search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இறுதி கட்ட பணி விறுவிறுப்பு- விரைவில் திறப்பு விழா
    X

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இறுதி கட்ட பணி விறுவிறுப்பு- விரைவில் திறப்பு விழா

    • பணிகள் சுமார் 88 ஏக்கர் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் நடந்து வருகிறது.
    • தினந்தோறும் 1½ லட்சம் பயணிகளை கையாளும் வகையில் புதிய பஸ்நிலையம் அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டுவதற்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கான பணி சுமார் 88 ஏக்கர் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் நடந்து வருகிறது. புதிய பஸ்நிலைய பணி திட்டமிட்டபடி 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திறந்து இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவலால் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டது.

    தற்போது புதிய பஸ்நிலைய பணி வேகமாக நடந்து வருகின்றன. தினந்தோறும் 1½ லட்சம் பயணிகளை கையாளும் வகையில் இந்த புதிய பஸ்நிலையம் அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஒரே நேரத்தில் 200 பஸ்கள், 270 கார்கள் மற்றும் 3 ஆயிரத்து 500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்துக்கு வந்து செல்லும் வகையில் மாநகர பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சூரிய மின் தகடுகள் பொருத்தி மின்சாரம் பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகள் முழுவதும் முடியும் நிலையில் உள்ளது. கடைசிகட்ட பணிகள் மட்டும் நடந்து வருகின்றன. இந்த பணியில் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும் என்று தெரிகிறது. மேலும் பயணிகள் காத்திருப்பு கூடத்தில் தரைதளம் அமைக்கும் பணியும் நாற்காலிகள் அமைக்கும் பணியும் இறுதி கட்டத்தில் உள்ளது.

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பஸ்கள் உள்ளே நுழைய 2 வழிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் பஸ் நிலையத்தின் முன்பக்கமும், மாநகர பஸ்கள் பின்புறம் வழியாக செல்ல தனி நுழைவு வாயில்கள் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக பஸ்நிலையத்தின் பின்புறம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அய்யஞ்சேரி சாலை சீரமைக்கப்பட்டு ஜி.எஸ்.டி. சாலையுடன் இணைக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே கிளாம்பாக்கம் பஸ்நிலைய பின்புறம் உள்ள அய்யஞ்சேரி, மீனாதிபுரம் பகுதியில் குறுகிய சாலையில் குடியிருப்புகளும், சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளும் உள்ளன. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி 20 அடி சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.

    மேலும் புதிய பஸ் நிலையத்தில் வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களுக்கு தனி பஸ்நிறுத்தம் கிடையாது. எனவே ஆம்னி பஸ்களுக்கு தனியாக பஸ்நிலையம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.இதற்காக வண்டலூர் வெளிவட்ட சாலையில் சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வரதராஜபுரம் ஏற்றஇடமாக இருக்கும் என்று அதிகாரிகள் தேர்வு செய்து உள்ளனர். அடுத்தகட்டமாக இங்கு ஆம்னி பஸ்நிலையம் கட்டும் பணி நடைபெறும் என்று தெரிகிறது.

    கிளாம்பாக்கம் பஸ்நிலையம் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களையும் இணைக்கும் புதிய பஸ் நிலையமாக இருக்கும் என்பதால் சென்னை மற்றும் புறநகரில் அனைத்து பகுதிகளில் இருந்தும், திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் மற்றும் ரெயில் இணைப்பை ஏற்படுத்த, அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. திருவள்ளூருக்கு நகர பஸ்களை படப்பை மேம்பாலம் மற்றும் மதுரவாயல் வழியாக இயக்க முடிவு செய்துள்ளனர்.

    இதேபோல் ஊரப்பாக்கம் மற்றும் வண்டலூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே புறநகர் மின்சார ரெயில் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்காக சி.எம்.டி.ஏ. மற்றும் ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இது தவிர மீனம்பாக்கம் விமான நிலையம்- கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை இணைக்க மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கும் பணியும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விமான நிலையம்- கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இடையே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.4080 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் நிலையம் கட்ட பஸ்நிலையத்தின் எதிரே இடம் கண்டறியப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலைய கட்டுமான பணி முடியும் நிலையில் உள்ளதால் விரைவில் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×