search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "O Panneerselvam"

    • பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் வெளிமுகமை மூலம் நிரப்பப்படுகின்றன.
    • 65-வயதைத் தாண்டியவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பொதுவாக, அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, மருத்துவ தேர்வாணையத்தின் மூலமாகவோ, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ அல்லது பத்திரிகை விளம்பரத்தின் மூலமாகவோ நிரப்பப்படும்.

    இந்த முறையைக் கடைபிடிப்பதன்மூலம் அரசுப் பணிகளில் இருப்போருக்கு பதவி உயர்வு ஏற்படுவதோடு, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நிலை தி.மு.க. ஆட்சியில் நிலவுகிறது.

    தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், சார்புச் செயலாளர் நிலை முதல் செயலாளர் நிலைவரை ஓய்வு பெற்றவர்கள் அதே பணியில் அமர்த்தப்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், 65-வயதைத் தாண்டியவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர, அனைத்துத் துறைகளிலும் கடைநிலை ஊழியர் முதல் உதவியாளர் பதவி வரையிலான பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.

    பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் வெளிமுகமை மூலம் நிரப்பப்படுகின்றன. இதன் காரணமாக, அங்குள்ளவர்களுக்கு பதவி உயர்வு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் தி.மு.க. அரசால் பறிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் சமூகநீதி தாரை வார்க்கப்பட்டு உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஓய்வு பெற்றவர்களை பணியிலிருந்து உடனடியாக நீக்கிவிட்டு அந்த இடங்களை பதவி உயர்வு மூலம் பணியில் உள்ளவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பூங்கொத்து வழங்கி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
    • பைத்தியக்காரர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவு அடுத்த மாதம் வெளியானதும் அ.தி.மு.க.வில் பிரிவு ஏற்படும் என்றும், அப்போது கட்சிக்கு தலைமை தாங்க போவது செங்கோட்டையனா? அல்லது எஸ்.பி.வேலுமணியா? என தெரிய வரும் என்றும் தி.மு.க. அமைச்சர் ரகுபதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார்.

    இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த வைத்திலிங்கத்தை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வலுவான கூட்டணி அமைக்க தவறி விட்டதால் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாகவே எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் இருப்பதாகவும், சமூக வலை தளங்களில் செய்திகள் உலா வந்தன.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடிய போது அ.தி.மு.க.வில் உள்ள பலரும் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து விட்டு வந்தனர்.

    ஆனால் எஸ்.பி.வேலுமணி மட்டும் செல்லவில்லை. அதற்கு பதிலாக தனது எக்ஸ் வலைதளத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

    எக்ஸ் வலைதளத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த எஸ்.பி.வேலுமணி எதற்காக நேரில் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வில்லை என்று அ.தி.மு.க.வினர் பேசத் தொடங்கினார்கள்.

    இந்த நிலையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரான எஸ்.பி.வேலுமணி நேற்று சென்னை வந்து அடையாரில் இருந்த எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    தன்னுடன் வந்திருந்த ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைத்து ஆளுயர ஆப்பிள் மாலை அணிவித்தார். இதன் மூலம் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவிக்கையில், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை திறம்பட நடத்துவதை சகித்துக்கொள்ள முடியாமல் சில பைத்தியக்காரர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்து அனைவரும் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத் ேதாம். அவரது தலைமையில் கட்சி வீறுநடை போடுவதாகவும் தெரிவித்தார்.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில் அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய ஆலமரம் அதன் கீழ் எல்லோரும் இருக்கிறோம். இங்கு பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

    செங்கோட்டையனின் பேரன் திருமணம் வரவேற்பு கோவையில் ஜூன் 16-ந் தேதி நடைபெறுகிறது. இந்த திருமணத்தை எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி நடத்துகிறார்.

    எனவே கட்சி வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வெளியில் பிதற்றுகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்.

    இதேபோல் மூத்த தலைவர்களும் தி.மு.க.வை சாடி உள்ளனர். 

    • பஸ்களின் கட்டணத்தை எவ்வித முன் அறிவிப்புமின்றி தி.மு.க. அரசு உயர்த்தி உள்ளது.
    • அரசின் உத்தரவை அரசே மீறுவது கண்டிக்கத்தக்கது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களின் கட்டணத்தை எவ்வித முன் அறிவிப்புமின்றி தி.மு.க. அரசு உயர்த்தி உள்ளது. ஏழை-எளிய மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. சாதாரண பஸ்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 58 பைசா மட்டுமே தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்ததால் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இதையும் தாண்டி 75 பைசா பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. ஒரு கிலோ மீட்டருக்கு 75 பைசா என்கிற கட்டணம் என்பது விரைவு பேருந்துகளுக்கு மட்டுமே. அதாவது விரைவு பஸ்களில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் சாதாரண பஸ்களில் வசூலிக்கப்படுகிறது. அரசு பஸ்களில் பயணம் செய்வோர் அனைவரும் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்தவர்கள் என்ற நிலையில், அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. அரசின் உத்தரவை அரசே மீறுவது கண்டிக்கத்தக்கது.

    முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, அரசுப் பஸ்களில், அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், விரைவுப் பஸ்களில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை சாதாரண பஸ்களில் வசூலிப்பதை நிறுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் செயலாட்சி நடைபெறுவதாக குறிப்பிட்டு இருந்தார்.
    • சாராய சாம்ராஜ ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பதவி ஏற்றது. இம்மாத துவக்கத்தில் தி.மு.க. ஆட்சி நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் செயலாட்சி நடைபெறுவதாக குறிப்பிட்டு இருந்தார்.

    இவரது அறிக்கைக்கு பதில் அளித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழகத்தில் பொய்யாட்சி நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி என்பது மக்களை வாட்டி வதைக்கின்ற ஆட்சியாக, மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதமில்லாத ஆட்சியாக, போதையில் மூழ்கியுள்ள ஆட்சியாக, சாராய சாம்ராஜ ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது."

    "இந்த நிலையில், தி.மு.க. ஆட்சி 'செயலாட்சி' என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதிவு செய்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டு தி.மு.க. ஆட்சி என்பது பொய்மையின் மொத்த உருவமாக காட்சி அளிக்கிறது."

    "தமிழ்நாட்டில் செயலாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். உண்மை நிலை என்னவென்றால், தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருப்பது 'செயலாட்சி' அல்ல. 'செயலற்ற ஆட்சி, 'பொய்யாட்சி' நடைபெற்றுக் கொண்டிருக்கிறது."

    "இந்த உண்மையை மறைத்து செயலாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறும் மாண்புமிகு முதலமைச்சருக்கு 'மனமறிந்து பொய் பேசினால் மனதே நம்மைத் தண்டிக்கும்' என்ற குரளை நான் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மக்களின் விருப்பத்திற்கிணங்க, தமிழ்நாட்டில் விரைவில் 'பொய்யாட்சி' தூக்கி எறியப்பட்டு 'செயலாட்சி' ஏற்படுத்தப்படும்," என்று தெரிவித்துள்ளார்.

    • ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு உயர்த்தி இருப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.
    • சார் பதிவாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள செய்தி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வீட்டை வாங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று. வங்கி, வங்கியாக அலைந்து திரிந்து, கடன் பெற்று, வீட்டை வாங்கி, அதற்கான உள் வேலைகளை செய்து, கடனுக்கு மாதாந்திர தவணை கட்டி மக்கள் அல்லலுற்று இருக்கின்ற நிலையில், முத்திரை மற்றும் பதிவுக் கட்டணத்தை அநியாயமாக, ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு உயர்த்தி இருப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.

    இந்நிலையில் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதை சுட்டிக்காட்டி, தற்போதுள்ள பத்திரப் பதிவு வருவாயான சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாயினை 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தத் தேவையான நில வழிகாட்டி மதிப்புகளை பரிந்துரைக்குமாறு சார் பதிவாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள செய்தி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபோது என்ன வழிகாட்டி மதிப்பு இருந்ததோ அதே மதிப்பினை தொடர்ந்து கடைபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • போதைப் பொருட்கள் நடமாட்டம் கொடிகட்டி பறக்கிறது.
    • தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சி என்றாலே பயங்கரவாதம், வன்முறை, அராஜகம் ஆகியவை தலைவிரித்து ஆடுவது வாடிக்கை. தற்போது, புதிய வரவாக போதைப் பொருட்கள் நடமாட்டம் கொடிகட்டி பறக்கிறது. கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டை போதைப் பாதையில் அழைத்துச் செல்கிறது. அமைதிப் பாதையில், ஆக்கப்பூர்வமான பாதையில், முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் நாட்டை அழிவுப் பாதையில் தி.மு.க. அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை.

    தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், பாலக்கரை பகுதியில் ஆறு இளைஞர்கள் கஞ்சா போதையில் ஓட்டுநரை சரமாரியாக அடித்துள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

    சென்னை, கண்ணகி நகரில் உமாபதி என்கிற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற காவல் துறையினரையே கஞ்சா வியாபாரியும், அவரது நண்பர்களும் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுபோன்ற தாக்குதல்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இதனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு உள்ளது. இதனைச் செய்யாமல் இருப்பது, எதிர்கால இந்தியாவின் தூண்களாக விளங்கும் இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதற்குச் சமம். இது சட்டம்-ஒழுங்கையும், நாட்டின் வளர்ச்சியையும் நாசமாக்கும் செயல். தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் தி.மு.க. அரசுக்கு இருக்குமேயானால், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே அரசு சார்பில் குழுக்களை அமைத்து, போதைப் பொருள் நடமாட்டத்தை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 10 ஆண்டு சிறப்பான ஆட்சியை தந்த பிரதமர் மோடி தான் 3ம் முறையாக பிரதமராக வர வேண்டும்.
    • என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    தேனி:

    இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தேனி பெரியகுளம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

    கே: தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

    நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய இந்திய தேசத்தினுடைய தலைவிதியை யார் நிர்ணயிக்கின்ற தேர்தலாக பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

    10 ஆண்டு சிறப்பான ஆட்சியை தந்த பிரதமர் மோடி தான் 3ம் முறையாக பிரதமராக வர வேண்டும் என்று இந்தியா முழுவதும் உள்ள பொதுமக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். உறுதியாக 3ம் முறையாக பிரதமர் மோடிதான் வருவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கே: உங்களது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறுதியாக நான் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்
    • ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 5 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    இந்த ராமநாதபுரம் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 5 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அறந்தாங்கியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், "நான் சுயேட்சை வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தேன். அதன் பிறகு அந்த தொகுதியில் ஏகப்பட்ட பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள். என்னை சேர்த்து இங்கு 5 பன்னீர்செல்வம் போட்டி போடுகிறார்கள்.

    நான் தேர்தல் ஆணையத்திடம் என்னென்ன சின்னங்கள் கேட்டேனோ அதே சின்னங்களை தான் மற்ற பன்னீர்செல்வமும் கேட்டார்கள். அவர்களெல்லாம் வெறும் ஒ.பன்னீர்செல்வம்தான்... நான் ஓஓ...பன்னீர்செல்வம். ஒரு சின்னத்தை 2 பேர் கேட்டால் அதை குலுக்கல் முறையில் போட்டு தான் சின்னம் தேர்ந்தெடுப்பார்கள். அதில் நமது வெற்றி சின்னமான பலாப்பழம் சின்னம் நமக்கு கிடைத்தது" என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார். 

    • கச்சத்தீவை 1974-ல் காங்கிரஸ் அரசும், தி.மு.க. அரசும் தாரை வார்த்து இலங்கைக்கு கொடுத்தது.
    • கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதி கூறியுள்ளார்.

    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் கூட்டணி சார்பாக தேர்தலில் போட்டியிட பாரதப் பிரதமரிடம் விருப்பம் தெரிவித்த போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுங்கள் என்று தெரிவித்தார். எனக்கு போட்டியாக பன்னீர்செல்வம் என பலரை நிறுத்தி உள்ளனர். யார் நிறுத்தி இருக்கிறார்கள் என்பதை நான் எனது வாயால் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, உங்களுக்கே தெரியும்.

    கச்சத்தீவை 1974-ல் காங்கிரஸ் அரசும், தி.மு.க. அரசும் தாரை வார்த்து இலங்கைக்கு கொடுத்தது. கச்சத்தீவை மீட்க 2011-ல் உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் வழக்கு தாக்கல் செய்தபோது இங்கு இருக்கும் ஆவணங்கள் அனைத்தும் அங்கு சமர்ப்பிப்பட்டு உள்ளது. கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதி கூறியுள்ளார்.

    இந்த பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும். படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க பயிற்சி வகுப்புகள் தொடங் கப்படும். கனிமவளம் பாதிக்காத வகையில் தொழில் வளம் பெருக நடவடிக்கை எடுப்பேன். நானும் ராமநாதபுரத்தை சேர்ந்தவன் தான். பழைய பிரிக்கப்படாத ராமநாதபுரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்தான் சொந்த ஊர்.

    அ.தி.மு.க.வில் தற்போது யார் வேட்பாளராக நிற்கிறார்கள் என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு கட்சியின் நிலை கீழே சென்று உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பரமக்குடி அருகே போகலூர், துரத்தியனேந்தல், மஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களில் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் மேற்கொண்டார்.
    • பலாப்பழம் சின்னத்தை மறந்து விட்டு, வெற்றியின் சின்னமாம் இலைக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் சுயேட்சையாக களமிறங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம் கேட்ட சின்னம் கிடைக்காமல், கிடைத்த பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    ராமேசுவரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கிய அவர் நேற்று பரமக்குடி பகுதியில் வாக்கு சேகரித்தார். தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ள பா.ஜ.க. தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.

    மீனவர்கள் அதிகம் நிறைந்துள்ள ராமநாதபுரம் தொகுதியில் களம் காணும் ஓ.பி.எஸ்.சும் தன் பங்குக்கு கச்சத்தீவை பிரதமர் மோடியுடன் இணைந்து மீட்க பாடுபடுவேன் என்று கூறி வருகிறார். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கு தான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் அவசியம் என்ற கருத்தையும் தொடர்ந்து பிரசாரத்தின்போது கூறிவருகிறார்.

    இந்தநிலையில் பரமக்குடி அருகே போகலூர், துரத்தியனேந்தல், மஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களில் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழம் சின்னத்தை மறந்து விட்டு, வெற்றியின் சின்னமாம் இலைக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.

    இதைக்கேட்டு அங்கு திரண்டிருந்தவர்கள் சிரித்தனர். இருந்தபோதிலும் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் பழக்க தோஷத்தில் சொல்லி விட்டேன் என்று மழுப்பலாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இப்பகுதியில் இருக்கும் நிரந்தர குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நல்ல ஒரு பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு உங்களில் ஒருவனாக இருந்து செயல்படுவேன் என்றார்.

    • கச்சத்தீவில் இருந்து 2 மைல் முன்பே மீனவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்.
    • பிரதமர் கச்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிகாலை தொகுதிக்கு உட்பட்ட ராமேசுவரம் வந்த ஓ.பன்னீர்செல்வம் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடினார். பின்னர் ஈர உடையுடன் கோவில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் மகன் ரவீந்திரநாத்துடன் சென்று நீராடிய பின்னர் சுவாமி, அம்பாள் சன்னதியில் பயபக்தியுடன் வழிபாடு நடத்தினார்.

    தொடர்ந்து ராமேசுவரத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து ராமேசுவரம் நகராட்சிக்கு உள்பட்ட ஏரகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் காசி, ராமேசுவரம் புண்ணிய பூமியாக விளங்குகிறது. காசியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இங்கு போட்டியிடும் எனக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

    தற்போது கச்சத்தீவு பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. சுதந்திரத்திற்கு முன்பு கச்சீத்தீவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதிக்கு சொந்தமானதாக இருந்தது. இது தொடர்பான தகவல் தாமிர பட்டயத்தில் உள்ளன. 1974-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசும், தி.மு.க. அரசும் இணைந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தார்கள்.

    அதற்கு முன்பு கச்சத்தீவை தாண்டி 2 மைல் தொலைவிற்கு சென்று நமது மீனவர்கள் மீன்பிடித்து வந்தார்கள். ஆனால் தாரைவார்க்கப்பட்ட பின்பு கச்சத்தீவில் இருந்து 2 மைல் முன்பே மீனவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அதனை மீறி செல்பவர்களை இலங்கை கடற்படை கைது செய்தும், விரட்டியடித்தும் வருகிறது. தற்போது பிரதமர் கச்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். அவருடன் இணைந்து கச்சத்தீவை மீட்டு இந்த மாவட்ட மக்களுக்கு கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராகவே போட்டியிடுகிறேன்.
    • புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை.

    ராமேசுவரம்:

    தமிழ்நாட்டில் மூன்று முறை முதலமைச்சர் பதவியை அலங்கரித்த ஓ.பன்னீர்செல்வம் இன்று தனியாக தேர்தல் களம் காண்கிறார். கட்சி, சின்னம் முதல் கரை வேட்டி வரை அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்கும் அவர் தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க தானே களத்தில் இறங்குகிறேன் என்று கூறி ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் காரைக்குடியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பணியாற்ற நிர்பந்திக்கப்பட்டேன். அப்போது துணை முதலமைச்சர் பதவி தருவதாக கூறினார்கள். ஆனால் அந்த பதவியில் எனக்கு விருப்பமில்லை. அந்த பதவியில் எந்த அதிகாரமும் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் வற்புறுத்தல் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதலமைச்சர் பதவியை ஏற்று கொண்டேன்.

    ஆனால் எனது அரசியல் வாழ்வை அழிக்க எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சிலர் தொடர்ந்து சதி செய்தனர். அ.தி.மு.க.வை மீட்க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராகவே போட்டியிடுகிறேன். புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ராமநாதபுரம் தொகுதியை பொறுத்த வரை இங்கு ஏற்கனவே பிரதமர் மோடி போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். எனவே பிரதமர் மோடியே போட்டியிடுவதாக நினைத்து பாரதிய ஜனதா தொண்டர்கள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். இதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழக மக்கள் என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று கூறுகிறார்கள் ஆனால் உண்மையான ஹீரோ மோடி தான். அவரால் தான் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு சாத்தியமாயிற்று.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×