search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Belarus"

    • 2023 ஆகஸ்டில் எவ்ஜெனி பிரிகோசின் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார்
    • 2022 பிப்ரவரி மாதமே அமெரிக்கா பயண கட்டுப்பாடுகளை வெளியிட்டு இருந்தது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை சிறப்பு ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷியாவுடன் கடுமையாக போரிட்டு வருகிறது.

    ரஷியாவிற்கு போரில் உதவி வந்த தனியார் ராணுவ அமைப்பும், கூலிப்படையுமான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின், இந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷியாவிற்கு எதிராகவும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் இறங்கினார்.

    சாமர்த்தியமாக இதனை புதின் எதிர்கொண்டு இந்த கிளர்ச்சியை அடக்கினார். இதனையடுத்து பிரிகோசின், தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என அஞ்சி, ரஷியாவின் அண்டை நாடான பெலாரசில் தஞ்சம் புகுந்தார்.

    இந்நிலையில் ஆகஸ்ட் 23-ம் தேதி, வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ஒரு விமான விபத்தில் உயிரிழந்ததாக ரஷியா அறிவித்தது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவியது.

    அமெரிக்க அரசாங்கம், தனது குடிமக்கள் யாரேனும் பெலாரஸ் நாட்டில் இருந்தால் அவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டிருந்ததை குறிப்பிட்டு பேஸ்புக் மற்றும் எக்ஸ் (டுவிட்டர்) வலைதளங்களில், "பெலாரஸ் நாட்டை விட்டு தனது குடிமக்கள் வெளியேற வேண்டுமென அமெரிக்கா முதல்முறையாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அது வந்த இரு நாட்களில் பிரிகோசின் பலியானார். ஒரு வேளை பிரிகோசினிற்கு ஏற்படப்போகும் நிலை குறித்து அமெரிக்கா முன்னரே அறிந்திருக்கலாம்" என குறுஞ்செய்தியுடன் அந்த தகவல் பரவியது.

    எவ்ஜெனி பிரிகோசின் மரணத்தில் ரஷியாவிற்கு பங்கு இருக்கலாம் என பலர் நம்பி வந்த நிலையில், இச்செய்தியின் மூலம், அமெரிக்காவிற்கு பிரிகோசின் மரணம் குறித்து முன்னரே தகவல் தெரிந்திருக்கும் என கருத்துக்களை பறிமாறி கொண்டனர்.

    ஆய்வில் இந்த தகவல்கள் அனைத்தும் தவறு என நிரூபணமாகியுள்ளது.

    2022 பிப்ரவரி மாதமே பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க்கில் உள்ள அமெரிக்க தூதரகம் உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

    அதில், "ரஷியா, பெலாரஸ் நாட்டின் எல்லைகளில் படைகளை குவித்து வருவதாலும், வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறுவது தடுக்கப்படும் ஆபத்து உள்ளதாலும், அமெரிக்கர்கள் பெலாரஸ் நாட்டிற்குள் வர வேண்டாம். பெலாரஸிலுள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்," என்று அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது.

    இந்த பயண கட்டுப்பாடு குறித்த உத்தரவு மீண்டும் இந்த ஆண்டு ஏப்ரல் 12 மற்றும் ஜூலை 26 ஆகிய தேதிகளில் அமெரிக்காவால் புதுப்பிக்கப்பட்டது.

    பிரிகோசின் இறப்பதற்கு 2 தினங்களுக்கு முன், பெலாரஸ்ஸின் அண்டை நாடான லிதுவேனியா, லிதுவேனியா-பெலாரஸ் எல்லைகளில் உள்ள பெலாரஸ் நோக்கி செல்லும் 2 முக்கிய வழிகளை மூடியது. இதனால் அமெரிக்காவின் பயண கட்டுப்பாடு மீண்டும் ஆகஸ்ட் 21 அன்று புதுப்பிக்கப்பட்டது.

    ஆக, எவ்ஜெனி பிரிகோசின் இறப்பை முன்கூட்டியே அறிந்துதான் அமெரிக்கா பயண தடை விதித்தது எனும் செய்திகளில் உண்மை இல்லை.

    • மாஸ்கோவில் நடைபெறும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்
    • ரஷியாவை தொடர்ந்து பெலாரஸ் செல்கிறார்

    சீனாவின் பாதுகாப்புத்துறை மந்திரி லி ஷாங்ஃபு இன்று முதல் ஆகஸ்ட் 19-ந்தேதி வரை ஆறு நாட்கள் ரஷியா மற்றும் பெலாரஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த தகவலை சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வு கியான் தெரிவித்துள்ளார்.

    ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கெய் ஷோய்கு, பெலாரஸ் பாதுகாப்பு மந்திரி விக்டர் கிரெனின் ஆகியோரின் அழைப்பை ஏற்று இந்த பயணம் மேற்கொள்கிறார்.

    முதலில் ரஷியா செல்லும் அவர், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற இருக்கும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து பெலாரஸ் செல்கிறார்.

    உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுக்கு பெலாரஸ் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, உதவி வருகிறது. ஆனால், சீனா மறைமுகமாக ஆதரவு கொடுப்பதுடன், ஆயுதங்கள் வழங்குவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன்- ரஷியா போரில் பெலாரஸ் ரஷியாவுக்கு உதவு செய்து வருகிறது
    • பெலாரஸ் அண்டை நாடுகளான போலந்து லிதுவேனியா பாதுகாப்பை அதிகரித்துள்ளது

    உக்ரைன்- ரஷியா இடையே 17 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. ரஷியாவுக்கு அண்டை நாடான பெலாரஸ் ஆதரவாக உள்ளது. அதேவேளையில் லிதுவேனியா, போலந்து நாடுகள் நேட்டோ படையில் உள்ளது. இதனால் எல்லையில் லிதுவேனியா மற்றும் போலந்து நாடுகள் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

    கடந்த ஜூன் மாதம் வாக்னர் குழு திடீரென ரஷிய ராணுவதிற்கு எதிராக கலகம் செய்து, ஆயுத கிளர்ச்சி ஏற்படுத்த முயற்சித்தது. ஆனால், பெலாரஸ் அதிபர் மத்தியஸ்தராக செயல்பட்டு, கலகம் இரண்டு நாட்களுக்குள் முடிவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தார்.

    வாக்னர் குழு பெலாரஸ் செல்வது, ரஷியா அவர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளாது என ஒப்பந்தும் செய்யப்பட்டது. இதனால் வாக்னர் படையைச் சேர்ந்தவர்கள் பெலாரஸ் வந்துள்ளனர். இதனால் லிதுவேனியா, போலந்து நாடுகள் மேலும் பாதுகாப்பை எல்லையில் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் இரு நாடுகள் எல்லையில் பெலாரஸ் ராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதனால் மேலும் தங்களது பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

    இரண்டு நாடுகளுக்கும் இடையில் ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள கலினிங்ராட் பிராந்தியத்தில் ஆத்திரமுட்டும் செயலில் ரஷியா மற்றும் பெலாரஸ் ஈடுபட்டு வருவதாக லிதுவேனியா, போலந்து தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம் பெலாரஸ் ஹெலிகாப்டர்கள் இரண்டு தங்கள் எல்லைக்குள் அத்துமீறி பறந்ததாக போலந்து குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் பெலாரஸ் அதை மறுத்துள்ளது.

    லிதுவேனியா, போலந்து எல்லையில் அருகே உள்ள கிரோட்னோ மாகாணத்தில் பெலாரஸ் ராணுவப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

    போலந்து லிதுவேனியா எல்லையை இணைக்கும் 96 கி.மீட்டர் நீளம் கொண்ட எல்லைப் பகுதி சுவால்கி என அழைக்கப்படுகிறது. இந்த பகுதி ரஷியா கட்டுப்பாட்டில் இருக்கும் கலினிங்ராட் பிராந்தியத்திற்கும் பெலாரஸ் எல்லைக்கும் இடையிலான பகுதி.

    இந்த பகுதிதான் நேட்டோவுக்கும், ரஷியாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட முக்கிய புள்ளியாக இருக்கிறது. ரஷியா இந்தப் பகுதியை ஆக்கிரமித்தால் லிதுவேனியா, லித்வியா, எஸ்டோனியா போன்ற நேட்டோ உதவி நாடுகளில் இருந்து போலந்து தனியாக பிரிக்கப்பட்டு விடும். இது ரஷியாவுக்கு ஆதாயமாக இருக்கும் என ராணுவ நடவடிக்கை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பால்டிக் கடலில் உள் கலினிங்ராட் பிராந்தியத்திற்கும் ரஷியாவிற்கும் இடையில் நிலப்பரப்பு தொடர்பு கிடையாது.

    ×