என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • டிக்டாக்கில் 67 என்ற ஹேஷ்டேக் 2 மில்லியன் பதிவுகளை தாண்டியது
    • இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தையாக இருக்கக்கூடும்

    "உனக்கு ஆற தெரியுமா? ஆறு(ம்) தெரியாது, ஏழு தெரியாது. 8 தெரியும், 9 தெரியும், 10 தெரியும்" என்பது வடிவேலு காமெடி. ஆனால் இப்போது அது காமெடி இல்லை. அதுதான் உண்மை. உங்களுக்கு புரியுமாறு சொன்னால், கஜென் ஆல்பா தலைமுறையினர் உங்களிடம் வந்து ஆறு, ஏழு என்று சொன்னால் உங்களுக்கு புரியாது. ஏன் எனக்கும் தெரியாது, புரியாது. 2013 மற்றும் 2024 வரையிலான காலகட்டத்திற்குள் பிறந்தவர்கள்தான் ஜென் ஆல்பா. ஆமாம் இப்போது எதற்கு இந்த ஆராய்ச்சி. இருக்கு, காரணம் இருக்கு. 

    2025ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக Dictionary.com, '67' என்ற எண்ணை தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் எண்ணாக அல்ல. குறியீடாக. காரணம் இந்த ஆண்டு இந்த எழுத்துதான் இணையத்தில் அதிகம் டிரெண்டானது. டிக்டாக்கில் 67 என்ற ஹேஷ்டேக் 2 மில்லியன் பதிவுகளை தாண்டியது. ஆனால் இது இந்த அளவு டிரெண்டானது எப்படி?

    கஜென் ஆல்பா தலைமுறையினரால் பயன்படுத்தப்படும் கோட்-வேர்ட் ஆக கூட இந்த 67 என்ற நம்பர் இருக்கலாம். அல்லது ரகசிய குறியீடாகவும் இருக்கலாம். உண்மை அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதில் குறிப்பிடவேண்டிய மற்றொரு விஷயம் இதனை 'அறுபத்தி ஏழு' என உச்சரிக்கக்கூடாது. மாறாக 'சிக்ஸ்-செவன்' என்றுதான் கூறவேண்டும். 


    'அறுபத்தி ஏழு' என உச்சரிக்கக்கூடாது. மாறாக 'சிக்ஸ்-செவன்' என்றுதான் கூறவேண்டும்

    ஆனால் எப்படி புழக்கத்தில் வந்தது?

    இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க ராப் பாடகர் ஸ்க்ரில்லாவின் பாடலிலிருந்து தொடங்குகிறது. அதாவது ஸ்க்ரில்லாவின் "டூட் டூட் (6 7)" என்ற பாடலில் இருந்து இந்த நம்பர் பயன்பாடு தொடங்கியதாக நம்பப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஸ்கிரில்லாவிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு எந்த உள்நோக்கத்தோடும், அர்த்தம் கொண்டதாக நான் அதை வைக்கவில்லை என கூறுகிறார். எதற்கு டிரெண்ட் செய்யப்படுகிறது என எனக்கும் தெரியவில்லை எனக்கூறுகிறார்.

    ஜூன் 2025 முதல் 67க்கான தேடல்கள் ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், மற்ற இரண்டு இலக்க எண்களின் தேடல்களை விட இந்த எண்களின் தேடல்தான் அதிகமாக இருப்பதாகவும் Dictionary.com குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் உள்ள கல்வியாளர்கள் "67" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவே தொடங்கியுள்ளனர். காரணம் அதை எதற்காக இளைய தலைமுறையினர் பயன்படுத்துகின்றனர் என தெரியவில்லை. மேலும் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தையாக இருக்கக்கூடும் எனவும் அஞ்சுகின்றனர். 

    ஜென் ஆல்பா தலைமுறையினரின் இந்த வார்த்தை பயன்பாடு ஆசிரியர்களுக்கு புரியவில்லை, பெற்றோர்களுக்கும் புரியவில்லை. இந்த மோகம் ஒரு பெரிய கவனச்சிதறலாக மாறிவிட்டதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். சில பள்ளிகள், வகுப்பறையில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியாக சிக்கிய மாணவர்களுக்கு மதிப்பெண் குறைப்பு முதல் எழுத்துப்பூர்வ பணிகள் என தண்டனைகளும் கொடுத்துள்ளனர். நிலைமை இப்படி இருக்க இதனை இந்தாண்டின் சிறந்த வார்த்தையாக Dictionary.com தேர்ந்தெடுத்துள்ளது.


    "67" - அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்

    காரணம் என்ன?

    "67" என்பது அதன் அர்த்தத்திற்காக அல்ல, மாறாக அதன் அர்த்தமற்ற தன்மைக்காகவே தனித்து நின்றது. இணையம் என்னவாக மாறிவிட்டது என்பதற்கான சரியான ஒரு உதாரணம் இது. இருப்பினும் அதன் பயன்பாட்டர்களுக்கு இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. 

    இறுதியாக, இவ்வளவு பேசியும் அதன் அர்த்தம் என்னவென்று சொல்லவில்லை என நீங்கள் நினைக்கலாம். "ஏ சார் இதை மொதலயே சொல்லக்கூடாதா? சொல்லிருந்தா, அப்படியே தெரியாதுனு சொல்லிருப்பல நானு" என்ற வடிவேலுவின் விடைதான் எனது பதிலும். இருப்பினும் உங்களுக்காக ஒரு பதில் மட்டும் இருக்கிறது.

    குறுகிய பதில்: உண்மையில் யாருக்கும் தெரியாது. - அதுதான் இதில் மிக முக்கியமானது. (அதுல ஒன்னும் இல்ல கீழ போட்ரு)

    • தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின.
    • தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் படிவங்களை சமர்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்று வருகின்றன. 1.1.2026 தேதியில் 18 வயது பூர்த்தியடைபவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.

    தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின. ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கினர். அந்த படிவங்களை பூர்த்தி செய்ததும் அவற்றை வாங்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.

    இந்தப் பணிகள் இன்று (11-ந்தேதி) முடிவடையும் நிலையில், SIR படிவங்களை சமர்பிக்க மேலும் 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் படிவங்களை சமர்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி வரை படிவங்களை தரலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    • 2025-ல் டென்னிஸ் போட்டிகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன.
    • ஜோகோவிச், மெட்வதெவ் மற்றும் ரூப்லெவ் ஆகியோர் போட்டிகளின் போது விரக்தியால் தங்கள் ராக்கெட்டுகளை உடைத்துள்ளனர்

    2025-ல் டென்னிஸ் போட்டிகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. இதில் முக்கியமாக ஜோகோவிச், டேனியல் மெட்வதெவ் மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோர் போட்டிகளின் போது விரக்தியால் தங்கள் ராக்கெட்டுகளை உடைத்துள்ளனர். அந்த சம்பவம் இந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவங்களை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.

    யுஎஸ் ஓபன் 2025:

    இந்த தொடரின் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், ரஷ்ய வீரர் டேனியல் மெட்வதெவ் (Daniil Medvedev) பிரெஞ்ச் வீரர் பெஞ்சமின் போன்சி (Benjamin Bonzi) ஆகியோ மோதினார். இந்த போட்டி லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 25-ந் தேதி நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் போன்சி 6-3, 7-5, 6-7(5), 0-6, 6-4 என்ற கணக்கில் வென்றார்.

    இந்த போட்டியின் மூன்றாவது செட்டில், போன்சி போட்டியை வெல்லும் நிலையில் (5-4, 40-30 – match point) சர்வ் செய்யும் போது, அவரது முதல் சர்வ் ஃபால்ட் (fault) ஆனது. அப்போது, ஒரு போட்டோகிராஃபர் தவறுதலாக கோர்ட்டில் நடந்து போட்டோகிராஃபர் பிட் (pit) இல் சென்றார், இது போட்டியை சிறிது நேரம் தடை செய்தது.

    நடுவர் கிரெக் ஆலன்ஸ்வொர்த் (Greg Allensworth), வெளியாளர் தலையீடு (outside interference) காரணமாக போன்சிக்கு மீண்டும் முதல் சர்வ் (second first serve) அளித்தார், இது USTA விதிகளின்படி சரியான முடிவு.

    இந்த முடிவால் கோபமடைந்த மெட்வெடெவ், நடுவருண்டன் வாக்குவாதம் செய்தார். அவர் நடுவரை "நீங்கள் ஒரு ஆணா?" என்று கேட்டு கிண்டல் செய்தார். மற்றும் ரசிகர்களை தூண்டி boo செய்ய வைக்க கை சைகைகள் செய்தார். மைக்ரோஃபோனில் பேசி, "அவர் வீட்டுக்கு செல்ல விரும்புகிறார், நண்பர்களே. அவர் இங்கு இருக்க விரும்பவில்லை. அவர் போட்டிக்கு பணம் பெறுகிறார் என்று நடுவரை குற்றம்சாட்டினார்.

    இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது, அவர்கள் boo, விசில், மற்றும் சத்தமிட்டனர், இது சுமார் 5-6 நிமிடங்கள் தாமதத்தை ஏற்படுத்தியது. போன்சி பல முறை சர்வ் செய்ய முயன்றார், ஆனால் சத்தம் காரணமாக முடியவில்லை.

    மெட்வெடெவ் பின்னர் ரசிகர்களை அமைதிப்படுத்த முயன்றார், அவர்களுக்கு ஹார்ட் சிம்பல் காட்டினார். போன்சி இந்த சத்தத்தை "மிக அதிகமானது" என்று விவரித்தார், மேலும் இது போட்டியில் கவனம் செலுத்துவதை கடினமாக்கியது என்று கூறினார்.

    போட்டோகிராஃபரின் கிரெடென்ஷியல் ரத்து செய்யப்பட்டது. மெட்வெடெவ் ரசிகர்களின் ஆக்ரோஷமான சத்தத்தால் போட்டியை விட்டு வெளியேறவில்லை (walk out) அல்லது முன்கூட்டியே விட்டு செல்லவில்லை. அவர் இந்த சம்பவத்துக்குப் பிறகு போட்டியைத் தொடர்ந்து விளையாடினார், மூன்றாவது மற்றும் நான்காவது செட்களை வென்றார், ஆனால் ஐந்தாவது செட்டில் தோற்றார்.

    போட்டி முடிந்த பிறகு, கோபத்தில் தனது ராக்கெட்டை அடித்து உடைத்தார். இந்த நடத்தைக்காக அவருக்கு மொத்தம் $42,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் டென்னிஸ் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

    தாய்லாந்தின் காசிடிட் சாம்ரெஜுக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தின் போது மெட்வெடேவ் தனது ராக்கெட்டால் நெட் கேமராவை அடித்து நொறுக்கினார். இந்தச் சம்பவத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    ஜெனீவா ஓபன் 2025:

    2025 ஜெனீவா ஓபன் (Geneva Open) டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னாள் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (Novak Djokovic) தனது 38வது பிறந்தநாளான மே 22 அன்று, இத்தாலிய வீரர் மேட்டியோ அர்னால்டி (Matteo Arnaldi) உடன் நடந்த இரண்டாவது சுற்று போட்டியில் கோபத்தில் தனது ராக்கெட்டை உடைத்தார். இது டென்னிஸ் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்தது, ஏனெனில் ஜோகோவிச் பொதுவாக அமைதியான வீரராக அறியப்படுகிறார், ஆனால் அவ்வப்போது கோப தருணங்கள் காட்டியுள்ளார்.

    அந்த வகையில் ஜெனீவா ஓபன் ஒரு ATP 250 தொடர் போட்டி, களிமண் (clay) மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் செட்டை 6-7(6) என்று இழந்த பிறகு, இரண்டாவது செட்டின் மூன்றாவது கேமில் அர்னால்டி ஜோகோவிச்சின் சர்வை பிரேக் செய்தார். இதனால் கோபமடைந்த ஜோகோவிச், கோர்ட்டில் தனது ராக்கெட்டை தரையில் வீசி உடைத்தார். இது ரசிகர்களிடம் பூ (boo) சத்தத்தை ஏற்படுத்தியது, மற்றும் ஜோகோவிச் அம்பயரிடம் வாக்குவாதம் செய்தார்.

    போட்டியின் போது ஜோகோவிச் ஒரு சிறிய காயத்தையும் சந்தித்தார் ஆனால் அதை சமாளித்து விளையாடினார். ஜோகோவிச் இந்த சம்பவத்துக்குப் பிறகு திரும்பி வந்து, போட்டியை 6-7(6), 6-3, 7-6(2) என்ற கணக்கில் வென்றார். போட்டிக்குப் பிறகு, ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார். பின்னர் ராக்கெட்டை உடைத்தது எனக்கு உதவியது போல் தோன்றுகிறது, ஏனெனில் அதன்பிறகு நான் சிறப்பாக விளையாடினேன் எனவும் கூறினார்.

    இந்தியன் வெல்ஸ் 2025:

    2025 இந்தியன் வெல்ஸ் (BNP Paribas Open) போட்டிக்கு தயாராகும் போது, ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் (Andrey Rublev) தனது பயிற்சி அமர்வில் கோபத்தில் ராக்கெட்டை உடைத்தார். இது மார்ச் 8, 2025 அன்று நடந்தது, அவர் அர்ஜென்டினா வீரர் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோ (Francisco Cerundolo) உடன் பயிற்சி செய்து கொண்டிருந்த போது ரூப்லெவ் ஒரு தவறுக்குப் பிறகு கோபமடைந்து ராக்கெட்டை தரையில் வீசி உடைத்தார், இது அவரது கோப பிரச்சினைகளின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

    இதற்கு முன்பு, செருண்டோலோவுடன் போட்டியில் ராக்கெட்டை முழங்காலில் அடித்து ரத்தம் வரவழைத்த சம்பவம் உண்டு, இது இந்த பயிற்சியுடன் தொடர்புடையது. இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் வைரலானது.

    • நவீன நெல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு அருகே நடுவூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் ரூ.170.22 கோடி மதிப்பில் மேற்கூரையுடன் கான்கிரீட் சிமெண்ட் தளம் அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    இதனை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இங்கு கட்டப்பட உள்ள சேமிப்பு கிடங்கில் 1 லட்சம் நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்படும். தமிழக மக்களை வென்றெடுக்க முடியாத விஜய், புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்று கூறுகிறார்.

    த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்யின் செயல்பாடு கூரை மீது ஏறி கோழி பிடிக்க தெரியாதவர் வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டுவார் என்பது போல உள்ளது.

    அவர் முதலில் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கட்டும். அதன் பிறகு புதுச்சேரி போகட்டும். ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய் தான்.

    தொடர் மழையால் டெல்டாவில் எந்தெந்த பகுதிகளில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.

    பயிர் பாதிப்பிற்கு ஏற்ப விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்கான வழிவகைகளில் நாங்கள் முயற்சி செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீ மளமளவென்று பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டது. தீ மளமளவென்று பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

    அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீ விபத்தால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள்.

    ஆனால் மார்க்கெட் கட்டிடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்தது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    • 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
    • கடனை திருப்பி செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

    'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

    இந்த படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன. இப்படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

    இந்நிலையில், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

    கடனாக பெற்ற ரூ.21 கோடியை ஞானவேல் ராஜா திருப்பிச் செல்லும் வரை வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், வா வாத்தியார் திரைப்படத்தை அனைத்து ஓடிடி தளங்களிலும் வெளியிட அனுமதி இல்லை.

    திவாலான தொழிலதிபர் அர்ஜூன்லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், நாளை இப்படம் வெளியாக வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    • உயர்த்தப்பட்ட வரி ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
    • 2024 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் 11.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை மேற்கொண்டன.

    அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கும் முடிவுக்கு மெக்சிகோவின் செனட் ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்தியாவைத் தவிர, சீனா உட்பட பல ஆசிய நாடுகளும் இந்தப் பட்டியலில் உள்ளன. உயர்த்தப்பட்ட வரி ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.

    வாகனங்கள், வாகன பாகங்கள், ஆடைகள், பிளாஸ்டிக், எஃகு போன்றவற்றின் மீதான இறக்குமதி வரிகள் 50 சதவீதம் அதிகரிக்க உள்ளது. இந்த வரிகள் சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளை அதிகம் பாதிக்கும்.

    உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் அடுத்த ஆண்டு கூடுதலாக 33,910 கோடி டாலர் வருவாயை ஈட்டும் நோக்கில் இந்த வரி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    50 சதவீத வரி இந்தியா - மெக்சிகோ இடையிலான வர்த்தக உறவுகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் 11.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை மேற்கொண்டன.

    அதாவது 2024 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து மெக்சிகோவிற்கு ஏற்றுமதி 8.9 பில்லியன் டாலர்களாக இருந்தது. அதே நேரத்தில் இந்தியாவிற்கான இறக்குமதி 2.8 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்தியா மெக்சிகோவின் ஏற்றுமதியாளர்களில் ஒன்பதாவது பெரிய நாடாகும்.

    • எதிரிகளுக்கு எதிரான வலிமையான பரப்புரையை முன்னெடுக்க வேண்டும்.
    • குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயே முடிவெடுக்க தீர்மானம்.

    தவெக மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், தமிழக வெறறிக்கழகம் சார்பில் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டணி குறித்த இறுதி முடிவுகளை எடுக்க தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க, மக்களை காக்க தவெக சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும் என தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எதிரிகளுக்கு எதிரான வலிமையான பரப்புரையை முன்னெடுக்க வேண்டும் எனவும், அவதூறு பரப்பும் எதிரிகளின் அறைக்கூவல் பொய்யுரைகளை தோலுரித்து எதிரிகளை தோற்கடிக்க வலிமையான பரப்புரை மேற்கொள்ள தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • திருப்பரங்குன்றம் மலையின் மீது சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது.
    • இந்துத்துவ அமைப்பினர் பிரச்சனை செய்ய தொடங்கியுள்ளனர்.

    திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகன் கோயிலும், மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. தர்காவும், கோயிலும் அருகருகே அமைந்துள்ளதை வைத்து இந்துத்துவ அமைப்பினர் பிரச்சனை செய்ய தொடங்கியுள்ளனர்.

    அதிலும் சமீபத்தில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். ஜிவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு இன்னும் பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. அவரை இம்பீச்மெண்ட் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதமும் வழங்கியுள்ளனர்.

    இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது புரளி என்று தெரியவந்தது.

    இந்நிலையில், மீண்டும் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தர்காவில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்று தெரிய வந்தது

    • குழந்தைகள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • கடினமான சூழ்நிலைகளில் மீண்டும் கட்டியெழுப்பப் போராடும் ஒரு பலவீனமான நாடு.

    ஆப்கானிஸ்தான் மீது சமீபத்தில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா.பாது காப்பு கவுன்சிலில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக இந்தியாவின் தூதர் ஹரிஷ் பேசியதாவது:-

    ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலை நடத்தியதால் அப்பாவி பெண்கள், குழந்தைகள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

    இந்தத் தாக்குதல்கள் ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும். அப் பாவிப் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு கவனம் செலுத்தும் ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முழு மரியாதை அளிக்கப்பட வேண்டும்.

    அத்தியாவசியப் பொருட்களுக்காக எல்லை தாண்டிய போக்குவரத்தை நம்பியிருக்கும் ஆப்கானிஸ் தானுக்கான முக்கிய வழிகளை பாகிஸ்தான் மூடியுள்ளது.

    இது வர்த்தகம் மற்றும் போக்குவரத்து பயங்கரவாதம் ஆகும். இதுபோன்ற நடவடிக்கைகள் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறுவதாகும்.

    மேலும் கடினமான சூழ்நிலைகளில் மீண்டும் கட்டியெழுப்பப் போராடும் ஒரு பலவீனமான நாட்டிற்கு எதிரான வெளிப்படையான அச்சுறுத்தல்கள் மற்றும் போர்ப்செயல்களுக்கு சமமானவை ஆகும் என்று தெரிவித்தார்.  

    • கிரிக்கெட்டை விட நான் வேறு எதையும் அதிகமாக நேசிப்பதாக எனக்கு தோன்றவில்லை.
    • ஒரு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே, பேட்டிங் மீதான அந்த வெறி எப்போதும் இருந்தது.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் மந்தனா முக்கிய பங்காற்றினார்.

    இந்த சூழலில் 29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.

    இதனையடுத்து இருவரின் திருமணம் கடந்த 23-ம் தேதி நடப்பதாக இருந்த நிலையில் மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

    இதற்கிடையே மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின. இதைதொடர்ந்து பலாஸ் உடன் இருக்கும் திருமண புகைப்படங்களை மந்தனா நீக்கினார்.

    அதனை தொடர்ந்து, திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா, தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

    இந்நிலையில் கிரிக்கெட்டை விட நான் வேறு எதையும் அதிகமாக நேசிப்பதாக எனக்கு தோன்றவில்லை என ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கிரிக்கெட்டை விட நான் வேறு எதையும் அதிகமாக நேசிப்பதாக எனக்கு தோன்றவில்லை. இந்திய ஜெர்சியை அணிவதுதான் எங்களை இயக்கும் உந்துசக்தி. எல்லாப் பிரச்சனைகளையும் ஒதுக்கி வைத்துவிடும். அந்த ஒரு எண்ணமே வாழ்க்கையில் கவனம் செலுத்த உதவுகிறது. ஒரு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே, பேட்டிங் மீதான அந்த வெறி எப்போதும் இருந்தது. அதை யாரும் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் என் மனதில், நான் எப்போதும் ஒரு உலக சாம்பியன் என்று அழைக்கப்பட வேண்டும் என்றே விரும்பினேன்.

    என ஸ்மிருதி மந்தனா கூறினார்.

    • இத்துடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படலாம்.
    • ரெட்மி நோட் 15 5ஜி சீரிசுடன், சியோமி நிறுவனம் உலகளவில் சியோமி 17சீரிசையும் அறிமுகப்படுத்தலாம்.

    ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிறுவனம் தற்போது புதிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. சியோமி சமீபத்தில் தனது ரெட்மி 15C ஸ்மார்ட்போனினை ரூ.11,999 விலையில் அறிமுகப்படுத்தியது.

    இந்த நிலையில், தற்போது ரெட்மி நோட் 15 5ஜி சீரிசை இந்திய சந்தையில் கொண்டுவர இருக்கிறது. ரெட்மி நோட் 15 சீரிஸ் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 15 5ஜி சீரிஸ் இந்தியாவில் ஜனவரி 6ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா வழங்கப்படலாம். இந்த சீரிசில் ஸ்டான்டர்டு ரெட்மி நோட் 15 மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ, நோட் 15 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.

    இவற்றில் ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s Gen 3 பிராசஸர் மூலம் இயக்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படலாம். ரெட்மி நோட் 15 5ஜி சீரிசுடன், சியோமி நிறுவனம் உலகளவில் சியோமி 17சீரிசையும் அறிமுகப்படுத்தலாம்.

    சியோமி 17 மற்றும் சியோமி 17 அல்ட்ரா ஆகிய மாடல்கள் 2026 ஆம் ஆண்டில் உலகளவில் சியோமி அறிமுகம் செய்ய இருக்கும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்போன்கள் தலைசிறந்த பிராசஸர், அதிநவீன கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

    ×