search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம்"

    • ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
    • பலத்த மழைபெய்தாலும் வரும் காலங்களில் தண்ணீர் பஸ்நிலைய பகுதியில் தேங்காமல் செல்லும்.

    வண்டலூர்:

    சென்னையில் அதிகரித்து வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    ரூ.394 கோடி செலவில் ரூ.88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. இங்கு 90 சதவீதத்துக்குமேல் பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ளது. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியது. மேலும் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு முடிவு செய்து உள்ளது.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும்இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக உள்ளது.

    இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

    அதன்படி தற்போது கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தின் முன்பகுதியில் ஜி.எஸ்.டி.சாலையைஒட்டி மழைநீர்கால்வாய் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதில் தண்ணீர் அதிக அளவு செல்லும் வகையில் பெரிய கான்கிரீட் குழாய் அமைக்கப்பட இருக்கிறது. இதன்காரணமாக பலத்த மழைபெய்தாலும் வரும் காலங்களில் தண்ணீர் பஸ்நிலைய பகுதியில் தேங்காமல் செல்லும்.

    தற்போது பஸ்நிலையத்தின் மேற்கு பகுதியில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் பகுதியில் சாலையை ஒட்டி நடைபெற்று வருகின்றன. இதற்காக அங்கு பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 3 மீட்டர் அகலம் மற்றும் 1.5 மீட்டர் அகலத்தில் கால்வாய் அமைக்கப்பட இருக்கிறது.

    இந்த இடத்தில் பணி முடிந்ததும் அடுத்ததாக சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் சாலையில் கிழக்கு பக்கம் பணிகள் தொடங்க உள்ளது. கால்வாய் அமைக்கும் பணியை 4 வாரத்திற்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். மேலும் கிளா ம்பாக்கம் பஸ்நிலையத்தை தீபாவளிக்கு முன்னதாக திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி கால்வாய் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் பெரும்பாலான பணிகள் முடிந்து திறப்புவிழாவுக்கு தயாராக உள்ளது. ஆனால் மழையின் போது பஸ்நிலையத்தின் முன்பு தண்ணீர் தேங்கியதாலும் தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாலும், மழைநீர் வடிகால் ஏற்பாடுகளை செய்து முடித்த பின்னர் பஸ் நிலையத்தை திறக்க அரசு முடிவு செய்தது. தற்போது கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதனை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தீபாவளிக்கு முன்பு கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன என்றார்.

    • பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மொத்த நீரும் ஜி.எஸ்.டி.சாலையில் வெள்ளமாக தேங்குகிறது.
    • பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே ஒரு நாள் மழைக்கு தண்ணீர் தேங்கியது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து தற்போது வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள், மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதிகரித்து வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி.சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின்போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மேலும் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து இந்த மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும் இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக உள்ளது. இதனால் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மொத்த நீரும் ஜி.எஸ்.டி.சாலையில் வெள்ளமாக தேங்குகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட 4 கல்வெட்டுகளும் குறுகலாக மற்றும் சிதலமடைந்து உள்ளதாலும், மழைநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாலும் தண்ணீர் தேங்கி நிற்பது தெரியவந்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதன் மூலம் பஸ்நிலைய பகுதியில் மழை நீர் தேங்காமல் எதிரில் உள்ள ரெயில்வே தடங்களை கடந்து அடையாறு ஆற்றுப்படுகைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மழைநீர் சுமார் 180 அடிநீளமுள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடந்து கிளாம்பாக்கம் ஏரி, மற்றும் வண்டலூர் ஏரிகளுக்கும் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஸ்நிலையம் அருகில் தற்போது சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர்கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்தி புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் மீதம் உள்ள பணிகள் முழுவதையும் முடிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளுதல், வெள்ளத்தடுப்பு நடவடிக்கை, சென்னையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பாக தலைமைசெயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    தலைமைசெயலாளர் சிவ்தாஸ்மீனா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது,கிளாம்பாக்கம் பஸ்நிலையம் எதிரில் ஜி.எஸ்.டி.சாலையில் மழைநீர் வடிகால் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்று 45 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

    இதனால் தற்போது கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ள மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான பணிகள் விரைவு படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, 'கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.

    பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே ஒரு நாள் மழைக்கு தண்ணீர் தேங்கியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதனை சரிசெய்து பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இல்லையெனில் புறநகர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைத்ததற்காக நோக்கம் நிறை வேறாமல் போய்விடும். பஸ்நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை எப்படி கையாள வேண்டும் என்றும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்' என்றனர்.

    • மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் கால்வாய் பணிகளும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.
    • கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் பின்புறத்தில் இருந்து பஸ்கள் அய்யன்சேரி வழியாகச் சென்று ஊரப்பாக்கம் நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கான சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

    வண்டலூர்:

    சென்னையில் தற்போது கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு அரசு விரைவு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை நகருக்குள் இயங்கும் மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது. இதே போல் மாதவரத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசைலை கருத்தில் கொண்டு வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பஸ்களை புறநகர் பகுதியில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு நவீன வசதிகளுடன் பிரம்மாண்ட பஸ்நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையத்திற்கான கட்டுமான பணிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

    கொரோனோ பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பஸ் நிலைய கட்டுமான பணி மெதுவாக நடந்து வந்தது. இதனால் குறிப்பிட்ட காலத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலைய பணியை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலைய பணியை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கட்டுமான பணியை அவ்வப்போது ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

    பஸ் நிலையத்தில் 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில் மீதி உள்ள பணிகளை முடிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    பஸ் நிலையத்தில் பயணிகள் தங்குமிடம், சாதாரண அறை, குளிர்சாதன அறை மற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்குவதற்கான இடம் கட்டுமான பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

    இதேபோல் கழிவறைகள் மற்றும் பஸ் நிலையத்தை சுற்றி அமைய வேண்டிய கடைகளின் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. பயணிகளின் வாகனத்தை நிறுத்துவதற்கான பார்க்கிங் ஏரியா பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை. உணவகங்கள் பணியும் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது.

    பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருக்கும் வளைவு, அதனைச் சுற்றி பொறிக்க வேண்டிய கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் போன்ற எழுத்துக்களும் இன்னும் பொறிக்கப்படவில்லை.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் பின்புறத்தில் இருந்து பஸ்கள் அய்யன்சேரி வழியாகச் சென்று ஊரப்பாக்கம் நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கான சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

    இந்த சாலை அமைத்தால் வாகனங்கள் தொடர்ச்சியாக போகும் நிலையில் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் வாகன நெரிசல் அதிகமாக ஏற்படும் என்பதால் மாற்று சாலை திட்டத்தை கருத்தில் கொண்டு அந்த சாலை பணியும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் கால்வாய் பணிகளும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

    தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்தத்திற்கான இடத்தை முதலில் படப்பை அருகில் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அங்கிருந்து ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரும் போதும், பயணிகளை ஏற்றி சென்று மீண்டும் செல்லும் போதும் இரண்டு முறை டோல்கேட்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த இடம் தேர்வு கைவிடப்பட்டது. எனவே ஆம்னி பஸ்களுக்கான இடத்தையும் தேர்வு செய்து ஆய்வு செய்யும் பணி இன்னும் முழுமையாக முடியாமல் உள்ளது.

    பல்வேறு பணிகள் முடிவடையாமல் உள்ளதால் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை திறக்க மேலும் தாமதாகும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பஸ்நிலையத்தில் கட்டுமான பணிகள் முடிந்து ஒரு பகுதியை மட்டும் முதலில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    முதல் கட்டமாக திருநெல்வேலிக்கு விரைவு பஸ்களும் அடுத்த கட்டமாக மதுரைக்கும் பஸ்களை இயக்க முடிவு செய்து உள்ளனர். பின்னர் படிப்படியாக பஸ் நிலையம் முழுவதையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலைய கட்டுமான பணி வேகமாக நடந்து வருகின்றன. பணிகள் இன்னும் முடியாததால் திறப்பு தள்ளிப்போகும்.

    மொத்தம், 10 பணிகள் நிலுவையில் உள்ளது. எனவே தீபாவளி வரை பஸ் நிலைய பணி நீடிக்கும். எனினும் முன்னதாக பஸ் நிலையத்தை படிப்படியாக திறக்க அரசு முடிவு செய்து உள்ளது. நிலுவையில் உள்ள 10 பணிகளில் சிலவற்றுக்கு டெண்டர் விடப்பட்டு இருக்கிறது. சில பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

    கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து முதல்கட்டமாக திருநெல்வேலிக்கு பஸ்கள் இயக்கப்படும். அடுத்த கட்டமாக மதுரைக்கும், 3-வது கட்டமாக விழுப்புரம் செல்லும் பஸ்கள் அனுமதிக்கப்படும். இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். புதிய பணிகள் திட்டத்தால் 25 சதவீதம் செலவு அதிகரித்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டும்பணி நடந்து வருகிறது.
    • ஆம்னி பஸ்நிலையம் அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    கோயம்பேடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டும்பணி நடந்து வருகிறது. இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. இதன் அருகிலேயே ஆம்னி பஸ்நிலையம் அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    கிளாம்பாக்கம் பஸ்நிலைய பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் முடிந்து உள்ளன. இதனை அமைச்சர் சேகர்பாபு அவ்வப்போது ஆய்வு செய்து வந்தார். எனவே இந்த மாதத்தில் புதிய பஸ்நிலையம் திறப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பஸ்நிலையத்தின் பின்புறத்தில் அய்யன்சேரி வழியாகச் சென்று ஊரப்பாக்கம் நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கான சாலை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த சாலை அமைத்தால் வாகனங்கள் தொடர்ச்சியாக செல்லும்போது ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படும் என்பதால் மாற்று சாலையை கருத்தில் கொண்டு அந்த சாலை பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் பஸ்நிலைய பகுதியில் கால்வாய் அமைக்கும் பணியும் இன்னும் முடியவில்லை.

    தேங்கும் நீரை மறுபுறம் கொண்டு செல்ல ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே குழாய் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பஸ்நிலையத்தின் முன்பகுதியிலும் பஸ்கள் செல்ல சாலைப்பணி இன்னும் முழுமையாக முடியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் ஆம்னி பஸ் நிறுத்தத்திற்கான இடத்தை படப்பை அருகில் தேர்வு செய்து இருந்தனர். அந்த இடத்தை ஆய்வு செய்தபோது ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரும்போதும், பயணிகளை ஏற்றி சென்று மீண்டும் செல்லும் போதும் அந்த வாகனம் இரண்டு முறை டோல்கேட்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் நிலை உள்ளது. எனவே ஆம்னி பஸ் நிலைய இடத்தையும் கைவிட்டு உள்ளனர். ஆம்னி பஸ்களுக்கான இடத்தையும் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    இதேபோல் பஸ்நிலைய மேற்கூரை பணிகளும் பயணிகள் வந்து தங்குவதற்கான தங்குமிடம், உணவகம் மற்றும் கடைகள் பணியும் முடிவடையாததால் கிளாம்பாக்கம் பஸ்நிலைய திறப்பு தள்ளிப்போகும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பஸ் நிலையத்தின் தரை தளத்தில் கடைகள், உணவகம், டீக்கடை, பியூட்டி பார்லர், மற்றும் டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைகிறது.
    • அடிப்படை பணிகள் நடந்து வந்தாலும் அடுத்த மாத கடைசியில் பஸ் நிலையத்தை திறக்க முடிவு செய்துள்ளனர்.

    சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இது திறக்கப்படுகிறது.

    இந்த பஸ் நிலையத்தின் தரை தளத்தில் கடைகள், உணவகம், டீக்கடை, பியூட்டி பார்லர், மற்றும் டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைகிறது.

    முதல் தளத்தில் டிரைவர்கள் கண்டக்டர்கள் தங்குவதற்கும், பொதுமக்கள் அமர்வதற்கும் டார்மெட்ரி வகையில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த பஸ் நிலையத்தின் வடிவமைப்பு குளறுபடி காரணமாக அதை சரி செய்யும் பணியை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக இந்த துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவ்வப்போது உயர் அதிகாரிகளுடன் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    மழை பெய்தால் இப்போது அங்கு தண்ணீர் தேங்குகிறது. அதை சரிசெய்ய வழிவகை காணுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். பஸ்கள் வந்து செல்லும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. அதை சரி செய்யும்படி கூறி உள்ளார். அதனடிப்படையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    பல்வேறு அடிப்படை பணிகள் நடந்து வந்தாலும் அடுத்த மாத கடைசியில் பஸ் நிலையத்தை திறக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்த புதிய பஸ் நிலையத்தில் 100 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளை ஏலம் எடுக்க 1000 பேர்களுக்கு மேல் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

    அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல். ஏ.க்கள், எம்.பி.க்கள் வாரியத் தலைவர்கள் கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர்கள் என தி.மு.க.வில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பல பேர் கட்சியினருக்கு கடைகளை வாங்கி கொடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் போட்டி பலமாக உள்ளது.

    ஆனால் எந்த கடைகளும் இன்னும் ஏலம் விடப்படவில்லை. சிங்கிள் வின்டோ சிஸ்டத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்வதா? அல்லது பொது ஏலத்தில் விடுவதா? என்று முடிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் ஒவ்வொரு கடைக்கும் சிபாரிசு பலமாக உள்ளது.

    இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டதற்கு புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஒதுக்கீடு பெறுவதற்கு கடும் போட்டி நிலவுவது உண்மைதான். இதை சமாளிப்பது பெரிய கஷ்டம். எனவே சி.எம்.டி.ஏ. வழி காட்டி விதிமுறைப்படி விரைவில் இதுபற்றி முடிவெடுப்போம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக வருகின்ற ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.
    • நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரை - 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை:

    செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்தில் இருந்து, ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறையுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வரதராஜபுரத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தினை நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.

    ஆய்வுக்கு பின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், புதிய புறநகர் பேருந்து முனையம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக வருகின்ற ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

    கூடுவாஞ்சேரியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாகவும், கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் சாலை முதல் மண்ணிவாக்கம் வரை- 7 கிலோ மீட்டர் நீளத்திற்கும், கண்டிகை முதல் கூடுவாஞ்சேரி வரை - 18 கிலோமீட்டர் நீளத்திற்கும், நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரை - 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அ.அமல்ராஜ், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, போக்குவரத்து ஆணையர் இல.நிர்மல்ராஜ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கோயம்பேடு பஸ் நிலையத்தை மிஞ்சும் அளவிற்கு 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகின்றது.
    • கலைஞரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டு ஜூன் மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

    வண்டலூர்:

    சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு இந்த பஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது ஆசியாவில் மிகப்பெரிய கோயம்பேடு பஸ் நிலையத்தை மிஞ்சும் அளவிற்கு 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகின்றது.

    இந்த பஸ் நிலைய பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கலைஞரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டு ஜூன் மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

    இதற்காக மாதத்திற்கு 6 முறை ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதலமைச்சரால் திறக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்துக்கு வரக்கூடிய பயணிகளின் வாகனங்கள், பார்க்கிங் இடம், 4 தங்குமிடம், 4 உணவு கூடங்கள் அமைக்கப்படும். 95 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது வீட்டு வசதிதுறை மற்றும் நகர்ப்புற துறை செயலாளர் அபூர்வா, மாவட்ட கலெக் டர் ராகுல்நாத், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், ஒன்றிய துணைத் தலைவர் வி.எஸ். ஆராவமுதன், ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்திக், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பணிகள் சுமார் 88 ஏக்கர் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் நடந்து வருகிறது.
    • தினந்தோறும் 1½ லட்சம் பயணிகளை கையாளும் வகையில் புதிய பஸ்நிலையம் அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டுவதற்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கான பணி சுமார் 88 ஏக்கர் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் நடந்து வருகிறது. புதிய பஸ்நிலைய பணி திட்டமிட்டபடி 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திறந்து இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவலால் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டது.

    தற்போது புதிய பஸ்நிலைய பணி வேகமாக நடந்து வருகின்றன. தினந்தோறும் 1½ லட்சம் பயணிகளை கையாளும் வகையில் இந்த புதிய பஸ்நிலையம் அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஒரே நேரத்தில் 200 பஸ்கள், 270 கார்கள் மற்றும் 3 ஆயிரத்து 500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்துக்கு வந்து செல்லும் வகையில் மாநகர பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சூரிய மின் தகடுகள் பொருத்தி மின்சாரம் பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகள் முழுவதும் முடியும் நிலையில் உள்ளது. கடைசிகட்ட பணிகள் மட்டும் நடந்து வருகின்றன. இந்த பணியில் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும் என்று தெரிகிறது. மேலும் பயணிகள் காத்திருப்பு கூடத்தில் தரைதளம் அமைக்கும் பணியும் நாற்காலிகள் அமைக்கும் பணியும் இறுதி கட்டத்தில் உள்ளது.

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பஸ்கள் உள்ளே நுழைய 2 வழிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் பஸ் நிலையத்தின் முன்பக்கமும், மாநகர பஸ்கள் பின்புறம் வழியாக செல்ல தனி நுழைவு வாயில்கள் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக பஸ்நிலையத்தின் பின்புறம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அய்யஞ்சேரி சாலை சீரமைக்கப்பட்டு ஜி.எஸ்.டி. சாலையுடன் இணைக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே கிளாம்பாக்கம் பஸ்நிலைய பின்புறம் உள்ள அய்யஞ்சேரி, மீனாதிபுரம் பகுதியில் குறுகிய சாலையில் குடியிருப்புகளும், சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளும் உள்ளன. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி 20 அடி சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.

    மேலும் புதிய பஸ் நிலையத்தில் வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களுக்கு தனி பஸ்நிறுத்தம் கிடையாது. எனவே ஆம்னி பஸ்களுக்கு தனியாக பஸ்நிலையம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.இதற்காக வண்டலூர் வெளிவட்ட சாலையில் சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வரதராஜபுரம் ஏற்றஇடமாக இருக்கும் என்று அதிகாரிகள் தேர்வு செய்து உள்ளனர். அடுத்தகட்டமாக இங்கு ஆம்னி பஸ்நிலையம் கட்டும் பணி நடைபெறும் என்று தெரிகிறது.

    கிளாம்பாக்கம் பஸ்நிலையம் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களையும் இணைக்கும் புதிய பஸ் நிலையமாக இருக்கும் என்பதால் சென்னை மற்றும் புறநகரில் அனைத்து பகுதிகளில் இருந்தும், திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் மற்றும் ரெயில் இணைப்பை ஏற்படுத்த, அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. திருவள்ளூருக்கு நகர பஸ்களை படப்பை மேம்பாலம் மற்றும் மதுரவாயல் வழியாக இயக்க முடிவு செய்துள்ளனர்.

    இதேபோல் ஊரப்பாக்கம் மற்றும் வண்டலூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே புறநகர் மின்சார ரெயில் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்காக சி.எம்.டி.ஏ. மற்றும் ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இது தவிர மீனம்பாக்கம் விமான நிலையம்- கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை இணைக்க மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கும் பணியும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விமான நிலையம்- கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இடையே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.4080 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் நிலையம் கட்ட பஸ்நிலையத்தின் எதிரே இடம் கண்டறியப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலைய கட்டுமான பணி முடியும் நிலையில் உள்ளதால் விரைவில் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×