என் மலர்tooltip icon

    இந்தியா

    • இறந்த 20 பேரும் பயங்கரவாதிகள் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
    • தனது நாட்டில் நிலவும் உள்நாட்டுத் தோல்விகளையும் குறைகளையும் மறைக்கவே தாக்கியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளான நங்கர்ஹார், பக்திகா மாகாணங்களில் பாகிஸ்தான் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

    தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தாலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளின் 7 மறைவிடங்களை இலக்காகக் கொண்டு துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இறந்த 20 பேரும் பயங்கரவாதிகள் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானின் பன்னு மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளில் சமீபத்தில் நடந்த தற்கொலை படைத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

    ஆனால் கொல்லப்பட்டவர்கள் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றும் ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இந்த தாக்குதலை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.

    மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் தனது நாட்டில் நிலவும் உள்நாட்டுத் தோல்விகளையும் குறைகளையும் மறைக்கவே, அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மீது இத்தகைய தாக்குதல்களை நடத்தி திசைதிருப்பும் வேலையை செய்கிறது.

    புனித ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

    ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு என்றும் இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும்" என்று தெரிவித்துள்ளார். 

    • சமீப காலங்களில் தேஜஸ் விமானதிற்கு ஏற்பட்ட மூன்றாவது பெரிய விபத்து இதுவாகும்.
    • விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    இந்திய விமானப்படையில் இடம்பெற்றுள்ள உள்நாட்டுத் தயாரிப்பு போர்விமானமான 'தேஜஸ்' மீண்டும் விபத்தில் சிக்கி உள்ளது.

    இந்த மாத தொடக்கத்தில் நிகழ்ந்த இந்த விபத்தின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

    வழக்கமான பயிற்சியை முடித்துவிட்டு விமான தளத்தில் தரையிறங்க முயன்றபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விபத்தின் போது விமானி சாதுர்யமாகச் செயல்பட்டு பாராசூட் மூலம் குதித்ததால் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.

    விமானத்தின் Airframe கட்டமைப்பிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த விமானத்தை இனி பயன்படுத்த முடியாத அளவிற்கு அது சிதைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    சமீப காலங்களில் தேஜஸ் விமானதிற்கு ஏற்பட்ட மூன்றாவது பெரிய விபத்து இதுவாகும்

    2024 மார்ச் மாதம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே முதல் விபத்து நிகழ்ந்தது. இதில் விமானி பத்திரமாக மீட்கப்பட்டார்.

    கடந்த நவம்பர் மாதம், துபாய் விமானக் கண்காட்சியின் போது நிகழ்ந்த தேஜஸ் விமான விபத்தில் விங் கமாண்டர் நமான்ஷ் சியால் உயிரிழந்தார்.

    தற்போது நிகழ்ந்துள்ள இந்த விபத்து குறித்து விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், இந்த விபத்தைத் தொடர்ந்து, தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து தேஜஸ் விமானங்களையும் விரிவான தொழில்நுட்பப் பரிசோதனைக்கு உட்படுத்த விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

    • பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினருக்குக் காட்டிக்கொடுத்தது.
    • கொல்லப்பட்டவர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தப்பியோடிக் கொண்டிருந்த ஜெய்ஷ் இ முகமது கமாண்டர் சைபுல்லாவும் ஒருவர்.

    ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தின் சத்ரூ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் துல்லியமான இடத்தை கண்டறிய, ராணுவத்தின் பாரா பிரிவைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாயான 'டைசன்' அழைத்துச் செல்லப்பட்டது.

    கரடுமுரடான அந்தப் பகுதிக்குள் டைசன் நுழைந்தபோது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் டைசனின் காலில் தோட்டா பாய்ந்து பலத்த காயமேற்பட்டது.

    காயமடைந்த போதிலும், டைசன் பின்வாங்காமல் தொடர்ந்து முன்னோக்கிச் சென்று பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினருக்குக் காட்டிக்கொடுத்தது.

    டைசன் காட்டிய இடத்தை வைத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்டவர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தப்பியோடிக் கொண்டிருந்த ஜெய்ஷ் கமாண்டர் சைபுல்லாவும் ஒருவர்.

    சம்பவ இடத்திலிருந்து இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    காயமடைந்த டைசன் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதன் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம்பட்டபோதும் டைசனின் செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது. 

    • இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் காங்கிரஸ் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது.
    • போராட்டத்தைக் கண்டித்து உண்மையை ஆதரித்து நின்றதற்காக இந்தியா கூட்டணி காட்சிகளுக்கு நன்றி.

    டெல்லியில் கடந்த 16 முதல் 20 ஆம் தேதி வரை பாரத் மண்டபத்தில் வைத்து ஏஐ தாக்க உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் உலக அரசியல் மற்றும் தொழில்நுட்ப தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

    கடந்த 20 ஆம் தேதி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரசார் சிலர் புகுந்து தங்கள் மேலாடைகளை கழற்றி அமெரிக்க - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த ஹாலுக்குள் புகுந்த நான்கு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், திடீரென தங்கள் சட்டைகளைக் கழற்றி எறிந்துவிட்டு, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை காட்டி கோஷமிட்டனர்.

    பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, அவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் இது நாட்டின் இளைஞர்களின் அதிருப்தியின் வெளிப்பாடு என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.

    இந்நிலையில் நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நமோ பாரத் ரயில் மற்றும் மீரட் மெட்ரோ ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி உரையாற்றியபோது இந்த சம்பவத்தை கண்டித்தார்.

    அவர் கூறியதாவது, "டெல்லியில் நடந்த சர்வதேச ஏஐ மாநாட்டை காங்கிரஸ் தனது தரம் தாழ்ந்த மற்றும் நிர்வாண அரசியலுக்கு ஒரு களமாகப் பயன்படுத்தியுள்ளது.

    வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் சட்டையை கழற்றிப் போராட்டம் நடத்தியதன் மூலம் காங்கிரஸ்  கொள்கை ரீதியான திவாலானது உறுதி ஆகி உள்ளது.

    வளர்ந்த நாடாக மாறுவதற்கு இந்தியா கடுமையாக உழைத்து வரும் வேளையில், இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் காங்கிரஸ் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது.

    இது தனிப்பட்ட முறையில் எனக்கு எதிரான போராட்டம் அல்ல, மாறாக நாட்டின் கௌரவத்திற்கு எதிரானது

    காங்கிரஸ் தலைவர்களே, உங்கள் நிர்வாணத்தை நாடு ஏற்கனவே நன்கு அறியும். இப்போது மீண்டும் சட்டையைக் கழற்றி அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன?" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், காங்கிரஸின் இத்தகைய அநாகரீகமான போராட்டத்தைக் கண்டித்து உண்மையை ஆதரித்து நின்றதற்காக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், திமுக, மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்டவற்றுக்கு நன்றி என்றும் மோடி குறிப்பிட்டார்.  

    • காங்கிரஸையும் நாட்டையும் பிரிக்க முடியாது. காங்கிரஸ் இந்த நாட்டின் ஆன்மா
    • ஒரு மேலிடத்தின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கும் அரசிற்கு தெலங்கானா மக்கள் தகுதியானவர்கள் அல்ல

    காந்திக் குடும்பத்திற்குத் தேவைப்பட்டால் தெலங்கானா காங்கிரஸ் தொண்டர்கள் ரூ.1,000 கோடி திரட்டி தருவார்கள் என அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறிய கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.

    சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ரேவந்த் ரெட்டி, காந்தி குடும்பத்தினர் நாட்டிற்காக மூன்று தலைமுறைகளாகத் தியாகம் செய்தவர்கள். உண்மையில், காந்தி குடும்பத்திற்கு பணம் தேவை என்றால், காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களுக்காக ரூ. 1,000 கோடியை ஏற்பாடு செய்ய முடியாதா? காங்கிரஸையும் நாட்டையும் பிரிக்க முடியாது. காங்கிரஸ் இந்த நாட்டின் ஆன்மா எனப் பேசியிருந்தார்.

    இதற்கு அம்மாநில பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கட்சியின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தேசியப் பொறுப்பாளர் அமித் மாளவியா,

    "தெலுங்கானா இளைஞர்கள் டி.எஸ்.சி (ஆசிரியர் தேர்வு) அறிவிப்புகளுக்காகக் காத்திருக்கும் வேளையிலும், விவசாயிகள் ரைது பரோசா (விவசாயிகளுக்கான நிதி உதவித்திட்டம்) உதவிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சூழலிலும், காந்தி குடும்பத்தின் 'நிதித் தேவைகளுக்காக' ரூ.1,000 கோடியைத் திரட்டி தருவதாக முதலமைச்சர் பெருமை பேசுகிறார்.

    சிறிது காலத்திற்கு முன்புதான், கடனைத் திருப்பிச் செலுத்தவும், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியிருந்தார். தெலங்கானா மக்கள் கஷ்டப்பட்டு ஈட்டிய வருவாய் பொது நலனுக்கா அல்லது டெல்லியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வம்சத்தினருக்கா?

    காங்கிரஸ் கட்சிக்கு, தெலங்கானா என்பது வளர்ச்சி பெற வேண்டிய ஒரு மாநிலமா அல்லது வெறும் 10 ஜன்பத்க்கான ஏடிஎம் இயந்திரமா?

    தெலங்கானா மக்கள் தங்கள் அபிலாஷைகள், வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் அரசிற்கு தகுதியானவர்கள்; ஒரு மேலிடத்தின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கும் அரசாங்கத்திற்கு அல்ல." என தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதற்குப் பதிலளித்த ரேவந்த் ரெட்டி, காந்தி குடும்பத்திற்குப் பணம் ஒரு பொருட்டல்ல என்றும், அவர்கள் எப்போதும் நாட்டின் நலனுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் கூறினார். மேலும், மோடி அரசாங்கம் அவர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டுப் பழிவாங்குவதாகவும் குற்றம் சாட்டினார். 

    • வெள்ளிக்கிழமை இரவுவரை திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் நள்ளிரவில் இருவரும் தூங்கச் சென்றுள்ளனர்.
    • முதற்கட்ட விசாரணையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று ஒரே மேடையில் திருமணம் நடைபெறவிருந்த இரண்டு சகோதரிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜோத்பூர் மாவட்டத்தின் மனாய் கிராமத்தைச் சேர்ந்த ஷோபா (25) மற்றும் விமலா (23) ஆகியோர் சகோதரிகள். இருவரும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (பிப்.21) இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. வெள்ளிக்கிழமை இரவுவரை திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் நள்ளிரவில் இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். பின்னர் காலையில் திருமணத்திற்கு தயாராக குடும்பத்தினர் எழுப்ப சென்றுள்ளனர்.

    அப்போது இருவரின் உடல்நிலையும் மோசமாக இருந்ததையடுத்து உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இருவருக்கும் இறுதிச் சடங்குகளை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. இதற்கிடையே இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.  

    முதற்கட்ட விசாரணையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆனால் சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் உண்மையாக காரணம் தெரியும் எனவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிபூரியா தொகுதியிலிருந்து 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • ராகுல் காந்தியும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அசாம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா, இன்று பாஜகவில் அதன் மாநிலப் பிரிவுத் தலைவர் திலீப் சைகியா முன்னிலையில் இணைந்தார். அவருடன், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சஞ்சு போரா, ராஜேஷ் குமார் ஜோஷி, கங்கன் தாஸ், ககன் சந்திர போரா உள்ளிட்ட பலரும் பாஜகவில் இணைந்தனர்.

    பிப்.16 அன்று காங்கிரஸில் இருந்து விலகுவதாக போரா அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் உயர்மட்டக் குழு அவர் ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் அவரது வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ராகுல் காந்தியும் அவரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து யோசிக்க நேரம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மறுநாளே முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வீட்டிற்கு சென்று, பாஜகவில் சேரப்போவதாக அறிவித்தார்.

    இந்நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். 32 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸில் இருந்த இவர், அசாம் மாநிலத் தலைவராக 2021 முதல் 2024 வரை பணியாற்றினார். அதற்கு முன்பு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பிபூரியா தொகுதியிலிருந்து 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாணவர் அரசியலில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கினார். தருண் கோகோய் முதலமைச்சராக இருந்தபோது, அரசின் செய்தித் தொடர்பாளராகவும், நாடாளுமன்றச் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

    அசாமின் தற்போதைய முதலமைச்சராக உள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் காங்கிஸில் இருந்து விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     


    • டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.
    • உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிதாக 15 சதவீத வரிவிதித்தார்.

    இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா அறிவித்தது.

    தற்போது பரஸ்பர வரியை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால் இந்தியாவிடம் பழைய வரியான 3.5 சதவீதம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் டிரம்ப் அறிவித்த புதிய வரியான 15 சதவீதத்தால் இந்திய பொருட்களுக்கு 18.5 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்தப் பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வாஷிங்டனில் பிப்ரவரி 23ம் தேதி தொடங்கவிருந்த முக்கியக் கூட்டம், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு மற்றும் டிரம்பின் புதிய வரி விதிப்பு அறிவிப்புகளால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறி தனியாக வீடு எடுத்து லிவ்-இன் உறவில் இருந்துள்ளனர்
    • பாதிக்கப்பட்ட பெண் குருகிராமில் பிஎஸ்சி பயோ டெக்னாலஜி படித்துவந்துள்ளார்.

    ஹரியானாவின் குருகிராமில் தன்னுடன்  லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் காதலனே சானிடைசரை ஊற்றி தீவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 வயதான பாதிக்கப்பட்ட பெண் திரிபுராவைச் சேர்ந்தவர். இவர் ஹரியானாவின் குருகிராமில் பிஎஸ்சி பயோ டெக்னாலஜி படித்துவந்துள்ளார்.

    இதனிடையே சிவம் என்ற இளைஞருடன் ஆன்லைன் டேட்டிங் செயலி ஒன்றின்மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிவம் டெல்லியின் நரேலாவைச் சேர்ந்தவர். இந்த பழக்கம் தொடர நாளடைவில் இருவரும் செல்ஃபோன் எண்களை பரிமாறிக்கொண்டு பேசிவந்துள்ளனர். இதனையடுத்து திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறி குருகிராமில் இருவரும் தனியாக வீடு எடுத்து லிவ்-இன் உறவில் இருந்துவந்துள்ளனர்.

    இந்நிலையில் பிப்.16 அன்று இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது சிவம் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கி, அந்தரங்க உறுப்பில் சானிடைசரை ஊற்றி தீவைத்துள்ளார். மேலும் இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது அம்மாவிற்கு ஃபோன் செய்து தன்னை காப்பாற்றுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அவர் போலீசுக்கு தகவல் கொடுத்ததையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டார். 

    இதனையடுத்து போலீசார் 19 வயது இளைஞர் சிவமை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது கைதான சிவம் மீது 115 (2) (நோக்கத்துடன் காயப்படுத்துதல்), 118 (1) (ஆபத்தான ஆயுதம் கொண்டு தாக்குதல்), 127 (7) (சிறைவைத்தல்), 69 (திருமணம் என்ற பெயரில் உடலுறவு வைத்து கொள்ளுதல்), 351 (2)(மிரட்டல் விடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையை பொறுத்து தேவை என்றால் கூடுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும்" என்றும் தெரிவித்துள்ளனர். 

    • அவளுடைய உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.
    • தன்னலமற்ற பங்களிப்பு ஐந்து பேரின் உயிரை காப்பாற்றியது.

    கேரளாவின் 10 மாத உறுப்பு தானம் செய்தவரான அலின் ஷெரின் ஆபிரகாமை நினைவு கூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 131வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "எந்தவொரு பெற்றோருக்கும் சொந்தக் குழந்தையை இழப்பதை விட பெரிய துக்கம் இல்லை. மிகச் சிறிய குழந்தையை இழப்பதன் வலி ஆழமானது. சில நாட்களுக்கு முன்பு, கேரளாவை சேர்ந்த ஒரு அப்பாவி சிறுமி ஆலின் ஷெரின் ஆபிரகாமை இழந்தோம். உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது, மருத்துவ ஆராய்ச்சியும் ஊக்கம் பெற்று வருகிறது, உறுப்பு தானம் மூலம் ஒருவருக்கு இன்னொரு உயிரைக் கொடுத்த ஆலின் போன்ற பலர் உள்ளனர்..." என்று அவர் கூறினார்.

    கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி கேரளா மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்லம் போர்மா சந்திப்பில் நடந்த ஒரு சாலை விபத்தை தொடர்ந்து அலின் ஷெரின் மூளைச்சாவு ஏற்பட்டது. விரைவில் குடும்பத்தினர் உறுப்பு தானத்திற்கு சம்மதித்தனர். அவளுடைய பெற்றோர்களான அருண் ஆபிரகாம் மற்றும் ஷெரின் ஆன் ஜான், அவளுடைய உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

    குழந்தையின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் கார்னியாக்கள் தானம் செய்யப்பட்டன. சிகிச்சையில் இருந்த ஆறு மாத குழந்தைக்கு கல்லீரல் கிடைத்தது. இதன் மூலம் கேரளா மாநிலத்திலேயே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம் குழந்தை என்ற பெருமையைப் பெற்றது.

    சிறுநீரகங்கள் மற்றொரு குழந்தைக்கு ஒதுக்கப்பட்டன, அதே நேரத்தில் இதய வால்வு மற்றும் கார்னியாக்கள் தேவைப்படும் நோயாளிகளுக்கும் மாற்றப்பட்டன. விரைவில், கேரள காவல்துறை 10 மாத குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாமுக்கு மரியாதை செலுத்தியது, அவரது தன்னலமற்ற பங்களிப்பு ஐந்து பேரின் உயிரை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது. 

    • டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    • உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

    அந்த வகையில் 131-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாடு உலகிற்கு ஒரு திருப்புமுனையாகும். இந்த மாநாட்டில் உலக தலைவர்களையும், தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உலக தலைவர்களுக்கு ஏ.ஐ. உச்சி மாநாட்டு கண்காட்சியில் எண்ணற்ற விஷயங்களை காட்டினேன்.

    செயற்கை தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் விலங்குகளின் சிகிச்சையில் ஏ.ஐ. எவ்வாறு நமக்கு உதவுகிறது. மேலும் 24 மணி நேரமும் ஏ.ஐ. உதவியுடன் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை எவ்வாறு கண்காணிக்கிறார்கள் என்பதையும் விளக்கியது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பண்டைய நூல்கள், அறிவை நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதை பார்த்து உலக தலைவர்கள் வியந்தனர்.

    டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டிஜிட்டல் கைது பற்றி நான் உங்களுடன் விரிவாகப் பேசியுள்ளேன். இதற்கு பிறகு டிஜிட்டல் கைது மற்றும் டிஜிட்டல் மோசடி குறித்து நமது சமூகத்தில் நிறைய விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. ஆனாலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன, நீங்கள் அனைவரும் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்.

    எந்த பெற்றோருக்கும் தங்கள் சொந்தக் குழந்தையை இழப்பதை விட பெரிய துக்கம் எதுவும் இல்லை. மிகச் சிறிய குழந்தையை இழப்பதன் வலி ஆழமானது. சில நாட்களுக்கு முன்பு, கேரளாவைச் சேர்ந்த ஒரு அப்பாவி சிறுமியான ஆலின் ஷெரின் ஆபிரகாமை இழந்தோம்.

    உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. மருத்துவ ஆராய்ச்சியும் ஊக்கமளித்து வருகிறது. உறுப்பு தானம் மூலம் ஒருவருக்கு இன்னொரு உயிரைக் கொடுத்த ஆலின் போன்று பலர் உள்ளனர் என்று கூறினார்.

    • காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா அடுத்த வாரம் 26-ந்தேதி நடைபெற உள்ளது.
    • காஷ்மீர் முதலமைச்சரும், துணை வேந்தருமான உமர் அப்துல்லா பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

    காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா அடுத்த வாரம் 26-ந்தேதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு வளாகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் வரும் 26-ந்தேதி காஷ்மீர் செல்ல உள்ளார்.

    இதுதொடர்பாக பல்கலைக்கழக செய்தி தொடர்பாளர் கூறுகையில்,

    ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநரும், கென்யா பல்கலைக்கழக வேந்தருமான மனோஜ் சின்ஹா பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்குகிறார். காஷ்மீர் முதலமைச்சரும், துணை வேந்தருமான உமர் அப்துல்லா பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

    இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 59,558 பட்டங்கள் - 44,910 இளங்கலை, 13,545 முதுகலை, 461 எம்.டி/எம்.எஸ், 4 எம்.சி.எச், 18 எம்.ஃபில் மற்றும் 620 பி.எச்.டி பட்டங்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    துணை ஜனாதிபதி வருகையையொட்டி காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் அதிகாரி வி.கே.பிர்டி ஆய்வு செய்தார்.

    பள்ளத்தாக்கின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும், முக்கிய நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 24 மணி நேரமும் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தவும், கண்காணிப்பை வலுப்படுத்தவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ×