என் மலர்
நீங்கள் தேடியது "tag 116343"
- கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம்.
- நாளை விரதம் இருப்பது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானையும், பார்வதியையும், அனுதினமும் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வந்து வணங்கிச் செல்வார்கள். அவர்களில் பிருங்கி முனிவர், பார்வதியை விடுத்து சிவபெருமானை மட்டும் வணங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதுபற்றி பார்வதி தேவி, சிவபெருமானிடம் கேட்டதற்கு அவர், "தேவி.. பிருங்கி முனிவருக்கு எந்த பாக்கியங்களும் தேவையில்லை. அவருக்கு மோட்சம்தான் விருப்பம். எனவேதான் அவர் என்னை மட்டும் சுற்றி வந்து வழிபடுகிறார்" என்றார்.
அந்த வார்த்தையில் திருப்தி இல்லாத பார்வதி தேவி, பிருங்கி முனிவரிடம் "உன் தேகத்திற்கு தேவையான சக்தி அனைத்தும் நான் வழங்கியவை. ஆனால் என்னை வழிபட மறுக்கிறாய். அப்படியானால் சக்திக்கு தேவையான ரத்தம், தசை, நரம்பு போன்றவற்றை திருப்பிக்கொடு" என்றார்.
பிருங்கி முனிவரும் அப்படியே செய்தார். இதனால் எலும்பும், தோலும் மட்டும் கொண்டு வலுவிழந்து தடுமாறினார். சிவபெருமான் அவருக்கு கைத்தடி ஒன்றை வழங்கி நிற்கச் செய்தார்.
இதனால் கோபம் கொண்ட பார்வதி, கயிலாயத்தை விட்டு பூமிக்கு வந்தார். அங்கு ஒரு நந்தவனத்தில் எழுந்தருளினார். அந்த நந்தவனம், 12 ஆண்டுகளாக மழையின்றி வறண்டு காணப்பட்டது. பார்வதி தேவி வந்ததும் மழை பெய்து, அந்த நந்தவனம் புத்துயிர் பெற்றது. பல அரிய பூக்கள் பூத்தது. அதன் வாசத்தை நுகர்ந்து அங்கு வந்த வால்மீகி முனிவர், அம்பிகையை தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்.
அப்போது பார்வதி தேவி, "முனிவரே.. நான் மீண்டும் ஈசனுடன் சேருவதற்கு, அனைத்து விரதங்களையும் விட மேலான விரதம் ஒன்று வேண்டும். அப்படியொரு விரதம் இருக்கிறதா?" என்று கேட்டார்.
அதற்கு வால்மீகி முனிவர், "தாயே.. இந்த பூலோகத்தில் ஒருவரும் அறியாத ஒரு விரதம் உண்டு. அந்த விரதத்திற்கு 'கேதாரீஸ்வரர் நோன்பு' என்று பெயர். அந்த விரதத்தினை அனுஷ்டித்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்" என்றார்.
அதன்படி அம்பிகை, அந்த விரதத்தை முறை தவறாமல் கடைப்பிடித்தார். இதையடுத்து விரதத்தின் 21-ம் நாள் அன்று, தேவ கணங்கள் சூழ அம்பிகைக்கு சிவபெருமான் காட்சி அளித்தார். அதோடு தனது இட பாகத்தினை அம்பிகைக்கு அளித்து, அர்த்தநாரீஸ்வரராக கயிலாயம் சென்றார். அம்பிகையே விரதம் இருந்த காரணத்தால், இது 'கேதார கவுரி விரதம்' என்று அழைக்கப்படுகிறது.
விரதம் இருப்பது எப்படி?
கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம். புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் அமாவாசை வரைக்கும் தொடரும் விரதம் இது. தினமும் காலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து, சிவ பூஜை செய்ய வேண்டும். நோன்பின் முதல் நாள் அன்று 21 நூல் கொண்டு 21 முடிச்சுகளால் கலசத்தினை சுற்றி அமைப்பர். இக்கலசமே சிவ-பார்வதியாக வழிபடப்படுகின்றது. இந்த விரதம் இருப்பவர்கள், தினமும் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் நைவேத்தியம் வைத்து அதனையே பிரசாதமாக உண்பார்கள். 21-ம் நாள் அன்று 21 அதிரசம், 21 வாழைப்பழம், 21 மஞ்சள், 21 வெற்றிலை, 21 கொட்டை பாக்கு, தேங்காய், சந்தனம், பூக்கள் வைத்து வழிபடுவர். 21 வகை காய்கறிகள் கொண்டு உணவினை சமைத்து அக்கம் பக்கத்தினருடன் சாப்பிட்டு விரதத்தினை முடிப்பர்.
இது பெண்களுக்கு மிகச் சிறப்பான விரத பூஜையாகும். இப்பூஜை அவரவர் குடும்ப வழக்கப்படி சற்று மாறுபடும். அவரவர் பெரியோர்களிடம் கேட்டு அறிந்து அவர்கள் மூலம் எடுத்துச் செய்வது நல்லது. ஐப்பசி அமாவாசை அன்று செய்யும் பூஜையில் முடிந்தால் தங்கம் (நகை) சாத்தி, பட்டு வஸ்திரம் சுற்றி பூவால் அலங்கரித்து சந்தன குங்குமம் இட வேண்டும். விளக்கேற்றி வைக்க வேண்டும். மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல், பூ சுற்றி, மஞ்சள் குங்குமம் இட்டு விநாயகரை அர்ச்சிக்க வேண்டும். அதோடு இறைவனின் 16 நாமங்களைச் சொல்லி தூப தீப ஆராதனை செய்து நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.
பின்னர் அம்மி குழவியை நன்கு சுத்தம் செய்து அதற்கும் பலவித அலங்காரங்களை செய்து வில்வம், தும்பை போன்ற விசேஷ இலை, பூக்களையும் சேர்த்து சிவ நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும். தூப, தீப ஆராதனைகள் நைவேத்தியம் வைத்து அட்சதை போட்டு வணங்கி, வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலம் ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். வருவோருக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், 21-வது நாள் ஈஸ்வரன் காட்சி அளித்து வேண்டிய வரம் அளிப்பார் என்பது ஐதீகம்.
- இன்று செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை வழங்கும் என்பது ஐதீகம்.
- இன்று விரதம் இருந்து சிவனாரைத் தொழுவோம். நமசிவாயம் சொல்லுவோம்.
பிரதோஷ அன்று சிவபெருமானுக்கு பூஜை செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் ரொம்பவே மகத்துவம் மிக்கது.
விரதம் இருந்து சனிக்கிழமை பிரதோஷ காலத்தில் சிவனாரை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். புகழும் கெளரவமுமாக வாழலாம்.
விரதம் இருந்து பிரதோஷ நாளில் செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை வழங்கும் என்பது ஐதீகம். பிறப்பே இல்லாத முக்தியை அளித்து அருள் செய்யும்.
சனிப் பிரதோஷ நாளில், முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவநடனத்தைத் தரிசிக்க பூலோகம் வருவார்களாம். நந்திதேவரையும் சிவனாரையும் அபிஷேகித்து,ஆராதித்து தரிசித்தார்களாம். பிரதோஷ பூஜைக்கு நாமும் அபிஷேகப் பொருட்களையும் பூக்களையும் வழங்குவோம்.
நந்திதேவரின் கொம்புகளுக்கிடையே ஈசன் திருநடனம் புரியும் தருணம் பிரதோஷம் என்கிறது புராணம். விரதம் இருந்து பிரதோஷ நாளில், நமசிவாயம் என்று ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து, சிவ பூஜையை தரிசித்தாலோ சிவ பூஜை செய்தாலோ, நம் முன்னோர்கள் செய்த ஏழுதலைமுறை பாவங்களும் நீங்கும் என்கிறது சிவபுராணம்.
இன்னொரு விஷயம்... மற்ற நாட்களில் வரும் பிரதோஷ நாளில், சிவ தரிசனம் செய்வதாலும் சிவ பூஜை செய்வதாலும் என்னென்ன பலன்கள் கிடைக்கிறதோ... சனிப் பிரதோஷ நாளில் செய்தால், மும்மடங்கு பலன்கள் கிடைக்கும்.
பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் வரும். பிரதோஷ வேளை என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில், சிவ பூஜை செய்யவேண்டும். குளித்துவிட்டு, சுவாமி படத்துக்கு முன்னே அமர்ந்துகொண்டு, 'நமசிவாயம்' என்று ஜபித்துக் கொண்டிருந்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும். புண்ணியம் பெருகிவிடும்.
மற்ற பிரதோஷம் வழிபட சனிப்பிரதோஷ முக்கியத்துவம் பெறுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், சிவ ஆலயத்தில் இந்த வழிபாட்டின் மூலம் கிடைக்கும் நன்மைகள் தான் காரணம். ஒருவர் பிற நாட்களில் கோயிலுக்கு செல்வதை விட இந்த சனிப் பிரதோஷ நாட்களில் அவர்கள் மனதில் நினைத்த விஷயங்களை எண்ணி வழிபாடு செய்வதன் மூலமாக எண்ணிய காரியங்களில் எண்ணியவாறு அவர்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். முக்கியமாக சிவாலயங்களுக்கு நீங்கள் சென்று வழிபடுவது ஐந்து வருட வழிபாட்டிற்கு சமமாக இந்த ஒரு நாள் வழிபாடும் கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
என்ன வகைப்பட்ட தோஷங்கள் ஒருவரை ஆட்டிப் படைத்தாலும், அவர்கள் இந்த நாளில் சிவனை வழிபடுவதன் மூலமாக அந்தப் ஒரு தோஷங்களில் இருந்து விலகுவதாக ஐதீகம் உள்ளது. சாதாரண தினங்களில் ஏற்படும் வழிபாடுகளை விட சனிக்கிழமை பிரதோஷம் செய்யும் வழிபாடு ஆயிரம் மடங்கு நன்மைகளை வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நாள் முழுவதும் விரதம் இருந்து, பால் ஆகாரம் மட்டும எடுத்துக் கொண்டு, மாலையில் சிவன் கோயில் சென்று வழிபடுவது மிகவும் நன்மை பயக்கும்.
வீட்டில் விளக்கு ஏற்றி சிவன்பெருமான் புகைப்படத்தின் முன்பு அவருடைய மந்திரத்தை சொல்லி வழிபடுவதன் மூலமாக இந்த நாளில் சிறப்பு பயன்களை நீங்கள் முழுமையாக அடைய முடியும்.
இன்று (22ம் தேதி) சனிப் பிரதோஷம். மாலையில் சிவனாரைத் தொழுவோம். நமசிவாயம் சொல்லுவோம். நல்லனவற்றையெல்லாம் பெறுவோம்.
நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்!
- சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள்.
- பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால், புத்தியில் தெளிவு உண்டாகும்.
புண்ணியம் நிறைந்த மாதம் புரட்டாசி என்பார்கள். புரட்டாசி மாதம் என்பதே வழிபாட்டுக்கு உரிய மாதம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். புரட்டாசி மாதத்தில் நாம் எந்த வழிபாட்டைச் செய்தாலும் இரட்டிப்புப் பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
புரட்டாசி மாதம் வெயிலும் இல்லாத, குளிரும் இல்லாத அற்புதமான மாதம். இந்த மாதத்தில், மனம் ஒரு நிலைப்படுத்தி, அரைமணி நேரம் பூஜையிலும் வழிபாட்டிலும் இருக்க, உள்ளொளி கிடைப்பது நிச்சயம். அதேபோல், மந்திர ஜபங்கள் செய்வதும் ஸ்லோகங்கள் சொல்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
புரட்டாசி மாதம் என்பது மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம். மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கான மாதம். இந்த மாதம் முழுவதுமே துளசி தீர்த்தம் பருகுவதும் பெருமாளுக்கு துளசிமாலை சார்த்துவதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில், பெருமாள் வழிபாடு செய்வது உத்தமம். அதேபோல், வெள்ளிக்கிழமைகளில், மகாலக்ஷ்மி வழிபாடு செய்வதும் கனகதாரா ஸ்தோத்திரம் சொல்வதும் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளும்.
அதேபோல், புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷ காலமும் மிக மிக முக்கியமானது. மகாவிஷ்ணு வழிபாடு எப்படி முக்கியமோ அதேபோல் சிவ வழிபாடும் அளப்பரிய நன்மைகளைக் கொடுக்கக் கூடியது.
புரட்டாசி மாதம் நிறைவுறும் தருணத்தில் பிரதோஷம் வருகிறது. இன்று பிரதோஷம். இந்த நன்னாளில், சிவ வழிபாடு செய்யுங்கள். சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். ருத்ரம் ஒலிக்கவிட்டு கேளுங்கள். அருகில் உள்ள சிவாலயத்துக்கு, மாலையில் பிரதோஷ வேளையில் சென்று தரிசியுங்கள். சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு கண் குளிரத் தரிசியுங்கள்.
கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் தென்னாடுடைய சிவனார். துக்கங்களையெல்லாம் நீக்கி அருளுவார் ஈசன்.
பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால், புத்தியில் தெளிவு உண்டாகும். மனோபலம் பெருகும். மனக்கிலேசம் விலகும். மங்கல காரியங்கள் நடந்தேறும்.
- மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது.
- நாமும் சிவராத்திரியில் சிவபெருமானை வழிபடுவோம். அருளைப்பெறுவோம்.
மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. அதனைச் சுருக்கி இங்கே தரப்படுகிறது.
1. சித்திரை மாதம் :- இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமா தேவியால் வழிபடப்பட்டது.
2. வைகாசி மாதம் :- வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவனால் வழிபடப்பட்டது.
3. ஆனி மாதம் :- வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசானால் வழிபடப்பட்டது.
4. ஆடி மாதம் :- தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.
5. ஆவணி மாதம் :- வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.
6. புரட்டாசி மாதம் :- வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.
7. ஐப்பசி மாதம் :- வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.
8. கார்த்திகை மாதம் :- 2 சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவற்றை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.
9. மார்கழி மாதம் :- வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.
10. தை மாதம் :- வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது.
11. மாசி மாதம் :- தேய்பிறை-தேவர்களால் வழிபடப் பட்டது.
12. பங்குனி மாதம் :- வளர்பிறை-குபேரனால் வழிபடப்பட்டது.
நாமும் சிவராத்திரியில் சிவபெருமானை வழிபடுவோம். அருளைப்பெறுவோம்.
- புண்ணியம் நிறைந்த மாதம் புரட்டாசி என்பார்கள்.
- கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் தென்னாடுடைய சிவனார்.
இன்று புரட்டாசி விரதம். இந்த நன்னாளில், சிவ வழிபாடு செய்யுங்கள். பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். புண்ணியம் நிறைந்த மாதம் புரட்டாசி என்பார்கள். புரட்டாசி மாதம் என்பதே வழிபாட்டுக்கு உரிய மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தில் நாம் எந்த வழிபாட்டைச் செய்தாலும் இரட்டிப்புப் பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
புரட்டாசி மாதம் வெயிலும் இல்லாத, குளிரும் இல்லாத அற்புதமான மாதம். இந்த மாதத்தில், மனம் ஒரு நிலைப்படுத்தி, அரைமணி நேரம் பூஜையிலும் வழிபாட்டிலும் இருக்க, உள்ளொளி கிடைப்பது நிச்சயம். அதேபோல், மந்திர ஜபங்கள் செய்வதும் ஸ்லோகங்கள் சொல்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷ காலமும் மிக மிக முக்கியமானது. மகாவிஷ்ணு வழிபாடு எப்படி முக்கியமோ அதேபோல் சிவ வழிபாடும் அளப்பரிய நன்மைகளைக் கொடுக்கக் கூடியது.
புரட்டாசி மாதம் நிறைவுறும் தருணத்தில் பிரதோஷம் வருகிறது. அதுவும் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லுவார்கள்.
இன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்யுங்கள். சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். ருத்ரம் ஒலிக்கவிட்டு கேளுங்கள். அருகில் உள்ள சிவாலயத்துக்கு, மாலையில் பிரதோஷ வேளையில் சென்று தரிசியுங்கள். சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு கண் குளிரத் தரிசியுங்கள்.
கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் தென்னாடுடைய சிவனார். துக்கங்களையெல்லாம் நீக்கி அருளுவார் ஈசன்.
இன்று மாலையில் சிவன் ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால், புத்தியில் தெளிவு உண்டாகும். மனோபலம் பெருகும். மனக்கிலேசம் விலகும். மங்கல காரியங்கள் நடந்தேறும்.
- ஆவணி மாதம் மிகவும் சுபத்தன்மை நிறைந்த மாதம்.
- தங்களின் சௌகரியத்துக்கு ஏற்றவாறு, விரதத்தை மேற்கொள்ளலாம்.
ஆவணி மாதத்தில், பௌர்ணமி ஷ்ரவண நட்சத்திர (திருவோணம்) நாளில் தோன்றும். இது, விஷ்ணுவின் ஜனன கால நட்சத்திரமாகும். அல்லது, ஒவ்வொரு ஆண்டும் பௌர்ணமி நாளும், திருவோண நட்சத்திரமும் ஒன்றிணைந்து வரும். அதனாலேயே, இது ஆவணி / ஷ்ரவண மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தின் ஒவ்வொரு திங்களும், மிகவும் சுபத்துவம் வாய்ந்தது. சிவன் கோவில்களில், ஆவணி மாதத்தின் ஒவ்வொரு திங்கைகிழமை அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
சிவலிங்கத்திற்கு இரவும், பகலும் தொடர்ந்து நீர் மற்றும் பால் அபிஷேகம் செய்யப்படும். அது மட்டுமின்றி ஆவணி முழுவதும், ஒவ்வொரு திங்களன்றும் வில்வ இலைகள், சிவபக்தர்கள் புனித நீர், பால் மற்றும் பூக்களால் அர்ச்சிக்கின்றனர். பக்தர்களும் காலை முதல் இரவு வரை விரதமிருந்து, இரவு முழுவதும் எரியும் வகையில் ஒற்றை அகல் விளக்கை ஏற்றுவார்.
ஆவணி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபத்தில் திருமணமான பெண்கள், தீய சக்தி மற்றும் துரதிர்ஷ்டம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க, ஆவணி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கெளரி விரதம் கடைபிடிக்கிறார்கள். ஆவணி மாத வெள்ளிக்கிழமைகள் மற்றும் சனிக்கிழமைகளில், திருமணமான பெண்கள் பெருமாளுக்கு விரதம் இருக்கிறார்கள். அதே போல, ஆண்களும், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கான சடங்குகளை செய்கிறார்கள்.
விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் அறிவியல் ரீதியான விளக்கம் :
பொதுவாக விரதம் இருப்பது உடலுக்கும் மனதுக்கும், புத்துணர்வு அளிக்கும். ஆவணி மாதத்தில் விரதம் இருப்பது ஒருவரின் உடல்நலத்துக்கு மிகவும் நன்மை அளிப்பதாக கூறப்படுகிறது. மழைக்காலத்தின் ஒரு பகுதியாக ஆவணி மாதத்தில் சூரிய ஒளி குறைந்த அளவிலேயே இருக்கும். எனவே, இது ஜீரண சக்தியைக் குறைக்கும். அதன் விளைவாக, சுலபமாக ஜீரணமாகும் உணவுகளை சாப்பிட வேண்டும். அதனால் தான், பெரும்பாலானவர்கள் இந்த மாதத்தில் சைவ உணவுப் பழக்கத்தை மேற்கொள்கின்றனர். அது மட்டுமின்றி, விரதம் இருப்பதும் பரவலாக கடைக்பிடிக்கப்பட்டு வருகின்றது. விரதம் இருப்பது உணவு செரிமானாக் குழாயை சுத்திகரித்து, நுண்கிறுமிகள் தாக்குதலில் இருந்து இயற்கையான பாதுகாப்பு அளிக்கிறது.
ஆவணி மாதத்தில் விரதம் இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் :
விரதம் இருக்க வேண்டுமென்றால், ஒருவர் அதிகாலையில் எழுந்து குளிக்க வேண்டும். எப்போதுமே, சிவபெருமானை வழிபடும் முன், விநாயகரை வழிபடுவது வழக்கம். ஈசனுக்கான பிரசாதங்களில் வில்வ இலைகள், நீர், தேன், பால் மற்றும் வெள்ளை பூக்கள் ஆகியவை அடங்கும். பிரார்த்தனைகளுக்கான மந்திரங்களை கூறிய பிறகு, நீங்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கலாம். மாலையில், சூரியன் மறையும் வரை விரதத்தைத் தொடரலாம். சில நபர்கள் நாள் முழுவதும் விரதங்களை மேற்கொள்ளாமல், குறிப்பிட்ட மணிநேரங்கள் வரை விரதம் இருக்கிறார்கள். அல்லது விரதமாக சமைத்த உணவுகளை உண்ணாமல், நாள் முழுவதும் பழங்களை மட்டும் உண்ணுகிறார்கள். சிலர், தண்ணீர் மட்டும் அருந்துவார்கள். தங்களின் சௌகரியத்துக்கு ஏற்றவாறு, விரதத்தை மேற்கொள்ளலாம்.
மாலை நேரத்தில் விரதத்தை முடிக்க, ஒரு சிலர் சிவன் கோயில்களுக்கு சென்று, ஈசனை வழிபட்டு, விரதத்தை நிறைவு செய்கின்றனர். சிலர், வீட்டிலேயே வழிபாட்டை நிறைவு செய்கின்றனர்.
ஆவணி நோன்பை கடைபிடிக்கும் ஒரு சில பக்தர்கள், 24 மணி நேரம் கடுமையான விரதம் மேற்கொள்கிறார்கள். அடுத்த நாள் காலையில் இவர்கள் விரதத்தை பூர்த்தி செய்கிறார்கள். பெண்கள் சோமவார விரதத்தை மேற்கொண்டால், தாங்கள் விரும்பும் வாழ்க்கைத்துணை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
கூடுதலாக, அனைத்து ஆசைகளும் விருப்பங்களும் நிறைவேறும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. இந்தியா முழுவதும் இதைப் போன்று விரதங்களும், சடங்குகளும் பரவலாகக் காணப்படுகின்றன. ஆச்சரியமூட்டும் விதமாக, ஒரு சிலர், சோமவார விரதத்தை ஆண்டு முழுவதும் கடைபிடிக்கின்றனர். இதைப் போன்ற ஆழமான பக்தியும், அற்புதங்களும் இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன.
ருத்ராபிஷேக பூஜையை, நேர்த்தியான முறையில் செய்வது, சிவபெருமானின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
ஆவணி மாதத்தில் சிவபெருமானை வழிபடுவதற்கான பூஜை :
சிவபெருமானைப் பூஜிக்க, கிழக்கு நோக்கி உட்கார வேண்டும். அதைத் தொடர்ந்து, வலது கையில் ஒரு சில துளிகள் புனித நீரை எடுத்துக் கொண்டு, உங்களுக்கு என்ன தேவையோ அதைக் கேட்க வேண்டும். அதைத் தொடர்ந்து, நீங்கள் தியானம் செய்யும் போது, ஈசனையும் நினைத்துக் கொள்ளவும். கையில் உள்ள நீரை, சிவலிங்கத்தின் மீது ஊற்றவும். 'ஓம் நம சிவாய' என்று கூறிய படி, பஞ்சாமிர்தத்தை சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யவும். மீண்டும் தண்ணீர் ஊற்றி, அட்சதைத் தூவவும். பிறகு, ஆர்த்தி எடுக்க வில்வ இல்லை மற்றும் ஊதுபத்தியை ஏற்றி வைக்கவும். இனிப்புகளை காணிக்கையாக்கி, பாவங்கள் மற்றும் கர்மாவில் இருந்து விடுபட வேண்டுங்கள்.
ஆவணி மாதத்தில் திங்கட்கிழமை அன்று சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் :
* பக்தர்கள் ஆன்மீக ரீதியான அறிவைப் பெறுவார்கள்
* உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியம் மேம்படும்
* பிரபஞ்சத்தை உருவாக்கியதும், அழிப்பதும் ஈசனே! எனவே, இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது, நல்ல * * * ஞாபக சக்தியையும், மன உறுதியையும் கொடுக்கும்.
* சிவபெருமான் நல்ல வாழ்க்கைத்துணையை வழங்குவார்
* கூடுதலாக, விரதமிருப்பது, நம் பாதையில் இருக்கும் நச்சுகள் மற்றும் இடையூறுகளை நீக்குகிறது
* விளக்கு ஏற்றி வழிபட்டால், நம்முடைய அறிவு மேம்படும்
* கங்கை நீரால் அபிஷேகம் செய்வது, முக்திக்கு வழிவகுக்கும்
* சிவபெருமானுக்கு விருப்பமான பிரசாதங்களை வழங்குவது, நமக்கு எல்லா விதத்திலும் வெற்றியைப் பெற உதவும். நம்முடைய ஆசைகளும் நிறைவேறும்.
ஜோதிட ரீதியாக ஆவணி மாதத்தின் சிறப்புகள் :
வேத ஜோதிடத்தின் கூற்று படி, சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகும் நாள், ஆவணி மாதம் தொடக்கம் என்று கூறப்படுகிறது. இந்த கிரகத்தின் பெயர்ச்சி, அனைத்து ராசிகளையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது. அதனால் தான், பஞ்சாங்கம் இதனை மிகவும் விசேஷமான மாதமாகக் கருதுகிறது.
முடிவு:
ஆவணி மாதம் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த மாதமாகும். இது, வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் பார்க்கவும், முக்தி அடையவும் உதவி செய்கிறது. சிவ ஆலயங்களிலும், ஆவணி மாதம் வரும் அனைத்து திங்கட் கிழமைகளிலும், நாள் முழுவதும் சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன.
- இன்று விரதம் இருந்து சிவாலய வழிபாடு செய்வது கடன் தொல்லையை நீக்கும்.
- இன்று நந்தியை மனம் உருக வழிபட்டால் தடைபட்ட சுப காரியங்கள் மளமளவென நடக்க தொடங்கும்.
இன்று பிரதோஷம். புதன்கிழமையில் வருகிற பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்வது நன்மை தரக்கூடியது. இன்று விரதம் இருந்து மாலை சிவ ஆலயம் சென்று அபிஷேகத்துக்கு பொருட்களை வழங்கி இறைவனை தரிசித்தால் வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். 16 வகை செல்வங்கள் கிடைக்கும். வீட்டில் சுபிட்சம் நிலவும். புத்திர பாக்கியம் கிடைக்கும். சிவன் நந்தி அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கித் தந்தால் நல்ல புத்திசாலியான மக்கள் பேறு உண்டாகும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் நீங்கி மளமளவென்று நடைபெறும்.
புதன் என்பது அள்ளித்தரக்கூடிய ஒரு பொன்னான நாள். அந்த நாளில் யார் ஒருவர் விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்கிறார்களோ, அவர்களின் வாழ்வில் செல்வம் பெருகும். செல்வம் என்பது பணம் மட்டுமல்ல அறிவுச் செல்வம், ஆரோக்கியம், குழந்தை செல்வம், திருமண பாக்கியம், குடும்ப ஒற்றுமை என 16 வகையான செல்வங்கள் இருக்கின்றன. அந்த 16 செல்வங்களைப் பெற புதன்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். .
புதன்கிழமை வரும் பிரதோஷத்தில் விரதம் இருந்து சிவாலய வழிபாடு செய்வது கடன் தொல்லையை நீக்கும். இன்று நந்தி அபிஷேகத்துக்கு இளநீர் வாங்கிக் கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீக நம்பிக்கையாக உள்ளது. இன்று நந்தியை மனம் உருக வழிபட்டால் தடைபட்ட சுப காரியங்கள் மளமளவென நடக்க தொடங்கும்.
இன்று மாலை கோவிலில் தயிர் சாதம் வழங்குபவர்களுக்கு, நீண்ட நாள் காரியம் நிறைவேறும். பசுவிற்கு 4 மஞ்சள் வாழைப்பழம் கொடுக்கவும்.
- சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும்.
- சிவராத்திரி திருவிழா சைவர்களின் முக்கிய விழாவாகும்.
சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.
சிவன்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார். அருவத் திருமேனியுடைய சிவம் "சத்தர்' என்றும், அருவுருவத் திரு மேனியுடைய சிவம் "பரம்பொருள்' என்றும், உருவத் திருமேனியுடைய சிவம் "பிரவிருத்தர்' என்றும் சைவர்களால் அழைக்கப்படுகிறது.
சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவை;
காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும்.
நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும்.
மாலையில் தரிசிக்க - பாவம் அகலும்
அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது. சிவபெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன கொள்ளப்படுகின்றன.
நெற்றிக்கண் காணப்படல்.
கழுத்து நீலநிறமாக காணப்படல்.
சடைமுடியில் பிறைநிலாவைக் கொண்டிருத்தல்.
நீண்ட சுருண்ட சடாமுடி
தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
புலித் தோலினை ஆடையாக அணிந்திருத்தல்.
கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
நந்தியினை(காளை) வாகனமாகக் கொண்டிருத்தல்.
இடுகாட்டினை வாழ்விடமாக கொண்டிருப்பவர்
சக்தியைப் பாதியாக கொண்டிருத்தல்
அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்றுவகையான சிவ வழிபாட்டு முறையில் உருவ வழிபாடும் சைவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. உருவ வழிபாட்டில் சிவனை, லிங்கம், மகேசுவர மூர்த்தங்கள், சிவ உருவத்திருமேனிகள் ஆகிய சிவ வடிவங்களாக சைவர்களால் வணங்குகிறார்கள்.
இந்த வடிவங்களை சிவ ரூபங்கள் என்றும், சிவ சொரூபங்கள் என்றும் குறிப்பிடலாம். மகேசுவ மூர்த்தங்கள் என்று இருபத்து ஐந்து வடிவங்களும், உருவத்திருமேனிகள் என்று அறுபத்து நான்கு வடிவங்களும் குறிப்பிடப்படுகின்றன.
சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா, இலங்கை, நேபாளம் உட்பட பல நாடுகளில் கோயில்கள் பல உண்டு. ஜோதிலிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள், பஞ்சபூத சிவத்தலங்கள், ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள், ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள், சத்த விடங்க சிவத்தலங்கள், முக்தி தரவல்ல சிவத்தலங்கள், தமிழகத்தின் நவ கைலாயங்கள்(சிவதலங்கள்), தேவாரப் பாடல் பெற்ற சிவதலங்கள், அட்டவீரட்டானக் கோயில் என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
மகாசிவராத்திரி, யோகசிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ஷிய சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகைகளாக கொண்டாடப்படும் சிவராத்திரி திருவிழா சைவர்களின் முக்கிய விழாவாகும். மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி நாளை மகா சிவராத்திரி என்று அழைக்கின்றார்கள். இந்நாளில் பார்வதி தேவி, சிவபெருமானை எண்ணி வழிபட்டதாக சைவர்கள் நம்புகின்றார்கள்.
- சிவனின் அடிமுடியைக் காண போட்டியிட்டதாக ஒரு புராணக்கதை உண்டு.
- சிவன் லிங்க வடிவமாக உள்ளார்.
சிவாலயங்களில் கோஷ்டத்தின் பின்புற சுவரில் லிங்கோத்பவரைக் காணலாம். இவரது பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் புதைந்திருக்கும். மேலே ஒரு அன்னமும், கீழே ஒரு பன்றியும் செதுக்கியிருப்பார்கள். அன்னம் பிரம்மாவாகவும், வராகம் (பன்றி) விஷ்ணுவாகவும் கருதப்படுகிறது.
இவர்கள் சிவனின் அடிமுடியைக் காண போட்டியிட்டதாக ஒரு புராணக்கதை உண்டு. உண்மையில் இதன் தத்துவம் என்ன தெரியுமா? சிவன் லிங்க வடிவமாக உள்ளார். லிங்கம் என்பது நீள் வட்ட வடிவமுடையது. சதுரம், செவ்வகம், முக்கோணம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஆரம்ப இடமும், முடியும் இடமும் உண்டு.
ஆனால், வட்டத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. சிவனும் ஆதிஅந்தம் இல்லாதவர் என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. ஆனால், இந்த வடிவம் மனதில் நிற்காது என்பதற்காக ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. ஊரில் இருக்கும் மகனிடமோ மகளிடமோ போனில் பேசினால் திருப்தி இருக்காது.
நேரில் பார்த்தால் தான் மனம் திருப்தியடையும். அதுபோல, சிவனை நேரில் பார்த்த திருப்தி பெற, அவரது உருவத்தை நீள்வட்ட லிங்கத்துக்குள் நிறுத்தி, தலையும், திருவடியும் புதைந்திருப்பது போல் காட்டி, அவர் ஆதிஅந்தமில்லாதவர் என்ற தத்துவம் மாறாமல் உருவம் கொடுத்தனர்.
- வாரம்தோறும் இவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அகோர பூஜை நடைபெறுகிறது.
- இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை தருவதாக ஐதீகம்.
சிவபெருமானுக்கு ஈசானம், சத்யோஜாதம், தத்புருஷம், வாமதேவம், அகோரம் என்ற ஐந்து முகங்கள் உள்ளன. இந்த முகங்களில் ஒன்றான அகோர முகம் தாங்கியிருப்பவர் அகோர மூர்த்தி. இவர் மயிலாடுதுறை மாவட்டடம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச் சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். முன்னொரு காலத்தில் மருத்துவாசுரன் என்ற அசுரன், சிவபெருமானை வேண்டி நடுக்கடலில் கடும் தவம் புரிந்தான்.
அவனுடைய தவத்தை மெச்சிய சிவபெருமான், அவன் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும்? என கேட்டார். அப்போது அந்த அசுரன், சிவபெருமானின் சூலாயுதத்தை கேட்டான். அதைக்கேட்டதும் சிவபெருமான், கொஞ்சம் கூட தாமதிக்கமல் உடனடியாக அந்த சூலாயுதத்தை அசுரனிடம் தந்து அருளுகிறார். சூலாயுதத்தை பெற்ற அசுரன் தேவர்களையும், பொதுமக்களையும் துன்புறுத்த ஆரம்பித்தான்.
அசுரனுடைய துன்பத்தை பொறுக்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் முறையிடுகின்றனர். இதனையடுத்து சிவபெருமான், நந்திதேவரை அழைத்து இது சம்பந்தமாக விசாரித்து வருமாறு அனுப்பினார். அசுரனிடம் சென்ற நந்தி தேவர், தேவர்களையும் பொதுமக்களையும் துன்புறுத்துவது குறித்து கேட்டார். அதற்கு அந்த அசுரன் கோபம் கொண்டு தனது சூலாயுதத்தால் நந்திதேவரின் ஒருபக்க கொம்பை முறித்ததுடன், உடலில் பல்வேறு இடங்களிலும் குத்திகாயப்படுத்தினான். அந்த காயத்தோடு சிவபெருமானிடம் நந்திதேவர் செல்கிறார். ரத்தத்தோடு தன் முன் நின்ற நந்திதேவரை பார்த்த சிவபெருமான் சினம் கொண்டு தனது ஐந்தாவது முகத்தில் இருந்து தீப் பிழம்பாக வெடித்து அகோர மூர்த்தியாக தோன்றுகிறார்.
சிவபெருமானுடைய கோபத்தைக் கண்ட அசுரன், ஈசனிடம் சரணாகதி அடைகிறான். சினம் குறைந்த அகோரமூர்த்தி, அசுரனை மன்னித்து அருளுகிறார். அப்போது அசுரன் அவரிடம், தங்களை வந்து வணங்குபவர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்து அருள்பாலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டான். இதனை ஏற்ற அவர் அழகிய முகம் கொண்ட அகோரமூர்த்தி சுவாமியாக திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச்சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார். அவருடைய திருவுருவத்தில் கபாலம், மண்டை ஓடு மாலை, ஈட்டி, எண்ணிலடங்கா விஷ ஜந்துக்கள் உள்ளன. அதோடு இங்கே அஷ்ட(எட்டு) பைரவர்கள் இருப்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. இவர்களை வணங்கினால் வாழ்க்கை ஏற்றம் பெறும் என்பது நம்பிக்கை யாகும்.
கோவில் அமைவிடம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவெண்காட்டில் இக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அசுரனால் குத்துப்பட்ட நந்திதேவர், சுவேதாரண்யேஸ்வரர் சன்னிதி முன்பு எழுந்தருளியிருக்கிறார். மிகவும் விசேஷ சக்தி கொண்ட இவரை பிரதோஷ தினங்களில் வழிபடுவது சிறப்பான பலன்களை தரும் என சுவேதாரண்யேஸ்வரர் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அசுரனால் குத்துப்பட்ட நந்திக்கு, சிவபெருமான் அனுக்கிரகம் செய்ததால், அகோரமூர்த்தி சன்னிதியில் காயம் இல்லாத நந்தி பகவான் அவரது காலடியில் இருப்பதை காணலாம். அதேபோல் அசுரனும் சரணாகதி ஆகி காலடியில் இருப்பதையும் காணலாம். அகோர மூர்த்தி சுவாமி மாசி மாதம் பூர நட்சத்திரத்தன்று இரவு தோன்றியதால், ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் ஐந்தாம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
வாரம்தோறும் இவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அகோர பூஜை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை தருவதாக ஐதீகம். மேலும் சிவனுக்கு உரிய மாதமான கார்த்திகை மாதத்தில் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் அபிஷேக ஆராதனைகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.
- ஏகபாத மூர்த்தி சிலைகள், பெரும்பாலும் தென்னிந்தியாவில் உள்ள ஆலயங்களில் காணப்படுகின்றன.
- சிவபெருமானின் 64 சிவ வடிவங்களில் ஒன்றே ஏகபாத மூர்த்தி வடிவம்.
சிவபெருமானுக்கு 64 சிவ வடிவங்கள் இருப்பதாக சைவ நெறி தத்துவம் சொல்கிறது. அதில் ஒன்றே, 'ஏகபாத மூர்த்தி.' ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய ஐந்து மூர்த்திகளும் ஒடுங்கி, ஒரே உருவத்தில் காட்சியளிப்பதே இந்த மூர்த்தி. ஊழிக்காலம் எனப்படும் பிரளய காலத்தில், இந்த உலகமே நீரில் மூழ்கி அழியும். அப்போது உலகில் உள்ள அனைத்து உயிர்களும், உமையவளாகிய சக்திதேவியும் கூட இந்த ஏகபாத மூர்த்தியாகிய சிவபெருமானிடம் ஒடுங்கிவிடுவார்கள்.
ஊழிக்காலத்தில் இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என்று வேதங்கள் சொல்கின்றன. அனைத்து சக்திகளின் பிறப்பிடமாவும், அனைத்து உயிர்களும் தஞ்சமடையும் இடமாகவும் இந்த ஏகபாத மூர்த்தி இருக்கிறார். இவரது சிலைகள், பெரும்பாலும் தென்னிந்தியாவில் உள்ள ஆலயங்களில் காணப்படுகின்றன. நான்கு கரங்களுடன், மூன்று கண்கள் கொண்டவராய், ஒரு பாதத்தில் நின்ற கோலத்தில் அருளும் வடிவம் இவருடையது.
ஒற்றைக் காலில் நிற்கும் சிவபெருமானுடைய இடுப்பின் வலது பக்கம் பிரம்மதேவனும், இடதுபக்கம் மகாவிஷ்ணுவும் காட்சி தருகின்றனர். சிவபெருமானின் ஒற்றைக் கால், இந்த பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்கும் தூணாகக் கருதப்படுகிறது. வலது கை அபய முத்திரை காட்டியபடி இருக்க, இடது கை வரத முத்திரை காட்டுகிறது. பின் இரு கரங்களிலும் மான் மற்றும் மழு தாங்கி அருளும் இந்த மூர்த்தியே, 'ஏகபாதர்.'






