search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனியன் பஜார்"

    • வியாபாரிகள் ஏறத்தாழ 40 ஆண்டாக செகண்ட்ஸ் பனியன் ஆடை ரகங்களை விற்பனை செய்து வந்தனர்.
    • முன்னர் பஜார் இயங்கிய இடத்தில் பாதி இடத்தில் மட்டும் கடைகள் அமைக்க அனுமதி கிடைத்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் நஞ்சப்பா பள்ளி சாலையில் தனியார் நிலத்தில் காதர்பேட்டை பனியன் பஜார் இயங்கி வந்தது. அங்கு 50 வியாபாரிகள் ஏறத்தாழ 40 ஆண்டாக செகண்ட்ஸ் பனியன் ஆடை ரகங்களை விற்பனை செய்து வந்தனர்.

    தனியாருக்கு சொந்தமான இடத்தில் நில வாடகை அடிப்படையில் இந்த கடைகள் இயங்கி வந்தன. கடந்த ஜூன் 23ந் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில், கடைகள் அனைத்தும் எரிந்தன. முற்றிலும் பனியன் மற்றும் ஆடை ரகங்கள் என்ற நிலையில் தீ கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக பரவியது. சில இரு சக்கர வாகனங்களும் எரிந்து சாம்பலானது.

    இதனால் வியாபாரிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகினர். பல்வேறு தரப்பினர் அவர்களுக்கு உதவி செய்தனர். இந்நிலையில் மீண்டும் கடைகள் அமைத்து வியாபாரம் துவங்க வியாபாரிகள் ஆயத்தம் செய்தனர்.நில உரிமையாளர்கள் தங்கள் இடத்தை அளந்து வேலி அமைத்தனர்.

    நீண்ட இழுபறிக்கு பின் முன்னர் பஜார் இயங்கிய இடத்தில் பாதி இடத்தில் மட்டும் கடைகள் அமைக்க அனுமதி கிடைத்தது.இதனால் வியாபாரிகள் தங்கள் கடை அளவை பாதியாக குறைத்து அதற்கேற்ப ெஷட் அமைத்து கடைகளை அமைத்து கொண்டனர். தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் பனியன் பஜார் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளது.

    • சுமார் 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.
    • தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காதர்பேட்டையில் பனியன் பஜார் செயல்பட்டு வருகிறது. இங்கு 50 கடைகள் உள்ளன. திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து ஆடைகள் வாங்கி இங்கு விற்பனை செய்து வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான உள்நாட்டு பனியன் ஆடைகள், உள்ளாடைகள் என அனைத்து ஆடை ரகங்களும் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து விற்பனைக்கு தேவையான ஆடைகளை வாங்கி செல்வார்கள். மேலும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான ஆடைகளை வாங்கி செல்கின்றனர். இதனால் காதர்பேட்டை பனியன் சந்தை காலை முதல் இரவு வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்நிலையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடைகள் அனைத்தையும் பூட்டி விட்டு வியாபாரிகள் வீடுகளுக்கு புறப்பட்டனர். 2 காவலாளிகள் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வியாபாரிகள் கடையை பூட்டி விட்டு சென்ற சிறிது நேரத்தில் பனியன் பஜாருக்குள் உள்ள ஒரு கடையில் திடீரென தீப்பற்றியது. இதைப்பார்த்த காவலாளிகள் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

    ஆடைகள் என்பதால் தீ மளமளவென பற்றி அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது. ஒவ்வொரு கடைகளிலும் பனியன் ஆடைகள் அதிகளவில் இருந்ததால் தீ மளமளவென பற்றி கொளுந்து விட்டு எரிந்தது. உடனே இது குறித்து திருப்பூர் வடக்கு, மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 10 நிமிடத்துக்குள் 50 கடைகளுக்கும் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

    தீயணைப்பு வீரர்கள் இரவு 9-30மணி முதல் இரவு 12-30 மணி வரை சுமார் 3 மணி நேரம் வரை போராடி தீயை மேலும் பரவவிடாமல் அணை த்தனர். தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக ராயபுரம் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

    ஒவ்வொரு கடையிலும் பல லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தது. 50 கடைகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.3 கோடி மதிப்பிலான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இன்று காலை வியாபாரிகள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் தீயில் எரிந்து சேதமான பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரங்கள் மூலம் சேதமான பொருட்கள் அகற்றப்பட்டு லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ் , செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் இன்று காலை தீ விபத்து நிகழ்ந்த பனியன் பஜார் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தனர். 

    ×