search icon
என் மலர்tooltip icon
    • ஹெலிகாப்டர் சத்தம் கேட்டு யானை உள்ளிட்ட வனவிலங்கு மிரண்டு ஓடும்.
    • முறையாக எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

    சென்னை:

    கோடை விடுமுறையை முன்னிட்டு, ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதை முன்னிட்டு, கடந்த 13-ந் தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு சுற்றுலாத்துறை முடிவு செய்தது. ஆனால், இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், முருகவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த ஹெலிகாப்டர் சத்தம் கேட்டு யானை உள்ளிட்ட வனவிலங்கு மிரண்டு ஓடும். அதன் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே, இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இந்த திட்டத்துக்கு வனத்துறை இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி இடைக்கால தடை விதித்தனர். பின்னர் விசாரணையை தள்ளிவைத்தனர்.

    இந்தநிலையில், இந்த வழக்கை நீதிபதிகள் நேற்று மீண்டும் விசாரித்தனர். பின்னர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    வனப்பகுதியில் இந்த ஹெலிகாப்டர் பறக்கும்போது, பறவைகள் மோதினால் மிகப்பெரிய விபத்தாகி விடும். மனித உயிர் சேதம் ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், அரசு தரப்பில், வனப்பகுதிகளுக்கு இடைப்பட்ட நகர பகுதிகளில் மட்டுமே இந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் என்று கூறப்பட்டது.

    ஆனால், முறையாக எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. யானைகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

    இதுபோன்ற வணிக ரீதியான திட்டங்களால், பல்லுயிர் பெருக்க மண்டலம் பாதிக்கப்பட்டுவிட கூடாது. அதனால், ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்துக்கு தடை விதிக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • 1200 லிட்டர் விஷ சாராயத்தை வாங்கியவர்கள் 5 லிட்டர் மரக்காணத்திலும், 3 லிட்டர் சித்தாமூரிலும் விற்பனை செய்துள்ளனர்.
    • விஷ சாராயம் பறிமுதல் செய்யப்படாமல் போயிருந்தால், இது பல ஊர்களுக்கும் சென்று பெருமளவில் உயிர் சேதம் ஏற்படுத்தியிருக்கும்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் விஷ சாராயம் குடித்த 22 பேர் பலியாகி உள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    விஷ சாராயம் தயாரிப்பதற்கு மெத்தனால் சப்ளை செய்த சென்னை கம்பெனியின் அதிபர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு கொலை வழக்காகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 13-ந்தேதி அன்று நடந்த விஷச்சாராய சம்பவத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 13 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் சென்னை வானகரம் 'ஜெய சக்தி பிரைவேட் லிமிடேட்' கம்பெனியின் அதிபர் இளையநம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த மெத்தனாலை செங்கல்பட்டு, சித்தாமூரில் விற்பனை செய்த அமாவாசை என்பவரும் மரக்காணத்தில் விற்பனை செய்த அமரன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இதோடு இவர்களுக்கு விற்பனை செய்த நபர்களை பற்றிய புலன் விசாரணை மேற்கொண்டதில் விஷசாராயம் 'ஜெய சக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிடேட்' என்ற கம்பெனியிலிருந்து கொண்டு வந்ததாக தெரியவந்தது.

    இந்த கம்பெனியினுடைய அதிபர் இளையநம்பி இதை 2018-ம் ஆண்டு வாங்கி உள்ளார். கொரோனா காரணமாக இதை தொழிற்சாலையில் பயன்படுத்த இயலாமல் போய் உள்ளது. இதனால் இவரது தொழிற்சாலை திவாலாகி உள்ளது. இந்த நிலையில் 1,200 லிட்டர் விஷச்சாராயத்தை (200 லிட்டர் கொண்ட 6 பேரல்களில்) புதுச்சேரியை சேர்ந்த பரகதுல்லா என்ற ராஜா மற்றும் ஏழுமலை என்பவருக்கு கள்ளச்சந்தையில் ரூ.66 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார். இவர்கள் மூலமாகவே மரக்காணம் மற்றும் சித்தாமூர் பகுதிகளுக்கு மரணம் ஏற்படுத்திய விஷச்சாராயம் கிடைத்திருப்பது தெரியவந்தது.

    மேலும், விஷ சாராய தொழிற்சாலையில் இருந்து மரக்காணம் மற்றும் சித்தாமூர் பகுதிகளுக்கு விஷ சாராயத்தை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்ட விளாம்பூர் விஜி என்பவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் 400 லிட்டர் விஷ சாராயம் வாங்கி அதை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளார். இவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் மீது 6 திருட்டு வழக்குகளும், 5 மதுவிலக்கு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

    1200 லிட்டர் விஷ சாராயத்தை வாங்கியவர்கள் 5 லிட்டர் மரக்காணத்திலும், 3 லிட்டர் சித்தாமூரிலும் விற்பனை செய்துள்ளனர். மீதமிருந்த 1,192 லிட்டரை 48 மணி நேரத்தில் பல்வேறு நபர்களிடமிருந்து காவல்துறையினர் விரைந்து கைப்பற்றினர்.

    இந்த விஷ சாராயம் பறிமுதல் செய்யப்படாமல் போயிருந்தால், இது பல ஊர்களுக்கும் சென்று பெருமளவில் உயிர் சேதம் ஏற்படுத்தியிருக்கும்.

    வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. டாக்டர் கண்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு பெரும் உயிர் சேதம் ஏற்படுவதை தடுத்துவிட்டனர்.

    உயிர் இழப்பை ஏற்படுத்திய கள்ளச்சாராயம், கிராமப் பகுதிகளில் காய்ச்சி வடிக்கப்பட்ட கள்ளச்சாராயம் அல்ல, தொழிற்சாலைகளில் தயார் செய்யப்படும் எரிச் சாராயமும் அல்ல. இது தொழிற்சாலைகளில் தின்னர் போன்ற பொருட்களைத் தயார் செய்ய மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற விஷச்சாராயம் என்பதாலும், இது மனிதர்களின் உயிர்களை பறிக்கும் தன்மையுள்ளது என்பதாலும் இவற்றை விற்பனை செய்த ஜெய சக்தி கெமிக்கல் கம்பெனியினுடைய அதிபர் இளையநம்பி, பரகத்துல்லா என்கிற ராஜா, ஏழுமலை, விளாம்பூர் விஜி மற்றும் 13 பேர் மீது மரக்காணம் போலீஸ் நிலையம் மற்றும் சித்தாமூர் போலீஸ் நிலையங்களிலுள்ள வழக்குகள் கொலை வழக்காக மாற்றம் செய்யப்படுகிறது.

    தமிழ்நாட்டில் மொத்தம் 11 மெத்தனால் தயார் செய்யும் தொழிற்சாலைகள், 71 மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடைய துணையோடு ஆய்வுச் செய்து கையிருப்பு மெத்தனாலை சரிபார்க்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விளாம்பூர் விஜி பா.ஜ.க. நிர்வாகி ஆவார்.

    • கோர்ட்டு வளாகத்தில் இருந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட்டனர்.
    • துப்பாக்கி சூட்டில் மிதிலேஷ் கிரி, சூர்யபிரகாஷ் ராய் இருவரும் காயமடைந்தனர்

    ஜான்பூர்:

    உத்தரபிரதேசத்தின் ஜான்பூரை சேர்ந்த மிதிலேஷ் கிரி, சூர்யபிரகாஷ் ராய் ஆகிய இருவரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் ஜான்பூரில் உள்ள தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

    அப்போது கோர்ட்டு வளாகத்தில் இருந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட்டனர். இதில் மிதிலேஷ் கிரி, சூர்யபிரகாஷ் ராய் இருவரும் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவரை கோர்ட்டு வளாகத்தில் நின்றிருந்த வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

    இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீஸ்காரர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் உத்தரவிட்டுள்ளார்.

    • புற்றுமண் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் பிரசாத மண்ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர்.
    • நாகதோஷம் உள்ளவர்கள் புற்று மீது மஞ்சள் தூவி வேண்டிக் கொள்கிறார்கள்.

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் "அரியும், சிவனும் ஒன்று" என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் ஆடித்தபசு திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக கோமதி அம்மன் சன்னதி முன்புள்ள தங்ககொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, துவக்கப்படும்...

    கொடிமரத்தில் தர்ப்பை புல், பட்டுத்துணி சுற்றப்பட்டு, மஞ்சள், சந்தனம், பால், இளநீர் போன்ற பூஜைப்பொருட்களால் சிறப்பு அபிஷேகம் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை பாடி சிறப்பு தீபாராதனையான "சோடச தீபாராதனை'யுடன் தத்துவார்த்தமாக விழா சிறப்பாக ஆரம்பிக்கப்படும்...

    பார்வதி தேவியின் தவத்தின் பொருட்டும்; சங்கன், பதுமன் ஆகிய நாகங்களுக்கும் நமக்கும் சிவன் வேறு, அரி வேறல்ல என்பதை உணர்த்தும் பொருட்டும் சிவபெருமான் சங்கர நாராயணராகக் காட்சி தந்த தலம் சங்கரன் கோவில்!

    சிவபெருமான் ஒரு பாதி சிவனாகவும் மறுபாதி நாராயணனாகவும் காட்சி தந்த அந்த அரிய நிகழ்ச்சி, ஆடி மாதத்தில் ஆடித்தபசு விழாவாக சங்கரன்கோவில் தலத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    தனது வாமபாகத்தை தன் சகோதரர் நாராயணனுக்காக தியாகம் செய்த அன்னை நாராயணி அன்னையரின் மங்கலங்களை காத்தருளுகிறாள்.

    ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே

    சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே

    தபஸ் என்றால் தவம் அல்லது காட்சி எனப்பொருள்படும்.

    அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கர நாராயணராக காட்சி தர வேண்டி ஒற்றைக்காலில் தபசு இருந்து பெற்ற நாளே ஆடித்தபசு திருநாள்...

    சம்ஸாரமாகிற வியாதியிலிருந்தும் ரோக உபாதைகளிலிருந்தும் காக்கக் கூடியவள் ஸ்ரீ கோமதி அன்னை.

    சங்கரநாராயணராக காட்சி கொடுத்த அரிய நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் ஆண்டுதோறும் "ஆடித்தபசு' திருவிழாவாக தொடர்ந்து 12 நாட்கள் வரைகொண்டாடப்படுகிறது...

    அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளி தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருந்து சங்கரநாராயணர் காட்சி பெறுகிறாள் அன்னை !.

    சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார்.

    ஆடி மாதத்தில்தான் அன்னை பார்வதி தவம் செய்து சிவப்பரம்பொருளை மீண்டும் அடைந்ததை ஆடித்தபசு என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது...

    சங்கரனும் நாராயணரும் ஒன்று என்று காட்டும் தலத்தில், தபசு இருந்து பலன் அடைந்தவள் அம்பிகை.

    அம்பிகையின் தவம் பலித்ததனால், தங்கள் பிரார்த்தனை நிறைவேற இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள்.

    அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபத்திற்கு வந்து சேரும் நிகழ்ச்சி

    கோமத்யம்பா ஸமேதம் ஹரிஹர வபுஷம் சங்கரேசம் நமாமி

    சங்கரலிங்கசுவாமி ரிஷப வாகனத்தில் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி

    யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பானவை..

    சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடியும் உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடையுடன் திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான்.

    திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி , லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம்!!!. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.

    காலை பூஜையில் மட்டும் துளசிதீர்த்தம்... மற்ற நேரங்களில் விபூதி பிரசாதம் கிடைக்கிறது...

    பூஜையின்போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள்.

    சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர்.

    திருமாலுக்கு உகந்த வகையில் மூலவர் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார்.

    அபிஷேகம் கிடையாது.

    ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது.

    சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு அபிஷேக, பூஜை நடக்கும்.

    ஆடித்தபசு விழாவன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் புறப்பாடாகிறார்.

    சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வர்.

    சங்கரன் கோவிலில் சித்திரை , ஐப்பசி மாதப் பிறப்பன்று அன்னாபிஷேகம் செய்து துவங்கும் புதிய வருடத்தில் உணவிற்கு பஞ்சமில்லாத நிலை இருக்க வேண்டும் என்பதற்காக சித்திரையிலும், ஐப்பசி புண்ணிய கால துவக்கம் என்பதால் மாதத்தின் முதல் நாளிலும் அன்ன அபிஷேகத்தை செய்கிறார்கள்.

    பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பதுபோல, கோயிலின் வடக்கு பிரகாரத்தில் சொர்க்கவாசலில் மகாவிஷ்ணு, பல்லக்கில் அனந்த சயனத்தில் எழுந்தருளி, ரதவீதி சுற்றி வருவார். அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்.

    புற்றுமண் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் பிரசாத மண்ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர்.

    வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை இருந்தால், சங்கரலிங்கனாருக்கு வேண்டிக்கொண்டு, அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.

    சிவன் சன்னதி பிரகாரத்தில் வன்மீகநாதர் - புற்று வடிவில் அமைந்த சன்னதியில் சிவன், சுயரூபத்துடன் காட்சி தருகிறார். தலைக்கு மேலே குடை பிடித்தபடி இருக்கும் நாகத்தின் மீது இவர் அமர்ந்திருப்பது அபூர்வ அமைப்பு. புற்றுக்குள் (வன்மீகம் என்றால் புற்று) இருப்பவர்.

    நாகதோஷம் உள்ளவர்கள் புற்று மீது மஞ்சள் தூவி வேண்டிக் கொள்கிறார்கள். பஞ்ச நாகச்சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்கிறார்கள்.

    சிவன் சன்னதி கருவறை சுற்றுச்சுவர் - பின்புறத்தில் "யோக நரசிம்மர்' வேறெங்கும் காணப்படாத விசேஷமாக அருள்கிறார்.

    பல் வலி உள்ளவர்கள் யோக நரசிம்மருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

    "சர்ப்ப விநாயகர்' கையில் நாகத்துடன் காட்சி தருகிறார். ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் ஞாயிறு ராகு காலத்தில், பாலபிஷேகம் செய்து, பால் பாயசம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தைகள், விஷப்பூச்சிகளால் பாதிக்கப்படாமல் இருக்க இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் வேண்டிக்கொள்கின்றனர்.

    பெரும்பாலான முருக தலங்களில் கந்தசஷ்டியின்போது, சூரசம்ஹாரத்திற்கு ஒரு முகம் கொண்ட சுப்பிரமணியராக மட்டுமே முருகன் செல்வார்.

    இங்கு சூரசம்ஹாரத்தின்போது முருகன், விஸ்வரூபம் எடுத்ததன் அடிப்படையில் ஆறுமுகங்களுடன் சண்முகராகச் செல்கிறாராம் முருகப்பெருமான்!

    மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

    • ஈசன் தன் மேனியின் ஒரு பாதியை நாராயணருக்கு தந்தார். எனவே அம்மன் ஈசனை மணம் புரிய முடியவில்லை.
    • சங்கர நாராயணர் சன்னதியில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை.

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது சங்கரன்கோவில். திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு சிவஸ்தலம். ஈஸ்வரன் திருநாமம் சங்கரலிங்கம். அம்மன் திருநாமம் கோமதி. அம்மனுக்கு இன்னொரு திருநாமம் ஆவுடை அம்பாள். அரசு ஆவணங்களில் இந்த ஊர் பெயர் சங்கர நைனார் கோவில் என்று தான் உள்ளது. காலப்போக்கில் மருவி சங்கரன்கோவில் என்று தற்பொழுது அறியப்படுகிறது.

    மதுரை ஆண்ட உக்கிரமபாண்டிய மன்னரால் பதினொன்றாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோவில் இது. இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு இங்கு சங்கரநாராயணன் சன்னதி உள்ளது. சிவபெருமானும் விஷ்ணுவும் சரிபாதியாக அமைந்துள்ள சன்னதி இது. லிங்கோத்பவர் தோன்றிய புற்று இந்த சுவாமி சன்னதியில் வட மேற்கு பகுதியில் காணலாம்.

    சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கும் பிரம்மாவுக்கும் தனி சன்னதிகள் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூவரும் எழுந்தருளியுள்ள ஸ்தலம் சங்கரன்கோவில்.

    தல வரலாறுபடி ஆடி மாதம் கோமதி அம்மன் புன்னைவனத்தில் தவம் செய்தாள். ஆனால் ஈசன் தன் மேனியின் ஒரு பாதியை நாராயணருக்கு தந்தார். எனவே அம்மன் ஈசனை மணம் புரிய முடியவில்லை. அம்மன் ஐப்பசியில் மீண்டும் தவம் இருந்து சங்கரலிங்க சுவாமியை மணம் புரிந்தார் என்பது ஸ்தல புராணம். எனவே தான் இந்த கோவிலில் ஆடி தபசும் ஐப்பசி தபசும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    கோமதி அம்மன் சன்னதியில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை உள்ளது. சங்கர நாராயணர் சன்னதியில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை. இந்த கோவிலில் தினமும் ஏழு கால பூஜை நடைபெறுகிறது. அர்த்த ஜாம பூஜையின்போது அம்மன் சன்னதியில் பால் நிவேதனம் செய்யப்படுகிறது. அந்த பால் பருகினால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் அருளுகிறாள் அன்னை கோமதி. இங்குள்ள புற்றுமண் சகல நோய்களை தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.

    • குளிர்ந்த கண்ணன் ஈசன் திருமேனியில் எழுந்தருளியதால், அபிஷேகப் பிரியன் சிவபெருமானுக்கு அபிஷேகம் கிடையாது!
    • உடல் உபாதைகளுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    மூன்று சந்நிதிகள்

    சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கரலிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், ஒரே உருவில் வலப்பக்கம் ஈசனாகவும், இடப்பக்கம் திருமாலாகவும் வீற்றிருப்பார்.

    மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவியர் கோமதி அம்மனாக வீற்றுள்ளார். அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம்! பொதுவாக ஸ்ரீசக்ர பிரதிஷ்டை காலடிகளில் தான் இருக்கும்! ஆனால் இங்கு சன்னிதி முகப்பில் பெரிதாக ஸ்ரீசக்ர அமைப்பு! மன மாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட, அதில் உட்கார்ந்தும் தியானித்துக் கொள்ளலாம்!

    அபிஷேகம் கிடையாது

    குளிர்ந்த கண்ணன் ஈசன் திருமேனியில் எழுந்தருளியதால், அபிஷேகப் பிரியன் சிவபெருமானுக்கு அபிஷேகம் கிடையாது! அலங்காரம் மட்டுமே!

    அதனால் சந்திர மௌலீச்வரர் என்னும் லிங்கத்தை முன்னே நிறுத்தி, அதற்கு மட்டும் திருமுழுக்காட்டுதல், அன்னாபிஷேகங்கள் உண்டு!

    சன்னிதியில் விபூதிப் பிரசாதம், துளசி தீர்த்தம் உண்டு!, வில்வார்ச்சனை, துளசி அர்ச்சனை இரண்டுமே உண்டு! இரண்டையும் இணைக்கும் அம்பாளின் குங்குமார்ச்சனையும் உண்டு!

    நோய் தீர்க்கும் புற்றுமண்

    ஐம்பூதங்களில் இந்தக் கோயில் நிலம் சம்பந்தமான மண் தலமாகத் திகழ்கிறது. இதனால், இக்கோயிலில் உள்ள 'புற்றுமண்' வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகும். மருத்துவ குணமுடைய புற்று மண்ணை உடலில் பூசியும், தங்கள் வயல்கள், வீடுகளில் தெளித்தும் சுகம் காண்பார்கள். இதனால் உடல் நோய்கள், பூச்சிக்கடியின் தாக்கம், சரும நோய்கள் நீங்கும் என்பதும், வயல், வீடுகளில் விஷ ஜந்துக்கள் வராது என்பதும், வயல், வீடுகளின் செல்வம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.

    கோமதி அம்மன் சந்நிதி முன்பு உள்ள ஸ்ரீசக்கரத்தில் பிணியாளர்கள், செய்வினைகளால் பாதிக்கப்பட்டோர் அமர்ந்து அம்மனை நோக்கி தவம் செய்தால் அவை நீங்கும். அதே பகுதியில் உடல் உபாதைகளுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    வீட்டிலும் கனவிலும் விஷ ஜந்துக்கள் அச்சுறுத்தல் தென்பட்டாலும், விபத்து போன்றவற்றில் காயம், உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட்டால், இக்கோயிலில் விற்கப்படும் உலோகத்தினால் செய்யப்பட்ட தகட்டால் ஆன பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் உருவம், மனித கை, கால், மார்பு, தலை போன்ற உறுப்புகளின் தகட்டை வாங்கி உண்டியலில் செலுத்தி வணங்குவதன்மூலம் பாதிப்புக்கள் நீங்கும், நிவர்த்தி கிட்டும் என்கின்றனர்.

    பன்னிருநாள் திருவிழா

    ஆடித் தபசின் பன்னிரண்டு நாளும், ஊர் மக்கள் தங்கள் வீட்டு விழாவைப் போல் கொண்டாடுகின்றனர்! உலக நன்மைக்காகத் தன் இடப்பாகத்தையே அன்னை விட்டுத் தந்தாள் அல்லவா? அதனால் அவளுக்கென்று தனித்தேர்! அவள் மட்டுமே சிறப்பாக வலம் வருவாள்!

    இறுதி நாளன்று, ஆடித் தபசு மண்டபம் மண்டபத்தில் அவள் தவம் நடித்துக் காட்டப்படுகிறது! ஒரு கையில் விபூதிப் பை! ஒரு காலில் தவம்! சங்கர நாராயணர் அவள் முன் தோன்றி வரம் அருளும் காட்சி!

    அம்பாளின் தபசுக் காட்சியின்போது பக்தர்கள் பருத்தி, மிளகாய் வத்தலையும், விவசாயிகள் நெல், சோளம், கம்பு, மிளகாய்வத்தல், பஞ்சு, பூ என வயலில் விளைந்த பொருட்களை 'சூறை விடுதல்' என்ற பெயரில் அம்பாள்மீது வீசியெறிந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.

    அம்பாளின் வேண்டுதலின்படி சங்கரலிங்கமாக யானை வாகனத்தில் சிவபெருமான் அம்பாளுக்குக் காட்சியருள்வார்.

    பக்தர்கள் சுற்றும் ஆடிச்சுற்று

    ஆடித் தபசு கொடியேறிய பின் 'ஆடிச்சுற்று' என்ற பெயரில், பக்தர்கள் கோயிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையில் சுற்றி நேர்ச்சை செலுத்துவார்கள். அதிக எண்ணிக்கையில் சுற்ற விரும்புவோர் ஆடி மாதம் முழுவதும் காலை, மாலை என சுற்றி வருவர். ஆடிச்சுற்று சுற்றுவதால், ஒரு காலில் நின்று தபசு காட்சி காணும் அம்பாளின் கால் வலியை தாம் ஏற்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் தேவைக்கு ஏற்ப புதிய மின்மாற்றிகள், 13 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • சீரான மின்விநியோகம் வழங்க தேவையான அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வீடுகளில் மின்விசிறி, ஏ.சி. மற்றும் ஏர்கூலர் போன்ற மின்சார சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    எனவே மின்சாரத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது. அதன்படி அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் முன்னேற்பாடுகளை செய்து தட்டுப்பாடு இன்றி மின்சார வினியோகம் செய்து வருகிறது.

    இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தின் மின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. சீரான மின்விநியோகம் வழங்க தேவையான அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் 3000 மெகாவாட் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த 2 நாட்களாக ஒரு சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் தேவைக்கு ஏற்ப புதிய மின்மாற்றிகள், 13 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திறன் மேம்படுத்தப்பட்ட புதிய கேபிள்கள் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    மின்சாரத்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் வரும் காலங்களில் எந்தவித தடையுமின்றி மின் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

    மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டுகளைவிட இந்தாண்டு மின்தடை தொடர்பான புகார் அழைப்புகள் குறைந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், மணிமங்கலம் போலீசார், கரசங்கால் வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • சென்னையை சேர்ந்த பெரிய கும்பல்கள், அந்த கூலிப்படையினருக்கு பணம் கொடுத்து கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட வைத்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை தாம்பரம் அருகே கரசங்கால் வனப்பகுதியில் சிலர் சந்தேகத்துக்கிடமான வகையில் திரிந்தனர். அவர்களின் நடவடிக்கையில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், மணிமங்கலம் போலீசார், கரசங்கால் வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல் அங்கு சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் துப்பாக்கி முனையில் அந்த கும்பலை சுற்றி வளைத்தனர்.

    போலீசார் வருவதை அறிந்ததும் 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மீதமுள்ள 4 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பொத்தேரியை சேர்ந்த சூர்யா (26), கரசங்கால் அருகேயுள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த அடிகேஸ்வரன் (28), வினோத் (29), பழையனூரை சேர்ந்த நாகராஜ் (21) என்பது தெரியவந்தது.

    கைதான 4 பேரிடம் இருந்தும் நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்கள், மற்றும் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைதானவர்களிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இவர்கள் பணத்துக்கு கொலை செய்யும் கூலிப்படையாக செயல்பட்டு வந்தனர்.

    சென்னையை சேர்ந்த பெரிய கும்பல்கள், அந்த கூலிப்படையினருக்கு பணம் கொடுத்து கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட வைத்துள்ளனர். இவர்கள் கொலை, கொலை முயற்சி, அடிதடி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குகளும் உள்ளன.

    இந்த கூலிப்படையினர் கொலை சம்பவங்களில் ஈடுபடுவதற்காக தாங்களே நாட்டு வெடிகுண்டுகளையும் தயாரித்துள்ளனர். இந்த வெடிகுண்டுகளை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை சேமித்து வைப்பதற்கும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவும் கரசங்கால் வனப்பகுதியை பயன்படுத்தி வந்தனர். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால் அந்த இடம் கூலிப்படையினருக்கு வசதியாக இருந்தது. மேலும் இந்த கும்பல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள கூலிப்படையினருக்கும் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து சப்ளை செய்துள்ளனர்.

    தற்போது அவர்கள் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை அரங்கேற்றுவதற்காக வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர்.

    இந்த கும்பல் சுமார் 6 மாதமாக அந்த பகுதியில் வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் எங்கிருந்து கிடைக்கிறது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 4 பேர் மீது இதுவரை என்னென்ன குற்ற வழக்குகள் உள்ளன என்பது பற்றியும் போலீசார் விசாரிக்கிறார்கள்.

    கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தப்பி ஓடிய 6 பேர் யார்? யார்? என்றும் அவர்களை பற்றிய விவரங்களையும் போலீசார் கேட்டறிந்தனர். அவர்களை பிடிப்பதற்காக அந்த பகுதிகளில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக வழங்கப்படும்.
    • அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள்.

    சென்னை:

    மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்.

    இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டிருந்தது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1-ந்தேதியை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் தமிழக அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்க வேண்டிய அகவிலைப்படியை கடந்த ஜனவரி மாதம் 4 சதவீதம் உயர்த்தி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருந்தார்.

    இதனால் ஜனவரி மாதம் மத்திய அரசு அறிவித்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு ஊழியர்களுக்கு அனேகமாக ஜூன் மாதம்தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர்.

    ஆனால் இப்போது இந்த மாதமே (மே) 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.

    இந்த அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து, கடந்த அரசு விட்டுச்சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை, கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகியவற்றுக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

    இந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை 1.4.2023 முதல் செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி, தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.4.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும். இதனால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

    இந்த உயர்வால் ஆண்டு ஒன்றிற்கு தமிழ்நாடு அரசுக்கு 2,366.82 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இந்தக் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

    மேலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, எதிர்வரும் காலங்களிலும் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்திடும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • ரெயிலில் பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் சில மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
    • மாணவர் ஒருவர் ரெயில் பெட்டியின் படிக்கட்டில் தொங்கியபடி கையில் பெரிய பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு நடைமேடையில் தீப்பொறி பறக்க உரசியபடி சென்றனர்.

    ஆவடி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் ரெயிலில் தினந்தோறும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்வது வருகின்றனர்.

    இந்த நிலையில் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி நேற்று முன்தினம் காலை மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் சில மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், ஆவடி இந்து கல்லூரி ரெயில் நிலையம் அருகே சென்ற போது, மாணவர் ஒருவர் ரெயில் பெட்டியின் படிக்கட்டில் தொங்கியபடி கையில் பெரிய பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு நடைமேடையில் தீப்பொறி பறக்க உரசியபடி சென்றனர். அவரை சுற்றி நின்று கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாங்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், எங்களிடம் வம்பு செய்யாதே என கூச்சலிட்டபடி சென்றனர்.

    இதனால் ரெயிலில் பயணம் செய்த சக பயணிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். சிலர் தங்களது செல்போனில் இந்த காட்சிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்ட நிலையில், கல்லூரி மாணவர்கள் ரெயிலில் பட்டா கத்தியுடன் செல்வது போன்ற காட்சிகள் வைரலானது, இது குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான திருவள்ளூர், ஈக்காட்டை பவுண்ட்டை சேர்ந்த அபிஷேக் (வயது 20), சரண்ராஜ் (20), ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இதுசம்பந்தமாக திருநின்றவூரை சேர்ந்த மனோஜ் (23) உள்ளிட்ட மேலும் சில மாணவர்களை தேடி வருகின்றனர்.

    • நீரில் மூழ்கி மயங்கி கிடந்த 2 பேரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
    • கடலில் மூழ்கி பலியான 2 மாணவர்கள் சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    திருவொற்றியூர் சதானந்தபுரம் தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் ஹரிஷ் (வயது 16). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரி என்பவரின் மகன் ஸ்ரீகாந்த் (20) ஆவார். இவர் பொன்னேரியில் உள்ள கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் திருவொற்றியூரில் உள்ள சுந்தரபுரம் கடற்கரையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு மாணவர்கள் 2 பேரும், குளித்துக் கொண்டு இருந்தபோது, திடீரென எழுந்து வந்த ராட்சத அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.

    இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கு குளித்துக்கொண்டு இருந்த அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையறிந்து திருவொற்றியூர் தீயணைப்பு துறை வீரர்கள் கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அலையில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு நீரில் மூழ்கி மயங்கி கிடந்த 2 பேரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து பலியான இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நண்பர்களுடன் குளித்தபோது, கடலில் மூழ்கி மாயமான மற்றொரு கல்லூரி மாணவரான சந்துரு(20) என்பவரை கடலோர காவல் படை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். கடலில் மூழ்கி பலியான 2 மாணவர்கள் சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பொது வினியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொது வினியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வினியோகிக்கப்படும் பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.

    அதனைத்தொடர்ந்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்துப் பணி மேற்கொண்டு அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980-ன்படி தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற 3 லட்சத்து 29 ஆயிரத்து 300 கிலோ அரிசி, 152 எரிவாயு சிலிண்டர்கள், 90 கிலோ கோதுமை, 250 கிலோ துவரம்பருப்பு, 251 லிட்டர் மண்எண்ணெய் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.23 லட்சத்து 61 ஆயிரத்து 969 ஆகும். இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட 529 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

    இதுதவிர கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மேலும் பொதுமக்கள் புகார் அளிக்க 18005995950 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    ×