search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heart disease"

    • உடற்பயிற்சி செய்துவந்தால் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழலாம்.
    • இதய நோய்களின் அபாயத்தை கணிசமாக குறைக்கும்.

    தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை தொடர்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு பல்வேறு உடல்நல பிரச்சினைகளை உருவாக்கும் அபாயத்தையும் குறைக்கும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்துவந்தால் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழலாம். உடற்பயிற்சிகள் வழங்கும் நன்மைகள் எண்ணற்றவை. வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் தடுக்கக்கூடிய 8 வியாதிகள் குறித்து பார்ப்போம்.

    இதயநோய்

    வழக்கமான உடற்பயிற்சி இதயத்தை வலுப்படுத்துவதற்கும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய காரணியாக அமையும். அதனால் இதய நோய்களின் அபாயத்தை கணிசமாக குறைக்கும். ஓட்ட பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஏரோபிக் செயல்பாடுகள் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவுகின்றன.

    உடல் பருமன்

    உடல் பருமனை தடுப்பதற்கும், சீரான உடல் எடையை நிர்வகிப்பதற்கும் உடல் இயக்க செயல்பாடு முக்கியமானது. வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வது கலோரிகளை எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், ஆரோக்கியமான எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவும். அதனுடன் ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்வது தசையின் வலுவை மேம்படுத்துவதோடு கொழுப்பை எரித்து உடல் திறனை அதிகரிக்க செய்யும்.

    டைப் - 2 நீரிழிவு நோய்

    வழக்கமான உடற்பயிற்சி இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். இதனால் டைப் -2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

    ஆஸ்டியோபோரோசிஸ்

    நடைப்பயிற்சி, நடனம், பளு தூக்குதல் போன்ற பயிற்சிகள் எலும்புகளை வலுப்படுத்துவதோடு ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் குறைக்கும். வழக்கமான உடல் செயல்பாடு எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவும். குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புகள் வலு இழப்பதை குறைக்கும். வழக்கமான உடற்பயிற்சி மூட்டு வலியைக் குறைக்கும். நீச்சல், யோகா மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகள் மூட்டின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும். தசைகளை வலுப்படுத்தும். மூட்டுவலி அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

    மனநலக் கோளாறு

    வழக்கமான உடற்பயிற்சி, மனச்சோர்வு, பதற்றம் மற்றும் மன அழுத்தத்தின் அறிகுறிகளை குறைப்பதன் மூலம் மன ஆரோக்கியத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் தினமும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டும். மனமகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். வயதாகும்போது ஏற்படும் அறிவாற்றல், நினைவாற்றல் வீழ்ச்சியை தடுக்கும்.

    புற்றுநோய்

    உடற்பயிற்சியால் புற்றுநோயைத் தடுக்க முடியாது என்றாலும், வழக்கமான உடல் செயல்பாடு மார்பகம், பெருங்குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் துணைபுரியும்.

    சுவாச நோய்கள்

    வழக்கமான உடற்பயிற்சி நுரையீரலின் செயல் திறனையும், சுவாச செயல்பாட்டையும் மேம்படுத்த உதவும். ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் (சி.ஓ.பி.டி) பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஏரோபிக் பயிற்சிகள் சுவாச செயல்பாடுகளுடன் இணைந்து நுரையீரல் திறன் மற்றும் ஒட்டுமொத்த சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    நாள்பட்ட நோய்கள்

    வழக்கமான உடற்பயிற்சி உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களிலும் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து பல நாள்பட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவும். உடற்பயிற்சி, நோயை குணப்படுத்தாவிட்டாலும் மோசமடையாமல் தடுக்க உதவும்.

    முதுமை பருவத்தை எட்டுபவர்கள் உடற்பயிற்சி வழக்கத்தை தொடர்வது அவசியம். இது உடல் இயக்கம், சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். உடல் செயல்பாடு, அறிவாற்றல் செயல்பாடு, நினைவகம் மற்றும் ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

    • இதயம் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
    • மாணவ-மாணவிகளிடம் இந்நோய் விரைவாகப் பரவும்.

    மரிக்கா என்ற வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு பிறவியில் இதயத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. ஓடியாடி விளையாடிக்கொண்டும், பள்ளிக்கு சென்றுகொண்டும் இருந்தாள். திடீரென்று ஒரு நாள் மயக்கமடைந்து விழுந்தாள். சாதாரண மயக்கத்துக்காக சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்தபோதுதான், அவளின் இதயம் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

    இதயப் பாதிப்பினால் ரத்த ஓட்டம் சீர்குலைந்து மூளைக்கு ரத்தம் சரியாக செல்லாததாலேயே மயங்கி விழுந்திருக்கிறாள். இதய வால்வில் ஒரே வழியாக சென்று வர வேண்டிய ரத்தமானது, இருவழியாக சென்றுவரத் தொடங்கியது. மேலும் உள்ளே சென்ற ரத்தமானது முழுமையாக வெளியேறாமல், பாதி மட்டுமே வெளியேற, மீதி ரத்தம் ஒவ்வொரு முறையும் அவளின் இதயத்திலேயே தங்கிவிட்டது.

    இந்த அதிகப்படியான ரத்தத்தை தாங்குவதற்காக இதயம் பெருக்கத் தொடங்கியது. இதற்காக மருத்துவ சிகிச்சை பெற ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள மருத்துவமனையை மரிக்கா அணுகியபோது சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். இந்தநிலையில் பிஜியை சேர்ந்த இப்பெண்ணுக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு தயாரானது. முன்நாட்களில் தொண்டையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாகவே இதயம் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது. இதனால் வீங்கிப் போய்விட்ட இதயத்தை அறுவை சிகிச்சை மூலமே சீரமைக்க முடியும் என மருத்துவக்குழு தீர்மானித்தது. சிகிச்சைக்குப் பின் நலமடைந்தாள் மரிக்கா.

     ஒரு தொண்டை நோய்த்தொற்று இதயத்தை இப்படியும் பாதிக்குமா? என கேள்வி எழலாம். ஆம், 15 நாட்களுக்கு மேல் தொண்டை நோய்த்தொற்றும் தொடர்ந்து காய்ச்சலும் இருந்தால் அலட்சியம் செய்துவிடாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் இந்நோய் விரைவாகப் பரவும். இந்நோய் ராணுவ வீரர்களையும் தாக்கியுள்ளது. எந்த வயதிலும் இந்த நோய்த்தொற்று ஏற்படலாம். உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

    • டிஜிட்டல் யுகத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள்.
    • செல்போன் மோகம் தூங்க செல்லும் நேரத்தை தாமதப்படுத்திவிடுகிறது.

    இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். செல்போன் மோகம் தூங்க செல்லும் நேரத்தை தாமதப்படுத்திவிடுகிறது. இரவில் திடீரென்று கண் விழித்தாலோ, காலையில் எழுந்தாலோ கைகளின் முதல் தேடல் செல்போனாகத்தான் இருக்கிறது. செல்போனில் இருந்து வெளிப்படும் ஒளி கண்களை சோர்வுக்குள்ளாக்குகிறது.

    இரவில் போதுமான அளவு தூங்காவிட்டால் ஏற்படும் சோர்வு மறுநாள் முழுவதும் எதிரொலிக்கும். ''தூக்கமின்மை உடல் நலனில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். போதிய நேரம் தூங்காவிட்டால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதயநோய், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு வித்திடும்'' என்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாள் இரவும் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு மாரடைப்பு, மனச்சோர்வு உள்ளிட்ட உடல்நலப்பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மேலும் தூக்கமின்மை ரத்த அழுத்த அளவை அதிகரிக்கச்செய்யக்கூடும். இதய செயலிழப்பு மற்றும் சிறுநீரக நோய்க்கும் வழிவகுக்கும். தினமும் இரவில் 7 மணி முதல் 9 மணி நேரம் வரை தூங்குமாறு அமெரிக்க இதய சங்கம் பரிந்துரை செய்துள்ளது.

    தூக்கத்தின்போது உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் இயல்புடையது. இதன் மூலம் சிறு, சிறு உடல்நல குறைபாடுகள் நீங்கிவிடும். இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும். ''நீங்கள் போதுமான நேரம் தூங்க முடியாமல் அவதிப்படும்போது உடல் அதிக மன அழுத்த ஹார்மோனை உற்பத்தி செய்யும். அப்போது ரத்த நாளங்களை சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்துவிடும்'' என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

    நன்கு ஆழ்ந்து தூங்கும்போது இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்க வழிவகை ஏற்படும். மன அழுத்தத்தில் இருந்து மீளவும் உதவும். போதுமான அளவு தூக்கம் கிடைக்காவிட்டாலோ, ஆழ்ந்து தூங்க முடியாவிட்டாலோ இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்க வாய்ப்பில்லாமல் போகும். நாள்பட்ட அழற்சி, ஆக்சிஜனேற்ற அழுத்தத்திற்கு வித்திடும். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்து இதய அமைப்பை சேதப்படுத்தும். நீரிழிவு நோய்க்கும் வழிவகுக்கும்.

    • இதய நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பிக்க உடற்பயிற்சி, முறையான உணவு பழக்க வழக்கம் உள்ளிட்டவைகளை கடைபிடிக்க வேண்டும்.
    • புள்ளி விவரம் கேரள மாநிலத்தில் இதய நோய் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் அபாயத்தை காட்டுக்கிறது.

    திருவனந்தபுரம்:

    மாறிவரும் வாழ்க்கை முறை, ஒழுங்கற்ற உணவு பழக்க வழக்கங்கள், உடற் பயிற்சியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதயநோய் தொடர்பான பிரச்சினைகள் வருகின்றன. தற்போதைய வாழ்க்கை சூழலில் உணவு உள்ளிட்ட பல விஷயங்களை மக்கள் முறையாக பின்பற்ற முடிவதில்லை.

    இதனால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் மிகவும் அதிகரித்து வருகிறது. மிகக்குறைந்த வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு பலர் மரணமடைவதை பார்க்க முடிகிறது. சிறுவர்களுக்கு கூட சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதய நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பிக்க உடற்பயிற்சி, முறையான உணவு பழக்க வழக்கம் உள்ளிட்டவைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் சமீப காலமாக இதய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்குள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மாரடைப்பு உள்ளிட்ட பல இதயநோய் பாதிப்பு களுக்கு ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் கேரளாவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

    திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ சிகிச்சையளிப்பதில் நாட்டில் 5-வது இடத்தில் உள்ளது. அந்த ஆஸ்பத்திரியில் 4 மாத காலத்தில் 40 ஆயிரம் பேர் இதய நோய்க்கு சிகிச்சை பெறறுள்ளனர் என்ற அதிரச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. ஆஞ்சியோ பிளாஸ்டி உள்ளிட்ட இதய நோய் சம்பந்தப்பட்ட சிகிச்சை அளிப்பதில் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரி முதலிடத்தில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த புள்ளி விவரம் கேரள மாநிலத்தில் இதய நோய்பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் அபாயத்தை காட்டுக்கிறது. இது கேரள மாநில மக்களுக்கு பெரும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக இருந்து வருகிறது. நாளை இதய நோய் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது.

    • உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது.
    • ராகியில் புரோலமைன், குளுட்டானின் உள்ளிட்ட அமினோ அமிலங்கள் உள்ளன.

    கேழ்வரகில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு விவரங்களை பார்ப்போம். சிறுதானிய உணவுகளில் அரிசியை காட்டிலும் அதிகப்படியான புரதச்சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் உயிர் சத்துக்கள் அடங்கி உள்ளன. ஆதலால் தான் மருத்துவர்கள் சிறுதானிய உணவுகளை தற்பொழுது அதிகப்படியாக பரிந்துரை செய்கின்றனர். அனைத்து ஊட்டச்சத்துகளும் சிறுதானிய உணவுகளில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளன.

    அரிசி மற்றும் கோதுமையை விட ஊட்டச்சத்து நிறைந்த ராகியில் அமைந்துள்ள புரோலமைன், குளுட்டானின் உள்ளிட்ட உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. ராகியில் முளைகட்டி பொடியாக்கி குழந்தைகளுக்கு உணவாக கொடுப்பது பழங்காலம் தொட்டு நம் பழக்கத்தில் உள்ளது. மேலும் ராகி நூடுல்ஸ், ராகி பணியாரம், ராகி சேமியா, ராகி இடியாப்பம், ராகி அல்வா, ராகி தோசை, ராகி அடை போன்றவைகளை தயாரிக்க முடியும். மேலும் ராகி முறுக்கு, ராகி மிக்சர், ராகி கேக், ராகி பிஸ்கட், ராகி லட்டு போன்ற நொறுக்கு தீனி வகை பலகாரங்களையும் செய்யலாம். கேழ்வரகு மாவில் எப்படி முறுக்கு செய்யலாம் என்று பார்க்கலாம்

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு - ஒரு கப்

    அரிசி மாவு - அரை கப்

    கடலை மாவு- கால் கப்

    பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி

    எள்- ஒரு ஸ்பூன்

    சீரகம் - 2 தேக்கரண்டி

    மிளகாய்த்தூள்- ஒரு ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மாவு வகைகளுடன் உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளர வேண்டும். அதன்பிறகு சூடாக இருக்கும் எண்ணெய்யை மாவுக் கலவையில் ஒரு குழிக்கரண்டி அளவிற்கு சேர்க்க வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்துக்கு பிசைய வேண்டும்.

    வாணலியில் எண்ணெய்யை ஊற்றி காயவைக்க வேண்டும். எண்ணெய் காந்ததும் பிசைந்த மாவை முறுக்கு குழலில் போட்டு, சூடான எண்ணெய்யில் முறுக்குகளாக பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுக்கவும். சுவையான ராகி முறுக்கு தயார்.

    • 40 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 12 ஆயிரம் காலடிகள் நடப்பது நல்லது.
    • குழந்தைகளை பொறுத்தவரை நடைப்பயிற்சி மேற்கொள்வது சாத்தியமில்லாதது.

    இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பலரும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். தினமும் குறிப்பிட்ட தூரம் நடப்பதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை நெருங்கவிடாமல் தற்காத்துக்கொள்ளலாம். சில நாள்பட்ட நோய் பாதிப்புகளில் இருந்தும் விடுபடலாம் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதனால் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.

    எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? வயதுக்கு ஏற்ப நடக்கும் தூரம் மாறுபடுமா? வயதானவர்கள் குறைந்த தூரம் நடந்தால் போதுமா? என்ற கேள்வி நிறைய பேரிடம் எழுகிறது. ஒவ்வொருவரும் தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் காலடிகளாவது எடுத்து வைத்து நடக்க வேண்டும். 10 ஆயிரம் காலடிகள் என்பது சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடப்பதற்கு சமமானது. அப்படி நடப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    நீரிழிவு, இதய நோய், பக்கவாதம், உடல் பருமன், மனச்சோர்வு, மார்பக புற்றுநோய் தொடர்பான நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க உதவும். தினமும் 10 ஆயிரம் காலடிகள் எடுத்து வைத்து நடக்க முடியாவிட்டாலும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் காலடிகளாவது நடப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும். இருப்பினும் வயதுக்கு ஏற்ப நடைப்பயிற்சி செய்யும் தூரத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

    குழந்தைகளை பொறுத்தவரை நடைப்பயிற்சி மேற்கொள்வது சாத்தியமில்லாதது. அவர்களை நடக்க சொல்லி கட்டாயப்படுத்துவதை விட ஓடியாடி விளையாட அனுமதித்தாலே போதுமானது. வழக்கமான விளையாட்டுகளுடன் குதித்தல், மெதுவாக ஓடுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட வைக்க வேண்டும். பெரியவர்களை பொறுத்தவரை தினமும் 10 ஆயிரம் காலடிகள் எடுத்துவைத்து நடப்பது சிரமமானது. அவர்களால் 8 கிலோ மீட்டர் தூரம் நடக்க முடியாது. அதற்கு உடலும் ஒத்துழைக்காது.

    வயது அடிப்படையில் எந்தெந்த வயதினர் எவ்வளவு தூரம் நடக்கலாம் என்பது பற்றி ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதன் முடிவு உங்கள் பார்வைக்கு...

    1. 40 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 12 ஆயிரம் காலடிகள் நடப்பது நல்லது.

    2. 40 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 11 ஆயிரம் காலடிகள் நடப்பதை இலக்காக கொள்ளலாம்.

    3. 50 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 10 ஆயிரம் காலடிகள் நடக்கலாம்.

    4. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 8 ஆயிரம் காலடிகள் வரை நடக்கலாம்.

    5. 18 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண்கள் தினமும் 12 ஆயிரம் காலடிகள் நடப்பதற்கு முயற்சி செய்யலாம்.

    6. 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தினமும் 11 ஆயிரம் காலடிகள் வரை நடக்கலாம்.

    7. உடல் எடையை குறைக்கும் நோக்கில் நடைப்பயிற்சி செய்பவர்கள் நடக்கும் அடிகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

    8. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தினமும் 12 ஆயிரம் அடிக்கு மேலும் நடப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    • இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
    • மருந்து மாத்திரைகள், டானிக்கைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

    திருத்துறைப்பூண்டி:

    சென்னை அப்போலோ பவுண்டேஷன் திருத்துறைப்பூண்டி நம்பிக்கை தொண்டு நிறுவனம், கட்டிமேடு ஊராட்சி மன்றம் மற்றும் திருத்துறைப்பூண்டி புரோபஷனல் கொரியர் இணைந்து நடத்தும் பொது மருத்துவ முகாம் கட்டிமேடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது.

    முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன், மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர்கள் டாக்டர் லெனின், டாக்டர் லாவண்யா, நம்பிக்கை தொண்டு நிறுவன உதவி இயக்குனர் விஜயா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

    முகாமில் உடல் எடை, உயரம், மூட்டு வலி, சக்கரை வியாதி,பெண்களுக்கு உண்டான வியாதிகள் பரிசோதித்து மருந்து மாத்திரைகள் ,டானிக்கைகள் இலவசமாக வழங்கப்பட்டன. சுமார் 255 நோயாளிகள் பயன் பெற்று மருந்து மாத்திரைகள் வாங்கிச் சென்றனர். இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களை கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனை மற்றும் திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    நிகழ்வில் தொண்டு நிறுவன இயக்குனர் சௌந்தரராஜன், சென்னை அப்போலோ பவுண்டேஷன் பில்லியன் காட்ஸ் மூத்த செயல் அலுவலர் ஆனந்த் பாபு, இளநிலை செயல் அலுவலர் சரவணகுமார், புரோபஷனல் கொரியர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாக்யராஜ், செயலர் புவனேஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் சுதா, சக்தி பிரியா, சரண்யா, பிரியா சரவணன், சந்தோஷ் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் இருதய நோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இருதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவ-மாணவிகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையும், கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியும் இணைந்து "உலக இருதய தினத்தை" முன்னிட்டு இருதய நோய் விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவன துணைத்தலைவர் சசி ஆனந்த் தலைமை தாங்கினார். டீன் சேவியர் செல்வ சுரேஷ் , கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.

    ராஜபாளையம் சாய் இருதய மருத்துவமனையின் தலைமை இருதய நோய் நிபுணர் ராஜாராம் தலைமை விருந்தினராகவும், கிருஷ்ணன்கோவில் காவல்துறை உதவி ஆய்வாளர் மணிகண்டன் கவுரவ விருந்தினராகவும் கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர். கிருஷ்ணன்கோவில் பஸ் நிறுத்தம் முதல் குன்னூர் ஆரம்ப சுகாதார மையம் வரை பேரணி நடந்தது. இருதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவ-மாணவிகள் பொதுமக்களுக்கு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை விவேகானந்தன் செய்திருந்தார்.

    ஒருவருக்கு தூக்கமின்மை அல்லது அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்தால் அல்லது இரவில் சுவாச சிக்கல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

    நமது உடலை நிதானப்படுத்தவும், புத்துணர்ச்சி பெறவும் தூக்கம் சிறந்த வழிமுறையாகும்.

    சரியான அளவில் தூங்கினால் உடல் மற்றும் மன அழுத்தங்கள் நீங்குகிறது. மேலும் இருதய சிக்கல் உள்பட பல்வேறு நோய்களை உருவாக்கும் ஆபத்தையும் குறைக்கிறது.

    ஆரோக்கியமான இருதயத்தை உறுதிப்படுத்துவதற்கு தூங்குவதற்கான உகந்த நேரம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இங்கிலாந்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பாக 43 முதல் 79 வயது வரை உள்ள 88 ஆயிரம் பேரிடம் இருந்து தகவல்களை பெற்று ஆய்வு செய்தது. இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்க சென்றவர்களைவிட இரவு 11 மணிக்கு பிறகு தூங்குபவர்களுக்கு இருதய நோய் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்தது.

    தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் தினமும் குறைந்தது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.

    மிக சமீபத்திய கண்டுபிடிப்பின்படி தூக்கம் தொடங்குவதற்கும் இருதய பாதிப்புக்கும் இடையேயான சாத்தியமான தொடர்பை பரிந்துரைக்கிறது. டாக்டர் டேவிட் பிளான்ஸ் கூறும் போது, ‘‘24 மணிநேர சுழற்சியில் தூங்குவதற்கான உகந்த நேரத்தை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. நள்ளிரவுக்கு பிறகு தூங்குவது மிகவும் ஆபத்தானது. இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் தூங்கி விட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம். இது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது’’ என்றார்.

    அதே நேரத்தில் இரவு 10, 11 மணிதான் தூங்குவதற்கு சிறந்த நேரம் என்பது அனைவருக்கும் பொருந்தாது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூர் ஆஸ்டர் சி.எம்.ஐ. மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் சஞ்சய்பட் இதுதொடர்பாக கூறியதாவது:-

    தூங்குவதற்கு சரியான நேரம் என்று எதுவும் இல்லை. சரியாக 8 மணி நேரம் இடைவிடாத தூக்கம் ஆரோக்கியமான இதயத்துக்கும், உடல் ஆரோக்கிய செயல்பாட்டுக்கும் இன்றியமையாதது.

    நன்றாக தூங்குவதற்காக மது அல்லது மாத்திரைகளை பயன்படுத்தக் கூடாது. ஒருவருக்கு தூக்கமின்மை அல்லது அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்தால் அல்லது இரவில் சுவாச சிக்கல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒவ்வொருவரும் உங்கள் கை விரல்களை மூடிக்கொள்ளுங்கள், இப்போது உங்கள் கை என்ன அளவில் இருக்கிறதோ, அந்த அளவு உடையதே உங்கள் இருதயம்.
    இதயத்தை சுற்றியுள்ள உறை பெரிகார்டியம்.

    இதயம் நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும்.

    இதயத்தின் மேல் அறையின் பெயர் ஆரிக்கிள்.

    இதயத்தின் கீழ் அறையின் பெயர் வெண்ட்ரிக்கிள்.

    இதயத்தின் வலது அறைகளில் அசுத்தமான ரத்தம் உள்ளது.

    இதயத்தின் இடது அறைகளில் சுத்தமான ரத்தம் உள்ளது.

    இதயத்துக்கு ரத்தம் கொண்டு செல்பவை கரோனரி தமனிகள்.

    இதயத் துடிப்பை அறிய உதவுவது ஸ்டெதஸ்கோப்.

    இதய அறைகளுக்கு இடையே வால்வுகள் உள்ளன.

    இதயம் நுரையீரல்களுக்கு பின்புறமாக அமைந்துள்ளது.

    இதயமே நமது உடலின் ரத்தத்தை பம்ப் செய்து மற்ற உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது.

    நுரையீரல் பகுதியில் ஆக்சிஜன் ஏற்றப்படும் ரத்தம், இதயத்தால் பம்ப் செய்யப்பட்டு மற்ற பாகங்களுக்கு அனுப்பி வைக்கிறது.

    உங்கள் கையை பொத்திக்கொண்டால் என்ன அளவு இருக்குமோ, இதயம் அந்த அளவுடையதாக இருக்கும்.

    இதயம் சுமார் அரை கிலோ எடை கொண்டிருக்கும்.

    இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவது மாரடைப்பை உருவாக்கும்.

    இதயத்துடிப்பு உருவாக்கும் இடம் பேஸ்மேக்கர் எனப்படுகிறது.

    இதேபெயரில் இதய சிகிச்சை கருவி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    மாரடைப்பு வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மாரடைப்பு வருவதற்கான காரணங்களையும் அறிகுறியையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.
     
    சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து  விடுகிறது.  இதனால் இந்த இரத்தக் குளாய் மூலம் ரத்தத்தைப் பெறும் இதயத்தின் தசைப் பகுதி ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.
     
    உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைபிடித்தல், மன அழுத்தம் போன்றவற்றால்கூட ரத்த நாளத்தின் உட்சுவர் பாதிக்கப்படுகிறது. உட்சுவர் கரடுமுரடாகி, அதன் மீது ரத்தத்தில் மிதக்கும் கொழுப்புத் திவலைகள்  படிந்துகொண்டே வரும். ரத்த ஓட்டத்துக்கான பாதை குறுகலாகி, ரத்த ஓட்டம் தடைபடும். பிறகு இதய நாளத்தில் விறைப்பு அல்லது உறைகட்டி  ஏற்பட்டால், ரத்த ஓட்டம் முழுவதுமாகத் தடைபடும். இதயத் தசைக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதால், அவை செயலிழக்கின்றன.
     
    புகைபிடித்தல், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், அளவுக்கு அதிகமானக் கடின உழைப்பு போன்றவற்றால், இது ஏற்படலாம். அடைப்பு அதிகமாகும்போது, இறுக்கம் அல்லது தீவிர மாரடைப்பு ஏற்படுகிறது.
     
    அறிகுறிகள்:
     
    ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கு அவருடைய ரத்த நாளங்களில் 50 சதவிகிதம் அடைப்பு இருந்தால்கூட இதயத்துக்குத் தேவையான சுத்த ரத்தம் கிடைத்துவிடுகிறது. அதனால் அவருக்கு எந்த விதமான அறிகுறியும் தெரியாது.
     
    கடினமான உழைப்பில் ஈடுபடும்போது குறுகிப்போன நாளங்கள் வழியாகப் போதுமான ரத்தம் இதயத்துக்குக் கிடைப்பது இல்லை. அப்போது மார்பு இறுக்கம் போன்ற அறிகுறி தோன்றும். ஓய்வு எடுத்துக்கொண்டால், இதயத்துக்குத் தேவையான ரத்தமும்  பிராண வாயுவும் கிடைக்கும். நெஞ்சு வலியும் மறைந்துவிடும்.
     
    மாரடைப்புக்கு ஆரம்ப அறிகுறியே மார்பு இறுக்கம்தான். மார்பு இறுக்கம் மார்பின் நடுப்பகுதியில் நெஞ்சு எலும்புக்குப் பின்புறம்  தோன்றும். இரு தோள்களில் முக்கியமாக இடது தோளில் ஆரம்பித்து கைகள், கழுத்து, தாடை, முதுகு போன்ற பகுதிகளுக்கும்  வலி பரவலாம். சில சமயங்களில் குறிப்பிட்டப் பகுதியில் மட்டுமே வலி தோன்றலாம். பொதுவாக நோயாளிகள் இதை வாயுக்  கோளாறு என்று அசட்டையாக இருந்துவிடுவார்கள். இந்த மார்பு இறுக்கத்தால் இதயத் தசைகள் சேதம் அடைவதில்லை. ஆனால் எந்த நேரத்திலும் ரத்த நாளங்கள் தடைபட்டு மாரடைப்பு ஏற்படலாம். சாதாரண மார்பு இறுக்கமா அல்லது மாரடைப்பு என்று மருத்துவரால்தான் கண்டறிய இயலும்.
     
    கடுமையான மார்பு இறுக்கம் போன்ற வலி 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும். மார்பு வலியுடன் உடல் எங்கும் திடீர் வியர்வை, மூச்சுத்திணறல், வாந்தி, பலவீனம், தலைச்சுற்றல், மயக்கம், வேகமான நாடித்துடிப்பு ஆகியனவும் ஏற்படலாம். அறிகுறிகளே  இல்லாமல் மாரடைப்பு போன்றவையும் ஏற்படுவதும் உண்டு.
    இதயத்தில் வலி என்றவுடன் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதே சாலச்சிறந்தது. இதயநோய் வரும்முன் கண்டுபிடிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.
    எல்லா நெஞ்சு வலிக்கும் பயப்பட வேண்டாம். எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பு இல்லை. நெஞ்சை சுற்றிலும் நுரையீரல், வயிறு, உணவுக் குழல் உள்ளது. மேலும் அதை சுற்றி தசைகள் இருக்கிறது. அதில் வலி ஏற்பட்டாலோ அது நெஞ்சு வலி மாதிரியாகத்தான் இருக்கும். இதில் சில விஷயங்களை வைத்துத் தான் இந்த வலி இருதயத்திலிருந்து வருகிறதா, இல்லை நுறையீரல், உணவுக் குழலிருந்து வருகிறதா என்று கண்டுபிடிப்போம்.

    எந்தமாதிரியான வலி இருதய வலி என்றால் ஒரு யானை நெஞ்சின்மேல் நிற்கும் மாதிரியான வலி, தேவையில்லாமல் மூச்சுத்திணறல், தேவையில்லாமல் அதிக வியர்வை இருந்தாலோ அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

    யாரை தாக்கும்?

    மனச்சோர்வு, உடற்சோர்வு, மூச்சுத்திணறல் இதெல்லாம் ஏற்பட்டால் இருதய நல மருத்துவரிடம் பரிசோதனை செய்யுங்கள். இப்பொழுது இருக்கிற காலக்கட்டத்தில் சிறிய வயதினருக்குக் கூட மாரடைப்பு வருகிறது என்கிறார்கள். அது உண்மைதான். ஏனெனில் இந்த உலகில் தொழில் ரீதியான போட்டிகள், மனஅழுத்தம் மற்றும் தீய பழக்கங்கள் (மது, புகைப்பழக்கம்) அதிகரித்து இருப்பதே ஒரு முக்கிய காரணம். சிறிய வயதினருக்கும், பெரியவர்களுக்கும் வரும் மாரடைப்பில் வித்தியாசம் உள்ளது. அது என்னவென்று பார்ப்போம். சிறிய வயதினருக்கு வரும் இதயப்பிரச்சனையில் அந்த நேரத்தில் ஏற்படுகிற இரத்த உறைவு (Blood Clots) ஒரு நாள் இல்லை இரண்டு நாளில் ஏற்பட்டதாக இருக்கும். 50-60 வயது உள்ளவர்களுக்கு பார்த்தோம் என்றால் கொலஸ்ட்ராலினால் வரும். இது ஒருநாள் இரண்டு நாளில் வருவது இல்லை.

    ECG எடுத்த பிறகு 2 விதமான சிகிச்சைகள் உள்ளன. உடனே மருந்து கொடுத்து கரைக்கலாம் அல்லது ஆஞ்சியோகிராம் பார்த்துவிட்டு பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யலாம். நோயாளியை Cathlab அறுவை சிகிச்சை அரங்குக்கு கூட்டி கொண்டு சென்று பலூன் மூலமா அந்த அடைப்பினை எடுத்துவிட்டு இரத்த ஓட்டத்தைச் சரி செய்துவிடலாம். இதை எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்ய வேண்டும். இதை சரிசெய்து விட்டால் ரத்த ஓட்டம் சீராகும். இதனால் அவரது ஆயுள் காலத்திற்கும் எந்தவிதப் பிரச்சனையும் வராது.

    ஒருவேளை தாமதமாக மருத்துவமனைக்கு வந்தால் அதாவது ஒரு 6 (or) 12 மணி நேரம் அல்லது ஒரு நாள் கழித்தோ தாமதமாக சிகிச்சையைத் தொடங்கினால் அந்த இரத்த ஓட்டம் இல்லாத தசைகள் செயலிழந்து விடும். ஒருமுறை செயலிழந்த தசைகள் திருப்பி செயல்பாட்டிற்கு வராது. அந்த சமயத்தில் அந்த மாரடைப்பு வந்த நோயாளர்களுக்கு எதிர் காலத்தில் இதய வலுவல் ஏற்படலாம். இவர்கள் காலம் முழுவதும் நடக்கும் போது மூச்சு வாங்குவதோ இல்லை. நெஞ்சுவலி வந்தோ கஷ்டப்பட வேண்டியிருக்கும். இந்த மாதிரியான பிரச்சனை வராமல் இருப்பதற்கே தாமதிக்காத சிக்சைகள் உடனடியாக செய்யப்படவேண்டும் என்கிறோம்.

    இருதய நோய் வரும்முன் கண்டுபிடிக்கும் முறைகள்

    முன்கூட்டியே கண்டுபிடிக்கிறதுக்கு இரத்தப் பரிசோதனை செய்து கொலஸ்ட்ரால் அளவினைக் கண்டறிந்தும், டிரெட்மில்லில் நடக்கும் போது ECG பார்த்து கண்டு பிடிக்கலாம். அல்லது இதயத்திற்கான எக்கோ பரிசோதனையின் மூலமோ கண்டறியலாம். இந்த மாதிரி கண்டுபிடிக்கும் போது ஒரு இரத்தக்குழாய் மட்டும் அடைப்பு ஏற்பட்டிருந்தால் பலூன் ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்து சரிசெய்யலாம். சில சமயம் நிறைய இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் ஒவ்வொரு இரத்தக்குழாய்க்கும் போய் பலூன் வைத்து பண்ண முடியாது. அவர்களுக்குத்தான் பைபாஸ் சிகிச்சை அவசியமாகிறது. பைபாஸ் சிகிச்சையில் அடைப்பு இருக்கிற இரத்த குழாய்களை அப்படியே வைத்துவிட்டு புதிய ரத்தக் குழாய்களை எடுத்து அடைப்பு இருக்கிற மீதிப் பகுதியில் போய் இணைத்து விடவேண்டும். இதுதான் பைபாஸ்.

    இதயத்தில் வலி என்றவுடன் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதே சாலச்சிறந்தது. சிகிச்சைக்கு பிறகு சோர்ந்து போகாமல் தினமும் நடைபயிற்சி, மருத்துவர் பரிந்துரை செய்த உடற்பயிற்சிகள் செய்தல் மற்றும் கொழுப்பு உணவுகள், எண்ணை பலகாரங்கள் தவிர்த்தல், ஆரோக்கியமான, சத்தான ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளுதல், மருந்து மாத்திரைகள் தவறாமல் எடுத்துக் கொள்வது. மருத்துவர் பரிந்துரைத்த காலகட்டங்களில் தவறாது பரிசோதனைகள் செய்து கொள்வது இவற்றினால் நீடித்த ஆயுள்காலம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமில்லை.

    நாராயணா இருதய மையம், பாளையங்கோட்டை
    ×