கட்டமைப்புகளும் இல்லாத நிலை உள்ளது. சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்ய வடசென்னை வளர்ச்சித் திட்டம்" எனும் புதிய முயற்சியை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் வாட்டர் பேசின் சாலையில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் புதிய குடியிருப்புகள். எழும்பூரில் குழந்தைகள் நல மருத்துவமனையில் 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயர்தர சிகிச்சைப்பிரிவு, ராயபுரத்தில் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 புதிய கட்டடங்கள், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய தளங்கள், 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிற்பயிற்சி நிலையம், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரெட்டேரி. வில்லிவாக்கம், பாடி ஏரிகளை சீரமைத்தல். 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 பள்ளிகளைப் புதுப்பித்தல், மேம்படுத்துதல் மற்றும் கணினிமயமாக்கல் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் என மொத்தம் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

    சென்னை மாநகராட்சி வடசென்னை பகுதிகளில் மக்கள்தொகை மற்றும் அவற்றுக்கான பெருகிவரும் தேவைகளை நிறைவுசெய்ய சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள கழிவுநீர் சேகரிப்புக் குழாய்கள், கழிவுநீர் இறைக்கும் நிலையங்கள், உந்து குழாய்கள் மற்றும் உபகரணங்களின் செயல்திறன் போதுமானதாக இல்லை. எனவே, வடசென்னைப் பகுதிகளில் கழிவுநீர் மற்றும் குடிநீர் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு கழிவுநீரைத் திறம்பட அகற்றுவதற்கும், நீர்நிலை மாசுபாட்டைத் தவிர்ப்பதற்கும் 946 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டம் நிறைவேற்றப்படும்.

    சென்னையை ஒட்டி பூந்தமல்லிக்கு அருகில் அதிநவீனத் திரைப்பட நகரம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தக் கனவுத் தொழிற்சாலையில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்புத் தளங்கள், படத் தயாரிப்புக்குப் பிந்தைய பதவிகளுக்கான கட்டமைப்புகள், படப்பிடிப்பிற்குத் தேவையான கட்டமைப்புகள், அரசு தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிடவியல் கோட்பாட்டின்படி அரசு நிர்வாக வடிவமாக செயல்பட்டு வருகிறது.
    • நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும், எழுத்தும், அறிவிப்பும் ஈரமுள்ளதாக, இதயமுள்ளதாக இருக்கிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 2024-25-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிடவியல் கோட்பாட்டின்படி அரசு நிர்வாக வடிவமாக செயல்பட்டு வருகிறது. சமூக நீதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து மக்களுக்குமான சமநீதி, சமநிதியை வழங்கி தமிழகத்தின் சீரான வளர்ச்சிக்கான பாதைக்கு அதிவேக பயணத்தை உறுதி செய்துள்ளது. நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும், எழுத்தும் அறிவிப்பும் ஈரமுள்ளதாக இதயமுள்ளதாக இருக்கிறது.

    7 பெரும் கனவுகளை முழுமையாக நிறைவேற்றும்போது இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழும் காலம் விரைவில் ஏற்படும். நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும், எழுத்தும், அறிவிப்பும் ஈரமுள்ளதாக, இதயமுள்ளதாக இருக்கிறது.

    நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு... நாளை முதல் அது நனவாக வேண்டும்.

    அனைத்து துறை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் திட்டங்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • சென்னையில் உள்ள குறளகம் நவீனப்படுத்தப்படும்.
    • ரூ.60 கோடியில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

    நகராட்சி நீர்வளம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.25,858 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை மெரினா கடற்கரை, கடலூர் சில்வர் பீச், விழுப்புரம், மரக்காணம், நாகை, ராமேசுவரம் உள்பட 8 கடற்கரைகள் மேம்படுத்தப்படும். பிராட்வே பஸ் நிலையம் மேம்படுத்தப்படும்.

    பழங்குடியினரை மேம்படுத்த ரூ.1000 கோடியில் தொல்குடி என்ற திட்டம் அமல்படுத்தப்படும். 2 ஜவுளிப் பூங்காக்கள் மூலம் 2.08 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். பெரம்பலூர், எறையூர், பாடலூரில் சிப்காட் வளாகத்திற்கு தேவையான நீரை வழங்க கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

    அயோத்தி தாசர் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தப்படும்.

    1000 ஆண்டுகள் பழமையான கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கப்படும். சென்னையில் உள்ள குறளகம் நவீனப்படுத்தப்படும்.

    பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோவில்களில் ரோப்கார் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    சமூக பாதுகாப்பு துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும்.

    கோவையில் பூஞ்சோலை என்ற பெயரில் ஒரு மாதிரி உள் நோக்கு இல்லம் அமைக்கப்படும்.

    தூண்டில் வளைவுகள், மீன் இறங்குதளங்களை அமைக்க ரூ.450 கோடி நிதி ஒதுக்கப்படும். கரூர், ஈரோடு, விருதுநகரில் ரூ.20 கோடியில் சிறிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

    உள்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் ஆகியவற்றை திறம்பட செயல்படுத்த பெயர் மாற்றம் செய்யப்படும். நீதியரசர் சந்துரு பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த துறையில் சீர்திருத்தங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ரூ.60 கோடியில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படும்.

    சென்னை, திருச்சி, மதுரை, நீலகிரியில் 4 ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் நிறுவப்படும். இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.440 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி ராமநாதபுரம் பிரப்பன் வலசையில் அமைக்கப்படும்.

    இளைஞர்களின் கலைத்திறமைகளை வெளிக்கொணர பேச்சு, பாட்டு, இசை, நடனம் என போட்டிகள் நடத்தப்படும். 500 புதிய மின்சார பஸ்கள் வாங்கப்படும்.

    நூலகம், குடும்ப பார்வையாளர்கள் அறை, பூங்கா, மைதானத்துடன் இல்லம் அமைக்கப்படும்.

    இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்பு தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். விபத்து நடந்து 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்பு தொகை உயர்த்தப்படும்.

    தமிழ்நாடு சந்தித்த பேரிடர்களுக்கான நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. மெட்ரோ பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவதிலும் மத்திய அரசு கால தாமதம் செய்கிறது. இயற்கை பேரிடர்களால் தமிழக அரசின் நிதி நிலையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    ரூ.665 கோடியில் 14 புறவழிச்சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

    தஞ்சை செங்கிப்பட்டி அருகே ரூ.120 கோடியில் 300 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

    சிப்காட் பூங்காவில் உணவுப்பொருட்கள் பதப்படுத்துதல், தோல் அல்லாத காலணிகள் ஆலை அமைக்கப்படும்.

    ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். இதுவரை 60,567 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்திடும் சட்டமசோதா நடப்பு கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும்.

    வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி திரட்டும் மாநில அரசின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. சிறு, குறு தொழில்முனைவோர்களுக்கு 3 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.

    மதி இறுக்கம் உடையோருக்கான உயர் திறன் மையம் ரூ.25 கோடியில் அமைக்கப்படும். பேரிடர்களால் நிதி நெருக்கடியை சந்தித்த போதிலும் வாக்குறுதியை நிறைவேற்ற உறுதி அளித்து உள்ளோம்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு துறைகள் மூலம் அரசுக்கு அதிக வருவாய் வந்து கொண்டுதான் இருக்கிறது.
    • மாநில அரசின் வருவாய் உயர்ந்தாலும், பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கனவு பட்ஜெட் கானல் நீர்... மக்களுக்கு பயன் தராது. நிதி நிலை அறிக்கையில் வார்த்தை ஜாலம் உள்ளது.

    * வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல் தடுப்பணைகள் கட்டும் திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.

    * தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து நிதிப்பற்றாக்குறை தொடர்ந்து அதிகரிப்பு.

    * தமிழகத்தின் கடன் 8 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

    * கடன் பெறுவதில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    * வரவு- செலவு திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.

    * பல்வேறு துறைகள் மூலம் அரசுக்கு அதிக வருவாய் வந்து கொண்டுதான் இருக்கிறது.

    * மாநில அரசின் வருவாய் உயர்ந்தாலும், பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    * இருக்கும் நிதியை வைத்து சிறப்பான ஆட்சியை கொடுத்தது அ.தி.மு.க.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை, சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மூன்றாம் பாலினத்தவரின் கல்வி செலவுகள் முழுவதையும் அரசு ஏற்கும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

    புதுமைப்பெண் திட்டத்தை விரிவுபடுத்த ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வரும் நிதியாண்டில் 10 ஆயிரம் புதிய சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்படும். வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை சீரமைக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    மதுரை, சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.7590 கோடியில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

    ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும். மூன்றாம் பாலினத்தவரின் கல்வி செலவுகள் முழுவதையும் அரசு ஏற்கும்.

    பணிபுரியும் மகளிருக்காக கோவை, மதுரையில் ரூ.26 கோடியில் 3 புதிய தோழி மகளிர் தங்கும் விடுதிகள் கட்டப்படும். 15 ஆயிரம் திறன்மிக்க வகுப்பறைகள் ரூ.300 கோடியில் உருவாக்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடக்கிறது.
    • தமிழ் இலக்கிய படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

    கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடக்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றை 25 மொழிகளில் மொழி பெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    தமிழ் இலக்கிய படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், நூலகங்களில் தமிழ் நூல்களை இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் 3 ஆண்டுகளில் 600 நூல்கள் வெளியிடப்படும். மொழித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநில அரசு கடன் பெற மத்திய அரசு கடும் நிபந்தனைகள் விதிப்பதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுகிறது.
    • தேசிய பேரிடர் நிவாரணத்திலிருந்து எந்த நிதியும் தற்போது வரை மத்திய அரசு விடுவிக்கவில்லை.

    சென்னை :

    2024-2025ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு வாசிக்க தொடங்கினார். சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்தார். அப்போது அவரது உரையில்,

    ஜிஎஸ்டி-யால் ஒரு ஆண்டுக்கு தமிழகத்திற்கு 20,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசு காலதாமதம் செய்வதால், தமிழ்நாடு அரசுக்கு ரூ.9,000 கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. முழு செலவையும் மாநில அரசே ஏற்கும் சூழலும் உள்ளது.

    மாநில அரசு கடன் பெற மத்திய அரசு கடும் நிபந்தனைகள் விதிப்பதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுகிறது.


    தேசிய பேரிடர் நிவாரணத்திலிருந்து எந்த நிதியும் தற்போது வரை மத்திய அரசு விடுவிக்கவில்லை.

    அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.44,907 கோடியாக அதிகரித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை ரூ.1,08,690 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.46 சதவீதம். கடும் சவால்களுக்கு இடையிலும் நிதி பற்றாக்குறையை அரசு குறைத்துள்ளது.

    ஏற்றுமதி, மின்னணு பொருட்கள், மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலம். தடைகளை தாண்டி வளர்ச்சியை நோக்கி அரசு பயணிக்கும் என்பதை உணர்த்தும் பட்ஜெட் என கூறினார்.

    • வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 27,922 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கூடியது. அப்போது 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

    பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஏராளமான சலுகைகளை வெளியிட்டார். முதல்-அமைச்சரின் புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் சலுகை மழையாக அறிவிக்கப்பட்டன. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

    தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்துத் தரும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கிராமப் பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது. குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திடும் வகையில், வரும் 2030-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கி ரீட் வீடுகள் கட்டித் தரப்படும். முதற்கட்டமாக 2024-25-ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3.50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவர்தம் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான பயனாளிகள் தேர்வு முறை, தங்கள் கனவு இல்லங்களை பயனாளிகள் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு என குறிப்பிடத்தக்க அம்சங்களைத் தாங்கிய இப்புதிய திட்டம் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் வரும் நிதி ஆண்டில் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

    கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நாட்டிற்கே முன்னோடியாக விளங்கிடும் வகையில், தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பல சமூகநலத் திட்டங்களின் வாயிலாக வறுமையை குறைப்பதில் நமது மாநிலம் மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

    அதை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் நிதி ஆயோக் சமீபத்திய தனது அறிக்கையில் பன்முக வறுமைக் குறியீட்டின்படி, தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் சதவீதம் மிகக் குறைவாக 22 சதவீதம் மட்டுமே என அறிவித்து உள்ளது. இருப்பினும், தற்போது மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி ஏழைக் குடும்பங்களையும் கண்டறிந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிட அரசு முடிவு செய்துள்ளது. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது.

    ஆதவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

    அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு, மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராம சபை ஆகியவற்றின் மூலம் மாநிலம் முழுக்க மிகவும் ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்படும். முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற பெயரிலான இப்புதிய திட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 27,922 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் பரவலாக கல்லூரிகளில் திறன் பயிற்சிக் கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் அவசியமாகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் 100 பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திறன் பயிற்சிக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

    ஒன்றிய குடிமைப்பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்திட ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் முதல்நிலை தேர்வுக்குத் தயாராக மாதந்தோறும் 7,500 ரூபாய் மற்றும் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

    இத்திட்டம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, தற்போது ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரை மண்டலங்களில் உண்டு. உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கிட 6 கோடி ரூபாய் இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடும் பொருட்டு, அரசு பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களது பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பயின்றிட உதவித்தொகை அளித்து உதவும் வகையில், ஒரு புதிய திட்டம் வரும் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்.

    உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அதேபோல், அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள். பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

    இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள்.

    இப்புதிய திட்டத்தின் மூலம் சுமார் 3 லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர். உயரிய நோக்கம் கொண்ட இத்திட்டத்தை நிறைவேற்றிட வரும் நிதியாண்டில் 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டு மாணவர்களின் கல்லூரிக் கனவை நனவாக்கிடவும், அவர்தம் பெற்றோரின் நிதிச் சுமையைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலும், தேவையின் அடிப்படையில் 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு 2500 கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கிடுவதை அரசு உறுதி செய்திடும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    ×