என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கம் தென்னரசு"

    • எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
    • பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை #SIR ஆதரிப்பது ஏன்?

    சென்னை:

    தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசுக்கு சில கேள்விகளை கேட்டு இருந்தார். அதன்விவரம் வருமாறு:-

    * மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் GST சீர்திருத்தம் COOPERATIVE FEDERALISM என்பது வெற்று முழக்கமா?

    * NEP, இந்தியை திணித்து தமிழ்நாட்டு குழந்தைகள் கல்வியை சிதைப்பது மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லையா?

    * உ.பி, குஜராத், மகாராஷ்டிராவுக்கு அளிக்கப்படும் சாலை திட்டங்களை தமிழ்நாட்டிற்கு தராதது ஏன்?

    * புதிய ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தென்னக ரெயில்வேவுக்கு மட்டும் ஏன் பாரபட்சம்?

    * மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அனுமதி தர ஏன் இவ்வளவு தாமதம்?

    * தமிழ்நாடு அரசின் நிதியில் கட்டப்படும் வீடுகளில் பிரதமர் பெயர் எதற்கு?

    * 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதி ரூ.975 கோடி நிதி எங்கே?

    * ஓய்வூதிய திட்டத்திற்கு வெறும் ரூ.200 தருகிறீர்கள். ஆனால் தமிழ்நாடு அரசு ரூ.1,200 வழங்குகிறது.

    * ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய ரூ.3,709 கோடி நிதி ஏன் இன்னும் விடுவிக்கப்படவில்லை?

    * நாட்டின் மக்கள் தொகையில் தமிழ்நாடு 6%, ஆனால், 4% மட்டும் நிதிப் பகிர்வு அளிப்பது ஏன்? என்பது போன்ற கேள்விகளை கேட்டு இருந்தார்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நிதி அமைச்சர் தென்னரசுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்:

    ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, #WashingMachine-இல் வெளுப்பது எப்படி?

    நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?

    ஒன்றிய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?

    எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?

    பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை #SIR ஆதரிப்பது ஏன்?

    இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்?

    கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?

    இதற்கெல்லாம் பதில் வருமா?

    இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா? என்று வினவியுள்ளார். 



    • அ.தி.மு.க. விட்டுச்சென்ற கடனுக்கு 5 ஆண்டாக வட்டி மட்டும் ரூ.1.40 லட்சம் கோடி கட்டியுள்ளோம்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் 128 சதவீத அளவிற்கு கடன் அதிகரித்தது.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபையின் 3-ம் நாள் அமர்வு நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

    * தமிழ்நாடு கடனில் தத்தளிப்பதாக கூறுவது தவறு. அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கிய கடனுக்கு 5 ஆண்டாக வட்டி கட்டி வருகிறோம்.

    * அ.தி.மு.க. விட்டுச்சென்ற கடனுக்கு 5 ஆண்டாக வட்டி மட்டும் ரூ.1.40 லட்சம் கோடி கட்டியுள்ளோம்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் 128 சதவீத அளவிற்கு கடன் அதிகரித்தது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டில் 93 சதவீதம் தான் கடன் அதிகரித்துள்ளது.

    * கடன் பற்றி பேச அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு தார்மீக உரிமை இல்லை.

    * சேராத இடம் தேடி போய் சேர்ந்திருக்கிறது அ.தி.மு.க. என்றார்.

    • அவிநாசி பாலத்திற்கு ஜி.டி. நாயுடு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    • நாயுடு என்பதை ஜாதி பெயர்தானே என விமர்சனம் செய்யப்பட்டது.

    ஊர், தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயரில் ஜாதி பெயர் இடம் பெற்றிருந்தால் அதை நீக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டியிருந்தது. அரசாணை வெளியிட்ட அடுத்த நாள், கோவை அவினாசியில் 10 கி.மீ. நீள மேம்பாலம் திறக்கப்பட்டது. அந்த சாலைக்கு ஜி.டி. நாயுடு எனப் பெயர் வைக்கப்பட்டது.

    நேற்று அரசாணை வெளியிட்டு இன்று சாதி பெயருடன் கூடிய மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார் என விமர்சிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பாக விளக்கம் அளித்து கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 10 கி.மீட்டருக்கு அதிகமான நீளம் கொண்ட கோவை அவினாசி மேம்பாலத்திற்கு புகழ்பெற்ற ஜி.டி. நாயுடு பெயரை வைத்திருப்பதை குறையாக சொல்கிறார்கள். ஜி.டி. நாயுடு யார்? அவர் மிகப்பெரிய விஞ்ஞானி. அநத் பகுதிலேயே குடியிருந்தவர்.

    கோவை மட்டுமல்ல எல்லாப் பகுதி மக்களாலும் போற்றப்பட்டவர் என்பதால் அவரது பெயரை வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் முதலமைச்சர் ஜி.டி. நாயுடு பெயரை சூட்டியுள்ளார். பலதரப்பட்ட மக்கள் வரவேற்றுள்ளனர்.

    ஜி.டி. நாயுடு பெயரில் ஜாதி பெயர் என்றால் ஜி.டி. பாலம் என்றா வைக்க முடியும்?. ஜி.டி. நாயுடு என்று வைக்கப்படுவதனால்தான் இன்னார் என்று அறியப்படுகிறார்.

    இந்த விவகாரத்தில் அரசியல் லாபம் பார்க்க முயல்வது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    • செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு, ஓடி ஒளியும் அதிமுக அரசைப் போல திமுக அல்ல
    • பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மதித்து நடந்துகொள்வது எதிர்க்கட்சிகளின் கடமை

    கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    கரூர் தவெக தேர்தல் பரப்புரையில் என்ன நடந்தது என்பது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதனை விமர்சித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "எதிர்க்கட்சி தலைவர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை அவரது பதட்டத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டியிருக்கின்றது. எவ்வகையிலாவது இத்துயர்மிகு சம்பவத்திலிருந்து அரசியல் லாபம் பெற முடியுமா என்று துடியாய்த் துடிப்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிகின்றது.

    செய்தியாளர் சந்திப்பில் உண்மைகள் உணர்த்தப்படும் போது, அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்து வழக்கம் போலவே ஓர் உளறல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். கரூரில் நடந்த கொடுந்துயரத்திற்குக் காரணம் என்னவென்பதை அரசு அமைத்திருக்கும் ஆணையமும் காவல் துறை விசாரணையும் முறையாக வெளிக்கொணரும் எனச் செய்தியாளர்களிடம் அரசு அதிகாரிகள் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். நடைபெற்ற ஒரு பெரும் துயரச் சம்பவம் குறித்தான உண்மை நிலவரங்களை அரசின் உயர் அலுவலர்கள் நாட்டு மக்களுக்கு விளக்கிச் சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது? அரசின் முக்கிய அங்கமாக விளங்கும் அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் அத்தகு விளக்கங்களைச் செய்தியாளர்கள் வாயிலாக வெகுமக்களுக்கும் சென்றடையச் செய்வது இத்தகுச் சூழலில் அவர்களின் கடமை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தன் வசதிக்காக மறந்துவிட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்.

    நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு, மக்களிடம் விளக்கமளிக்காமல் ஓடி ஒளியும் அதிமுக அரசைப் போல இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் அரசு இது என்பதைத் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் ஆதாயம் தேடுவதைத் தவிர்த்து, பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மதித்து நடந்துகொள்வது எதிர்க்கட்சிகளின் கடமையும் கூட என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டோம் என்று ஒப்புக்கொண்டு ஒட்டுமொத்த அரசும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
    • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு எந்த அளவுக்கு மோசடி செய்கிறது என்பதற்கு இதைவிட மோசமான உதாரணம் இருக்க முடியாது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசாணை வெளியிட்டால் வாக்குறுதிகள் நிறைவேறி விடுமா? 'சீனி சக்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா' கதை தானா?

    2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றில் பல செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 40 வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் ஆக மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு எந்த அளவுக்கு மோசடி செய்கிறது என்பதற்கு இதைவிட மோசமான உதாரணம் இருக்க முடியாது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அமைச்சர்களும் தொடர்ந்து பொய்யுரைத்து வந்த நிலையில் உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்தும் வகையில், விடியல் எங்கே? என்ற ஆவணத்தை தயாரித்து கடந்த ஆகஸ்ட் 26-ஆம் நாள் வெளியிட்டேன்.

    அந்த ஆவணத்தில் திமுக சார்பில் அளிக்கப்பட்டு இன்று வரை நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகளை பட்டியலிட்டிருந்தேன். வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13% வாக்குறுதிகளை மட்டுமே திமுக அரசு நிறைவேற்றியிருப்பதாகக் கூறியிருந்த நான், அவற்றையும் அந்த நூலில் பட்டியலிட்டிருந்தேன். அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகளையும் பட்டியலிட்டது மட்டுமின்றி, அவற்றில் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது; எந்த அளவுக்கு செயல்படுத்தப் படவில்லை என்பதையும் விரிவாக விளக்கியிருந்தேன். அதை திமுக அரசால் மறுக்க முடியவில்லை.

    இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சக அமைச்சர்கள் இருவருடன் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், "திமுகவின் 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றில் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 40 வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. ஆக மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன.

    மத்திய அரசின் அனுமதிக்காக 37 வாக்குறுதிகள் காத்திருக்கின்றன. மீதமுள்ள 64 வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை" என்று கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய்; அதைத் தவிர வேறொன்றுமில்லை. வாக்குறுதிகளின் எண்ணிக்கையை மட்டுமே அமைச்சர் தெரிவித்தாரே தவிர, அவற்றின் பட்டியலை வெளியிட வில்லை. இதிலிருந்தே பா.ம.க.வின் குற்றச்சாட்டுக்கு திமுகவிடம் பதில் இல்லை என்பதை அறியலாம்.

    அரசாணை வெளியிடப்பட்ட வாக்குறுதிகளையும், பரிசீலனையில் உள்ள வாக்குறுதிகளையும் எவ்வாறு நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளாக கருத முடியும்? என்று தெரியவில்லை. அமைச்சர் கூறுவதைப் போல 364 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டதாகக் கூட தெரியவில்லை. ஒருவேளை அவ்வாறு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அவற்றை அரசு வெளியிட்டு இருந்திருக்கலாம். செய்யாத சாதனைகளையே செய்ததாகக் கூறி பெருமைப்பட்டுக் கொள்ளும் திமுக அரசு, யாருக்கும் பயனற்ற அரசாணை பிறப்பித்திருந்தால் கூட அதைக் கொண்டாடியிருக்கும். ஆனால், அதை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் செய்யவில்லை.

    ஒருவேளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் எல்லாம் வைகை ஆற்றில் வீசப்பட்டதைப் போல, பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை எல்லாம் கூவம் ஆற்றிலும், அடையாறு ஆற்றிலும் திராவிட மாடல் அரசு வீசி விட்டதோ, என்னவோ தெரியவில்லை.

    ஒருவேளை அரசாணைகளே பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் இருந்தாலும் அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக கிடைத்தால் மட்டும் தான் அது நிறைவேற்றப்பட்டதாக பொருள் ஆகும். அரசாணைகள் எனப்படுபவை ஏட்டுச் சுரைக்காய்கள் தான்.

    அவற்றைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கூறுவதைப் போல அரசாணை வெளியிடப்பட்ட வாக்குறுதிகளையும், பரிசீலனையில் உள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்றபட்டவையாக கருத வேண்டும் என்றால், அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி கூறுவதைப் போல, "சீனி சக்கரை சித்தப்பா.... ஏட்டில் எழுதி நக்கப்பா" என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தான் இருக்குமே தவிர மக்களுக்கு பயன்படாது.

    திமுக அரசின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன? என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூறுகிறேன். 2021-ஆம் ஆண்டுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், 221 வாக்குறுதியாக, 'மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை கணக்கிடும் முறை கொண்டுவரப்படும். இதனால், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை மிச்சமாகும்" என்று கூறப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதி இப்போது வரை நிறைவேற்றப்படவில்லை.

    அந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்று இன்றைய செய்தியாளர் சந்திப்பில் மின்துறை அமைச்சரிடம் கேட்ட போது, அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதந்திர மின் கட்டண வசூல் நடைமுறைக்கு வரும் என்று பதிலளிக்கிறார். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு தான் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்படவில்லை. ஏன் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று கேட்டால் ஸ்மார்ட் மீட்டரை காரணம் காட்டுவார்கள்.

    திமுக ஆட்சி இன்னும் 6 மாதங்கள் மட்டுமே தொடரும் என்ற நிலையில், எப்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்பது தெரியவில்லை. இப்படியாக திமுக அரசின் அனைத்து விளக்கங்களுமே, "அத்தைக்கு மீசை முளைத்தால்" என்ற ரீதியில் தான் உள்ளன. அத்தைக்கு ஒரு போதும் மீசை முளைக்காது; திமுக அரசு ஒருபோதும் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்பது தான் உண்மை. அதேபோல், திமுகவால் இனி மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது என்பது தான் மறுக்க முடியாத எதார்த்தம் ஆகும்.

    நான் வெளியிட்ட ஆவணத்தில் நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகளையும், அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகளையும் பட்டியலிட்டிருக்கிறேன். திமுக அரசு உண்மையாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அவற்றின் வரிசை எண் வாரியாக எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? அதனால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற விவரங்களை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், வாக்குறுதிகளை நிறைவேற்றும் விஷயத்தில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம்; தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டோம் என்று ஒப்புக்கொண்டு ஒட்டுமொத்த அரசும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

    • சிறப்பான நிதி மேலாண்மையால் நிதி பற்றாக்குறையும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
    • முதல்வரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 20.59 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

    சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி செழியன், சிவசங்கர் ஆகியோர் தொலைநோக்கு திட்டங்கள் செயலாக்கம் குறித்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

    * இயற்கை பேரிடர்களை சிறப்பான முறையில் எதிர்கொண்டு 5 ஆண்டு காலங்களில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    * மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லாத சூழலிலும் பல்வேறு திட்டங்கள் நல்ல முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    * இயற்கை சீற்றங்களின் போதெல்லாம் மத்திய அரசின் நிதி இல்லாமலேயே தி.மு.க. அரசு தமிழகத்தை மீட்டுள்ளது.

    * கொரோனா கால நெருக்கடிகள், நிதி நெருக்கடிகளை கடந்து மக்கள் திட்டங்கள் செயலாக்கம் பெறுகின்றன.

    * உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது.

    * 3.49% ஆக இருந்த வருவாய் பற்றாக்குறை 1.17%, 4.91% ஆக இருந்த நிதி பற்றாக்குறை 3% ஆக குறைந்துள்ளது.

    * சிறப்பான நிதி மேலாண்மையால் நிதி பற்றாக்குறையும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

    * தமிழகத்தில் 0.07% ஆக இருந்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 11.19% ஆக உயர்த்தி உள்ளோம்.

    * உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டி உள்ளோம். இது 10 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்சமாகும்.

    * தமிழகத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,614 ஆக உயர்ந்துள்ளது.

    * 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 10.2 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

    * முதல்வரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 20.59 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

    * நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக 3.28 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    * தமிழ்நாட்டில் புதிதாக 30 சிப்காட்கள், 14 நியூ டைடல் பார்க்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    * தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,514 ஆக உயர்ந்துள்ளது.

    * மின்னணு பொருள் ஏற்றுமதியில் முதலிடம், ஏற்றுமதி தயார் நிலை குறியீடு, தோல் ஜவுளி பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்.

    * மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூய்மைப் பணியாளர்கள் சுயத்தொழில் தொடங்கினால் 35 சதவீதம் மானியமாக அதாவது, ரூ.3½ லட்சம் வரை வழங்கப்படும்.
    • அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும், அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பொருந்தும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021-ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதன் மூலம் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்து உள்ளார். இதன் மூலம் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியதில் 30 லட்சம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.

    இதைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ் நாட்டுக்கான புதிய தொழில் முதலீடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    அமைச்சரவை கூட்டம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நடந்தது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நம்முடைய முதலமைச்சர் இன்றைக்கு தூய்மைப் பணியாளர்களுக்காக 6 சிறப்புத் திட்டங்களை அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்கு தந்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நல வாரியத்தின் திட்டங்கள், நன்மைகள் அது வழங்கக் கூடிய நலன்கள் தூய்மைப் பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் தருவதற்கு இந்த அரசு முனைப்புடன் உள்ளது.

    நமது முதலமைச்சர் கலைஞர் காலத்தில் இருந்து தூய்மைப் பணியாளர்களுக்கு செய்து வரும் திட்டங்களை தொடர்ந்து கடைபிடித்து வருவதுடன் தூய்மைப் பணியாளர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள் நலனிலும் முதலமைச்சரின் அரசு பெரும் கருணைக் கொண்டதாக இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து இன்று அமைச்சரவை கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்காக 6 சிறப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம் செயல்படுத்தப்படும்.

    தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் நல வாரியம் மூலம் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவியுடன் கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதன் மூலம் ரூ.10 லட்சம் அவர்களது குடும்பத்திற்கு கிடைக்கும்.

    தூய்மைப் பணியாளர்கள் சுயத்தொழில் தொடங்கினால் 35 சதவீதம் மானியமாக அதாவது, ரூ.3½ லட்சம் வரை வழங்கப்படும்.

    6 சதவீத வட்டி மானியத்துடன் வழங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வியில் சேரும் போதும் உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    அவர்கள் எந்தப் பள்ளியில் பயின்றாலும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்ட ணம் உள்ளிட்ட அனைத்தும் வழங்கும் வகையில் புதிய கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.

    தூய்மைப் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளில் வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படும். தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கப்படும்.

    தூய்மை பணியாளர்கள் அதிகாலையிலேயே வேலைக்கு வர வேண்டி இருப்பதால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காலை உணவு இலவசமாக வழங்கப்படும். இது சென்னை மாநகராட்சி பகுதியில் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும். எனவே தூய்மை பணியாளர்களின் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளதால் போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும்.

    அவர்களின் பணி நிரந்தரம் தொடர்பான வழக்குகள் முடிவடைந்த பிறகு பரிசீலிக்கப்படும். அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும், அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பொருந்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூய்மைப்பணியாளர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்வு.
    • தூய்மை பணியாளர்களுக்கு அந்தந்த ஊராட்சிகள் மூலமாக காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.

    இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும்.

    * தூய்மை பணியாளர்களுக்கான திட்டங்கள் சென்னையில் தொடங்கி படிப்படியாக மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

    * பணியின்போது இறக்கும் தூய்மை பணியாளர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர நடவடிக்கை.

    * தூய்மைப்பணியாளர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்வு.

    * தூய்மைப் பணியாளர்கள் துறைசார் நோய்களை கண்டறியவும் சிகிச்சை அளிக்க தனி திட்டம்.

    * தூய்மை பணியாளர்கள் குழந்தைகள் எந்த பள்ளியில் பயின்றாலும் புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம்.

    * தூய்மை பணியாளர்கள் குழந்தைகளுக்கு உயர்கல்வி, விடுதி மற்றும் புத்தக கட்டணத்தை அரசே ஏற்கும்.

    * தூய்மை தொழிலாளர்கள் கடனுதவிக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் முதல்முறையாக சென்னை மாநகராட்சியில் தொடங்கப்படும்.

    * தூய்மை பணியாளர்களுக்கு அந்தந்த ஊராட்சிகள் மூலமாக காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.

    * சென்னையை தொடர்ந்து மற்ற நகர்ப்புறங்களிலும் காலை உணவு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * நகர்ப்புற தூய்மை பணியாளர்களுக்காக காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.

    * நகர்ப்புற தூய்மை பணியாளர்களுக்கு 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டி தரப்படும்.

    * கிராமப்புற தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் வீடு திட்டத்தில் முன்னுரிமை

    * தூய்மை பணியாளர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 6% வட்டி மானியமும் வழங்கப்படும்.

    * நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.

    * தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துடன் இணைந்து தூய்மை பணியாளர்கள் வசிக்கும் இடங்களிலேயே புதிய வீடு கட்டித்தரப்படும்.

    தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகளின் முடிவில் பணி நிரந்தரம் தொடர்பாக முடிவெடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.19% ஆகும்.
    • தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டி இருக்கிறது.

    முன்பு 9.69% என்று மதிப்பிடப்பட்ட 2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மாநில பொருளாதார வளர்ச்சி விகிதத்தை இன்று 11.19% என்று திருத்தி மத்திய அரசின் புள்ளிவிவரத்துறை மதிப்பிட்டுள்ளது.

    இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெற்றிராத அபரிமிதமான பெரும் வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரண்டு இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு – சீரான கொள்கைநெறி வழியில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளில் ஒன்று, மணிமகுடத்தில் மற்றொரு பொறித்த வைரக்கல்லாகத் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டி இருக்கிறது.

    ஏற்கனவே நாம் சொல்லிருக்கக்கூடிய 9.69% என்கிற அந்த GSDP உடைய இலக்கையும் தாண்டி, இன்றைக்கு 11.8% பொருளாதார குறியீடுகள் உயர்ந்து இருக்கின்றன. ஏறத்தாழ 12% நெருங்கி வரக்கூடிய வாய்ப்பை பெற்று இருக்கிறோம்.

    நம்முடைய சாதனையை நாம்தான் முறியடிக்க முடியும் என்கிற வகையில் 9.69% என்ற ஒற்றை இலக்கத்தில் இருந்த பொருளாதார வளர்ச்சி சதவீதத்தை இன்றைக்கு இரட்டை இலக்கத்திற்கு கொண்டு வந்திருக்கிற மகத்தான சாதனையை மாண்புமிகு முதலமைச்சருடைய ஆட்சி உருவாக்கியிருக்கிறது.

    இந்த இரட்டை இலக்கத்திலே பொருளாதார ஆட்சியை உருவாக்குவது, Real terms-ல் வளர்ச்சி பெறுவது என்பது கலைஞர் அவர்கள் ஆட்சி பொறுப்பிலே இருந்தபோது 13% வளர்ச்சியை நாம் பெற்று இருந்தோம். அதன்பின் 14 வருடத்திற்கு பிறகு இன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சரின் ஆட்சியில்தான் இரட்டை இலக்க வளர்ச்சியைத் தமிழ்நாடு பெற்று இருக்கிறது.

    இந்திய அளவில் பல மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடுதான் இந்த இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்று இருக்கிறது என்பது குறிப்பிட்டத்தக்கது. எனவே இந்த வளர்ச்சி என்பது 2030ஆம் ஆண்டு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம் என்பதற்கு திடமான வழியை வகுத்து தந்துள்ளது.

    முதலமைச்சரின் சீரிய முயற்சிகளிலான தொழில் முதலீடுகள், தொழில் முதலீடுகள் மூலம் கிடைத்த வேலை வாய்ப்புகள் என அனைத்தின் காரணமாக இந்தப் பொருளாதார வளர்ச்சி அமைந்திருகிறது. பொருளாதார வளர்ச்சிக்கான முழு சூழ்நிலைகளையும் நாம் உருவாக்கி இருக்கிறோம். நாம் முதலீடுகளுக்கான முதல் முகவரி தமிழ்நாடு என்கிற அளவில் மாண்புமிகு முதலமைச்சர் முயற்சியின் காரணமாக ஈர்க்கப்பட்டு இருக்கக்கூடிய ஏராளமான முதலீடுகளே இந்தப் பெருமையைத் தந்து இருக்கிறது.

    நிதி நிலைமையை நாம் சரியாகக் கையாண்டு இருக்கிறோம்; நாட்டின் பொருளாதாரத்தை நாம் உயர்த்தி இருக்கிறோம். கடன் வாங்குகிறார்கள் என குற்றச்சாட்டு வைக்கிறார்கள். ஆனால் வரைமுறைகளுக்கு உட்பட்டு முதலீடுகளுக்காக நாம் வாங்குகின்ற கடன்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது என்பதைக் காட்டுகின்றது. ஒன்றிய அரசு நமக்கு உரிய நிதிகளை விடுவிக்காத போதிலும், நமது முதலமைச்சரின் கூரிய நோக்கிலான வழிகாட்டுதல் மூலம் இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது
    • தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1,96,309 ஆக உள்ளது.

    பாராளுமன்ற மக்களவையில் பீகார் எம்.பி.க்கள் 2 பேர் நாட்டின் தனிநபர் வருமான விவரங்களை கேள்விகளாக கேட்டு இருந்தனர். இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    அந்த பதிலில் நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது. அங்கு 2024-2025-ம் ஆண்டு தனிநபர் வருமானம் ரூ.2,04,605 ஆக இருந்தது. 2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1,96,309 ஆக உள்ளது.

    இந்நிலையில், தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு 2ம் இடம் பிடித்தது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், தொழில்துறை, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சமூக நலனில் மாபெரும் சாதனைகளைப் படைத்து நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது, தமிழ்நாடு. அந்தச் சாதனை பட்டியலில் மற்றுமொன்றாக, தமிழ்நாடு ரூ.1,96,309 என்ற தனிநபர் வருமான குறியீட்டின் மூலம் மாநிலங்களுக்கிடையே இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தச் சாதனையானது, திராவிட மாடலின் தொலைநோக்கு திட்டங்கள், தொழில் வளர்ச்சி, முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது. "எல்லார்க்கும் எல்லாம்" என்ற உன்னத கொள்கையோடு செயல்பட்டு வரும் நமது திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அடுத்த மணிமகுடம் தான் இது.

    கடந்த ஆட்சியின் இறுதியாண்டான 2020-21-ல் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 1.43 இலட்சம் ரூபாய் மட்டுமே. நம் கழக ஆட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளில் சராசரியாக 8.15 சதவீதம் வளர்ச்சியோடு 2024-25 ஆம் ஆண்டில் தனி நபர் வருமானம் 1.96 இலட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆட்சிக் காலத்தில், 2016-17 ஆம் ஆண்டு முதல் 2020-21 ஆம் ஆண்டு வரை 4.42 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. இத்தகைய உயரிய சராசரி வளர்ச்சியானது, வெற்றிகரமான திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு சான்றாகும்.

    தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில் 2024-25 ஆம் ஆண்டில் தேசிய சராசரி தனிநபர் வருமானம் 1.14 இலட்சம் மட்டுமே. 2014-15 முதல் 2024-25 வரையிலான கடந்த பத்தாண்டு தேசிய சராசரி வளர்ச்சி விகிதம் 57 சதவீதம் மட்டுமே. ஆனால், அனைவரையும் வியக்க வைக்கும் வகையில், தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி விகிதமோ 83.3 சதவீதம் ஆகும். மக்கள் நலனை மையப்படுத்தி, பொருளாதார முன்னேற்றத்தில் மட்டும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசு கவனம் செலுத்தியதால் இவை சாத்தியமானது. இதே உற்சாகத்தோடு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி அண்ணன் தளபதி அவர்களின் தலைமையில் இன்னும் வேகமாகப் பயணிப்போம்!" என்று தெரிவித்துள்ளார். 

    • இங்கிலாந்தில் உள்ள ஆய்வகத்தில் 3D முறையில் 2 முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன
    • 80% அறிவியல், 20% கலையை பயன்படுத்தி இந்த முகங்கள் வடிவமைக்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழடியில் நகர நாகரிகம் நிலவியது தொல்லியல் சான்றுகள் மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    கி.மு. 6 ஆம் நூற்றாண்டளவில் படிப்பறிவும், எழுத்தறிவுப் பெற்ற மேம்பட்ட சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கியதை கரிமப் பகுப்பாய்வு காலக்கணக்கீடு மூலம் முதன்முதலாக தொல்லியல் துறை உறுதிபடுத்தியுள்ளது. இதனை நூலாக வெளியிட்டும் உலகறியச் செய்தது.

    இதனிடையே அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த கீழடி அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் கோரியிருந்தது. கீழடி தொடர்பாக 982 பக்க அகழாய்வு அறிக்கையினை அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்பித்த நிலையில், அதனை வெளியிட மத்திய அரசு மறுத்து வருகிறது.

    இந்நிலையில், கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்தில் உள்ள ஆய்வகத்தில் 3D முறையில் 2 முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 80% அறிவியல், 20% கலையை பயன்படுத்தி இவை வடிவமைக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    கொந்தகையில் 800மீ அகழாய்வில் இந்த மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது. கொந்தகை பகுதியில் வாழ்ந்த ஆண்கள் 5.7 அடியும், பெண்கள் 5.2 அடி உயரத்திலும் இருந்திருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பெரும்பாலான எலும்புக்கூடுகள் 50 வயது மனிதர்களுடையவை. DNA பகுப்பாய்வு நடத்தி இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றி அறிய திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கீழடியில் வாழ்ந்த தமிழர் முகங்கள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்.

    கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

    இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி!

    • அறிவியல் ஆதாரங்களுடன் நம் மரபை மொழியின் பெருமையை உலகறியச் செய்து வருகிறோம்.
    • ஆனால், சில மனங்கள் இன்னும் உண்மையை ஏற்க மறுக்கின்றன.

    அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழினத்தின் பெருமைக்கும், தொன்மைக்கும் பங்கம் விளைவிக்கும் எத்தனையோ தடைகளைக் கடந்து, அறிவியல் ஆதாரங்களுடன் நம் மரபை மொழியின் பெருமையை உலகறியச் செய்து வருகிறோம். ஆனால், சில மனங்கள் இன்னும் உண்மையை ஏற்க மறுக்கின்றன. இத்தகைய மறுப்புகளை எதிர்கொள்ள, அறிக்கைகள் மட்டும் போதாது; மாறாக, சில மனங்களை மாற்ற வேண்டிய கடமை நம்முன் உள்ளது.

    நாளை மதுரை விரகனூரில் நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டின் உணர்வை உலகறியச் செய்ய பெருந்திரளாகக் கூடிட வேண்டும். ஒன்றிய அரசின் மறுப்புகளுக்கு எதிராக, நம் இனத்தின் உரிமைகளை உறுதியாக வெளிப்படுத்த முதலமைச்சர் ஆணையின் படி அழைக்கிறது மாணவர் அணி, வாழ்க தமிழ்!! வெல்க தமிழ்! என கூறினார்.

    ×