என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Recipes"
- சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும்.
- சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
பொதுவாகவே சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் பெரிய ஆசை. இதற்காக புதிய புதிய வகைகளில் சமையல்களை செய்வார்கள். அப்படி சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம். சமையல் ருசியாக இருக்க கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான 10 குறிப்புகள் இதோ உங்களுக்காக...
சமையலில் செய்யக்கூடாவதவை
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* ஃபிரிட்ஜில் வாழைப்பழமும் உருளைக்கிழங்கும் வைக்கக்கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
செய்ய வேண்டியவை..!
* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.
* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
* ஜவ்வரிசி வற்றலுக்கு அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.
* போளிக்கு மாவு கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.
*குருமாவை இறக்கும் போது கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.
* பச்சை கற்பூரம் டப்பாவில் நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.
* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.
* வாழைப்பூவை முதல் நாள் இரவே நறுக்கி தண்ணீரில் போட வேண்டும்.
* கடலை உருண்டைக்கு வெல்லப்பாகு முத்தின பாகாக இருக்க வேண்டும்.
* வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.
- வத்தக்குழம்பில் உப்பு அதிகமானால் தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவையும் கூடும்.
- பிரிஞ்சி இலையை பொடித்து மூலை முடுக்குகளில் போட்டால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.
* வெந்தயக்கீரையை வேகவைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் உடல் சுத்தமாகும். குடல் புண்கள் குணமாகும். மலச்சிக்கலையும் போக்கும்.
* பருப்புக்கீரையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் அதிகமாக உள்ளன. நுரையீரல் பாதிப்புகளில் இருந்து காக்கும் வல்லமை இதற்கு உண்டு. உடலில் உள்ள கொழுப்புகளையும் கரைக்கும் ஆற்றல் கொண்டது. வெந்நீர் மற்றும் வியர்வையால் ஏற்பட்ட கொப்புளங்கள், தீக்காயங்களுக்கு பருப்புக்கீரையை அரைத்து தடவ குணம் பெறும்.
* வெண்டைக்காய் பொரியல் செய்து முடித்த பின்பு வேர்க்கடலையை பொடித்துப்போட்டு கலந்தால் சுவை கூடும். பொரியல் மீதமாகிவிட்டால் தயிர் சேர்த்து பச்சடி செய்து சாப்பிடலாம்.
* பூண்டு, வெங்காயம் நறுக்கிய பின்பு கைகளில் உப்பு தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவினால் வாடை வீசாது.
* பிரெட், பர்பி, மைசூர் பாகு போன்றவைகளை வெட்டும் கத்திகளை சூடாக்கி வெட்டினால் பிசிறு இல்லாமல் அழகான துண்டுகள் கிடைக்கும்.
* பால் திரிந்துவிட்டால் அதை வீணாக்காமல் வெள்ளிப்பாத்திரங்கள், வெள்ளி நகைகள், கொலுசுகளை அதில் 15 நிமிடங்கள் ஊற வைத்து தேய்த்து எடுத்து துணியால் துடைத்துவிட்டால் புதிது போல 'வெள்ளி' மின்னும்.
* பிரிஞ்சி இலைகளை பொடித்து சமையலறை மூலை முடுக்குகளில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.
* வத்தக்குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் தேங்காய்ப்பால் சேர்த்தால் சரியாகிவிடும். சுவையும் கூடும்.
* பூரி உப்பலாக சில மணி நேரம் இருக்க, ரவை ஒரு ஸ்பூன், பச்சரிசி மாவு ஒரு ஸ்பூன் கலந்து கோதுமை மாவை கெட்டியாகப் பிசைந்து ஊற விடாமல் உடனே தடிமனாக தேய்த்து பொரித்து எடுக்கவும். உப்பலான சுவையான பூரி கிடைக்கும்.
* தக்காளி சீக்கிரமாக வதங்க, சர்க்கரை ஒரு டீஸ்பூன் சேர்த்தால் போதும்.
* சாதம் வடித்த கஞ்சியை வீணாக்காமல் அதனுடன் சிறிது உப்பு, சீரகம், மிளகு கலந்து சூப் போல பருகலாம். உடலுக்கு ஆரோக்கியமும், உற்சாகமும் மிகுதியாக கிடைக்கும்.
* பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிவிட்டு, எலுமிச்சை சாறில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து பத்திரபடுத்தி தயிர் சாதத்திற்கு எண்ணெய்யில் பொரித்தும், பொரிக்காமலும் சாப்பிடலாம். ருசி அமோகமாக இருக்கும்.
* சேப்பங்கிழங்கை வேகவைப்பதற்கு முன்பு கத்தி கொண்டு ஆங்காங்கே கீறிவிட்டால் வேகவைத்த பிறகு தோல் உரிப்பதற்கு எளிதாக இருக்கும்.
* காபி, டீ கறை படிந்த பீங்கான் பாத்திரங்களை எலுமிச்சை தோல் கொண்டு தேய்த்து கழுவினால் பளிச்சென்று இருக்கும். எலுமிச்சை தோலை தூக்கி எறியாமல் பிரிட்ஜில் பாதுகாத்து பயன்படுத்தலாம்.
- வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான குளிர்பானம் தான் ரோஸ் மில்க்.
- இதுமாதிரி வித்தியாசமான ரோஸ் மில்க்கை ஒருமுறை செய்து பருகிப் பாருங்கள்.
வெயில் காலம் வந்து விட்டது. நம்முடைய வீட்டிலேயே குளிர்பானங்களைத் தயாரித்து குடிப்பது நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். அந்த வரிசையில் எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒரு குளிர்பானம் தான் இந்த ரோஸ் மில்க். பாலை காய்ச்சி, சர்க்கரையை போட்டு, ரோஸ் எசன்ஸ் ஊற்றி கலக்கினோம் என்று இல்லாமல், இதற்கென்று ஒரு பக்குவம் உள்ளது. முறையாக இதுமாதிரி வித்தியாசமான ரோஸ் மில்க்கை ஒருமுறை செய்து பருகிப் பாருங்கள். இதனுடைய சுவைக்கு உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அடிமையாகி விடுவார்கள். அந்த அளவிற்கு சுவைமிகுந்த ரோஸ்மில்க் சாகோ டிரிங்க்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
பால்- 1 லிட்டர்
ஜவ்வரிசி- ஒரு கப்
ரோஸ்மில்க் எசன்ஸ்- தேவையான அளவு
அகர் அகர்- ஒரு ஸ்பூன்
கண்டன்ஸ்டு மில்க்- ஒரு கப்
சப்ஜா விதை- ஒரு ஸ்பூன்
சர்க்கரை- ஒரு கப்
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை வேகவைத்து அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் அகர் அகர் சேர்த்துய் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அதில் பால், சர்க்கரை மற்றும் ரோஸ் மில்க் எசன்ஸ், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலந்து அதனை ஒரு பிளேட்டில் ஊற்றி ஃபிரிட்ஜில் ஒரு மணிநேரத்துக்கு வைக்க வேண்டும். இதனை ஒரு மணிநேரத்துக்கு பிறகு ஜெல்லிகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ரோஸ்மில்க் ஜெல்லி தயார்.
பின்னர் மீண்டும் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பால் ஆறியதும் அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்க வேண்டும். இப்போது அந்த பாலில் வேகவைத்த ஜவ்வரிசி, சிறிது சிறிதாக வெட்டிவைத்துள்ள ரோஸ்மில்க் ஜெல்லி, ஊறவைத்த சப்ஜா விதை சேர்த்து கலந்து பிரிட்ஜில் வைத்து சில்லென்று பருகலாம். இந்த கோடை காலத்திற்கு ஏற்ற சுவையான ரோஸ்மில்க் சாகோ டிரிங்க் ரெடி. நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
- கொஞ்சம் வித்தியாசமாக சேமியாவை பயன்படுத்தி பிரியாணி செய்து பார்க்கலாம்.
பிரியாணி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சீரக சம்பா பிரியாணி, பாஸ்மதி அரிசி பிரியாணிகளை தான் நாம் சுவைத்திருப்போம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக சேமியாவை பயன்படுத்தி பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சேமியா குலையாமல் தனித்தனியாக பொல பொல வென்று எப்படி வரும் என்பதை பற்றியும் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சேமியா -1 பாக்கெட்
சிக்கன்- 150 கிராம்
பெரிய வெங்காயம் -2
தக்காளி -2
பச்சை மிளகாய் -3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் ஸ்பூன்
பட்டை -1 இன்ச்
பிரியாணி இலை -1
கிராம்பு - 2
ஏலக்காய் 2
மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
கரம் மசாலா - கால் ஸ்பூன்
கொத்தமல்லி புதினா -சிறிதளவு
தயிர் -50 மில்லி
நெய் -2 ஸ்பூன்
எண்ணெய் -4 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
செய்முறை
முதலில் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அதில் சேமியாவை சேர்த்து அதிலே ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து 70 சதவீதம் வேகவிட வேண்டும். பின்னர் அதை தனியாக எடுத்து ஆற வைக்கவும், இப்படி வேக வைத்து ஆற வைத்தால்தான் சேமியா குலையாமலும் உதிரி உதிரியாகவும் வரும்.
பின்னர் மீண்டும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை இவைகளையும் சேர்த்து தாளிக்கவும். பிறகு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கிய பிறகு புதினாவும் கொத்தமல்லியும் சேர்த்து நன்கு கிளறவும். அதன் பிறகு தக்காளியை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு தயிரையும் சேர்க்க வேண்டும்.
அதன்பிறகு எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளையும் சேர்த்து வேக வைக்க வேண்டும். சிக்கன் வெந்த பிறகு சேமியாவை சேர்த்து பட்டும் படாமல் கிளறி விட்டு, நெய் சேர்த்து ஐந்து நிமிடம் மூடி போட்டு வைக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து எடுத்து கிளறி இறக்கினால் சுவையான கம கம வென சேமியா பிரியாணி ரெடி.
சேமியா உப்புமா என்றாலே ஒரு சிலருக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆகவே சேமியாவை வைத்து இந்த முறையில் பிரியாணி செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். நீங்களும் செய்து பார்த்து சுவைத்து பாருங்கள்.
- எல்லோரும் தினமும், இட்லி, தோசை, பொங்கல் தான் சாப்பிட்டு இருப்போம்.
- கடலைப்பருப்பு, முட்டையை வைத்து எப்படி அடை தோசை?
பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் எல்லாரும் சாப்பிட்டு இருப்போம். ஆனால் எப்பொழுதும் போல வெறும் தோசை மட்டும் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக கடலைப்பருப்பு, முட்டையை வைத்து எப்படி அடை தோசை செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு- 100 கிராம்
பொட்டுக்கடலை- ஒரு கைபுடி
முட்டை- 5
வெங்காயம்- 2
பச்சை மிளகாய்- 2
பச்சை அரிசி- 200 கிராம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
செய்முறை:
முதலில் கடலைப்பருப்பு மற்றும் பச்சரிசியை 6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த கடலை பருப்பு மற்றும் அரிசியுடன், பொட்டுக்கடலை சேர்த்து நன்றாக கொர கொரப்ப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு மற்றும் பச்சரிசி கலவையுடன் வெங்காயம், பச்சைமிளகாய், முட்டை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், தோசை மாவு கலவையை ஊற்றி இருபுறமும் வேக வைத்து சுட்டு எடுக்கவும். அவ்வளவு தான் அட்டகாசமான முட்டை அடை தோசை தயார். இதனை கார சட்னியுடன் சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும். நிச்சயம் ஒருமுறை செய்து பாருங்கள். வேண்டுமென்றால் கொத்தமல்லித் தழை அல்லது வெங்காயத்தாள் தூவியும் தோசை வார்க்கலாம். சுவை அட்டகாசமாக இருக்கும்.
- கத்தரிக்காய் குழம்பு சமைக்கும்போது நெய்யில் வதக்கி சேர்த்தால் மணம் கூடும்.
- ஊறுகாய்களில் கடுகு எண்ணெய்யை சேர்த்தால் கெடாமல் இருக்கும்.
* புதினா, தக்காளி இரண்டையும் அரைத்து, பஜ்ஜி மாவில் கலந்து கலர்புல் பஜ்ஜிகள் செய்யலாம்.
* ரசத்திற்கு புளி கரைக்கும்போது சிறிது வெல்லமும் சேர்த்து கரைத்தால் சுவை கூடும்.
* கடைகளில் இருந்து வாங்கி வரும் காய்கறிகளை சிறிது நேரம் எலுமிச்சை சாறு கலந்த நீரில் முக்கி வைத்தால் அவற்றின் மீது தெளிக்கப்பட்டிருக்கும் ரசாயனத்தின் வீரியம் குறையும்.
* வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, தேன், வாழைப்பழம், பூசணி இவற்றை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
* தேங்காய் சட்னியில் தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக சிறிது தேங்காய் பால் கலந்தால் மணமும், சுவையும் கூடும்.
* மாங்காய், எலுமிச்சை ஊறுகாய்களில் சிறிது கடுகு எண்ணெய்யை சேர்த்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
* கேரட், பீட்ரூட்டை துருவி தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் கண்ணைக் கவரும் கலர்புல் தோசை ரெடி.
* கத்தரிக்காய் குழம்பு சமைக்கும்போது கத்தரிக்காயை தனியாக நெய்யில் வதக்கி குழம்பில் சேர்த்தால் மணம் கூடும்.
* கிழங்கு வகைகளை சமைக்கும்போது அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயம் கலவையில் கிழங்குகளை புரட்டி எடுத்து பின் வதக்கினால், காரம், மணம் சூப்பராய் இருக்கும்.
* கீரை சமைக்கும்போது மஞ்சள்தூள் கலந்த சுடுநீரில் சிறிது நேரம் மூழ்க வைத்துவிட்டு சமைத்தால் கீரையின் நிறமும் மாறாது, ரசாயன பாதிப்பும் இருக்காது.
- எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்தது நார்த்தங்காய்.
- நார்த்தங்காய் இலைகூட மருத்துவ சக்தி வாய்ந்தது.
ஆயுர்வேத மருத்துவ முறையில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கியமான காய் வகை, எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த நார்த்தங்காய். காய் மட்டுமல்ல, இதன் இலைகூட மருத்துவ சக்தி வாய்ந்தது. எலுமிச்சை வகையைச் சேர்ந்தது என்பதால், இதில் சிட்ரிக் அமிலம் அதிகம் இருக்கும். அதனால், வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும்.
`நார்த்தங்காய்' என்றவுடன், பலருக்கும் நினைவுக்கு வரும் ரெசிபி ஊறுகாய்தான். பல்வேறு நன்மைகளைக்கொண்டது என்ற போதிலும், ஊறுகாயை இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்படுவதுண்டு. ஆனால், நார்த்தை இலைப் பொடிக்கு அப்படியான எந்த வரைமுறையும் கிடையாது. அனைவரும் சாப்பிடலாம்.
பயன்கள்:
* உடல் சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பித்தம், வாதம் போன்ற பிரச்னைகள் குணமாகும்.
* செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது.
* வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் சிறந்த மருந்து.
* குடல் பிரச்னைகள் சரியாகும்.
* இரும்புச்சத்து, சோடியம், கால்சியம், பீட்டா கரோட்டீன், மக்னீசியம், அயோடின், நார்ச்சத்துகள் நிறைந்தது என்பதால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கான மிகச்சிறந்த மருந்து இது.
* நார்த்தையிலுள்ள செலினியம் சத்து, மூளையின் செயல்பாடுகளைத் தூண்டிவிடும். எனவே, சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் செயல்பட முடியும்.
* மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாக செயல்படும். எனவே, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* வாந்தி உணர்வு கட்டுப்படும் என்பதால் கர்ப்பிணிகள் தாராளமாகச் சாப்பிடலாம்.
* அஜீரணத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சல் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
* ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைத்திருக்க உதவும்.
தேவையான பொருட்கள்:
நரம்பு நீக்கிய, சுத்தமான இளம் நார்த்தை இலை- 20
காய்ந்த மிளகாய்- 4
தேங்காய்- ஒரு கப்
புளி- எலுமிச்சை அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
இளம் நார்த்தை இலைகளாக பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் நார்த்தை இலைகளில் அதன் நார்பகுதி அதாவது இலைகளின் நடுவே உள்ள நார்பகுதியை கிள்ளி எடுத்துவிட்டு இலைகளை ஆய்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் காய்ந்த மிளகாயை மட்டும் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு நார்த்தை இலை, புளி, காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய், உப்பு சேர்த்து துவையல் பதத்திற்கு மிக்சி அல்லது அம்மியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான நார்த்தை இலை துவையல் ரெடி. குறிப்பு: இதனை தாளித்தும் சாப்பிடலாம். உடலில் உள்ள பித்தத்தை குறைப்பதற்கு இந்த நார்த்தை இலை துவையல் மிகவும் நல்லது.
- குளிக்கும்போது தயிரை உடலில் தேய்த்து குளித்தால் வேர்க்குரு மறைந்து விடும்.
- வாழைப்பழத்தை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
* குழம்பு வடகம் செய்யும்போது துவரம் பருப்பு, உளுந்தம் பருப்புடன் காராமணியும் சேர்த்து ஊறவைத்து அரைத்து விடுங்கள். அதை வடகமாக பொரித்தால் கர கரவென்று ருசியாக இருக்கும்.
* சமையல் மேடையை நன்கு சுத்தம் செய்து அதில் கொத்தமல்லி தழைகளை பரப்பி, அகன்ற கிண்ணத்தால் மூடி வைத்து விடுங்கள். இரண்டு, மூன்று நாள்கள் பசுமையாக இருக்கும்.
* ரசத்துக்கு தாளிக்கும் பொழுது சிறிது நெய்யில் கடுகுடன் 4, 5 முழு மிளகையும் சேர்த்து தாளித்தால் ரசம் மணத்துடன் இருக்கும்.
* கிராம்பை தண்ணீரில் உரசி, முகப்பரு உள்ள இடத்தில் தடவினால் பரு மறைந்து விடும். மீண்டும் பரு வராது.
* குளிக்கும்போது தயிரை உடலில் தேய்த்து குளித்தால் வேர்க்குரு மறைந்து விடும்.
* வீட்டில் எந்த ஸ்வீட் செய்தாலும் அதில் சிறிது உப்பு கலந்தால் அதன் சுவை மேலும் கூடும்.
* சப்பாத்தி அல்லது பூரிக்கு மாவு பிசைந்து, கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால், மேல் பரப்பு காய்ந்து போயிருக்கும். இப்படி நேராமல் இருக்க, மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி வைக்கலாம். அல்லது ஈரத்துணியால் மூடி வைக்கலாம்.
* நெய்யில் சிறு கட்டி வெல்லத்தை போட்டு வைத்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் கெடாது.
* வாழைப்பழத்தை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
* வடைக்கு மாவு அரைக்கும்போது நீர் சிறிது அதிகமாகி விட்டால், ஒரு ஸ்பூன் நெய்யை அதில் விடவும். மாவு இறுகி விடும்.
* அடுப்பில் வைத்திருக்கும் பால் பொங்கி வழியாமல் இருக்க, கடைகளில் விற்கும் எவர் சில்வர் கோலி உருண்டை (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பால்)களை வாங்கி பாலில் போட்டால் போதும். பால் பொங்கவே பொங்காது.
* பத்து அல்லது பதினைந்து நெல்லை சுத்தமாக கழுவி விட்டு, காலையில் கறந்த பசும் பாலில் போட்டு வையுங்கள். இரவு வரைக்கும் பால் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.
* கத்தரிக்காய், வாழைக்காய் போன்ற காய்களை நறுக்கியவுடன் நீரில் போட்டு விடுங்கள். இல்லையெனில் அவற்றின் நிறம் மாறி விடும். நிறம் மாறினால் சுவை கெட்டு விடும்.
- அதிரசம் செய்யும்போது பேரீச்சம் பழம் சேர்த்தால் ருசியாக இருக்கும்.
- பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்தால் விரைவில் பழுக்காது.
* முட்டைக்கோசை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை தயிரில் போட்டு ஊறவைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்த்தால் முட்டைகோஸ் தயிர் பச்சடி புது சுவையுடன் இருக்கும்.
* அதிரசம் செய்யும்போது மாவுடன் சிறிது பேரீச்சம் பழம் சேர்த்தால் ருசியாக இருக்கும்.
* ஜவ்வரிசியை தண்ணீரில் ஊற வைத்து பாயசம் செய்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* மெதுவடைக்கு உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து அரைத்தால் எண்ணெய் அதிகம் செலவாகாது.
* பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க மாவை கலக்கும்போது சிறிது நெய்யும், உப்பிட்ட தயிரும் கலக்க வேண்டும்.
* தேங்காய் எண்ணெய்யில் சுத்தமான உப்புக்கல்லை சிறிது போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது.
* எந்த வகை சட்னி செய்தாலும் சிறிது புதினா சேர்த்து அரைக்க வாசனையாக இருக்கும்.
* பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்தால் அவை விரைவில் பழுக்காது.
* வாழைப்பூவுடன் முருங்கைக்கீரை சேர்த்து பொரியல் செய்தால் சுவை சூப்பரோ சூப்பர்.
* வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பூ கூட்டு செய்யும்போது தேங்காய் எண்ணெய்யில் தாளித்தால் ருசியாக இருக்கும்.
* முருங்கை இலையை உருவிய பிறகு காம்புகளை நறுக்கிப்போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிடலாம். அது உடல், கை, கால் அசதிக்கு நல்லது.
* கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா செய்யும்போது கூடவே மில்க்மெய்ட் ஊற்றி கிளறினால் அல்வா மணம், ருசியுடன் இருக்கும்.
* நெய் ஊற்றி ரவா லட்டு செய்த பின்பு தூய வெண்மை நிறம் கிடைக்க, சர்க்கரையை பொடித்து அதில் லட்டை புரட்டி எடுக்க வேண்டும்.
* கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து பஜ்ஜி செய்தால் சுவை அமோகமாக இருக்கும்.
* தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் செய்த பின்பு மோர் மிளகாயை எண்ணெய்யில் பொரித்து பொடி செய்து தூவினால் சுவையாக இருக்கும்.
* பஞ்சாமிர்தத்துடன் ஒரு கப் பால் சேர்த்து ஒரு மூடி தேங்காய் துருவல் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் கொட்டி கிளறி தட்டில் கொட்டி துண்டுகளாக்கினால் பஞ்சாமிர்த பர்பி ரெடி.
* உளுந்து வடை செய்யும்போது 2 டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை செய்தால் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.
- வெல்லம் பாகு காய்ச்சி இடியாப்பத்தில் ஊற்றி சாப்பிட ருசியாக இருக்கும்.
- முருங்கைக்காயை பேப்பரை சுற்றி பிரிட்ஜில் வைத்தால்காயாது.
* பீட்ரூட் துருவலுடன் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி இடியாப்பத்தில் ஊற்றி சாப்பிட சத்துக்கு சத்து, சுவைக்கு சுவை. ருசியாகவும் இருக்கும்.
* உளுந்து வடை செய்யும்போது மாவில் சிறிது சேமியாவை தூள் செய்து போட்டால் சுவையாக இருக்கும். மாவு அரைக்கும்போது சிறிது துவரம் பருப்பும் சேர்த்து அரைக்க வடை மிருதுவாக இருக்கும்.
* முருங்கைக்காயை அப்படியே பிரிட்ஜில் வைத்தால் காய்ந்துவிடும். அதில் ஒரு பேப்பரை சுற்றி வைத்தால் காயாது.
* பிரட் காய்ந்து போனால் இட்லி சட்டியில் வைத்து ஐந்து நிமிடம் வேகவிட்டு எடுக்க மிருதுவாகும்.
* தோசைக்கு மாவு அரைக்கும்போது வெண்டைக்காய் கொஞ்சம் சேர்த்து அரைக்க தோசை பஞ்சு மாதிரி இருக்கும்.
* எலுமிச்சை, நார்த்தங்காயில் ஊறுகாய் செய்யும்போது அவைகளில் உள்ள விதைகளை நீக்கிவிட்டால் ஊறுகாயில் கசப்பு இருக்காது.
* சட்னியில் காரம் அதிகமாக இருந்தால் சிறிது தயிர் கலக்க காரம் போய்விடும். சுவையும் கூடும்.
* கொத்தமல்லி துவையலுக்கு புளிக்கு பதிலாக தக்காளி சேர்க்க ருசியாக இருக்கும்.
* பூண்டுவை கொஞ்ச நேரம் தண்ணீரில் போட்டால் உரிப்பதற்கு எளிதாக இருக்கும்.
* தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்க்க சுவை கூடும்.
* டீ தயாரிக்கும்போது ஆரஞ்சு பழத்தோலை சிறிது சேர்த்து கொதிக்க வைத்தால் டீ சுவையாக இருக்கும்.
* காய்கறிகளை நறுக்கி உப்பு கலந்த நீரில் போட்டு வைத்திருந்து சமைக்க நிறம் மாறாது. உப்பு சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது.
* சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து விட்டால் அதில் இரண்டு, மூன்று சொட்டு எலுமிச்சை சாறு சேர்க்க உதிரியாகி சுவையாக இருக்கும்.
* தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில் கொள்ளு சேர்க்க தோசை மிருதுவாகிவிடும்.
* இட்லி மாவு நீர்த்துப் போனால் எண்ணெய் இல்லாமல் வறுத்த ரவையை சேர்த்துவிட்டு பத்து நிமிடங்கள் கழித்து இட்லி சுட்டால் சுவையாகவும் இருக்கும்.
* இடியாப்பத்திற்கு மாவு பிசையும்போது சிறிதளவு வெண்ணெய் சேர்த்தால் பிழிவது எளிதாகும். இடியாப்பமும் நல்ல பதத்துடன் வரும்.
* சுண்டலை தாளித்த பிறகு சிறிதளவு கசகசாவை வறுத்து தூவ சுவை கூடும்.
* கீரைகளை வேகவைக்கும்போது எலுமிச்சை பழ சாறை சிறிது விட்டால், கீரையின் நிறம் மாறாது. கீரை இலையும் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் இருக்கும். ருசியும் அமோகமாக இருக்கும்.
* உப்பு சேமித்து வைத்திருக்கும் ஜாடியில் சிறிது அரிசியை துணியில் முடிச்சு போட்டு வைத்தால் உப்பு ஈரமாகாது.
* காளான்களை அலுமினிய பாத்திரத்தில் சமைத்தால் பாத்திரம் கறுத்துவிடும்.
* உருளைக்கிழங்கை வேக வைக்கும்போது உப்பை சேர்க்க, விரைவில் வேகும். வெடிப்பும் வராது.
* பஜ்ஜி மாவை மிக்சியில் போட்டு லேசாக அரைத்துவிட்டு பஜ்ஜி செய்தால் மிருதுவாகவும், உப்பியும் இருக்கும்.
* பிரிட்ஜில் பேக்கிங் சோடா டப்பாவை திறந்த நிலையில் வைத்தால் துர்நாற்றம் வராது.
* பாத்திரங்களில் எண்ணெய் பிசுபிசுப்பு இருந்தால் சிறிது தயிர் ஊற்றி தேங்காய் நார் கொண்டு அழுத்தி தேய்த்தால் பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
- குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய இனிப்புகளில் ஒன்று சேமியா கேசரி.
- மாலை வேளையில் தேனீருடன் சுவைக்கலாம்.
குழந்தைகள் பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய இனிப்புகளில் ஒன்று தான் சேமியா கேசரி. இதனை மாலை வேளையில் தேனீருடன் சுவைக்கலாம்.
தேவையான பொருட்கள்:
சேமியா - 500 கிராம்
சர்க்கரை - 400 கிராம்
நெய் - தேவையான அளவு
முந்திரி, பாதாம் - 2 (தேவையான அளவு)
ஏலக்காய் - ஒரு ஸ்பூன்
குங்குமப்பூ - சிறிதளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி அதில் முந்திரி, பாதாம் சேர்த்து வறுக்க வேண்டும். அதனுடன் சேமியாவையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சேமியாவை வேக வைக்க வேண்டும்.
அதன்பிறகு சேமியா வெந்த பிறகு சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும். அதனுடன் பாலில் குங்குமப்பூ சேர்த்து கலந்து சேமியா கேசரியில் சேர்க்க வேண்டும். நன்றாக கிளறி இறக்கினால் சேமியா கேசரி தயார்.
- சமையல் அறையில் வசம்பு தூள் தூவி விட்டால் பூச்சிகள் வராது.
- காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
* இறைச்சி வேகவைக்கும்போது கொஞ்சம் பாக்கு சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* வெந்தயத்தை வேகவைத்து, கடைந்து தேன் கலந்து உண்டு வர தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
* காலிபிளவர் சமைக்கும்போது கொஞ்சம் பால் சேர்த்தால் பூ போன்ற வெள்ளை நிறம் மாறாமல் இருக்கும். பச்சை வாடையும் வராது.
* பிரிட்ஜில் மாவை வைக்கும்போது உப்பு சேர்க்கக்கூடாது. உப்பு சேர்த்தால் புளித்துவிடும்.
* அலுமினியப் பாத்திரங்களில் அடிப்பிடிப்பு கறையை நீக்க உப்புக்காகிதம் கொண்டு தேய்த்தால் பாத்திரம் புதுசு போல மின்னும்.
* ஒரு கைப்பிடி கல் உப்பை துணியில் கட்டி அரிசி மூட்டைக்கு அருகில் வைத்தால் பூச்சிகள் எதுவும் வராது.
* சமையல் அறையில் வசம்பு தூள் தூவி விட்டால் பூச்சிகள் வராது.
* எறும்பு தொந்தரவு உள்ள இடங்களில் நான்கைந்து கிராம்பை போட்டு விட்டால் எறும்புகள் வராது.
* சீடை செய்யும்போது அதனை ஊசியால் குத்தி பின்பு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.
* புளியை வெந்நீரில் ஊறவைத்து, பிறகு கரைத்தால் சீக்கிரமாக கரைந்துவிடும்.
* சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலை அகற்றி வட்ட வடிவமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறு மொறுவென இருக்கும்.
* அரிசியில் வண்டோ, புழுவோ வராமல் இருக்க வேப்பம் இலைகளைப் போட்டு வைக்கலாம்.
* உலர்ந்த ஆரஞ்சு தோலை புகை போட்டால் வீட்டுக்குள் கொசு வராது. இது இயற்கையான கொசு விரட்டி.
* பூஜை செய்யும்போது வீட்டில் புகை அதிகமாக இருந்தால் ஒரு ஈரத்துணியை தொங்கவிடுங்கள். புகை காணாமல் போய்விடும்.
* சப்பாத்திக்கு மாவு பிசையும் முன்னால் கையில் கொஞ்சம் உப்பை தடவிக்கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
* உருளைக்கிழங்கை வேகவைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் அவை ஜொலிக்கும்.
* காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்