search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India alliance"

    • இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன
    • மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம்.

    மக்களவைத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை.

    வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை.

    இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன

    மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம். அதன் அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக, இந்தியா கூட்டணிக்கே எனது ஆதரவு என 'அயலான்' பட இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்திருந்தார்.

    திண்டுக்கல் மற்றும் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களான சச்சிதானந்தம், சு.வெங்கடேசன் ஆகியோரின் படங்களைப் பதிவிட்டு இந்தியா கூட்டணிக்கே எனது ஆதரவு என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    • திருச்செந்தூர் பகுதியில் நகராட்சி அருகே உள்ள சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்தி அதை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
    • சுங்கச்சாவடிகள் மூடப்படும். 1 லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் வழங்கப்படும்.

    திருச்செந்தூர்:

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை திருச்செந்தூரில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

    ஏழை-எளிய, நடுத்தர மாணவர்களை நுழைவுத் தேர்வு கொண்டு வந்து படிக்க விடாமல் தடுக்கிறார்கள். ஆதிக்க சக்தியை மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். அதை தடுக்க நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறார். இதுவரை வழங்கப்படாத பெண்களுக்கு தேர்தல் முடிந்ததும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுங்கச்சாவடிகள் மூடப்படும். 1 லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் வழங்கப்படும்.

    திருச்செந்தூர் கோவிலில் அரசின் சார்பில் ரூ.100 கோடி, தனியார் பங்களிப்பாக ரூ.200 கோடி என ரூ.300 கோடியில் உலகமே வியக்கும் வகையில் திருப்பதி கோவிலை விட மேலாக சாமி தரிசனம் செய்வதற்கு தரம் உயர்த்தப்பட பெறும் திட்ட வளாகப்பணி நடந்து வருகிறது. இந்த பணியை தந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த பகுதி மக்களுக்காக குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.500 கோடியில் சரி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் தந்துள்ளார். இந்த திட்டம் தேர்தல் முடிந்ததும் தொடங்கப்படும்.

    திருச்செந்தூர் பகுதியில் நகராட்சி அருகே உள்ள சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்தி அதை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நகராட்சி சொத்து வரி குறைக்கப்படும். தூத்துக்குடி எனது 2-வது தாய் வீடு. எனவே அனைத்து நல்ல திட்டங்களை செய்ய எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம் என்று கூறி பணமதிப்பிழப்பு செய்ததை நான் அண்ணாந்து பார்த்தேன்.
    • ஜி.எஸ்.டி.யால் கோவையில் நூற்பாலைகள் பஞ்சாய் பறந்து விட்டது.

    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், கோவையில் முகாமிட்டு கடந்த 3 நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று இரவு அவர் கோவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து ராஜவீதியில் பிரசாரம் செய்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எனக்கு தோல்வி என்றார்கள். கையில் பணமின்றி மக்களின் அன்பை மட்டுமே முதலீடாக வைத்து கிடைத்த வாக்கை நான் தோல்வியாக பார்க்கவில்லை.

    காமராஜருக்கு தோல்வி கிடையாது. அவர் தோற்றாலும் அவரின் ஆட்சியை பின்பற்றுவதாக கூறிய கட்சிகள் ஏராளம். நான் கருணாநிதியிடம் கற்றுக் கொண்டவன். பெரியாரின் சீடன். என்னிடம் தோல்வியை காட்டி பயமுறுத்த முடியாது. மக்கள் தலைநிமிர்ந்து நடமாடும் இந்த ராஜவீதியில் நான் நடந்து இருக்கிறேன். மீண்டும் நடப்பேன்.

    இப்போது நாம் எடுத்து இருக்கும் பாதை நாட்டிற்கானது. கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம் என்று கூறி பணமதிப்பிழப்பு செய்ததை நான் அண்ணாந்து பார்த்தேன். அது மக்கள் தலையில் விழுந்த இடி. 70 கோடி மக்களின் சொத்தை 21 நபர்களின் கையில் கொண்டு சேர்த்தது பாரதிய ஜனதா அரசு. அதை பகிரங்கமாக கேட்டவன் நான்.

    தன் வீட்டை நாட்டுக்கு எழுதிக் கொடுத்த நேரு வாழ்ந்த நாடு இது. தமிழத்துக்கு நீதி கேட்டால் ஏற்கனவே கொடுத்தது பிச்சை என்று கூறுகிறார்கள். ஜி.எஸ்.டி.யால் கோவையில் நூற்பாலைகள் பஞ்சாய் பறந்து விட்டது.

    கடந்த 75 ஆண்டுகளாக நாம் போட்ட உரத்தால் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வரி செலுத்தாத பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு நிதியை அள்ளி கொடுக்குறீர்கள். அங்கும் முன்னேற்றம் இல்லை. அங்கிருந்து இங்கு வேலைக்கு வருகிறார்கள்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செங்கல்லை எடுத்து காட்டினால் உங்களுக்கு கோபம் வருகிறது. மத்திய அரசு ஒவ்வொரு ஊரிலும் செங்கல்லை மட்டும் வைத்து செல்கிறது. அதை உதயநிதி ஸ்டாலின் இன்னொரு கோட்டையை உருவாக்கி விடுவார்.

    பாராளுமன்றத்தில் தமிழனுக்கான குரல் கேட்க வேண்டும். இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். உலகிலேயே சக்தி வாய்ந்த தேர்தல் இந்தியாவில் தற்போது நடக்கின்ற தேர்தல் தான். எந்த காரணத்தை கொண்டும் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து விடக் கூடாது. சனாதனத்தை நாம் அனுமதிக்க கூடாது. திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுமைக்கும் தொடர வேண்டும். சுயமரியாதையை காக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
    • தேர்தலையொட்டி பிரதமர் மோடி 9 முறை தமிழகத்துக்கு வந்து இருக்கிறார்.

    கோவை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கோவை வி.கே.கே.மேனன் சாலையில் நடந்த இந்தியா கூட்டணி கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இதை யாராலும் மாற்ற முடியாது.

    தேர்தலையொட்டி பிரதமர் மோடி 9 முறை தமிழகத்துக்கு வந்து இருக்கிறார். அவர் 9 முறை அல்ல, 100 முறை தமிழகம் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது.

    தமிழகம் வந்த பிரதமர் மோடி, திராவிட இயக்கத்தை அழித்து விடுவேன் என்று பேசி உள்ளார். ஒரு பெரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி பேசுவது அந்த பதவிக்கு அழகல்ல. இந்த திராவிட இயக்கம் ரத்தம் சிந்தி தோன்றியது. ஆதிக்கவாதிகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க தோன்றிய இந்த இயக்கத்தை காப்பதற்கு பலர் தங்களது இன்னுயிர்களை சிந்தி உள்ளனர். இந்த இயக்கத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்.


    திராவிட இயக்கம் என்றால் அண்ணா தொடங்கிய தி.மு.க., எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. தான். இந்த இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. நமது நாட்டில் பிரதமர் என்ற பதவியில் பலர் இருந்துள்ளனர். பாரதிய ஜனதாவைச் சேர்ந்த வாஜ்பாயும் இருந்துள்ளார். அவர் அற்புதமான தலைவர். ஆனால் தற்போது இருக்கும் பிரதமர் மோடி, ஆணவத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட பிரதமரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை.

    நாங்கள் இதுபோன்று எத்தனையோ பேரை பார்த்து விட்டோம். உங்கள் பயமுறுத்தல் எல்லாம் எங்களிடம் பலிக்காது. இங்கு அந்த கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தல் விதிகளை மீறி பேசி வருகிறார். அவர் முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். அவருக்கு விதிமுறைகள் எல்லாம் தெரியாதா?

    தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள காலை உணவுத்திட்டம், கனடா நாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இப்படி பிற மாநிலத்துக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் கடைபிடிக்கும் திட்டமாக இருக்கிறது. கோவை மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள். இது தொழிலாளர்களின் கோட்டை. எனவே நீங்கள் அனைவரும் உதய சூரியனுக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மலைவாழ் மக்களின் வசதிக்காக பஸ் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
    • ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    நாகர்கோவில்:

    இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் காலை விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய கற்றுவா, பத்துகாணி, ஆறுகாணி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

    இந்த பிரசாரத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பினுலால் சிங், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மலைவாழ் மக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் விஜய் வசந்த் கூறியதாவது:-

    மத்தியில் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் பா.ஜனதா அரசை விரட்டியடிக்க நீங்கள் அனைவரும் எங்கள் இருவருக்கும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பழங்குடியின மக்கள் வாழக்கூடிய மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் மீது அங்கு ஆளும் பா.ஜனதா அரசு கலவரங்களை ஏற்படுத்தி தாக்குதல் நடத்தியது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் சொல்ல முடியாத சித்ரவதைகளுக்கு ஆளாகினர். இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து வந்து அதை வீடியோவாக வெளியிட்ட அவல நிலை பா.ஜனதா ஆளுகிற மாநிலத்தில் நடைபெற்றது. நம் நாட்டில் அமைதியும், சமாதானமும், ஒற்றுமையும் நிலவ மக்கள் அனைவரும் அன்புடனும், சந்தோஷத்துடன் வாழ்வதற்கு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக அமர வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் ஜனநாயகமும், அரசியலமைப்புச் சட்டமும் காப்பாற்றப்படும்.

    குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரப்பர் தொழிற்சாலை விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்படும். மலைவாழ் மக்களின் வசதிக்காக பஸ் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எனவே இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உங்கள் விஜய் வசந்த் ஆகிய எனக்கும், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தாரகை கத்பர்ட்டுக்கும் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இன்று (புதன்கிழமை) காலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் அவர் மண்டைக்காடு புதூர், மணலிவிளை, கூட்டுமங்கலம், கல்லத்திவிளை, காட்டுவிளை, நடுவூர்க்கரை, சேரமங்கலம், பரப்பற்று, பெரியவிளை, மணவாளக்குறிச்சி, முட்டம், அம்மாண்டிவிளை, திருநயினார்குறிச்சி, வெள்ளிமலை, வெள்ளிச்சந்தை, ஈத்தங்காடு, மேலமணக்குடி, கொட்டாரம், அஞ்சுகிராமம் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். நாகர்கோவிலில் மாலை அவர் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    • கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல கட்சிகள் பிராந்திய அளவிலான பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அறிக்கை தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • ஜும் மீட்டிங் மூலம் அனைத்து தலைவர்களும் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளார்கள்.

    புதுடெல்லி:

    இந்தியா கூட்டணியில் உள்ள 27 கட்சிகளும் இணைந்து பொதுவான தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் ஏற்கனவே தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.

    காங்கிரசின் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் என்றும் தி.மு.க. அறிக்கையுடன் ஒத்துபோவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.

    பா.ஜனதா இந்தியா முழுவதுக்குமான ஒரே தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. அதே போல் இந்தியா கூட்டணியும் அனைத்து கூட்டணி கட்சிகளும் இணைந்து பொதுவான தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகின்றன.

    தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள், வேலையில்லா திண்டாட்டம், சமூக நலன் ஆகியவற்றை உள்ளடக்கியதாக தயாரிக்கப்படுகிறது.

    கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல கட்சிகள் பிராந்திய அளவிலான பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அறிக்கை தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ஜும் மீட்டிங் மூலம் அனைத்து தலைவர்களும் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளார்கள். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அந்த அறிக்கை வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    • பிரதமர் மோடி இந்தியாவின் 5-6 பெரிய தொழில் அதிபர்களின் கருவியாக இருக்கிறார்.
    • நிலவுக்கு மனிதனை அனுப்ப போகிறோம் என்று அவர் சொல்வார்.

    வயநாடு:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடுகிறார். அவர் இன்று ரோடு ஷோ சென்று ஆதரவு திரட்டினார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-

    இந்திய அரசியலமைப்பை அழிக்கவும், இந்திய அரசியல் அமைப்பை மாற்றவும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா முயல்கின்றன. இந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு பெரிய பிரச்சனை இதுதான். காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற முயல்கின்றன.


    பிரதமர் மோடி இந்தியாவின் 5-6 பெரிய தொழில் அதிபர்களின் கருவியாக இருக்கிறார். நாட்டின் உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதும், இந்தியாவில் உள்ள பணக்கார தொழில் அதிபர்களை பாதுகாப்பதும், அவர்களின் வங்கி கடனை மன்னிப்பதும் மோடியின் வேலை. நாட்டில் உள்ள 20-25 பேருக்கு மோடி ரூ.16 லட்சம் கோடி வழங்கி உள்ளார்.

    நிலவுக்கு மனிதனை அனுப்ப போகிறோம் என்று அவர் சொல்வார். ஆனால் வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை பற்றி எல்லாம் பிரதமர் மோடி பேசுவதில்லை.

    தேர்தல் பத்திரங்கள் பெற்ற விவகாரம் பிரதமர் மோடியால் நடத்தப்பட்ட மிரட்டி பணம் பறிக்கும் செயலாகும்.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

    • பாராளுமன்ற தேர்தல் சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையே நடைபெறும் அறப்போர்.
    • தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது.

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

    கேள்வி: ஒரு இடம் கூட கொடுக்காத போதும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வது ஏன்?

    பதில்: இந்த பாராளுமன்ற தேர்தல் சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையே நடைபெறும் அறப்போர். எங்களுக்கு ஒரு சீட் கூட ஒதுக்காதது வருத்தம் தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதைவிட மிகப்பெரிய வலி என்னவென்றால் 10 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் ஜனநாயகத்தின் விழுமியங்கள், அரசியல் சாசனத்தின் அடிப்படைகள் மீறப்பட்டு பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்வுரிமைகள் பாழ்படுத்தப்பட்டுள்ளன. தனிப்பட்ட பாதிப்பை விட நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற பொது நோக்கத்துக்காக இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

    கேள்வி: சிறுபான்மையினருக்கு அரணாக இருப்போம் என்று கூறும் உங்கள் கூட்டணி கட்சிகள் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லையே?

    பதில்: எங்கள் கூட்டணியில் முஸ்லிம் லீக் சார்பாக ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுகிறார். நிச்சயமாக இதைவிட அதிகமாக தர வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கிறோம். அடுத்த முறை அதை எங்கள் கூட்டணி கட்சிகள் நிவர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    கேள்வி: பா.ஜனதாவுடனான உறவை அ.தி.மு.க. துண்டித்துள்ளதால் சிறுபான்மையினரின் ஓட்டுகள் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளதா?

    பதில்: நிச்சயமாக பிரியாது. காரணம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது அ.தி.மு.க. அது குறித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக அன்றைய எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்ட போது அன்றைய முதலமைச்சர் மறுத்து விட்டார். ஆட்சி மாறிய பிறகு கூட தி.மு.க. தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்த போது வெளிநடப்பு செய்து விட்டது அ.தி.மு.க.

    அது மட்டுமல்லாமல் கொரோனா காலக்கட்டத்தில் இங்கு வந்த வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் சகோதரர்களை கொரோனாவை பரப்பினார்கள் என்பதற்காக சிறையில் அடைத்தது அ.தி.மு.க.அரசு. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குகளை போட்டது அ.தி.மு.க.அரசு. இப்படியாக பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம். எனவே பா.ஜனதாவுடன் உறவு இல்லை என்று அ.தி.மு.க. சொல்வது தேர்தல், அரசியல் தந்திரமாகும். ஆகவே நிச்சயமாக சிறுபான்மையினர் வாக்குகள் பிரியாது. சிறுபான்மை மக்களின் நலனை காக்க கூடிய கூட்டணி இந்தியா கூட்டணியாகும். ஒட்டு மொத்தமாக சிறுபான்மையினர் இந்தியா கூட்டணிக்கே வாக்களிப்பார்கள்.


    கேள்வி:- பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து அடிக்கடி பிரசாரம் மேற்கொள்வது ஏன்?

    பதில்:-தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு பெரிய அலை வீசுகிறது. மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதெல்லாம் மோடி தமிழ்நாட்டை எட்டி கூட பார்க்கவில்லை. தமிழ்நாடு அரசு கேட்ட நிவாரண தொகைகளை தருவதற்கு எல்லாம் அவருக்கு மனம் வரவில்லை.இப்போது தேர்தலில் எப்படியாவது பா.ஜ.க .வை ஒரு இடத்திலாவது வெல்ல வைக்க முடியுமா என்பதற்கு அவர் பலமுறை வருகிறார். ஆனால் நிச்சயமாக தமிழ்நாட்டில் பா.ஜனதா ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது.

    கேள்வி:- இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. எழுச்சி பெற வாய்ப்பு உள்ளதா?

    பதில்:-நிச்சயமாக எழுச்சி பெற வாய்ப்பு இல்லை. காரணம் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது. முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் இந்த கூட்டணியில் தான் இருக்கின்றன. எனவே தமிழ்நாட்டில் பா.ஜனதா ஒரு இடத்தில் கூட வெல்வது கடினம்.

    கேள்வி:- இந்தியா முழுவதிலும் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியா கூட்டணி வலுவாக இல்லையே?

    பதில்:- நிச்சயமாக அது ஒரு தவறான கருத்து. இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல வட இந்தியாவிலும் வலுவாக இருக்கிறது. இன்றைக்கு வரக் கூடிய பல்வேறு செய்திகள் வட இந்தியாவிலும் மோடிக்கு எதிரான எதிர்ப்பு அலை வீசுகிறது. இந்தியா கூட்டணிக்கு ஆதரவான ஒரு அலை வீசுகிறது என்பதுதான் யதார்த்தமான உண்மையாக இருக்கின்றது. எனவே இந்தியா கூட்டணி வட இந்தியாவிலும் சிறப்பான வெற்றியை பெறும்.

    கேள்வி:- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி உங்கள் கருத்து?

    பதில்:-மிக சிறப்பான ஒரு தேர்தல் அறிக்கையாகும். பலதரப்பட்ட மக்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றக்கூடிய தேர்தல் அறிக்கை. மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ரூ. 1 லட்சம் தரப்படும், பட்டதாரிகள், பட்டய படிப்பு படித்த மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக ரூ. 1 லட்சம் தரப்படும் உள்ளிட்ட மிகவும் அற்புதமான அறிவிப்புகள். இதே போல மோடி அரசு நிறுத்திய கல்வி உதவித் தொகை எல்லாம் வழங்கப்படும். இப்படியான சிறந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. உண்மையிலேயே இந்த தேர்தலின் கதாநாயகனாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்து இருக்கிறது.

    பா.ஜனதா கடந்த 2 தேர்தல்களில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்றார்கள். இது பற்றி கேட்ட போது தேர்தல் நேரத்தில் நாங்கள் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா? அது தேர்தலுக்காக சொல்லப்பட்டது என்றனர்.

    கேள்வி:-ராகுல் காந்தி தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டுமே பிரசாரம் செய்துள்ளாரே?

    பதில்:-ஒருமுறை தான் வந்தார். ஆனால் அந்த ஒரு முறையில் அவர் நடந்து கொண்ட விதம் குறிப்பாக கோவையில் வாகனத்தில் போகும் போது இறங்கி இனிப்பு கடைக்கு சென்று இனிப்பை வாங்கி அதற்குரிய தொகையை கொடுத்து விட்டு தேர்தல் பரப்புரை மேடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எனது மூத்த சகோதரர் என்று சொல்லி அவரிடம் அந்த சுவீட்டை கொடுத்த அந்த காட்சி மூலமாக தமிழக மக்களுடைய உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டு விட்டார் ராகுல்காந்தி. நிச்சயமாக அவருடைய நடத்தை, பேச்சு தமிழ்நாட்டு மக்களை கவர்ந்து இருக்கிறது. ராகுல்காந்தி மிக சிறப்பான தேர்தல் பரப்புரையை செய்து வருகிறார்.

    கேள்வி:-2019 தேர்தலுக்கும், தற்போதைய தேர்தலுக்கும் என்ன மாற்றம் இருக்கிறது?

    பதில்:-2019 தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜனதா கூட்டணியில் இருந்தது. தற்போது அ.தி.மு.க. தனியாகவும், பா.ஜ.க. தனியாகவும் போட்டியிடுகின்றன. எனவே தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் எல்லாம் 3 முனைகளில் பிரிகிறது. இதனால் இந்த தேர்தலில் தி.மு.க. மிக எளிதாக 40 தொகுதிகளில் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் வெற்றி பெறும்.

    கேள்வி:- பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ள உங்களுக்கு கள நிலவரம் என்ன சொல்கிறது?

    பதில்:-நான் செல்லக் கூடிய இடங்களில் எல்லாம் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு அமோக ஆதரவு இருக்கிறது. எனக்கும் உற்சாகமான வரவேற்பை மக்கள் தருகிறார்கள். மக்களின் ஆதரவு அலை இந்தியா கூட்டணி பக்கம் வீசுகிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக இந்த பரப்புரை அமைந்துள்ளது.

    இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

    • ஒவ்வொரு துறையிலும் இந்தியா முன்னேறி உள்ளது என்றால் அதற்கு அடிப்படை காரணமாக தமிழகம் உள்ளது.
    • நம்மிடம் இருந்து பணத்தை வாங்கி அதானிக்கும், அம்பானிக்கும் வழங்கும் முறைதான் வழிப்பறியாகும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் தொகுதி சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் பேசியதாவது:-

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடினார்கள். தப்பித் தவறி மோடிக்கு வாக்களித்தால் இனி ரம்ஜான் கொண்டாட முடியாது. அடுத்த தலைமுறையினர் தேர்தலை பார்க்கவே முடியாது. எனவே பா.ஜ.க.வுக்கு வாக்களித்து இன்னொரு ஹிட்லரை உருவாக்கிட வேண்டாம்.

    சமத்துவம் பெருக சமூக நீதி மண்ணில் இருக்க ஜாதி மதங்களை கடந்து மக்கள் வாழ்க்கை முன்னேற வேண்டுமானால் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். பிரதமர் மோடி நெல்லையில் நடந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவை நனவாக்குவேன் என்றார். ஜெயலலிதாவின் இலக்கு மோடியா, லேடியா என்பதுதான். மோடியை தமிழகத்தில் இருந்து அகற்றுவதுதான் இலக்காக கொண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    ஜி.எஸ்.டி. என்பது வரி இல்லை. வழிப்பறி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்த அ.தி.மு.க.வுடன் எஸ்.டி.பி.ஐ. கூட்டணி வைத்துள்ளது. இது உங்களுக்கு உறுத்தலாக இல்லையா?

    ஒவ்வொரு துறையிலும் இந்தியா முன்னேறி உள்ளது என்றால் அதற்கு அடிப்படை காரணமாக தமிழகம் உள்ளது. மக்கள் மீது வரியை சுமத்தும் மத்திய அரசு வங்கி கடன்களில் வராக்கடன் என ரூ.66 லட்சம் கோடியை அறிவித்துள்ளது. இதில் ரூ.14 லட்சம் கோடியை அதானி, அம்பானி மற்றும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்துள்ளது.

    நம்மிடம் இருந்து பணத்தை வாங்கி அதானிக்கும், அம்பானிக்கும் வழங்கும் முறைதான் வழிப்பறியாகும். மொத்த உற்பத்தியில் தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது. அதே நேரம் தனி நபர் வருமானத்தில் 121-வது இடத்தில் உள்ளது. இந்தியா பணக்கார நாடாக இருந்த போதிலும், இந்திய மக்கள் ஏழைகளாக உள்ளனர். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தனி நபர் வருமானம் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டம் பகுதியில் விஜய் வசந்த் பிரசாரத்தை தொடங்கினார்.
    • வருகிற பாராளுமன்ற தேர்தல் மிக, மிக முக்கியமான தேர்தல்.

    நாகர்கோவில்:

    இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் தினமும் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அவரை மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர்த்தூவியும் உற்சாகமாக வரவேற்கிறார்கள்.

    குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டம் பகுதியில் விஜய் வசந்த் பிரசாரத்தை தொடங்கினார். இரணியல், திங்கள் நகர், ரீத்தாபுரம், குறும்பனை, வாணியக்குடி, கோடி முனை, குளச்சல் கடற்கரை, கூத்தவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை திறந்த வாகனத்தில் சென்று சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பிரின்ஸ் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.டி.உதயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து குருந்தங்கோடு, கண்டன்விளை, பேயன்குழி, வில்லுக்குறி, பள்ளம், பரசேரி, ஆளூர், சுங்கான் கடை, பெருவிளை, காரங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மிக, மிக முக்கியமான தேர்தல். பா.ஜனதா அரசை அகற்ற வேண்டிய தேர்தல். இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். மக்களாட்சி மலர வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அதற்கு நீங்கள் எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என சொன்னார்கள். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவோம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை 10 பைசா கூட செலுத்தவில்லை. மாறாக, ஏழை மக்களை வங்கி கணக்கை தொடங்க வைத்து மினிமம் பேலன்ஸ் இல்லை என்ற காரணத்தைக் காட்டி மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளனர். பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்து மக்கள் விரோத ஆட்சியை நடத்துகின்றனர்.

    • காங்கிரஸ் கட்சியினரோ கமல்ஹாசனை கண்டு கொள்ளவில்லை.
    • ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசா ரம் செய்து வருகிறார்.

    தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் மூலமாக ஒன்று அல்லது இரண்டு இடங்களை நிச்சயம் பெற்றுவிடலாம் என்றே மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பி இருந்தனர்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியினரோ கமல்ஹாசனை கண்டு கொள்ளவில்லை. தங்களுக்கு தேவையான தொகுதிகளை தி.மு.க.விடம் கேட்டுப் பெறுவதில் உறுதியாக இருந்த காங்கிரஸ் கட்சியினர் கமல்ஹாசனுக்கு எந்த விதத்திலும் கை கொடுக்காமல் ஒதுங்கிவிட்டனர்.

    இதனால் காங்கிரசை நம்பி காத்திருந்த கமல்ஹாசனை யாருமே பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் கடைசி நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போய் சந்தித்தார்.

    அப்போது போட்டியிட தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் மேல்சபை எம்.பி. பதவி மட்டுமே தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது. இருப்பினும் கமல்ஹாசன் மனம் தளராமல் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்தார். நெல்லை மற்றும் கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார்.


    கோவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ராகுலுடன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டி இருப்பதால் என்னால் ராகுல் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கூறி கமல்ஹாசன் புறக்கணித்துள்ளார்.

    ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். அவரது செயல்பாடுகளை கமல்ஹாசன் பாராட்டியும் பேசி வந்துள்ளார். டெல்லியில் ராகுலின் யாத்திரையில் பங்கேற்று பேசியுள்ள அவர் ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரசை ஆதரித்து பிரசாரமும் மேற்கொண்டார்.

    ஆனால் இதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் காங்கிரஸ் கட்சியினர் பாராளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையின் போது நடந்து கொண்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறியுள்ளனர்.

    இப்படி தேர்தல் நேரத்தில் யாரோ ஒருவர் போல மக்கள் நீதி மய்யம் கட்சியை தமிழக காங்கிரசார் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதே, கமல்ஹாசனின் கோபத்துக்கு காரணமாக அமைந்துவிட்டதாகவும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இப்படி காங்கிரஸ் கட்சி மீது கமல் கொண்டுள்ள கோபம் இன்னும் அடங்காமல் இருப்பதாலேயே ராகுல் பிரசாரக் கூட்டத்தை கமல் ஹாசன் புறக்கணித்துள்ளதாக அரசியல் நிபுணர்களும் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

    ராகுலின் தமிழக சுற்றுப் பயணம் பற்றி கமல்ஹாசன் எந்தவித கருத்துக்களையும் பதிவிடாமல் மவுனம் காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    • நாட்டில் உள்ள மக்களின் வறுமை நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
    • வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை 200 ரூபாய்க்கு விற்ற அவலம் பா.ஜனதா ஆட்சியில் தான் நிகழ்ந்துள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். அவர் நாள்தோறும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திக்கணங்கோடு சந்திப்பில் இருந்து நேற்று அவர் திறந்த ஜீப்பில் பிரசாரத்தை தொடங்கினார். இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி மற்றும் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பிரசாரத்தின் போது வேட்பாளர் விஜய் வசந்த் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:-

    கடந்த பத்தாண்டுகளாக பிரதமர் மோடி மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குறுதிகளை அளித்து வாயால் வடை சுட்டு வருகிறார். (அதனை வெளிப்படுத்தும் விதமாக வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் வடையை பொதுமக்களிடம் காண்பித்து, இதுதான் மோடி சுட்ட வடை என்றனர்). நாட்டில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் நாள் தான் வருகின்ற 19-ந் தேதி நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல்.

    ஏழை மக்களை வஞ்சித்து பணக்கார முதலாளிகளான அதானியையும், அம்பானியையும் வாழ வைக்க கார்ப்பரேட்டுக்கு துணை போகும் பா.ஜனதா அரசின் பத்தாண்டு கால ஆட்சியில் மக்கள் நாளுக்கு நாள் பல்வேறு வேதனையை அனுபவித்து வருகின்றனர். ஏழை மாணவர்களின் கல்விக் கடனையும், விவசாயிகளின் விவசாய கடனையும் ரத்து செய்ய மறுத்த பா.ஜனதா அரசு, அதானிக்கும்- அம்பானிக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்து அவர்களை மேலும், மேலும் பணக்காரர்களாக மாற்றி வருகிறது.

    ஆனால் நாட்டில் உள்ள மக்களின் வறுமை நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்கள் உணவுக்காக பயன்படுத்தும் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை 200 ரூபாய்க்கு விற்ற அவலம் பா.ஜனதா ஆட்சியில் தான் நிகழ்ந்துள்ளது.

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி மக்கள் அனைவரும் அன்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நமது இந்தியா கூட்டணிக்கு உங்கள் பேராதரவை தர வேண்டும். குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காகவும், நமது மண்ணில் ஒற்றுமையாக வாழ நினைக்கும் மக்களைப் பிரித்தாள நினைக்கும் ஏமாற்றுவாதிகளை விரட்டி அடிப்பதற்கும் நீங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×