search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் பாலியல் சம்பவம்: வக்கீலுக்கு காவல் நீட்டிப்பு - பெண் உதவியாளர் ஜாமீனில் விடுதலை
    X

    பெரம்பலூர் பாலியல் சம்பவம்: வக்கீலுக்கு காவல் நீட்டிப்பு - பெண் உதவியாளர் ஜாமீனில் விடுதலை

    பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் போலி ஆடியோ வெளியிட்ட வக்கீலுக்கு காவல் நீட்டித்தும் பெண் உதவியாளருக்கு ஜாமீனில் விடுதலையும் வழங்கப்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் வேலை வாங்கி தருவதாக கூறி, கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட இளம்பெண்களை அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் சிலர், போலி பத்திரிகையாளர் ஒருவர் உதவியுடன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.

    ஆனால் அந்த புகார் தொடர்பாக போலீசார் யாரையும் விசாரிக்காமல், கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி பெரம்பலூர் போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வக்கீல் அருளை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் வக்கீல் அருள் தன்னுடன் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் தொடர்பாக செல்போனில் பேசியதாக வெளியிட்ட போலி ஆடியோ, வேறு ஒரு பெண்ணை வைத்து பேசி பதிவு செய்யப்பட்டதாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாக வக்கீல் அருளின் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த பெரம்பலூர் மாவட்டம், கல்லம்புதூரை சேர்ந்த கலையரசியை கடந்த 2-ந்தேதி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு, வக்கீல் அருளுக்கு 3-ந் தேதி நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. இந்த நிலையில் வக்கீல் அருள் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் பாதிக்கப்பட்ட பெண் பேசியதாக, போலியான செல்போன் ஆடியோ வெளியிட்டதாக 2-வது வழக்காக அருள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    அந்த வழக்கிற்காக சிறையில் இருந்த வக்கீல் அருளை பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பலத்த பாதுகாப்புடன் போலீசார் நேற்று மாலை அழைத்து வந்தனர்.

    பின்னர் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது வக்கீல் அருளை வருகிற 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வக்கீல் அருளை பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 2-வது வழக்கிற்கு ஜாமீன் கேட்டு, வக்கீல் அருள் தரப்பினர் பெரம்பலூர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவின் மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

    இதற்கிடையே போலியான ஆடியோ வெளியிட உடந்தையாக இருந்ததாக கைதான கலையரசி தரப்பினர், அவருக்கு ஜாமீன் கேட்டு பெரம்பலூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவினை விசாரித்த பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன் கலையரசிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    இதையடுத்து கலையரசி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வக்கீல் அருளை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தரப்பில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×