என் மலர்
நீங்கள் தேடியது "நெல் மூட்டைகள்"
- விவசாயிகளைக் காக்க வேண்டியது அரசின் கடமை.
- நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க உடனடியாக குடோன்கள் அமைத்துத் தந்து, நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்திருக்கிறது. மழையில் நனைந்ததால் நெல் மூட்டைகளின் விலை வீழ்ச்சியடையும் என்றும், அதைப் பாதுகாக்க குடோன்கள் இல்லாததால் வெட்டவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்ததால் மழையில் நனைந்து சேதமடைந்ததாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இதைப்போல் கோடைக்காலத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் இந்த நேரத்தில் கலப்பட சாயம் கலந்தாக ஒரு சர்ச்சையை எழுப்பி அதை மக்களும் நம்பி தர்பூசணி பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது விவசாயிகளுக்கு நஷ்டத்தையும், வேதனையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபோல ஒரு சர்ச்சையை எழுப்பி மக்களையும் குழப்பி ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் வாழ்க்கையும் பாதிப்படையச் செய்வது ஏற்புடையது அல்ல.
விவசாயிகளைக் காக்க வேண்டியது அரசின் கடமை. விவசாயிகளுக்குத் துணை நிற்போம் அவர்களை காப்போம். மேலும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க உடனடியாக குடோன்கள் அமைத்துத் தந்து, நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று 7 ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.
- ஒவ்வொரு மழையின் போதும் இவ்வாறு திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் நனைகின்றன.
செஞ்சி:
செஞ்சியில் இன்று அதிகாலை பெய்த மழையால் செஞ்சி கமிட்டியில் விவசாயிகள் கொண்டு வந்த பத்தாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு நெல் அறுவடை சீசன் என்பதால் அதிகமாக நெல் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று 7 ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று விற்பனைக்காக சுமார் 6 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்து திறந்த வெளியில்இறக்கி இருந்தனர். மேலும் நேற்று கொள்முதல் செய்யப்பட்ட வியாபாரிகளின் ஒரு பகுதி நெல் மூட்டைகளும் கமிட்டியின் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இன்று காலை 6 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் கமிட்டியில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இதனால் நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விலை குறைத்து போட படுமோ என்ற அச்சத்தில் வேதனை அடைந்தனர்.
ஒவ்வொரு மழையின் போதும் இவ்வாறு திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் நனைகின்றன. ஆகையால் செஞ்சி கமிட்டியில் ரூ.2 கோடி மதிப்பில் மேற்கூரை அமைப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்டுள்ளது. இப்பணியை விரைந்து தொடங்கி மேற்கூரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு.
- நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க கூடுதலாகக் கிடங்குகள் கட்ட தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் போது, எதிர்பாராத விதமாக ஆங்காங்கே ஏற்படும் மழை காரணமாக நெல் மூட்டைகள் சேதமடைவது என்பது வாடிக்கையாக நடந்து கொண்டே இருக்கின்றது.
அந்த வகையில், தற்போது கடலூர் மாவட்டம், புவனகிரியில் அண்மையில் பெய்த மழையால் ஆதிவராகநத்தம் பகுதியில் கட்டப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன.
இதேபோன்று, நாகப்பட்டினம் மாவட்டம், வாழ்குடி, பில்லாளி, மேல பூதனூர், திருமருகல் போன்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளது.
இதே நிலைமை தான் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நிலவுகிறது. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு. தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வருங்காலங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க கூடுதலாகக் கிடங்குகள் கட்ட தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நெல் மூட்டைகள் வீணானதற்கு தமிழக அரசே பொறுப்பேற்று அதற்கான இழப்பீட்டை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளைப் பாதுகாக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் டெல்டா மாவட்டமான நாகை மாவட்டப் பகுதியில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா குறுவை சாகுபடியில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. பல நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிவிட்டது.
நெல்கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் பாதுகாப்பற்ற முறையில் சுமார் 30 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்ததால், நேற்று பெய்த மழையில் நனைந்து முற்றிலும் சேதமுற்றன.
நெல் மூட்டைகள் வீணானதற்கு தமிழக அரசே பொறுப்பேற்று அதற்கான இழப்பீட்டை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளைப் பாதுகாக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வியாபாரிகள் ஆன்லைனில் கொள்முதல்
- ஈரப்பதமின்றி உலர்த்திக்கொண்டு வந்தால் கூடுதல் விலை கிடைக்கும் என கண்காணிப்பாளர் தகவல்
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 20 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் போளூர் 2-வது இடம் பெற்றுள்ளது.
இங்கு தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விவசாயிகளின் விளைபொருளான நெல்லை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இங்கு போளூர், கேளூர், செங்குணம், சனிக்குவாடி, உள்பட 40 கிராமங்களில் இருந்து தினசரி நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருகின்றன. நெல் மூட்டைகள் காஞ்சிபுரம், கலவை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, போன்ற ஊர்களில் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு நெல் மூட்டைகளை ஆன்லைனில் கொள்முதல் செய்து வருகின்றனர்.
விவசாயிகளின் விளை பொருளுக்கு நல்ல விலை கிடைப்பதாலும் உடனே பணம் தங்கள் கணக்கில் வரவு வருவதாலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று வரை 26 ஆயிரத்து நெல் மூட்டைகள் வந்து ரூ.4.25 கோடிக்கு விற்பனை ஆயின சன்னரக நெல் 75 கிலோ கொண்ட மூட்டைகள் 1க்கு ரூ.1,450 முதல் 2,000 வரையிலும், குண்டு ரகம் ரூ.1,300 முதல் 1,639 வரையிலும், கோ-51 ரகம் 1,280முதல் ரூ.1,549 வரையிலும் விற்பனை ஆயின.
மத்திய அரசின் மின்னனும் தேசிய வேளாண் சந்தை (இ.என்.ஏ.எம்) திட்டத்தின் கீழ் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது.
வியாபாரிகள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு நெல் மூட்டைகளை கொள்முதல் செய்கின்றனர். இதனால் போளூரில் உள்ள 8 கிடங்குகளில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்க மடைந்துள்ளன.
இடமில்லாமல் சுமார் 6 ஆயிரம் மூட்டைகள் களத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கண்காணிப்பாளர் என்.வெங்கடேசன் கூறியதாவது:-
விவசாயிகள் நெல் அறுவடை ஆனவுடன் ஈரப்பதமின்றி நன்கு உலர்த்திக்கொண்டு வந்தால் கூடுதலாக நல்ல விலை அவர்களுக்கு கிடைக்கும். என்று கூறி வருகின்றோம் என்றார்.
சமீபத்தில் இங்கு ஆய்வு செய்த முன்னாள் அமைச்சரும் போளூர் தொகுதி எம்.எல்.ஏ, -வுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நெல் சேமித்து வைக்க கிடங்கு கட்டித் தருவதாக உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் சம்பா பருவம் முடிந்து விவசாயிகள் அறுவடையில் மும்பரமாக ஈடுபட்டு வருவதால் மேலும் நெல் வரத்து அதிகரிக்கும் வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்வார்கள் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 61,260 நெல் மூட்டைகள் வந்தன. ரூ.9 லட்சத்து 85 ஆயிரத்துக்கு விற்பனை ஆயின.
- பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கு நெல் மூட்டைகள் அனுப்பப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது.
இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் திருவள்ளூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.
இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் புனல்குளம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2 ஆயிரம் டன் நெல், 240 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன.
பின்னர் சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் நெல்மூட்டைகள் ஏற்றப்பட்டு அரவைக்காக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் மூட்டைகள் குறித்து ஆய்வு செய்தார்.
- அம்மன்பேட்டையில் உள்ள நவீன அரிசி ஆலையில் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் உழவர் சந்தையில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
அப்போது அவர், காய்கறிகள் வரத்து, விலை நிர்ணயம் குறித்து கேட்டறிந்ததுடன் உழவர் சந்தை காய்கறி கழிவுகளை உரமாக்கும் எந்திரத்தின் செயல்பாட்டை யும் பார்வையிட்டார்.
மேலும் அவர், உழவர் சந்தையில் உள்ள விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழு கடைகளுக்கு சென்று விற்பனை நிலவரத்தை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படும் மாநில அக்மார்க் ஆய்வகத்தின் செயல்பாடு குறித்தும், சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் மூட்டைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் ஒரத்தநாடு ஒன்றியம் ஈச்சங்கோட்டை யில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்ற கலெக்டர் தீபக் ஜேக்கப், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து அவர், ஈச்சங்கோட்டையில் உள்ள நாற்றாங்கால் பண்ணை, திருவையாறு ஒன்றியம் அம்மன்பேட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலை ஆகியவற்றிலும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, வேளாண்மை துணை இயக்குனர் வித்யா, உதவி பொறியாளர் கலைமாமணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
- சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள் 7 ஆயிரம் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.
- மாயமான 7 ஆயிரம் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
சேலம்:
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்கு பரிசளித்து வரும் இந்த தி.மு.க. ஆட்சியில் தற்போது தருமபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7 ஆயிரம் நெல் மூட்டை மாயமாகி உள்ளதாக செய்தித்தாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சர்க்கரையை எரும்புதின்றது. சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள் 7 ஆயிரம் நெல் மூட்டைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
மக்கள் வரிப்பணத்தில் உல்லாச பயணம் சென்றிருக்கும் இந்த சர்க்கஸ் அரசின் முதலமைச்சர் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நெல் மூட்டைகள் மாயமாவதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாயமான 7 ஆயிரம் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நெல் மூட்டைகள் மாயமானதாக கூறப்பட்ட தருமபுரி வாணிப கழக திறந்த வெளி குடோனில் இன்று மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
- 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பது வதந்தியான செய்தியாகும்.
தருமபுரி:
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் நெல் மூட்டைகள் மாயமானதாக கூறப்பட்ட தருமபுரி வாணிப கழக திறந்த வெளி குடோனில் இன்று மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது கலெக்டர் சாந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு வாணிப கழக சார்பில் தருமபுரி மாவட்டத்திற்கு 22 ஆயிரம் நெல் மூட்டைகள் தஞ்சை, நாகப்பட்டிணம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இருந்து ரெயில் மூலம் வரவழைக்கப்பட்டது. இந்த நெல் மூட்டைகளை கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட வாணிப கழக திறந்த வெளி குடோனில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த குடோனில் இருந்த 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமானதாக தகவல்களை பரப்பினர். இதுகுறித்து எழுந்த புகார் காரணமாக விஜிலென்ஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஆய்வு செய்வதற்காக இன்று இங்கு வந்து பார்வையிட்டபோது, 7 ஆயிரம் நெல் மூட்டை மாயமாக வாய்ப்பில்லை. ஏனென்றால், ஒரு அட்டிக்கு 3 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை அடுக்கி வைக்கப்படுவது வழக்கம்.
ஆனால், தற்போது அடுக்கி வைக்கப்பட்டுள்ள முறையில் ஒரு சில அட்டிகளில் 3 ஆயிரத்திற்கும் மேலாக இருக்கும், சில அட்டிகளில் 2500-க்கும் குறைவாக மூட்டைகள் அடுக்கி வைக்கப்படும். அவ்வாறு குறைவாக அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை ஒரு சிலர் தவறுதலாக எண்ணி விட்டு நெல் மூட்டைகள் மாயமானது தெரியவந்ததாக திரித்து எங்கள் மீது உள்ள காழ்புணர்ச்சி காரணமாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாகதான் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குடோனில் எந்த மூட்டைகளும் மாயமாகவில்லை. மேலும், சரிந்து கிடக்கும் மூட்டைகளை சரிசெய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பது வதந்தியான செய்தியாகும்.
தற்போது நெல்மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், நெல் மூட்டைகள் மாயமான சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தவும், மாவட்டத்தில் உள்ள 80 அரிசி ஆலைகளிலும் ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரித்தபோது, தற்போது நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைக்கும்பணி நடைபெற்று வருகிறது.
- காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
- குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான திறந்தவெளி கிடங்கிலிருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமாகியிருப்பதை அத்துறையின் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். மாயமான நெல் மூட்டைகளின் மதிப்பு ரூ.1.50 கோடிக்கும் அதிகம் ஆகும்.
24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ள கிடங்கிலிருந்து நெல் மூட்டைகளை வெளியாட்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்க முடியாது. 7000 டன் நெல் மூட்டைகள் மாயமானது அம்பலமான பிறகு, அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று கூறி, மிகப்பெரிய முறைகேட்டை, மோசடியை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.
இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 20 ஆயிரம் டன் மூட்டைகள் மட்டுமே கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
- குறைந்தபட்சம் 5 ஆயிரம் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 93 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த பயிர்கள் ஆகஸ்டு மாதத்தில் துவங்கி அறுவடை செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சேமிப்பு கட்டிடங்கள் கூடிய நெல் கொள்முதல் நிலையம், திறந்தவெளி கொள்முதல் நிலையம் என 120 இடங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர்.
கொள்முதல் நிலையங்களிலும் இதுவரை 35ஆயிரம் டன்களுக்கு மேல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் 20 ஆயிரம் டன் மட்டுமே கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
15 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடப்பதால் எடை குறைவு ஏற்பட்டால் ஊழியர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கொள்முதல் நிலைய ஊழியர்கள், விவசாயிகள் தெரிவிக்கையில் குறுவை நெல் எப்போதும் அறுவடை செய்து பல நாட்கள் அடுக்கிவைத்திருந்தால் இயல்பாகவே எடை குறையும்.
கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டுசெல்லப்படாமல் தேங்கி கிடக்கிறது, கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாலை நேரத்தில் மழையும் பெய்துவருகிறது.
கடந்த சில வாரங்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் குறைந்த பட்சம் 5 ஆயிரம் மூட்டைகள் குறையாமல் தேங்கி கிடக்கிறது,
இதனால் ஏற்படும் எடை இழப்பிற்கு ஊழியர்கள்தான் ரெக்கவரி கட்டவேண்டிய சூழல் இருந்து வருகிறது.
மேலும் மழைபெய்வதாலும், கால்நடைகள், எலி ஆகியவற்றால் ஏற்படும் சேதத்திற்கும் ஊழியர்கள்தான் ரெக்கவரி கட்டவேண்டிய சூழல் இருந்து வருகிறது, கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைவத்றகு முன்பு உடனுக்குடன் கிடங்கிற்கு கொண்டு செல்ல கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது.
- நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் ஏற்றப்பட்டன.
தஞ்சாவூர்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அங்கேயே அடுக்கி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு தஞ்சை, பிள்ளையார்பட்டி, புனல்குளம், அம்மன்பேட்டை ஆகிய இடங்களி ல் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.
இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்ப ப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொது வினியோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலை களுக்கும் அனுப்பப்படும்.
இந்தநிலையில் இன்று சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது. பின்னர் இந்த லாரிகள் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் ஏற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து தலா 1,000 டன் நெல் வீதம் அரவைக்காக திருநெல்வேலி , திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.