search icon
என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • வாக்காளர்களின் மத்தியில் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது.
    • குமரி மாவட்டத்தை பொருத்தவரை கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தல் மட்டுமின்றி, விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

    நாகர்கோவில்:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதம் முடிவடைய உள்ளது. இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (19-ந்தேதி) நடைபெறுகிறது.

    முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் நாளைய தமிழகத்திலும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

    மேலும் ஓட்டு போடுவதற்கு வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் வசதிகளும் செய்யப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு தேர்தல் நடைபெறும்போதும் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.

    அதே போல் இந்த முறையும் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக இளம் வாக்காளர்களை வாக்களிக்க செய்யும் வகையில் கல்லூரிகளில் பல நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டது. இதன் காரணமாக வாக்காளர்களின் மத்தியில் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது.

    முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் வாக்களிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வெளியூரில் வசிக்கக் கூடியவர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்களும் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.

    நேற்றைய தினம் முதலே இதனை காண முடிந்தது. சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட மிகவும் அதிகமாக இருந்தது.

    வழக்கமாக நாகர்கோவில் வரக்கூடிய ரெயில்களில் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் தான் ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நாகர்கோவில் வரும் வரை கட்டுக்கடங்காத வகை காணப்படும். கடந்த இரு தினங்களாக அதேபோன்ற ஒரு கூட்டத்தை காண முடிந்தது.

    இன்றும் சென்னையில் இருந்து வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், கோவையில் இருந்து வந்த கோவை எக்ஸ்பிரஸ், தாம்பரம்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது.

    ஏராளமானோர் தங்களின் குடும்பத்துடன் வந்தனர். அந்த கூட்டத்தில் இளைஞர்கள் அதிகளவில் காணப்பட்டனர். அவர்கள் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வேலை பார்க்கக்கூடிய மற்றும் படிக்கக்கூடிய இளைஞர்கள் ஆவர். தேர்தல் நாளன்று பொது விடுமுறை என்பதால் அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்திருக்கிறார்கள்.

    பலர் தேர்தலில் வாக்களித்துவிட்டு உடனடியாக திரும்பும் வகையிலும் திட்டமிட்டு வந்துள்ளனர். பல இளைஞர்கள் பயணத்தின்போது சக நண்பர்களுடன் தேர்தலில் வாக்களிப்பது குறித்து மிகவும் ஆர்வமாக பேசி வந்ததை காண முடிந்தது. அவர்களில் பல இளைஞர்கள் முதன் முதலாக தேர்தலில் வாக்களிப்பதாக பேசிக் கொண்டனர். அந்த இளைஞர்கள் தேர்தலில் வாக்களிக்கும் முறை குறித்து சக பயணிகளிடம் பேசியபடி இருந்தனர். அதே நேரத்தில் தேர்தலில் வாக்களித்து விட்டு மீண்டும் வெளியூருக்கு செல்வதற்கான பயணத்திட்டத்தையும் நண்பர்களுடன் விவாதித்தனர்.

    குமரி மாவட்டத்தை பொருத்தவரை கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தல் மட்டுமின்றி, விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதனால் மற்ற மாவட்டங்களை காட்டிலும் குமரி மாவட்டத்தின் மீது அனைவரின் பார்வையும் திரும்பி இருக்கிறது.

    மேலும் விளவங்கோடு சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் என இரண்டு ஓட்டுகள் போட வேண்டும். இதனால் மற்ற சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்காளர்களை காட்டிலும் விளவங்கோடு சட்டசபை தொகுதி வாக்காளர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

    அந்த தொகுதியை சேர்ந்த புதிய வாக்காளர்களான இளைஞர்கள், முதன் முறையாக சந்திக்கும் தேர்தலிலேயே இரு ஓட்டுகள் போடும் வாய்ப்பு கிடைத்திருப்பதை எண்ணி பூரிப்படைந்துள்ளனர். 

    • மலைவாழ் மக்களின் வசதிக்காக பஸ் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
    • ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    நாகர்கோவில்:

    இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் காலை விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய கற்றுவா, பத்துகாணி, ஆறுகாணி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

    இந்த பிரசாரத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பினுலால் சிங், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மலைவாழ் மக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் விஜய் வசந்த் கூறியதாவது:-

    மத்தியில் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் பா.ஜனதா அரசை விரட்டியடிக்க நீங்கள் அனைவரும் எங்கள் இருவருக்கும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பழங்குடியின மக்கள் வாழக்கூடிய மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் மீது அங்கு ஆளும் பா.ஜனதா அரசு கலவரங்களை ஏற்படுத்தி தாக்குதல் நடத்தியது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் சொல்ல முடியாத சித்ரவதைகளுக்கு ஆளாகினர். இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து வந்து அதை வீடியோவாக வெளியிட்ட அவல நிலை பா.ஜனதா ஆளுகிற மாநிலத்தில் நடைபெற்றது. நம் நாட்டில் அமைதியும், சமாதானமும், ஒற்றுமையும் நிலவ மக்கள் அனைவரும் அன்புடனும், சந்தோஷத்துடன் வாழ்வதற்கு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக அமர வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் ஜனநாயகமும், அரசியலமைப்புச் சட்டமும் காப்பாற்றப்படும்.

    குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரப்பர் தொழிற்சாலை விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்படும். மலைவாழ் மக்களின் வசதிக்காக பஸ் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எனவே இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உங்கள் விஜய் வசந்த் ஆகிய எனக்கும், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தாரகை கத்பர்ட்டுக்கும் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இன்று (புதன்கிழமை) காலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் அவர் மண்டைக்காடு புதூர், மணலிவிளை, கூட்டுமங்கலம், கல்லத்திவிளை, காட்டுவிளை, நடுவூர்க்கரை, சேரமங்கலம், பரப்பற்று, பெரியவிளை, மணவாளக்குறிச்சி, முட்டம், அம்மாண்டிவிளை, திருநயினார்குறிச்சி, வெள்ளிமலை, வெள்ளிச்சந்தை, ஈத்தங்காடு, மேலமணக்குடி, கொட்டாரம், அஞ்சுகிராமம் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். நாகர்கோவிலில் மாலை அவர் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    • குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டம் பகுதியில் விஜய் வசந்த் பிரசாரத்தை தொடங்கினார்.
    • வருகிற பாராளுமன்ற தேர்தல் மிக, மிக முக்கியமான தேர்தல்.

    நாகர்கோவில்:

    இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் தினமும் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அவரை மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர்த்தூவியும் உற்சாகமாக வரவேற்கிறார்கள்.

    குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டம் பகுதியில் விஜய் வசந்த் பிரசாரத்தை தொடங்கினார். இரணியல், திங்கள் நகர், ரீத்தாபுரம், குறும்பனை, வாணியக்குடி, கோடி முனை, குளச்சல் கடற்கரை, கூத்தவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை திறந்த வாகனத்தில் சென்று சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பிரின்ஸ் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.டி.உதயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து குருந்தங்கோடு, கண்டன்விளை, பேயன்குழி, வில்லுக்குறி, பள்ளம், பரசேரி, ஆளூர், சுங்கான் கடை, பெருவிளை, காரங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மிக, மிக முக்கியமான தேர்தல். பா.ஜனதா அரசை அகற்ற வேண்டிய தேர்தல். இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். மக்களாட்சி மலர வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அதற்கு நீங்கள் எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என சொன்னார்கள். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவோம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை 10 பைசா கூட செலுத்தவில்லை. மாறாக, ஏழை மக்களை வங்கி கணக்கை தொடங்க வைத்து மினிமம் பேலன்ஸ் இல்லை என்ற காரணத்தைக் காட்டி மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளனர். பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்து மக்கள் விரோத ஆட்சியை நடத்துகின்றனர்.

    • நாகர்கோவில் ஆயுதப்படை குடியிருப்பு சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
    • சம்பவத்தில் தாக்கப்பட்ட வாலிபர், ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

    நாகர்கோவில்:

    மது உள்ளிட்ட போதைப் பொருட்களால் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இதனால் போதை பழக்கத்தை ஒழிக்க அரசு நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் போதை பழக்கமும் அதனால் பல பிரச்சனைகளும் தினமும் தொடர்ந்தே வருகின்றன.

    இந்த நிலையில் சினிமாவில் போதைக் கும்பல், யாரிடமாவது வம்பிழுத்து விரட்டி விரட்டி தாக்குவது போன்ற ஒரு காட்சி, சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குமரி மாவட்டத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தில் ஒரு வாலிபரை, ஒரு கும்பல் மாறி மாறி தாக்குவதும் அந்த வாலிபர் கீழே விழுந்த நிலையிலும், அவரை தாக்கி சட்டையை கிழிப்பது போன்ற காட்சிகள் வீடியோவில் உள்ளன.

    மது போதை தகராறே இந்த தாக்குதலுக்கு காரணம் என தற்போது தெரியவந்துள்ளது. அதுவும் போலீஸ் நடமாட்டம் அதிகம் உள்ள ஆயுதப்படை மைதானம் அருகிலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    நாகர்கோவில் ஆயுதப்படை குடியிருப்பு சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு வட்டக்கரை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மது வாங்க வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு கும்பல் மது அருந்திக் கொண்டிருந்துள்ளது. வட்டக்கரை வாலிபர் மது வாங்கி விட்டு புறப்பட்ட போது, அந்தக் கும்பலுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    சிறிது நேரத்தில் இது மோதலாக மாறியது. மது அருந்திக் கொண்டிருந்த கும்பல், வட்டக்கரை வாலிபர் மீது தாக்குதல் நடத்தியது. அந்த வாலிபர் சாலையில் கீழே விழுந்தபோதும், கும்பல் விடாமல் தாக்கி உள்ளது. ஒரு கட்டத்தில் அவரது சட்டை கிழிந்தது. இருப்பினும் விடாமல் கும்பல் தாக்கியது. அந்த நேரத்தில் சாலையில் வாகனங்களில் சென்ற பலரும் இதனை கண்டு கொள்ளாமல் செல்கின்றனர். இது பற்றி விசாரித்த போது இது போன்ற தாக்குதல் இந்தப் பகுதியில் அடிக்கடி நடப்பதாகவும் போதைக்கு அடிமையான கும்பல் மோதலில் ஈடுபட்டு வருவதாகவும் சிலர் தெரிவித்தனர். சம்பத்தன்று நடந்த தாக்குதல் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட வாலிபர், ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். மோதல் சம்பவம் குறித்த வீடியோ வைரலான நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரிப்பது யார்? என்பது அதை விட பரபரப்பாக உள்ளது. சம்பவம் நடந்த பகுதி நேசமணி நகர் போலீசுக்கு உட்பட்டதா? கோட்டார் போலீசுக்கு உட்பட்டதா? என்பதில் ஒரு உடன்பாடு வராததால் வழக்கு பதிவு செய்வதில் தாமதமான நிலை நிலவுகிறது.

    • இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் தெரிவித்தார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த் மாவட்டம் முழுவதும் சென்று மக்களிடம் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று அகஸ்தீஸ்வரம், காமராஜ் நகர், ராமன்புதூர், சந்தையடி, இலந்தையடிவிளை, சாமிதோப்பு, செட்டிவிளை, பொற்றையடி, வைகுண்டபதி, கொட்டாரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்.

    பிரசாரத்தின் போது விஜய்வசந்த் பேசியதாவது:-

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு தந்த அம்பேத்கரின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன். மேலும் இன்று (அதாவது நேற்று) எனது வாழ்வில் மிகவும் முக்கியமான நாள். எனது அன்பு தந்தை எச்.வசந்தகுமார் பிறந்த நாள் ஆகும்.

    எனது தந்தை விட்டுச் சென்ற மக்கள் பணியை தொடர்வதற்கு அவர் மேல் வைத்திருக்கும் பாசத்தால் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    குமரி மாவட்டத்தை வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற என் தந்தையின் கனவை நிறைவேற்ற உங்களுக்காக இன்னும் பல பணிகள் செய்ய வேண்டும். இதற்காக நான் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறேன். மாவட்டத்தில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாராளுமன்ற உறுப்பினராக நான் வாங்கிய அனைத்து சம்பளப் பணத்தையும் கொடுத்துள்ளேன்.

    குமரி மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை நிறைவேற்றும் வகையில் எனது தந்தை தொடங்கி வைத்த வேலைவாய்ப்பு முகாமை தொடர்ந்து நடத்தி சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளேன். குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். எனக்கு நீங்கள் அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மாநகர மேயர் மகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. எச்.வசந்தகுமாரின் 74- வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் குமரி மாவட்ட மக்களுடன் உரையாடுவது போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையில்) தயாரிக்கப்பட்ட காணொலியை தமிழ்ச்செல்வி வசந்தகுமார் வெளியிட்டார். நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., சகோதரர் வினோத் குமார், காமராஜ், எச்.வசந்தகுமாரின் தங்கை வசந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாட்டில் உள்ள மக்களின் வறுமை நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
    • வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை 200 ரூபாய்க்கு விற்ற அவலம் பா.ஜனதா ஆட்சியில் தான் நிகழ்ந்துள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். அவர் நாள்தோறும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திக்கணங்கோடு சந்திப்பில் இருந்து நேற்று அவர் திறந்த ஜீப்பில் பிரசாரத்தை தொடங்கினார். இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி மற்றும் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பிரசாரத்தின் போது வேட்பாளர் விஜய் வசந்த் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:-

    கடந்த பத்தாண்டுகளாக பிரதமர் மோடி மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குறுதிகளை அளித்து வாயால் வடை சுட்டு வருகிறார். (அதனை வெளிப்படுத்தும் விதமாக வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் வடையை பொதுமக்களிடம் காண்பித்து, இதுதான் மோடி சுட்ட வடை என்றனர்). நாட்டில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் நாள் தான் வருகின்ற 19-ந் தேதி நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல்.

    ஏழை மக்களை வஞ்சித்து பணக்கார முதலாளிகளான அதானியையும், அம்பானியையும் வாழ வைக்க கார்ப்பரேட்டுக்கு துணை போகும் பா.ஜனதா அரசின் பத்தாண்டு கால ஆட்சியில் மக்கள் நாளுக்கு நாள் பல்வேறு வேதனையை அனுபவித்து வருகின்றனர். ஏழை மாணவர்களின் கல்விக் கடனையும், விவசாயிகளின் விவசாய கடனையும் ரத்து செய்ய மறுத்த பா.ஜனதா அரசு, அதானிக்கும்- அம்பானிக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்து அவர்களை மேலும், மேலும் பணக்காரர்களாக மாற்றி வருகிறது.

    ஆனால் நாட்டில் உள்ள மக்களின் வறுமை நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்கள் உணவுக்காக பயன்படுத்தும் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை 200 ரூபாய்க்கு விற்ற அவலம் பா.ஜனதா ஆட்சியில் தான் நிகழ்ந்துள்ளது.

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி மக்கள் அனைவரும் அன்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நமது இந்தியா கூட்டணிக்கு உங்கள் பேராதரவை தர வேண்டும். குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காகவும், நமது மண்ணில் ஒற்றுமையாக வாழ நினைக்கும் மக்களைப் பிரித்தாள நினைக்கும் ஏமாற்றுவாதிகளை விரட்டி அடிப்பதற்கும் நீங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உங்களிடத்தில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு வருத்தமாக இருக்கிறது.
    • அ.தி.மு.க., தி.மு.க.வை ஓட ஓட விரட்டி விட, பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி அமித்ஷா கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டசபை தொகுதி வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார். ரோடு-ஷோவில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

    நான் கன்னியாகுமரியில் இருக்கக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தலில் பொன்.ராதா கிருஷ்ணன், விளவங்கோடு இடைத்தேர்தலில் நந்தினி ஆகியோருக்கு வாக்குகளை சேகரிக்க வந்த எனக்கு மிகச்சிறப்பான வரவேற்பை தந்த உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த தேர்தல் தேசம் முழுவதும் நடக்கிறது. என்.டி.ஏ. கூட்டணியினர் மோடிக்காக சிறப்பாக களப்பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்மொழி, தமிழ் பண்பாடு, தமிழகத்தின் மரியாதையை தேசம் முழுவதும் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் கொண்டு செல்ல பிரதமர் மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

    உங்களிடத்தில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு வருத்தமாக இருக்கிறது. 3,4 நான்கு ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் நான் தமிழில் பேச முயற்சிப்பேன். அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தமிழகத்தில் ஊழல் செய்து, தமிழகத்தின் வளர்ச்ச்சியை தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    நாம் இந்த தேர்தலில் உங்களிடம் கேட்டுக் கொளவது ஒன்றுதான். அ.தி.மு.க., தி.மு.க.வை ஓட ஓட விரட்டி விட, பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    தி.மு.க. சனாதன தர்மத்தையும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதையும் கேவலமாக பேசி கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை காயப்படுத்தி உள்ளனர். நாம் அத்தனை பேரையும் நம்மோடு இணைத்துக்கொண்டு வளர்ச்சியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம். மோடி நம் நாட்டை பாதுகாப்பாகவும், வளர்ச்சியடைந்ததாகவும் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

    நான் உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறேன். 3-வது முறையாக மோடி பிரதமராக வரும்போது 3-வது முறையாக பொன்.ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுத்து அனுப்பினால் தேசம் வளர்ச்சி பெறும். தமிழ்நாட்டில் நான் செல்லும் இடம் எல்லாம் பா.ஜ.க. 400 தொகுதிகளில் வெல்லும் என்கிறார்கள். 400 சீட்டுகளை நாம் கடக்க வேண்டும். அது பொன்னாரையும் சேர்த்து தான் இருக்க வேண்டும்.

    நீங்கள் பொன்னாருக்கு வாக்களிப்பீர்களா... தாமரை சின்னத்தில் பட்டனை அழுத்துவீர்களா...? விளவங்கோடு இடைத்தேர்தலில் நந்தினிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மத்திய மந்திரி அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இன்று குமரி மாவட்டத்திற்கு வந்தார்.
    • அமித் ஷா வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. பிரசாரத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய மந்திரிகள் மற்றும் தேசிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய மந்திரி அமித் ஷாவும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    அவர் நேற்று மதுரையில் ரோடு-ஷோ சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்பு அவர் அங்கிருந்து டெல்லிக்கு சென்றார். இந்நிலையில் மத்திய மந்திரி அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இன்று குமரி மாவட்டத்திற்கு வந்தார்.

    அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு இன்று காலை வந்தார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவிலுகு வந்து சேர்ந்தார். நாகர்கோவில் போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் அவரது ஹெலிகாப்டர் தரை இறங்கியது.

    அங்கு மத்திய மந்திரி அமித ஷாவை பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். இதையடுத்து மத்திய மந்திரி அமித் ஷா கார் மூலமாக தக்கலைக்கு புறப்பட்டார்.


    தக்கலை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுக்கடை வரையிலான ஒரு கிலோ மீட்டர் தூரம் அவர் வாகனத்தில் ரோடு-ஷோ சென்றார். அப்போது அவர் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டசபை தொகுதி வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.

    மத்திய மந்திரி ரோடு-ஷோ சென்ற பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் அமித் ஷாவை மலர் தூவி வர வேற்றனர். மேலும் தாமரை பூ சின்னத்தை காண்பித்து உற்சாகப்படுத்தினர்.

    தக்கலையில் ரோடு-ஷோவை முடித்துக் கொண்டு மத்திய மந்திரி அமித்ஷா கார் மூலமாக மீண்டும் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    அமித் ஷா வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாகர்கோவிலில் இருந்து தக்கலை வரை சாலையின் இருபுறங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் ரோடு-ஷோ நடந்த பகுதிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    மேலும் நாகர்கோவில்-தக்கலை இடையே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது. கனரக வாகனங்கள் அனைத்தும் தக்கலைக்கு செல்லாமல் மாற்று வழியில் இயக்கப்பட்டன.

    • குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது.
    • கோடை மழை பெய்து வருவதையடுத்து பொது மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இதனால் பொது மக்கள் குழந்தைகள் தவிப்பிற்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. ஆனால் நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் தொடர்ந்து வெயில் அடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இன்று அதிகாலையில் நாகர்கோவிலில் லேசான சாரல் மழை பெய்தது. அதன் பிறகு காலை 9 மணி முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாகவே காணப்பட்டது. அதன் பிறகு மழை பெய்ய தொடங்கியது. விட்டு விட்டு மழை பெய்தது. இடி மின்னலுடன் கொட்டிய மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது.

    கொட்டாரம், சாமிதோப்பு, சுசீந்திரம், குளச்சல், குழித்துறை, தக்கலை, மார்த்தாண்டம், தடிக்காரன்கோணம், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தக்கலையில் அதிகபட்சமாக 6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கோடை மழை பெய்து வருவதையடுத்து பொது மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பேச்சிபாறை அணையை பொருத்தமட்டில் அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.16 அடியாக உள்ளது. அணைக்கு 122 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.75 அடியாக உள்ளது.

    அணைக்கு 20 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • துன்பங்களை நீக்கும் கோவிலாக விளங்குகிறது.
    • பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் அம்பலந்தரா என்னும் இடத்தில் பழஞ்சிறை தேவி கோவில் அமைந்துள்ளது.

    700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் துன்பங்களை நீக்கும் கோவிலாக விளங்குகிறது. பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை என்றும், இந்த பிறவியிலேயே துன்பங்கள், தொல்லைகள் அகலும் என்பது நம்பிக்கை. ஆதிக் கடவுளான சிவபெருமான், ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என அனைத்திற்கும் பரம்பொருளாக திகழ்பவர். அவரது அன்புக்குரிய மனைவி, சக்தி சொரூபிணியான பார்வதிதேவி ஆவார்.

    உயிர்களை பேணிக்காத்து, அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற வேளையில் துயர் துடைப்பவள் அந்த தேவி. ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் மலைகளும், ஆழங்களும் (பள்ளத்தாக்குகள்) நிரம்பப் பெற்றிருந்தது கேரளம். அதனால் அந்த பகுதி 'மலையாளம்' என்று அழைக்கப்பட்டது.

    அப்போது திருவனந்தபுரம் என்ற பகுதி பெரும் காடாகக் கிடந்தது. அதனால் அந்த இடத்தை 'அந்தன் காடு' என்று அழைத்தனர்.

    உயரமான மலைகளுக்கு இடையே தோன்றி, பல இடங்களின் மண்ணை தழுவியபடி அந்தன் காடு வழியாக ஓடிய நீலாற்றின் கரையில், யோகீஸ்வரர் என்ற முனிவர் பார்வதி தேவியை நினைத்து தவம் செய்தார். அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ்ந்திடவும், ஆன்மிகம் தழைத்து வளர்ந்திடவும், தான் முக்தி அடைந்திடவும் அந்த தவத்தை செய்து கொண்டிருந்தார்.

    முனிவரின் தவத்தை மெச்சிய பார்வதி தேவி, அவர் முன்பாகத் தோன்றி, "இந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்து வழிபடுக.

    இங்கு வந்து என்னை வழிபடும் பக்தர்கள் அனைத்து நலனும் பெற்றிடுவர்" என்று கூறி மறைந்தாள். தனக்கு அம்பாள் எந்த வடிவத்தில் காட்சி தந்து அருள்புரிந்தாலோ, அதே வடிவில் ஒரு சிலையைச் செய்து வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார், முனிவர். பின்னர் அவர் முக்தி நிலையை அடைந்தார்.

    நாளடைவில் அந்த வனப்பகுதி அழிந்து போனது. காடாக இருந்த இடத்தில் சிறைச்சாலை அமைக்கப்பட்டது. கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சிறைச்சாலை பல ஆண்டுளுக்கு பின்னர் காலநிலை மாற்றத்தினாலும், பராமரிப்பு இன்றியும் அழிந்து போனது. ஆனால் பல நெடுங்காலமாக இங்கு சிறைச்சாலை இருந்ததைக் கொண்டு, அந்த பகுதி 'பழஞ்சிறை' என்று அழைக்கப்பட்டது.

    ஒரு கட்டத்தில் சிறைச்சாலை இருந்த இந்த பகுதியில் அதற்கு முன்பாகவே ஒரு அம்மன் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலை மீட்டெடுக்கப்பட்டு இங்கு ஆலயம் அமைக்கப்பட்டது. பழமையான சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள தேவி என்பதால் இந்த அன்னையை 'பழஞ்சிறை தேவி' என்றே பெயரிட்டு அழைத்தனர்.

    இங்கு அருள்பாலிக்கும் அம்பாளின் முன்பாக சிலையை வடிவமைத்த யோகீஸ்வர முனிவரும் வீற்றிருக்கிறார். கொடுங்கல்லூர் பகவதி அம்மனின் அம்சமாக இங்குள்ள பழஞ்சிறை தேவி கருதப்படுகிறாள்.

     இந்த ஆலயத்தில் அழகு வண்ணச் சிற்பங்கள், கண்களையும் கருத்தையும் கவரும் விதமாக அமைந்துள்ளன. கர்ப்பக் கிரகத்தை, 17 யானைகளும், 6 சிங்கங்களும் தாங்கியிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் பகுதியில் மும் மூர்த்திகள் தங்கள் தேவியர்களுடனும், கங்கையுடன் காட்சி தரும் சிவபெருமான் உருவமும் காணப்படுகிறது. பிரகாரத்தில் தசாவதாரக் காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. இங்கு நவக்கிரகங்கள், ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சசன், மாடன் திருமேனிகளும் இருக்கின்றன.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்வு மிகவும் புகழ்பெற்றது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலை போல, இந்த கோவிலில் பொங்கல் வைபவம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. பெண்கள் பலரும் கூடி நின்று பொங்கல் வைக்கும் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த விழாவைத் தவிர, மேலும் பல விழாக்களும் பழஞ்சிறை தேவி கோவிலில் நடைபெறுகின்றன. அவற்றில் மாசி மாதம் நடைபெறும் விழா முக்கியமானது. அந்த விழாவின் போது 'கன்னியர் பூஜை' என்ற பூஜை நடைபெறும். அம்மன் சிறு வயது தோற்றத்தில் இருப்பது போல பெண் குழந்தைகள் வேடமிட்டு புத்தாடை அணிந்து இந்த பூஜையில் பங்கேற்பார்கள்.

    இந்த நாளில் பெண்களும் தங்களின் தாலி பாக்கியத்திற்காக சிறப்பு மாங்கல்ய பூஜையை நடத்துகிறார்கள். அதே போல் இங்கு நடைபெறும் பூதபலி பூஜையும், பஞ்சபூத பொங்கல் விழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பூதபலி பூஜை என்பது நள்ளிரவில் நடைபெறும் பூஜையாகும். அம்மனுடைய அருள் பெற்ற ஆலய பூசாரி, தனது பாதங்களில் சிலம்பு அணிந்து, கரங்களில் திரிசூலம் ஏந்தி, மூவர்ண பட்டு உடுத்தி வருவார்.

    கோவிலின் முன்பாக நின்று நடனமாடியபடியே பின்னோக்கிச் செல்வார். அங்கிருக்கும் பூத கணங்களுக்கு நேராக காலத்திற்கு ஏற்றபடி திக்கு பலி நடத்தி அம்மனை வழிபடுவார். இந்த இரவு பூஜையில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.

    பஞ்சபூத பொங்கல் விழா என்பது மாசி மாதத்தின் 7-ம் நாள் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும். பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் என்கிறோம். மண்ணால் உருவாக்கப்பட்ட பானையில், கைகுத்தல் அரிசியை போடுவார்கள். பானையில் நீர் விட்டு, நெருப்பு மூட்டி பொங்கல் தயார் செய்வார்கள். காற்று என்னும் வாயுவை குறிக்கும் வகையில் அம்மனின் வாழ்த்தொலி, குரவை ஒலி ஆகியவை எழுப்பப்படும்.

    பொங்கல் தயாரானதும், வான் என்னும் ஆகாயம் வழியாக பொங்கல் பானைகள் மீது மலர் தூவப்படுகிறது. இந்த ஐந்து தத்துவங்களும் அடங்கியதால் அதற்கு 'பஞ்சபூத பொங்கல்' என்று பெயர் பெற்றது. நவராத்திரி விழா காலங்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த நாட்களில் கோவிலின் முன்பு அணையாத ஹோமம் நடத்தப்படுகிறது.

    நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் 'சண்டி ஹோமம்' நடத்தப்படும். மார்கழி மாதத்தில் அன்னைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், சித்திரை புத்தாண்டு, தமிழ் வருட பிறப்பில் சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கும். இத்தலத்தில் அருளும் அன்னையின் சன்னிதானத்திற்கு வந்து, சுயம்வர அர்ச்சனை நடத்தினால், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. அருள்சுரக்கும் இந்த அன்னையின் ஆலயத்தில் பங்குனி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தன்று திருவிழா தொடங்கும்.

    விழாவில் ஒவ்வொரு நாளும் சில பக்தர்கள் தங்கள் இனிய குரலில் 'தோற்றப்பாட்டு' என்னும் பாடலைப் பாடுவார்கள். அன்னையின் அவதார மகிமை இந்த பாடலில் வர்ணிக்கப்படுகிறது. இந்தப் பாடலை பாடுபவர்கள் அதற்கு முன்பாக 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.

    இந்த பாடலைக் கேட்டாலே அனைத்து பாவங்களும் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோவிலில் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    2024-ம் ஆண்டுக்கான பொங்கல் திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. காலை 10.55 மணிக்கு தேவியை பாடி காப்பு கட்டி குடியிருத்தி விழா தொடங்குகிறது. அன்று மாலை 6.30 மணிக்கு கேரள கல்வித் துறை மந்திரி வி.சிவன் குட்டி கலாசார கலை விழாவை தொடங்கி வைக்கிறார். மேயர் ஆர்யா ராஜேந்திரன் குத்து விளக்கேற்றி வைப்பார்.

    திருவிழாவின் முன்னோடியாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் புண்யாகம், பிரகார சுத்தி, திரவ்யகலச பூஜை ஆகியவை நடைபெறும். விழா நாட்களில் தினமும், காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், உஷபூஜை, கணபதி ஹோமம், திரவ்ய கலசாபிஷேகம் நடைபெறும். மாலையில் பஞ்சாலங்கார பூஜை, புஷ்பாபிஷேகம், மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதே போல் தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படும்.

    விழாவையொட்டி, 17-ந்தேதி இரவு 9 மணிக்கு களமெழுத்தும் சர்ப்பபாட்டும், 18-ந்தேதி இரவு 8.30 மணிக்கு அஷ்டமங்கல்ய பூஜை நடைபெறும்.

    7-ம் திருவிழாவான 19-ந்தேதி அன்று பிரசித்திப் பெற்ற பொங்கல் வழிபாடு நடக்கிறது. அன்று காலை வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு பகல் 10.25 மணிக்கு பொங்கல் வழிபாடு தொடங்குகிறது.

    மதியம் 1 மணி முதல் தாலப்பொலி உருள் நேர்ச்சை, பிற்பகல் 2.15 மணிக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்படும். இரவு 7.45 மணிக்கு குத்தியோட்டம், சுருள் குத்து. இரவு 10.35 மணிக்கு யானை மீது தேவி பவனி நடக்கிறது.

    20-ந்தேதி இரவு 7.40 மணிக்கு காப்பு அவிழ்ப்பு, 12 மணிக்கு குருதி தர்ப்பணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் மோகன்தாஸ், செயலாளர் விஜயன், துணை தலைவர் சந்திர சேனன், இணை செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.

    • சித்திரை பொங்கல் வழிபாடு இன்று தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது.
    • பிரதிஷ்டை தினவிழா அடுத்த மாதம் 11-ந் தேதி நடைபெறும்.

    நாகர்கோவில்:

    அருமனை அருகே உள்ள ஒற்றயால்விளை மாத்தூர்கோணம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா மற்றும் சித்திரை பொங்கல் வழிபாடு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது.

    விழாவில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு உஷபூஜை, காலை 7 மணிக்கு தேவி பாராயணம், 10.30 மணிக்கு களபாபிஷேகம், 11 மணிக்கு சமய சொற்பொழிவு, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு லட்சதீபம், இரவு 7.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், 8.30 மணிக்கு சிற்றுண்டி ஆகியவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் நிர்மால்யம், உஷபூஜை, தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடக்கிறது. சிறப்பு நிகழ்ச்சிகளாக நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சுமங்கலி பூஜை, 14-ந் தேதி காலை 8.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள், மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 15-ந் தேதி மாலை 4 மணிக்கு பூநீர் கும்ப பவனி, இரவு 2.30 மணிக்கு குருதி பூஜை ஆகியவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 16-ந் தேதி காலை 8 மணிக்கு துலாபாரம், 8.30 மணிக்கு வில்லிசை, 10 மணிக்கு சித்திரை பொங்கல் வழிபாடு, 10.30 மணிக்கு வலியபடுக்கை, மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் போன்றவை நடக்கிறது. பிரதிஷ்டை தினவிழா அடுத்த மாதம் 11-ந் தேதி நடைபெறும்.

    • ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று முதல் பங்குனி திருவிழா தொடங்குகிறது.
    • பக்தர்கள் கொடிக் கயிறு, சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பங்குனி திருவிழா தொடங்குகிறது. இதனையொட்டி ஆற்றூர் அருகே பள்ளிக்குழிவிளை பள்ளி கொண்ட காவு கோவிலில் இருந்து பக்தர்கள் கொடிக் கயிறு மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக அங்கிருந்து புறப்பட்டனர்.

    மேலும் முத்துக் குடை, தாலப்பொலியுடன், நாராயணா நாராயணா என்ற மந்திரம் முழங்க கழுவன் திட்டை, சந்தை, தபால் நிலைய சந்திப்பு வழியாக சென்று ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு கொண்டு சென்றனர். கொடி கயிறை அர்ச்சகர் கருவறையில் பூஜையில் வைத்தார்.

    திருவிழாவின் முதல் நாளான இன்று காலை 8.45 மணியில் இருந்து 9.30 மணிக்குள் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜையுடன் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடியேற்றப்படுகிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி வாகனத்தில் வலம் வருதல் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 10-ம் நாள் திருவிழாவில் சுவாமி ஆராட்டு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

    ×