என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thangam Thennarasu"

    • அவிநாசி பாலத்திற்கு ஜி.டி. நாயுடு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    • நாயுடு என்பதை ஜாதி பெயர்தானே என விமர்சனம் செய்யப்பட்டது.

    ஊர், தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயரில் ஜாதி பெயர் இடம் பெற்றிருந்தால் அதை நீக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டியிருந்தது. அரசாணை வெளியிட்ட அடுத்த நாள், கோவை அவினாசியில் 10 கி.மீ. நீள மேம்பாலம் திறக்கப்பட்டது. அந்த சாலைக்கு ஜி.டி. நாயுடு எனப் பெயர் வைக்கப்பட்டது.

    நேற்று அரசாணை வெளியிட்டு இன்று சாதி பெயருடன் கூடிய மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார் என விமர்சிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பாக விளக்கம் அளித்து கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 10 கி.மீட்டருக்கு அதிகமான நீளம் கொண்ட கோவை அவினாசி மேம்பாலத்திற்கு புகழ்பெற்ற ஜி.டி. நாயுடு பெயரை வைத்திருப்பதை குறையாக சொல்கிறார்கள். ஜி.டி. நாயுடு யார்? அவர் மிகப்பெரிய விஞ்ஞானி. அநத் பகுதிலேயே குடியிருந்தவர்.

    கோவை மட்டுமல்ல எல்லாப் பகுதி மக்களாலும் போற்றப்பட்டவர் என்பதால் அவரது பெயரை வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் முதலமைச்சர் ஜி.டி. நாயுடு பெயரை சூட்டியுள்ளார். பலதரப்பட்ட மக்கள் வரவேற்றுள்ளனர்.

    ஜி.டி. நாயுடு பெயரில் ஜாதி பெயர் என்றால் ஜி.டி. பாலம் என்றா வைக்க முடியும்?. ஜி.டி. நாயுடு என்று வைக்கப்படுவதனால்தான் இன்னார் என்று அறியப்படுகிறார்.

    இந்த விவகாரத்தில் அரசியல் லாபம் பார்க்க முயல்வது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    • செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு, ஓடி ஒளியும் அதிமுக அரசைப் போல திமுக அல்ல
    • பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மதித்து நடந்துகொள்வது எதிர்க்கட்சிகளின் கடமை

    கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    கரூர் தவெக தேர்தல் பரப்புரையில் என்ன நடந்தது என்பது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதனை விமர்சித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "எதிர்க்கட்சி தலைவர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை அவரது பதட்டத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டியிருக்கின்றது. எவ்வகையிலாவது இத்துயர்மிகு சம்பவத்திலிருந்து அரசியல் லாபம் பெற முடியுமா என்று துடியாய்த் துடிப்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிகின்றது.

    செய்தியாளர் சந்திப்பில் உண்மைகள் உணர்த்தப்படும் போது, அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்து வழக்கம் போலவே ஓர் உளறல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். கரூரில் நடந்த கொடுந்துயரத்திற்குக் காரணம் என்னவென்பதை அரசு அமைத்திருக்கும் ஆணையமும் காவல் துறை விசாரணையும் முறையாக வெளிக்கொணரும் எனச் செய்தியாளர்களிடம் அரசு அதிகாரிகள் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். நடைபெற்ற ஒரு பெரும் துயரச் சம்பவம் குறித்தான உண்மை நிலவரங்களை அரசின் உயர் அலுவலர்கள் நாட்டு மக்களுக்கு விளக்கிச் சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது? அரசின் முக்கிய அங்கமாக விளங்கும் அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் அத்தகு விளக்கங்களைச் செய்தியாளர்கள் வாயிலாக வெகுமக்களுக்கும் சென்றடையச் செய்வது இத்தகுச் சூழலில் அவர்களின் கடமை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தன் வசதிக்காக மறந்துவிட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்.

    நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு, மக்களிடம் விளக்கமளிக்காமல் ஓடி ஒளியும் அதிமுக அரசைப் போல இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் அரசு இது என்பதைத் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் ஆதாயம் தேடுவதைத் தவிர்த்து, பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மதித்து நடந்துகொள்வது எதிர்க்கட்சிகளின் கடமையும் கூட என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டோம் என்று ஒப்புக்கொண்டு ஒட்டுமொத்த அரசும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
    • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு எந்த அளவுக்கு மோசடி செய்கிறது என்பதற்கு இதைவிட மோசமான உதாரணம் இருக்க முடியாது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசாணை வெளியிட்டால் வாக்குறுதிகள் நிறைவேறி விடுமா? 'சீனி சக்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா' கதை தானா?

    2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றில் பல செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 40 வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் ஆக மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு எந்த அளவுக்கு மோசடி செய்கிறது என்பதற்கு இதைவிட மோசமான உதாரணம் இருக்க முடியாது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அமைச்சர்களும் தொடர்ந்து பொய்யுரைத்து வந்த நிலையில் உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்தும் வகையில், விடியல் எங்கே? என்ற ஆவணத்தை தயாரித்து கடந்த ஆகஸ்ட் 26-ஆம் நாள் வெளியிட்டேன்.

    அந்த ஆவணத்தில் திமுக சார்பில் அளிக்கப்பட்டு இன்று வரை நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகளை பட்டியலிட்டிருந்தேன். வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13% வாக்குறுதிகளை மட்டுமே திமுக அரசு நிறைவேற்றியிருப்பதாகக் கூறியிருந்த நான், அவற்றையும் அந்த நூலில் பட்டியலிட்டிருந்தேன். அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகளையும் பட்டியலிட்டது மட்டுமின்றி, அவற்றில் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது; எந்த அளவுக்கு செயல்படுத்தப் படவில்லை என்பதையும் விரிவாக விளக்கியிருந்தேன். அதை திமுக அரசால் மறுக்க முடியவில்லை.

    இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சக அமைச்சர்கள் இருவருடன் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், "திமுகவின் 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றில் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 40 வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. ஆக மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன.

    மத்திய அரசின் அனுமதிக்காக 37 வாக்குறுதிகள் காத்திருக்கின்றன. மீதமுள்ள 64 வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை" என்று கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய்; அதைத் தவிர வேறொன்றுமில்லை. வாக்குறுதிகளின் எண்ணிக்கையை மட்டுமே அமைச்சர் தெரிவித்தாரே தவிர, அவற்றின் பட்டியலை வெளியிட வில்லை. இதிலிருந்தே பா.ம.க.வின் குற்றச்சாட்டுக்கு திமுகவிடம் பதில் இல்லை என்பதை அறியலாம்.

    அரசாணை வெளியிடப்பட்ட வாக்குறுதிகளையும், பரிசீலனையில் உள்ள வாக்குறுதிகளையும் எவ்வாறு நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளாக கருத முடியும்? என்று தெரியவில்லை. அமைச்சர் கூறுவதைப் போல 364 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டதாகக் கூட தெரியவில்லை. ஒருவேளை அவ்வாறு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அவற்றை அரசு வெளியிட்டு இருந்திருக்கலாம். செய்யாத சாதனைகளையே செய்ததாகக் கூறி பெருமைப்பட்டுக் கொள்ளும் திமுக அரசு, யாருக்கும் பயனற்ற அரசாணை பிறப்பித்திருந்தால் கூட அதைக் கொண்டாடியிருக்கும். ஆனால், அதை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் செய்யவில்லை.

    ஒருவேளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் எல்லாம் வைகை ஆற்றில் வீசப்பட்டதைப் போல, பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை எல்லாம் கூவம் ஆற்றிலும், அடையாறு ஆற்றிலும் திராவிட மாடல் அரசு வீசி விட்டதோ, என்னவோ தெரியவில்லை.

    ஒருவேளை அரசாணைகளே பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் இருந்தாலும் அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக கிடைத்தால் மட்டும் தான் அது நிறைவேற்றப்பட்டதாக பொருள் ஆகும். அரசாணைகள் எனப்படுபவை ஏட்டுச் சுரைக்காய்கள் தான்.

    அவற்றைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கூறுவதைப் போல அரசாணை வெளியிடப்பட்ட வாக்குறுதிகளையும், பரிசீலனையில் உள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்றபட்டவையாக கருத வேண்டும் என்றால், அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி கூறுவதைப் போல, "சீனி சக்கரை சித்தப்பா.... ஏட்டில் எழுதி நக்கப்பா" என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தான் இருக்குமே தவிர மக்களுக்கு பயன்படாது.

    திமுக அரசின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன? என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூறுகிறேன். 2021-ஆம் ஆண்டுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், 221 வாக்குறுதியாக, 'மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை கணக்கிடும் முறை கொண்டுவரப்படும். இதனால், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை மிச்சமாகும்" என்று கூறப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதி இப்போது வரை நிறைவேற்றப்படவில்லை.

    அந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்று இன்றைய செய்தியாளர் சந்திப்பில் மின்துறை அமைச்சரிடம் கேட்ட போது, அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதந்திர மின் கட்டண வசூல் நடைமுறைக்கு வரும் என்று பதிலளிக்கிறார். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு தான் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்படவில்லை. ஏன் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று கேட்டால் ஸ்மார்ட் மீட்டரை காரணம் காட்டுவார்கள்.

    திமுக ஆட்சி இன்னும் 6 மாதங்கள் மட்டுமே தொடரும் என்ற நிலையில், எப்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்பது தெரியவில்லை. இப்படியாக திமுக அரசின் அனைத்து விளக்கங்களுமே, "அத்தைக்கு மீசை முளைத்தால்" என்ற ரீதியில் தான் உள்ளன. அத்தைக்கு ஒரு போதும் மீசை முளைக்காது; திமுக அரசு ஒருபோதும் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்பது தான் உண்மை. அதேபோல், திமுகவால் இனி மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது என்பது தான் மறுக்க முடியாத எதார்த்தம் ஆகும்.

    நான் வெளியிட்ட ஆவணத்தில் நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகளையும், அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகளையும் பட்டியலிட்டிருக்கிறேன். திமுக அரசு உண்மையாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அவற்றின் வரிசை எண் வாரியாக எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? அதனால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற விவரங்களை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், வாக்குறுதிகளை நிறைவேற்றும் விஷயத்தில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம்; தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டோம் என்று ஒப்புக்கொண்டு ஒட்டுமொத்த அரசும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

    • தூய்மைப் பணியாளர்கள் சுயத்தொழில் தொடங்கினால் 35 சதவீதம் மானியமாக அதாவது, ரூ.3½ லட்சம் வரை வழங்கப்படும்.
    • அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும், அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பொருந்தும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021-ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதன் மூலம் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்து உள்ளார். இதன் மூலம் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியதில் 30 லட்சம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.

    இதைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ் நாட்டுக்கான புதிய தொழில் முதலீடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    அமைச்சரவை கூட்டம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நடந்தது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நம்முடைய முதலமைச்சர் இன்றைக்கு தூய்மைப் பணியாளர்களுக்காக 6 சிறப்புத் திட்டங்களை அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்கு தந்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நல வாரியத்தின் திட்டங்கள், நன்மைகள் அது வழங்கக் கூடிய நலன்கள் தூய்மைப் பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் தருவதற்கு இந்த அரசு முனைப்புடன் உள்ளது.

    நமது முதலமைச்சர் கலைஞர் காலத்தில் இருந்து தூய்மைப் பணியாளர்களுக்கு செய்து வரும் திட்டங்களை தொடர்ந்து கடைபிடித்து வருவதுடன் தூய்மைப் பணியாளர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள் நலனிலும் முதலமைச்சரின் அரசு பெரும் கருணைக் கொண்டதாக இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து இன்று அமைச்சரவை கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்காக 6 சிறப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம் செயல்படுத்தப்படும்.

    தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் நல வாரியம் மூலம் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவியுடன் கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதன் மூலம் ரூ.10 லட்சம் அவர்களது குடும்பத்திற்கு கிடைக்கும்.

    தூய்மைப் பணியாளர்கள் சுயத்தொழில் தொடங்கினால் 35 சதவீதம் மானியமாக அதாவது, ரூ.3½ லட்சம் வரை வழங்கப்படும்.

    6 சதவீத வட்டி மானியத்துடன் வழங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வியில் சேரும் போதும் உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    அவர்கள் எந்தப் பள்ளியில் பயின்றாலும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்ட ணம் உள்ளிட்ட அனைத்தும் வழங்கும் வகையில் புதிய கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.

    தூய்மைப் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளில் வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படும். தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கப்படும்.

    தூய்மை பணியாளர்கள் அதிகாலையிலேயே வேலைக்கு வர வேண்டி இருப்பதால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காலை உணவு இலவசமாக வழங்கப்படும். இது சென்னை மாநகராட்சி பகுதியில் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும். எனவே தூய்மை பணியாளர்களின் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளதால் போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும்.

    அவர்களின் பணி நிரந்தரம் தொடர்பான வழக்குகள் முடிவடைந்த பிறகு பரிசீலிக்கப்படும். அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும், அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பொருந்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது.
    • கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது என தெரிவித்தார்.

    சென்னை:

    கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ முடிவுகள் தெரியவேண்டி இருக்கின்றன. அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்தபிறகே அங்கீகரிக்க முடியும் என மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மத்திய மந்திரியின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்.

    அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.

    5,350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?

    மறந்துவிடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்!

    பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? என தெரிவித்துள்ளார்.

    • தமிழகம் வரும் பிரதமர் மோடியை தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டு இருந்தார்.
    • மத்திய அரசு விடுவிக்காத நிதியை உடனடியாக விடுவிக்க நிதி அமைச்சர் வலியுறுத்துவார்.

    சென்னை:

    நம்ம ஊரு பள்ளி திட்டம் மூலம் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் திருவல்லிக்கேணி லேடி விலிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம், நவீன சமையற் கூடம் மற்றும் உணவு அருந்தும் அறை ஆகியவற்றை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு தட்டச்சர் பதவிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    பின்னர் நிருபர்களிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    மதுரை வரும் பிரதமரிடம் தமிழகத்திற்கு நிதி பெறுவது தொடர்பாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து வலியுறுத்துவார்.

    வக்பு திருத்தச் சட்டம் தொடர்பாக தொடர்ந்து எங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்போம், சட்டசபையில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். அதற்கு நியாயம் கேட்டு சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்பது குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நிதியுதவி பெற நிறைய பேர் மனு அளித்துள்ளனர்
    • இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகரில் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற நிறைய பேர் மனு அளித்துள்ளனர். இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 மாதத்தில் நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்" என்றார்.

    கடந்த 29ஆம் தேதி சட்டசபையில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.21 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது" என்றார் எனத் தெரிவித்திருந்தார்.

    • மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று கழகத் தலைவர் உறுதியளித்திருந்தார்.
    • பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்றுகூடச் சொல்லியிருக்கிறார்.

    தமிழ்நாட்டின் நலன்களே முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாரா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து தங்கம் தென்னரசு மேலும் கூறியிருப்பதாவது:-

    மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று கழகத் தலைவர் உறுதியளித்திருந்தார். அதே உறுதிமொழியை ராகுல் காந்தி அவர்களையும் அளிக்கச் செய்திருந்தார்.

    டெல்லியில் மூன்று கார்களை மாற்றி மாற்றிச் சென்று 'பிரத்தியேகமாக யாரையும் சந்திக்க வரவில்லை' என்று சொல்லிவிட்டு இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களே!

    பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்றுகூடச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களே உங்களுக்கு முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க நீங்கள் தயாரா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரூ.2000 கோடியில் தரமான லேப்டாபை வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்கு தக்க விளக்கம்.
    • கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் திமுக அரசின் தரம் பற்றி.

    யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்த துறையையும் விட்டுவிடாத all-round TNBudget2025 என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2000 கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான Laptop வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறார் அமைச்சர் தென்னரசு அவர்கள்.

    கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் கழக அரசின் தரம் பற்றி!

    யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்தத் துறையையும் விட்டுவிடாத all-round #TNBudget2025 அளித்து, பதிலுரையிலும் centum வாங்கியிருக்கும் நிதியமைச்சருக்குப் பாராட்டுகள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புனைந்துரைகள் நிரம்பிய புழுகுமூட்டைகளை ஆளுநரிடம் கோரிக்கை மனுவாக அளித்ததாக அமைச்சர் விமர்சனம்
    • பாஜக தினமும் ஒரு அறிக்கையை வெளியிட்டு ஊடக வெளிச்சத்தை உருவாக்குகிறது

    சென்னை:

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது, திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 10 பக்க மனுவை கவர்னரிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக தெரிவித்தார். கமிஷன், கலெக்சன், கரெப்சன் தான் திராவிட மாடலாக உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.

    இந்நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரை சந்தித்து, பொய்களின் ஒட்டுமொத்த வடிவமாக புனைந்துரைகள் நிரம்பிய புழுகுமூட்டைகளை கோரிக்கை மனுவாக அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார்.

    அதிமுகவை யார் கைப்பற்றுவது என்று அவர்களுக்கிடையே ஒரு பெரிய யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. அதில் தான் வெற்றி பெற வேண்டி தன் எஜமானர்களை சந்தித்துவிட்டு அதே கையோடு இப்போது தான் எதிர்க்கட்சி தலைவர் என்ற நினைப்பு திடீரென வந்தவுடன் ஆளுநரை சந்தித்திருக்கிறார்.

    அந்த அறிக்கையில் அவர் சொன்னதாக பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கிறார். கோவை கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் அக்டோபர் 23ம் தேதி நடந்தது. கனியாமுர் பள்ளி சம்பவம் ஜூலை 17ல் நடந்தது. கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் நவம்பர் 15ல் நடந்தது. இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் பல மாத இடைவெளியில் இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில், திடீரென ஞானோதயம் வந்தவராக, இன்று ஆளுநரிடம் கூறியிருப்பதற்கு என்ன உண்மையான காரணம்? என்ன என்று தெரியவில்லை.

    ஒருவேளை ஓ.பன்னீர்செல்வத்தை தன்னுடன் இணைத்து வைத்து அப்போதைய ஆளுநர் சமரச உடன்படிக்கை உருவாக்கியதுபோல், இப்போது இருக்கக்கூடிய உள்கட்சி போட்டா போட்டி காட்டா குஸ்தியில் தனக்கு ஒரு சாதகமான நிலையை உருவாக்குவதற்கு ஆளுநரிடம் போய் முறையிட்டாரா? என்ற சந்தேகம் எனக்கு வலுவாக எழுகிறது.

    இன்னொரு பக்கம், தினமும் ஒரு அறிக்கையை வெளியிட்டு ஊடக வெளிச்சத்தை உருவாக்கி அதன் வாயிலாக நாங்கள்தான் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி என்கிற தோற்றத்தை தொடர்ச்ச்சியாக எழுப்பி அதை நிலைநிறுத்தக்கூடிய முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறபோது, பாஜகவுக்கு பதிலடி கொடுக்க முடியாத எடப்பாடி பழனிசாமி, மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் என்ற நினைப்போடு மட்டும் ஆளுநரை சந்தித்திருப்பது ஏன்? இப்போதாவது இந்த விழிப்பு வந்திருக்கிறதே?

    அவர்கள் யாரை கொழுகொம்பாக நம்பி பற்றியிருக்கிறார்களோ, அவர்களே அவர்களுக்கு சத்ருவாக உள்ளே இருக்கிறார்கள் என்ற ஞானோதயம் இப்போதாவது அவருக்கு வந்திருக்கிறதே என எண்ணுகிறேன்.

    ஒருவேளை, பாஜகவில் இப்போது உள்ள உட்கட்சி பிரச்சனையை திசைதிருப்புவதற்காக எடப்பாடி பழனிசாமி ஒரு கருவியாக மாறி ஆளுநரை சந்தித்து நாடகத்தை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.

    இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

    • பொருளாதாரத்தில் இந்தியாவில் 2-வது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது.
    • தமிழ்நாட்டிற்கு முதுகெலும்பாக இருக்கக்கூடியது விவசாயம்.

    விருதுநகர் :

    விருதுநகர் மாவட்டம மல்லாங்கிணற்றில் கூட்டுறவுத்துறை சார்பில் சுயஉதவி குழுவினருக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதிய கடன்கள் வழங்கும் விழா அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.

    இதில் 179 மகளிர் குழுக்களை சேர்ந்த 1777 பேருக்கான கடன்தொகை ரூ.3 கோடியே 5 ஆயிரம் மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றிதழை சுயஉதவி குழு பெண்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மகளிருக்கான உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், இதே போன்று, இன்னும் 3 அல்லது 4 மாதத்தில் வழங்கக்கூடிய நாள் வரும். இந்த மண்ணில் பெண்ணாக பிறந்ததற்காக உரிமைத்தொகை ரூ.1,000 இன்னும் மூன்றே மாதத்தில் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    பொருளாதாரத்தில் இந்தியாவில் 2-வது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது.

    தமிழ்நாட்டிற்கு முதுகெலும்பாக இருக்கக்கூடியது விவசாயம். எனவே விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அதிகம் ஏற்படுத்தப்பட உள்ளன.

    இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

    • கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர் ராஜ்பவனில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்து கொண்டு வருகிறார்.
    • ஆளுநர் உரைகள் அமைதியை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது என்பது தான் உண்மை.

    ஆளுநர் ஆர்.என். ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் தி.முக. தெரிவித்துள்ள பல்வேறு கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார். பேட்டியில், திராவிட மாடல் என்ற கொள்கை எல்லாம் எப்போதோ காலாவதியாகி விட்டது. அதற்கு மீண்டும் உயிர்கொடுக்க நினைக்கிறார்கள். அது ஒரே பாரதம் ஒரே இந்தியா கொள்கைக்கு பொருந்தாத ஒன்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், திராவிட மாடல் கொள்கை நாட்டின் சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுகிறது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அத்தகைய தியாகிகளின் நினைவு மற்றும் வரலாற்றை அழிக்கும் வகையில் பேசப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

     

    ஆளுநர் ஆர்.என். ரவி பேட்டிக்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

    அதில், "கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர் ராஜ்பவனில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்து கொண்டு வருகிறார். ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியை பார்க்கும் போது அவர் ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை, பாஜக தலைவர் பதவிக்காக வந்திருப்பது போல் தெரிகிறது. ஆளுநர் ரவி ஒப்புக்கொண்டாலும், இல்லாவிட்டாலும், தமிழ்நாடு அமைதி பூங்கா தான். ஆளுநர் உரைகள் அமைதியை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது என்பது தான் உண்மை."

    "ஆளுநர் ஆர்.என். ரவி சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார். ஆளுநர் பணியை தவிர அனைத்து பணிகளையும் அவர் செய்து கொண்டிருக்கிறார் ஆர்.என்.ரவி. மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் இருப்பதை மறந்துவிட்டு ஆளுநர் பேச வேண்டாம். எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்தை மீறி நிர்வாக விவரங்களை பொதுவெளியில் பேசி வருகிறார் ஆளுநர்."

    "மாநில அரசு எழுதி அனுப்பியதை வாசிக்க விருப்பம் இல்லை என்றால், வேறு வேலையை பார்க்க வேண்டுமே தவிர, அவை மாண்பை குறைக்கும் உரிமை எவருக்கும் இல்லை. ஆளுநர் பதவி என்பது மாநில அரசின் பிரதிபலிப்பே தவிர, தனிப்பட்ட அதிகாரம் கொண்ட பதவியல்ல. ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அதற்கான தன்மையுடன் நடக்க வேண்டுமே தவிர, தனி ஆவர்த்தனம் செய்யக்கூடாது." என்று தெரிவித்தார்.

    ×