என் மலர்
நீங்கள் தேடியது "Snacks"
- எத்தனை இனிப்பு வகைகள் இருந்தாலும் கடித்துக்கொள்ள முறுக்கு வேண்டும்!
- நல்ல எண்ணெயில் சுட்டால் முறுக்கை 2 மாதத்திற்குக் கூட வைத்து சாப்பிடலாம்.
தீபாவளி நெருங்கிவிட்டது. அனைவரது வீட்டிலும் அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் சுடும் வாசம் வீசத்தொடங்கியிருக்கும். நாம் எத்தனை இனிப்பு வகைகள் சாப்பிட்டிருந்தாலும், அத்துடன் கடித்துக்கொள்ள முறுக்கு வேண்டும் என நாவின் சவை அரும்புகள் கேட்கும். அப்படிப்பட்ட முறுக்கில் பலவகைகள் உள்ளன. வெவ்வேறு பொருட்களை பயன்படுத்தி முறுக்கு சுடலாம். அந்தவகையில் பாசிப்பருப்பு முறுக்கு எப்படி சுடலாம் என பார்ப்போம்.

செய்முறை
பாசிப்பருப்பு முறுக்கு சுடுவதற்கு அரை கப் வெள்ளை உளுந்து, கால் கப் பாசிப்பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள். இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கழுவ வேண்டும். பின்னர் இவை இரண்டையும் பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்ததும், சிறிதுநேரம் ஆறவிடவேண்டும். பின்னர் தண்ணீர் இல்லாமல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கூடவே 4 கப் அரிசிமாவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் அரைத்த பாசிப்பருப்பு கலவை, கருப்பு எள் அல்லது வெள்ளை எள், கொஞ்சமாக உப்பு மற்றும் மிதமான சூட்டில் 2 கரண்டி எண்ணெய் சேர்க்கவேண்டும். எந்த எண்ணெய் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். அப்படி எண்ணெய் வேண்டாம் என நினைப்பவர்கள் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் பெருங்காயத்தூளையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து பிசைந்துக்கொள்ள வேண்டும். மாவு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிகமாக ஊற்றிவிடக்கூடாது. மாவு கெட்டியாக இல்லாமல் நல்ல மென்மையான பதத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் முறுக்கு நன்றாக வரும். மொறுமொறுவெனவும் இருக்கும். அந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முறுக்கு உரலில் நிரப்பவேண்டும். பின்னர் வாழை இலை அல்லது தட்டு எடுத்து, அதில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய்தடவி அதன்மீது உங்களுக்கு என்ன வடிவத்தில் வேண்டுமோ அதற்கேற்றவாறு பிழிந்து கொள்ளலாம். அதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவேண்டும். வெள்ளை நிறத்திலேயே வேண்டும் என்றால் கொஞ்ச நேரத்திலேயே எடுத்துவிடவேண்டும். நன்கு சிவப்பான நிறத்தில் வேண்டும் என்றால் கொஞ்சநேரம் எண்ணெயில் விட்டு எடுக்கவேண்டும். முறுக்கு நன்கு ஆறியபின் காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளவும்.
- தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது முறுக்கும், அதிரசமும்தான்.
- கடைகளில் பலகாரம் வாங்குவதைவிட வீட்டில் செய்வதுதான் ஸ்பெஷல்!
"தீபாவளி வந்துடுச்சி.. ட்ரெஸ் வாங்கியாச்சா? பலகாரம் எல்லாம் சுட்டாச்சா"? என்ற கேள்விகளிலேயே பாதி தீபாவளி பிறந்துவிட்டது. ட்ரெஸ் வாங்குகிறோமோ இல்லையோ, பலகாரம் இல்லாமல் தீபாவளி ஓடாது. காரணம் எல்லாரும் சாப்பிடுவாங்க. பிள்ளைங்க, யாரையும் வேடிக்கை பார்த்து ஏங்கக்கூடாது என, இருக்கும் பொருட்களில் எதையாவது செய்வாள் அம்மா. அந்த வகையில் தீபாவளி என்றாலே நமக்கு பெரும்பாலும் நினைவுக்கு வருவது முறுக்கும், அதிரசமும்தான். தீபாவளிக்கு அம்மா சுடும் முறுக்கையும், அதிரசத்தையும் ஒரு மாதத்திற்கு மேலும் வைத்து சாப்பிடுவோம். முறுக்கு சற்று நமத்தாலும், அதிரசம் அப்படியே இருக்கும். அப்படிப்பட்ட அதிரசத்தை சுவையாக, எளிதாக செய்வது எப்படி? என பார்ப்போம்.

அதிரசம் செய்முறை
1 கிலோ பச்சரிசியை கழுவி, அரிசியில் இருக்கும் ஈரம் போகும்வரை காயவைக்க வேண்டும். பின்னர் அதனை லேசாக கொரகொர பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். அரைக்கும்போது வாசனை கொடுக்கும் அளவிற்கு ஏலக்காயை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கிலோ அரிசிக்கு ஏற்ப, சுவைக்கு தகுந்தவாறு 600 அல்லது 750 கிராம் வெல்லம் எடுத்துக்கொள்ளலாம். அந்த வெல்லத்தை தண்ணீரில் கொதிக்கவைத்து பாகு காய்ச்ச வேண்டும். பாகு பதம் பற்றி கவலைப்படாதீர்கள். வெல்லம் தண்ணீர் நன்றாக கொதிக்கும்போது, விரல்களில் தொட்டு பார்க்கும்போது, அது நூல்போல வரவேண்டும். அவ்வளவுதான்...
அந்தப் பதம் வந்த பிறகு, பாகை இறக்கி, அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் ஊற்றி, இரண்டையும் நன்றாக கலந்துவிடவேண்டும். அப்போது கொஞ்சம் சுக்குப்பொடியும் சேர்த்துக்கொள்ளலாம். மொத்தமாக சேர்த்து பிசைந்த மாவை 2, 3 நாட்கள் ஊறவைக்க வேண்டும். பின்னர் மாவை எடுத்து பார்த்தால் நன்றாக பதம் பெற்றிருக்கும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து, அதனை வாழை இலையில் வைத்து தட்டி, சூடான கடலை எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான அதிரசம் ரெடி. இதில் வேறு எந்தப் பொருளும் சேர்க்கத் தேவையில்லை.
- பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் உணவுப்பொருள் செய்முறையால் ஆற்றல் கூட்டப்படுகிறது.
- நம்முடைய மூத்த தலைமுறையினரும் அந்நுட்பத்தை கைக்கொண்டு வருகின்றனர்.
நாம் பசிக்கும் நேரத்தில் நாலாவிதமான பட்சணங்களோடு உண்ணும் உணவைத் தவிர இடைப்பொழுதில் ஏதேனும் சிறுதீனி எடுத்துக் கொள்வது தவறென்ற கருத்து பரவலாக உண்டு. உண்மையில் நாவில் சுவைபட உண்கிற எதுவும் உணவே ஆகும். சிறுதீனியென்பது ஏதோ மனநிறைவுக்காகவும் அறிவியல் மொழியில் சொல்வதானால் மூளை நியாரன்களின் தூண்டலுக்கு உதவும் டொபமைன் (dopamine) ஆக மட்டுமே கருத முடியாது.
சிறுதீயானது உடலின் பிற பாகங்களுக்கு ஊட்டம் அளிக்கும் ஆற்றலாகவும் மாற்றமடைகிறது. ஆக சிறுதீனி உடலால் செரிக்கப்பட்டு பிற உணவுவகைகளைப் போல ஆற்றலாக மாற்றமடைவதாக இருந்தால்தான் உடலுக்கு நன்மை செய்யும். மாறாக வெறுமே மூளைக்குத் தூண்டலை அளிக்கும் சுவையை மட்டுமே கொடுத்து விட்டு சுவைப்பாகம் தவிர மற்றெல்லாம் கழிவாக மாறும் என்றால் அது உடலுக்கு, உடலின் உள்ளுறுப்புகளுக்குப் பெருஞ்சுமையாக மாறும். இச்சுமையானது நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு கட்டத்தில் உயிருக்கு ஆபத்தினை விளைவிக்கும் ஒன்றாக மாறி விடும்.
எடுத்துக்காட்டாக கண்ணுக்குக் கவர்ச்சியான நிறமும், புளிப்பும், காரமும் ஏற்றப்பட்ட பிராண்டட் (உருளைக்கிழங்கு) சிப்ஸை எடுத்துக் கொள்வோமே. இது பெயரளவில் தான் உருளைக்கிழங்கு என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் உ.கி ஐ மாவாக்கி, அந்த மாவுடன் மிகவும் மலிவான ஏதேனும் கிழங்கு அல்லது சத்தும் சாரமுமற்ற மாவினைப் பெருமளவு கலந்து கொள்வார்கள். இந்த மாவுக் கலப்பை இயந்திரத்தில் இட்டு சீரான பார்த்தால் ஈர்க்கும்படியான வடிவத்திற்கு வெட்டி இயந்திரச் சூட்டில் உலர்த்தி மொறுமொறுப்பாக்குவார்கள்.
சாலையோர சிப்ஸுக் கடையில் பெரிய வாணலியில் டின் டின்னாக எண்ணை ஊற்றி உருளைக் கிழங்கைப் பொரிப்பார்களே அதுபோல மேற்படி பிராண்டட் சிப்ஸ் பொரிக்கப்பட மாட்டாது. அப்படி எண்ணையில் பொரித்தால் எண்ணைக்குரிய விலை லாபத்தில் குறைந்து விடும். போக சிப்ஸைப் பொரித்த ஓரிரு வாரங்களுக்குள் சிப்ஸ் எண்ணைக்காரல் எடுக்க ஆரம்பித்து விடும். அந்தப் பண்டம் விரும்பத்தாகதாக மாறி விடும். எனவே தாவரக் கொழுப்பு, மிருகக் கொழுப்பு போன்ற ஏதேனும் மலிவான கொழுப்பின் வாசத்தை இயந்திரம் வாயிலாக ஏற்றி அதனோடு காரத்திற்கு ஒரு இரசாயனம், புளிப்பிற்கு ஏதேனும் ஒரு அமிலம், அப்புறம் நிறத்திற்கு ஒரு இரசாயனம், மேலும் அது கெடாதிருப்பதற்கும் வண்டு பூச்சிப் பிடிக்காமல் இருப்பதற்கு இரசாயனம் என பல கட்டங்களில் இரசாயனம் சிப்ஸில் ஏற்றப்படும்.
உணவுத் தரக்கட்டுப்பாட்டுத் துறை என்ற ஒன்று இருக்கிறதல்லவா. அது என்ன செய்யும்? இந்த சிப்ஸில் ஏற்றப்படும் இரசாயனம் உடலால் எளிதில் நீக்கப்படும் அளவு தான் என்று சான்றிதழ் வழங்கும். அதனை ஒருமுறை நீங்கள் உண்டால் அதில் சேர்க்கப்பட்ட இரசாயனம் உங்கள் உடலால் எளிதில் வெளியேற்றக் கூடியதாக இருக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து உள்ளே தள்ளும்போது உள்ளுறுப்புகளில் தங்கி தேக்கமடையும் தானே. ஆனால் மேற்படித் தின்பண்டங்களை சந்தையில் இறக்குவோர்க்கு அதுபற்றி அக்கறை இல்லை.

போப்பு
ஒரு சோதனையில் உடலால் வெளியேற்ற முடியும் அளவிற்குத் தான் சேர்க்கப்பட்டுள்ளது என்று சான்றிதழ் பெற்று விட்டார்கள். அதாவது தரக்கட்டுப்பாட்டுத் துறையை ஏமாற்றியாகி விட்டது. மக்களின் கண்களுக்கு அப்பால் வெகுதொலைவில் உள்ள வணிகப் பெருநிறுவனங்களுக்கு தங்களது பண்டம் எந்த அளவிற்கு மக்களின் உடலுக்கு, உடலின் உள்ளுறுப்புகளுக்குத் தீங்கு விளைவிக்கிறது என்பதைப் பற்றிக் கவலையில்லை. அவர்களுக்கு ஆண்டுதோறும் எட்டப்பட வேண்டிய வணிக இலக்கு, இலாப இலக்கு, தொழில் விஸ்தரிப்பு போன்றவற்றைப் பற்றியே மூளை முழுதும் கணக்கீடுகள் நிரம்பி இருக்கும்.
ஆனால் நம்முடைய பாரம்பரியமான சிறுதீனிகள் மிகவும் எளிமையானவை. நாம் காலங்காலமாக உணவிற்குப் பயன்படுத்தும் மூலப்பொருட்களையே அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுபவை. இவற்றில் இரசாயனக் கலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. எடுத்துக்காட்டாக உப்புக் கொண்டைக் கடலையையே எடுத்துக் கொள்ளுங்களேன். தமிழகத்துத் தென்மாவட்டக் கரிசல் நிலத்தில் ஒரு எளிய விவசாயி விளைவிக்கும் கருப்புக் கொண்டைக் கடலையை உப்பு நீரில் ஊற வைப்பார்கள். முழுதாக ஊறியபின்னர் நல்ல வெயிலில் காயவைப்பார்கள். பெருநிறுவன தயாரிப்பின்போது இயந்திரத்தில் இயல்புக்கு மாறான முறையில் உணவுப்பொருள் சூடேற்றப்படுகிற பொழுது அதன் மூலாதாரச் சத்துக்கள் சிதைந்து அவ்வுணவுப் பொருள் வெறும் குப்பையாகி விடும் என்பதைக் கவனியுங்கள்.
உப்புநீரில் ஊறவைத்த கொண்டைக்கடலை சூரிய வெப்பத்தில் உலர வைக்கிற பொழுது உணவுப் பொருள் சூரிய ஆற்றலைப் பெறுகிறது. ஆக ஒரே செயல்முறை ஓரிடத்தில் உணவுப் பொருள் அதன் ஆற்றலை இழந்து குப்பையாகிறது. பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் உணவுப்பொருள் செய்முறையால் ஆற்றல் கூட்டப்படுகிறது.
அடுத்து உலர வைத்த உப்புக் கொண்டைக் கடலையை வறுக்கிற பொழுது கனமான சூடுதாங்கும் இரும்பு வாணலியில் மணலைக் கொட்டி நெருப்பின் சூடு நேரடியாகத் தாக்காத வண்ணம் மணல் மீது ஏற்றப்பட்டு நிதானமாக சூடேற்றப்படுகிறது. அதன் வாயிலாக சூடு கெட்டியான கொண்டைக் கடலையின் நடுப்பகுதி வரைக்கும் ஏறி கடலை கொறிப்பதற்கு ஏதுவாக மொறுமொறுப்பாகிறது. இங்கே பண்டத்தில் மொறுமொறுப்புக்காக இரசாயனம் ஏதும் சேர்க்கப்படவில்லை. உப்புக்கடலையில் வாசனை மணலின் வாசமும் மித சூட்டின் வாசமும் கொ.கவின் வாசமும் மட்டுமே மிதமாக இருக்கும். உப்பும், சூடும் இதமாக நாவில் படரும். ஆனால் ஒரு பிராண்டட் சிப்ஸில் நாவின் சுவை மொட்டுக்களைச் சாட்டையடி போலச் சுளீரென்று தாக்கும் இரசாயன சுவையூட்டி சேர்க்கப்பட்டிருக்கும்.
உப்புக் கடலையின் சூடேற்றமும், உப்பும், அதன் புரதச்சத்தும் மூளையின் நியூரான்களுக்கு மட்டுமல்ல உடலின் உறுப்புகள் அனைத்திற்கு சத்துக்களை வழங்குகிறது. உடலுக்கு எவ்விதப் பாதிப்புகளையும் அளிப்பதில்லை. ஆனால் பெரும் விளம்பரங்களுடன் சந்தைப்படுத்தப்படும் தின்பண்டங்கள் சுளீரென்று சுவைமொட்டுக்களைத் தாக்குவதால் மீண்டும் மீண்டும் தின்னச் செய்வதற்குரிய போதையூக்கியூக்கியாகவும், அடிமைப்படுத்துவதாகவும் இருக்கிறது. போக எந்த சத்துக்களையும் வழங்காததால் அதனை எவ்வளவு தின்றாலும் நிறைவு ஏற்படுவதில்லை. அதனால் தான் பிஞ்சு நாவினைக் கொண்ட பிள்ளைகள் மீண்டும் மீண்டும் பிராண்டட் தின்பண்டங்களில் நாட்டம் கொள்கின்றனர்.
இதுவொரு வகையில் போதைப்பழக்கத்திற்கு அடிமைப்பட்ட உணர்வே ஆகும். உயிருடலில் ஏற்றப்பட்ட செயற்கையூக்கிகள் அனைத்தும் உடலை விட்டு வெளியேறுகிற பொழுது சட்டென்று சோர்வடைந்து விடும். ஏனென்றால் மிகைவூக்கம் குறையும் பொழுது இயல்பூக்கத்திற்கு உடல் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள சிறிது அவகாசம் தேவை. ஆனால் போதையேறிய உடல் திசுக்கள் ஏறிய ஊக்கத்திலேயே தொடர்ந்து நிலைத்திருக்க விருப்பம் கொள்கிறது.
அந்த விருப்பத்தை மீண்டும் மிகைவூக்கம் மட்டுமே ஈடுசெய்ய முடியும். ஆனால் தொடர்ந்து மிகையூக்கத்திற்கு உள்ளாகும் பொழுது உடலின் திசுக்களும் மென் நரம்புகளும் தளர்ச்சி அடைந்து முற்றிலுமாகச் செயல்திறன் குறைந்து விடும். இதைத்தான் இன்றைய உணவுமுறைப் பலவற்றிலும் புதிய தலைமுறையினர் எதிர்கொண்டு வருகின்றனர். இனம் புரியாத புதிய புதிய நோய்களுக்கும் இளம் வயதிலேயே ஆட்படுகின்றனர்.
இதுவரை அடையாளம் கண்டிராத இரசாயனம் உடலில் ஏற்றப்படுகிற பொழுது அவற்றை இனம் கண்டு செரிக்கவும் நீக்க நம்முடைய நொதிப்பிகளும், சுரப்பு நீர்களும் வெவ்வேறு வகையான இயல்புக்கு மாறாக சுரக்க நேரிடுகிறது. இயல்புக்கு மாறாக ஒரு நீர் சுரக்கும் பொழுது அதனை மட்டுப்படுத்த இன்னொன்று சுரந்து அல்லது அதனை ஈடுசெய்ய மற்றது சுரந்து என உடலின் உள்ளியக்கம் குழப்பத்திற்கு உள்ளாகிறது.
ஆனால் நாம் காலங்காலமாக உண்டு வந்த உணவுப் பொருட்களை நம்முடைய உயிரணுக்கள் அடையாளம் கண்டு அவற்றை எவ்வித புதிய மெனக்கெடலும் இன்றி எளிதில் செரித்து அவற்றின் சத்துக்கூறுகளை தன் வயப்படுத்திக் கொள்ளும். நம்முடைய நல்வினை மரபார்ந்த சிறுதீனிகளும், தின்பண்டங்களும் எளிய மக்கள் தயாரித்து கைக்கெட்டும் தொலைவில் விற்பனை செய்து கொண்டுள்ளனர். நம்முடைய மூத்த தலைமுறையினரும் அந்நுட்பத்தை கைக்கொண்டு வருகின்றனர்.
அப்படியான உடலுக்குச் சத்தும் மூளையின் நியூரான்களுக்குத் தூண்டலும் வழங்கவல்ல தின்பண்டங்கள் குறித்துத் தொடர்ந்து பார்ப்போம்.
செல்போன் எண்- 96293 45938
- மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி.
- உணவு பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இதற்கென ஒரு தனி மவுசு உண்டு.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒரு கப்
வெங்காயம் - 1
கேரட் - 2
முட்டைகோஸ் - அரை கப்
குடைமிளகாய் - 1
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், கேரட், முட்டைகோஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, எண்ணெய், கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக, சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி வைக்கவும்.
பிசைந்து மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து பூரி அளவிற்கு தேய்த்து கொள்ளவும்.
இதன் நடுவில், வேகவைத்த காய்களை மசாலாவை வைத்து, அனைத்து பக்கமும் சேர்த்து மூடிவிடவும்.
இதனை, இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான வெஜ் மோமோஸ் ரெடி..!
- மழைக்காலத்தில் சுடச்சுட ஸ்நாக்ஸ் சாப்பிட பிடிக்கும்.
- இன்று சுடச்சுட மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி செய்யலாம் வாங்க....
தேவையான பொருட்கள் :
கடலை மாவு - 1 கப்
பஜ்ஜி மிளகாய் - 6
வெங்காயம் - 2
வரமிளகாய் - 2
புளி - சிறிது
பூண்டு - 4 பல்
அரிசி மாவு - 1/2 கப்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சோடா உப்பு - 1 சிட்டிகை
பெருங்காயத் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மிளகாயை இரண்டாக கீறி விதையை எடுத்து விடவும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், சோடா உப்பு, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி, பூண்டு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அரைத்த கலவையை கீறிய மிளகாய்களின் நடுவில் வைக்கவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி, எண்ணெயை சூடானதும் இதில் மசாலா பிரட்டிய மிளகாயை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
* இதேப்போல் அனைத்து மிளகாயையும் செய்ய வேண்டும்.
* இப்போது சூப்பரான மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி ரெடி!!!
- உருளைக்கிழங்கில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று உருளைக்கிழங்கு சமோசா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 200 கிராம்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 2
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
மைதா மாவில் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவிற்கு பிசைவது போல் பிசைந்து 30 நிமிடங்கள் தனியாக மூடி வைக்கவும்.
உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் உருளைக்கிழங்கைச் சேர்த்து மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். உருளைக்கிழங்கு வெந்ததும் இறக்கி தனியாக வைக்கவும்.
பிசைந்து வைத்த மாவை சப்பாத்திக்கு திரட்டுவது போல் திரட்டி அரை வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
வெட்டிய துண்டில் ஒன்றை எடுத்து, அதன் ஒரு பாதி விளிம்பில் தண்ணீர் தொட்டுக் கொண்டு, மறுபாதி விளிம்பின் மேல் வைத்து ஒட்டி கூம்பு போல் செய்து கொள்ளவும்.
அதனுள்ளே தயாரித்த உருளைக்கிழங்கு மசாலா சிறிது வைத்து ஓரங்களில் தண்ணீர் தடவி ஒட்டி விடவும்.
இதே போல் மீதமுள்ள மாவிலும் மசாலாவை வைத்து சமோசா செய்து வைக்கவும்.
ஒரு அடிகனமாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.
இப்போது சுவையான உருளைக்கிழங்கு சமோசா தயார்.
- குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் மிகவும் பிடிக்கும்.
- இன்று வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
உப்பு - 1/2 டீஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 150 கிராம்
செய்முறை :
உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதனை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கப்பில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் மிளகாய் தூள் கலவையைத் தூவி எல்லா சிப்ஸிலும் நன்றாகப் படும்படி குலுக்கி வைக்கவும்.
இதோ சுவையான மொறு மொறு சிப்ஸ் ரெடி!!!
காற்று புகாத டப்பாவில் போட்டு 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.
குறிப்பு :
உருளைக்கிழங்கை சீவி நீண்ட நேரம் வைத்தால் நிறம் மாறி போகும், ஆகவே சீவியதும் அதனை ஒரு துணி மேல் பரப்பி உடனே பொரித்து விட வேண்டும். துணி மேல் போடுவதால் உருளையில் ஈரம் இல்லாமல், நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.
மிளகாய் தூள் பிடிக்காதவர்கள் மிளகு தூள், உப்பு சேர்த்தும் செய்யலாம்.
- மாலையில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
- இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 4,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - தேவையான அளவு
அரிசி மாவு - 3 டீஸ்பூன்
பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு.
செய்முறை
நீளமான உருளைக்கிழங்கை கழுவி தோல் சீவி விரல்களைப் போல மெல்லிய தடிமனான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அல்லது கட்டர் கொண்டு நறுக்கவும்.
நறுக்கிய உருளைக்கிழங்கில் உப்பு, மிளகாய் தூள், அரிசி மாவு, மிளகு தூள் கலந்து நன்றாக கலந்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்த உருளைக்கிழங்கை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
சூப்பரான உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ் ரெடி.
- கேழ்வரகில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு - அரை கிலோ,
வறுத்த உளுந்து - 50 கிராம்,
கடலைப் பருப்பு - 50 கிராம்,
உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
* கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ளவும்.
* இந்த மாவுடன் வறுத்த உளுந்து சேர்த்து, நன்றாக அரைக்கவும்.
* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், கடலைப் பருப்பைச் சேர்த்து, நன்றாகக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.
* மாவை சிறிது எடுத்து சிறிய அளவில் உருண்டையாக உருட்டி, வாழை இலையில் போட்டு, மெல்லியதாகத் தட்டிக்கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டி வைத்துள்ள தட்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.
* சூப்பரான ஸ்நாக்ஸ் கேழ்வரகுத் தட்டுவடை ரெடி.
* இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.
- குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று மீன் பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முள் நீக்கிய மீன் துண்டுகள் - கால் கிலோ
முட்டை - 2
சோளமாவு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
மீன் துண்டுகளை நன்றாக கழுவி இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் அவைகளை உதிர்த்துக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் முட்டையை அடித்து ஊற்றி நன்றாக கலக்கி அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோள மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
அதனுடன் மீன் துண்டுகளை கொட்டி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் இந்த மீன் கலவையை கொதிக்கும் எண்ணெய்யில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்தெடுக்கவும்.
ருசியான மீன் பக்கோடா தயார்.
- உருளைக்கிழங்கில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று உருளைக்கிழங்கு அருமையான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க...
தேவையான பொருட்கள்
மாவிற்கு…
மைதா - அரை கப்,
உப்பு - 1/2 டீஸ்பூன்,
ஓமம் - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
தண்ணீர் - தேவைக்கு.
பூரணத்திற்கு…
உருளைக்கிழங்கு - 1,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, கடுகு - சிறிது,
வெங்காயம் - 1,
கடலை மாவு - 1 டீஸ்பூன்,
உப்பு - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை :
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து கையில் பிடிக்கும் பதம் வந்ததும் ஓமம், தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து அரை மணிநேரம் அப்படியே மூடி வைக்கவும்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின், பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கை, மஞ்சள் தூள், உப்பு, கடலை மாவு, கொத்தமல்லியுடன் சேர்த்து வதக்கி, அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கவும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திக் கல்லில் நீளவாக்கில் தேய்த்து கொள்ளவும். தேய்த்த மாவின் உள்பக்கம் கத்தியால் 3 பாகங்களாக கீறி விடவும்.
பிறகு பூரணத்தை நீளவாக்கில் உருட்டி மாவின் நடுவில் வைத்து மூடி சாக்லெட்டாக ரெடி செய்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.
சூப்பரான ஆலு டோஃபி ரெடி.
- கேழ்வரகில் சத்தான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று கேழ்வரகு பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 100 கிராம்,
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,
தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி - கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்துக் கொள்ளவும்.
* சூப்பரான சத்தான கேழ்வரகு பக்கோடா ரெடி.






