search icon
என் மலர்tooltip icon
    • அடையாளம் காண முடியாததால் காணாமல் போனவர்களின் விவரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
    • அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறை நகரம் 4-ம் நம்பர் புதுத்தெருவில் மேட்டுத்தெரு குளம் உள்ளது. இந்த குளத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குளத்தில் அழுகிய நிலையில் கிடந்த பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இறந்து கிடந்தவர் பச்சைநிற கோடு போட்ட சட்டை அணிந்துள்ளார்.

    இவர் யார் என்று அடையாளம் காண முடியாததால் கடந்த 3 தினங்களில் காணாமல் போனவர்களின் விவரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதையடுத்து கைப்பற்றப்பட்ட உடலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
    • தஞ்சாவூர் அரண்மனை சத்திர நிர்வாகம் அரசர் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 97 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அரண்மனை சத்திரம் நிர்வாகத்திற்கு உட்பட்ட அரசர் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த பிளஸ் -2 பொதுத்தேர்வில் 97 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த நிலையில் அரசர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    அரசர் மேல்நிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்ட தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் நடந்த இந்த விழாவுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், கேடயம் வழங்கி பாராட்டினார். உயர்நிலைக் கல்வியில் சிறந்து படிக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

    தொடர்ந்து தேர்ச்சி விகிதத்தை அதிகரித்த ஆசிரிய- ஆசிரியைக ளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் அரண்மனை சத்திர நிர்வாகம் அரசர் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 97 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாகும். தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்திய ஆசிரிய-ஆசிரியைகளுக்கு பாராட்டுக்கள்.

    இதுக்கு முன்னர் 4000 மாணவ- மாணவிகள் அரசர் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளனர். அந்த இலக்கை தாண்டி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.

    அடுத்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஆறு வகுப்பறைகள் கொண்ட உயர்நிலைப்பள்ளி கட்டிடத்திற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    சத்திரம் நிர்வாகத்திற்கு உட்பட்ட அரசர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக தொடக்கப் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டன.

    இந்த புதிய கட்டிடமானது தனியார் பள்ளிகளுக்கு இணையாக உள்ள கட்டிடம் போன்று அமைக்கப்ப ட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் உள்ளது போல் நாற்காலிகள், கரும்பலகை உள்ளிட்ட பல வகைகள் அமைத்துள்ளோம். இந்த கட்டிடம் கட்டுவதற்கு கடுமையாக உழைத்து உள்ளோம்.

    தற்போது உயர்நிலைப் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இன்று பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இந்த கட்டிடமும் தரமானதாக அமையும். தற்போது அரசர் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் சத்திரம் தாசில்தார் ஜெயலட்சுமி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொ றியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் மணிகண்டன் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    • ஒரு திருக்குறளை பொருளுடனும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
    • ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் தினமும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ்ச் சொல்லும் எழுதி வைக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    அரசின் தலைமைச் செயலக துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், இணையங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் தினமும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ்ச் சொல்லையும், ஒரு திருக்குறளை பொருளுடனும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதனை ஏற்றுக் கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் அறிவுறுத்தலின் பேரில் தினமும் ஒரு திருக்குறள் என்ற பலகை வைக்கப்பட்டது.

    அதில் தினந்தோறும் ஒரு திருக்குறள் எழுதப்பட்டு அதற்கான விளக்கமும் எழுதி வைக்கப்பட்டு வருகிறது.மேலும் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் தினமும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ்ச் சொல்லும் எழுதி வைக்கப்பட்டு வருகிறது.

    • காலை 10 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளும், மதியம் 2 மணிக்கு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. 13394 மாணவர்கள், 14511 மாணவிகள் என 27905 மாணவ- மனைவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 92.16 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்து ள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந் தேதி வரை நடைபெற்றது.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்பட இதர பணிகளும் முடிவடைந்தன.

    இதனை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

    அதன்படி இன்று காலை 10 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளும், மதியம் 2 மணிக்கு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.

    தமிழத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் 91.39 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை 15066 மாணவர்களும், 15213 மாணவிகளும் என மொத்தம் 30279 பேர் எழுதினர். இதில் 13394 மாணவர்கள், 14511 மாணவிகள் என 27905 மாணவ- மனைவிகள் தேர்ச்சி பெற்றுள்ள னர். அதாவது 92.16 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்து ள்ளனர்.

    இதேபோல் இன்று மதியம் 11-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    • கடன் கொடுத்தவர்கள் செந்தமிழ் செல்வனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த செந்தமிழ் செல்வன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கூட்டுறவு காலனி பாலாஜி நகரை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (வயது39). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் செந்தமிழ் செல்வன் சில இடங்களில் கடனுக்கு பணம் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் கடனை திருப்பி செலுத்தவில்லை.

    இதனால் கடன் கொடுத்தவர்கள் செந்தமிழ் செல்வனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதன் காரணமாக அவர் கடனை திருப்பி செலுத்த முடியவில்லையே என மன வேதனையில் இருந்தார்.வாழ்க்கையில் விரக்தி அடைந்த செந்தமிழ் செல்வன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செந்தமிழ் செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
    • மினிடைடல் பூங்கா 3.40 ஏக்கரில் ரூ.30.50 கோடி செலவில், தரை மற்றும் மூன்று தளங்களுடன் 55,000 சதுர அடி கட்டுமானபரப்பளவுடன் நிறுவப்படும்

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் திகழும் டைடல் பூங்கா நிறுவனம், 1996-2001 ஆட்சிக் காலத்தில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியால் நிறுவப்பட்டது.

    இது, மாநிலம் முழுவதும் தகவல் தொழில் நுட்பத்துறையில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட வித்திட்டது.

    தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பத்துறையின் சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தும் வகையில், தற்போது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி பரப்புள்ளதாக மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இவை, டைடல் பூங்கா நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து டைடல் நியோ என்ற சிறப்பு நோக்க நிறுவனம் மூலமாக அமைக்கப்பட்டு வருகின்றன.

    விழுப்புரம் மற்றும் திருப்பூர் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 24.06.2022 அன்றும், வேலுார் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 18.02.2023 அன்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அவற்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் தூத்துக்குடி, தஞ்சாவூர், மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்களின் கட்டுமான பணிகள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    அதைத் தொடர்ந்து தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மினி டைடல் பூங்காவின் கட்டுமான பணிகள் வரைபடத்தை பார்வையிட்டனர். தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே மேல வஸ்தாசாவடியில் அமைய உள்ள

    மினிடைடல் பூங்கா 3.40 ஏக்கரில் ரூ.30.50 கோடி செலவில், தரை மற்றும் மூன்று தளங்களுடன் 55,000 சதுர அடி கட்டுமானபரப்பளவுடன் நிறுவப்படும்.

    இந்த மினி டைடல் பூங்காக்கள் மூலம் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்கள் அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே தங்கி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தவும் மற்றும் அப்பகுதிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சி மேம்படவும் வழிவகுக்கும்.

    • பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமை–களை வெளிப்படுத்தினர்.
    • முன்னாள் பள்ளி மாணவர்களின் நேசகரங்கள் சார்பாக நூலகத்திற்கு 10 பிளாஸ்டிக் சேர்கள் வழங்கப்பட்டது.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அமைந்துள்ள மதுக்கூர் கிளை நூலகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவி–க்கும் வகையில் பேச்சு மற்றும் ஓவிய போட்டி நடைபெற்றது.

    போட்டிகான ஏற்பாடுகளை நூலகர் அண்ணாமலை ஏற்பாடு செய்திருந்தார், இதில் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோருடன் வந்து ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமை–களை வெளிப்படுத்தினர்.

    இதில் வர்த்தக சங்க கவுரவ ஆலோசகர்கள் எஸ்.எஸ்.பி.பிரகாசம், சரவணன் வர்த்தக சங்க தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் மெட்ரோ.சேகர், வாசகர் வட்ட தலைவர் ராஜேந்திரன் சமூக ஆர்வலர்கள் முஜிபுர் ரஹ்மான், நவமணி, சபரிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவி–களுக்கு பரிசளித்தனர்.

    இறுதியாக முன்னாள் பள்ளி மாணவர்களின் நேசகரங்கள் சார்பாக நூலகத்திற்கு 10 பிளாஸ்டிக் சேர்கள் வழங்கப்பட்டது.

    முடிவில் மதுக்கூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் துணைத் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் துரையரசன் நன்றி கூறினார்.

    • காவேரி , வெண்ணாறு என இரண்டு ஆறுகளும் பல இடங்களில் அகலமாகவும் சில பகுதிகளில் குறுகியும் உள்ளது.
    • நீரோட்டத்திற்கு தடையாகமண்மேடிட்டு கருவேல முள் செடிகள்,புதர்கள் குறுங் காடுகள் போல் வளர்ந்து உள்ளன.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 189 தூர்வாரும் பணிகளுக்காக ரூ20.45 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டு ஆங்காங்கே பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகளை கண்காணிக்க மேலாய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன

    பிரதான வாய்க்கால்கள் அதிலிருந்து பிரியும் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. வாய்க்கால்கள் தூர்வாரப்படுவதால் வாய்க்காலில் கடைமடை வரை தண்ணீர் சீராக சென்று சேரும் என்றும், பருவ மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் விரைந்து வடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    காவேரி , வெண்ணாறு ஆகியவை இயற்கையாக அமைந்த ஆறுகள் என்பதால் இரண்டு ஆறுகளும் பல இடங்களில் அகலமாகவும் சில பகுதிகளில் குறுகியும் அமைந்துள்ளன. கல்லணை அருகில் புதூர்,சுக்காம்பார், கோவிலடி ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றில்நடுவில் நீரோட்டத்திற்கு தடையாகமண்மேடிட்டு கருவேல முள் செடிகள்,புதர்கள் குறுங் காடுகள் போல் வளர்ந்து உள்ளன.

    கல்லணையில் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் இந்த பகுதியில் மண்மேடிட்டு காடுகள்போல வளர்ந்து உள்ள பகுதிகளில் செல்ல இயலாது,

    காவிரி கரை ஓரத்தில் தண்ணீர் ஓடும் நிலை உள்ளது.இதைப்போலவே வெண்ணாற்றில் அடப்பன்பள்ளம் சைபன் எனப்படும் கீழ் பாலத்தின் அருகே 2கிலோமீட்டர் தூரத்திற்கு மண் மேடிட்டு ஆற்றின் நடுவே மரம் செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன.

    வெண்ணாற்றில் விண்ணமங்கலம் பாலத்தின் பகுதியில் நெய்வேலி காட்டாமணக்கு செடிகள் பரந்து வளர்ந்து நீரோட்டத்தை தடுக்கும் வகையில் உள்ளது.தற்போதுள்ள சூழலில் கல்லணை தலைப்பு பகுதியில் காவிரி மற்றும் வெண்ணாற்றில் நீரோட்டத்திற்கு தடையாக இருக்கும் குறுங் காடுகள் மற்றும் மண்மேடு களை அகற்றி சீரான நீரோட்டத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • மனுவின் தன்மையை கூறி அரசின் நலத்திட்டங்கள் அந்த பெண்ணுக்கு வழங்குவது குறித்து ஆலோசித்தார்
    • கலெக்டர் தன் வைப்பு நிதியில் ரூ.75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நேரடியாக வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மனைவி சந்தியா (வயது 43). இவர்களுக்கு அனுப்பிரியா (13), அன்பு (12) எனற 2 பிள்ளைகள் உள்ளன. மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில் இருதயராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதனால் 2 பிள்ளைகளோடு இனி எப்படி வாழ்வேன். போதிய வருமானமும் கிடையாது. என்ன செய்ய போகிறேன் என சந்தியா தவித்தார். மேலும் வசிக்க வீடு கூட இல்லாமல் நடுவீதிக்கு வந்த சந்தியா ஆரமரத்தடியில் வசித்து வந்தார்.

    வாழ்க்கையின் விரக்திக்கே சென்ற சந்தியா, தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரின் மனிதநேயமிக்க செயல், உதவும் குணம், அரசின் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர நடவடிக்கை எடுப்பது, ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் நிலையை அறிந்து அரசு சார்பில் வீடு கட்டி கொடுப்பது போன்ற பல்வேறு நல்ல செயல்களை செய்து வருவது நினைவுக்கு வந்தது.

    இதனால் கலெக்டரிடம் நமது நிலையை எடுத்து கூறி முறையிட்டால் வாழ்வில் ஒளி பிறக்கும் என உறுதியாக நம்பிய சந்தியா, வாராந்திர குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு இரு பிள்ளைகளுடன் சென்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரிடம் நிலைைமையை எடுத்து கூறி மனு அளித்தார்.

    இந்த மனுவை படித்து பார்த்த கலெக்டர், சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை அழைத்து மனுவின் தன்மையை கூறி அரசின் நலத்திட்டங்கள் அந்த பெண்ணுக்கு வழங்குவது குறித்து ஆலோசித்தார்.

    பின்னர் உடனே சந்தியாவிற்கு கும்ப கோணம் அசூர் அருகே வீடு கட்ட வீட்டு மனை பட்டாவும், ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வீடு கட்டித்தர நிதியையும் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஒதுக்கீடு செய்தார்.

    மேலும் அவரது குடும்ப சூழ்நிலையை கருத் தில் கொண்டு மாவட்ட கலெக்டர் தன் வைப்பு நிதியில் ரூ.75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நேரடியாக வழங்கினார். பின்பு தனது சொந்த பணத்தில் தொழில் செய்வதற்காக ரூ.10,000 தனியாக வழங்குவதாகவும் கூறினார்.

    கலெக்டரின் மனிதநேயமிக்க உதவும் செயலை பார்த்து சந்தியா ஆனந்த கண்ணீர் விட்டு நன்றி கூறினார். கருணை உள்ளத்தோடு உதவிய கலெக்டருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது என உணர்ச்சி பெருக்கில் சந்தியா கூறினார்.

    • கள்ளச்சாராயம் நடமாட்டம் உள்ளதா என கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியருக்கு தெரிவிக்க வேண்டும்.
    • பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பானவிபரங்களை தெரிவிக்க “10587 இலவச அழைப்புஎண்ணிற்கோ (அ)“8300018666” என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    மயிலாடுதுறை :

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராயம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் அனைத்து துறைஅலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் கள்ளச்சாராயம் நடமாட்டம் உள்ளதா என கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியருக்கு தெரிய–ப்படுத்தி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பானவிபரங்களை தெரிவிக்க "10587 இலவச அழைப்புஎண்ணிற்கோ (அ)"8300018666" என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ்,மாவட்ட காவல் துணைகண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார், உதவி ஆணையர் நரேந்திரன், மாவட்ட மேலாளர் நாகப்பட்டினம் வாசுதேவன் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் அர்ச்சனா, யுரேகா மற்றும் காவல் துறை அலுவலர்கள் வருவாய் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • குடியிருப்பு பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை கொண்டு நடைபெற்று வருகிறது.
    • பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தீவிர மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவாரூர்:

    கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் 2023- 2024 ஆம் கல்வியாண்டிற்கான எல்.கே.ஜி. வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை அந்தந்த குடியிருப்பு பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை கொண்டு நடைபெற்று வருகிறது.

    இந்த மாணவர் சேர்க்கை நிகழ்வில் 106 தன்னார்வ–லர்கள் கலந்து கொண்டு எல்கேஜி வகுப்பில் 113 மாணவர்களும், ஒன்றாம் வகுப்பில் 382 மாணவர்களும் மற்ற எல்லா வகுப்புகளையும் சேர்த்து மொத்தம் 706 மாணவர்களையும் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

    மாணவர் சேர்க்கை நிகழ்வில் கொரடாச்சேரி வட்டார கல்வி அலுவலர்கள் வீ.விமலா, கி.சுமதி, ஆசிரியர் பயிற்றுநர் க.சரவணன், ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜி.தியாகு, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அரசு பள்ளியில் பயில்வதால் கிடைக்ககூடிய பயன்பாடுகள் குறித்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தீவிர மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    மணக்கால் , எருக்காட்டூர் பகுதிகளில் ஆட்டோ விளம்பரம் மற்றும் மாணவர் விழிப்புணர்வு பேரணி மூலம் மாணவர் சேர்க்கை செய்யப்பட்டது.

    • உத்திரங்குடி, மேலஉத்தி–ரங்குடி, குமாரமங்கலம், கீழ பாலையூர் சாலைப் பணிகளை தொடங்க வேண்டும்.
    • நிதி ஆதாரத்திற்கு தகுந்தாற்போல் அனைத்து பணிகளும் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் உமாப்பிரியா தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி வரவேற்றார். தீர்மானங்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரவீன்குமார் படித்தார். கூட்டத்தில்

    நாகூரான்(அதிமுக): உத்திரங்குடி, மேலஉத்தி–ரங்குடி, குமாரமங்கலம், கீழ பாலையூர் சாலைப் பணிகளை தொடங்க வேண்டும். அபிவித்தீஸ்வரம் மயாண கொட்டகையை சீரமைக்க வேண்டும்.

    சத்தியேந்திரன்(திமுக): எண்கண் சுப்ரமணியசுவாமி கோயிலுக்கு புதிய திருமணமண்டபம் கட்ட ரூ.3 கோடி, கோயில் திருப்பணிகள் புனரமைக்க ரூ.1 கோடி வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    ஏசுராஜ்( அதிமுக): பெரும்புகழூர் ஊராட்சி வெட்டாற்றில் ரூ 8 லட்சம் மதிப்பில் படித்துறை கட்டியதற்கு நன்றி. அதுபோல் எங்கள் வார்டின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். வாசு(திமுக): காட்டூர் ஊராட்சியில் 3 சாலைகள், சமுதாயகூடம் பழுது நீக்கம் செய்ததற்கு நன்றி.

    மீரா(அதிமுக): மேலராதாநல்லூர் குழு கட்டிடம் மோசமாக உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.

    துணைத் தலைவர் பாலச்சந்திரன்: கொரடாச்சேரி ஒன்றியத்தில் தேவைப்படும் அனைத்து பணிகளையும் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படிப்படியாக அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ஒன்றியக்குழு தலைவர் உமாபிரியா பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கொரடாச்சேரி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளிலும் ரூ.12 கோடி மதிப்பில் 28 சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

    நிதி ஆதாரத்திற்கு தகுந்தாற்போல் அனைத்து பணிகளும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றார். கூட்டத்தில் பொறியாளர்கள் ரவீந்திரன், சசிரேகா, வட்டார வளர்ச்சி தணிக்கை அலுவலர் முரளி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் சுப்புலெட்சுமி நன்றி கூறினார். 

    ×