search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரிகள்"

    • மீஞ்சூர் வல்லூர் வரை சாலை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
    • பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிதி ஒதுக்கப்பட்டு ரூ.14 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு சாலை பணிகள் கடந்த மாதம் ஆரம்பித்தது.

    பொன்னேரி:

    பொன்னேரி- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வட சென்னை அனல் மின் நிலையம், தேசிய அனல் மின் நிலையம், காமராஜர் துறைமுகம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கப்பல் கட்டும் தளம், கண்டெய்னர் யார்டுகள், பெட்ரோல் நிறுவனங்கள், நிலக்கரி யார்டுகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிறுவனங்களில் இருந்து தினமும் 40 ஆயிரம் கனரக வாகனங்கள் மீஞ்சூர் வழியாக பொன்னேரி பகுதிக்கும், வல்லூர் 100 அடி சாலையில் இருந்து மணலி வழியாக சென்னைக்கும், வண்டலூர் சாலை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைக்கும் செல்கின்றன.

    இந்நிலையில் மீஞ்சூர் வல்லூர் வரை சாலை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பும் ஏற்படுகிறது. குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பள்ளம் பள்ளமாக காணப்படும் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் பலமுறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதிகாரியிடம் மனு அளித்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிதி ஒதுக்கப்பட்டு ரூ.14 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு சாலை பணிகள் கடந்த மாதம் ஆரம்பித்தது.


    இந்நிலையில் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மீஞ்சூர் பி.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து வல்லூர் வரை 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சாலையில் ஏற்படும் தூசிகள் கடை முழுவதும் பரவி வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். வாடிக்கையாளர்கள் வராததால் ஓட்டல்கள், டிபன் கடைகள், டீக் கடைகளை வியாபாரிகள் மூடி வருகிறார்கள். மேலும் காய்கறி, பழக்கடைகள் முழுவதும் தூசி மற்றும் மணலால் நிரம்பி காணப்படுவதால் கடைகளை காலை 7 மணி முதல் 9 மணி வரையும் மாலை 6 மணி முதல் 8 மணிவரையும் திறந்து வியாபாரம் செய்துவிட்டு செல்கின்றனர். சிலர் கடையை காலி செய்து விட்டு வேறு இடத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் வியாபாரிகளுக்கு கடந்த 2 வருடத்திற்கு மேலாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடையை நடத்த முடியாமல் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பறக்கும் படையினர் சோதனையால் தங்க நகை வியாபரிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
    • நகைகளை பட்டறையில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லும் போது என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெளிவு படுத்த வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    வாக்காளர்களுக்கு பணம்-நகை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் உரிய ஆவணங்கள் இருந்தால் விடுவித்து விடுவதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    பறக்கும் படை வாகன சோதனையில் இதுவரை ரூ.80 கோடி அளவுக்கு நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் பிடிபட்டால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்து அந்த பணத்தை அங்கு ஒப்படைத்து விடுகின்றனர்.

    இதனால் பணம் நகை பொருட்களை வியாபாரிகள் ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.

    இப்போது தேர்தல் நெருங்க நெருங்க சோதனைகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில் ஆந்திராவில் இருந்து பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த 2 பேரிடம் இருந்து ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு மாட்டுச் சந்தைக்கு மாடு வாங்கு வதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறியும் விடவில்லை. பணத்தை பறிமுதல் செய்துவிட்டனர்.

    அடுத்தடுத்து சோதனை நடைபெறும் நிலையில் வியாபாரிகளும், நகை கடைக்காரர்களும் பணம் பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதுபற்றி தேர்தல் கமிஷனில் முறையிட்டும் எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என வியாபாரிகள் ஆதங்கப்படுகின்றனர். கொள்முதல் செய்து நகை உள்ளிட்ட பொருட்களை கடைக்கு கொண்டு வர முடியாததால் வியாபாரம் பாதியாக குறைந்து விட்டதாகவும் வியாாரிகள் கூறி வருகின்றனர்.

    பறக்கும் படையினர் சோதனையால் தங்க நகை வியாபரிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    இதுபற்றி மெட்ராஸ் தங்கம், வைரம் வியாபாரிகள் சங்கத் தவைர் ஜெயந்தி லால் சலானியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் போலீசார் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி சோதிப்பதால் பொதுமக்கள் நகை வாங்க வருவதற்கு பயந்து கடைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். திருமணங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவதற்கு சிறிய நகரங்களில் இருந்து பெரிய நகரங்களுக்கு பணத்தை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் மக்கள் தவிக்கின்றனர்.

    இந்த மாதம் தொடர்ந்து நகை விலை உயர்ந்து கொண்டு வருவதால் எப்படியாவது கையில் உள்ள பணத்தை கொண்டு நகை வாங்கி விடலாம் என ஒவ்வொரு குடும்பத்தினரும் நினைக்கின்றனர். ஆனால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால் நகை கடைக்கு வருவதை தவிர்க்கின்றனர்.


    இப்போது உள்ள விலைவாசியில் ஒரு பவுன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் சேர்த்து ரூ.55 ஆயிரம் ஆகிவிடும். எனவே தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள ரூ.50 ஆயிரம் என்ற அளவை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம்.

    மே 10-ந்தேதி அட்சய திருதியை நாள் நெருங்கி வருவதால் நகைக் கடைக்காரர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால் தேர்தல் கமிஷன் கெடுபிடியால் நகை பட்டறையில் இருந்து நகைகளை கடைகளுக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

    அட்சய திருதியை ஆர்டர், திருமண நகை ஆர்டர் உள்ள நிலையில் நிறைய நகைகளை கொண்டு செல்லும் போது பறக்கும் படையினர் பிடித்து விட்டால் உடனே அதை வாங்க முடியாது.

    2 மாதம் கழித்துதான் பெற முடியும். தங்கம் விலை தினமும் ஏறி வரும் நலையில் 2 மாதம் போலீசாரிடம் நகை இருந்தால் விலை ஏற்றத்தால் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விடும்.

    எனவே நகைகளை பட்டறையில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லும் போது என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெளிவு படுத்த வேண்டும்.

    தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து நகைக் கடைகளில் கூட்டம் குறைந்துவிட்டது. வியாபாரம் பாதியாக குறைந்து விட்டதால் ஒவ்வொரு கடைக்காரர்களுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    அட்சய திருதியை தினத்தன்று 1000 கிலோ அளவுக்கு நகை வியாபாரம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்த அளவு வியாபாரம் இருக்குமா? என்பது சந்தேகம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.3,25,200 ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
    • சொற்ப அளவிலான பணத்தைக் கொண்டு செல்லும் வியாபாரிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.

    திருப்பூர் பூண்டி ரிங்ரோடு பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.திருப்பூர் பொல்லி காளி பாளையம் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.3,25,200 ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி பகுதியில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.93,200ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, திருப்பூர் பல்லடம் சாலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் தேர்தல் துணை மாநில வரி அலுவலர் பக்கிரி சாமி (பறக்கும் படை குழு) உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வீரபாண்டி, பிரியங்கா நகர் பகுதியை சேர்ந்த கே. சாமிநாதன் என்பவர் ரொக்கப்பணம் ரூ.57 ஆயிரத்து 980ஐ முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் கூடுதல் பறக்கும் படை குழு பணத்தை பறிமுதல் செய்து உதவி ஆணையாளர் (தேர்தல் கணக்கு) தங்கவேல் ராஜனிடம் ஒப்படைத்து கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்று ஒரே நாளில் ரூ.8 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பறக்கும் படையினரின் சோதனையில், சொற்ப அளவிலான பணத்தைக் கொண்டு செல்லும் வியாபாரிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் வியாபாரிகள் சிலர் கூறியதாவது:-

    என்னதான் டிஜிட்டல் பண பரிவர்த்தனை இருந்த போதும் சில நேரங்களில் ரொக்க பரிவர்த்தனை மேற்கொண்டு தான் ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. இவ்வாறாக ரொக்க பரிவர்த்தனை வழக்கமாக நடைபெறும் ஒன்று.ஆவணங்களை வைத்து கொண்டு இது போன்ற பரிவர்த்தனைகள் பெரும்பாலும் நடப்பதில்லை. தேர்தல் நேரத்தில் நடக்கும் பண பட்டுவாடாவை தடுக்க இதுவரை தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

    மாறாக சொற்ப அளவிலான பணத்தைக் கொண்டு செல்லும் சிறிய வியாபாரிகளே இது போன்ற சோதனையில் சிக்குகின்றனர். பறிமுதல் செய்த பணத்தை திரும்ப பெறுவதற்காக ஏற்படும் தேவையற்ற அலைச்சல் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும்
    • பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும்.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் சுவையுடய மாம்பழங்கள் தான், அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உற்பத்தி யாகும் மாம்ப ழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

    குறிப்பாக சேலம் மாவ ட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், குப்பனூர், காரிப்பட்டி அயோத்தியாப்பட்டனம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, எடப்பாடி பகுதிகளில் அதிக அளவில் மாமரங்கள் உள்ளன. இந்த மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படும்,

    மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கு விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் அதனை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் மாம்பழ சீசன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை மாம்பழங்கள் வரத்து இருக்கும், இந்தாண்டு பருவம் தவறிய மழை பெய்ததால் மாம்பழம் வரத்து 20 நாட்கள் காலதாமதமாகி உள்ளது.

    தற்போது தான் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழ வரத்து தொடங்கி உள்ளது. குறிப்பாக இமாம்பசந்த், சேலம்-பெங்களூரா, சேலம் குண்டு, கிளிமூக்கு பழங்கள் மா ர்க்கெட்டுகளுக்கு வரதொடங்கி உள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு 2 டன் வரை மாங்காய்கள் சேலம் மார்க்கெட்களுக்கு வரத்தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும், அப்போது குறிப்பாக சேலம் சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி, ஏற்காடு ரோடு, செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல பகுதி களில் மாம்பழங்கள் கடைகளிலும் தள்ளுவண்டிகளிலும் வைத்து விற்கப்படும். இதனால் எங்கு பார்த்தலும் மாம்பழ மனம் வீசும்.

    தற்போது கடை வீதி மற்றும் சேலத்தில் உள்ள மார்க்கெட்டுகள், உழவர் சந்தைகள், பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் மாங்காய்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாம்பழங்கள் ஒரு கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இனி வரும் நாட்களில் மாம்பழ வரத்து படிப்படியாக அதிகரிக்கும்.

    இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நடப்பாண்டில் காலம் கடந்து பெய்த மழையால் 20 நாட்கள் காலதாமதமாக மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. இன்னும் 20 நாட்களில் மாம்பழ சீசன் உச்சம் பெறும். ஆனாலும் வழக்கத்தை விட இந்தாண்டு மாந்தளிர் தான் அதிகம் உள்ளது. பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்தையை சுற்றியும் சாலையோரங்களில் வியாபாரிகள் கடைகள் அமைப்பதால், சந்தைக்குள் பொதுமக்கள் வருவதில்லை.
    • திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம்பாளையத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் தென்னம்பாளையம் பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் பலர் கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் சந்தை பகுதிகளில் ரோட்டோரம் வியாபாரிகள் காய்கறி கடைகளை அமைக்க கூடாது எனவும், இதனை கண்டித்தும் இன்று அதிகாலை 4மணி முதல் உழவர் சந்தையின் கேட்டை மூடிவிட்டு தென்னம்பாளையம் சந்தை முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    தென்னம்பாளையம் உழவர் சந்தையில் முறையாக பதிவு செய்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் சந்தையை சுற்றியும் சாலையோரங்களில் வியாபாரிகள் கடைகள் அமைப்பதால், சந்தைக்குள் பொதுமக்கள் வருவதில்லை.

    சாலையோரம் இருக்கும் கடைகளில் காய்கறி வாங்கி விட்டு செல்கிறார்கள். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் போது 2 நாட்கள் கடைகள் அமைக்காமல் இருக்கிறார்கள். இதன் பின்னர் மீண்டும் கடைகளை அமைத்து வியாபாரத்தை தொடங்கி வருகிறார்கள். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சாலையோர வியாபாரிகள் கூறுகையில், உழவர் சந்தைக்கு 100 மீட்டருக்கு அப்பால் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் , விவசாயிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் கடைகள் அமைத்து வரக்கூடிய நிலையில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலும் , மோதல் சூழ்நிலையை உருவாக்கி சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் விவசாயிகள் செயல்படுவதாக சாலையோர வியாபாரிகள் குற்றம் சாட்டினர். இரு தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

    • 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது.
    • கத்தரிக்காய், முட்டை கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் அதிகளவில் தேக்கமடைந்து உள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் காய்கறி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    இன்று 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது. நள்ளிரவில் வழக்கம் போல் விறு விறுப்பாக தொடங்கிய காய்கறி விற்பனை பின்னர் அதிகாலையில் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள், காய்கறி மற்றும் மளிகை கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்ததால் மந்தமாகி போனது.

    இதனால் கத்தரிக்காய், முட்டை கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் அதிகளவில் தேக்கமடைந்து உள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். வரத்து குறைவால் முருங்கைக்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.120-க்கு விற்கப்படுகிறது.

    மொத்த விற்பனை விலை விவரம் கிலோவில் வருமாறு:-

    தக்காளி-ரூ.22, நாசிக் வெங்காயம்-ரூ.30, ஆந்திரா வெங்காயம்-ரூ.20, சின்ன வெங்காயம்-ரூ.50, உருளைக்கிழங்கு-ரூ.25, பீன்ஸ்-ரூ.25, அவரைக்காய்-ரூ.20, வெள்ளரிக்காய்-ரூ.10, பன்னீர் பாகற்காய்-ரூ.50, உஜாலா கத்தரிக்காய்-ரூ.25, வரி கத்தரிக்காய்-ரூ.15, கொத்தவரங்காய்-ரூ.50, வெண்டைக்காய்-ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.40, முருங்கைக்காய்-ரூ.120, கோவக்காய்-ரூ.30, முட்டை கோஸ்-ரூ.12, புடலங்காய்-ரூ.25, ஊட்டி கேரட்-ரூ.35, பீட்ரூட்-ரூ.25, சுரக்காய்-ரூ.20, பச்சை மிளகாய்-ரூ.30, முள்ளங்கி-ரூ.25, நூக்கல்-ரூ.25, இஞ்சி-ரூ.100.

    • தினமும் சேரும் குப்பைகளை சாலையில் கொட்டாமல் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
    • கூட்டத்தில் சாலையோர கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் தீபாவளி பண்டிகையொட்டி 13-வது வார்டுக்கு உட்பட்ட தேர் வடக்குவீதி, மேலவீதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக சாலை யோரக டைகள் அமைக்க ப்படுவது வழக்கம்.அதன்படி நிகழாண்டு சாலையோர கடைகள் அமைக்கப்ப ட்டுவருகிறது. இதனிடையே சாலையோர கடை வியா பாரிகளுடனான ஆலோ சனைக்கூட்டம் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் முபாரக் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் பாஸ்கரன், சீர்காழி அனைத்து வணிகர்கள் நல சங்க தலைவர் பாபு.கே.விஜயன் முன்னிலை வகித்தனர்.இதில் தகர கொட்டகை அமைத்து தற்காலிக கடை அமைத்துக்கொள்வது, நாள்தோறும் சேரும் குப்பைகளை சாலையில் கொட்டாமல் பெரிய நெகிழி பையில் வைத்து கடை உரிமையாளர்களே தூய்மைபணியாளர்களிடம் வழங்கிடுவது, கடைக்கு நகராட்சிக்கு மட்டும் உரிய தொகையை செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. இந்த கூட்டத்தில் சாலையோர கடை உரிமையாளர்கள் பலர் பங்கேற்றனர்.

    • காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
    • கழிவறைகளை சுத்தம் செய்து உரிய முறையில் பராமரிப்பு செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    போரூர்:

    கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் சில்லரை வியாபாரிகள், மளிகை, காய்கறி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் என லட்சக்கணக்கானவர்கள் இங்கிருந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில நாட்களாகவே பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் ஒரிரு நாட்கள் பெய்த லேசான மழைக்கே கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஆங்காங்கே மழைநீர் குளம் போல தேங்கி கிடக்கிறது. இதனால் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகள், மூட்டை தூக்கி செல்லும் கூலி தொழிலாளர்கள், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் என அனைவரும் மார்க்கெட் வளாகத்தில் நடந்து செல்ல கூட முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    மார்க்கெட் வளாகத்தில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததே தண்ணீர் தேங்கி கிடப்பதற்கு காரணம் என்று வியாபாரிகள் தரப்பில் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் மழை காலம் தொடங்கி உள்ளதால் மார்க்கெட் வளாகத்தில் தேங்கும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்றிடவும், தொற்று நோய் பரவுவதை தடுத்திடும் வகையில் சுகாதாரமான குடிதண்ணீர் கிடைத்திடவும், கழிவறைகளை சுத்தம் செய்து உரிய முறையில் பராமரிப்பு செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்காடி நிர்வாக குழு அதிகாரிகளுக்கு வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • விவசாயிகள் அதனை குடித்து விட்டு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட் டோர் பலியான சம்பவம் நடைபெற்றது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பிரம்ம தேசம் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் வேலை செய்வது வழக்கம். பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் காலை மாலையில் சாராயம் விற்பனை அேமாகமாக நடைபெறுகிறது. குறைந்த விலைக்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படு வதால் விவசாயிகள் அதனை குடித்து விட்டு உடல் நலக்குறைவால் அவதிப் பட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட் டோர் பலியான சம்பவம் நடைபெற்றது. இந்த சாரா யத்தை விற்பனை செய்த வியாபாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிரம்மதேசம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை போலீசார் தடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும் சமூக ஆர்வலர்க ளும் கோரிக்கை விடுத்துள்ள னர்.

    • பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்படும்.
    • மார்க்கெட்டில் தற்போது பூக்கள் மும்மரமாக விற்பனையாகி வருகின்றன.

    கடலூர்:

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா நாளை மற்றும் நாளை மறுநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், கோவில்கள் போன்றவற்றில் பூஜை செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு விமர்சையாக விழா கொண்டாடப்படும். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் மும்மரமாக விற்பனையாகி வருகின்றன. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு வென உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர். இதில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கேந்தி பூ தற்போது 80 ரூபாய்க்கும், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 240 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லி மற்றும் குண்டு மல்லி 800 ரூபாய்க்கும், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூ தற்போது 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இன்று காலை முதல் வழக்கத்தை விட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவு பூக்கள் வாங்க வந்தனர். 2 நாட்கள் தொடர்ந்து விழாக்கள் உள்ளதால் பூக்கள் விலை உயர்ந்த நிலையில் இருந்தாலும் விற்பனையாகிவிடும் என்ற நம்பிக்கையில் பூ வியாபாரிகள் உள்ளனர்.

    • பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை திரும்பக் கேட்டு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • வியாபாரிகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்யுங்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

    மேலும், இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அதனை விற்பனை மற்றும் பயன்படுத்தும் கடைகள் மீதும் நடவ டிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

    அதனையடுத்து, உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் நேற்று திலாசுப்பேட்டை பகுதியில் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என திடீர் ஆய்வு நடத்தினர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் இருப்பதை கண்டு, அவற்றை பறிமுதல் செய்தனர். மேல் நடவடிக்கைக்காக அவற்றை வாகனங்களில் ஏற்றினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கும் அபராதம் விதித்தனர்.

    இதையறிந்த திலாசுப்பேட்டை பகுதியில் உள்ள வியாபாரிகள் அங்கு ஒன்று திரண்டு வந்து பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை சிறை பிடித்தனர். பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை திரும்பக் கேட்டு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    'வியாபாரிகளை ஒருங் கிணைத்து கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்யுங்கள். அதன் பிறகு வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் பறி முதல் செய்யுங்கள்'என ஆவேசமாக கூறினர். அதையடுத்து நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகளிடம் திரும்ப கொடுத்து விட்டு சென்றனர்.

    • சாலையோர கடைகளை, வாரச் சந்தை வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது
    • போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.

     அவிநாசி

    அவிநாசி நகரப் பகுதியில் வைக்கப்படும் சாலையோர கடைகளால் விபத்துகள் ஏற்படுவதாகவும், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சாலையோர கடைகளை முறைப்படுத்தவும் வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துவந்தனா்.

    இதையடுத்து, அண்மையில் நடைபெற்ற பேரூராட்சி ஆலோசனைக் கூட்டத்தில் சாலையோர கடைகளை, வாரச் சந்தை வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், சாலையோர கடைகள் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டன.

    இதனைக் கண்டித்தும், சாலையோர கடைகளை இடமாற்றம் செய்வதற்காக நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.போராட்டத்துக்கு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா்.சங்க பொருளாளா் தனசேகரன், வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி, மாா்க்கெட் அசோசியேஷன் தலைவா் காா்த்திகேயன், மெடிக்கல் அசோசியேஷன் சங்கத் தலைவா் ஈசுவரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

    ×