search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓ.பன்னீர்செல்வம்"

    • தமிழகத்தில் சாதாரண மனிதன் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.
    • சட்ட ஒழுங்கு பிரச்சனை அதிகரித்துள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் ராமேசுவரத்தில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தததால் தான் எனக்கு மக்கள் அதிக வாக்களித்தனர். எனவே பிரதமருக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.தி.மு.க. கட்சி ஆரம்பிக்கப்பட்டு 52 ஆண்டுகளில் 30 ஆண்டு காலம் வெற்றி பெற்று ஆட்சி செய்துள்ளது. ஆனால் தற்போது அனைவரும் பிரிந்து இருப்பதால் அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.


    தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த இயக்கம் சிதைந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என சசிகலா தொடங்கிய பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். பிரிந்து கிடக்கும் சக்திகளை இணைப்பதற்காக சசிகலாவை விரைவில் சந்திப்பேன்.

    தமிழகத்தில் சாதாரண மனிதன் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனை அதிகரித்துள்ளது. எனவே அரசு கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை.
    • காரசாரமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கடந்த 10-ந்தேதி முதல் பாராளுமன்ற தொகுதி வாரியாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டு உள்ளார்.

    முதல் நாளில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 2 தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுநாளில் இருந்து தினமும் 3 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    இதன்மூலம் கடந்த 6 நாட்களில் 17 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசித்து தோல்விக்கான காரணங்கள் பற்றி அலசி ஆராய்ந்தார்.

    நேற்று ராமநாதபுரம் நெல்லை, விருதுநகர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் காரசாரமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி யுள்ளன.

    ராமநாதபுரம் போன்ற தென்மாவட்ட தொகுதிகளில் முக்குலத்தோர் அதிகம் இருப்பதால் அவர்களது வாக்குகள் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை கட்சியினர் முன் வைத்திருக்கிறார்கள்.

    எனவே சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சி யில் சேர்ப்பது பற்றி ஆலோசிக்க வேண்டும். அவர்களை கட்சியில் சேர்த்தால் அ.தி.மு.க. மீண்டும் வலுப்பெறும் என்கிற பேச்சு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பரவலாகவே உள்ளது எனவும் ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் வற்புறுத்தி கூறியுள்ளனர்.

    இவர்கள் 3 பேரும் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதால் முக்குலத்தோர் சமுதாய மக்களிடமிருந்து அ.தி.மு.க. விலகியே நிற்பதாகவும் வெளியில் பேசப்படுகிறது என்றும் நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளின் இந்த கருத்தை பொறுமையுடன் கேட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பற்றி நீங்கள் இங்கே குறிப்பிட்டீர்கள். அவர்களை எல்லாம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்வது பற்றி தனியாக குழு அமைத்து ஆலோசிக்கலாம் என்று கூறியுள்ளார்.

    இதன்மூலம் சசிகலா-ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க.வின் தொடர் தோல்வியால் எடப்பாடி பழனிசாமி முதன் முறையாக தனது பிடிவாதத்தை தளர்த்தி இறங்கி வந்திருப்பதாகவும் ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் கூறி உள்ளனர்.

    பாராளுமன்ற தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி நாளை மற்றும் நாளை மறுநாளும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    வருகிற 19-ந்தேதியுடன் இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைகிறது. இதன் பின்னர் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க அ.தி.மு.க. மேலிடம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.

    • சசிகலாவின் செயல்பாட்டை வரவேற்கிறேன்.
    • மாங்கனிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவ்வாறு கேட்பதற்கு அவர் யார்? என்னிடம் மன்னிப்பு கடிதம் கேட்பதற்கு அவருக்கு எந்த உரிமம் கிடையாது. 90 சதவீதம் தொண்டர்களை இணைத்து விட்டோம் என சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலாவின் இந்த செயல்பாட்டை வரவேற்கிறேன்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் போட்டியிடவில்லை. அதனால் இரட்டை இலையுடன் மாங்கனி உள்ளது. மாங்கனிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

    பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் மட்டுமே கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு விரைந்து சரி செய்ய வேண்டும். சட்டம்-ஒழுங்கை சரி செய்ய தவறினால் தி.மு.க. அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அவருடன் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி எம்.எல்.எ. அய்யப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • அ.தி.மு.க.வை அழிப்பது என்பது எந்த சக்தியாலும் முடியாது.
    • ஓ.பி.எஸ். எப்போதுமே இயக்கத்திற்கு விசுவாசமாக இருந்த வரலாறு கிடையாது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அக்கட்சியில் இணைய முயற்சித்து வருகிறார். ஆனால் அவரை ஒரு போதும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து கூறியதாவது-

    'துரோகம்', 'பொய்மை', 'செய்நன்றி மறத்தல்', 'வன்முறை' ஆகியவற்றின் மொத்த உருவமாக விளங்கும் எடப்பாடி பழனிசாமி என்னை விசுவாசமற்றவன் என்று பேட்டியளித்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது.

    அ.தி.மு.க.வுக்கும் புரட்சித் தலைவி அம்மாவுக்கும் எந்த அளவிற்கு விசுவாசமாக இருந்தேன் என்பதை அம்மா பல சந்தர்ப்பங்களில் தெரிவித்து இருக்கிறார். என்னுடைய விசுவாசத்திற்கு ஈடாக ராமாயணத்தில் வரும் பரதனை ஒப்பிட்டு பேசிய அம்மாவின் பேச்சினை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

    என்னுடைய விசுவாசத்தை அம்மா இந்த நாட்டிற்கு பறைசாற்றிய நிலையில், அதைப் பற்றி பேச பழனிசாமிக்கு தகுதி இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதலமைச்சர் பதவியை கொடுத்தவருக்கு துரோகம், பரிந்துரை செய்தவருக்கு துரோகம், 4 ஆண்டு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவருக்கு துரோகம், அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்த வருக்கு துரோகம், என சுயநலத்திற்காக பல துரோகங்களை செய்து கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி என்னுடைய விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர்.

    அம்மா போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்ட போது, அம்மாவுக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளருக்கு 'தலைமை தேர்தல் முகவராக' நான் செயல்பட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்து இருக்கிறார்.


    இதற்கு நான் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், 'ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும்' என்ற வேலையை செய்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இதனை ஆதாரத்துடன் நிருபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். இதுநாள் வரை ஆதாரத்தை வெளியிடாத எடப்பாடி பழனிசாமி, மீண்டும் அதே குற்றச்சாட்டினை என்மீது வைத்திருக்கிறார்.

    அடுத்தபடியாக, 2017-ம் ஆண்டு மூன்று சதவிகிதம் ஆதரவு இருந்த எனக்கு 'ஒருங்கிணைப்பாளர்' பதவி தந்ததாகவும், 'துணை முதலமைச்சர்' பதவி தந்ததாகவும் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்து இருக்கிறார். நான் 2017-ம் ஆண்டு 'தர்ம யுத்தம்' நடத்திய காலத்தில் எனக்கு கிட்டத்தட்ட 42 விழுக்காடு மக்கள் ஆதரவு இருந்தது என்பதை பத்திரிகைகள் படம் பிடித்துக் காட்டின. அந்தத் தருணத்தில், நான் எடப்பாடி பழனிசாமியிடம் சென்று எனக்கு 'ஒருங்கிணைப்பாளர் பதவி அளியுங்கள்', 'துணை முதலமைச்சர் பதவி தாருங்கள்' என்று கேட்கவில்லை.

    நான், 'தர்ம யுத்தம்' சார்பாக எம்.ஜி.ஆருடைய நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 16-வது முறையாக மாபெரும் கூட்டத்தினை கோயம்புத்தூரில் கூட்டியபோது, அங்கு திரண்டிருந்த கூட்டத்தைக் கண்டு அதிர்ந்து, அதற்கு மறுநாள், அ.தி.மு.க.வின் மூத்த விசுவாசிகளான எஸ்.பி. வேலுமணியும், பி. தங்கமணியும், சென்னையில் உள்ள என்னுடைய மகள் வீட்டில் என்னைச் சந்தித்து, நாம் ஒன்று சேர்ந்தால்தான் அ.தி.மு.க. வலுப் பெறும்; அப்போதுதான் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என்ற கட்சித் தொண்டர்களின் கருத்தினையும், விருப்பத்தினையும் என்னிடம் வெளிப்படுத்தினர். கட்சியின் நலன் கருதி, கழகம் ஒன்றுபட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொண்டேன். நான் போய் பழனிசாமியிடம் எந்தப் பதவியையும் கேட்க வில்லை. இனியும் கேட்க மாட்டேன். பழனிசாமிதான் தவழ்ந்து, ஊர்ந்து, காலில் விழுந்து பெற்ற முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தூது விட்டார்.

    எடப்பாடி பழனிசாமி பதவி வெறி பிடித்தவர், சுய நலவாதி என்பதை தமிழ் நாட்டு மக்கள் நன்கு அறிவர். தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் தனக்கு பெரும்பான்மை இல்லை என்பதால் எனக்கு தூதுவிட்டார். 2016-ம் ஆண்டு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் 136 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்று, தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அம்மா தன்னுடைய உடல் நலத்தைக்கூட பொருட்படுத்தாமல், சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்த தன் காரணமாக மாபெரும் வெற்றி அ.தி.மு.க.விற்கு கிடைத்தது. இந்த வெற்றி ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி.


    அம்மாவின் மறைவிற்குப் பின், சசிகலா தயவால் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்த போது, அவருக்கு ஆதரவாக 122 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

    இந்த 122 சட்டமன்ற உறுப்பினர்களில், 19 சட்ட மன்ற உறுப்பினர்கள் ஒரு சில மாதங்கள் கழித்து கவர்னரை சந்தித்து, எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 103 ஆக குறைந்தது. இது தவிர, மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இதையும் சேர்த்தால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நூறுக்கும் கீழே சென்று விட்டது. அதே சமயத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 98 ஆக இருந்தது. அதாவது, ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்தது தி.மு.க. அந்தச் சமயத்தில் கவர்னர் பெரும் பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டிருந்ததால், எடப்பாடி பழனிசாமியின் முதலமைச்சர் பதவி அன்றைக்கே போயிருக்கும். இந்தச் சிக்கலில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எனக்கு தூதுவிட்டு கெஞ்சியவர் எடப்பாடி பழனிசாமி.

    எனக்கு எடப்பாடி பழனிசாமியுடன் சேர விருப்ப மில்லை என்றாலும், "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்" என்று அம்மா சொன்ன அந்த வார்த்தைகளை மனதில் நிலைநிறுத்தி மீண்டும் இணைவதற்கு முடி வெடுத்தேன்.

    என்னிடம் தூது வந்தவர்கள் சொன்னது, கட்சிக்கு நானும், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமியும் என்று கூறினார்கள். நானும் ஒத்துக் கொண்டேன். ஆனால், ஒத்துக் கொண்டதற்கு மாறாக, கையெழுத்திடும் அதிகாரம் உடைய இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தனக்குத் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார். கட்சி நலன் கருதி நான் அதனை ஏற்றுக் கொண்டேன்.

    துணை முதலமைச்சர் பதவியை பொறுத்தவரையில், முதலில் நான் வேண்டாம் என்றுதான் சொன்னேன். இருப்பினும், பிரதமர் என்னை டெல்லிக்கு நேரில் அழைத்து வற்புறுத்தியதன் காரணமாக அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டேன்.

    2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது, தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத்தை மட்டும் நான் வெற்றி பெற வைத்தேன் என்றும், அதே பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கழக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்திருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. 39 பாராளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, தேனி தொகுதியில் மட்டும் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எடப்பாடி பழனிசாமியால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் இதுபோன்ற குற்றச்சாட்டினை என்மீது சுமத்தி இருக்கிறார் . இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு.

    ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று நான் சொன்னதற்குக் காரணம் மக்களுக்கு அதில் சந்தேகம் இருந்ததால்தான். மக்களின் கருத்தைத்தான் நான் பிரதிபலித்தேன். அதே போல, நீதியரசர் ஆறு முகசாமி விசாரணை ஆணையம் முன்பு நான் ஆஜராகவில்லை என்று கூறியிருக்கிறார். இது முற்றிலும் தவறு.

    2022-ம் ஆண்டு இரு முறை நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி என்னுடைய விளக்கத்தை நான் அளித்தேன். இதுதான் உண்மை நிலை. எனவே, பொத்தாம் பொதுவாக நான் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை என்று கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி.

    நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பற்றி கருத்து தெரிவிக்கும் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு குறித்து வாய் திறக்க ஏன் மறுக்கிறார்? இந்த வழக்கினை விரைந்து முடிக்க வேண்டும் என என்னுடைய தலைமையில் நான் ஆர்ப்பாட்டம் நடத்தினேன். கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு குறித்து போராட்டம் நடத்த எடப்பாடி பழனிசாமி ஏன் தயங்குகிறார்?

    23-6-2022 அன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக் குழுக் கூட்டத்தில், பொதுக் குழு அல்லாத சமூக விரோதிகளையும், ரவுடிகளையும் உட்கார வைத்து, வரவு-செலவு திட்ட அறிக்கையைகூட என்னால் வாசிக்க முடியாத நிலையை உருவாக்கி, ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மேடையில் இருந்த என்மீதும், எனக்கு ஆதரவாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீதும் தண்ணீர் பாட்டில்களை வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்த மூல காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.

    11-7-2022 அன்று, வானகரத்தில் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றக் கொண்டிருந்த சமயத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் எட்டு பேரையும், சமூக விரோதிகள் 300 பேரையும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி, தலைமைக் கழகத்தின் கதவைப் பூட்டச் சொல்லி, வன்முறையை உருவாக்கியவர் எடப்பாடி பழனிசாமி. தலைமைக் கழகம் அமைந்திருக்கும் தெருவிற்குள் செல்ல முடியாத அளவுக்கு நாங்கள் சென்ற வாகனங்களின்மீது கற்கள் வீசப்பட்டன. நாங்கள் அந்தத் தெருவில் உள்ள இந்தியன் வங்கி அருகில் நின்று கொண்டிருந்த நேரத்தில், காவல் துறையினர் வந்ததன் காரணமாக அங்கு குழுமியிருந்த சமூக விரோதிகள் அங்கிருந்து சென்றதையடுத்து, திறந்திருந்த தலைமைக் கழகத்திற்குள் நாங்கள் சென்றோம். இதுதான் உண்மை நிலை.

    'இரட்டைத் தலைமை' இருந்தக் காலகட்டத்தில், 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. 22 இடங்களில் போட்டியிட்டு ஓர் இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. மட்டும் பெற்ற வாக்கு விகிதம் 19.39 விழுக்காடு. கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 31.05.

    'ஒற்றைத் தலைமை' வந்த பிறகு, 2024-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. 34 இடங்களில் போட்டியிட்டு ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 7 தொகுதிகளில் டெபாசிட் பறிபோய் இருக்கிறது.

    12 இடங்களில் 3-வது இடத்திற்கும், ஒரு இடத்தில் நான்காவது இடத்திற்கும் சென்றது. விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் வெறும் 5,267 வாக்குகளை மட்டுமே பெற்றது. 2019-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அ.தி.மு.க. இழந்துவிட்டது.

    'இரட்டை இலை' சின்னம் இல்லாதிருந்தால், நிலைமை மிகவும் மோசமாக இருந்திருக்கும். இதுதான் அ.தி.மு.க.வின் இன்றைய நிலைமை. நான் இந்த அறிக்கையை விரிவாக வெளியிடுவதற்குக் காரணம், நேற்றைய தினம் மதுரை விமான நிலையத்தில் உண்மைக்குப் புறம்பான, முரண்பட்ட கருத்துகளை எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததுதான்.

    என்னைப் பொறுத்த வரையில், அ.தி.மு.க. ஒன்று பட வேண்டும், புரட்சித் தலைவியின் ஆட்சியை 2026-ம் ஆண்டு அமைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இந்த விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், தலைமை மாற்றப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

    தொடர் தோல்வியை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையை தொண்டர்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்தத் தலைமை தொடர்ந்தால், அ.தி.மு.க. மாபெரும் வீழ்ச்சியைத்தான் சந்திக்கும். பிளவுபட்டு இருக்கின்ற கழகம் இணைந்தால்தான் வலுப்பெறும். இதனை மனதில் வைத்துத்தான் கழகம் இணைய வேண்டு மென்ற கருத்தினை நான் சொல்லி வருகிறேன்.

    நான் எந்த நேரத்திலும் என்னை கட்சியில் சேர்க்கு மாறு கோரிக்கை வைக்காத நிலையில், 'என்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்' என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.

    என்னைப் பொறுத்த வரையில், எந்தக் காலத்திலும் நான் எடப்பாடி பழனிசாமியிடம் யாசகம் கேட்க மாட்டேன். எனக்கு அதற்கான அவசியமும் இல்லை. கட்சி இணைவதற்கு நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். கட்சி இணைய எடப்பாடி பழனிசாமி எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாரா என்பதுதான் என் கேள்வி.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பதை தொண்டர்களும், பொது மக்களும் விரும்பவில்லை. இதனை புரிந்து கொண்டு, அவர் பதவியில் இருந்து விலகினால் நன்றாக இருக்கும். தாமாக பதவி விலக எடப்பாடி பழனிசாமி மறுக்கும்பட்சத்தில், தொண்டர்களும், பொதுமக்களும் இணைந்து அதற்கான சூழ்நிலையை உருவாக்குவார்கள்.

    இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

    • ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கட்சியில் இணைய முயற்சித்து வருகிறார்.
    • அ.தி.மு.க.வை அழிப்பது என்பது எந்த சக்தியாலும் முடியாது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அக்கட்சியில் இணைய முயற்சித்து வருகிறார். ஆனால் அவரை ஒரு போதும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

    இந்த நிலையில் சிவகங்கையில் கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், "அ.தி.மு.க.வை அழிப்பது என்பது எந்த சக்தியாலும் முடியாது. தற்போது அ.தி.மு.க.வில் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைவரும் அ.தி.மு.க.வில் இணைவோம்" என்று கூறினார்.

    இதற்கு மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி விரிவாக பதில் அளித்தார். ஓ.பன்னீர் செல்வம் குறித்து அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் சேர்வதற்கு ஓ.பி.எஸ். நினைக்கலாம். ஆனால் எங்கள் தலைமை அதற்கு உடன்படாது. ஏற்கனவே பொதுக்குழு உறுப்பினர்களால் ஏக மனதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு அதி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் உள்பட 3 பேர் நீக்கப்பட்டுவிட்டார்கள்.

    ஓ.பி.எஸ். எப்போதுமே இயக்கத்திற்கு விசுவாசமாக இருந்த வரலாறு கிடையாது. புரட் சித் தலைவி அம்மா முதன் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் போது போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    அம்மாவை எதிர்த்து திரையுலகத்தை சேர்ந்த வெண்ணிற ஆடை நிர்மலா போட்டியிடுகிறார். அவருக்கு தலைமை ஏஜெண்டாக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அப்போதே அம்மாவுக்கு அவர் விசுவாசமாக இல்லை. சிலருடைய சிபாரிசால் கட்சிக்குள் நுழைந்தார். மீண்டும் அந்த துரோகத்தை செய்ய ஆரம்பித்து விட்டார். அதற்கு பிறகு அம்மா அவரை முதல்-அமைச்சராக்கி னார்.

    அம்மா இறந்த பிறகு உடனடியாக அவர் தர்ம யுத்தத்தை மேற்கொண்டார். மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என்று தலைமை நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள் சொன்னார்கள். அதன்படி நாங்கள் ஒன்றாக இணைகின்ற போது பல கோரிக்கைகளை அவர் வைத்தார்.

    அதில் ஒன்று அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றார். அதையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு அதற்கு ஆணையத்தை நியமித்தோம். யாரை சுட்டிக்காட்டி அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும்.

    ஒருவர் மீது குற்றம் சுமத்தி அதை விசாரித்தே ஆக வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தினார். அந்த கட்டாயத்தின் பேரில் ஆணையத்தை அமைத்தோம். ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு அந்த ஆணையம் பல முறை நோட்டீஸ் கொடுத்தும் அவர் ஆஜராகவில்லை.

    அதற்கு பிறகு 2019-ல் பாராளுமன்ற தேர்தல் வந்தது. அப்போது தனக்கு முக்கிய பொறுப்பு வேண்டும் என்று கேட்டார். ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வேண்டும் என்று கேட்டார். அவருக்கு வெறும் 3 சதவீதம் பேர் தான் ஆதரவு இருந்தது.

    10 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் ஆதரவாக இருந்தார்கள். 97 சதவீதம் பேர் எங்கள் பக்கம் இருந்தாலும் கூட எங்களுடைய மூத்த நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்காக ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தோம். துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்தோம். நல்ல இலாகா கொடுத்தோம். அப்போதும் அவருக்கு மன திருப்தியில்லை.

    2019 பாராளுமன்ற தேர்லில் அவரது மகனை தேனி தொகுதி வேட்பாளராக அறிவித்தார்கள். அதை மட்டும் தான் அவர் கவனித்தார். இடைத்தேர்தலில் அவர் அக்கறையே செலுத்தவில்லை. அதோடு ஆண்டிப்பட்டி, பெரிய குளம் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி தொகுதியில் அவரது மகன் அதிக ஓட்டுகள் பெறுகிறார்.

    அ.தி.முக. வேட்பாளர் குறைவான ஓட்டுகளை பெறுகிறார். அப்படி என்றால் அவர் இந்த இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கிறாரா? ஏன் என்றால் அதில் வெற்றி பெற்று வந்தால் கூட ஆட்சியை காப்பாற்ற முடியும்.

    ஆனால் ஆட்சியை பற்றி அவருக்கு கவலையில்லை. எங்களுடைய தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று வருகின்ற போது சில பிரச்சினைகள் வந்தது. வாக்குவாதம் வந்தது.

    அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் அவரை வீடு தேடி சென்று ஒற்றுமையாக இருப்போம் என்று பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் ஒத்துக்கொள்ள வில்லை.

    அதன் பிறகுதான் அவர் நீதிமன்றம் சென்றார். பின்னர் பொதுக்குழு கூடியது. ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த போது ரடிவுகளை அழைத்து சென்று கல்லால் கட்சிக்காரர்களின் கார் களை நொறுக்கி, தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து கதவை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை சூறையாடி பொருட்களை திருடி சென்று விட்டார்.

    இவரை ஒருங்கிணைப் பாளராக ஆக்கிய கொடு மைக்காக தொண்டர்கள் பல பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள். அவரை அடித்து விட்டார்கள் என்று புகார் கொடுத்து பல பேர் 15 நாட்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வந்தார்கள்.

    ஆக இப்படிப்பட்டவர், சுயநலவாதி. அதற்கு பிறகு வழக்கு போட்டார். இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கிறார். எந்தவிதத்தில் நியாயம். அப்புறம் நீதிமன்றம், அதற்கு பிறகு தேர்தல் ஆணையம் எங்கள் தரப்பில் தான் நியாபம் இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அதன்பிறகு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போதாவது இந்த கட்சிக்கு விசுவாசமாக இருப்பார் என்று பார்த்தால் எங்களுடைய வேட்பாளரை எதிர்த்து இரட்டைஇலையை எதிர்த்து ராமநாதபுரத்தில் நிற்கிறார். இவர் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பார்.

    கட்சிக்காரர்களை எப்படி அரவணைப்பார். இவர் எப்போதுமே அ.தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருந்ததே கிடையாது. அவர் சுயநலம் படைத்தவர். அ.தி.மு.கவில் அவர்களை இணைக்கின்ற பேச்சுக்கு ஒரு சதவீதம் கூட இடம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்தும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
    • விவசாயிகளுக்கான நெல் கொள்முதல் விலையை உயர்த்த தி.மு.க. அரசு தயக்கம் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2021-ம் ஆண்டு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், நெல்லுக்கான ஆதார விலை குறைந்தபட்சம் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்தும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தற்போது, தமிழ்நாட்டில் சாதாரண நெல் குவிண்டால் 2,265 ரூபாய்க்கும், சன்ன ரக நெல் 2,310 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

    விவசாயிகளுக்கான நெல் கொள்முதல் விலையை உயர்த்த தி.மு.க. அரசு தயக்கம் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடிக் கவனம் செலுத்தி, வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, நெல் கொள்முதல் விலையை உடனடியாக குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
    • இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    சென்னை:

    பக்ரீத் பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்து வருமாறு:-

    நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம்-சகோதரத்துவம்-அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள்.

    ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை 'ஈத்துவக்கும் இன்பம்' என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இசுலாமியப் பெருமக்களுக்கு வழிகாட்டுவதே இந்த பக்ரீத் பெருநாள்! நபிகள் நாயகத்தின் போதனைகள் அன்றாட வாழ்வில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறவழிக்கான அறிவுரைகளாகவே அமைந்திருக்கின்றன.

    நபிகள் நாயகத்தின் அத்தகைய அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இசுலாமிய மக்கள் அனைவரும் இந்த பக்ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    இறை நம்பிக்கை உள்ள வர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

    ஓ.பன்னீர்செல்வம்

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்:- "ஒற்றுமையே உயர்வு தரும்" என்பதற்கேற்ப, அனைவர் வாழ்விலும் ஒன்றுமை உணர்வுமே லோங்கிட வேண்டும், வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்பதை தெரிவித்து எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:-

    இஸ்லாமிய சமுதாயத்தினரின் உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    பக்ரித் திருநாள் சொல்லும் பாடத்தை புரிந்து கொண்டால், உலகில் எங்கும் வெறுப்பு, மோதல், வன்முறை நிலவாது; மாறாக, எங்கும் அன்பு, சகோதரத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவை மட்டுமே தழைத்தோங்கும். அத்தகைய நிலையை ஏற்படுத்த கடுமையாக உழைப்போம்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, பெருந் தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், விஜய்வசந்த் எம்.பி., ஐ.ஜே.கே. தலைவர் ரவி பச்சமுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக சிகிச்சை பெற்று விரைவில் குணம் பெற வழிவகை ஏற்படும்.
    • மக்களின் உயிருடன் விளையாடும் தி.மு.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகை நகரில் உள்ள மக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, மருத்துவ சிகிச்சை பெறவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். திடீர் உடல் நலக்குறைவோ, மாரடைப்போ, விபத்தின் காரணமாக எலும்பு முறிவு, தலைக்காயம் ஆகியவை ஏற்பட்டாலோ, 15 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும்போது உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

    இரண்டு மருத்துவமனைகளும் முழு வீச்சில் செயல்பட்டால்தான், நோய்களினாலும், விபத்துகளினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக சிகிச்சை பெற்று விரைவில் குணம் பெற வழிவகை ஏற்படும். சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசு மருத்துவமனையை மூடுவது என்ற தி.மு.க. அரசின் செயல்பாடு "அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்" என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. மக்களின் உயிருடன் விளையாடும் தி.மு.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

    நாகை நகரில் வசிக்கும் மக்களின் துன்பங்களைப் புரிந்து கொண்டும், நேரத்தின் அருமையை கருத்தில் கொண்டும், நிதியைப் பற்றி யோசிக்காமல் மக்களின் உயிரை மட்டுமே கவனத்தில் கொண்டு, 150 ஆண்டு கால பழமைவாய்ந்த நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை நாகை நகரில் தொடர்ந்து முழுவீச்சில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.
    • கூட்டணி விசயத்தில் சரியான முடி வெடுக்கவில்லை என்ற எண்ணம் இருக்கிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.

    இந்த சூழ்நிலையில் அடுத்து வரும் 2026 சட்ட மன்ற தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.

    தேர்தலில் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி விசயத்தில் சரியான முடி வெடுக்கவில்லை என்ற எண்ணம் இருக்கிறது.

    இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் புகழேந்தி, பழனி சாமி ஆகிய 3 பேரும் இணைந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு என்று உருவாக்கி கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    இதுபற்றி அந்த தரப்பினர் கூறும்போது, கட்சியினர் அனைவரையும் ஒருங்கி ணைத்து கட்சியை பலப் படுத்த வேண்டியது கட்டாயம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் இன்று மரியாதை செலுத்தி விட்டு அந்த பணியை தொடங்கு கிறோம்.

    எல்லா தரப்பையும் சந்தித்து பேசி இணைப்பதற்கு தடையாக இருக்கும் பிரச்சினைகளை அறிந்து அதை களையவும் திட்டமிட்டுள்ளோம். இதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார்கள்.

    அதைத் தொடர்ந்து சுமார் 10 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்படும். இந்த குழுவினர் அடுத்த கட்ட பணியை தொடர்ந்து செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

    இந்த புதிய முயற்சி பலிக்குமா? என்பது பெரிய கேள்விக்குறி. ஏனெனில் பிரிந்து சென்ற ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோரையும் ஒன்று சேர்க்கவே இந்த குழு விரும்புகிறது.

    ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிப்பாரா? என்று தெரியவில்லை. நேற்று ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை இணைக்க வாய்ப்பு உண்டா? என்று அவரிடம் கேட்டதற்கு போனவர்கள் போன வர்கள்தான் என்றார்.

    மேலும் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜனதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, 'தேசிய கட்சிகள் தேர்தலுக்கு மட்டும் நமமை பயன்படுத்திக் கொள்கின்றன.

    அதன் பிறகு கண்டு கொள்வதில்லை. இனிமேல் பா.ஜனதாவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ளார். இந்த சிக்கல்களுக்கு தீர்வு கண்டு சமரச முயற்சியில் எவ்வாறு வெற்றி பெறுவார்கள் என்பது போக போகத்தான் தெரியும் என்றனர் கட்சி நிர்வாகிகள்.

    • ஒரே வழி அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும்.
    • காஞ்சிபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண். 164-ல், மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தி.மு.க. அரசு உருவாக்கும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும், ஒரு அரசு மருத்துவக் கல்லூரியைக் கூட உருவாக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், 99 சதவீதம் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

    ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை துவங்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளாகியும் இதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. இப்பொழுதுதான், மேற்படி ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரியை அமைக்க 25 ஏக்கர் நிலத்தை தேடும் பணியில் தி.மு.க. ஈடுபட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்தவுடனேயே இதற்கான பணியை மேற்கொண்டிருந்தால், தற்போது ஆறு மருத்துவக் கல்லூரிகள் உருவாகி, அதன்மூலம் கிட்டத்தட்ட 900 மருத்துவ இருக்கைகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்து இருக்கும். இதைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது.

    ஏழை-ஏளிய மாணவ, மாணவியர் அதிகளவில் மருத்துவராக வேண்டுமானால், அதற்கு ஒரே வழி அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும். இதனை முதலமைச்சர் மனதில் நிலைநிறுத்தி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் வெளிமுகமை மூலம் நிரப்பப்படுகின்றன.
    • 65-வயதைத் தாண்டியவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பொதுவாக, அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, மருத்துவ தேர்வாணையத்தின் மூலமாகவோ, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ அல்லது பத்திரிகை விளம்பரத்தின் மூலமாகவோ நிரப்பப்படும்.

    இந்த முறையைக் கடைபிடிப்பதன்மூலம் அரசுப் பணிகளில் இருப்போருக்கு பதவி உயர்வு ஏற்படுவதோடு, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நிலை தி.மு.க. ஆட்சியில் நிலவுகிறது.

    தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், சார்புச் செயலாளர் நிலை முதல் செயலாளர் நிலைவரை ஓய்வு பெற்றவர்கள் அதே பணியில் அமர்த்தப்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், 65-வயதைத் தாண்டியவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர, அனைத்துத் துறைகளிலும் கடைநிலை ஊழியர் முதல் உதவியாளர் பதவி வரையிலான பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.

    பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் வெளிமுகமை மூலம் நிரப்பப்படுகின்றன. இதன் காரணமாக, அங்குள்ளவர்களுக்கு பதவி உயர்வு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் தி.மு.க. அரசால் பறிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் சமூகநீதி தாரை வார்க்கப்பட்டு உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஓய்வு பெற்றவர்களை பணியிலிருந்து உடனடியாக நீக்கிவிட்டு அந்த இடங்களை பதவி உயர்வு மூலம் பணியில் உள்ளவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பூங்கொத்து வழங்கி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
    • பைத்தியக்காரர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவு அடுத்த மாதம் வெளியானதும் அ.தி.மு.க.வில் பிரிவு ஏற்படும் என்றும், அப்போது கட்சிக்கு தலைமை தாங்க போவது செங்கோட்டையனா? அல்லது எஸ்.பி.வேலுமணியா? என தெரிய வரும் என்றும் தி.மு.க. அமைச்சர் ரகுபதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார்.

    இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த வைத்திலிங்கத்தை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வலுவான கூட்டணி அமைக்க தவறி விட்டதால் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாகவே எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் இருப்பதாகவும், சமூக வலை தளங்களில் செய்திகள் உலா வந்தன.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடிய போது அ.தி.மு.க.வில் உள்ள பலரும் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து விட்டு வந்தனர்.

    ஆனால் எஸ்.பி.வேலுமணி மட்டும் செல்லவில்லை. அதற்கு பதிலாக தனது எக்ஸ் வலைதளத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

    எக்ஸ் வலைதளத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த எஸ்.பி.வேலுமணி எதற்காக நேரில் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வில்லை என்று அ.தி.மு.க.வினர் பேசத் தொடங்கினார்கள்.

    இந்த நிலையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரான எஸ்.பி.வேலுமணி நேற்று சென்னை வந்து அடையாரில் இருந்த எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    தன்னுடன் வந்திருந்த ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைத்து ஆளுயர ஆப்பிள் மாலை அணிவித்தார். இதன் மூலம் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவிக்கையில், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை திறம்பட நடத்துவதை சகித்துக்கொள்ள முடியாமல் சில பைத்தியக்காரர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்து அனைவரும் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத் ேதாம். அவரது தலைமையில் கட்சி வீறுநடை போடுவதாகவும் தெரிவித்தார்.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில் அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய ஆலமரம் அதன் கீழ் எல்லோரும் இருக்கிறோம். இங்கு பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

    செங்கோட்டையனின் பேரன் திருமணம் வரவேற்பு கோவையில் ஜூன் 16-ந் தேதி நடைபெறுகிறது. இந்த திருமணத்தை எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி நடத்துகிறார்.

    எனவே கட்சி வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வெளியில் பிதற்றுகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்.

    இதேபோல் மூத்த தலைவர்களும் தி.மு.க.வை சாடி உள்ளனர். 

    ×