search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக ஸ்டாலின்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.
    • விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்.

    விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.

    இவ்விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்!
    • உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்!

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் உழைப்பாளர் தினத்தில் வாழ்த்திப் போற்றுவோம்!

    மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க - ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்!

    இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

    • நேற்று மாலை 6 மணி அளவில் பசுமை பள்ளத்தாக்கு அருகே உள்ள கோல்ப் மைதானத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்தார்.
    • கோல்ப் மைதானத்தில் இருந்து வெளியே வந்த அவரை அந்த பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் ஆவலுடன் பார்த்தனர்.

    கொடைக்கானல்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் கொடைக்கானலுக்குச் சென்றார்.

    கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அவர் தங்கியுள்ளார். நேற்று மாலை 6 மணி அளவில் பசுமை பள்ளத்தாக்கு அருகே உள்ள கோல்ப் மைதானத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அங்குள்ள பசுமை புல்வெளியில் சிறிதுதூரம் நடந்து சென்ற அவர் கோல்ப் விளையாடி மகிழ்ந்தார்.

    கோல்ப் மைதானத்தில் இருந்து வெளியே வந்த அவரை அந்த பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் ஆவலுடன் பார்த்தனர். அவருக்கு வாழ்த்தும், வணக்கமும் தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பதிலுக்கு அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். 

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி.

    முதலமைச்சருடன் 'செல்பி'யும், புகைப்படமும் எடுத்துக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் தங்கியிருக்கும் நட்சத்திர விடுதிக்கு திரும்பினார்.

    இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தனது மகள் செந்தாமரை மற்றும் பேரன், பேத்திகளுடன் பூம்பாறை கிராமத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 


    • மனு கொடுப்பதற்காக கஞ்சா பொட்டலத்துடன் பா.ஜ.க. ஓ.பி.சி. அணி மாநில செயற் குழு உறுப்பினர் சங்கர் பாண்டி வந்திருந்தார்.
    • போலீசார் அவரிமிருந்த மனுவை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.

    மதுரை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வு எடுக்க கொடைக்கானல் செல்வதற்காக நேற்று காலை மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மனு கொடுப்பதற்காக கஞ்சா பொட்டலத்துடன் பா.ஜ.க. ஓ.பி.சி. அணி மாநில செயற் குழு உறுப்பினர் சங்கர் பாண்டி வந்திருந்தார்.

    விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, போலீசார் அவரிமிருந்த மனுவை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.

    இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பிலிருந்த போலீசாரை ஆபாசமாக திட்டியது, அரசு பணி செய்யவிடாமல் தடுத்தது, வெடிகுண்டு வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியது, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது என்பது உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் பணி புரியும் மாதவன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜ.க. நிர்வாகி சங்கர் பாண்டியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம் நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.
    • நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றி வருகிறோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தொழிலாளர் சமுதாயம் 8 மணி வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி ரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப் பலி தந்து தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே நாள்! திராவிட முன்னேற்றக் கழகம், தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம்.

    தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம் நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.

    நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றி வருகிறோம்.

    கடைகள் மற்றும் நிறுவனங்களில் அனைத்துப் பணியாளர்களும் அமர்வதற்கு, பணிபுரியும் இடங்களில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தித் தருதல் குடிநீர், கழிப்பிடம், ஓய்வு அறை, உணவருந்தும் அறை மற்றும் முதலுதவி வசதிகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் 1947 ஆம் ஆண்டைய தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு தொழிலாளர் நலன்கள் இந்த அரசினால் பாதுகாக்கப்பட்டுள்ளன.

    தொழிலாளர்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பங்களையும் காத்து வரும் திராவிட மாடல் அரசின் சார்பில் தொழிலாளர் சமுதாயம் நல வாழ்விலும், பொருளாதார மேம்பாட்டிலும் முன்னேற்றங்கள் பல கண்டு உயர்ந்திட என் நெஞ்சம் நிறைந்த "மே" தின நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது.
    • தமிழக இளைஞர்கள், மாணவிகள், ஏழை கூலித்தொழிலாளர்கள், சிறுவர்கள் முதல் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள்.

    மதுரை:

    தமிழகத்தில் ஒரே கட்ட மாக கடந்த 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதையொட்டி தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டான் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் புறப்பட்டார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

    முதலமைச்சரின் தனிப்பட்ட பயணமாக இது இருந்ததால் அவரை வரவேற்க கட்சியினர் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்தநிலையில் விமான நிலைய வரவேற்பு பகுதியில் தனி நபராக ஒருவர் மட்டும் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சென்ற அவனியாபுரம் உதவி போலீஸ் கமிஷனர் செல்வக்குமார், இன்ஸ்பெக்டர் மணிக்குமார் ஆகியோர் விசாரித்தனர். அவர் மதுரை அய்யர்பங்களாவை சேர்ந்த பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர்பாண்டி என்பது தெரியவந்தது. மேலும் அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுப்பதற்காக வந்திருப்பதாக தெரிவித்தார். போலீசார் அதற்கு அனுமதி கிடையாது என்று கூறினர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரிடம் மனுவை தருமாறு போலீசார் கேட்டனர். தரமறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் அவரிடம் இருந்து மனுவை போலீசார் கைப்பற்றினர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களும் எளிதில் கிடைக்கிறது. இதனால் தமிழக இளைஞர்கள், மாணவிகள், ஏழை கூலித்தொழிலாளர்கள், சிறுவர்கள் முதல் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் சமூக விரோத செயல்கள், குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இது மிகவும் எனக்கு வேதனை அளிக்கிறது. ஆகவே தாங்கள் தமிழக மக்களின் நலன் கருதி, துரித நடவடிக்கை எடுத்து போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    குறிப்பு: இத்துடன் தமிழகத்தில் எளிதில் கிடைக்கும் கஞ்சா பொட்டலம் இணைத்துள்ளேன்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    இதையடுத்து சங்கர்பாண்டியை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்து அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது அப்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது, அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர் மற்றும் தற்போதைய பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்திக்கு எதிராக முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்றும் தெரியவந்தது. இதற்கிடையே விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் கொடைக்கானல் புறப்பட்டு சென்றார்.

    • சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    • படிப்புடன், விளையாட்டையும் அன்றாட வழக்கங்களில் இணைத்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.

    சென்னை:

    கனடாவில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதன்மூலம் கேன்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் (17 வயது) வென்ற வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார். மேலும், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் குகேஷ் தகுதி பெற்றுள்ளார்.

    இதற்கிடையே, சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சத்திற்கான ஊக்கத்தொகைக்கான காசாலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

    மிக இளம் வயதில் 'பிடே' கேன்டிடேட்ஸ் தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள நமது குகேசுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன்.

    கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்.

    இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும் என பதிவிட்டுள்ளார்.

    • குகேஷ் 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் கைப்பற்றி வரலாறு படைத்தார்.
    • குகேஷூக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து.

    கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் 14 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் கைப்பற்றி வரலாறு படைத்தார்.

    ரஷிய செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ் தனது 20 வயதில் 1984-ம் ஆண்டில் கேன்டிடேட் செஸ் போட்டியில் பட்டம் வென்றதே முந்தைய இளம் வயது வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது. அவரது 40 ஆண்டுகால சாதனையை தற்போது குகேஷ் தகர்த்துள்ளார்.

    இந்நிலையில், கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழத்து பெற்றார்.

    தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை குகேஷிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    மேலும், குகேஷ்க்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்தார்.

    • நல்ல சீதோஷ்ணம் நிலவும் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் முதலமைச்சர் நாளை செல்கிறார்.
    • மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பாக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கடும் வெயிலில் பயணம் செய்து, தீவிரமாக ஓட்டு வேட்டையாடினார். வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ந் தேதி நடைபெறவுள்ளது.

    இதற்கிடையே தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஆய்வு கூட்டத்தை நடத்தி, அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

    தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரும் மே 1-ந் தேதி முதல் கடுமையான வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏற்கனவே வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இந்த அறிவிப்பு, மக்களை மேலும் அச்சுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில், நல்ல சீதோஷ்ணம் நிலவும் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை செல்கிறார். அதற்காக நாளை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்கிறார். பின்னர் மதுரையில் இருந்து காரில் அவர் புறப்பட்டு கொடைக்கானலுக்கு செல்கிறார். மே 4-ந் தேதி வரை அவர் அங்கு தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஏப்.29-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் பகுதிகளில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதித்து திண்டுக்கல் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

    • 40 ஆண்டுகளாய்ப் பார்த்தும் பழகியும் வருகிறேன்.
    • பருவம் கூடக் கூடப் பக்குவம் கூடிவருகிறது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேர மேலாண்மையில் சர்வதேச ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர் என்று கவிஞர் வைரமுத்து புகழ்ந்துள்ளார்.

    இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சரை நேற்று

    முகாம் அலுவலகத்தில்

    சந்தித்தேன்

    குறித்த நேரம் காலை 10.15

    நான் அடைந்த நேரம் 10.14

    முதலமைச்சர்

    வந்து வரவேற்ற நேரம் 10.15

    நேர மேலாண்மையில்

    சர்வதேச ஒழுங்கைக்

    கடைப்பிடிக்கிறார்

    40 ஆண்டுகளாய்ப்

    பார்த்தும் பழகியும் வருகிறேன்

    பருவம் கூடக் கூடப்

    பக்குவம் கூடிவருகிறது

    வயது கூடக் கூட

    மரம்

    வைரம் பாய்வது மாதிரி

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக்கூடும்.
    • குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கோடை காலமானது இரண்டு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஒன்று அதிகப்படியான வெப்பம். இன்னொன்று குடிநீர் தேவை அதிகரிப்பு.

     வெப்ப அலை பிரச்சனை குறித்து 2 நாட்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். விரிவான அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டேன். அடுத்து குடிநீர் தேவைகள் குறித்த ஆலோசனைக் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும், மாநிலத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளாக விளங்கக்கூடிய தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் குறைந்த அளவு மழை பெய்தது. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறைச்சூழல் குறித்து, தலைமைச் செயலாளரும், பிற துறைச் செயலாளர்களும் விளக்கினார்கள்.

     இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, தற்போது அணைகளில் உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டிய கடினமான சூழ்நிலையில் நாம் உள்ளோம்.

    இதனை கருத்தில் கொண்டு அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

    தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 150 கோடி ரூபாய் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதனை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

    குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும், நகராட்சி நிர்வாக துறை செயலாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களும், தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, தடைகளின்றி பராமரித்திட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும்போது, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று ஆணையர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

    இந்த கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, சீரான, தடை இல்லாத மின்சாரம் அவசியம். எனவே இத்தகைய திட்டப்பணிகளுக்கு மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு மின்வாரியத்தின் தலைவரை கேட்டுக் கொள்கிறேன்.

    ஊராட்சிப் பகுதிகளில், சிறிய குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறக்கூடிய பல கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் வறண்டு இருக்கின்றன. இவற்றுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்தோ அல்லது லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களை இப்பணிகளில் முழுமையாக ஊரக வளர்ச்சித் துறை செயலாளரும் இயக்குனரும் ஈடுபடுத்திட வேண்டும்.

    நமது மாநிலத்தில் வாக்குப்பதிவு முடிந்தும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்க கூடிய நிலையில், இந்தப் முக்கியப் பணிகளில் எந்தவிதமான சுணக்கமும் ஏற்பட்டு விடாமல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் கண்காணித்து வருமாறு தலைமைச் செயலாளரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

     

    மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் மேற்பார்வை அலுவலர்கள் தொடர்ந்து நேரில் சென்று குடிநீர் விநியோகப் பணிகளை ஆய்வு செய்து, பற்றாக்குறை உள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை பற்றி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.

    நமது மாநிலம் இத்தகைய குடிநீர் பற்றாக்குறைச் சூழலை சந்திப்பதால், அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டு அடுத்த இரண்டு மாதங்களில் இந்த பற்றாக்குறையால் நமது மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம். கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு. இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, இ. பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைவர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி. வினய், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிருவாக இயக்குநர் எஸ். சிவராசு, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்! காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!
    • தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர்- நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    "பார்ப்பனரல்லாதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்!

    அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்! காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!

    தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர்- நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்!"

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    ×