search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lawyer"

    பாகிஸ்தான் கோர்ட்டில் வக்கீல்கள் அனைவரும் சேர்ந்து ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெண் தலைவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெண் தலைவர் லைலா பர்வீன். இவர் தனது முன்னாள் கணவரும், வக்கீலுமான ஹஸ்னைன் தனக்கு வழங்கிய ‘செக்’ போலியானது என கூறி அவர் மீது வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி விசாரணைக்கு ஆஜராகுவதற்காக லைலா பர்வீன் தனது சகோதரருடன் கோர்ட்டுக்கு சென்றார்.

    அப்போது அங்கிருந்த ஹஸ்னைன் மற்றும் சக வக்கீல்கள் லைலா பர்வீனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதை தட்டி கேட்ட அவரது சகோதரரை வக்கீல்கள் அனைவரும் சேர்ந்து அடித்து, உதைத்தனர். இதை லைலா பர்வீன் தடுக்க முயன்றார்.

    அப்போது வக்கீல்கள் அவரையும் சரமாரியாக அடித்து உதைத்ததாகவும், இதில் அவர் மயங்கியதாகவும் கூறப்படுகிறது. கோர்ட்டுக்குள் நடந்த இந்த வன்முறையால் அங்கு பெரும் பரரப்பு ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து தன்னையும், தனது சகோதரரையும் தாக்கிய முன்னாள் கணவர் ஹஸ்னைன் உள்பட அனைத்து வக்கீல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி லைலா பர்வீன் போலீசில் புகார் அளித்தார்.
    குளித்தலை அருகே வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் வக்கீல் உள்பட 2 பேர் நேற்று நாமக்கல் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
    நாமக்கல்:

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கம்மநல்லூரை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 70). வாழைக்காய் வியாபாரி. இவரது மகன் மணிவண்ணன் (25). இவர் அதே பகுதியை சேர்ந்த வக்கீல் பிச்சைமுத்து (44) என்பவரின் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பிச்சைமுத்து குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி பரமசிவம் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து அவரது மகன் மணிவண்ணன் லாலாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சைமுத்து, அவரது தம்பி முருகானந்தம் ஆகிய இருவரையும் தேடி வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே நேற்று வக்கீல் பிச்சைமுத்து, முருகானந்தம் (34) ஆகிய இருவரும் நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி அவர்கள் இருவரையும் வருகிற 31-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர்கள் இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
    திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை கற்பழித்த வக்கீல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் தனபாலன். இவரது மகள் ஓவியா (வயது 25). வக்கீலான இவர், மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை வண்டியூர் பாண்டிக்கோவில் தெருவைச் சேர்ந்த வக்கீல் தேவக்குமாரும் (29) நானும் கடந்த 2016-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் நெருங்கி பழகினார். தற்போது பெற்றோரின் தூண்டுதலால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வக்கீல் தேவக்குமார், அவரது தந்தை விஜய நடராஜன் (60) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் போலி ஆடியோ வெளியிட்ட வக்கீலுக்கு காவல் நீட்டித்தும் பெண் உதவியாளருக்கு ஜாமீனில் விடுதலையும் வழங்கப்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் வேலை வாங்கி தருவதாக கூறி, கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட இளம்பெண்களை அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் சிலர், போலி பத்திரிகையாளர் ஒருவர் உதவியுடன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.

    ஆனால் அந்த புகார் தொடர்பாக போலீசார் யாரையும் விசாரிக்காமல், கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி பெரம்பலூர் போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வக்கீல் அருளை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் வக்கீல் அருள் தன்னுடன் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் தொடர்பாக செல்போனில் பேசியதாக வெளியிட்ட போலி ஆடியோ, வேறு ஒரு பெண்ணை வைத்து பேசி பதிவு செய்யப்பட்டதாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாக வக்கீல் அருளின் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த பெரம்பலூர் மாவட்டம், கல்லம்புதூரை சேர்ந்த கலையரசியை கடந்த 2-ந்தேதி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு, வக்கீல் அருளுக்கு 3-ந் தேதி நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. இந்த நிலையில் வக்கீல் அருள் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் பாதிக்கப்பட்ட பெண் பேசியதாக, போலியான செல்போன் ஆடியோ வெளியிட்டதாக 2-வது வழக்காக அருள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    அந்த வழக்கிற்காக சிறையில் இருந்த வக்கீல் அருளை பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பலத்த பாதுகாப்புடன் போலீசார் நேற்று மாலை அழைத்து வந்தனர்.

    பின்னர் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது வக்கீல் அருளை வருகிற 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வக்கீல் அருளை பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 2-வது வழக்கிற்கு ஜாமீன் கேட்டு, வக்கீல் அருள் தரப்பினர் பெரம்பலூர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவின் மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

    இதற்கிடையே போலியான ஆடியோ வெளியிட உடந்தையாக இருந்ததாக கைதான கலையரசி தரப்பினர், அவருக்கு ஜாமீன் கேட்டு பெரம்பலூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவினை விசாரித்த பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன் கலையரசிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    இதையடுத்து கலையரசி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வக்கீல் அருளை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தரப்பில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பேசிய ஆடியோ வெளியிட்ட வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முடிவு செய்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் சிலரை முக்கிய பிரமுகர்கள் சிலர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதால் மேல் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயக்கம் காட்டுவதாக வக்கீல் அருள் புகார் தெரிவித்திருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், புகார் தொடர்பாக தன்னுடன் செல்போனில் 6 நிமிடம் 48 வினாடி பேசிய ஆடியோவினை நிருபர்கள் முன்னிலையில் வக்கீல் அருள் வெளியிட்டார்.இதனால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் வக்கீல் அருள் நேற்று பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், பெரம்பலூரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண், என்னுடன் செல்போனில் பேசிய ஆடியோவை வெளியிட்டதில் இருந்து, அந்த சம்பவத்தில் தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகர் தூண்டுதலின் பேரில், அரசு வக்கீல் மற்றும் சிலர் என்னிடம் கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர். எனவே எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

    இதற்கிடையே அ.தி.மு.க. வக்கீல் அணி சார்பில் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், வக்கீல் ஒருவர் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களை பற்றி எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி ஆடியோ ஒன்றை வெளியிட்டு, தவறான செய்தியையும் பரப்பி வருகிறார். மேலும் கட்சிக்கு அவப்பெயரையும், அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செய்தியினை அவர் வெளியிட்டு வருகிறார். அதனை தடுத்து நிறுத்துவதோடு மட்டுமின்றி, அந்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி வருகிற 4-ந்தேதி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த பெரம்பலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முடிவு செய்தனர். மேலும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்த உள்ளன. இதனால் பொள்ளாச்சி சம்பவம் போன்று பெரம்பலூர் பாலியல் சம்பவமும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
    2009-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட வக்கீல்கள் நேரில் ஆஜராகும்படி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #CBI #ChennaiHighCourt
    சென்னை:

    இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

    இதை கண்டித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.

    இந்த போராட்டத்தின் போது, பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, ஐகோர்ட்டுக்கு வந்திருந்தார். அவர் மீது போராட்டக்காரர்கள் சிலர் அழுகிய முட்டையை வீசி தாக்குதல் நடத்தினர். ஐகோர்ட்டுக்குள் நீதிபதிகளின் கண் எதிரே இந்த சம்பவம் நடந்ததால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வைத்து வக்கீல்கள் சிலரை கைது செய்ய முயற்சித்தனர்.

    அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. ஐகோர்ட்டுக்குள் ஆயுதப்படை போலீசார் உள்ளே நுழைந்து நீதிபதிகள், வக்கீல்கள் உள்பட அனைவர் மீதும் தடியடி நடத்தினர். இதில் நீதிபதிகள் உள்பட ஏராளமான வக்கீல்கள் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவத்தால், சென்னை ஐகோர்ட்டு பல நாட்கள் இழுத்து மூடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அப்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி முகோபாத் தியாயா தலைமையிலான முதல் அமர்வு, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. பின்னர் இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்திய பின்னர், 30க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மீதும், 4 ஆயுதப்படை போலீசார் மீதும் குற்றம் சுமத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த புலன்விசாரணை பாரபட்சமாக உள்ளதாக கூறி, வக்கீல்கள் சிலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த குற்றப்பத்திரிகைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த தடை உத்தரவு கடந்த சில நாட்களுக்கு முன்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இதையடுத்து சி.பி.ஐ. போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்ட வக்கீல்களை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி. சென்னை சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த வக்கீல்கள் அனைவரும் வருகிற 28-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. #CBI #ChennaiHighCourt
    மேலப்பாளையத்தில் வக்கீல் காரை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் தமீம் என்ற சாகுல் அமீது. இவர் தற்போது மதுரையில் தங்கி இருந்து கொடுக்கல்- வாங்கல் தொழில் செய்து வருகிறார்.

    இவரை மதுரை பாண்டி கோவில் தாய் மூகாம்பிகை நகரை சேர்ந்த வக்கீல் புலிகேசி (வயது 55) என்பவர் தொடர்பு கொண்டு ரூ.10 கோடி கடன் கேட்டுள்ளார். அதற்கு தேவையான ஆவணங்களை தருவதாகவும் கூறிஉள்ளார். ஆனால் சாகுல் அமீது தன்னிடம் ரூ.10 கோடி இல்லை.

    மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவரிடம் அந்த தொகையை வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் புலிகேசி, சாகுல் அமீது ஆகிய 2 பேரும் மேலப்பாளையத்துக்கு வந்துள்ளனர். அங்குள்ள நேரு நகரில் ஒரு வீட்டில் இருந்த போது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது.

    அவர்கள், தங்களிடம் சாகுல் அமீது ரூ.17 லட்சத்தை மோசடி செய்து விட்டார் என்று கூறி, அவரை தாக்கி உள்ளனர். பின்னர் அவர் தர வேண்டிய ரூ.17 லட்சத்துக்கு பதிலாக, புலிகேசியின் காரை தருமாறு பறித்துக் கொண்டனர்.

    பின்னர் அந்த காரில் புலிகேசியை அழைத்துச் சென்று நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு காரை திருடிச் சென்று விட்டனர். தங்களுடன் சாகுல் அமீதை அழைத்துச் சென்று விட்டனர்.

    இதுகுறித்து புலிகேசி மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் தென்காசியை சேர்ந்த சேக்முகமது என்பவரிடம் அந்த கார் இருப்பதை அறிந்தனர். இதையடுத்து தென்காசி போலீசாரின் உதவியுடன் அந்த கார் மீட்கப்பட்டது.

    இது தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்காசி ஷேக் முகமதுவை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த முகமது அசன்(28) என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் செல்வம், பாண்டி, துரைப்பான்டி உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சசிகலா எந்த சிறை விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்று சசிகலாவின் வக்கீல் அசோகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார். #Sasikala
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர்.

    இந்த நிலையில், சசிகலா சிறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி பணம் கொடுத்து தனி அறைகள், தேவைப்படும் போதெல்லாம் ஷாப்பிங், வேலைக்கு ஆட்கள் என்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சிறைத்துறை அதிகாரியாக இருந்த பெண் டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டினார்.

    இதையடுத்து சசிகலா வெளியே சென்று ஷாப்பிங் செய்து விட்டு, சிறை கைதி உடையின்றி சாதாரண உடையில் உள்ளே வருவது போல் சி.சி.டி.வி. வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பின்னர், இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணையை முடித்து கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசிடம் அறிக்கையை வழங்கியது. ஆனால், அரசு அந்த அறிக்கையை இன்னும் முழுமையாக வெளியிடவில்லை.

    அந்த அறிக்கை, சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் சசிகலாவுக்கு பல சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டது, உண்மைதான் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், சசிகலாவின் வக்கீல் அசோகன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சசிகலா எந்த சிறை விதிமீறலிலும் ஈடுபடவில்லை. அவர் மீது 2 குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. முதலாவதாக, சிறையில் சொந்த உடை அணிந்து வருகிறார் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அவர் சாதாரண தண்டனை பெற்று சிறைக்கு சென்றுள்ளார். கடுங்காவல் தண்டனை அளிக்கப்படவில்லை.

    எனவே, கர்நாடக சிறை சட்ட விதியில் சாதாரண தண்டனை பெற்றவர் சொந்த உடையை உடுத்திக் கொள்ளலாம் என்று தெளிவாக கூறப்படுகிறது. ஆனால் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா ‘ஏ’ கிளாஸ் கைதிகளின் சட்ட விதிகளை மட்டும் படித்துவிட்டு, கர்நாடக சிறையின் விதியை படிக்காமல் இப்படி குற்றம் சாட்டுகிறார்.

    2-வது குற்றம் சசிகலா வெளியே சென்று வருவதாக வெளியான வீடியோ. அது வெளியே சென்று வரும் வீடியோ இல்லை. சிறைக்குள் பார்வையாளர்களை சந்தித்துவிட்டு செல்லும் வழி. எனவே வெளியான வீடியோவில் வரும் காட்சி அவர் என்னை சந்தித்துவிட்டு வழக்கு சம்பந்தமான ஆவணங்களை வாங்கிக் கொண்டு சிறைக்குள் செல்கிறார். ஆனால் இந்த வீடியோவை வேண்டுமென்றே தவறாக யாரோ ஒருவருடைய தூண்டுதலின்பேரில் வெளியிட்டு உள்ளனர். இது பொய்யான வீடியோவாகும்.

    மேலும், அதிகாரி ரூபா வேண்டுமென்றே அரசு அதிகாரிகள் வரம்பை மீறி செயல்படுகிறார். மீடியாவை சந்திக்கிறார். அரசியல்வாதிகளுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார்.

    ரூபா மீது நாங்கள் அவதூறு வழக்கு தொடர உள்ளோம். அவர் யார் தூண்டுதலின்பேரில் செயல்படுகிறார் என்றும் எங்களுக்கு தெரியும். அதனை நாங்கள் நேரம் வரும்போது வெளியிடுவோம். அரசிடம் இருந்து அறிக்கையும் இன்னும் எங்கள் கைக்கு வரவில்லை.

    வீடியோவில் வரும் காட்சி சிறையின் உள்ளே உள்ள காட்சி தான். வெளியே உள்ள கேமராவில் எதுவும் பதிவாகவில்லை. ஏனென்றால் சசிகலா வெளியே செல்லவே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Sasikala

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியுங்கள், தூத்துக்குடி வளர்ச்சிப்பணிகளுக்காக மேலும் ரூ. 100 கோடியை வழங்க‌ தயார் என்று வேதாந்தா குழுமம் பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்தது. #Sterlite #SterlitePlant
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வேதாந்தா குழுமம் சார்பாக வக்கீல் அரிமா சுந்தரம் வாதிடுகையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு மட்டுமே மூட அதிகாரம் உள்ளது என்றார்.

    மேலும் அவர் தனது வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதைத் தொடர்ந்து தாமிரம் இறக்குமதி 247 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த போராட்டத்தில் நக்ச‌லைட்டுகள் பங்கேற்றனர் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் கூறினார்.

    தொடர்ந்து, வக்கீல் அரிமா சுந்தரம் தனது வாதத்தில், பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (சி.எஸ்.ஆர்) கீழ் வேதாந்தா நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 10 கோடி வழங்கி வருகிறது.

    தூத்துக்குடியில் குடிநீர் விநியோகம், மருத்துவமனை, பள்ளி வசதிகள் உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளுக்காக மேலும் ரூ. 100 கோடியை வழங்க‌ விரும்புகிறது. எனவே ஆலையை திறக்க அனுமதியுங்கள் என்றார்.

    இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் வைத்தியநாதன் வாதிடுகையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரிக்க முடியாது.

    இந்த வழக்கு விசாரணையை வருகிற 10‍-ந் தேதிக்கு ஒத்திவைத்தது. #Sterlite #SterlitePlant
    ரசீதை திருத்தம் செய்த வழக்கில் திட்டக்குடி வக்கீலுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் அருள்நிதி. இவர் வக்கீலாக உள்ளார். கடந்த 2010- 2011-ம் ஆண்டுகளில் சட்டசபையில் நடந்த நிகழ்ச்சிகளை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பித்தார். அதற்காக ரூ.12 ஆயிரத்து 830 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து வக்கீல் அருள்நிதி ரூ.30 மட்டும் செலுத்திவிட்டு ரூ.12 ஆயிரத்து 830 செலுத்தியதாக ரசீதை திருத்தம் செய்துள்ளார். இதனை சட்டசபை சார்பு செயலாளர் கண்டறிந்து இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி சென்னை டி.ஐ.ஜி.க்கு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கு விசாரணை கடலூர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. ரசீதை திருத்தம் செய்த வக்கீல் அருள் நிதிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

    மதநிந்தனை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பீவியின் வழக்கறிஞரை பாகிஸ்தானை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியதாக கூறியதாக ஐ.நா. மறுத்துள்ளது. #AsiaBibi #UN #LawyerSaifulMulook
    நியூயார்க்:

    பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேறு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

    மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, தெஹ்ரீ-இ-லப்பாயிக் பாகிஸ்தான் (டிஎல்பி) கட்சி போராட்டத்தை திரும்ப பெற்றது. முக்கிய கட்சியான டிஎல்பி போராட்டத்தைக் கைவிட்டதால் பாகிஸ்தானில் இயல்பு நிலை திரும்புகிறது.



    இற்கிடையே ஆசியா பீவி தரப்பில் கோர்ட்டில் ஆஜரான வக்கீல் சைபுல் மாலூக் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி நாட்டை விட்டு வெளியேறினார்.

    பாகிஸ்தானில் இருந்து நெதர்லாந்தின் தி ஹேக் நகருக்கு சென்றடைந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆசியா பீவி விடுதலைக்கு எதிராக போராட்டம் நடந்தபோது, தனக்கு ஐநா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் பாதுகாப்பு அளித்ததாகவும், பின்னர் தனது விருப்பத்திற்கு மாறாக வெளிநாடு செல்லும்படி விமானத்தில் ஏற்றி அனுப்பியதாகவும் கூறினார்.

    இந்த குற்றச்சாட்டை ஐநா செய்தித் தொடர்பாளர் எரி கனேகோ மறுத்துள்ளார். வழக்கறிஞர் சாய்புல் முலூக் கேட்டுக்கொண்டதால் பாகிஸ்தானில் உள்ள ஐநா அலுவலகம் அவருக்கு உதவி செய்ததாகவும், நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தவில்லை என்றும் ஐநா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். #AsiaBibi #UN #LawyerSaifulMulook
    ஜாமீன் பெறுவதற்கு போலி ஆவணங்களை தாக்கல் செய்ததால் வக்கீல், டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    கோவை:

    கோவை காந்திபுரம் சத்தி ரோட்டில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் போதை பொருளை வைத்திருந்ததாக பெங்களூரை சேர்ந்த ஜாய் இமானுவேல், கோவை சாய்பாபா காலனி முகமது சிகாப், குனியமுத்தூர் ஜூல்பிகர் அலி, உக்கடம் முகமது அனாஸ் ஆகியோரை காட்டூர் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரித்த போது பெங்களூரில் இருந்து இந்த போதை பொருட்களை வாங்கி வந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ய கொண்டு வந்தது தெரிய வந்தது.

    கைதான 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு கோவை இன்றியமையா பொருட்கள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட முகமது சிகாப்பிற்கு வலிப்பு நோய் உள்ளதாகவும், அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என கூறி முகமது சிகாப் வக்கீல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இதற்காக மருத்துவ சான்று, திருமண பத்திரிகை ஆகியவையும் தாக்கல் செய்யப்பட்டது. இதன் உண்மை தன்மையை கண்டறிய போலீசாருக்கு நீதிபதி தஞ்சய் பாபா உத்தரவிட்டு இருந்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் ஜாமீன் மனு தாக்கல் செய்த முகமது சிகாப்பிற்கு வலிப்பு நோய் இல்லை என்பதும், அவர் திருமண பத்திரிகை போலியாக அச்சடித்து மனு தாக்கல் செய்து இருப்பதும் தெரிய வந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி தஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலி ஆவணம் தயாரித்து கோர்ட்டை ஏமாற்றும் எண்ணத்துடன் செயல்பட்ட வக்கீல் மற்றும் மருத்துவ சான்றிதழ் வழங்கிய டாக்டர்கள் மீது கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் வழக்கு பதிவு செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எஸ்.பி. சந்திரசேகர் ஆஜராகி வாதாடினார்.
    ×