search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைகள்"

    • தீ விபத்தில் கடைகள் அனைத்தும் எரிந்து நாசமானது.
    • கடை அமைத்திருந்த வியாபாரிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் காதர்பேட்டை பனியன் பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் கடைகள் அனைத்தும் எரிந்து நாசமானது. அங்கு கடைகள் அமைத்திருந்த சிறு, குறு வியாபாரிகள் தங்களது முதலீடுகளை இழந்து கடுமையாக பாதிப்புக்கு ஆளானார்கள்.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் காதர்பேட்டையில் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். அங்கு கடை அமைத்திருந்த வியாபாரிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

    இதைத்தொடர்ந்து அங்கு கடை அமைத்திருந்த 57 கடை வியாபாரிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கான காசோலையை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் அறக்கட்டளை சார்பாக வியாபாரி சசிகுமாரிடம் வழங்கப்பட்டது.

    இதில் ஏற்றுதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர். மேலும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில், கடை வியாபாரிகளின் நிலையை விளக்கி, அரசின் சார்பில் நிவாரண உதவித்தொகை வழங்க தமிழக முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.

    • சுமார் 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.
    • தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காதர்பேட்டையில் பனியன் பஜார் செயல்பட்டு வருகிறது. இங்கு 50 கடைகள் உள்ளன. திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து ஆடைகள் வாங்கி இங்கு விற்பனை செய்து வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான உள்நாட்டு பனியன் ஆடைகள், உள்ளாடைகள் என அனைத்து ஆடை ரகங்களும் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து விற்பனைக்கு தேவையான ஆடைகளை வாங்கி செல்வார்கள். மேலும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான ஆடைகளை வாங்கி செல்கின்றனர். இதனால் காதர்பேட்டை பனியன் சந்தை காலை முதல் இரவு வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்நிலையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடைகள் அனைத்தையும் பூட்டி விட்டு வியாபாரிகள் வீடுகளுக்கு புறப்பட்டனர். 2 காவலாளிகள் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வியாபாரிகள் கடையை பூட்டி விட்டு சென்ற சிறிது நேரத்தில் பனியன் பஜாருக்குள் உள்ள ஒரு கடையில் திடீரென தீப்பற்றியது. இதைப்பார்த்த காவலாளிகள் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

    ஆடைகள் என்பதால் தீ மளமளவென பற்றி அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது. ஒவ்வொரு கடைகளிலும் பனியன் ஆடைகள் அதிகளவில் இருந்ததால் தீ மளமளவென பற்றி கொளுந்து விட்டு எரிந்தது. உடனே இது குறித்து திருப்பூர் வடக்கு, மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 10 நிமிடத்துக்குள் 50 கடைகளுக்கும் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

    தீயணைப்பு வீரர்கள் இரவு 9-30மணி முதல் இரவு 12-30 மணி வரை சுமார் 3 மணி நேரம் வரை போராடி தீயை மேலும் பரவவிடாமல் அணை த்தனர். தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக ராயபுரம் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

    ஒவ்வொரு கடையிலும் பல லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தது. 50 கடைகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.3 கோடி மதிப்பிலான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இன்று காலை வியாபாரிகள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் தீயில் எரிந்து சேதமான பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரங்கள் மூலம் சேதமான பொருட்கள் அகற்றப்பட்டு லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ் , செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் இன்று காலை தீ விபத்து நிகழ்ந்த பனியன் பஜார் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தனர். 

    • திருமருகல் கடைவீதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
    • அனைத்து கடைகளும் காப்பீடு செய்யப்பட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு திருமருகல் வர்த்தக சங்கத் தலைவர் ஜெயபால் சங்கர் தலைமை வகித்தார்.

    செயலாளர் காமராஜ், துணைத் தலைவர் காசி அறிவழகன், பொருளாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். அனைவரையும் தகவல் தொழில் நுட்ப அமைப்பாளர் ரஞ்சித் வரவேற்றார்.

    கூட்டத்தில் திருமருகல் கடைவீதியில் சங்கத்தின் பெயர் பலகை வைக்க வேண்டும், அனைத்து கடைகளும் காப்பீடு செய்யப்பட வேண்டும்,

    விபத்துக்கள் நடை பெறாமல் இருக்க திருமருகல் கடைவீதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    மேலும் புதிய செயற்குழு உறுப்பினர்கள் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் சங்க நிர்வாகி ஹரிஹரன் நன்றி கூறினார்.

    • பஸ் நிலையத்தின் தரை தளத்தில் கடைகள், உணவகம், டீக்கடை, பியூட்டி பார்லர், மற்றும் டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைகிறது.
    • அடிப்படை பணிகள் நடந்து வந்தாலும் அடுத்த மாத கடைசியில் பஸ் நிலையத்தை திறக்க முடிவு செய்துள்ளனர்.

    சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இது திறக்கப்படுகிறது.

    இந்த பஸ் நிலையத்தின் தரை தளத்தில் கடைகள், உணவகம், டீக்கடை, பியூட்டி பார்லர், மற்றும் டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைகிறது.

    முதல் தளத்தில் டிரைவர்கள் கண்டக்டர்கள் தங்குவதற்கும், பொதுமக்கள் அமர்வதற்கும் டார்மெட்ரி வகையில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த பஸ் நிலையத்தின் வடிவமைப்பு குளறுபடி காரணமாக அதை சரி செய்யும் பணியை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக இந்த துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவ்வப்போது உயர் அதிகாரிகளுடன் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    மழை பெய்தால் இப்போது அங்கு தண்ணீர் தேங்குகிறது. அதை சரிசெய்ய வழிவகை காணுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். பஸ்கள் வந்து செல்லும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. அதை சரி செய்யும்படி கூறி உள்ளார். அதனடிப்படையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    பல்வேறு அடிப்படை பணிகள் நடந்து வந்தாலும் அடுத்த மாத கடைசியில் பஸ் நிலையத்தை திறக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்த புதிய பஸ் நிலையத்தில் 100 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளை ஏலம் எடுக்க 1000 பேர்களுக்கு மேல் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

    அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல். ஏ.க்கள், எம்.பி.க்கள் வாரியத் தலைவர்கள் கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர்கள் என தி.மு.க.வில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பல பேர் கட்சியினருக்கு கடைகளை வாங்கி கொடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் போட்டி பலமாக உள்ளது.

    ஆனால் எந்த கடைகளும் இன்னும் ஏலம் விடப்படவில்லை. சிங்கிள் வின்டோ சிஸ்டத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்வதா? அல்லது பொது ஏலத்தில் விடுவதா? என்று முடிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் ஒவ்வொரு கடைக்கும் சிபாரிசு பலமாக உள்ளது.

    இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டதற்கு புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஒதுக்கீடு பெறுவதற்கு கடும் போட்டி நிலவுவது உண்மைதான். இதை சமாளிப்பது பெரிய கஷ்டம். எனவே சி.எம்.டி.ஏ. வழி காட்டி விதிமுறைப்படி விரைவில் இதுபற்றி முடிவெடுப்போம் என்றார்.

    • முதல் தளத்தில் 7 கடைகளும், 6 தங்கும் அறைகளும், தனித்தனி கழிவறைகளும் கட்டப்பட்டுள்ளது.
    • தரை தளத்தில் 9 கடைகள், பயண அலுவலகம் மற்றும் ஆண், பெண் கழிவறைகள் உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியே 41 லட்சம் மதிப்பில் ஆம்னி பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்து விட்டன.

    இந்த நிலையில் இன்று மதியம் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நேரில் சென்று ஆம்னி பஸ் நிலையத்தை பார்வை யிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-தஞ்சையில் ஆம்னி பஸ்கள் இதற்கு முன்னர் பழைய பஸ் நிலையம் அருகே ஆங்காங்கே நின்று கொண்டிருந்தது. இதனால் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டது.

    இதனை ஒழுங்குப்படுத்தி ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பஸ் நிலையம் கட்ட மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. பின்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கி முடிவடைந்து விட்டன.

    5400 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பஸ் நிலையத்தில் 26 பஸ்களை நிறுத்தி வைக்கலாம். தரை தளத்தில் 9 கடைகள், பயண அலுவலகம் மற்றும் ஆண், பெண் கழிவறைகள் உள்ளன.

    முதல் தளத்தில் 7 கடைகளும், 6 தங்கும் அறைகளும், தனித்தனி கழிவறைகளும் கட்டப்பட்டுள்ளது. நான்கு சக்கர இலகு ரக வாகனங்கள், தானியங்கி மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு என முன்புறம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    சுற்றி வர தார் சாலையும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆம்னி பஸ் நிலையத்தால் பயணிகள் மிகவும் பயனடைவர். விரைவில் ஆம்னி பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது போது துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ், 51-வது வார்டு தி.மு.க. செயலாளர் ராஜகுமார், மாவட்ட பிரதிநிதி உதேக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.படவிளக்கம்தஞ்சையில் ஆம்னி பஸ் நிலையத்தை மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அருகில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் உள்ளனர்.

    • 17 கோடி 50 லட்சம் செலவில் மாநகராட்சி சார்பில் கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.
    • மார்க்கெட்டுக்கு அருகில் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் மற்றும் முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் 17 கோடி 50 லட்சம் செலவில் மாநகராட்சி சார்பில் கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து இங்கு உள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் தர வேண்டி மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் அதிகாரிகள் மற்றும் கடலூர் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜி.ஆர்.துரைராஜ் மற்றும் வியாபாரிகள் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் மற்றும் முதுநகரில் இடம் தேர்வு செய்வதற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுக்கு அருகில் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என கடலூர் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜி.ஆர்.துரைராஜ் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா விடம் வலியுறுத்தி மனு அளித்தார். இதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வியாபாரிகளுக்கு தற்காலிகமாக கடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி நேரில் பார்வையிட்டார். இதனை இன்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து பணிகளையும் உடனுக்குடன் முடித்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது மாநகராட்சி பொறியாளர் மாலதி, உதவி பொறியாளர் மகாதேவன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம்.
    • ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் ஏலம் விடப்பட்டு வியாபாரிகள் கடைகளை அமைப்பதற்கான பணிகளை தொடங்குவர்.

    தென்காசி:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களும் சீசன் காலமாக இருக்கும்.

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமாக இருக்கும்போது அதனை ஒட்டிய பகுதி தென்காசி மாவட்டம் என்பதால் அங்கும் 3 மாதங்களும் சாரல் மழை பொழியும். இதனால் குற்றால அருவிகள் அனைத்திலும் தண்ணீர் கொட்ட தொடங்கும்.

    சுற்றுலா பயணிகள் அனைவரையும் சுண்டி இழுக்கும் வண்ணம் அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் என்பதால் வியாபாரிகள் பலர் அருவி பகுதிகளை சுற்றிலும் அரசு அனுமதியுடன் தற்காலிக கடைகளை அமைத்து வியாபாரங்களை மேற்கொள்வர்.

    ஒவ்வொரு ஆண்டும் சீசன் தொடங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் ஏலம் விடப்பட்டு வியாபாரிகள் கடைகளை அமைப்பதற்கான பணிகளை தொடங்குவர். தென்காசி மாவட்டத்தில் தற்போது கோடை காலம் என்பதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் இன்றி வறட்சியாக காணப்படுகிறது.

    கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து குற்றால சீசன் தொடங்குவதற்கு முன்பாக குளிர்ந்த காற்று வீசத் தொடங்கும் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதால் சீசன் தொடங்க வாய்ப்புள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையமும் வருகிற 4-ந்தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளதால் குற்றாலம் சீசனும் இன்னும் ஒரு சில தினங்களில் சாரல் மழையுடன் தொடங்கும் எனும் எதிர்பார்ப்பில் வியாபாரிகள் அனைவரும் தற்காலிக கடைகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டை போன்று குற்றால சாரல் திருவிழா இந்த ஆண்டும் மிகப் பிரமாண்டமாக அரசு சார்பில் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் தென்காசி மாவட்ட மக்க ளிடையே ஏற்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
    • 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் உள்ளன.

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களுக்கு சுமார் 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் உள்ளன. இவற்றில் குறைந்த வாடகை, மற்றும் வாடகை இல்லாமலே குத்தகைதாரர்கள் உள்ளனர். இந்துக்கோவில்களின் வருமானத்தை உயர்த்துவதற்காக, கோவில்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் நிலங்கள், ஆகியவற்றின் வாடகை, குத்தகை தொகை போன்றவைகளை உயர்த்துவதற்கு இந்து அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் இந்துக்கோவில்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் நிலங்கள் ஏராளமாக உள்ளன. இந்த நிலையில், அவற்றுக்கு நீண்ட காலமாக குறைந்த வாடகை, மற்றும் குறைந்த குத்தகை தொகை செலுத்தி வருகின்றனர். அவற்றை சரிபார்த்து, வாடகை மற்றும் குத்தகை தொகைகளை உயர்த்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வாடகை மற்றும் குத்தகை தொகை ஆகியவற்றை உயர்த்தி கோவில்களின் வருமானத்தை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    • உரிம கட்டணம் 11 மாதங்களுக்கு ஒருமுறை 8 சதவீத அடிப்படையில் உயர்த்தப்படும்.
    • சரக்கு மற்றும் சேவைவரி உரிம கட்டணத்திற்கு 18 சதவீதம் தனியாக செலுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    முன்னாள் படைவீரர் நலத்துறையை சேர்ந்த தஞ்சாவூர் ராணுவத்தினர் மாளிகையில் சுமார் 36658 சதுர அடி இடத்தில் 8328 சதுர அடி கட்டிடம் உள்ளது. அதில் 11 கடைகள் மற்றும் 2 அலுவலக அறைள் காலியாக உள்ளது.

    இந்த கடைகள் மற்றும் அலுவலக அறைகள் மாதாந்திர உரிம கட்டணம் அடிப்படையில் வாடகைக்கு வழங்கிட ஒப்பந்த விலைப்புள்ளிகள் இதன் மூலம கோரப்படுகிறது.

    உரிம கட்டணம் ஒப்பந்தம் 11 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். மின்கட்டணம் உரிமதாரரால் செலுத்தப்பட வேண்டும். முன் வைப்பு தொகையானது உரிம கட்டணத்தின் 11 மாதங்களுக்கான மொத்த தொகையை செலுத்த வேண்டும்.

    உரிம கட்டணம் 11 மாதங்களுக்கு ஒருமுறை 8 சதவீத அடிப்படையில் உயர்த்தப்படும். மேலும் அரசு விதிகளின் படி சரக்கு மற்றும் சேவைவரி உரிம கட்டணத்திற்கு 18 சதவீதம் தனியாக செலுத்த வேண்டும்.

    எனவே விருப்பம் உள்ளவர்கள் அடுத்த மாதம் 12-ந் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது ஒப்பந்த விலைப்புள்ளியினை மூடிய உறையில் முத்திரையிடப்பட்டு கடை எண்யை பதிவு செய்து ஒப்பந்த விலைப்புள்ளி என்பதனை தெளிவாக குறிப்பிட்டும், செயலாளர், ராணுவத்தினர் மாளிகை, தலைமை தபால் நிலையம் எதிரில், தஞ்சாவூர்-01 என்னும் முகவரியில் சமர்பிக்க வேண்டும். தாமதமாக பெறப்படும் ஒப்பந்த விலைப்புள்ளிகள் எந்த காரணத்திற்காகவும் ஏற்று கொள்ளப்பட மாட்டாது. உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேண்டீன் நடத்திட கடைகள் ஒதுக்கப்பட மாட்டாது.

    இந்த ஒப்பந்த விலைப்புள்ளி அறிவிப்பிற்கான விலைப்புள்ளி சமர்பிக்கும் கடைசி தேதி நீட்டிப்பு செய்யவோ அல்லது இந்த அறிவிப்பை முழுமையாக ரத்து செய்யவோ தஞ்சாவூர் மாவட்ட ராணுவத்தினர் மாளிகை நிர்வாகத்திற்கு மட்டுமே முழு அதிகாரம் உண்டு. மேலும் ஒப்பந்த விலைப்புள்ளியின் மீது இறுதி முடிவு தஞ்சாவூர் மாவட்ட ராணுவத்தினர் மாளிகை நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 17 கடைகள்-நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் ஆணையின்படி கடைகள் மற்றும் வர்த்தக நிறுவ னங்களில் குறிப்பாக தனியார் நிதி நிறுவனங்கள், மருந்து கடைகள், ஸ்கேன் ைமயங்கள், ஸார்டுவேர் கடைகள், பரிசோதனை மையங்கள், கால் சென்டர்கள் உள்ளிட்ட நிறுவனங்க ளில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப் பட்டது.

    அதன்படி இந்த கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 17 நிறுவனங்கள் மீது முரண்பாடு கண்டறியப்பட்டது. 17 நிறுவனங்கள் மீது மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு, 17 நிறுவனங்களில் பணிபுரிந்த 35 தொழிலாளர்களுக்கு குறைவுச்சம்பளம் ரூ.9லட்சத்து 66ஆயிரத்து 56-ஐ பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து நிறுவனங்களும் குறைந்த பட்ச கூலிச் சட்டத்தின் கீழ் அந்தந்த தொழில் நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை (ஊதியம் மற்றும் அகவிலைப்படி) அளிக்க வேண்டும். குறைவு ஊதியம் தொடர்பான புகார் தெரிவிக்க 04562-225130 என்ற விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்ணை அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இந்த ஆய்வில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி முதல் மற்றும் 2-ம் சரகம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்கள் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை மாநகராட்சி பகுதிகளில் மகாவீர் ஜெயந்தியையொட்டி 4-ந் தேதி இறைச்சி கடைகள் அடைக்கடுகின்றன.
    • சுகாதாரச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மகாவீர் ஜெயந்தியையொட்டி நாளை மறுநாள் (4-ந்தேதி) அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும் இதர உயிரினங்கள் உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. இறைச்சி விற்பனை கடைகளை திறந்து வைக்க வும் கூடாது.

    தடையை மீறி செயல்படு வர்களின் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதாரச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 4-ந் தேதி மகாவீர் ஜெயந்தி ஆகும்.
    • மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 4-ந் தேதி (செவ்வாய்கிழமை) மகாவீர் ஜெயந்தி ஆகும்.

    இதனை முன்னிட்டு அன்றைய தினம்தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×