தொண்டை நோய் தொற்றா? அலட்சியம் வேண்டாம்

இதயம் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.மாணவ-மாணவிகளிடம் இந்நோய் விரைவாகப் பரவும்.
தொண்டை நோய் தொற்றா? அலட்சியம் வேண்டாம்
Published on

மரிக்கா என்ற வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு பிறவியில் இதயத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. ஓடியாடி விளையாடிக்கொண்டும், பள்ளிக்கு சென்றுகொண்டும் இருந்தாள். திடீரென்று ஒரு நாள் மயக்கமடைந்து விழுந்தாள். சாதாரண மயக்கத்துக்காக சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்தபோதுதான், அவளின் இதயம் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

இதயப் பாதிப்பினால் ரத்த ஓட்டம் சீர்குலைந்து மூளைக்கு ரத்தம் சரியாக செல்லாததாலேயே மயங்கி விழுந்திருக்கிறாள். இதய வால்வில் ஒரே வழியாக சென்று வர வேண்டிய ரத்தமானது, இருவழியாக சென்றுவரத் தொடங்கியது. மேலும் உள்ளே சென்ற ரத்தமானது முழுமையாக வெளியேறாமல், பாதி மட்டுமே வெளியேற, மீதி ரத்தம் ஒவ்வொரு முறையும் அவளின் இதயத்திலேயே தங்கிவிட்டது.

இந்த அதிகப்படியான ரத்தத்தை தாங்குவதற்காக இதயம் பெருக்கத் தொடங்கியது. இதற்காக மருத்துவ சிகிச்சை பெற ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள மருத்துவமனையை மரிக்கா அணுகியபோது சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். இந்தநிலையில் பிஜியை சேர்ந்த இப்பெண்ணுக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு தயாரானது. முன்நாட்களில் தொண்டையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாகவே இதயம் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது. இதனால் வீங்கிப் போய்விட்ட இதயத்தை அறுவை சிகிச்சை மூலமே சீரமைக்க முடியும் என மருத்துவக்குழு தீர்மானித்தது. சிகிச்சைக்குப் பின் நலமடைந்தாள் மரிக்கா.

 ஒரு தொண்டை நோய்த்தொற்று இதயத்தை இப்படியும் பாதிக்குமா? என கேள்வி எழலாம். ஆம், 15 நாட்களுக்கு மேல் தொண்டை நோய்த்தொற்றும் தொடர்ந்து காய்ச்சலும் இருந்தால் அலட்சியம் செய்துவிடாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் இந்நோய் விரைவாகப் பரவும். இந்நோய் ராணுவ வீரர்களையும் தாக்கியுள்ளது. எந்த வயதிலும் இந்த நோய்த்தொற்று ஏற்படலாம். உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com