search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yoga"

    • ஆசனங்களை செய்யும் போது சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்.
    • ஒவ்வொரு ஆசனத்தையும் 5 முறை செய்யவும்.

    வயிறு மற்றும் பிற உடல் பாகங்களில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, வாழ்க்கை முறை தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. பல நேரங்களில் தைராய்டு அல்லது பி.சி.ஓ.டி., பி.சி.ஓ.எஸ்., வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிற நோய்களால் எடை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்குகிறது.


    அதிக எடை மற்றும் இடுப்பில் சேரும் கொழுப்பு நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே அதை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். உடல் எடையை குறைக்க ஜிம்மில் மணி கணக்கில் வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்து டயட்டை பின்பற்றுகிறோம். ஆனால் இன்னும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

    உடல் எடையை யோகா பயிற்சி மூலம் குறைக்க முடியும். தொடர்ந்து யோகா செய்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். மேலும் ஆசனங்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை அதாவது காலை மற்றும் மாலை என இருமுறை செய்ய முயற்சிக்கவும்.

    இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் 15 நாட்களுக்குள் உங்களில் வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள். யோகா ஆசனங்களை செய்யும் போது சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். சிறந்த முடிவுகளுக்கு ஒவ்வொரு ஆசனத்தையும் 5 முறை செய்யவும்.


    புஜங்காசனம்

    புஜங்காசனம் என்பது இரண்டு வார்த்தைகளால் ஆனது. புஜங் என்றால் பாம்பு என்றும் ஆசனம் என்றால் தோரணை என்றும் பொருள். இதை செய்யும் போது உடல் பாம்பு போல மாறும். எனவே இது கோப்ரா போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. புஜங்காசனம் செய்வதால் வயிற்று தசைகள் விரிவடையும். உடல் எடை மற்றும் தொப்பை குறைய உதவுகிறது.

    செய்முறை:

    முதலில் தரையை பார்த்து படுத்துக்கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை தோள்களுக்கு கீழே வைக்க வேண்டும். பாதங்களை ஒன்றாக வைக்க வேண்டும்.

    இப்போது மூச்சை உள் இழுத்துக்கொண்டு பின்தலை, தோள்கள் இவர்றை 30 டிகிரி கோணத்தில் உயர்த்த வேண்டும்.

    வயிற்றுப்பகுதி தரையில் இருப்பதையும், தோள்கள் அகலமாகவும், தலை சற்று உயர்த்தப்பட்டதாகவும் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    அதன்பிறகு கால் விரல்களுக்கு அழுத்தம் கொடுங்கள். ஆசனத்தை 10 வினாடிகள் வைத்திருந்து பின்னர் மெதுவாக தலையை கீழே கொண்டு வந்து பிறகு மூச்சை வெளியே விட வேண்டும்.


    வசிஷ்டாசனம்

    இந்த ஆசனம் செய்யும் போது உடலின் சமநிலை ஒரு கை மற்றும் உள்ளங்காலில் செய்யப்படுகிறது. இப்படி செய்வதால் வயிற்று தசைகள் நீட்டப்படும். இது கலோரிகளை எரிக்க உதவுகிறது.

    செய்முறை:

    சமநிலை ஆசனத்துடன் தொடங்க வேண்டும். இடது உள்ளங்கையை தரையில் உறுதியாக வைத்துக்கொண்டு வலது கையை தரையில் இருந்து உயர்த்த வேண்டும். முழு உடலையும் வலது பக்கம் திருப்ப வேண்டும்.

    வலது பாதத்தை தரையில் இருந்து தூக்கி இடது பாதத்தின் மேல் வைக்க வேண்டும். வலது கையை உயர்த்தி, விரல்களை மேல்நோக்கி வைக்க வேண்டும்.

    முழங்கால்கள், குதிகால் மற்றும் பாதங்கள் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பில் இருப்பதையும், கைகள் மற்றும் தோள்கள் இரண்டும் நேர் கோட்டில் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    சிறிது நேரம் இதே நிலையில் இருக்க வேண்டும். அதேபோன்று இந்த யோகாவை இடதுபக்கம் செய்ய வேண்டும்.


    ஷலபாசனம்

    இதை செய்யும் போது உடல் ஒரு பூச்சியை போல் மாறும். எனவே இது வெட்டுக்கிளி தோரணை என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் உடல் எடையும், கொழுப்பும் வேகமாக குறையும். மேலும் தசைகள் வலுவடைந்து மலச்சிக்கல் நீங்கும்.

    செய்முறை:

    முதலில் நேராக படுத்துக்கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை தொடைகளுக்கு கீழே வைக்க வேண்டும். மூச்சை முழுமையாக உள்ளிழுத்து மூச்சை பிடித்து பின்னர் கால்களை ஒன்றாக உயர்த்த வேண்டும்.

    முழங்கால்கள் நேராகவும், பாதங்கள் ஒன்றாகவும் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் கன்னம், நெற்றியை தரையில் வைக்க வேண்டும். 10 வினாடிகள் ஆசனத்தில் இருக்க வேண்டும். கால்களை மெதுவாக கீழே இறக்கி பின்னர் மூச்சை வெளியே விட வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பலர் மனம் அமைதியின்றி வாழ்க்கையை போராடி வாழ்ந்து வருகின்றனர்.
    • மனதிற்கு அமைதி தரக்கூடிய செயல்களில் ஈடுபடலாம்.

    இன்று பல்வேறு காரணங்களால் மனம் அமைதியின்றி வாழ்க்கையை போராடி வாழ்ந்து வருகின்றனர். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பெரும் அச்சம் பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்ற கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.


    சுவாசப்பயிற்சி:

    பொதுவாக சுவாசப்பயிற்சி மேற்கொள்வது மனதை திறம்பட நடுநிலையில் செயல்பட வைக்க உதவுகிறது. மேலும் ஆழமாக சுவாசிக்கும் போது நரம்பு மண்டலம் நிதானமாக பாதுகாப்பாக இருக்கத்தொடங்குகிறது. இது பீதியை குறைத்து மனதை மகிழ்ச்சியாக இருக்க உதவிபுரிகிறது.


    ஓய்வெடுத்தல்:

    தொடர் மன அழுத்தம், கடுமையான சூழ்நிலைகள் இவைகள் யாவும் தினசரி வழக்கமாக மாறும்போது உடல் பீதி அடைவது இயற்கையானது. இந்த் சூழ்நிலைகளில் இருந்து நம்மை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள நம் உடலுக்கு சிறிது நேரத்தை ஒதுக்குவது அவசியமாகும்.

    இதற்கு நாம் தினமும் ஒரு பயணம் செல்லலாம். இயற்கையை ரசிப்பது, இசையை கேட்பது, பாடல் பாடுவது போன்ற மனதிற்கு அமைதி தரக்கூடிய செயல்களில் ஈடுபடலாம். அதற்கான நேரத்தை ஒதுக்கலாம்.

    அமைதியாக இருத்தல்:

    நம் மனதில் பழைய கசப்பான அனுபவங்கள், எண்ணங்கள் இருக்கும் போது நம்மிடம் எதுவும் இல்லை என்ற மன அழுத்தம், பதட்டம் போன்றவை ஏற்படலாம். இந்த மாதிரி நேரங்களில் நாம் அமைதியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

    எனவே யோகா, தியானம் மற்றும் பிற நினைவாற்றல் நுட்பங்களை செய்யலாம். இது மனதை பொறுமையாக நிதானமாக மற்றும் அமைதியாகவும் உணர வைக்கிறது.


    நண்பர்கள்:

    நம்மை சுற்றி நேர்மறையான நபர்கள் இருப்பது நமக்கு தானாகவே மகிழ்ச்சியை தருவதுடன் நேர்மறை எண்ணங்களையும் வளர்க்க உதவுகிறது. எனவே நாம் நம்மை சுற்றியுள்ளவர்களை தேர்ந்தெடுத்து நம்மை வழிநடத்த அனுமதிக்கலாம். இது வாழ்க்கையை மென்மேலும் உயர வழிவகுக்கும்.

    இந்த வழிமுறைகளின் உதவியுடன் நாம் நம்முடைய மனதை பதட்டத்தை ஏற்படக்கூடிய மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றில் இருந்து விடுபட்டு அமைதியான வாழ்க்கையை பெறலாம். 

    • பழமையான பயிற்சிகளுள் முக்கியமானது, பிரணாயாமம்.
    • ஆழ்ந்த சுவாச முறை மன அழுத்தத்தை குறைக்கும். பதற்றத்தையும் தணிக்கும்.

    நம்முடைய மூதாதையர்கள் கையாண்ட பழமையான பயிற்சிகளுள் முக்கியமானது, பிரணாயாமம். ஆழ்ந்து சுவாசித்து மூச்சை உள் இழுத்து வெளியிடும் இந்த பயிற்சியானது யோகாவின் ஒரு அங்கமாக விளங்குகிறது.

    உடலையும், மனதையும் சமநிலைப்படுத்தக்கூடியது. இவை இரண்டின் நலனையும் மேம்படுத்தக்கூடியது. பிரணாயாமம் பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.

    மன அழுத்தம் - பதற்றத்தை குறைக்கும்

    பிரணாயாமம் பயிற்சி மூலம் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது மனதை அமைதிப்படுத்தும் திறனாகும். இந்த ஆழ்ந்த சுவாச முறை மன அழுத்தத்தை குறைக்கும். பதற்றத்தையும் தணிக்கும்.


    செரிமான பிரச்சனையை போக்கும்

    பிரணாயாமம் பயிற்சி மூலம் மேற்கொள்ளப்படும் ஆழ்ந்த சுவாசம் செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 'வேகஸ்' நரம்பை தூண்டும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளை போக்கவும் உதவும்.

    ரத்த அழுத்தத்தை சீராக்கும்

    பிரணாயாமம் பயிற்சியை வழக்கமாக தொடர்வது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி புரியும். இதயத்துடிப்பு சீராக நடைபெற ஊக்குவிக்கும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தையும் தடுக்கும்.

    இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

    இந்த பயிற்சியானது சுவாச முறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும், மன அழுத்த அளவைக் குறைப்பதன் காரணமாகவும் இதய நோய் ஏற்படும் அபாயம் வெகுவாக குறைந்துவிடும். ரத்த ஓட்டமும், இதயத் துடிப்பும் சீராக இருக்கும். கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும்.

    சோர்வை போக்கும்

    பிரணாயாமம் செல்களுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க செய்யும். அதனால் உடல் ஆற்றலின் அளவும் அதிகரித்து சுறுசுறுப்புடன் செயல்பட தூண்டும்.

    சோர்வை நெருங்கவிடாமலும் தடுக்கும். நாள் முழுவதும் அதிக விழிப்புடனும், உற்சாகத்துடனும் செயல்பட வைத்துவிடும்.


    மன தெளிவை கொடுக்கும்

    பிரணாயாமம் பயிற்சி செய்வதன் மூலம் கவனச்சிதறல்கள் கட்டுப்படும். கூர்ந்து கவனிக்கும் திறன் அதிகரிக்கும். மனமும் தெளிவு பெறும். மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் செறிவையும் அதிகரிக்கச் செய்யும். நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன், அறிவாற்றல் செயல்பாடு போன்றவையும் மேம்படும்.

    உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும்

    பிரணாயாமம் பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் செய்திடும். மனதை அமைதிப்படுத்துவதன் மூலமும், எதிர்மறை உணர்ச்சிகளை குறைப்பதன் மூலமும் ஆழ் மன நலனை பேணுவதற்கு வித்திடும். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் ஆற்றலையும் கொடுக்கும்.


    நுரையீரல் செயல் திறனை மேம்படுத்தும்

    மூச்சை ஆழ்ந்து இழுத்து மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சி சுவாச செயல்முறைகளை ஊக்குவிக்கும். சுவாச மண்டத்தை பலப்படுத்தி நுரையீரலின் செயல் திறனை அதிகரிக்கவும் செய்யும். குறிப்பாக ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

    ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும்

    இந்த பயிற்சி உடலில் உள்ள ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தவும் உதவிடும். குறிப்பாக தைராய்டு மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பி.சி.ஓ.எஸ். எனப்படும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கு இந்த சுவாச பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.


    நச்சுக்களை நீக்கும்

    இந்த பயிற்சிக்காக நன்றாக மூச்சை உள் இழுத்து ஆழ்ந்து சுவாசிக்கும்போது வெளியேறும் கார்பன்டை ஆக்ஸைடு அளவு அதிகரிக்கும். அப்போது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறையும் நடக்கும். இந்த உள்ளுறுப்பு சுத்திகரிப்பு ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் பலம் சேர்க்கும். நோய் எதிர்ப்பு அமைப்பையும் வலுப்படுத்தும்.

    • இளம் வயதினரும் நியாபக மறதி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.
    • தியானத்துக்கும், ஞாபக மறதிக்கும் தொடர்பு உண்டு.

    ஞாபக மறதியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. முதியவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். சில எளிய நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஞாபக மறதியை கட்டுப்படுத்தலாம்.


    * தியானத்துக்கும், ஞாபக மறதிக்கும் தொடர்பு உண்டு. தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்து வருவது மனநலத்துக்கு மட்டுமல்ல ஞாபக மறதி பிரச்சனையின் வீரியத்தை குறைக்கவும் உதவும். குறிப்பாக நினைவுத்திறனையும், மனநிலையையும் மேம்படுத்தும்.


    * மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அதன் செயல்திறனை அதிகரிக்க செய்யலாம். பொதுவாக எந்த வேலை செய்வதாக இருந்தாலும் வலது கையைத்தான் அதிகமாக பயன்படுத்துவோம். அதற்கு மாற்றாக இடது கையை உபயோகிக்கலாம். அதன் மூலம் மூளையின் செயல்திறன் மேம்படும். ஞாபக மறதியின் வீரியம் குறையும்.


    * ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதும் மூளை சிறப்பாக செயல்பட உதவும். அதனால் மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் பயிற்சிகளை செய்து வரலாம். யோகாசனங்களும் பலன் கொடுக்கும். அவை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், நினைவுத்திறனை மேம்படுத்தவும் உதவிடும்.

    * உணவுக்கட்டுப்பாடும் அவசியமானது. சரியான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதுவும் நினைவாற்றல் திறனை அதிகரிக்க உதவும் புரோக்கோலி, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • கர்நாடகாவில் கேவாலா என்ற அறக்கட்டளையை பிரதீப் உல்லால் என்ற யோகா ஆசிரியர் நடத்தி வருகிறார்.
    • வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டத்தில் கேவாலா அறக்கட்டளையை நடத்தி வரும் பிரதீப் உல்லால் (54) என்ற யோகா ஆசிரியர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். முந்தையை பிறவியில் நாம் இருவரும் உறவில் இருந்ததாக கூறி தன்னை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

    அப்பெண் தனது புகாரில், "பஞ்சாப்பை சேர்ந்த நான் 2000 ஆண்டுவாக்கில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தேன். பிரதீப் உல்லால் ஆன்லைனில் நடத்திய யோகா வகுப்புகளில் நான் கடந்த 5 ஆண்டுகளாக கலந்து கொண்டேன்.

    அப்போது நாங்கள் இருவரும் கடந்த பிறவியில் உறவில் இருந்ததாக என்னை நம்ப வைத்து 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் என்னை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது நான் கருவுற்றேன், பின்னர் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது" என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.

    • மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு பழமையான பயிற்சியாகும்.
    • யோகா குழந்தைகளுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

    இன்றைய காலகட்டத்தில் குழந்தை பருவத்தில் இருந்தே படிப்புச்சுமை குழந்தைகளின் தோள்களில் விழுகிறது. பல குழந்தைகள் சிறுவயதிலிருந்தே படிப்பு தொடர்பான மன அழுத்தத்தை எடுக்கத் தொடங்குகிறார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    அத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளை மன அழுத்தத்தை உணராமல் மகிழ்ச்சியாக இருக்க, வேடிக்கையான செயல்களில் மும்முரமாக வைத்திருப்பது அவசியம். குழந்தைகளும் குழந்தை பருவத்தில் இருந்தே யோகா செய்ய கற்றுக்கொடுக்க வேண்டும். அதனால் அவர்கள் யோகாவின் சக்தியை அறிந்து, ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

    யோகா என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு பழமையான பயிற்சியாகும். யோகா குழந்தைகளுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    தடாசனம்

    யோகா பயிற்சி குழந்தைகளின் தசைகள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது. மேலும் இது குழந்தைகளை சுறுசுறுப்பாக வைக்கிறது. தடாசனா பயிற்சி குழந்தைகளுக்கு நன்மை பயக்கும். இது உடலின் சமநிலையை மேம்படுத்துகிறது.

    இந்த ஆசனத்தில், குழந்தைகள் நேராக நின்று தங்கள் கால்களை ஒன்றாக இணைத்து கைகளை மேலே உயர்த்துகிறார்கள். இந்த ஆசனத்தை பயிற்சி செய்வதால் முதுகுத்தண்டு வலுவடைந்து உடல் சமநிலை மேம்படும். இதனுடன், இந்த ஆசனத்தின் பயிற்சியும் செறிவு அதிகரிக்கிறது.

    விருக்ஷாசனம்

    குழந்தைகள் விருக்ஷாசனம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். குழந்தைகளுக்கு யோகா கற்பிக்க வேண்டுமானால், அவர்களுக்கு ஆசனங்களை வேடிக்கையாக செய்ய வேண்டும். விருக்ஷாசனம் என்பது குழந்தைகளுக்கான ஒரு வேடிக்கையான ஆசனமாகும்.

    அதில் அவர்கள் ஒரு காலில் நின்று, மற்றொரு காலை முழங்காலில் வைத்து, நமஸ்காரம் தோரணையில் கைகளை இணைக்கிறார்கள். இந்த ஆசனத்தை பயிற்சி செய்வது சமநிலை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் கால் தசைகளை பலப்படுத்துகிறது.

    வீரபத்ராசனம்

    யோகா பயிற்சி செய்வதால் உடலில் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பது மட்டுமின்றி மன அமைதியும், கவனமும் அதிகரிக்கும். வீரபத்ராசனம் பயிற்சி குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதை வீட்டில் குழந்தைகளுக்கு எளிதாக கற்பிக்க முடியும். இதற்காக, முதலில் குழந்தையின் ஒரு காலை முன்னோக்கி நீட்டி, மற்றொரு காலை பின்னோக்கி வைத்து, பின்னர் குழந்தையின் கைகளை மேல்நோக்கி உயர்த்தவும்.

    இந்த ஆசனத்தை பயிற்சி செய்வதன் மூலம், குழந்தைகளின் உடலின் கீழ் பகுதி வலுவடைகிறது. இதைப் பயிற்சி செய்வதன் மூலம், குழந்தைகளின் தோரணை மேம்படும் மற்றும் தசைகள் வலுவடையும்.

    மர்ஜாரியாசனம்

    மர்ஜாரியாசனம் குழந்தைகளுக்கு பல உடல் மற்றும் மன நலன்களை வழங்குகின்றன. மர்ஜாரியாசனமும் பிட்டிலாசனமும் குழந்தைகளின் முதுகெலும்பை நெகிழ வைக்கும். இந்த ஆசனங்களின் போது முதுகெலும்பை மேலும் கீழும் நகர்த்துவது நெகிழ்வுத்தன்மையையும் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது.

    இந்த ஆசனங்களின் வழக்கமான பயிற்சி குழந்தைகளின் உடல் நிலையை மேம்படுத்துகிறது. இது அவர்களின் உட்கார்ந்து, நிற்கும் மற்றும் நடக்கும் நிலையை மேம்படுத்துகிறது. இதில், குழந்தைகள் கை மற்றும் முழங்காலில் வந்து பின் மாறி மாறி முதுகை உயர்த்தி இறக்குகிறார்கள்.

    சேதுபந்தாசனம்

    சேதுபந்தாசனம் குழந்தைகளுக்கு ஒரு நல்ல மற்றும் வேடிக்கையான ஆசனம். இது குழந்தைகள் பயிற்சி செய்ய விரும்புவார்கள். இந்த ஆசனத்தில் குழந்தைகள் முதுகில் படுத்து இடுப்பை உயர்த்துவார்கள். சேதுபந்தசனம் முதுகுத்தண்டு மற்றும் முதுகு தசைகளை பலப்படுத்துகிறது, அதன் பயிற்சி குழந்தைகளின் சோர்வு மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிவாரணம் பெற உதவலாம் என யோகா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
    • சில எளிய ஆசனங்களை செய்யலாம்.

    உலக அளவில் தலைவலி பாதிப்புகள் அதிகம் இருந்தாலும் அதற்காக மருத்துவர்களிடம் செல்பவர்கள் மிகக்குறைவு. மருத்துவர்களிடம் செல்லாமலேயே அதனை சமாளித்துவிட முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

    மக்கள் ஒற்றைத் தலைவலியை `வெறும் தலைவலி' என்று கருத முனைகிறார்கள், இது சரியான கவனிப்பு எடுக்கப்படாவிட்டால், நீண்ட காலத்திற்கு இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒற்றைத் தலைவலியின் கிளாசிக்கல் அறிகுறிகளை மக்கள் புறக்கணித்தால், அவர்கள் நீண்டகால ஒற்றைத் தலைவலிக்கு ஆளாக நேரிடும். என்று மருத்துவ நிபுணர் தெரிவிக்கிறார்.

    மருந்துகள் ஓரளவிற்கு உதவக்கூடும் என்றாலும், யோகா வல்லுநர்கள் யோகா செய்வதன் வழியாக இதற்கான நிவாரணம் பெற உதவலாம் என யோகா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒற்றைத் தலைவலி தாக்குதல்களின் தீவிரத்தை நிர்வகிக்கவும் குறைக்கவும் சில எளிய ஆசனங்களை செய்யலாம்.

    வஜ்ராசனத்தில் உள்ளங்கைகளை தொடைகளில் ஊன்றி அமரவும். கண்களை மூடிக்கொண்டு உடல் முழுவதும் தளர்த்தி ஓய்வெடுக்கவும். மூச்சை உள்ளிழுத்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தி முழங்கைகள் நேராக இருக்க வேண்டும்.

    மூச்சை வெளியேவிட்டு, உடற்பகுதியை மெதுவாக முன்னோக்கி நகர்த்த வேண்டும். முதுகெலும்பில் இருந்து இல்லாமல் இடுப்பு பகுதியில் இருந்து வளைக்க வேண்டும். கைகளை சற்று வளைத்து வைத்து, கைகள், நெற்றி, முழங்கைகளை விரிப்பில் வைக்கவும். கைகள் முழங்கால்களுக்கு முன்னால் இருக்க வேண்டும். இந்த நிலை உங்களுக்கு வசதியாக இருக்கும் வரை இதே நிலையில் சிறிதுநேரம் இருக்க வேண்டும்.

    அடிப்படை நிலைக்குத் திரும்ப, மூச்சை வெளிவிட்டு மெதுவாக தலையையும், கைகளையும் செங்குத்தாக உயர்த்த வேண்டும். தொடைகளில் உள்ளங்கைகளை ஊன்றிக் கைகளைத் தாழ்த்தவும். நிதானமாக ஆழ்ந்து சுவாசிக்கவும். முயல் போன்ற அமரும் இந்த ஆசனம் உங்கள் தலைவலியை கட்டுப்படுத்தும். 

    • பெண் ஒருவர், தான் செய்த யோகா தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • அர்ச்சனாவை பொற்கோவிலில் யோகா செய்ய அனுமதித்தது தொடர்பாக ஊழியர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சர்வதேச யோகா தினமான நேற்றுமுன்தினம் (ஜூன் 21) கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தாங்கள் செய்த யோகா தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

    அந்த வகையில், பெண் ஒருவர், தான் செய்த யோகா தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் வெளியிட்ட வீடியோவுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

    இன்ஸ்டாகிராம் பிரபலமான அர்ச்சனா மக்வானா என்பவர் பல வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அப்படி அவர் அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோவிலில் யோகா செய்த வீடியோவை பகிர்ந்தார்.

    இந்த வீடியோ காட்சிகள் சீக்கிய சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து அர்ச்சனா மக்வானா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே அர்ச்சனாவை பொற்கோவிலில் யோகா செய்ய அனுமதித்தது தொடர்பாக ஊழியர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, அர்ச்சனா மக்வானா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    • பெரும்பாலானவர்களின் விருப்பத்தேர்வாக நடைப்பயிற்சி இருக்கிறது.
    • சிலர் ஜாக்கிங் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

    உடற்பயிற்சிகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அவற்றுள் எளிமையாக செய்யக்கூடிய பயிற்சிகளையே பலரும் விரும்புகிறார்கள். பெரும்பாலானவர்களின் விருப்பத்தேர்வாக நடைப்பயிற்சி இருக்கிறது. சிலர் ஜாக்கிங் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

    நடக்க, ஓட முடியாதவர்கள், அத்தகைய பயிற்சிகள் மீது ஆர்வம் காட்டாதவர்கள் இருந்த இடத்தில் இருந்தே மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். அத்துடன் யோகாசனம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இவற்றுள் எந்த பயிற்சி மேற்கொள்வது சிறப்பானது என்று பார்ப்போம்.

    * நடைப்பயிற்சி செய்வது எளிதானது என்பதால் எல்லா வயதினருமே தினமும் அதனை மேற்கொள்ளலாம். அது மூட்டுகளுக்கும் பலம் சேர்க்கும்.

    * தவறாமல் நடைப்பயிற்சி செய்வது உடல் எடையை கட்டுப்படுத்தவும், இதய நோய் அபாயத்தை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

    * நடைப்பயிற்சி செய்தபடி இயற்கை சூழ்ந்த இடங்களில் உலவுவது மனநிலையை மேம்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும்.

    யாருக்கு சிறந்தது?

    * உடற்பயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்டுபவர்கள் முதல் முயற்சியாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். மூட்டுவலி உள்ளவர்களும் நடைப்பயிற்சியை தேர்ந்தெடுக்கலாம்.

    * உடலுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் இலகுவான உடல் செயல்பாடுகளை விரும்பும் நபர்கள் நடைப்பயிற்சி செய்து வரலாம்.

    * பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு செலவிடும் நேரத்தின் ஒரு அங்கமாக உடல் நலன் மீது அக்கறை கொள்ள ஆர்வம் காட்டுபவர்களும் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

    ஜாக்கிங் நன்மைகள்

    * தினமும் ஜாக்கிங் பயிற்சி செய்து வருவது அதிக கலோரிகளை எரிக்க உதவும். இதய அமைப்பின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

    * உடல் எடையை குறைப்பதற்கும், உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் ஜாக்கிங் உதவும்.

    * ஜாக்கிங் செய்யும் வழக்கத்தை தொடர்வது எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கும். குறிப்பாக எலும்பு அடர்த்தியை அதிகரிக்க செய்யும்.

    யாருக்கு சிறந்தது?

    * மிகவும் கடினமான ஏரோபிக் உடற்பயிற்சி முறையை நாடுபவர்களுக்கு ஜாக்கிங் பயிற்சி சிறந்தது.

    * உடலில் சக்தியை அதிகரிக்க விரும்புபவர்கள் ஜாக்கிங் பயிற்சியை தேர்ந்தெடுக்கலாம்.

    * ஓடுவது உள்பட பிற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புபவர்கள் ஜாக்கிங்கை தேர்ந்தெடுக்கலாம்.

    யோகா நன்மைகள்:

    * தினமும் யோகா செய்து வருவது உடல் நெகிழ்வுத்தன்மை அடைய உதவும்.

    * யோகாவின்போது சுவாச செயல்பாடுகள் மேம்பட்டு உடலையும், மனதையும் தளர்வடைய செய்யும். மன அழுத்தத்தை குறைக்கவும் வித்திடும்.

    * பல யோகாசன 'போஸ்கள்' முக்கிய தசைகளை பலப்படுத்த உதவுகின்றன.

    யாருக்கு சிறந்தது?

    * மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை ஒருங்கிணைக்க முயற்சிப்பவர்கள் யோகாசனத்தை நாடலாம்.

    * பதற்றத்தை தணிக்கவும், நெருக்கடியான சூழலில் மீண்டும் பதற்றம் ஏற்படாமல் நிலைமையை சுமுகமாக கையாளவும் நினைப்பவர்கள் யோகாசனம் செய்து வருவது பலன் கொடுக்கும்.

    எது சிறந்த உடற்பயிற்சி என்பது அவரவரின் தனிப்பட்ட உடல் நலம், மருத்துவ சிகிச்சை, உடற்தகுதி உள்ளிட்டவற்றை சார்ந்தது. எந்த உடற்பயிற்சி ஏற்புடையதாக இருக்கும் என்பது பற்றி உங்களது குடும்ப மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணரிடம் கலந்தாலோசித்து அதன்படி செயல்படுவது உடல் நலனுக்கு வலிமை சேர்க்கும்.

    • சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மும்பையில் நடந்த ஒரு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
    • வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வலைத்தளவாசிகளின் பாராட்டையும் பெற்றது.

    சர்வதேச யோகா தினம் வருகிற 21-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதியவர் ஒருவர் யோகா செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கியது. சுவாமி சிவானந்தா என்று அழைக்கப்படும் யோகா ஆசிரியரான அவருக்கு தற்போது 127 வயதாகிறது. யோகா கலையில் அவரது செயல்பாடுகளை பாராட்டி பத்மஸ்ரீ கவுரவம் பெற்றுள்ளார்.

    தீவிர யோகா பயிற்சியால் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் அவர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மும்பையில் நடந்த ஒரு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது அவர் சில யோகா பயிற்சிகளை செய்து காண்பித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இது பற்றிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வலைத்தளவாசிகளின் பாராட்டையும் பெற்றது. யோகா மற்றும் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

    • மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான சக்திவாய்ந்த கருவி தியானம்.
    • ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும்.

    இன்றைய வாழ்க்கைச்சூழலில் மன அழுத்தம் தவிர்க்கமுடியாத விஷயமாக இருக்கிறது. அதனை திறம்பட நிர்வகிப்பது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மேம்படுத்தும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடவைத்து மனதுக்கு மறுமலர்ச்சியை பெற்றுத்தரும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் இவை..

    * மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான சக்திவாய்ந்த கருவி தியானம். இது மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க உதவும். ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும். முடியாதபட்சத்தில் சுவாசத்தில் கவனம் செலுத்தி ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியிட சில நிமிடங்களை ஒதுக்க வேண்டும்.

    * மன அழுத்தத்தை நிர்வகிக்க அன்பானவர்களின் ஆதரவு முக்கியமானது. வலுவான சமூக தொடர்பு கொண்டவர்களுக்கு மன அழுத்த ஹார்மோன்களின் அளவு குறைவாக இருக்கும். நேரில் சந்திப்பது, செல்போனில் பேசுவது, வீடியோவில் அரட்டை அடிப்பது என ஏதாவதொரு வகையில் உங்களுக்கு உண்மையாக இருப்பவர்களுடன் சில நிமிடங்களை செலவிடுவதும், உங்கள் மனதில் இருக்கும் பாரங்களை இறக்கி வைப்பதும் மன அழுத்தத்தை விரட்டி அடிக்கும். மனதுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்திக்கொடுக்கும். எனவே நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள்.

    * லாவெண்டர், சாமந்தி, சந்தனம் போன்ற வாசனைகள் அமைதியுடன் தொடர்புடையவை. இந்த எண்ணெய்களை சருமத்தில் தடவலாம். குளிக்கும் நீரில் சில துளிகள் சேர்க்கலாம்.

    * ஓவியம் தீட்டுவது, இசைக்கருவியை வாசிப்பது போன்ற செயல்பாடுகள் மன அழுத்தத்தை குறைக்கும். தினமும் இதற்கு முடியாத பட்சத்தில் வாரந்தோறும் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

    * ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் செய்யும். இதயத் துடிப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும். 4-7-8 சுவாச பயிற்சியை முயற்சிக்கவும். அதாவது 4 விநாடிகள் மூச்சை உள்ளிழுக்கவும், 7 விநாடிகள் அப்படியே வைத்திருக்கவும், பின்பு 8 விநாடிகள் சுவாசத்தை வெளியேற்றவும்.

    * சிரிப்பு யோகா செய்வதும் பலன் தரும். ஆக்சிஜன் உட்கொள்ளலை அதிகரிக்கச்செய்து எண்டோர்பின்களை வெளியிடும். மன அழுத்தத்தையும் குறைக்கும்.

    * செல்லப்பிராணிகளை வளர்ப்பது, குறிப்பாக நாய்கள் வளர்ப்பது, அதனுடன் நேரம் செலவிடுவது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், மன அழுத்த ஹார்மோன்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும். தனிமை உணர்வையும் குறைக்கும். மகிழ்ச்சி உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும்.

    * டிஜிட்டல் திரைகள் மற்றும் சமூக ஊடகங்களை தொடர்ந்து பார்வையிடுவது மன அழுத்தம் மற்றும் பதற்றத்திற்கு வித்திடும். அதனை ஒதுக்கிவைத்துவிட்டு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை உங்களுக்காக ஒதுக்குங்கள். அது மனதை இதமாக்கும். மறுமலர்ச்சியையும், புத்துணர்வையும் அளிக்கும்.

    * தோட்டக்கலையில் ஈடுபடுவதும் மன அழுத்தத்தை குறைக்கும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செடிகளை நடுவது, வளர்ப்பது, அறுவடை செய்வது போன்றவற்றில் ஈடுபடுவது, தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மையை பெற்றுத்தரும். தினசரி அழுத்தங்களில் இருந்து விடுபட்டு இயற்கையுடன் இணைய வைக்கும்.

    • சிறுநீரகம் சம்பந்தமான வியாதி வருவதற்கு ஒரு அறிகுறி தான் இந்த அடி முதுகு வலி.
    • மாதவிடாய் காலத்தில் நான்கு நாட்கள் யோகாசனம் மட்டும் உடற்பயிற்சி செய்யக்கூடாது.

    நமக்கு உதவி செய்தவர்களை பற்றி சொல்லும் போது, அவர் தான் என் முதுகெலும்பாக இருக்கிறார் என்போம். அந்த அளவுக்கு முதுகெலும்பின் மீது நமக்கு மரியாதை.

    இந்த முதுகுத்தண்டை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், இதன் நீளம் பதினாறரை அங்குலம். இது நரம்பு நாளங்களாலானது. இதிலிருந்து 12 இணை நரம்புகள் மூளைக்கு செல்கின்றது. 36 இணை நரம்புகள் உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செல்கின்றது. அதனால் முதுகுத்தண்டு மனிதனின் இரண்டாவது மூளை என்றே அழைக்கப்படுகிறது.

    மனித உடலில் நடுப்பகுதியான முதுகில் 33 முதுகெலுப்புகள் ஒன்றன் மீது ஒன்றாக நேர் வரிசையில் அடுக்கப்பட்டு அற்புதமாக இந்த உடல் கட்டப்பட்டுள்ளது. இந்த முதுகெலும்பு வழியாகத் தான் முதுகுத் தண்டுவடம் உள்ளே செல்கிறது. இந்த முதுகெலும்பில் 24 எலும்புகள் தனித் தனியானவை. அசையும் தன்மை வாய்ந்தவை. மற்ற 9 எலும்புகள் இணைந்து இரண்டு அசையா எலும்புகளாக இடுப்புக்கு அடியில் மாறி விடும்.


    முதுகுவலி உணர்த்துவது என்ன?

    மனிதனின் உடல் உள்ளுறுப்புகள் பழுதடைந்தால், அல்லது ஒழுங்காக இயங்கவில்லை என்றால் அது முதுகெலும்பில் வலியாக நமக்கு உணர்த்தும்.

    அடி முதுகில் வலி ஏற்பட்டால் நமது உடலில் கோணாடு சுரப்பி ஒழுங்காக இயங்கவில்லை. சிறுநீரகம் சம்பந்தமான வியாதி வருவதற்கு ஒரு அறிகுறி தான் இந்த அடி முதுகு வலி. இதே போல் நடு முதுகில் வலி ஏற்பட்டால் சிறுகுடல், பெருங்குடல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம். கழுத்து வலி, முதுகு வலி ஏற்பட்டால் இதயம், நுரையீரல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம்.

    முதுகுவலி வரக் காரணங்கள்

    ஒரே இடத்தில பல மணி நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி ஏற்படும்.

    தொப்பை போட்டவர்களுக்கும் அதிக நேரம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கும் அடிமுதுகு வலி வரும். அளவுக்கு அதிகமான எடையுள்ள பொருட்களை தூக்கினாலும் அடிமுதுகு வலி ஏற்படும்.

    தொடர்ந்து அலுவலகத்தில் ஒரே இடத்தில அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் அடிக்கடி சளி பிடித்தல், மூக்கடைப்பு, இருமல் உள்ளவர்களுக்கும், அதிகம் கவலைப் படுபவர்களுக்கு இதயம் பாதிப்பால் கழுத்து முதுகு வலி ஏற்படும்.

    உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகி அதனால் அடிக்கடி காய்ச்சல் வருபவர்களுக்கு முதுகு முழுவதும் வலி இருக்கும்.

    எதிர்பாராத விபத்தினால் முதுகில் பலம் வாய்ந்த அதிக எடையுள்ள பொருட்கள் விழுந்தாலும் டிஸ்லொகேட் ஆகி முதுகில் வலி ஏற்படும்.

    நம் உடல் எப்பொழுதும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்று கொண்டே இருக்கும். அதற்கு யாரும் சொல்லித் தர தேவையில்லை. ஒரு பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறாள் அம்மா. ஒரு நாள் அந்த குழந்தைக்கு வெளியில் பசும்பாலை வாங்கி கொடுக்கிறாள். அந்த பால் நச்சுத் தன்மை உள்ளதாக இருக்கிறது. அதை தாய் தெரியாமல் கொடுத்து விடுகிறாள். ஆனால் குழந்தையின் வயிற்றுக்குள் சென்ற பாலை ஐந்து நிமிடத்தில் குழந்தை வொமிட் செய்துவிடுகிறது. இந்த உடல் தன்னை பாதுகாக்க தானாக அந்த உணவை வெளித்தள்ளி விடுகிறது.

    ஏன் இதை இங்கு சொல்கிறேன் என்றால், எனக்கு முதுகுவலி வந்துவிட்டது என்று யாரும் வருந்த வேண்டாம். பயப்பட வேண்டாம். அவசரப்பட்டு உடனே அறுவை சிகிச்சைக்கு சென்று விடாதீர்கள். யோகா செய்யுங்கள்.


    புஜங்காசனம்

    புஜங்கம் என்றால் பாம்பு. ஒரு பாம்பு படம் எடுத்து நிற்பது போன்று தோற்றம் கொண்டதால் இந்த பெயர் பெற்றது.

    விரிப்பில் கிழக்கு நோக்கி குப்புற படுத்துக் கொள்ளுங்கள்.

    இரு கைகளையும் ஒன்றின் மேல் ஒன்று வைத்து அதில் நெற்றியை வைத்து முதலில் இருபது விநாடி ஓய்வெடுத்து மூச்சோட்டதை சரி செய்யவும்.

    பிறகு இரு கைகளையும் இதயத்தின் பக்கத்தில் வைக்கவும்.

    கை விரல்கள் தரையில் இருக்க வேண்டும்.

    இப்போது மெதுவாக மூச்சை உள்ளிழுத்து தலையை உயர்த்தி முதுகை பின் பக்கமாக வளைத்து கண்கள் வானத்தை நோக்கி பார்க்க வேண்டும்.

    இந்த நிலையில் மூச்சடக்கி பத்து வினாடி இருக்கவும்.

    பின் மெதுவாக மூச்சை வெளியில் விட்டு சாதாரண நிலைக்கு வரவும்.

    சற்று ஓய்வெடுத்து விட்டு மீண்டும் ஒரு முறை செய்யவும்.

    இதே போல் காலை, மாலை செய்ய வேண்டும்.

    முக்கிய குறிப்புக்கள்…

    இந்த ஆசனத்தை ஒரு மாதம் தொடர்ந்து பயிற்சி செய்தால் தான் முழுமை நிலை வரும்.

    முதலில் உடலை வளைக்கும் போது மெதுவாக வளைக்கவும். எந்த இடத்திலாவது வலி ஏற்பட்டால் நிறுத்தி கொள்ளவும்.

    முதுகு தண்டில் அதிக வலி உள்ளவர்கள், முதுகெலும்பு விலகியிருந்தால் மருத்துவர் ஆலோசனை பெற்று செய்யவும். அல்லது யோகா வல்லுனரின் நேரடி பார்வையில் செய்யவும்.

    சாதாரண வலி, அலுவலகத்தில் ஒரே இடத்தில அமர்வதால் வரும் வலி, இரு சக்கர வாகனம் அதிகம் ஓட்டுவதால் வரும் வலி உள்ளவர்கள் தாராளமாக இதனை செய்யலாம். 10 நாளில் பறந்துவிடும் முதுகு வலி. இது உண்மை!

    இந்த புஜங்காசனம் முதுகுவலியை மட்டும் போக்குவதில்லை இதோ இதன் மற்ற பலன்கள்…

    ஆஸ்துமா, நுரையீரல் பலவீனம், ரத்தத்தில் சளி (ஈஸ்னோபைல்) ஆகியவற்றை நீக்குகிறது.

    கிட்னியை பலப்படுத்தி நன்றாக இயங்க செய்கிறது.

    பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை கோளாறுகளை எளிதில் போக்கும். வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளிப்போதல் அல்லது முன்பே வருதல், மாதவிடாய் சமயம் வயிற்று வலி போன்றவை நீங்கும்.

    மலச்சிக்கல் நீங்கும்.

    உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

    பெண்களுக்கு…

    மாதவிடாய் காலத்தில் நான்கு நாட்கள் யோகாசனம் மட்டும் உடற்பயிற்சி செய்யக்கூடாது. ஐந்தாவது நாளிலிருந்து பயிற்சி செய்யலாம். சிலர் தவறாக மாதவிடாய் காலங்களிலும் உடற்பயிற்சி செய்து விட்டு, பிறகு முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள்.

    ×