search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குற்றாலத்தில் சீசன் அறிகுறியால் கடைகளை தயார் செய்யும் வியாபாரிகள்
    X

    கடைகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்


    குற்றாலத்தில் சீசன் அறிகுறியால் கடைகளை தயார் செய்யும் வியாபாரிகள்

    • தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம்.
    • ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் ஏலம் விடப்பட்டு வியாபாரிகள் கடைகளை அமைப்பதற்கான பணிகளை தொடங்குவர்.

    தென்காசி:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களும் சீசன் காலமாக இருக்கும்.

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமாக இருக்கும்போது அதனை ஒட்டிய பகுதி தென்காசி மாவட்டம் என்பதால் அங்கும் 3 மாதங்களும் சாரல் மழை பொழியும். இதனால் குற்றால அருவிகள் அனைத்திலும் தண்ணீர் கொட்ட தொடங்கும்.

    சுற்றுலா பயணிகள் அனைவரையும் சுண்டி இழுக்கும் வண்ணம் அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் என்பதால் வியாபாரிகள் பலர் அருவி பகுதிகளை சுற்றிலும் அரசு அனுமதியுடன் தற்காலிக கடைகளை அமைத்து வியாபாரங்களை மேற்கொள்வர்.

    ஒவ்வொரு ஆண்டும் சீசன் தொடங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் ஏலம் விடப்பட்டு வியாபாரிகள் கடைகளை அமைப்பதற்கான பணிகளை தொடங்குவர். தென்காசி மாவட்டத்தில் தற்போது கோடை காலம் என்பதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் இன்றி வறட்சியாக காணப்படுகிறது.

    கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து குற்றால சீசன் தொடங்குவதற்கு முன்பாக குளிர்ந்த காற்று வீசத் தொடங்கும் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதால் சீசன் தொடங்க வாய்ப்புள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையமும் வருகிற 4-ந்தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளதால் குற்றாலம் சீசனும் இன்னும் ஒரு சில தினங்களில் சாரல் மழையுடன் தொடங்கும் எனும் எதிர்பார்ப்பில் வியாபாரிகள் அனைவரும் தற்காலிக கடைகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டை போன்று குற்றால சாரல் திருவிழா இந்த ஆண்டும் மிகப் பிரமாண்டமாக அரசு சார்பில் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் தென்காசி மாவட்ட மக்க ளிடையே ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×