search icon
என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • மர்ம வாலிபர் கோர்ட்டு வளாகத்தில் தான் கொண்டு வந்த கேனில் இருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
    • போலீசார் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நியூயார்க்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான குற்ற வழக்கு நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்தது. இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    அப்போது ஒரு மர்ம வாலிபர் அங்கு வந்தார். அவர் துண்டு பிரசுரங்கள் வீசினார். திடீரென அவர் கோர்ட்டு வளாகத்தில் தான் கொண்டு வந்த கேனில் இருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் அவர் உடலில் தீப்பற்றி எரிந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து அவரை உடல் கருகிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் ஆஸ்பத்திரியில் அவர் உயிரிழந்தார்.

    விசாரணையில் அவரது பெயர் மேக்ஸ் அஸ்ஸரெஸ்லா (வயது 37) என்பது தெரியவந்தது. புளோரிடாவில் உள்ள செயிண்ட் நகரை சேர்ந்தவர். கடந்த வாரம் தான் அவர் அங்கிருந்து நியூயார்க் வந்தார். எதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை.

    இது தொடர்பாக போலீசார் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேக்ஸ் அஸ்ஸரெஸ்லா தீக்குளித்தபோது உடல் முழுவதும் தீப்பற்றி எரியும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • கடுமையான உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு வகைகள் தான் தனது ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணம் என்றார்.
    • பெரும்பாலான நேரங்களில் எளிய கார்போ ஹைட்ரேட்டுகளை கட்டுப்படுத்துவது மூலம் நான் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டேன் எனவும் குறிப்பிடுகிறார்.

    உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்ற பழக்கங்களை தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் வயதானாலும் சிலருக்கு உடல் தோற்றத்தில் முதிர்ச்சி தெரிவதில்லை. இதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவின் மெக்சிகன் பகுதியை சேர்ந்த 61 வயதான டேவ் பாஸ்கோ என்ற முதியவர் தனக்கு 38 வயது இளைஞருக்கான உடல் அமைப்புடன் இளமையாக தோன்றுவதாக கூறி கவனத்தை ஈர்த்துள்ளார்.

    அவர் கூறுகையில், கடுமையான உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு வகைகள் தான் தனது ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணம் என்றார். மேலும், என்னுடைய நேரம் எனக்கு முக்கியமானது. அதனால் நான் அதை திட்டமிடுகிறேன். மற்றவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பை நான் இழக்க மாட்டேன் என்றார்.

    ஆர்கானிக் உணவு வகைகள் மற்றும் மாட்டிறைச்சி, கோழி, மீன் உணவு வகைகளும், காய்கறிகளையும் அதிகம் சாப்பிடுவதாக கூறும் டேவ் பாஸ்கோ பெரும்பாலான நேரங்களில் எளிய கார்போ ஹைட்ரேட்டுகளை கட்டுப்படுத்துவது மூலம் நான் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டேன் எனவும் குறிப்பிடுகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 30 ஆண்டுகளாக டி- மொபைல் நிறுவன வாடிக்கையாளராக உள்ள நிலையில், தனக்கு வந்த போன் பில்லால் அதிர்ச்சி அடைந்தார்.
    • சம்பந்தப்பட்ட மொபைல் நிறுவனத்தின் சேவை பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் செய்தார்.

    உலகம் முழுவதுமே ஆன்ட்ராய்டு மொபைல் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மொபைல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

    இந்நிலையில் புளோரிடாவை சேர்ந்த ஒரு வயதான தம்பதிக்கு போன் பில் கட்டணமாக ரூ.12 லட்சம் வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். ரெனேரேமண்ட் என்ற 71 வயதான முதியவர் தனது மனைவி லின்டாவுடன் (வயது 65) சுவிட்சர்லாந்துக்கு பயணம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய நிலையில், அவர் வெளிநாட்டில் பயன்படுத்திய மொபைல் டேட்டாவுக்கு கட்டணமாக 1,43,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12 லட்சம்) வந்துள்ளது.

    அவர் 30 ஆண்டுகளாக டி- மொபைல் நிறுவன வாடிக்கையாளராக உள்ள நிலையில், தனக்கு வந்த போன் பில்லால் அதிர்ச்சி அடைந்தார். அவர் சம்பந்தப்பட்ட மொபைல் நிறுவனத்தின் சேவை பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் செய்தார். எனினும் அதிகாரிகள் முதலில் சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் வயதான தம்பதியினர் சட்ட உதவியை நாடிய நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்கு உரிய விளக்கம் அளித்துள்ளது.

    • தீர்மானத்திற்கு ஆதரவாக 12 வாக்குகள் பதிவானது, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து வாக்களிக்கவில்லை.
    • தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருகிறது. இதில் காசாவில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.

    இந்த நிலையில் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக அனுமதிக்க வேண்டும் என்ற முயற்சியை பாலஸ்தீனம் மேற்கொண்டது.

    இதை பரிந்துரைக்கும் வரைவு தீர்மானத்தின் மீது 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 12 வாக்குகள் பதிவானது, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து வாக்களிக்கவில்லை. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    தற்போது பாலஸ்தீனம் ஐ.நா.வில் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடாக உள்ளது. ஐ.நா.வின் நடவடிக்கைகளில் பாலஸ்தீனம் பங்கேற்க முடியும். ஆனால் தீர்மானங்களில் வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு யானையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
    • யானை சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய நிலையிலும் அதிர்ஷ்டவசமாக யாரையும் துரத்தவில்லை என சர்க்கஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவின் மொன்டானா நகரில் சர்க்கஸ் யானை ஒன்று சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. பரபரப்பான சாலையில் நாலாபுறமும் ஓடிய யானையால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ஜோடான் வேர்ல்ட் சர்க்கசில் இருந்து இந்த யானை திடீரென வெளியேறி உள்ளது. பயோலா என்று அழைக்கப்பட்ட இந்த யானையை குளிப்பாட்டி கொண்டிருந்த போது திடீரென கார் சத்தத்தால் அச்சமடைந்து சர்க்கசில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளது. பின்னர் ஒரு வாலிபர் கையில் தடியை ஏந்திக் கொண்டு யானையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தீவிரமாக போராடிய காட்சிகளும் வீடியோவில் இருந்தது.

    ஆனாலும் அந்த யானையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனினும் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த யானையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். யானை சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய நிலையிலும் அதிர்ஷ்டவசமாக யாரையும் துரத்தவில்லை என சர்க்கஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
    • நாம் வாழும் 21-ம் நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா. அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 15 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இதில் வீட்டோ அதிகாரம் கொண்ட 5 நிரந்தர உறுப்பினர்கள் (அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா) மற்றும் 2 ஆண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று இந்தியா கோரி உள்ளது.

    இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறும்போது, நாம் வாழும் 21-ம் நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா. அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம். அது என்ன என்பது குறித்து என்னிடம் எந்த விவரமும் இல்லை, ஆனால் நிச்சயமாக நாங்கள் அதை அங்கீகரிக்கிறோம் என்றார்.

    • 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் புராஜெக்ட் நிம்பஸ் என்கிற இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக கூகுள் ஊழியர்கள் போராட்டம்.
    • அலுவலகத்தை விட்டு அகல மறுத்து ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்.

    கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

    இஸ்ரேல் அரசு மற்றும் இஸ்ரேல் ராணுவத்துக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவைகளை வழங்குவதற்காக அமேசான் நிறுவனத்துடன், கூகுள் நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் புராஜெக்ட் நிம்பஸ் என்கிற இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக கூகுள் ஊழியர்கள் சுமார் 28 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நியூயார்க் மற்றும் சன்னிவேல் அலுவலங்களில் சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியனின் அலுவலகத்தை விட்டு அகல மறுத்து ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.

    இதுதொடர்பாக கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மற்ற ஊழியர்களை வேலை செய்யவிடாமல் இடையூறு செய்வது, அலுவலகத்திற்குள் வர விடாமல் தடுப்பது நிறுவன கொள்கைகளை மீறும் செயலாகும். இந்த செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    அதனால், போராட்டம் செய்தவர்களை அலுவலக வளாகத்தை விட்டு வெளியேறும்படி பலமுறை கூறியும் கேட்கவில்லை. அதனால், விசாரணைக்கு பிறகு 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளோம்" என்றார்.

    • இந்தியாவின் வளர்ச்சி 2024-ம் ஆண்டில் 6.8 சதவீதமாகவும், 2025-ம் ஆண்டு 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    • உள்நாட்டுத் தேவை மற்றும் உழைக்கும் வயது மக்கள்தொகையில் தொடர்ந்து வலுப்பெறுவதைப் பிரதிபலிக்கிறது.

    வாஷிங்டன்:

    சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் பியர் ஒலிவியர் கூறியதாவது:-

    இந்தியா வலுவான செயல்திறன் கொண்ட நாடாக உள்ளது.

    இதன் மூலம், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடர்கிறது. 2023 முதல் 2024 வரையிலான நிதியாண்டில் நாங்கள் திருத்தம் செய்துள்ளோம். 2024-ம் நிதியாண்டில் இருந்து 2025-ம் ஆண்டிற்கு 0.3 சதவீத புள்ளிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியா நன்றாகச் செயல்பட்டு வருகிறது என்றார்.

    மேலும் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் மதிப்பில், இந்தியாவின் வளர்ச்சி 2024-ம் ஆண்டில் 6.8 சதவீதமாகவும், 2025-ம் ஆண்டு 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது வலிமையானது. உள்நாட்டுத் தேவை மற்றும் உழைக்கும் வயது மக்கள்தொகையில் தொடர்ந்து வலுப்பெறுவதைப் பிரதிபலிக்கிறது.

    அதே நேரத்தில், வளர்ந்து வரும் மற்றும் வளரும் ஆசியாவின் வளர்ச்சி 2023-ம் ஆண்டு மதிப்பிடப்பட்ட 5.6 சதவீதத்தில் இருந்து 2024-ம் ஆண்டில் 5.2 சதவீதமாகவும், 2025-ம் ஆண்டில் 4.9 சதவீதமாகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2023-ம் ஆண்டில் 3.2 சதவீதமாக மதிப்பிடப்பட்ட உலகளாவிய வளர்ச்சி, 2024 மற்றும் 2025-ல் அதே வேகத்தில் தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    • இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு ஜி 7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
    • ஈரான் தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட போர் பதற்றம் குறைந்தது.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் நள்ளிரவு வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட 170 டிரோன்கள் மற்றும் 150 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    சிரியா தலைநகர் டமாஸ்கஸ்சில் உள்ள ஈரான் நாட்டு தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முக்கிய ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் 90 சதவீத டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அமெரிக்க படை உதவியுடன் நடுவானில் தடுத்து அழித்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சில ஏவுகணைகள் இஸ்ரேல் பாதுகாப்பு படை தளம் மீது விழுந்தது.

    இதில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டதே தவிர உயிர் சேதம் எதுவும் இல்லை. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இஸ்ரேல் மீது முதன் முதலாக ஈரான் இந்த பயங்கர தாக்குதலில் ஈடுபட்டது.

    இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை தொடரும் எண்ணம் இல்லை என ஈரான் பாதுகாப்பு படை தலைமை தளபதி ஜெனரல் முகமது ஹூசைன் பகோரி தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹாகாரி கூறினார்.

    இந்த சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா ஈரான் மீது எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஈரான் நாட்டின் மீது எந்த விதமான பதிலடி தாக்குதல் நடவடிக்கைகளிலும் அமெரிக்கா ஈடுபடாது என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்கும் என்றும், பதில் நடவடிக்கை மேற்கொள்வதாக இருந்தால் கவனத்துடன் இருக்குமாறும் பெஞ்சமின் நேதன்யாகுவிடம் கூறினார். ஜி -7 நாடுகளின் தலைவர்களுடன் ஜோ பைடன் காணொலி காட்சி மூலம் அவசர ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு ஜி 7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக ஜோ பைடன் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தவிர்க்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ஈரான் தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட போர் பதற்றம் இன்று குறைந்தது. இதையடுத்து இஸ்ரேலில் இன்று இயல்பு வாழ்க்கை திரும்பியது. பள்ளிகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டது.

    இதற்கிடையில் மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரான் மற்றும் இஸ்ரேல் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் இந்த பிரச்சனையை இரு நாடுகளும் தூதரகம் மூலம் பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    போர் பதற்றம் காரணமாக இஸ்ரேல் டெல் அவிவ் நகருக்கு ஏர் - இந்தியா விமான சேவை தற்காலிமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் சிரியா மீது நடத்திய தாக்குதலில் ஈரான் தூதரகம் பலத்த சேதம் அடைந்தது.
    • இரண்டு தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்திருந்தது.

    இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களது இருப்புகளை கண்டறிந்து துல்லியமாக தாக்கி அழித்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியபோது எதிர்பாராத விதமாக சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டது.

    இதில் இரண்டு ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்திருந்த நிலையில், நேற்று ஈரான் நேரடியாக டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 300-க்கும் மேற்பட்ட டிரான்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேல் ஏற்கனவே வான் எல்லைகளில் எதிரி ஏவுகணைகள் தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. மேலும் ஈரான் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்த்ததால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவி செய்தது.

    இதனால் நேற்று நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் இஸ்ரேல் சிறப்பாக எதிர்கொண்டு தடுத்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு தாங்கள் உதவியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஈரானின் 80 பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாக்கி அழித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    ஈரான் மற்றும் ஏமனில் இருந்து ஏவப்பட்ட குறைந்தபட்சம் ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகள், 80-க்கும் மேற்பட்ட ஒரு வழி தாக்குதல் ஆளில்ல ஏரியல் வாகனங்கள் (OWA UAV) ஆகிய தடுத்து அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    மேலும், ஈரானின் தொடர்ச்சியான இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையிலான, மோசமான மற்றும் பொறுப்பற்ற நடத்தை பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அமெரிக்க மற்றும் கூட்டணிப் படைகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

    • 30 சதவீத மூளையை பகிர்ந்தவாறு பிறந்த இவர்கள் உயிர்பிழைப்பது கடினம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • இருவரும் பட்டப்படிப்பு படித்து வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்தவர்கள்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்தவர்கள் லோரி மற்றும் டோரி என்கிற ஜார்ஜ் (வயது 62). கடந்த 1961-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி அன்று பென்சில்வேனியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளாக ஒட்டிபிறந்தனர்.

    பகுதியளவு இணைந்த மண்டை ஓடுகள், முக்கிய ரத்த நாளங்கள் மற்றும் 30 சதவீத மூளையை பகிர்ந்தவாறு பிறந்த இவர்கள் உயிர்பிழைப்பது கடினம் என டாக்டர்கள் தெரிவித்தனர். இருப்பினும் 62 ஆண்டுகள் வாழ்ந்த இவர்கள் உடல்நிலை கோளாறு காரணமாக தற்போது உயிரிழந்தனர்.

    இருவரும் பட்டப்படிப்பு படித்து வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்தவர்கள். மேலும் கடந்த 2007-ம் ஆண்டில் உலகின் மிக வயதான ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர்களானார்கள். இவர்களுடைய இறப்புக்கு கின்னஸ் நிறுவனம் உள்பட உலக அமைப்புகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

    • வீடியோவில் கால் பாதங்களால் காரின் கதவை திறக்க முயற்சிப்பதை காண முடிகிறது.
    • கார் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் கரடியால் திறக்க முடியவில்லை.

    வன விலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வருவது உலகம் முழுவதும் உள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உணவு தேடி நெடுஞ்சாலைக்கு வந்த கரடி ஒன்று சிற்றுண்டிக்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்த, ஒரு போலீஸ் வாகனத்தின் கார் கதவை உடைக்க முயன்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    அந்த வீடியோவில், கரடி சிற்றுண்டியை தேடி அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை நெருங்குகிறது. பின்னர் அந்த கரடி வாயால் கார் கதவை திறக்க முயல்கிறது. மேலும் கால் பாதங்களால் காரின் கதவை திறக்க முயற்சிப்பதை காண முடிகிறது. ஆனால் அதன் முயற்சி பலனளிக்கவில்லை. கார் கதவு பூட்டப்பட்டிந்ததால் கரடியால் திறக்க முடியவில்லை.

    இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலான நிலையில், பயனர்கள் பலரும் வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வருவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.


    ×