search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stress"

    • உடல்பருமன் குறைந்தாலும் கூடினாலும் இந்த பிரச்சினை இருக்கலாம்.
    • தூக்கமின்மை காரணங்களாலும் மாதவிடாய் இரண்டு முறை வரலாம்.

    பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் ஒவ்வொரு மாதமும் முன், பின் என மாறிவருவது இயல்பு. அதுவே 10 நாட்களுக்கு மேல் தள்ளிப்போதல், ஒரே மாதத்தில் இரண்டு முறை வருதல் போன்ற பிரச்சினைகளை உடனே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளுதல் அவசியம். அப்படி ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வர என்ன காரணம் என்று பார்க்கலாம்.

    * முதலில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையும் வருவது மாதவிடாய்தானா அல்லது அது ரத்தக் கசிவா எனக் கண்டறிவது அவசியம்.

    * மாதவிடாய் போன்று உதிரப்போக்கு வந்துகொண்டிருந்தால் அது மாதவிடாய்தான். அவ்வாறு அல்லாமல் சிறிது உதிரம் மட்டுமே வந்து, நெப்கின் முழுமையாக பயன்படுத்தவில்லை எனில், அது ரத்த கசிவதாக இருக்கலாம்.

    * பிறப்புறுப்பில் இருந்து ரத்தக் கசிவு என்பது உடலுறவு கொள்ளுதல், கருக்கலைதல் அல்லது பிரசவ காலத்திலோதான் பெரும்பாலும் நிகழும். இதுதான் காரணம் என்றால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் அவசியம்.

    * உங்களுக்கு மாதவிடாயாக இருக்கும் பட்சத்தில் அது ஒவ்வொரு மாதமும் தொடர்கதையானால் சில பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். உங்களுக்கு தைராய்டு அதிகம் சுரந்தாலோ அல்லது குறைவாக சுரந்தாலோ இந்த பிரச்சினை வரலாம்.

    * ஒருவேளை நீங்கள் மாதவிடாய் நிற்கும் தருவாயில் இருக்கிறீர்கள் என்றாலும் இந்த பிரச்சினை வரலாம்.

    * நீங்கள் அதிகம் கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொள்கிறீர்கள் என்றாலும் இரண்டு முறை மாதவிடாய் வரலாம். மன அழுத்தம் காரணங்களால் சரியான உணவின்மை, தூக்கமின்மை காரணங்களாலும் மாதவிடாய் இரண்டு முறை வரலாம்.

    * திடீரென உடல்பருமன் குறைந்தாலும் கூடினாலும் இந்த பிரச்சினை இருக்கலாம். மேலே குறிப்பிட்ட விஷயங்கள் உங்கள் வாழ்க்கை முறையோடு ஒத்துப்போவதாகக் கருதினால், இதை சாதாரணமாக கடந்து செல்லாமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சைப் பெறுவது அவசியம்.

    • உங்களுக்கு பிடித்த இடத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள்.
    • நீங்கள் செல்லும் இடத்தின் சூழலையும் ரசிக்க பழகுங்கள்.

    வாரத்தின் ஆறு நாட்களும் வேலையில் மூழ்கி சோர்ந்து போகும் நபரா நீங்கள்? அப்படியென்றால் கொஞ்சம் `ஓய்வு' எடுக்க பழகுங்கள். ஒரே வேலையில் ஈடுபட்டு வரும்போது, அந்த வேலை அப்படியே தடைபட்டு நின்று போக வாய்ப்புள்ளது. இது உங்கள் செயல்திறனை குறைப்பது மட்டுமின்றி, உங்களை அடுத்தகட்டத்துக்கு நகரவிடாமல் நீண்ட நாட்கள் அதே இடத்தில் முடக்கிவிடும். இதுபோன்ற பணிச்சூழலில் சிக்கியிருப்பவர்கள் அதில் இருந்து மீண்டுவர என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை பார்ப்போம்...

    சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள்

    தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். உங்கள் சைக்கிள் பயணங்களில், கவனம் சிதற வைக்கும் விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் பயணத்தையும், நீங்கள் செல்லும் இடத்தின் சூழலையும் ரசிக்க பழகுங்கள். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதை செய்ய பழகுங்கள்.

    10 ஆயிரம் காலடி நடைபயணம்

    ஒரு நாளைக்கு நீங்கள் நடந்து செல்லும் தூரம் 10 ஆயிரம் காலடி (ஸ்டெப்ஸ்) என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ௧௦ ஆயிரம் ஸ்டெப்ஸ் என்பது 7.5 கிலோமீட்டர். அதற்காக ஒருவர் தினமும் 7.5 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும் என்பது இல்லை. உங்கள் வீட்டு மாடிக்கு ஏறுவது தொடங்கி, உங்கள் அலுவலகத்தில் காபி அருந்த கேண்டீனுக்கு செல்வது வரை அனைத்தையும் சேர்த்து இந்த அளவு நடந்தால் போதுமானதாக இருக்கும்.

    தினசரி ஒரு புகைப்படம் எடுங்கள்

    தினசரி உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை அல்லது உங்களுக்கு பார்க்க அழகாக தோன்றும் ஒரு விஷயத்தை புகைப்படமாக பதிவு செய்யுங்கள். இதேபோல் 30 நாட்களும் புகைப்படம் எடுங்கள். உங்கள் மனநிலை முதல் நாளில் இருந்து தற்போது எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களை புதுமையாக சிந்திக்க வைக்க இந்த பழக்கம் மிகவும் உதவியாக இருக்கும். அது மிகப்பெரிய போட்டோகிராபியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. செல்போன் புகைப்படமே போதுமானது.

    தினமும் எழுதுங்கள்

    தினமும் எழுதுங்கள் என்று கூறியவுடன் உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். `நான் ஒரு கணினி பொறியாளர்... நான் எப்படி தினமும் எழுதுவது?' என்று. ஒரு நாளைக்கு உங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை அரைப்பக்க அளவில் இருந்து எழுத துவங்குங்கள். 100-வது நாள், 50 பக்க அளவு கொண்ட குறுநாவல் உங்கள் பெயரில் இடம் பெற்றிருக்கும். அத்துடன் புதுமையான விஷயங்களுக்கு நீங்கள் மாறிய விதம் புரியும்.

    காதலிக்க பழகுங்கள்

    காதல் என்றவுடன் எதிர்பாலின ஈர்ப்பு என்ற அர்த்தம் இல்லை. உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள். நீங்கள் செய்யும் சில ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். வேலை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலையை பற்றிய நினைவு இல்லாத உற்சாகமான விஷயங்களில் நாட்டம் செலுத்துங்கள்.

    நண்பர்களுடன் சமூக வலை தளங்களில் உரையாடாமல் நேரில் உரையாட பழகுங்கள். மனதுக்கு நெருக்கமான நபருடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள். இவற்றை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது, நீங்கள் நினைத்த புதுமை நபராக உங்களை நீங்களே தயார்படுத்தி இருப்பீர்கள்.

    எதை செய்யக் கூடாது?

    வேலையை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.

    அலுவலக நேரம் தவிர அதிக நேரம் அலுவலகத்தில் இருக்காதீர்கள்.

    • குளிர்ச்சி தன்மை பலருக்கும் ஒத்துக்கொள்ளாது.
    • ஊட்டச்சத்துக்கள்தான் நோய் எதிர்ப்பு அமைப்பை கட்டமைக்கின்றன.

    ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்

    குளிர்காலத்தில் நிலவும் குளிர்ச்சி தன்மை பலருக்கும் ஒத்துக்கொள்ளாது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். அதில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது முதன்மையானது. அதற்கான ஐந்து பயனுள்ள வழிமுறைகள்:

    வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்தான் நோய் எதிர்ப்பு அமைப்பை கட்டமைக்கின்றன. சிட்ரஸ் பழங்களில் காணப்படும் வைட்டமின் சி, நட்ஸ்கள், தானியங்களில் காணப்படும் வைட்டமின் ஈ போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டவை.

    அவை தினசரி உணவில் போதுமான அளவில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். ஆரஞ்சு, சாத்துக்குடி, கிரேப் புருட், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், பாதாம், பிஸ்தா, வேர்க் கடலை, சோயா, சூரியகாந்தி விதைகள், தக்காளி சாஸ், கோதுமை போன்ற வைட்டமின் ஈ சத்து நிறைந்த உணவுப்பொருட்களை குளிர்காலத்தில் தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

    உடல் செயல்பாடு

    உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்குவது இடுப்பை சுற்றியுள்ள தசைகளை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் உதவிடும். நடைப்பயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுதல் போன்ற மிதமான உடல் இயக்கம் கொண்ட பயிற்சிகள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.

    எந்த நோயையும் நெருங்க விடாமல் எதிர்க்கக்கூடிய ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை துரிதப்படுத்த உதவும். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வதற்கு முயற்சியுங்கள்.

    தூக்கம்

    இரவு நேர ஓய்வின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். உடல் தன்னைத்தானே சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்பாக தூக்கத்தை பயன்படுத்திக்கொள்ளும். அதில் நோய் எதிர்ப்பு அமைப்பும் அடங்கும். குழந்தைகளை தவிர மற்றவர்கள் இரவில் ஏழு முதல் எட்டு மணிநேர தூக்கத்தை இலக்காக கொள்ள வேண்டும். அதில் சமரசம் செய்யக்கூடாது.

    நீர்ச்சத்து

    நீர் வாழ்க்கைக்கு மட்டுமல்ல உடலுக்கும் இன்றியமையாதது. நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் அதன் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. உடல் நீரேற்றமாக இருந்தால்தான் நோய் எதிர்ப்பு அணுக்களின் சுழற்சி சீராக நடைபெறும். உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் நீர்ச்சத்து அவசியமானது.

    மன அழுத்தம்

    நாள்பட்ட மன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை முடக்கி, பல்வேறு நோய் பாதிப்புக்கு ஆளாக்கிவிடும். மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது மன ஆரோக்கியத்திற்கும், குளிர்காலத்தில் ஏற்படும் உடல்நலக் கேடுகளிலிருந்து பாதுகாக்கவும் உதவும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்கவும் துணைபுரியும்.

    • மனம் விசித்திரமான குணம் கொண்டது.
    • கவலையும், சிந்தனையும் மனதை துவண்டுபோகச் செய்து விடும்.

    மனம் கஷ்டப்படும்படியான சம்பவம் ஏதாவது நடந்துவிட்டால் அதை பற்றியே சிந்தித்து புலம்பிக்கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பிறர் சாதாரணமாக கருதும் விஷயத்தை கூட இவர்கள் மனதில் போட்டு குழப்பிக்கொண்டே இருப்பார்கள். அதில் இருந்து மீள்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வார்கள்.

    அதுவரை நடந்த சம்பவத்தை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள். `நாம் இப்படி செய்திருக்கலாமோ? அப்படி செய்திருந்தால் இந்த அளவுக்கு பிரச்சினை வந்திருக்காதோ? அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமோ?' என்று சிந்தித்து மனதை ரணமாக்கிவிடுவார்கள்.

    மனம் விசித்திரமான குணம் கொண்டது. மனதை உலுக்கும் ஏதாவதொரு சம்பவம் நடந்துவிட்டால் உடனே சிந்திக்க ஆரம்பித்துவிடும். அந்த சமயத்தில் மனதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கவலையும், சிந்தனையும் மனதை துவண்டுபோகச் செய்து விடும்.

    மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ்வதற்கு கூடுமானவரை மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க வேண்டும். தேவையற்ற சிந்தனைகள்தான் மனச்சோர்வுக்கோ, மன நோய்க்கோ காரணமாக அமைந்துவிடும். மூளையின் செயல்பாடுகளையும் முடங்க செய்து விடும். அதனால்தான் மன நலன் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    அதிகம் சிந்திப்பது மன நலனுக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும். மன அழுத்தமும், பதற்றமும் உடல் செயல்பாடுகளில் தாக்கத்தை உண்டாக்கும். மனம் கட்டுக்குள் இல்லாமல் போனால் சிந்தனையை கட்டுப்படுத்த வேண்டும்.

    மனம் கட்டுப்பாட்டை இழப்பதாக உணரும் சமயங்களில் சிந் தனைகளுக்கு ஒருபோதும் இடம் கொடுக்கக்கூடாது. மூச்சை ஆழமாக உள் இழுத்து வெளியே விட வேண்டும். அது மனதை சாந்தப்படுத்த உதவும். தியானம் செய்யலாம். அமைதியான சூழல் கொண்ட இடத்தில் அமர்ந்து ஓய்வும் எடுக்கலாம்.

    அந்த சமயத்தில் கூட தேவையற்ற சிந்தனை எழுந்தால் வேறு ஏதாவதொரு விஷயத்தில் கவனம் செலுத்தலாம். மற்றவர்களுக்கு ஏதாவதொரு நல்ல விஷயத்தை செய்து கொடுக்கலாம். அதனால் அவர் மகிழ்ச்சி அடைந்தால் அது உங்களுக்கும் மன நிறைவை கொடுக்கும். விசித்திரமான ஆற்றலையும் தரும். எல்லாம் நன்றாக நடக்கிறது என்பதை புரிந்துகொள்வீர்கள். கவலைப்பட ஒன்றுமில்லை என்பதையும் உணருவீர்கள்.

    சாதாரணமாக கடந்து போகக்கூடிய விஷயத்திற்கெல்லாம் சிலர் சட்டென்று பதற்றமடைந்து விடுவார்கள். நடந்ததையே மிகையாக சிந்திப்பதுதான் அதற்கு காரணம். சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். மனதை ஆழ்ந்த சிந்தனையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.

    ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் மனம் வேதனைக்குள்ளாகும். அந்த சமயத்தில் ஏதாவதொரு வேலையில் கவனம் செலுத்தலாம். சைக்கிள் ஓட்டலாம். நடக்கலாம். மனதை திசைதிருப்பக்கூடிய ஏதாவதொரு செயலில் ஈடுபடலாம். அது மூளை தசைகளை தளர்த்த உதவும்.

    மனதில் எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்கும் போது சந்தோஷமான தருணங்களை பற்றி நினைத்து பார்ப்பது சாத்தியமில்லாததுதான். ஆனால் குறைந்தபட்சம் முயற்சி செய்தாவது பார்க்கலாம். மன அழுத்தத்திலோ, கவலையிலோ இருக்கும்போது பலவீனங்களை அடையாளம் கண்டு அதனை சரி செய்வதற்கான முயற்சியில் கவனம் செலுத்த முடியும்.

    கடந்த காலத்தில் செய்த தவறுகளை நினைவில் வைத்திருந்தால், ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியாது. அது தொடர்ந்து துயரத்தில் மூழ்க வைத்துவிடும். மன நலனையும் பாதிக்கும்.

    பழைய விஷயங்களை மனதை விட்டு விரட்டி, எதிர்காலத்தை பற்றி சிந்திக்க பழக வேண்டும். அந்த சிந்தனையும் கூட அதிக நேரம் நீடிக்க கூடாது. எப்போதும் இயல்பாக இருப்பதுதான் மன ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

    • மெனோபஸ் முன்கூட்டியே வருவதற்கு 9 சதவீதம் அதிகம் வாய்ப்பு.
    • கருமுட்டை உற்பத்தி நின்றுவிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

    இரவு பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலம் முன்கூட்டியே முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அத்துடன் இதயம் சார்ந்த நோய்கள், நினைவாற்றல் திறன் குறைபாடு, எலும்புகள் பலவீனமடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    20 மாதங்கள் தொடந்து இரவு நேர ஷிப்டுகளில் பணி புரியும் பெண்களிடம் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து அதன் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அப்படி 20 மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் இரவு நேரத்தில் பணி புரியும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் இறுதி நிலையான மெனோபஸ் முன்கூட்டியே வருவதற்கு 9 சதவீதம் அதிகம் வாய்ப்பிருக்கிறது.

    அதுவே 20 ஆண்டுகளாக தொடர்ந்து இரவு பணியை மேற்கொள்பவர்களாக இருந்தால் 73 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

    `45 வயதுக்கு முன்பாகவே மாதவிடாய் சுழற்சி முடிவடைந்த பெண்களாக இருந்தால் அவர்கள் ஷிப்ட் அடிப்படையில் பார்க்கும் வேலையை முக்கியமானதாக கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. வேலைக்காக தொடர்ந்து சுழற்சி முறையில் உடல் இயக்கம் நடைபெற்று கொண்டிருப்பது, மன அழுத்தம் போன்றவை அதற்கு காரணமாக இருக்கிறது. இதுபற்றி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்வது அவசியம்'' என்கிறார்,

    ஆய்வை மேற்கொண்ட கனடாவில் உள்ள டல்கவுசி பல்கலைக்கழக பேராசிரியர், டேவிட் ஸ்டாக். இரவு நேரத்தில் வேலை செய்யும்போது ஏற்படும் மன அழுத்தம் ஈஸ்ரோஜெனின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அதனால் முன்கூட்டியே மாதவிடாய் காலம் முடிவடைவதற்கு வழிவகுத்துவிடுகிறது.

    மேலும் கருமுட்டை உற்பத்தி நின்றுவிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு 22 ஆண்டுகளாக இரவு நேர பணியில் ஈடுபட்டிருக்கும் 80 ஆயிரம் நர்சுகள் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

    • உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
    • தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதற்கும் மன அழுத்தம் காரணமாகிறது.

    உலக நாடுகளை ஒப்பிடுகையில் மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில் வேலை பார்ப்போர் விகிதம் 39.1 சதவீதமாகவே இருக்கிறது. பொருளாதார நிலையை சமாளிக்க தகுதியான வேலை கிடைக்காவிட்டாலும் கிடைத்த வேலையை ஏற்றுக்கொண்டு செய்யும் பலரை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

    வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும் நிலையில் ஏதோ ஒரு வேலை கிடைத்து அங்கு பணிச்சூழல் சரியாக அமையவில்லை என்றால் அங்கே மனரீதியான பிரச்சினைகள் ஏற்படுகிறது. நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கும், பணியாளர்களின் செயல்திறனுக்கும் இடையே காணப்படும் இடைவெளிதான் இந்த மாதிரியான சூழ்நிலையை உருவாக்குகிறது. இதனால் வேலை, ஊதியம் தாண்டி மன அமைதியுடன் வேலை செய்வதற்கான ஒரு நல்ல சூழ்நிலை எல்லோருக்கும் தேவைப்படுகிறது.

    வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம் தவிர்க்க முடியாது. ஒரு நிறுவனத்தில் ஒருவருக்கு கீழ் வேலை செய்யும் போது நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைத்துவிடுவதில்லை. குடும்பச்சூழல், வேலைப்பளு, கட்டமைப்பு வசதிகள், அலுவலக சூழ்நிலை, சகபணியாளர்கள் நடந்துகொள்ளும் விதம், மேல் அதிகாரியின் நடவடிக்கை, நேரமின்மை, வேலையில் தெரியாமல் செய்யும் தவறுகள் என அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட பலவித காரணங்கள் உள்ளன.

    இவை எல்லாம் எப்போதாவது ஏற்பட்டால் பெரிதாக கண்டுகொள்ளத்தேவை இல்லை. ஆனால் அனைத்து சூழ்நிலைகளும் உங்களுக்கு எதிராக திரும்பும் போது உடனடியாக தீர்வுகாண வேண்டியது அவசியம்.

    கண்டிப்பாக எல்லோருக்கும் வேலைப்பளுவின் காரணமாக மன அழுத்தம் இருக்கிறது. சிலபேர் மட்டும் தான் இதற்கு முக்கியத்துவம் அளித்து மனதிற்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் தான் அவர்களுக்கும் உடம்பும், மனதும் மிகவும் பலவீனம் அடைகிறது.

    உங்களுக்கு வேலை கடினமாக உள்ளது, அதை கையாள்வதற்கு மிகவும் சிரமப்படும்போது வேலைபார்க்கும் இடத்திலேயே உதவிசெய்வதற்கு உங்கள் நண்பரையோ அல்லது மேலதிகாரியின் உதவியையோ நாடலாம். ஏனென்றால் அவர்கள் அதை எல்லாம் கடந்துதானே வந்திருப்பார்கள். உங்களுடைய தேவைகளை அவர்களிடம் கேட்டுப்பெறலாம்.

    இங்கு வேலை என்பது மிகவும் முக்கியமானது. இந்த வேலை கடினமாக இருக்கிறது என்று எண்ணினால் இதைவிடுத்து வேறு இடத்திற்கு போனாலும் அங்கும் வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். எனவே அதனை கையாள தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

    முதலில் உங்களது மனநிலை எதுவாக இருந்தாலும் அதனை உங்களால் கையாள முடியுமா? இல்லையா என்று பார்க்க வேண்டும். உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் மருத்துவ ஆலோசகரை அணுகலாம். இப்போது நிறைய தெரப்பிஸ்டுகள் இருக்கிறார்கள். தற்போது நிறைய அட்வான்ஸ் டெக்னாலஜிகளும் வந்துவிட்டன.

    இதையும் மீறி உங்களுக்கு மன அழுத்தம் இருந்துகொண்டு இருந்தால், அதாவது மருத்துவ ஆலோசகரை அணுகியும் உங்களுக்கு சரியாகவில்லை என்றால் அப்போது அந்த வேலையை மாற்றுவதை பற்றி நீங்கள் சிந்திக்கலாம். உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறதோ, நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அந்த வேலைக்கு உங்களை மாற்றிக்கொள்ளலாம்.

    உயர் பதவிகளில் இருப்பவர்கள் இந்த வகை மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் வேலைப்பளு என்பது அவர்களுக்கு இருந்துகொண்டுதான் இருக்கும். மேலும் அவர்களால் வேலையைவிட்டு அவ்வளவு எளிதில் வெளியே வர முடியாது. அவர்கள் மன அழுத்தம் வேலைகளால் ஏற்படுகிறதா அல்லது வீட்டு சூழ்நிலைகளால் ஏற்படுகிறதா என்பதை பிரித்து பார்க்க வேண்டும்.

    மன அழுத்தத்தால் ஏற்படும் பிரச்சினைகள் மனநல பிரச்சினைகளையும், உடல்நல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். மன அழுத்தம் அதிகமாக இருந்தால் பக்கவாதம், மாரடைப்பு, உடல்பருமன், எடைகுறைவு என பல உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

    மனநல பிரச்சினை உள்ளவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதற்கும் மன அழுத்தம் காரணமாகிறது.

    வேலைப்பளுவினால் மன அழுத்தம் ஏற்பட்டால் அது உங்களது வேலையை பாதிக்கிறது, உங்களது கவனத்தை வேலைகளில் செலுத்த இயலல்லை. அதற்கு மாறாக உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் தான் அதிகம் வருகிறது என்றால் உடனடியாக மருத்துவ ஆலோசகரை சந்திப்பது தான் மிகவும் நல்லது.

    மருத்துவரை பார்ப்பதற்கோ அல்லது கவுன்ஸ்லிங் போவதற்கோ முதலில் அச்சப்படக்கூடாது. நம்மை பற்றி எப்படி பேசுவது, எல்லோருக்கும் தெரிந்துவிடுமோ, நம்மை பற்றி இவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணாமல் எல்லா தடைகளையும் உடைத்துவிட்டு துணிந்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும். அவர்களை சந்தித்து ஆலோசனைகளை பெற்றாலே உங்களுடைய வாழ்வியல் முறைகள் மாறிவிடும்.

    தற்கொலை எண்ணங்கள் ஏன் ஏற்படுகிறது

    தற்கொலை எண்ணங்கள் ஒரு மனிதன் கோபமாக இருக்கும்போது அல்லது சண்டையிடும் போது இந்த மாதிரி எண்ணங்கள் வருவது என்பது இயற்கை. ஆனாலும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. கோபத்தை கட்டுப்படுத்த முடியாத போது தான் விபரீதமான எண்ணங்களும், தற்கொலை முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. இதனால் நிறைய தற்கொலைகளும் நடந்துள்ளன.

    ஒருவருக்கு தொடர்ந்து தற்கொலை எண்ணங்கள் வருவது, தற்கொலை பற்றி அதிகமாக பேசுவது, தனிமையில் இருப்பது ஆகிய அறிகுறிகள் இருப்பவர்களை கண்டிப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். தற்போது ஹெல்ப்லைன் மூலமாக கூட மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது. எனவே மருத்துவமனைக்கு செல்லாமல் இந்த மாதிரி ஹெல்ப்லைன் மூலமாக மருத்துவ ஆலோசகருக்கு போன் செய்தும் கவுன்ஸ்லிங் அளிக்கலாம்.

    மன அழுத்தத்திற்கான சிகிச்சை முறைகள்

    பலவருடங்களுக்கு முன்னால் இருந்தே மன அழுத்தத்திற்கு நிறைய சிகிச்சைகள் இருக்கின்றன. அதிக மனக்குழப்பம் இருப்பவர்களுக்கு கூட இப்போது நல்ல சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அதில் மிகவும் முக்கியமானது யோகா மற்றும் தியானம். இது மன அழுத்தத்தில் இருந்து விடுபட மிகவும் உதவுவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இந்த சிகிச்சை முறைகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்தால் மட்டுமே நல்ல பலனை பெறமுடியும்.

    தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்வது, மருத்துவ ஆலோசகரின் வழிமுறைகளை பின்பற்றுவது. தொடர் சிகிச்சை முறைகளை பின்பற்றுவது என்று செய்தால் மட்டுமே சீக்கிரமாக இத்தகைய நிலையில் இருந்து வெளியே வர முடியும்.





    • உடல் மற்றும் மன மாற்றங்கள் அதிகம் ஏற்படும்.
    • கருச்சிதைவு அவர்களின் மனதை பெரிதும் பாதிக்கும்.

    பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள், உடல் மற்றும் மன மாற்றங்கள் அதிகம் ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிப்பது, ஹார்மோன் மாற்றம் அல்லது உணர்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்களால் அவதிப்படுவார்கள். அப்படியான நேரத்தில் ஏற்படும் கருச்சிதைவு அவர்களின் மனதை பெரிதும் பாதிக்கும்.

    கருச்சிதைவு என்பது குழந்தை பிறப்பதற்கு முன்னரே கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை கருவிலே உயிரிழப்பது ஆகும். ஒரு தாய் தனது கருவை இழக்கும்போது ஏற்படும் திடீர் சில உடல்நல சிக்கல்களால் உடல் வலிமையை இழப்பது மட்டுமல்லாமல், கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த நாளில் இருந்து அவள் திட்டமிட்டிருந்த முழு கனவுகளையும் இழக்கிறாள். கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் மிகுந்த மன உளைச்சலுடன் உயிரற்றவராக உணர்க்கிறார்.

    கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே கூட கருச்சிதைவு ஏற்படலாம். எனவே நீங்கள் புள்ளி அல்லது ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு செல்வது தான் நல்லது.

    நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்த பிறகு உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால் அதிர்ச்சி மற்றும் அதனால் வரும் மன அழுத்தம் என்பது இயல்பானது. ஆனால் முதலில், கருச்சிதைவின் போது மனச்சோர்வின் அறிகுறிகளை நீங்கள் அடையாளம் காண வேண்டும்.

    அறிகுறிகள்

    * எரிச்சல் அல்லது விரக்தி உணர்வு

    * சோகம், வெறுமை அல்லது நம்பிக்கையற்ற உணர்வு

    * பெரும்பாலான அல்லது அனைத்து வழக்கமான நடவடிக்கைகளிலும் ஆர்வம் அல்லது மகிழ்ச்சியை இழப்பது

    * வழக்கத்திற்கு மாறாக சோர்வாகவும் கவலையாகவும் இருப்பது

    * தூங்குவது மற்றும் மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சாப்பிடுவது

    * பயனற்ற அல்லது குற்ற உணர்வு

    * விஷயங்களை நினைவில் வைத்து கவனம் செலுத்துவதில் சிரமம்

    * மரணம் அல்லது தற்கொலை பற்றிய எண்ணங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகள்

    * சீரற்ற வலிகள்

    மேற்கூறிய அறிகுறிகளில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் இருந்தால், ஒரு பெண் குணமடைய மருத்துவரின் ஆலோசனை தேவைப்படலாம்.

    கருச்சிதைவுக்குப் பிறகு, கோபம், மனச்சோர்வு போன்றவற்றை அனுபவிப்பது பொதுவானது. ஆனால் கருச்சிதைவுகளால் பாதிக்கப்படும் பெரும்பாலான பெண்களுக்கு எதிர்காலத்தில் ஆரோக்கியமான கர்ப்பம் இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுவது மற்றும் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்வது விரும்பத்தகாத அனுபவத்தையும் குற்ற உணர்வையும் போக்க உதவும். இருப்பினும், மனச்சோர்வு கடுமையாக இருந்தால், மருத்துவர்களிடம் செல்லலாம்

    சிகிச்சைமுறை

    * ஆரோக்கியமான உணவை உண்ணுதல் மற்றும் சரியான நேரத்தில் தூங்குதல், சிறிது ஓய்வுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்தல் உடலைக் குணப்படுத்தும்

    * மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைக்க ஆண்டிடிரசண்ட்ஸ்

    * துக்கத்தை ஆரோக்கியமான முறையில் சமாளிக்க உதவும் உளவியல் சிகிச்சை

    * எலெக்ட்ரோகான்வல்சிவ் தெரபி (ECT), அதாவது உங்கள் மூளைக்கு லேசான மின்சாரத்தை பயன்படுத்துதல், ஆனால் இது மன அழுத்தத்தின் கடுமையான நிகழ்வுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

    • திட்டமிட்ட காரியங்கள் நடக்காதபோது மனம் வேதனைக்குள்ளாகும்.
    • தேவையற்ற சிந்தனைகள் தோன்றி மனதை அலைபாய வைக்கும்.

    திட்டமிட்ட காரியங்கள், வேலைகள் நடக்காதபோது மனம் வேதனைக்குள்ளாகும். தேவையற்ற சிந்தனைகள் தோன்றி மனதை அலைபாய வைக்கும். அந்த பின்னடைவில் இருந்து மீள முடியாமல் மனம் தடுமாற்றமடையும். அன்றைய நாளே கடினமானதாக மாறிவிடும். எதன் மீதும் நாட்டம் இருக்காது. அந்த சமயத்தில் அமைதியாக இருக்கும் திறனை வளர்த்து கொள்வது அவசியமானது. அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    தியானம்

    நெருக்கடியான சமயத்தில் தியான பயிற்சி மேற்கொள்வது மனதை இலகுவாக்கும். அதன் மீது முழு கவனத்தையும் செலுத்தும்போது எண்ணங்கள் ஒருநிலைப்படும். பதற்றம் குறையும். கொந்தளிப்பான மனநிலையில் இருந்து மீள முடியும். மனமும் சாந்தமாகும். மனதை நிலைநிறுத்துவதற்கான சக்திவாய்ந்த வழிமுறையாக தியானம் கருதப்படுகிறது. ஆதலால் அந்த சமயத்தில் தியானம் சிறந்த தேர்வாக அமையும்.

    ஆழ்ந்த சுவாசம்

    ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவும். மன அழுத்தத்தையோ, துன்பத்தையோ சந்திக்கும் போது, ஆழமாக சுவாசிப்பதற்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். மூக்கின் வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, சில வினாடிகள் அப்படியே வைத்திருந்து, பின்பு வாய் வழியாக வெளியேற்றவும்.

    வாய் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து பயிற்சி செய்யலாம். இந்த பயிற்சி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். மனதை ஒருநிலைப்படுத்த வித்திடும்.

    ஆதரவு

    சிரமங்களை எதிர்கொள்ளும் போது நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர், நம்பகமான சக ஊழியர்களிடம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம். உங்கள் கவலைகள் மற்றும் உணர்ச்சிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மனதை ஆசுவாசப்படுத்தும். அவர்களின் ஆதரவான பேச்சு மனதை வலுப்படுத்தும். நெருக்கடியான மனநிலையில் இருந்து மீண்டு இயல்புக்கு திரும்ப வழிவகை செய்யும்.

    ஓய்வு

    சரியான ஊட்டச்சத்துக்கள், வழக்கமான உடற்பயிற்சிகள், போதுமான தூக்கம் ஆகியவை மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடினமான காலகட்டத்தில் பலரும் சரிவர சாப்பிடமாட்டார்கள். உடற்பயிற்சியை விட்டுவிடுவார்கள். தூக்கமில்லாமல் அவதிப்படுவார்கள்.

    அந்த சமயத்தில் குறைந்தபட்சம் மனதிற்கு ஓய்வாவது கொடுக்க வேண்டும். சவாலான சூழ்நிலைகளை சிறப்பாக கையாள ஓய்வு அவசியமானது. எளிமையான உடற்பயிற்சிகள் மீது கவனத்தை திருப்பலாம். அவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயாராவதற்கு வழிவகை செய்யும்.

    தகவல்கள்

    இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஏராளமான தகவல்கள் நம்மை வந்தடைகின்றன. மன நெருக்கடியில் தவிக்கும்போது எதிர்மறையான தகவல்கள்தான் அதிகம் கண்களுக்கு புலப்படும். அதுசார்ந்த தகவல்களை அறிந்து கொள்வதற்குதான் ஆர்வம் மேலிடும். அதற்கு இடம் கொடுக்காமல் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. இல்லாவிட்டால் அவை கவலையை மேலும் அதிகப்படுத்தி நிலை குலைய செய்துவிடும்.

    சிக்கலை தீர்க்கும் திறன்

    பிரச்சினையின் மீது கவனம் செலுத்தாமல், அதற்கு தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். சிக்கல்களை சமாளிக்கக்கூடிய வழிமுறைகளை கண்டறிந்து ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள். இந்த அணுகுமுறை சிந்தனை, செயல்திறனை அதிகரிக்கச்செய்யும்.

    நினைவுகள்

    சவாலான நேரங்களில் வாழ்வில் நடந்த நேர்மறையான விஷயங்களை நினைவுக்கு கொண்டு வாருங்கள். அது பற்றி சிந்தித்து மனதை பின்னோக்கி சுழல விடுங்கள். கடந்த கால நிகழ்வுகள், மகிழ்ச்சியான தருணங்கள் மனதை லேசாக்கும்.

    மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை சமாளிப்பது சவாலாக இருந்தால் மனநல நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

    • கவுரி ஒரு கண் மருத்துவமனையில் செவிலியராக பயிற்சி பெற்று வந்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுரி தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள பிராஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முத்துபாண்டியன். இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துபாண்டியன் இறந்து விட்டார். இதனால் அவரது மனைவி, 2 குழந்தைகளையும் வளர்த்து வந்தார்.

    இதில் மூத்த மகள் கவுரி(வயது 21) நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் 2 ஆண்டுகளாக செவிலியராக பயிற்சி பெற்று வந்தார். பயிற்சி முடிந்த பின்னர் புதுச்சேரியில் உள்ள ஆஸ்பத்திரியில் பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு வேலை பிடிக்காத காரணத்தால் கவுரி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்துவிட்டார்.

    அதன்பின்னர் அவர் வேலைக்கு செல்லாமல், வீட்டில் இருந்து வந்ததாகவும், இதனால் அவரது தாயார் வருத்தம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மன வேதனையில் இருந்த கவுரி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் அங்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இனிமையான மண வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.
    • கருத்து வேறுபாடுகளால் மணமுறிவுகள் அதிகமாகி வருகின்றன.

    இனிமையான மண வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. கருத்து வேறுபாடுகளால் மணமுறிவுகள் அதிகமாகி வருகின்றன. விவாகரத்து செய்யாவிட்டாலும் சலிப்புடன் திருமண வாழ்க்கை வாழ்பவர்கள் பலர். இன்னொருபுறம் எனக்கு திருமணமே வேண்டாம், தனியாக வாழ்கிறேன் என்று திருமணத்தையே நிராகரிக்கும் போக்கும் சிலரிடம் நிலவுகிறது.

    வேலைக்கு போனதும் திருமணம் என்ற சமூக நியதி மெல்ல மெல்ல மாறி, சொந்தமாக ஒரு வாகனம், வீடு என்று வாங்கியதும் திருமணம் என்ற முடிவில் பலர் இருக்கிறார்கள். இதனால் வயதும் கூடிப்போகிறது. நிலைமை உயர உயர எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பிக்கின்றன. இதனாலும் திருமணங்கள் தடைபடுகின்றன.

    திருமணம் எனும் அமைப்பு மிகுந்த சிக்கலான விஷயமாக மாறி வருவது உண்மை. இதற்கு முக்கிய காரணம் திருமணம் என்பது இன்றைக்கு குடும்ப நிகழ்வாக இல்லாமல் தனி மனித ஏற்பாடாக மாறியதுதான் அதற்கு காரணம். திருமணம் என்றில்லை, எல்லா உறவுகளிலும் ஏமாற்றம் வருவதற்கு காரணம் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போவதுதான்.

    திருமணத்துக்கு தயாராதல் என்பது வீட்டை சரிசெய்து ஷோ செய்வது அல்ல. வரப்போகும் பந்தத்துக்காக தன்னை தயார்செய்துகொள்வது. மேலை நாடுகளில் இதற்கு கவுன்சலிங் போகிறார்கள்.

    கையில் இருக்கும் 'ஆப்'பை தட்டினால் அரை மணி நேரத்தில் எதுவும் வீடு தேடி வரும் என்ற மனப்பான்மை இன்றைய 20 வயசுக்காரர்களை பெரிதும் பலவீனப்படுத்தி விட்டது. "பிடிக்கலையாம், அதான் பிரிஞ்சிட்டாங்களாம்" என்று ஒற்றை வரியில் திருமண முறிவுக்கு பதில் தருகிறார்கள்.

    எனவே பொறுமையாக இருந்தால் சரியாகும் என்ற பழைய அறிவுரை போதாது. அடிப்படை மாற்றம் நிகழ வேண்டிய இடம் திருமணம் பற்றிய எண்ணங்கள், எதிர்பார்ப்புகளில்தான்.

    அதேபோல் உங்கள் மேல் உங்கள் வாழ்க்கைத் துணை கொண்ட எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கும் என யூகித்து பட்டியல் இடுங்கள். பட்டியலை பரிமாறிக்கொள்ளுங்கள். இது பிரச்சினையை தீர்க்காது. ஆனால், பிரச்சினை எங்கு இருந்து தொடங்கி இருக்கிறது? என்பதை புரிய வைக்கும்.

    • காலையிலேயே யோகாசனம் செய்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்கள் கரைகிறது.
    • கணினி சார்ந்த வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மன அமைதி தருவது யோகாசனம்.

    உடலையும், மனதையும் வலிமையாக்கும் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது. காலையிலேயே யோகாசனம் செய்யலாமா? யோகாவின் பயன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

    * கணினி சார்ந்த வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மன அமைதி தருவது யோகாசனம்.

    * யோகாசனம் மூலம் செய்யும் மூச்சு பயிற்சி சீரான சுவாசத்தை அளித்து சுவாச பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.

    * யோகா செய்வதால் ரத்த ஓட்டம் சீராவதுடன் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

    * பல கோணங்களில் வளைந்து யோகா செய்வதால் உடல் அழகான வடிவத்தை பெறுகிறது.

    * தினசரி காலை யோகா செய்வதால் மூளை புத்துணர்ச்சி அடைந்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

    * காலையிலேயே யோகாசனம் செய்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்கள் கரைகிறது.

    * காலை சூரிய ஒளியில் யோகா செய்வதால் விட்டமின் டி சத்து கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

    • இடுப்பை வளைத்து முக்கோண நிலையில் இருக்கும்.
    • தோள்பட்டை, கைகள், கால் ஆகியவற்றுக்கு வலிமையையும் நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும்.

    திரிகோணாசனம் என்பது ஆங்கிலத்தில் triangle pose என்று அழைப்பார்கள். இடுப்பை வளைத்து முக்கோண நிலையில் உடல் இருக்கும்படி செய்யும் இந்த ஆசனம் ஜீரணத்தை மேம்படுத்தவும், தொப்பையை குறைக்கவும், இன்சுலின் உற்பத்தியை தூண்டுவதற்கும் என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு கொடுக்கிறது.

    உடல் தசைகளை நன்கு நீட்டி மடக்கும் இலகுவான தன்மையையும் உடலுக்கு நல்ல நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும். குறிப்பாக தோள்பட்டை, கைகள், கால் ஆகியவற்றுக்கு வலிமையையும் நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும்.

    ஜீரணக்கோளாறுகள் தான் உடலில் நிறைய பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றன. அவற்றை சரிசெய்யவும் ஜீரண ஆற்றலை மேம்படுத்தவும் திரிகோணாசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    கை, கால், இடுப்பு, கழுத்து, தோள்பட்டை ஆகியவற்றை வளைத்து நீட்டி செய்கின்ற இந்த ஆசனம் அடிவயிற்று பகுதி மற்றும் ஜீரண மண்டலத்தை தூண்டும் வேலையை செய்கிறது.

    முக்கோணம் போன்ற நிலையில் இருக்கும் இந்த திரிகோணாசத்தை செய்வதன் மூலம் சுவாச மண்டலத்தில் இருக்கும் அடைப்பு போன்றவை நீங்கும். ஆழமாக சுவாசிக்க உதவி செய்யும்.

    நன்கு மூச்சை இழுத்து அதிகமான ஆக்சிஜன் அளவைப் பெற முடியும். இதனால் நுரையீரலுக்கும் அதிக அழுத்தம் ஏற்படாமல் அதன் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும். ஆஸ்துமா, வீசிங் போன்ற சுவாச மண்டல பிரச்சினை இருப்பவர்கள் இந்த திரிகோணாசனத்தை செய்து வருவது நல்லது.

    முதுகு வலி பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த திரிகோணாசனம் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். இந்த ஆசனம் செய்யும்போது மார்பு பகுதி விரிவடைந்து மூச்சு விடுவது மிக எளிதாக இருக்கும். ஆழமாக மூச்சை இழுத்து விட முடியும். இதனால் மார்பு மற்றும் இடுப்பு பகுதியில் ஏற்படும் அழுத்தம் குறைந்து இடுப்பு மற்றும் முதுகுவலி குறைய ஆரம்பிக்கும்.

    இந்த திரிகோணாசனம் செய்யும் போது உடல், மனம் இரண்டுமே ரிலாக்சாக இருக்கும். இது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும். இதனால் மன அழுத்தம், பதட்டம், டென்ஷன், மனச்சோர்வு ஆகியவை குறையும்.

    சிலருக்கு இடுப்பை வளைத்து செய்யும் எந்தவித வேலைகளும் செய்யவே முடியாது. ஏனெனில் இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் மிகவும் இறுக்கமாக இருக்கும். இந்த இறுக்கத்தை குறைத்து இடுப்பு தசைகளை நெகிழ்வுத் தன்மையோடும் வலுவாகவும் வைத்திருக்க உதவும்.

    திரிகோணாசனம் செய்யும் போது ஒட்டுமொத்த உடலும் வலிமை அடையும். அதோடு இடுப்பு பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்தும். குறிப்பாக இடுப்பு தசைகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கச் செய்து தொப்பையை குறைக்க உதவி செய்கிறது.

    ×