search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட் தேர்வு"

    • 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெற இலக்கு நிர்ணயம்.
    • இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

    தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்வதாகவும் இதற்கான பணிகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும் தி.மு.க. தெரிவித்து வருகிறது. அந்த வகையில், நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

    மேலும், இந்த திட்டத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைத்தார். அதன்படி கையெழுத்து இயக்கம் துவங்கி இன்றுடன் (டிசம்பர் 09) 50 நாட்கள் ஆகிறது. இதையொட்டி தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

     


    அதில், "மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கடந்த அக்டோபர் 21 அன்று தொடங்கி வைத்த #நீட்_விலக்கு_நம்_இலக்கு கையெழுத்து இயக்கம் மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது."

    "'50 நாட்கள் - 50 லட்சம் கையெழுத்துகள்' என்ற இலக்கோடு தொடங்கப்பட்ட இந்த கையெழுத்து இயக்கம், இன்றோடு 50 நாட்களை கடந்திருக்கிறது."

    "இணையத்தில் 56 லட்சம் - அஞ்சல் வழியே 16 லட்சம் என 72 லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துகள் பெறப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்கள் நீட் அநீதிக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்திட்டு வருகின்றனர்."

    "இந்த கையெழுத்துகளை எல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் சேலத்தில் நடைபெறவுள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் ஒப்படைக்கவுள்ளோம். இதற்காக களத்திலும் - இணையத்திலும் அயராது உழைத்து வரும் மாவட்டக் கழக செயலாளர்கள், ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள், தி.மு.க. ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."

    "நீட் ஒழிப்புக்கான இந்த கையெழுத்து இயக்கம் மகத்தான வெற்றியை பெறுகிற வகையில் உழைத்திடுவோம் - நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்குவோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.



    • நாம் நீட்டை எதிர்க்கும் நேரத்தில், நெக்ஸ்ட் தேர்வு என்று அடுத்த ஆபத்து நுழைகிறது.
    • உரிமைப் போரில் நாம் நிச்சயம் வெல்வோம்.

    சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 4-வது மாநாடு மற்றும் 20-ம் ஆண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்து பேசியதாவது:-

    உலகளவில் அறிவியல் துறையில் நடக்கும் புதிய ஆராய்ச்சிகளையும் மருத்துவத்துறையில் ஏற்படுகிற வளர்ச்சிகளையும் உடனுக்குடன் கவனித்து, தமிழ்நாட்டில் செயல்படுத்துவதன் விளைவாகத்தான் பன்னோக்கு மருத்துவமனைகள், சிறப்பு நோக்கு மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் சிறப்பான சிகிச்சையை வழங்கி வருகிறது.

    தமிழ்நாட்டில் உருவாக்கப் பட்டிருக்கும் மருத்துவக் கட்டமைப்புகளை சிதைக்கும் வகையில், முதலில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. மாணவி அனிதா தொடங்கி மாணவர் ஜெகதீஸ்வரன் வரை பல பேரின் உயிரை நீட் என்கிற கொடுவாள் பறித்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டப் போராட்டத்தை நாம் உறுதியோடு முன்னெடுத்திருக்கிறோம்.

    நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்ற ஆணவத்தோடு யார் பேசினாலும், எந்தப் பதவியில் இருப்பவர்கள் சொன்னாலும், நீட் விலக்கு என்கிற நம் இலக்கு, மக்களின் பேராதரவுடன் நிறைவேறியே தீரும். அதற்காக தி.மு.க.வின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி இணைந்து உங்களைப் போன்றவர்களின் ஆதரவோடு தொடங்கிய கையெழுத்து இயக்கம், இன்றைக்கு மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது.

    நாம் நீட்டை எதிர்க்கும் நேரத்தில், நெக்ஸ்ட் தேர்வு என்று அடுத்த ஆபத்து நுழைகிறது. அதையும் வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

    மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள் என்பதை நிரூபித்து காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதன் காரணமாக, தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வலுப்பெற்றுள்ள நிலையில், எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புக்கான இடங்களைக் குறைப்பதற்கும், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்கும் ஒன்றிய அரசு தடை விதிக்கும் போக்கையும் எதிர்த்தோம்.

    அதுபோலவே, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவ இடங்களுக்கான ஒற்றைச் சாளர முறையிலான மாணவர் சேர்க்கையை ஒன்றிய அரசு தனதாக்கிக் கொள்ளும் எதேச்சதிகாரப் போக்கை மேற்கொண்டிருக்கிறது. எல்லா வகையிலும் மாநில உரிமைகளையும், மருத்துவக் கட்டமைப்பையும் சிதைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஜனநாயக அறப்போர்க் களமாக சமூக சமத்துவ டாக்டர்கள் மாநாடு நடை பெறுகிறது.

    இது உங்கள் போராட்டம் இல்லை, எங்கள் போராட்டம்! தமிழ்நாட்டின் போராட்டம்! மாநில உரிமைகளுக்கான போராட்டம்! அந்த உரிமைப் போராட்டத்தில் எப்போதும் துணைநிற்போம். நீட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு, மருத்துவக் கல்வியில் மாநிலத்தின் உரிமை ஆகியவற்றோடு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இந்த உரிமைப் போரில் நாம் நிச்சயம் வெல்வோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • மறைமுகமாக எதிர்க்கட்சிகளை குறிவைப்பதாகத்தான் அர்த்தம் என்றனர்.
    • நீட்டுக்கு எதிரான ஹேஷ்டேக்கிற்கு எதிராக தாங்கள் எதுவும் செய்யவில்லை என்று நிறுவனம் சார்பில் கூறப்பட்டு உள்ளது.

    சென்னை:

    நீட் தேர்வுக்கு எதிராக நீட் விலக்கு நமது இலக்கு என்ற பெயரில் தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக கட்சி தொண்டர்கள் வெளியிடும் பதிவுகளை முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கி வருவதாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    மாநில துணை அமைப்பு செயலாளரான எஸ்.ஆஸ்டின் தனது முகநூல் பதிவு நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஊடக தள பதிவுகளை அகற்ற அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ என்று சந்தேகிப்பதாக அவர் கூறினார்.

    தி.மு.க.வின் மகளிர் பிரிவு சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் யாழினியும் புகார் தெரிவித்துள்ளார். உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை பேஸ்புக் 'தவறாக வழி நடத்துவது' என்று எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் தவறான முடிவுகளை தடுக்க போராடும் பதிவுகளை அகற்றுவது மறைமுகமாக எதிர்க்கட்சிகளை குறிவைப்பதாகத்தான் அர்த்தம் என்றனர்.

    இந்தி திணிப்பு, பகுத்தறிவு அல்லது நீட் உள்ளிட்ட அரசியல் தலைப்புகளில் வெளியிடப்படும் பதிவுகளை கடந்த காலங்களிலும் இது போன்று தன்னிச்சையாக நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்கள்.

    ஆனால் நீட்டுக்கு எதிரான ஹேஷ்டேக்கிற்கு எதிராக தாங்கள் எதுவும் செய்யவில்லை என்று நிறுவனம் சார்பில் கூறப்பட்டு உள்ளது.

    • நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.
    • கையெழுத்து இயக்கத்தை ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    மாணவ-மாணவிகளின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் சென்னையில் தொடங்கி வைத்தார்.

    தென்காசி வடக்கு மாவட்ட சிறுபான்மை உரிமை நல அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான ஆயுதம் கையெழுத்திட்ட அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறுபான்மை உரிமை நல அணி மாவட்ட அமைப்பா ளர் நாகூர் கனி, மாவட்ட தலைவர் மரியலூஸ் பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நீட் எதிர்ப்பு கையெழுத்து பெற்ற 1,000 அட்டைகளை சிறுபான்மை உரிமை நல அணி மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் வழங்கினர்.

    தொடர்ந்து தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்டம் சார்பாக கையெழுத்து இயக்கத்தை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட அவைத்தலைவர் பத்ம நாபன், நகர செயலாளர் பிரகாஷ், சிறுபான்மை உரிமை நல அணி மாவட்ட துணைத் தலைவர் ஞானையா எழிலன், மாவட்ட துணை அமைப்பா ளர்கள் பாதுஷா, அப்துல் காதர், திவான் அலி, பாண்டித்துரை, மைதீன் கனி, அப்துல் ஜாபர், மாவட்ட விளையாட்டு மேம் பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் தொ.மு.ச. மகாராஜன், கேபிள் கணேசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கோப்புகள் சரியாக அமைந்திருந்தால் கவர்னர் ஏன் கையெழுத்து போட மாட்டார்.
    • மக்கள் நலனை தி.மு.க. அரசு மறந்ததற்கு வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்.

    இதற்காக இன்று சிறப்பு கூட்டம் நடத்தி மீண்டும் நிறைவேற்றி அனுப்புகிறார்கள். இது பற்றி பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    இந்த விவகாரத்தில் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்கள்? கவர்னருக்கு கண்டனம், கவர்னருக்கு எதிராக போராட்டம் இப்படி ஒரே அஜண்டாவை வைத்து தி.மு.க. அரசியல் செய்கிறது.

    கவர்னருக்கு எதிரான அவர்களது நடவடிக்கையில் ஆச்சரியம் இல்லை. தாங்கள் செய்த ஊழல்கள் வெளியே வந்துவிடக்கூடாது. ஊழல் வழக்குகளில் சிக்கும் அமைச்சர்களை பற்றி பொதுமக்கள் பேசக்கூடாது என்பதற்காக திசை திருப்பும் முயற்சியை தி.மு.க. செய்து வருகிறது.

    கோப்புகள் சரியாக அமைந்திருந்தால் கவர்னர் ஏன் கையெழுத்து போட மாட்டார். நீட்டை பொறுத்தவரை தமிழகத்தை தவிர எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மாநில மக்களுக்கு நன்மை பயக்காத தனக்கும், குடும்பத்துக்கும் தங்கள் அமைச்சரவை சகாக்களுக்கும் மட்டுமே பலன் அளிப்பதாக இருந்தால் கவர்னர் எப்படி அனுமதிப்பார்? ஒருமுறைக்கு பலமுறை யோசித்துதான் முடிவெடுப்பார். அவர் என்ன தாசில்தார் வேலையா பார்க்கிறார்? இருக்கிற சாலைகள் எதுவும் சரியில்லை. 15 நாட்களுக்கு முன்பு போட்ட ரோடுகளும் குண்டும் குழியுமாகிவிட்டன.

    ஆனால் முதல்வர் வீடு, அலுவலகம், அதை போல அமைச்சர்கள் வீடுகள் இருக்கும் சாலைகள் எங்கும் பழுதாகவில்லை. அந்த சாலைகள் மட்டும் பழுதாகவில்லை. இது எப்படி?

    மக்கள் நலனை தி.மு.க. அரசு மறந்ததற்கு வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். ஊழலை மறைக்க இதுபோல் இன்னும் நாடகம் ஆடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கையெழுத்து இயக்கத்தில் எல்லா தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    • கவிஞர் வைரமுத்துவும் நீட் தேர்வுக்கு எதிரான இந்த இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டார்.

    சென்னை:

    நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நபராக கையெழுத்து போட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார். நீட் தேர்வுக்கு எதிரான இந்த கையெழுத்து இயக்கத்தில் எல்லா தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டனர்.

    இதையொட்டி கவிஞர் வைரமுத்துவும் நீட் தேர்வுக்கு எதிரான இந்த இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டார். இதுகுறித்து அவர் பதிவிட்ட கருத்துக்கள் வருமாறு:-

    நீட் தேர்வுக்கு எதிராக எனது கையெழுத்து இடம் பெறுவதில் மகிழ்ச்சி. தேர்வு எழுதியே மாணவர்கள் வாழ்நாள் கழிந்து விடுகிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். நீட் தேர்வு சமூகத்திற்கு எதிரானது. சமூக நீதிக்கு எதிரானது. மாணவர்களுக்கு எதிரானது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
    • தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களின் சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருக்கிறது.

    அரூர்:

    தருமபுரி மாவட்டத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அரூரில் செய்திகளை சந்தித்தார்.

    தருமபுரி மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு, புளி, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த பொருட்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன.

    வேளாண் விளைபொருள்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றவும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். சென்னை அதன் சுற்று வட்டாரப் பகுதியில் மட்டுமே தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    தமிழகத்தில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் போதை ஒழிப்பு பிரிவுக்கு கூடுதலாக 18 ஆயிரம் போலீசார்களை பணியில் அமர்த்த வேண்டும். நீட் தேர்வில் விலக்கு கோரும் கோரிக்கையை அனைத்து கட்சிகளும் இணைந்து வலியுறுத்த வேண்டும். சித்தேரி, வத்தல்மலையை சுற்றுலா தலமாகவும், தீர்த்தமலையை ஆன்மீக தலமாகவும் தமிழக அரசு மாற்ற வேண்டும். தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    அரூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காரல்மார்க்ஸ் ஆகியோர்தான் பா.ம.க.வின் முன்னோடிகள். எனவே, எங்கள் கட்சியின் வழிகாட்டிகள், முன்னோடிகளை எதிர்பவர்களை பா.ம.க. எதிர்க்கும். இந்தியாவில் சமூக நீதியை கொண்டு வந்தவர் தந்தை பெரியார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கோவில் முன்பாக உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்து எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. தமிழக கவர்னர் நடுநிலையாக செயல்பட வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களின் சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருக்கிறது.

    தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டம் வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்தியபோது சாதி, மதம், அரசியல் கட்சிகளை அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கையெழுத்திட்டனர். 

    அதேபோல நீட் என்பது தமிழகத்தில் பொது பிரச்சனை ஆகையால் தி.மு.க.வின் நீட் எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு நாங்களும் ஆதரவு தருவோம் என்றும் நீட் தேர்வில் அரசியல் செய்யக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து என்ற இலக்குடன் நடந்து வருகிறோம்.
    • நீட் விலக்கு என்பதும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஒன்றுதான்.

    சென்னை:

    நீட் விலக்கு நமது இலக்கு என்று கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கையெழுத்து பெறுவதற்காக இன்று சத்யமூர்த்தி பவன் சென்றார்.

    அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்றார். அதை தொடர்ந்து கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்திட்டனர். முன்னாள் மாநில தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை, எம்.எல்.ஏ.க்கள் அசன்மவுலானா, துரைசந்திரசேகர், அரசு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், அகரம் கோபி, மாவட்ட தலைவர்கள் எம்.ஏ.முத்தழகன், சிவராஜ சேகரன், டில்லிபாபு, அடையாறு துரை, ரஞ்சன்குமார், எம்.எஸ்.திரவியம் உள்பட பலர் கையெழுத்திட்டனர்.

    பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் விலக்கு நமது இலக்கு என்ற இந்த கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி இணைந்து இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறது.

    50 நாளில் 50 லட்சம் கையெழுத்து என்ற இலக்குடன் நடந்து வருகிறோம்.

    நீட் விலக்கு என்பதும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஒன்றுதான். கடந்த 6 வருடத்தில் நீட் தேர்வால் 22 மாணவர்கள் இறந்து உள்ளார்கள்.

    கையெழுத்து இயக்கம் தொடங்கி இதுவரை ஆன்லைனில் 3 லட்சம் பேர் கையெழுத்து போட்டு உள்ளார்கள். 10 லட்சம் தபால் அட்டைகள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதில் 8 லட்சம் கார்டுகள் கையெழுத்தாகி உள்ளன.

    இன்று கூட்டணி கட்சித் தலைவர்களிடம் வாங்கி வருகிறோம். இது தி.மு.க.வுக்கு மட்டுமான பிரச்சினை அல்ல. எல்லா கட்சியினரும் கலந்து கொள்ள வேண்டும்.

    எனவே எல்லா கட்சியினரிடமும் சென்று கையெழுத்து வாங்குவேன். வருமான வரித்துறை, அமலாக்கத் துறை எல்லாமே பா.ஜனதாவின் பல்வேறு அணிகள் போல்தான் செயல்படுகிறது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இந்த அணிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்த அணிகள் நடத்தும் சோதனைகளை கண்டு அஞ்சப் போவதில்லை. சட்டப்படி சந்திப்போம்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    • தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்.
    • நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று ராம்ராஜ் புதிய காட்டன் ஷோரூமை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். இருந்தாலும் அதுவரைக்கும் பள்ளிகளில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் சிறப்பு பயிற்சி நடைபெறும்.

    ஏனென்றால் வெளியே பல லட்சம் கொடுத்து மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    இதனால் மாணவர்களின் நிதி சுமையை குறைப்பதற்காக பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கும் பணி நடந்து வருகிறது.

    நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. இது தொடர்பாக பள்ளிகளில் மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவது தவறு இல்லை என்று நீதிமன்றமே கூறியுள்ளது. அரசு தங்களது கருத்துகளை இதுபோன்று வெளிப்படுத்துவதில் தவறில்லை எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும்.
    • வாரத்தின் 5 நாட்கள், பள்ளி முடிந்த பிறகு மாலை நேரத்தில் இந்தப் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும்.

    சென்னை:

    நடப்பு கல்வி ஆண்டு துவங்கி 5 மாதங்கள் முடிவடைந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் துவங்காமல் உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகளை உடனடியாக துவங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதற்கிடையே, நீட் பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.

    அதன்படி , தற்போது நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

    தொழிற்கல்வி இணை இயக்குனர் அனுப்பி உள்ள அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்களில் ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு எழுத விருப்பமும் ஆர்வமும் உள்ள மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும்.

    மேலும், பெரும்பாலான மாணவர்கள் நுழைவுத் தேர்வு பயிற்சியில் பங்கேற்கும் வகையில், அனைத்து மாணவர்களையும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமூட்டி ஊக்கப்படுத்தலாம். ஆனால் கட்டாயப்படுத்துதல் கூடாது.

    மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு பயிற்சி வழங்க, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் முதுகலை பாட ஆசிரியர்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட வேண்டும்.

    நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில் தன்னார்வத்துடன் செயல்படவல்ல ஓய்வுபெற்ற ஆசிரியர்களையும் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களையும் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் இருப்பின் இக்குழுவில் இணைத்துக் கொள்ளலாம்.

    அனைத்து வேலைநாட்களிலும் பாடவாரியாக மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை பின்வருமாறு ஜே.இ.இ., நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பள்ளியிலேயே பயிற்சி வகுப்புகள் கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும்.

    திங்கள்-தாவரவியல், கணிதம்; செவ்வாய்-இயற்பியல்; புதன்-விலங்கியல், கணிதம்; வியாழன்-வேதியியல்; வெள்ளி-மீள்பார்வை, சிறுதேர்வு என பள்ளி அளவிலான தினசரி தேர்வுகள் வார இறுதி நாளில் பயிற்சி வகுப்புகள் மற்றும் அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி வழங்கிட மாநிலக்குழு உதவி புரியும். மேலும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியேயும் மாணவர்களுக்கு தேர்விற்கான பயிற்சிகள் வழங்கப்படும். அதுசார்ந்து அவ்வப்போது வாட்ஸ்அப்பில் பகிரப்படும்.

    நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தின் அடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்ககத்தால் வழங்கப்படும் கால அட்டவணையை பின்பற்றி முறையாக பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

    பயிற்சி வழங்கப்படும் பாடத்தலைப்பினைப் பற்றிய சிறு அறிமுகம், அப்பாடப் பகுதியில் இருந்து நுழைவுத் தேர்வுகளுக்கு எதிர்நோக்கப்படும் வினாக்களைத் தீர்ப்பதற்கான சிறு குறிப்புகள், சூத்திரங்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான எளிய முறைகள் ஆகியன மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.

    இப்பயிற்சிகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு பாட வல்லுநர்கள் (5 பாடங்களுக்கு 2 ஆசிரியர்கள் என 10 பேர்) அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும்.

    முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நிலை) இக்குழுவின் உறுப்பினர் செயலராக செயல்படுவார்.

    பள்ளிதோறும் இப்பயிற்சியில் பங்குபெறும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் மாவட்ட அளவில் பங்குபெறும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை தொகுத்தல் மற்றும் தேர்வு சார்ந்த ஏற்பாடுகள் ஆகியவற்றை முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வேண்டும்.

    மாநிலக் குழுவில் இருந்து வரும் வினாத்தாள்கள், விடைக்குறிப்புகள் ஆகியவற்றை பள்ளிகளுக்கு அனுப்பி இச்செயல்பாடுகள் நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும். மாவட்ட அளவிலான இருவகையான (மாவட்டக்குழு மற்றும் பாட ஆசிரியர்கள் குழு) வாட்ஸ்அப் உருவாக்கி தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல் வேண்டும்.

    இதற்கு விருப்பமுள்ள மாணவ / மாணவிகளை தேர்வு செய்ய வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும்.

    பயிற்சிக்கான கால அட்டவணையை மாநிலக் குழுவின் உதவியோடு தயார் செய்வது. பயிற்சிக்குரிய வினாத்தாள்களைத் தயார் செய்ய முகாம் நடத்துதல். வினாவிற்கான விடைகளைத் தயாரித்தல்.

    பயிற்சிக்குத் தேவையான காணொளிக் காட்சிகளைத் தயாரித்தல். குழுக்களின் பணிகளை ஒருங்கிணைத்தல். மாவட்ட பணிகளை ஆய்வு செய்தல்.

    அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்பு கள் நடைபெறச் செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

    ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு பயிற்சிக்கு கால அட்டவணை தயார் செய்தல். பயிற்சிக்குரிய வினாத்தாள்கள், விடைக் குறிப்புகள் தயார் செய்தல்.

    ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை கண்காணித்தல். மாவட்டக் குழுக்கள் விளக்குவதை கண்காணிப்பது. அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் வட்டார அளவில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதைக் கண்காணிப்பது, பாடம் ஒன்றிற்கு 4 ஆசிரியர்கள் வீதம் 20 ஆசிரியர்களை ஒன்றிணைத்துச் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு ஆஸ்பத்திரியில் அவரது உறவினர்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர்.
    • அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள இரவார் கிராமத்தை சேர்ந்தவர் ரவி, விவசாயி. இவரது மகள் பைரவி (18).

    இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். தொடர்ந்து மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுதினார். ஆனால் அதில் குறைந்த மதிப்பெண் பெற்றார். இதனால் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த அவர் கடந்த வாரம் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தார்.

    பின்னர் மருந்து குடித்ததை வீட்டில் கூறாமல் வயிற்று வலி என்று பெற்றோரிடம் கூறி வந்தார். இதையடுத்து அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது .

    இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மதியம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர்.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது. இதையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் அவரது உறவினர்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர். இதையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

    • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போராடி வருகிறோம்.
    • 6 ஆண்டுகளில் அனிதா ஆரம்பித்து 22 குழந்தைகள் நீட் தேர்வு காரணமாக இறந்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அழகிய மண்டபத்தில் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பலமுறை வருகை தந்துள்ளேன். கட்சி உறுப்பினராக இளைஞரணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக வந்து உள்ளேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது என்னால் மறக்க முடியாது. அமைச்சர் பதவி ஏற்று உங்களின் வாழ்த்துக்களை பெற தற்பொழுது வந்துள்ளேன்.

    சேலத்தில் இளைஞரணி மாநாடு பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இதற்கு அனுமதி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    காஞ்சிபுரம், தேனி, விருதுநகர், நெல்லையை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் தற்போது செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    1956-ம் ஆண்டு குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்தது. இன்னும் 3 நாட்களில் குமரி மாவட்டம் பிறந்தநாள் கொண்டாடுகிறது. குமரி மாவட்டம் பிறந்த நவம்பர் மாதத்தில் தான் நானும் பிறந்துள்ளேன். சூரியனை ஓவியமாக, புகைப்படமாக பார்ப்பார்கள்.

    ஆனால் குமரி மாவட்ட மக்கள் மட்டும் தான் சூரியன் உதிப்பதை நேரில் பார்க்கிறீர்கள். வடக்கில் இமயமலை உயரமாக உள்ளது. தெற்கில் அய்யன் திருவள்ளுவர் சிலை 133 அடி உயரத்தில் உள்ளது. தலைவர் கலைஞர் இந்த சிலையை நிறுவினார். தலைவர் கட்டளையை எதிர்பாராமல் சுயநலம், தன்னலம் பார்க்காமல் நிறைவேற்றுபவர் தான் செயல்வீரர்கள். தலைவர் இடும் கட்டளையை செயல்படுத்துபவர்கள் தான் செயல்வீரர்கள்.

    சேலத்தில் நடக்கும் மாநாட்டிற்கு அழைக்கத் தான் நான் வந்திருக்கிறேன். என்னை விட நீங்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளீர்கள். உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு இளைஞரணியே சாட்சி.

    தி.மு.கவில் 23 அணிகள் உண்டு. கழகத்தின் முதன்மை அணி என கலைஞராலும், முதல்வராலும் பாராட்டப்பட்ட அணி இளைஞரணி. இளைஞரணி 1981-ல் ஆரம்பிக்கப்பட்டது. முதல் மாநாட்டை 2017-ல் கலைஞர் தலைமையில் நம் தலைவர் நெல்லையில் நடத்தினார். 2-வது மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி நடக்கிறது. குடும்பத்துடன் அனைவரும் கலந்துகொண்டு வெற்றி பெற வைக்க வேண்டும்.

    2 மாதம் முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடந்தது. தயிர் சாதமா, புளி சாதமா என தெரியவில்லை. மாநாடு எதற்காக நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. மிமிக்ரி, ஆடல்பாடல், பட்டப்பெயர் வழங்கும் நிகழ்ச்சிகள் மாநாட்டில் நடந்தன.

    கட்சிகொள்கை, இயக்க வரலாறு, இயக்க தலைவர்கள் பற்றி பேசவில்லை. ஒரு மாநாடு எப்படி நடக்கக்கூடாது என நடந்ததுதான் மதுரை மாநாடு.

    இந்தியாவில் இப்படி ஒரு மாநாடு நடந்ததில்லை என்ற அளவில் சேலம் மாநாடு நடக்க வேண்டும். நம் மாநாட்டில் இயக்கம் மற்றும் கொள்கை பற்றி பேசவேண்டும். தலைவர் ஆட்சி ஏற்று 2½ ஆண்டுகள் ஆகிறது. தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளையும், சொல்லாத வாக்குறுதிகளையும் செய்துள்ளோம்.

    இதில் 4 சாதனைகள் மிக முக்கியமாக உள்ளது. ஆட்சி பொறுப்பேற்றதும் முதலமைச்சர் போட்ட 3 கையெழுத்தில் முதல் கையெழுத்து மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து. பெண்கள் கல்விக்காக புதுமைப்பெண் திட்டம். அவர்கள் வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாய் ஊக்கதொகை வழங்குகிறோம்.

    1 முதல் 5 வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 31 ஆயிரம் பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

    இந்தியாவுக்கு எடுத்துக்காட்டான இந்த திட்டத்தை பக்கத்து மாநிலங்கள் பாராட்டுகின்றன. முன்பு வேலைக்குச் செல்பவர்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கவிலை என வருத்தப்பட்டார்கள். இப்போது முதலமைச்சரை நம்பி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

    தேர்தல் வாக்குறுதியில் சொன்ன திட்டமான அனைத்து மகளிருக்கும் கலைஞர் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். ஒரு கோடியே ஆறு லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு அதனை வழங்கி வருகிறோம். ஆனால் பிரதமர் மோடி சொன்ன ரூ.15 லட்சம் என்னாச்சு.

    மோடி, மத்திய பிரதேசம் உள்பட எங்கு சென்றாலும் தி.மு.க. பற்றியும், தலைவரை பற்றியும் குறிப்பாக என்னைப் பற்றியும்தான் பேசுகிறார். அவருக்கு என் மேல் அவ்வளவு பிரியம். பிரதமர் மோடி 9 ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை.

    தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி நடப்பதாக சொல்கிறார். தமிழகமே ஒரே குடும்பமாக செயல்படுகிறோம். மத்திய ஆட்சியில் ஏர்போர்ட், ரோடு, ரெயில்வே என அனைத்து பொதுத்துறையும் அதானியிடம் கொடுத்து விட்டார். ஒரு தனியார் துறை எப்படி 9 வருடத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தது.

    சி.ஏ.ஜி அமைப்பு அறிக்கையில் 9 ஆண்டில் பா.ஜ.க ஊழல் வெளியே வந்துள்ளது. 7½ லட்சம் கோடி ரூபாய் எங்கே போனது என தெரியவில்லை. ஒரு கிலோ மீட்டர் ரோட்டுக்கு 250 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள். ரமணா படத்தில் இறந்து போனவருக்கு ஆபரேஷன் செய்ய சொன்னதுபோன்று, ஆயுஷ்மன் பாரத் திட்டத்தில் இறந்துபோன 88 ஆயிரம் பேருக்கு ஆயுள் காப்பீட்டுத்திட்டம் கொடுத்திருக்கிறார்கள்.

    நான் பேசாததை பேசியதாக பரப்பினார்கள். நான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். நான் மன்னிப்பு கேட்க மாட்டேன், நான் கலைஞரின் பேரன். எடப்பாடிக்கு நம் தலைவர் ஒரு பெயர் வைத்திருக்கிறார். பாதம் தாங்கி பழனிசாமி. அவர் பிரதமர், அமித்ஷாவின் பாதங்களை தாங்கி வருகிறார்.

    நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போராடி வருகிறோம். கிராமப்புற மாணவர்கள் டாக்டர் ஆக வேண்டும் என கருதி பிளஸ்-2 மதிப்பெண்ணே போதும் என மருத்துவ நுழைவுத்தேர்வை ரத்து செய்தது கலைஞர். ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வை நுழைய விடவில்லை.

    பா.ஜ.க நீட் தேர்வை நுழைத்து விட்டது. 6 ஆண்டுகளில் அனிதா ஆரம்பித்து 22 குழந்தைகள் நீட் தேர்வு காரணமாக இறந்துள்ளனர். கடைசியாக சென்னையைச் சேர்ந்த மாணவன் ஜெகதீசனும், அவரது தந்தையும் இறந்துவிட்டனர். நீட் தேர்வு தி.மு.க பிரச்சனை இல்லை. அனைத்து மாணவர்களின் கல்வி உரிமை பிரச்சனை ஆகும்.

    நீட் தேர்வை ரத்து செய்வோம் என சொன்னோம். 2 முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். மாணவர்களின் கல்வி உரிமை அது. பா.ஜ.க கூட்டணியை விட்டு அ.தி.மு.க. வெளியே வந்து விட்டது. இப்போதாவது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் எனவும். கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவியுங்கள் எனவும் எடப்பாடி பழனிசாமியிடம் சொன்னேன்.

    இந்த போராட்டத்தில் வெற்றிபெற்றால் அதற்கான வெற்றிக்கான காரணம் நீங்கள் என நாங்கள் சொல்கிறோம். ஆனால், நீட் ரத்து கையெழுத்து மிகப்பெரிய நாடகம் என்கிறார் பழனிசாமி. உண்மையான நாடகக்காரர் யார் என சசிகலா, பன்னீர்செல்வத்திடம் கேட்டால் தெரியும்.

    மக்களை சந்திக்காமல் கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை அடைத்து வைத்து சசிகலா காலில் விழுந்து முதல்வர் ஆனார். பின்னர் சசிகலாவையே கட்சியில் இருந்து நீக்கிவிட்டார் பழனிசாமி.

    சேலத்தில் நடைபெறும் இளைஞர்களின் மாநாட்டில் 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட போஸ்ட் கார்டை முதலமைச்சரிடம் வழங்க வேண்டும்.

    இந்தியாவை மீட்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். 2021-ல் அடிமைகளை வீட்டிற்கு அனுப்பினீர்கள். தற்பொழுது 2024-ல் நடைபெறும் தேர்தலில் அடிமைகளை மட்டும் இன்றி எஜமானர்களையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். சேலம் இளைஞர் அணி மாநாடு இதற்கு முத்தாய்ப்பாய் அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் சேலம் மாநாட்டிற்கு ரூ.50 லட்சத்திற்கான நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இடம் வழங்கினார்.

    ×