search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russia"

    • போர் 11-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது
    • இஸ்ரேல் பிரதமருடன் புதின் தொலைபேசியில் விவரமாக பேசியுள்ளார்

    பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி போர் தொடுத்திருக்கும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அவர்கள் மறைவிடங்களில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் 11-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதை முடிவுக்கு கொண்டு வர ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

    இது குறித்து ரஷியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    அரசியல் மற்றும் பேச்சுவார்த்தை மூலமாக இந்த போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர அதிபர் விளாடிமிர் புதின் விரும்புகிறார். இது குறித்து அவர் இஸ்ரேல் அதிபர், அரபு நாடுகளின் தலைவர்கள், ஈரான் நாட்டு அதிபர் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். நேற்று, அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினார். இது மட்டுமின்றி மத்திய தரைகடல் பகுதி தலைவர்களுடனும் அவர் தொடர்பில் உள்ளார். ஈரான், எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் புதின் நடத்திய பேச்சு வார்த்தை விவரங்களை இஸ்ரேல் பிரதமருடன் அவர் பகிர்ந்து கொண்டார். மனிதாபிமான அடிப்படையில் காசாவில் உள்ள மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உதவிகள் தடையின்றி கிடைக்க தற்காலிக போர் நிறுத்தம் தேவை என புதின் கருதுகிறார்.

    இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    இந்த அறிக்கையில் ஐ.நா. கூட்டமைப்பின் பாதுகாப்பு சபை முன் ரஷியா முன்மொழிய கொண்டு வந்த தீர்மானம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    இஸ்ரேல் ஹமாஸ் போர் விரைவில் முடிவுக்கு வருவது நல்லது என்பதால் புதினின் முயற்சியை அரசியல் விமர்சகர்களில் ஒரு சாரார் ஆதரிக்கின்றனர். தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஆக்ரமிப்பு மற்றும் அது தொடர்பாக இரு நாடுகளுக்கும் நடைபெறும் போரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார சீரழிவு குறித்து உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாகவும் மற்றுமொரு சாரார் ரஷியாவின் இந்த முயற்சியை பார்க்கின்றனர்.

    • ரஷியா மேற்கொண்டு வரும் கொடுமைகளால், மக்கள் உயிரிழப்பு.
    • ரஷிய கொடுமைகள் தொடர்பான ஆதாரங்கள் சேகரிக்கப்பு.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், ரஷியா உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனும் தன் பங்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷிய தாக்குதலை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில், உக்ரைனின் சில பகுதிகள் ரஷிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷியா மேற்கொண்டு வரும் கொடுமைகளால், மக்கள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

    போர் நடைபெற்று வரும் உக்ரைனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டு இருக்கும் விசாரணை ஆணையத்திற்கு எரிக் மோஸ் தலைமை வகிக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக ரஷிய ஆயுதப்படை மேற்கொண்டு வரும் கொடுமைகள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

    சில பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொடுமைகளால் உயிர்பலி ஏற்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். எரிக் மோஸ் தலைமையிலான குழு ரஷியா ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தது. இந்த ஆய்வுகளில் ரஷிய அதிகாரிகளால் நடத்தப்படும் காவல் மையங்களில் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    இது பற்றிய குற்றச்சாட்டுகளை ரஷியா முழுமையாக மறுத்து இருக்கிறது. இது தொடர்பாக ஆணையத்தில் பதில் அளிக்க ரஷியாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. எனினும், ரஷியா தரப்பு அதிகாரி யாரும் ஆணையத்தில் ஆஜராகவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • உள்நாட்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரஷியா நடவடிக்கை
    • யூரேசியன் பொருளாதார யூனியன் வர்த்தக அமைப்பில் உள்ள நாட்டிற்கு இந்த தடை இல்லை

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போர் காரணமாக உலகளாவிய அளவில் உணவு தட்டுப்பாடு, பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இதற்கிடையே மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு பொருளாதார அளவில் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷியாவில் பணவீக்கம், விலைவாசி ஏற்றம் அதிகரித்து மக்கள் அவலநிலையை எதிர்கொண்டு வருகிறார்கள்.

    ரஷியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில உள்நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷியா தற்காலிக தடை விதித்துள்ளது.

    ரஷியா ஒரு நாளைக்கு 9 லட்சம் பேரல்கள் என்ற வகையில் டீசலை ஏற்றுமதி செய்கிறது. 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேரல்கள் என்ற வகையில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த உத்தரவு வந்த நிலையில், ரஷியாவில் எரிபொருள் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது. இந்த தற்காலிக தடையால் உலக மார்க்கெட்டில் விலை உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    யூரேசியன் பொருளாதார யூனியன் வர்த்தக அமைப்பில் உள்ள அர்மேனியா, பெலாரஸ், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு இந்த தடை கிடையாது.

    • ரஷியாவுக்கு வடகொரியா முழு ஆதரவு தெரிவிப்பு
    • கடந்த சில நாட்களாக ரஷியாவின் ஆயுதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் கிம் ஜாங் உன்

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அங்கு சென்றுள்ள அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரஷியாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

    அதன்பிறகு ரஷியாவின் ஆயுத தொழிற்சாலைகளுக்கு சென்று, ஆயுதங்களை பார்வையிட்டு வருகிறார். ஏற்கனவே கிம் ஜாங் உன் பயணம் குறித்து தென்கொரியா கவலை தெரிவித்திருந்தது. ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை ரஷியா வழங்கக்கூடும் எனத் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் ரஷியாவின் கிழக்குப்பகுதியில் தொடர்ந்து சுற்றுப் பயணத்தில் இருக்கும் கிம் ஜாங் உன், இன்று விளாடிவோஸ்டோக்கில் அணுஆயுதங்களை சுமந்து செல்லும் விமானங்களை ஆய்வு செய்துள்ளார்.

    உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படும் Tu-160, Tu-95, Tu-22 ஆகிய விமானங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த விமானங்கள் தற்போது உக்ரைன் மீது ஏவுகணைகளை வீச பயன்படுத்தப்படுகிறது.

    புதின்- கிம் ஜாங் உன் கடந்த புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, ரஷியாவிற்கு வடகொரியா ஆயுதங்கள் வழங்குவதற்குப் பதிலாக, ரஷியாவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வடகொரியா ரஷியாவிடம் கேட்பது தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

    அடுத்ததாக ரஷியாவின் கப்பற்படைக்கு சென்று கிம் ஜாங் உன் ஆய்வு செய்ய இருப்பதாக தெரிகிறது. இதில் இருந்து ரஷியாவுக்கு வட கொரியா ஆயுதங்கள் வழங்க இருப்பதும், ரஷியாவின் தொழில்நுட்பத்தை வடகொரிய பயன்படுத்த வாய்ப்புள்ளதும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவி செய்து வரும் நிலையில், உக்ரைன் பொரில் மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை செலவழித்துள்ள ரஷியாவுக்கு தற்போது ஆயுதங்கள் தேவைப்படுகிறது. இதனால் வடகொரியாவின் உதவியை நாடியுள்ளது. வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில், அமெரிக்காவுக்கு இணயைாக ரஷியா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
    • இந்த குழுவில் உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது சட்டவிரோத செயல் ஆகும்.

    ரஷியாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படை, உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்று ரஷிய ராணுவத்துக்கு உதவியது. இதற்கிடையே ரஷிய அரசுக்கு எதிராக வாக்னர் குழு திடீரென்று கிளர்ச்சியில் ஈடுபட முயன்று பின்னர் அதை கைவிட்டது.

    இந்த நிலையில் வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இது போன்ற அறிவிப்பை வெளியிடப் போவதாக பிரிட்டன் அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இது பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

    இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதை தொடர்ந்து வாக்னர் குழுவுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதோடு, இந்த குழுவில் உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது சட்டவிரோத செயல் ஆகும்.

    • காஸ்மோடிரோமில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து கிம் தெரிந்து கொண்டார்
    • அதிபர்கள் சந்திப்பிற்கு பிறகு தூதர்கள் சந்திப்பு நடந்தது

    அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் நடத்திய தனிப்பட்ட சந்திப்பு நிறைவடைந்தது.

    ரஷியாவின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு சென்றுள்ளார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்.

    பரஸ்பர நல்லுறவிற்காக சுமார் 4-லிருந்து 5 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை, நிறைவடைந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, ரஷியாவின் தென் கிழக்கில் உள்ள ரஷியாவின் முக்கிய விண்வெளி மையமான வோஸ்டோச்னி காஸ்மோடிரோம் தளத்தில் வட கொரிய அதிபரை வரவேற்ற புதின், அங்குள்ள பல முக்கிய அம்சங்களை வட கொரிய அதிபருக்கு சுற்றி காண்பித்தார். இதற்கு பிறகு தூதர்கள் அளவிலான சந்திப்புகள் நடைபெற்றது.

    இருவரின் இந்த தனிப்பட்ட சந்திப்பிற்கு முன்னதாக ரஷிய-உக்ரைன் போரை மறைமுகமாக குறிப்பிடும் விதமாக, "ரஷியா தனது பாதுகாப்புக்காக மேற்கொண்டு வரும் புனித போரில், அந்நாட்டிற்கு தேவைப்படும் முழுமையான, நிபந்தனையற்ற ஆதரவை வட கொரியா வழங்கும்" என கிம் ஜாங் உன் அறிவித்தார்.

    • பரஸ்பரம் கொடுக்கவும் பெறவும் இரு நாடுகளிடமும் பல விஷயங்கள் உள்ளன
    • உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட பிம்பத்தை உடைக்க வட கொரியா முயன்று வருகிறது

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபரை வரும் நாட்களில் அங்கு சென்று சந்திக்க போவதாக ரஷியாவின் அதிகாரபூர்வ செய்தி தளமான கிரெம்ளின் இணையதளமும், வட கொரியாவின் அதிகாரபூர்வ கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. தற்போது வரை இச்சந்திப்பு எங்கு நடைபெறும் என்பது உறுதியாகவில்லை.

    ஆனாலும், இரு நாட்டு எல்லைகளுக்கு இடையில் கிம் ஜாங் உன் பயணம் செய்யும் அவரது பிரத்யேக பச்சை நிற ரெயில் காணப்பட்டதாகவும், அவர் ரஷியா நோக்கி பயணிக்கிறார் என்றும் தென் கொரிய மற்றும் ஜப்பான் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

    இத்தகைய ஒரு சந்திப்பு ரஷியாவின் விலாடிவோஸ்டாக் நகரில் நிகழக்கூடும் என கடந்த வாரமே அமெரிக்காவின் உளவுப்பிரிவு, தகவல் ஒன்றை வெளியிட்டது. கடந்த 2019-ல் புதின் முதன்முறையாக இங்குதான் வட கொரிய அதிபரை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    உக்ரைன் உடனான போரில் ரஷியாவின் ராணுவ தளவாட மற்றும் ஆயுத கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. வட கொரியாவிடம் ரஷிய வடிவமைப்பை கொண்டு உருவாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் உள்ளது. எனவே, அந்நாட்டிடம் இருந்து இவற்றை பெற புதின் ஆர்வமாக உள்ளார். இதன் மூலம் போர் ஒரு முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்லும் என்பதால் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்காவிற்கு அழுத்தம் தர முடியும் என அவர் நம்புவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதற்கு பதிலாக எரிசக்தி, உணவு தானியம் மற்றும் அதி நவீன ஆயுத தொழில்நுட்பம் ஆகியவற்றை ரஷியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ள வட கொரிய அதிபர் கோரிக்கை விடுப்பார் என்று தெரிகிறது. ரஷியாவிற்கு உதவி செய்து, உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட தனது பிம்பத்தை மாற்றி, அமெரிக்காவிற்கு எதிரான வலிமையுள்ள ஒரு நாடாக காட்டி கொள்ளவும் வட கொரியா முயன்று வருகிறது.

    இத்தகைய ராணுவ தொழில்நுட்பத்தை பெறுவதால், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை தாக்கும் வல்லமை வட கொரியாவிற்கு அதிகரிக்கும் என்று அந்நாடுகள் அஞ்சுகின்றன.

    கடந்த ஜூலை மாதம், வட கொரியா ஏற்பாடு செய்திருந்த அமெரிக்காவை தாக்கும் சக்தி படைத்த ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் அடங்கிய கண்காட்சி ஒன்றினை காண ரஷிய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு வட கொரியா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடைபெறுகிறது.
    • ஸ்டார்லின்க் நிறுவனம் உக்ரைனுக்கு இணைய சேவையை வழங்க துவங்கியது.

    உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ரஷிய கடற்படை தளத்தை உக்ரைன் தாக்காமல் இருக்க நான் தான் காரணம் என்று தெரிவித்து இருக்கிறார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், கடந்த ஆண்டு மாஸ்கோ அருகில் உள்ள கருங்கடல் பகுதியில் இணைய வசதியை செயல்படுத்துமாறு உக்ரைன் சார்பில் தனக்கு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டதாக எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். எனினும், இதன் விளைவை கருத்தில் கொண்டு இணைய வசதியை செயல்படுத்தவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையே போர் துவங்கிய குறுகிய காலக்கட்டத்திலேயே எலான் மஸ்க்-இன் ஸ்டார்லின்க் எனும் செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவை வழங்கும் நிறுவனம் உக்ரைனுக்கு இணைய சேவையை வழங்க துவங்கியது.

    "செவஸ்டாபோல் வரை ஸ்டார்லின்க் சேவையை செயல்படுத்துமாறு அரசு அதிகாரிகளிடம் இருந்து அவசர கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ரஷியாவின் கடற்படை தளத்தை முழுமையாக மூழ்க செய்வது தான். நான் அவர்களின் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டு இருந்தால், போரில் மிகப் பெரிய தாக்கம் ஏற்பட ஸ்பேஸ்-எக்ஸ் முக்கிய காரணமாக மாறி இருக்கும்," என்று எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.

    • 2023 ஆகஸ்டில் எவ்ஜெனி பிரிகோசின் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார்
    • 2022 பிப்ரவரி மாதமே அமெரிக்கா பயண கட்டுப்பாடுகளை வெளியிட்டு இருந்தது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை சிறப்பு ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷியாவுடன் கடுமையாக போரிட்டு வருகிறது.

    ரஷியாவிற்கு போரில் உதவி வந்த தனியார் ராணுவ அமைப்பும், கூலிப்படையுமான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின், இந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷியாவிற்கு எதிராகவும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் இறங்கினார்.

    சாமர்த்தியமாக இதனை புதின் எதிர்கொண்டு இந்த கிளர்ச்சியை அடக்கினார். இதனையடுத்து பிரிகோசின், தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என அஞ்சி, ரஷியாவின் அண்டை நாடான பெலாரசில் தஞ்சம் புகுந்தார்.

    இந்நிலையில் ஆகஸ்ட் 23-ம் தேதி, வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ஒரு விமான விபத்தில் உயிரிழந்ததாக ரஷியா அறிவித்தது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவியது.

    அமெரிக்க அரசாங்கம், தனது குடிமக்கள் யாரேனும் பெலாரஸ் நாட்டில் இருந்தால் அவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டிருந்ததை குறிப்பிட்டு பேஸ்புக் மற்றும் எக்ஸ் (டுவிட்டர்) வலைதளங்களில், "பெலாரஸ் நாட்டை விட்டு தனது குடிமக்கள் வெளியேற வேண்டுமென அமெரிக்கா முதல்முறையாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அது வந்த இரு நாட்களில் பிரிகோசின் பலியானார். ஒரு வேளை பிரிகோசினிற்கு ஏற்படப்போகும் நிலை குறித்து அமெரிக்கா முன்னரே அறிந்திருக்கலாம்" என குறுஞ்செய்தியுடன் அந்த தகவல் பரவியது.

    எவ்ஜெனி பிரிகோசின் மரணத்தில் ரஷியாவிற்கு பங்கு இருக்கலாம் என பலர் நம்பி வந்த நிலையில், இச்செய்தியின் மூலம், அமெரிக்காவிற்கு பிரிகோசின் மரணம் குறித்து முன்னரே தகவல் தெரிந்திருக்கும் என கருத்துக்களை பறிமாறி கொண்டனர்.

    ஆய்வில் இந்த தகவல்கள் அனைத்தும் தவறு என நிரூபணமாகியுள்ளது.

    2022 பிப்ரவரி மாதமே பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க்கில் உள்ள அமெரிக்க தூதரகம் உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

    அதில், "ரஷியா, பெலாரஸ் நாட்டின் எல்லைகளில் படைகளை குவித்து வருவதாலும், வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறுவது தடுக்கப்படும் ஆபத்து உள்ளதாலும், அமெரிக்கர்கள் பெலாரஸ் நாட்டிற்குள் வர வேண்டாம். பெலாரஸிலுள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்," என்று அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது.

    இந்த பயண கட்டுப்பாடு குறித்த உத்தரவு மீண்டும் இந்த ஆண்டு ஏப்ரல் 12 மற்றும் ஜூலை 26 ஆகிய தேதிகளில் அமெரிக்காவால் புதுப்பிக்கப்பட்டது.

    பிரிகோசின் இறப்பதற்கு 2 தினங்களுக்கு முன், பெலாரஸ்ஸின் அண்டை நாடான லிதுவேனியா, லிதுவேனியா-பெலாரஸ் எல்லைகளில் உள்ள பெலாரஸ் நோக்கி செல்லும் 2 முக்கிய வழிகளை மூடியது. இதனால் அமெரிக்காவின் பயண கட்டுப்பாடு மீண்டும் ஆகஸ்ட் 21 அன்று புதுப்பிக்கப்பட்டது.

    ஆக, எவ்ஜெனி பிரிகோசின் இறப்பை முன்கூட்டியே அறிந்துதான் அமெரிக்கா பயண தடை விதித்தது எனும் செய்திகளில் உண்மை இல்லை.

    • பிரிகோஜின் பயணம் செய்த தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியது.
    • கடந்த மாதம் அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பிரிகோஜின் கிளர்ச்சியில் ஈடுபட்டார்.

    ஷியாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு விசாரணைக் குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

    இது குறித்து ரஷியாவின் விசாரணைக் குழு செய்தித் தொடர்பாளர் வெட்லனா பெட்ரென்கோ அறிக்கை வெளியிட்டார். அதில், கடந்த புதன் கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் மீட்கப்பட்ட பத்து உடல்களும் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை அனைத்தும் விமானத்தில் பயணம் செய்த பத்து பேருடையது தான் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     

    ரஷியாவின் வான் போக்குவரத்து ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட தகவல்களில் பிரிகோஜினின் தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியதாகவும், இந்த தனியார் விமானத்தில் பயணம் செய்தவர்கள் பட்டியலில் பிரிகோஜின் பெயர் இடம்பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    விபத்தில் சித்திய விமானத்தில் பிரிகோஜின் தவிர விமானி மற்றும் ஏழு பயணிகள் பயணம் செய்தனர். அந்த வகையில், விமானம் மாஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி சென்று கொண்டிருந்த போது நடுவழியில் வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.

    • மாஸ்கோவில் நடைபெறும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்
    • ரஷியாவை தொடர்ந்து பெலாரஸ் செல்கிறார்

    சீனாவின் பாதுகாப்புத்துறை மந்திரி லி ஷாங்ஃபு இன்று முதல் ஆகஸ்ட் 19-ந்தேதி வரை ஆறு நாட்கள் ரஷியா மற்றும் பெலாரஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த தகவலை சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வு கியான் தெரிவித்துள்ளார்.

    ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கெய் ஷோய்கு, பெலாரஸ் பாதுகாப்பு மந்திரி விக்டர் கிரெனின் ஆகியோரின் அழைப்பை ஏற்று இந்த பயணம் மேற்கொள்கிறார்.

    முதலில் ரஷியா செல்லும் அவர், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற இருக்கும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து பெலாரஸ் செல்கிறார்.

    உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுக்கு பெலாரஸ் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, உதவி வருகிறது. ஆனால், சீனா மறைமுகமாக ஆதரவு கொடுப்பதுடன், ஆயுதங்கள் வழங்குவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • ரஷிய- உக்ரைன் போர் தற்போது 530 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது
    • இரு நாடுகளும் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன

    ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் தனது ராணுவத்தால் ஆக்ரமித்தது.

    சிறப்பு ராணுவ நடவடிக்கை என பெயரிட்டு ரஷியா மேற்கொண்ட இந்த ஆக்ரமிப்பிற்கு எதிர்வினையாக உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது.

    இந்த ரஷிய-உக்ரைன் போர் தற்போது 530 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பிலும் வீடுகளும், கட்டிடங்களும் சேதமடைந்து பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சில மாதங்களாக தாக்குதல்களில் இரு நாடுகளும் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன.

    இந்நிலையில் உக்ரைன் இரு டிரோன்களை ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி ஏவியது. இவற்றை ரஷியாவின் விமானப்படை தாக்கி அழித்தது. மாஸ்கோவின் தெற்கு புறநகரில் உள்ள டொமோடிடோவோ (Domodedovo) பகுதியின் மீது ஏவப்பட்ட ஒரு டிரோனை ரஷியா இடைமறித்து வீழ்த்தியது.

    தலைநகரின் மேற்கு பகுதியில் உள்ள மின்ஸ்க் நெடுஞ்சாலையின் மேலே இன்னொரு டிரோனை ரஷியா இடைமறித்து வீழ்த்தியது. வீழ்த்தப்பட்ட டிரோன்களின் பாகங்கள் தாக்கப்பட்டு காயமடைந்ததாகவோ அல்லது உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல்கள் இல்லை.

    ரஷியாவின் மாஸ்கோ நகரை குறிவைத்து ஒரே வாரத்தில் 3-வது முறையாக உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×