search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை விமான நிலையம்"

    • விமான பயணிகளிடமும், அவர்களின் உடமைகளையும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.
    • சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் நடத்திய சோதனையில் 160 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பிடிப்பட்டது.

    மதுரை:

    மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து துபாயிலிருந்து மதுரை வந்த விமான பயணிகளிடமும், அவர்களின் உடமைகளையும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.

    அப்போது மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மண்டையன் மகன் பாக்கியம் என்பவரிடம் நடைபெற்ற சோதனையில் அவர் கொண்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் அந்த பொருட்களை அதிநவீன ஸ்கேனர் மூலம் சோதனை செய்ததில் அதில் மறைத்து தங்கம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

    அதனையடுத்து சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் நடத்திய சோதனையில் 160 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பிடிப்பட்டது. அதன் மதிப்பு ரூ.10 லட்சத்து 88 ஆயிரத்து 320 ஆகும். இதனைத் தொடர்ந்து சுங்க இலாக வான் நுண்ணறிவு பிரிவினர் பாக்கியத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர்.
    • சமீப காலமாக மதுரைக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அரங்கேறி வருகிறது.

    மதுரை:

    மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு விமான சேவைகளும், சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாகி விட்டது. இதனை தடுக்க விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில், துபாயில் இருந்து மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர்.

    மேலும் அவர் கொண்டு வந்த உடமைகளை சல்லடை போட்டு சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் கொண்டு வந்த செல்போன்களுக்கான சார்ஜிங் பிளக்குகளில் தங்கம் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பிளக்குகளில் இருந்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்து 500 மதிப்பிலான 100 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தை சேர்ந்த விஜய் ஆனந்த் (வயது 40) என்பவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீப காலமாக மதுரைக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அரங்கேறி வருகிறது.

    • ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணி ஒருவரை விமான புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.

    மதுரை:

    மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் வரி ஏய்ப்பு செய்து அதிக அளவில் தங்க நகைகளை சட்டவிரோதமாக கடத்தி வருவது அதிகரித்துள்ளது.

    அவ்வாறு தங்கம் கடத்தி வரும் பயணிகளை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அதன்படி துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணி ஒருவரை விமான புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் உடமைகளில் மறைத்து கடத்தி வந்த ரூ.21 லட்சத்து 31 ஆயிரத்து 640 மதிப்பிலான 322 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பசை வடிவிலும், பவுடராகவும் மாற்றி கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்திய விமான பயணியிடம் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிரதமர் மோடி மதுரை வந்து தங்கி இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது இது 2-வது முறையாகும்.
    • பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மதுரை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' யாத்திரையை ராமேசுவரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 28-ந்தேதி தொடங்கினார். இதை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை இன்று பல்லடத்தில் யாத்திரையை நிறைவு செய்கிறார். இதற்கான நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாலை 4 மணி அளவில் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மாலை 5 மணி அளவில் மதுரை வந்தடைகிறார். மதுரையில் உள்ள வீரபாஞ்சான் என்ற இடத்தில் அமைந்திருக்கும் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் மைதானத்தில் வந்து இறங்குகிறார்.

    அதே பள்ளியில் மாலையில் நடைபெறும் சிறு, குறு தொழில் அதிபர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அங்கு மத்திய அரசின் தொழில் முனைவோருக்கான ஸ்டார்ட்அப் திட்டம், மத்திய அரசின் மானியம், கடன் உதவி, சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தொழில் அதிபர்களுடன் பேசுகிறார்.

    இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சிவகங்கை ரோடு, ரிங் ரோடு, கப்பலூர் வழியாக திருநகர் அருகே உள்ள பசுமலையில் அமைந்திருக்கும் தனியார் நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பின்பு அங்கிருந்து காரில் புறப்பட்டு இரவு 8 மணிக்கு பசுமலை, பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் சாலை, தெற்கு வெளிவீதி வழியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகிறார்.

    அங்கு சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்கிறார். அதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு வழக்கமாக நடைபெறும் பள்ளியறை பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார். பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதை முன்னிட்டு மதுரை நகருக்குள் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அதே வழியில் மீண்டும் பசுமலை நட்சத்திர விடுதிக்கு சென்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.


    பிரதமர் மோடி மதுரை வந்து தங்கி இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது இது 2-வது முறையாகும். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மதுரை வந்திருந்தார். அப்போது அவர் மதுரையில் இரவு தங்கினார். இந்த பயணத்தின்போது பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்தார். அதேபோல் தற்போது 2-வது முறையாக மதுரையில் தங்கி இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரதமர் மோடியின் பயணத்தை முன்னிட்டு இந்த பகுதிகளில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பயணம் செய்யும் சாலைகளில் மத்திய கமாண்டோ படை போலீசாருடன் மாநில போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் தலைமையில் தென்மண்டல ஐ.ஜி. கண்ணன், போலீஸ் கமிஷனர் லோகநாதன், டி.ஐ.ஜி.க்கள் ரம்யா பாரதி, அபிநவ் குமார் மற்றும் 7 போலீஸ் சூப்பிரண்டுகள், 40 துணை சூப்பிரண்டுகள், 300 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், 8-க்கும் மேற்பட்ட வெடி குண்டு தடுப்பு நிபுணர்கள் உள்பட 7 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    மதுரை வருகை தரும் பிரதமர் மோடி இன்று இரவு தங்க இருக்கும் பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியின் நுழைவு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காட்சி.


     மதுரை விமான நிலையம், பிரதமர் தங்கும் தனியார் விடுதி, திருப்பரங்குன்றம் சாலை, தொழில் அதிபர்கள் மாநாடு நடைபெறும் தனியார் பள்ளி, மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி வருகையையொட்டி பிரதமர் வந்து இறங்கும் தனியார் பள்ளி ஹெலிபேட் மைதானம், ரிங் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரும், மாநில போலீசாரும் வாகன ஒத்திகையில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம், ஓட்டல் போன்ற இடங்களுக்கு காரில் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் மோடியின் மீனாட்சி அம்மன் கோவில் வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    முன்னதாக நேற்று கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார், சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆகியோர் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அங்கு பிரதமர் மோடி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் வந்து செல்லும் பகுதிகளில் அவர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தனியார் விடுதியில் தங்கும் பிரதமர் மோடி நாளை அதிகாலை இயற்கை எழில் சூழ்ந்த மலை குன்றில் அமைந்துள்ள ஓட்டலில் தியானம், யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்கிறார். காலை 8 மணி அளவில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு காரில் விமான நிலையம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி செல்லும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    • ஸ்ரீரங்கம் சென்ற பிரதமர் மோடி பிற்பகலில் ராமேசுவரம் வந்தார்.
    • ராமேசுவரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி 12.15 மணிக்கு மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

    மதுரை:

    கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழா மற்றும் ஆன்மீக பயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி 19-ந்தேதி மாலை சென்னை வருகை தந்தார். நேற்று ஸ்ரீரங்கம் சென்ற அவர், பிற்பகலில் ராமேசுவரம் வந்தார்.

    இரவில் அங்கு தங்கிய பிரதமர் மோடி இன்று அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தரிசனம் மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டார். 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று பகல் 12.40 மணிக்கு மதுரையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    முன்னதாக 11.50 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி 12.15 மணிக்கு மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தார். டெல்லி புறப்படும் முன்பாக அவர் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தர்மர் எம்.பி. உள்ளிட்ட 39 பேரை சந்தித்தார்.

    பின்னர் அவர் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.

    • கர்ப்பிணி உள்பட 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையும் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது

    மதுரை:

    தென் மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்தது. இதில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் ரெயில் பாதைகளில் மண் அரிப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.

    ரெயிலில் இருந்த பயணிகள் பஸ், வேன்கள் மூலம் சுமார் 300 பேர் மீட்கப்பட்டனர். மீதமிருந்த 500 பயணிகளை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டது. முதற்கட்டமாக ஹெலிகாப்டர் மூலம் ரெயிலில் சிக்கிய பயணிகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் உள்பட நான்கு பேரை சூலூரில் இருந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டனர்.

    ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் அனுசுயா மயில், கணவர் பெருமாள், தாய் சேது லட்சுமி, குழந்தை தாஸ் வருண் ஆகிய நான்கு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மதுரை மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டனர்.

    மதுரை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கர்ப்பிணி உள்பட 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கர்ப்பிணி பெண் உள்ளிட்டோர் நலமுடன் இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

    ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் தாயார் சேது லட்சுமி கூறியதாவது:-

    எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையும் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது. மின்சாரம் இல்லாத நிலையில் யாரையும் செல்போன் மூலமாக கூட தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தோம்.

    3 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி தவித்தோம். நாங்கள் இருக்கும் பகுதிக்கு உணவு வழங்குவதற்காக ஹெலிகாப்டர் வந்தபோது உதவி என்று பெரிய அட்டையில் எழுதி காண்பித்ததால் உடனடியாக ராணுவ வீரர்கள் எங்களை மீட்டனர்.

    எங்களை நெல்லை அரசு மருத்துவமனைக்கு தான் அழைத்து செல்வார்கள் என்று நினைத்தபோது அங்கு போதிய வசதி தற்போது இல்லை எனக்கூறி மதுரைக்கு அழைத்து வந்தனர். முதன் முறையாக ஹெலிகாப்டரில் வந்தபோது பதட்டமாக இருந்தது.

    எங்களுக்கு உணவு கூட வேண்டாம், கர்ப்பிணிப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் போதும் என நினைத்து காத்திருந்தோம். எங்கள் நல்ல நேரத்திற்கு ஹெலிகாப்டர் நாங்கள் இருக்கும் பகுதிக்கு வந்தது.

    மதுரை அரசு மருத்துவமனையில் எனது மகள் தற்போது நலமாக இருக்கிறார் என்று கண்ணீருடன் கூறினார்.

    • துபாய் போன்ற வளைகுடா நகரங்களில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் தங்கத்தை அதிகளவில் கடத்துகின்றனர்.
    • மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மதுரை:

    வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக துபாய் போன்ற வளைகுடா நகரங்களில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் தங்கத்தை அதிகளவில் கடத்துகின்றனர்.

    இதன் காரணமாக சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது விமான நிலைய அறை எண்.7-ல் உள்ள கழிவறைக்கு சென்று பார்த்த போது அங்கு சிறிய அளவிலான பார்சல் இருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 2 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் இருந்தது.

    இதன் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சமாகும். அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் நேற்று காலை துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பயணம் செய்த சிலர் மாலை மதுரையில் இருந்து இலங்கைக்கு புறப்படும் விமானத்தில் பயணம் செய்தனர்.

    அதில் வந்த சிலர் தான் அதிகாரிகளின் கெடு பிடியால் கடத்தி வந்த தங்கத்தை கழிவறையில் போட்டு விட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் யார்? என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
    • பையில் களிமண் போன்ற பொருளுடன் தங்க துகள்கள் கலந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

    மதுரை:

    சிங்கப்பூரில் இருந்து மதுரை வரும் விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    எனவே அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தினர். ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. மேலும், அவர் கொண்டு வந்த உடைமைகளையும் பரிசோதித்தனர்.

    அப்போது அவர் கொண்டு வந்த பையில் களிமண் போன்ற பொருளுடன் தங்க துகள்கள் கலந்து கடத்தி வந்தது தெரியவந்தது. களிமண்ணில் இருந்து தங்கத்துகள்களை அதிகாரிகள் பிரித்து எடுத்தபோது, ரூ.59 லட்சத்து 28 ஆயிரத்து 210 மதிப்புள்ள 995 கிராம் எடை கொண்ட கடத்தல் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தற்போது இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவை உள்ளது.
    • இரவு நேரங்களில் விமான சேவை இல்லாமல் இருந்தது.

    மதுரை :

    மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை நடைபெற்று வருகிறது. தற்போது மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவை உள்ளது.

    வெளிநாட்டு விமான சேவை நடைபெறும் நாட்களில் கூடுதலாக 2 மணி நேரம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் விமான சேவை இல்லாமல் இருந்தது. தென் மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து, மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்க வழிவகை செய்ய வேண்டும் என பல கட்டங்களாக வலியுறுத்தி வந்தனர்.

    இதற்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தற்போது அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி மதுரை விமான நிலையம் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் 24 மணி நேர சேவை நடைபெற அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை துபாய் விமானம் வந்தது.
    • பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா? கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்கிறார்களா? என்று சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்திலும் கொரோனா கட்டுபாடுகள் இன்று அமலுக்கு வந்தன. சிங்கப்பூர், இலங்கை, துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரைக்கு விமானங்கள் வருகின்றன. இந்த நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை துபாய் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா? கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்கிறார்களா? என்று சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர்.

    துபாய் விமானத்தில் மொத்தம் 187 பயணிகள் வந்தனர். அவர்களில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    • பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று பிற்பகலில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் மதுரை வருகிறார்.

    அவர் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு மதியம் 2 மணி அளவில் வருகிறார். அங்கு அவரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்ட கலெக்டர் அனிஸ் சேகர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்கிறார்கள்.

    பின்பு பிரதமர் மோடி அங்கிருந்து திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலை வழியாக காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக வளாகத்திற்கு சாலை மார்க்கமாக காரில் சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, விழா முடிந்ததும் அங்கிருந்து கார் மூலம் ஹெலிபேட் தளத்திற்கு சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையத்திற்கு மாலை 5 மணிக்கு பிறகு வருகிறார்.

    அங்கு அவரை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வழி அனுப்பி வைக்கிறார்கள். பின்பு மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    அதுமட்டுமின்றி மதுரை மாநகர் முழுவதும் முக்கியமான இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகரில் போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பிரதமர் மோடி மதுரையிலிருந்து காந்தி கிராமத்திற்கு ஹெலிகாப்டரில் செல்லும் வகையில் பயண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெய்தபடி இருந்ததால் மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு செல்லும் வகையில் பிரதமரின் பயணம் மாற்றப்பட்டது.

    இதனால் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டின் நடுவில் கட்டைகளை வைத்து கட்டப்பட்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. சாலை நெடுகிலும் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அம்பாத்துறை வழியாக காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செல்ல அனைத்துவித வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி காந்தி கிராமம் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து பல்கலைக்கழக வளாகத்திற்கு செல்லும் சாலையில் ரெயில்வே கடவுப்பாதை உள்ளது. இதனால் பிரதமர் செல்லும் நேரத்தில் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

    மதுரை-திண்டுக்கல் இடையேயான ரெயில்வே போக்குவரத்தில் இன்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை மாற்றம் செய்யுமாறு திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னையில் இருந்து குருவாயூர் செல்லக்கூடிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரையிலிருந்து சென்னை செல்லக்கூடிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்களின் இயக்கத்தில் பயண நேரம் இன்று மாற்றம் செய்யப்படுகிறது.

    பிரதமர் மோடியை வரவேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தார். அதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சாலை மார்க்கமாக மதுரை வருகிறார்.

    • மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை-மகா. சுசீந்திரன் பேசியதாக ஆடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • மதுரை விமான நிலையத்துக்கு எத்தனை பேர் இருந்தாலும் அழைத்து வாருங்கள் என்று அண்ணாமலை பேசுவதாக குரல் பதிவாகி உள்ளது.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கார் மீது, பா.ஜ.க. நிர்வாகிகள் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த நிலையில் மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருந்த சரவணன், திடீரென்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை சந்தித்து பேசினார். அவரை பா.ஜ.க. மேலிடம் பதவி நீக்கம் செய்தது. மதுரை மாநகர் மாவட்ட புதிய பா.ஜ.க. தலைவராக உள்ள மகா சுசீந்திரன் நியமிக்கப்பட்டடார்.

    இந்த நிலையில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை-மகா. சுசீந்திரன் பேசியதாக ஆடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதில் "நான் மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு, மாஸ் ஆக-கிராண்ட் ஆக இருக்க வேண்டும். இந்த விஷயத்தை எப்படி அரசியல் பண்ணுவது? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். நிச்சயமாக அரசியல் பண்ணி விடுவோம். மதுரை விமான நிலையத்துக்கு எத்தனை பேர் இருந்தாலும் அழைத்து வாருங்கள்" என்று அண்ணாமலை பேசுவதாக குரல் பதிவாகி உள்ளது.

    எனவே மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீதான செருப்பு வீச்சு தாக்குதல், திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே சமூக வலைதளத்தில் வெளியான ஆடியோவுக்கு, மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மதுரை மாவட்ட பா.ஜ.க பொதுச்செயலாளர் சந்தோஷ் சுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க திட்டமிட்டு உள்ளனர். அதில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை-மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் பேசுவது போல யாரோ சிலர் போலியான ஆடியோவை சமூக வலைத் தளங்களில் பரப்பி வருகின்றனர்.

    இந்த விஷயத்தில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி, இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

    ×