search icon
என் மலர்tooltip icon
    • மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்ததால் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது.
    • மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    ரோம் :

    இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியான எமிலியா ரோமக்னாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்ததால் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    மேலும் இந்த கனமழை காரணமாக அங்கு ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. எனவே அங்கு தயார் நிலையில் இருந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். எனினும் இந்த கனமழை காரணமாக வீடுகள் சேதமடைந்ததால் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மேலும் பலர் மாயமானதால் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    • காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது.
    • பிரபல காமெடி நடிகர் லீ ஹாவ்ஷி கலந்து கொண்டு நடித்தார்.

    பீஜிங் :

    சீன தலைநகர் பீஜிங்கில் சியாகுவோ என்ற காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல காமெடி நடிகர் லீ ஹாவ்ஷி கலந்து கொண்டு நடித்தார். அப்போது அவர் சீன ராணுவம் குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நிகழ்ச்சியை நடத்திய சியாகுவோ நிறுவனத்துக்கு சுமார் ரூ.16 கோடி அபராதம் விதித்து அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டது.

    இதற்கிடையே இந்த தவறுக்கு மன்னிப்பு கோரிய லீ ஹாவ்ஷி தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்த போவதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அனைத்து நிகழ்ச்சிகளில் இருந்தும் அவரை சஸ்பெண்ட் செய்ததாக சியாகுவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு அவரது ரசிகர்கள் `இது காமெடியை மேலும் ஒடுக்க வழிவகுக்கும்' என கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    • ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
    • 104 சேவை மையத்தில் பயிற்சி பெற்ற 20 மனநல ஆலோசகர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

    சென்னை :

    சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள 104 சேவை மையத்தில், 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் டாக்டர் கோவிந்தராவ், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சாந்திமலர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் சண்முகக்கனி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த சேவை மையத்தில் பயிற்சி பெற்ற 20 மனநல ஆலோசகர்கள் பணி அமர்த்தப்பட்டு 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

    அதிக மன அழுத்தத்தில் உள்ள மாணவர்களை கண்டறிந்து மாவட்ட மனநலக்குழு மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் குழு இணைந்து அந்த மாணவர்களை கண்காணித்து வருகின்றனர். இந்தக்குழு அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

    தொடர்ச்சியாக 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரளாவில் ஒரே மாதத்தில் நடந்த 3-வது சம்பவம் இதுவாகும்.
    • இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    திருச்சூர் :

    கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் மரோட்டிச்சல் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் 76 வயது முதியவர் ஒருவர் டீ குடித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது அவரது சட்டைப்பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்து தீப்பிடித்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் உடனடியாக எழுந்து அந்த செல்போனை எடுத்து கீழே போட்டார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார்.

    இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கேரளாவில் ஒரே மாதத்தில் நடந்த 3-வது சம்பவம் இதுவாகும். முன்னதாக கடந்த மாதம் 24-ந்தேதி இதே திருச்சூர் மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் செல்போன் வெடித்து உயிரிழந்தார்.

    இதைப்போல கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவர் தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து காயமடைந்தார்.

    இவ்வாறு அடுத்தடுத்து செல்போன் வெடிக்கும் சம்பவங்கள் நடைபெறுவதால் கேரளாவில் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

    • மும்பை தாக்குதல் சதிகாரன் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க கோர்ட்டு ஒப்புதல் அளித்து உள்ளது.
    • ராணாவை இங்கு அழைத்து வந்து ஜெயிலில் போடுவதால் எதுவும் நடக்க போவதில்லை.

    மும்பை :

    மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தானை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலில் 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதல் சதிகாரனான பாகிஸ்தானை சேர்ந்த கனடா தொழில் அதிபர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க கோர்ட்டு ஒப்புதல் அளித்து உள்ளது.

    இந்த தாக்குதலின்போது வலது காலில் குண்டு காயம் அடைந்த தேவிகா நட்வர்லால் கூறியதாவது:-

    சம்பவம் நடந்தபோது நான் 9 வயது சிறுமி. வழக்கில் மிகக்குறைந்த வயதான சாட்சி நான் தான். தாக்குதலின்போது என் மீதும் குண்டு பாய்ந்தது. என் கண்முன்னே பலர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் தொடர்புடைய ராணா இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளார். இதற்கு அனுமதி வழங்கிய அமெரிக்க கோர்ட்டின் உத்தரவை வரவேற்கிறேன். அவர் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவது நல்லது தான். ஆனால் அவர் தூக்கில் போடப்பட்டாலோ அல்லது கடும் தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே நான் மகிழ்ச்சி அடைவேன்.

    ராணாவை இங்கு அழைத்து வந்து ஜெயிலில் போடுவதால் எதுவும் நடக்க போவதில்லை. தாக்குதல் தொடர்பான விவரங்கள் அவர் மூலம் வெளி வரவேண்டும். 10 பயங்கரவாதிகள் நமது நகருக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டார்கள். டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து தாக்குதலுக்கு திட்டம் போட்ட பயங்கரவாதி ராணா கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.

    அவர் தண்டிக்கப்படுவதை பார்த்து வேறு யாரும் நமது நாட்டில் எந்த பகுதியிலும் பயங்கரவாத செயலில் ஈடுபட முயற்சி செய்ய கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பால் என்பது மிக முக்கியமான உணவுப்பொருள்.
    • ஆவினை பொறுத்தமட்டில் பொருளாதார சிக்கல் எதுவும் இல்லை.

    சென்னை :

    சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆவினில் தினமும் 45 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவை கையாளும் திறன் உள்ளது. மாநிலத்தின் தேவையை அடிப்படையாக கொண்டு பார்த்தால், தினசரி 70 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவை கையாளும் திறன் வேண்டியது உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் தினமும் 70 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவை கையாளும் திறனை ஏற்படுத்த கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேற்கொள்ள இருக்கிறோம்.

    தினமும் 70 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவை கையாளும் திறனை ஏற்படுத்தும் போது அதற்கு நிகராக பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது உள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு 2 லட்சம் கறவை மாடுகளை வழங்க உள்ளோம்.

    கொள்முதல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    ஆவினை பொறுத்தமட்டில் பொருளாதார சிக்கல் எதுவும் இல்லை. இதனால், புதிய முயற்சிகளை மேற்கொள்ள நிதி தடையாக இருக்காது. தற்போதுள்ள சூழ்நிலையில் பால் உற்பத்தியை பெருக்க வேண்டியது உள்ளது.

    உரிய அனுமதி இல்லாமல் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை நடத்தி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்த விலையில் பாலை கொடுக்க வேண்டும் என்பதற்காக தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்துள்ளன.

    பால் என்பது மிக முக்கியமான உணவுப்பொருள். எந்தவித வேதிப்பொருட்கள் கலப்படமும் இல்லாமல் பால் கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை.

    எனவே, பாலில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பொருட்களின் தரத்தை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளோம்.

    உணவுப்பொருள் அதிகாரிகள் மூலம் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆவின் மூலம் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்வது குறித்தும் முடிவெடுப்போம். எந்தவித காலதாமதமும் இன்றி பொதுமக்களுக்கு பால் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பால் வினியோகத்தை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் சுப்பையன் உடன் இருந்தார்.

    இதைத்தொடர்ந்து ஆவின் பொதுமேலாளர்கள், அனைத்து மாவட்ட துணை பதிவாளர்களுடன் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

    • ரெயில்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் படிப்படியாக பொருத்தப்பட்டு வருகிறது.
    • 24 மணிநேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பயணிகளின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படுகிறது.

    சென்னை :

    ரெயில்நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கடந்த 2017-ம் ஆண்டு நிர்பயா நிதியின் கீழ் ரூ.500 கோடி மதிப்பில் 900 ரெயில்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று இந்திய ரெயில்வே அறிவித்தது. குறிப்பாக, ரெயில்நிலையங்களில் உள்ள நடைபாதைகள், ஓய்வு அறைகள், டிக்கெட் பகுதி ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் படிப்படியாக பொருத்தப்பட்டு வருகிறது. இதை ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இதன் மூலம், 24 மணிநேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பயணிகளின் பாதுகாப்பு குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படுகிறது.

    இந்த நிலையில், தெற்கு ரெயில்வேயில் முதல்கட்ட திட்டத்தின் கீழ், சென்னை கோட்டத்தில் உள்ள 26 ரெயில்நிலையங்களில் ரூ.9 கோடியே 79 லட்சம் செலவில் 528 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, மந்தைவெளி, பசுமைவழிச்சாலை, கோட்டூர்புரம், இந்திரா நகர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி, சென்னை பூங்கா, சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட 26 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதேபோல, 2 மற்றும் 3-ம் கட்ட திட்டத்தில் அரக்கோணம், ஆந்திர மாநிலம் கூடூர் வழித்தடங்களில் உள்ள 50 ரெயில்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகபட்சமாக வேலூரில் 107.24 டிகிரி வெயில் பதிவானது.
    • 6-வது நாளாக தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்தது.

    சென்னை :

    தமிழ்நாட்டில் கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியதில் இருந்து முதல் 10 நாட்கள் வெயிலின் தாக்கம் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக அதன் கோரத் தாண்டவத்தை காட்ட தொடங்கி இருக்கிறது. 6-வது நாளாக நேற்றும் தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்தது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை மீனம்பாக்கம் உள்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.

    அதிகபட்சமாக வேலூரில் 107.24 டிகிரி வெயில் பதிவானது. கரூரை பொறுத்தவரையில் இயல்பான வெயில் அளவை விட நேற்று 5 டிகிரி வரை அதிகமாக பதிவானதாக ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெயில் அதிகரிக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் நேற்று பதிவான வெயில் அளவு வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் - 96.98 டிகிரி

    சென்னை மீனம்பாக்கம் - 101.12 டிகிரி

    கோவை - 97.7 டிகிரி

    கடலூர் - 96.44 டிகிரி

    தர்மபுரி - 99.68 டிகிரி

    ஈரோடு - 101.84 டிகிரி

    கன்னியாகுமரி - 91.76 டிகிரி

    கரூர் - 106.7 டிகிரி

    கொடைக்கானல் - 70.88 டிகிரி

    மதுரை நகரம் - 102.2 டிகிரி

    மதுரை விமான நிலையம் - 102.2 டிகிரி

    நாகப்பட்டினம் - 100.4 டிகிரி

    நாமக்கல் - 100.4 டிகிரி

    பாளையங்கோட்டை - 101.3 டிகிரி

    சேலம் - 101.48 டிகிரி

    தஞ்சாவூர் - 100.4 டிகிரி

    திருப்பத்தூர் - 102.56 டிகிரி

    திருச்சி - 102.38 டிகிரி

    திருத்தணி - 103.28 டிகிரி

    தூத்துக்குடி - 93.38 டிகிரி

    ஊட்டி - 69.98 டிகிரி

    வால்பாறை - 84.2 டிகிரி

    வேலூர் - 107.24 டிகிரி

    • பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த நாள்.
    • கார்த்திகை விரதம்.

    இன்று சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் திருத்தலங்களில் பித்ரு பூஜை செய்ய நன்று. கார்த்திகை விரதம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருச்செந்தூர் முருகப் பெருமான் புறப்பாடு. திருவிடைமருதூர் பிருகத்குஜாம்பிகை புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, வைகாசி-5 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: அமாவாசை இரவு 9.47 மணி வரை. பிறகு பிரதமை.

    நட்சத்திரம்: பரணி காலை 7.53 மணி வரை. பிறகு கார்த்திகை.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உறுதி

    ரிஷபம்-பாராட்டு

    மிதுனம்-பரிசு

    கடகம்-உதவி

    சிம்மம்-நிறைவு

    கன்னி-கடமை

    துலாம்- தனம்

    விருச்சிகம்-ஓய்வு

    தனுசு- நேர்மை

    மகரம்-பணிவு

    கும்பம்-பாசம்

    மீனம்-தெளிவு

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • குழந்தைகள் வேக வைத்த முட்டையை சாப்பி மாட்டார்கள்.
    • முட்டையை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 3

    வெங்காயம் - 1

    பூண்டு - 5 பல்

    காய்ந்த சிவப்பு மிளகாய் - 10

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    உப்பு கரைத்த தண்ணீர்- தேவையான அளவு

    எலுமிச்சை தண்ணீர்- தேவையான அளவு(எலுமிச்சை சாறில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்தது)

    புளி தண்ணீர்- தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விடவும்.

    * பூண்டு, வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். வெங்காயம் ஆறியதும் மொறு மொறு என்று இருக்கும்.

    * அடுத்து பூண்டை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * அடுத்து காய்ந்த மிளகாயை போட்டு பொரிந்ததும் எடுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் பொரித்த பூண்டை நன்றாக கைகளால் பொடித்து போடவும். அடுத்து அதில் வெங்காயம், காய்ந்த மிளகாயை போட்டு நன்றாக கலக்கவும்.

    * வேகவைத்த முட்டையின் நடுவில் சிறிதளவு வெட்டி அதனுள் பொரித்த வெங்காயம் பூண்டு கலவையை வைக்கவும்.

    * இதன்மேல் சிறிதளவு எலுமிச்சை சாறு, புளித்தண்ணீர், பொரித்த எண்ணெய், உப்பு கரைத்த தண்ணீர் போடவும். இவை அனைத்தையும் சில துளிகள் மட்டும் போடவும்.

    * இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    * சூப்பரான பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வைகாசி மாதமானது மே 15-ம் தேதி துவங்கி, ஜூன் 15-ம் தேதி வரை நீடிக்கிறது.
    • வைகாசி மாதத்தில் நல்ல காரியங்களை செய்ய உகந்த நாட்களை பார்க்கலாம்.

    தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதமான வைகாசி மாதம் வைகாசம் மாதம் என்றும், மாதவ மாதம் என்றும் போற்றப்படுகிறது. 2023 ம் ஆண்டில் வைகாசி மாதமானது மே 15-ம் தேதி துவங்கி, ஜூன் 15-ம் தேதி வரை நீடிக்கிறது.

    வைகாசி 08 (மே 22) - திங்கட்கிழமை (வளர்பிறை)

    வைகாசி 10 (மே 24) - புதன்கிழமை (வளர்பிறை)

    வைகாசி 11 (மே 25) - வியாழக்கிழமை (வளர்பிறை)

    வைகாசி 18 (ஜூன் 01) - வியாழக்கிழமை (வளர்பிறை)

    வைகாசி 22 (ஜூன் 05) - திங்கட்கிழமை

    வைகாசி 24 (ஜூன் 07) - புதன்கிழமை

    வைகாசி 25 (ஜூன் 08) - வியாழக்கிழமை

    வைகாசி 26 (ஜூன் 09) - வெள்ளிக்கிழமை

    வாஸ்து மற்றும் பூமி பூஜை நாள், நேரம் :

    வைகாசி 21 (ஜூன் 04) ஞாயிற்றுக்கிழமை - காலை 09.58 முதல் 10.34 வரை

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • இக்கோவிலில் பவுர்ணமி பூஜை, பிரதோஷம் சிறப்புடையதாகும்.
    • 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலின் தல விருட்சம் வில்வமரம் ஆகும்.

    திருமண வரம் தரும் சிவாலயங்களில் பக்தர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற கோவிலாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சந்திரசேகரர் கோவில் உள்ளது.

    கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையவும் திருமணம் நடைபெறாத இளைஞர்களுக்கு திருமணம் நடக்கவும் மாங்கல்ய பாக்கியம் அருளும் பட்டுக்கோட்டை மங்களாம்பிகா சமேத சந்திர சேகரர் கோவில் முக்கிய பரிகார தலம் ஆகும்.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர் மேல்பாகம் கோட்டைத் தெருவில் அமைந்துள்ள சந்திரசேகர சுவாமி(சிவன்) கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும். ராஜராஜ சோழன் சோழ நாட்டுக்கு சோழமண்டலம் எனப் பெயர் மாற்றம் செய்து அதை 13 வள நாடுகளாக பிரித்தார். அதில் ஒன்றான பரண்டையூர் நாட்டில் இருந்த செல்லூர் என்ற ஊர் தான் இன்றைய பட்டுக்கோட்டையாகும்.

    குபேரன் சிலை

    அக்காலத்தில் மராட்டிய படை தளபதி பாவாஜி பண்டிதர் என்பவர் பட்டுக்கோட்டையில் கோட்டை கட்டியதாக கல்வெட்டு கூறுகிறது. பட்டுக்கோட்டை சந்திரசேகர சாமி கோவில் முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றழி கோவிலாகும். இக்கோவிலின் 3 அடுக்கு கோபுரத்தை கடந்து ஆலயத்தின் இடது புறம் பங்குனித் திருவிழா முடிந்து பாதுகாப்பாக நாடியம்மன், அய்யனார் உற்சவர் சிலைகள் ஊஞ்சலில் வைக்கப்பட்டுள்ளன. இடது புற பிரகாரத்தில் சப்த கன்னியர் சிலைகள் உள்ளன.

    இக்கோவிலில் உள்ள இறைவன் பெயர் பிறைசூடும் தம்பிரானார். பிற்காலத்தில் அதுவே வடமொழி ஆக்கமாக சந்திரசேகரர் என்று சூட்டப்பட்டது. அம்பாளின் பெயர் மங்களாம்பிகை. அம்பாள் தெற்கு பார்த்த நிலையில் தனி சன்னதியில் நின்றகோலத்தில் உள்ளார். மூலவர் தரிசனம் செய்து வெளியே வந்தால் இடதுபுற சுவரில் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் சிலை புடைப்பு சிற்பமாக உள்ளது.

    பவுர்ணமி பூஜை

    கர்ப்பகிரகத்தின் மூன்று புற கோஷ்டங்களிலும் மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர், பிரம்மன் சிலைகள் உள்ளன. வலது பிரகாரத்தில் சூரியன், பைரவர், நவக்கிரகங்கள் சிலைகள் உள்ளன. கருங்கற்களால் முழுவதும் கட்டப்பட்ட இந்த கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, கல்வெட்டுகளை தாங்கி வரலாறு கூறி நிற்கும் சிறப்பு பெற்றது.

    இக்கோவிலில் பவுர்ணமி பூஜை, பிரதோஷம் சிறப்புடையதாகும். இவற்றில் கலந்து கொள்வதால் நிறைந்த செல்வம், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு, திருவருள் துணை போன்ற அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    சந்திரசேகர சுவாமி கோவிலில் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் விநாயகரும், வடமேற்கு மூலையில் முருகன் வள்ளி-தெய்வானையுடனும் உள்ளனர். சோழர் காலத்தில் பெரும் போற்றுதலுக்குரிய ஜேஷ்டா தேவியின் சிலை அபூர்வமாக இங்கு உள்ளது. சிலை சிறியதாக இருந்தாலும் ஒரு காலை மடித்து ஒரு காலை தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். இருபுறமும் காளை முகமும், குதிரை முகமும் உடைய மாந்தி, குளிகன் என்ற இரு மக்களுடன் உள்ளார்.

    32 தூண்கள்

    இக்கோவில் திருமஞ்சன மண்டபம் 32 தூண்களை கொண்டது. தரை கருங்கற்களால் பரப்பப்பட்டது. தரைக்கல்லில் சோழர்கால கல்வெட்டுகள் உள்ளன. ஒரு கல்வெட்டில் சோழர் காலத்தில் இவ்வூர் தலைவனாக இருந்தவர் ராஜேந்திர சுந்தர தோளுடையான் என்பவர். இவர் காலத்தில் ஒரு நிலம் குறித்த வழக்கு வருகிறது. மன்னரிடம் ஒருவர் நில உரிமை கேட்க நில உரிமைக்கான ஓலையை காட்ட வேண்டும் என்று மன்னர் ஆணை இடுகிறார்.

    நில உரிமை கேட்டவரும் மன்னர் கேட்டபடியே நிலத்துக்கான உரிமை ஓலையைக்காட்ட நிலம் கேட்டவருக்கே என்று தீர்ப்பு கூறப்படுகிறது. இந்த தகவல் கோவில் கல்வெட்டில் உள்ளது. நில உரிமைக்கு அக்காலத்திலேயே உரிமை ஓலை(பத்திரம்) இருந்தது நன்கு விளங்குகிறது.

    1200 ஆண்டுகளுக்கு முன்பு...

    அன்னிய படையெடுப்பின்போது பட்டுக்கோட்டையில் இருந்த கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டது. கோவிலும் தாக்கப்பட்டு சேதம் அடைந்தது. கோட்டை இருந்த இடம் இன்று கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது. பிற்காலத்தில் சந்திரசேகர சுவாமி கோவில் நாயக்க மன்னர் காலத்திலும், மராட்டியர் ஆட்சியிலும் புனரமைக்கப்பட்டுள்ளது.

    இக்கோவிலில் உள்ள சண்டிகேஸ்வரரை வணங்கி விட்டு வந்தால் சிறிது தூரத்தில் கிணறு உள்ளது. 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலின் தல விருட்சம் வில்வமரம் ஆகும். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவாி மாதம் 10-ந் தேதி இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்தது. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்து இருக்கும். திருமணத்தடை நீக்கும் பட்டுக்கோட்டை சந்திரசேகரர் கோவிலுக்கு வந்து முறையாக வழிபட்டால் திருமணத்தடை நீங்கி விரைவில் மாங்கல்ய பாக்கியம் கிட்டும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

    கோவிலுக்்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் பட்டுக்கோட்டைக்கு வர வேண்டும். பின்னர் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சாமியார்மடம் பகுதிக்கு செல்லும் பஸ்சில் ஏறி சாமியார்மடத்தில் இறங்கி அங்கிருந்து ½ கி.மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை சந்திரசேகரர் கோவிலை அடையலாம். இதேபோல் பஸ் மூலம் கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சாமியார்மடம் செல்லும் பஸ்சில் ஏறி கோவிலை அடையலாம்.

    ×