என் மலர்
நீங்கள் தேடியது "Nipah virus"
- 38 பேர் அதிக ஆபத்துள்ள கண்காணிப்பிலும், 133 பேர் அதிக ஆபத்துள்ளவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நண்பர்கள், உறவினர்களை பார்ப்பதை குறைக்க வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் கடந்த சில மாதங்களாக அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக 2 பேர் இறந்துள்ளனர். இதனை தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
குறிப்பாக மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் மாவட்டத்தில் தான் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்ததில் 609 பேர் நிபா தொடர்பு பட்டியலில் இருப்பது தெரியவந்தது. இதில் 38 பேர் அதிக ஆபத்துள்ள கண்காணிப்பிலும், 133 பேர் அதிக ஆபத்துள்ளவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மலப்புரத்தில் 207 பேரும், பாலக்காட்டில் 286 பேரும், கோழிக்கோட்டில் 114 பேரும், எர்ணாகுளத்தில் 2 பேரும் நிபா தொடர்பு பட்டியலில் அடங்குவார்கள். இந்த பகுதிகளில் சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. காய்ச்சல் கண்காணிப்பை மேற்கொண்டு வரும் அவர்கள், தேவையற்ற மருத்துவமனை வருகைகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நண்பர்கள், உறவினர்களை பார்ப்பதை குறைக்க வேண்டும், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள், நோயாளிகள் அவர்களது உறவினர்கள் எல்லா நேரங்களிலும் முககவசம் அணியவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
- தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- தமிழ்நாடு அரசு அனைத்து விதமான நோய் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
சென்னை:
தமிழ்நாடு பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கேரளாவின் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் சமீபத்தில் 'நிபா' வைரஸ் நோய் தாக்கங்கள் பதிவாகி உள்ளதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு நோய் பரவல் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
தமிழகத்தில் இதுவரை எந்தவித 'நிபா' வைரஸ் நோய் தாக்கங்கள் பதிவாகவில்லை என்றாலும், பொது மக்கள் பதற்றமின்றி விழிப்புடன் இருந்து அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
'நிபா' வைரஸ் என்பது விலங்கியல் மூலம் பரவும் ஒரு நோய் தொற்றாகும். இது, பழ வகை வவ்வால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. வவ்வாலின் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை உண்ணுவதன் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலமாகவோ நோய் தொற்று பரவுகிறது.
காய்ச்சல், தலைவலி, வாந்தி, குழப்பம், தூக்கமின்மை, மூச்சுதிணறல் அல்லது மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் உள்ளதா? என மக்கள் கவனிக்க வேண்டும். குறிப்பாக, கேரளாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்த பிறகு அல்லது நோய்வாய்ப்பட்ட ஒருவரை தொடர்பு கொண்ட பிறகு, இதுபோன்ற அறிகுறிகள் யாரிடமாவது தோன்றினால் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்.
கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களை, சிறப்பு கவனம் செலுத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், இந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவ குழுக்கள் சந்தேகத்திற்கிடமான நோய் தொற்றுகளை முன்கூட்டியே கண்டறிந்து செயல்பட தயார் நிலையில் உள்ளனர். தமிழ்நாடு அரசு அனைத்து விதமான நோய் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனவே, 'நிபா' வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய தேவையில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டிற்குள் நிபா வைரஸ் நுழையாமல் தடுக்க வேண்டியது தி.மு.க. அரசின் கடமை ஆகும்.
- நிபா வைரஸ் தொற்று தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சிறுவன் ஒரு மாதத்திற்கு முன்பு நிபா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வந்துள்ளது.
தமிழ்நாட்டை ஒட்டி பாலக்காடு மாவட்டம் இருப்பதால், நிபா வைரஸ் தொற்று தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாட்டிற்குள் நிபா வைரஸ் நுழையாமல் தடுக்க வேண்டியது தி.மு.க. அரசின் கடமை ஆகும். எனவே, கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் நுழைபவர்களை கண்காணிக்கும் வகையில், மாநில எல்லையில் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவாமல் இருப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரத்த மாதிரிகள் உடனடியாக புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
- நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண காவல்துறையின் உதவியை நாடியுள்ளோம்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த 2018 மே மாதத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது.
இந்த நிலையில் மலப்புரம் மற்றும் பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழக்கமான பரிசோதனையின்போது 2 பேருக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து இவர்களின் ரத்த மாதிரிகள் உடனடியாக புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த வைரஸ் தொடர்பாக மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வேறு யாருக்கேனும் இந்த அறிகுறி உள்ளதா என கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 26 சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "நிபா வைரஸ் பரவலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அவற்றை பலப்படுத்தியுள்ளோம். நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண காவல்துறையின் உதவியை நாடியுள்ளோம். மக்களுக்கு உதவ ஹெல்ப் லைன்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய வாரங்களில் இயற்கைக்கு மாறான மரணம் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம்" என்றார்.
- பாதிப்பு ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
- கேரளாவில் நிபா வைரஸ் முதன்முதலாக கடந்த 2018-ம் ஆண்டு பதிவானது.
திருவனந்தபுரம்:
கொரோனா பரவத்தொடங்கியபோது இந்திய அளவில் கேரள மாநிலத்தில் தான் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவ தொடங்கியது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பரவியது. காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகிய ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சில மாவட்டங்களில் உயிர் பலியும் ஏற்பட்டது.
பின்பு கேரளாவில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அங்கு நிபா வைரஸ் தொற்று பரவுவதாகவும், அந்த தொற்று பாதித்து 2 பேர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரை பகுதியை சேர்ந்த 49 வயது மதிக்கத் தக்க ஒரு நபர் கடந்த மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு எந்தவித காய்ச்சல் பாதிக்கப்பட்டிருந்தது என்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்துள்ளது.
இந்நிலையில் அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக காதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
4 மற்றும் 9 வயதுடைய 2குழந்தைகள், 25 மதிக்கத்தக்க ஒருவர் என 3பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அவர்களிடமிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது.
அதேபோல் வடகரை அருகே உள்ள திருவள்ளூரை சேர்ந்த 40வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காய்ச்சல் பாதித்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் சிகச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இறந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களாக கண்டறியப்பட்டவர்களிடம் சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகள் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருககிறது. அந்த பரிசோதனை முடிவு வந்தபிறகே, இறந்தவர்கள் 2 பேரும் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்தார்களா? என்பது தெரியவரும்.
கோழிக்கோடு பகுதியில் 2 பேர் காய்ச்சல் பாதித்து இறந்திருக்கும் சம்பவம் குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் அவரச உயர்மட்ட கூட்டத்தை கூட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
கோழிக்கோட்டில் இறந்த 2பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. சுகாதாரத்துறையின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரளாவில் நிபா வைரஸ் முதன்முதலாக கடந்த 2018-ம் ஆண்டு பதிவானது. அப்போது கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பாதித்து இருவர் உயிரிழப்பு.
- மத்திய சுகாதாரத்துறை மந்திரி நிபா வைரஸ் பாதிப்பை உறுதிப்படுத்தியது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இதுதவிர கேரளா மாநிலத்திற்கு இரண்டு பேர் அடங்கிய சுகாதார குழுவினரை அனுப்பி வைத்துள்ளார். இந்த குழு கேரளா மாநிலத்தில் நிலவும் சூழல் பற்றி ஆய்வு செய்ய உள்ளது.
மேலும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதை தொடர்ந்து, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கேரளா மாநில சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. இதோடு மாவட்டம் முழுக்க எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.
நிபா வைரஸ் மூலம் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- கோழிக்கோட்டில் நிபா வைரசால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இது குறித்து மாநில அரசு மிகவும் தீவிரமாகக் கவனித்து வருகிறது என முதல் மந்திரி தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் 2 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் இறந்ததற்கு காரணம் நிபா வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த நிபா வைரஸ் தொற்று காரணமாக, இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது.
இருவரும் உயிரிழந்ததற்கு நிபா வைரஸ் தான் காரணம் என்பதை உறுதி செய்யும் வரை காத்திருக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், கோழிக்கோட்டில் பதிவான இரண்டு மரணங்களை மாநில அரசு மிகவும் தீவிரமாகக் கவனித்து வருவதாகவும், சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பேஸ்புக் பக்கத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவனமாக இருப்பது நிலைமையைச் சமாளிக்கத் தேவையான வழியாகும். சுகாதாரத்துறை தயாரித்துள்ள செயல் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
கேரளாவில் நிபா வைரஸ் முதன்முதலாக கடந்த 2018-ம் ஆண்டு பதிவானது. அப்போது கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- நிபா வைரஸ் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
உடுமலை:
நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் நோய் தமிழகத்தில் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதையொட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள ஒன்பதாறு சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு எந்த இடத்திலும் இல்லை. ஆனாலும் தமிழக-கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நிபா வைரஸ் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றனர்.
- நிபா வைரஸை கட்டுப்படுத்த கேரளா அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- கார்களில் வரும் பொதுமக்களையும் சுகாதாரத்துறையினர் தடுத்து சோதனை நடத்தினார்கள்.
நாகர்கோவில்:
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நிபா வைரசுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். நிபா வைரஸை கட்டுப்படுத்த கேரளா அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள 4 சோதனை சாவடிகளில் சோதனை நடந்து வருகிறது. களியக்காவிளை, கோழிவிளை, நெட்டா, பளுகல் சோதனை சாவடிகளில் போலீசாருடன் இணைந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வரும் பஸ்களை தடுத்து நிறுத்தி பஸ் பயணிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் கார்களில் வரும் பொதுமக்களையும் சுகாதாரத்துறையினர் தடுத்து சோதனை நடத்தினார்கள். மருத்துவ குழுவினர் அங்கேயே முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன பணிகளை குமரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து கலெக்டர் ஸ்ரீதர் சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
கேரளாவில் இருந்து காய்ச்சல் பாதிப்புடன் குமரி மாவட்டத்திற்கு வருபவர்கள் உடனடியாக அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சென்று சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் தொழிலாளர்களும் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 19 பகுதிகளில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகின்றன.
- கூடலூரில் அமைய உள்ள மாவட்ட மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன ஆஸ்பத்திரி அமைக்கப்பட உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா அரசு ஆஸ்பத்திரி ரூ.31 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது.
விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. எனவே யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. கேரள மாநிலத்தின் அண்டை மாவட்டங்களாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவின் எல்லையோர பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் மருத்துவ அதிகாரிகள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை கண்காணித்து காய்ச்சல் அறிகுறியுடன் எவரேனும் உள்ளனரா என்பது குறித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு இருப்போருக்கு உடனடியாக சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கூடலூர் தாலுகா அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. இதன்படி அந்த மருத்துவமனை, மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சர் ரூ.31 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளார்.
தமிழகத்தில் 19 பகுதிகளில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் மாநில அளவில் மேலும் 6 புதிய மாவட்ட மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.1100 கோடி மதிப்பில் கட்டிடப்பணிகள் நடந்து வருகின்றன.
கூடலூரில் அமைய உள்ள மாவட்ட மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன ஆஸ்பத்திரி அமைக்கப்பட உள்ளது. மேலும் 7 படுக்கைகளுடன் டயாலிசிஸ் மையமும், 10 படுக்கைகளுடன் மனநல மருத்துவ மையமும், அவசர சிகிச்சை மையமும், 14 படுக்கைகளுடன் எலும்பு முறிவு சிகிச்சை மையமும் அமைய உள்ளது. இதுதவிர கண் சிகிச்சை, அறுவை சிகிச்சை, மகப்பேறு மையம் மற்றும் பச்சிளங்குழந்தைகள் பிரிவு ஆகியவை தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாளையாறு சோதனைச்சாவடி வழியாக உள்ளூருக்கு வரும் தமிழக வாகனங்களும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
- நீலகிரி மாவட்டத்தில் சோலாடி, பாட்டவயல், நம்பியார் குன்னு உள்ளிட்ட 7 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவை:
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலியானதை தொடர்ந்து தமிழகம்-கேரள எல்லைகளில் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் யாராவது காய்ச்சலுடன் வருகிறார்களா? என்பது தொடர்பாக மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.
கேரளா மாநிலத்தின் எல்லைப்பகுதியில் கோவை, நீலகிரி மாவட்டங்கள் அமைந்து உள்ளன. எனவே இரு மாவட்டங்களிலும் உள்ள எல்லையோர சோதனைச்சாவடிகளில் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் வாளையாறு சோதனைச்சாவடி, ஆனைமலை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி உள்பட 13 பகுதிகள் கேரள மாநிலத்தின் எல்லையோரம் அமைந்து உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் நாடுகாணியில் சோதனைச்சாவடி உள்ளது. இதன் வழியாக கேரள வாகனங்கள் தமிழகத்துக்கு வந்து செல்கின்றன. எனவே நீலகிரியின் நாடுகாணி, கோவையின் வாளையாறு ஆகிய சோதனைச்சாவடிகளில் மருத்துவ அதிகாரிகள் குழுவினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ஒரு டாக்டர் தலைமையில் மருத்துவ பணியாளர்கள், 24 மணி நேரமும் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கேரளா மாநிலத்தில் இருந்து வாளையாறு சோதனைச்சாவடிக்கு வரும் வாகனங்களில் தீவிர விசாரணை நடத்தும் மருத்துவ குழுவினர், வண்டியில் இருக்கும் எவருக்காவது காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதனை செய்து உறுதிப்படுத்துகின்றனர். அதன்பிறகுதான் சம்பந்தப்பட்ட வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
யாருக்காவது காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவரை உடனடியாக திருப்பி அனுப்பும் பணிகளும் நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தை சேர்ந்த வாகனங்கள் வாளையாறு சோதனை சாவடிக்கு வரும்போது அதில் பயணிப்போருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்டவரின் வீட்டு முகவரி மற்றும் செல்போன் எண்களும் பதிவு செய்யப்படுகின்றன. பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு உடல்நிலை மேம்பாடு பற்றிய விவரங்களை அறியவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா கூறுகையில், கேரள மாநிலத்தின் எல்லையோர பகுதியில் அமைந்து உள்ள வாளையாறு சோதனைச்சாவடியில் மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு 3 ஷிப்ட்டுகளிலும் மருத்துவ ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களில் பயணிப்போருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கேரளாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
வாளையாறு சோதனைச்சாவடி வழியாக உள்ளூருக்கு வரும் தமிழக வாகனங்களும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
வாகனத்தில் இருக்கும் எவருக்கேனும் காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் இருந்தால், சம்பந்தப்பட்டவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கேரளாவில் நிபா வைரஸ் பரவலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள மேலும் 13 எல்லையோர பகுதிகளில் சுகாதாரத்துறை மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் சோலாடி, பாட்டவயல், நம்பியார் குன்னு உள்ளிட்ட 7 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
- கோழிக்கோடு மாவட்டத்தில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
- நிபா வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோழிக்கோடு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதன் முதலாக நிபா வைரஸ் பரவியது. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் அதிகமாக காணப்பட்டது. நிபா வைரஸ் தாக்குதலுக்கு 17 பேர் வரை பலியானார்கள்.
அதன் பிறகு 2021-ம் ஆண்டும் நிபா வைரஸ் பரவி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் தற்போது நிபா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. கோழிக்கோடு மாவட்டம் மருதோன்கரை மற்றும் அயன்சேரி பகுதியைச் சேர்ந்த இருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதித்து உயிர் இழந்தனர்.
ஒரு நபர் தனியார் மருத்துவமனையிலும், மற்றொருவர் அரசு ஆஸ்பத்திரியிலும் அடுத்தடுத்து இறந்தனர். மேலும் அவர்களது குடும்பத்தினரும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகினர். இதனால் காய்ச்சல் பாதித்து இறந்தவர்களுக்கு நிபா வைரஸ் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.
அதன் அடிப்படையில் இறந்த 2 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய தொற்று நோயியல் நிறுவனத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் காய்ச்சலால் இறந்த 2 பேருக்கும் நிபா வைரஸ் பாதித்து இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை உஷார்படுத்தப்பட்டது. சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கோழிக்கோடு மாவட்டத்தில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டது.
நிபா வைரஸ் தாக்குதலுக்கு பலியான 2 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட முதல் நபரின் குடும்பத்தினர், உறவினர்கள், பக்கத்து வீட்டினர் என தொடர்பில் இருந்தவர்கள் 158 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
அவர்களில் 31 பேர் மட்டுமே குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஆவர். மீதமுள்ள 127 பேரும் பலியானவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் ஆவர்.
அதேபோல் பாதிக்கப்பட்ட 2-ம் நபரின் தொடர்பு பட்டியலில் 100 பேர் உள்ளனர். அவர்களில் 10 பேர் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியான 2 பேரின் தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 168 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிபா வைரசுக்கு பலியானவர்களில் ஒருவரான மருதோன்கரையைச் சேர்ந்தவரின் மனைவி, 2 குழந்தைகள், மைத்துனர் மற்றும் 10 மாத கைக்குழந்தை ஆகிய 5 பேரின் மாதிரி சோதனைக்காக புனே ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 3 பேருக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களுக்கு, தீவிர சிகிச்சை தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நிபா வைரஸ் தொற்று பாதித்து இறந்தவர்கள் வசித்த பகுதி மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் இருக்கும் இடங்கள் முழுமையாக சுகாதாரத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தில் அயஞ்சேரி, மருதோன் கரை, திருவள்ளூர், குட்டியாடி, காயக்குடி, வில்லியம் பள்ளி, கவிழும்பாறை ஆகிய 7 ஊராட்சிகளில் 47 வார்டுகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த பகுதிகளுக்கு வேறு நபர்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அந்த பகுதிகளில் மருந்து கடைகள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யக்கூடிய கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அங்கு செயல்படும் வங்கிகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கக்கூடிய மக்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்கவும், முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிபா வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோழிக்கோடு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து கருவிகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.






