search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புற்றுமண்"

    • மஹா விஷ்ணு பெரியவரா, சிவபெருமான் பெரியவரா என்பது குறித்து பக்தர்கள் சர்ச்சையில் ஈடுபட்டனர்.
    • நாகங்களின் அரசர்கள் சம்பா, பத்ம இருவரும் முறையே சிவபெருமானையும், மஹாவிஷ்ணுவையும் தெய்வமாக வழிபட்டு வந்தனர்.

    ஸ்ரீ சங்கர நயினார் திருக்கோவில் உள்ள சங்கரன்கோவில் திருத்தலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தலம் ஆகும். நெல்லை மாவட்டத்திற்கு தலைநகரம் திருநெல்வேலி. அதற்கு அடுத்த பெரிய நகரம் சங்கரன்கோவில் ஆகும். ஆடித்தபசு என்றால் உடனே நினைவுக்கு வருவது சங்கரன் கோவிலில் நடைபெறும் திருவிழா ஆகும்.

    மற்ற தலங்களைப் போன்றே இந்த திருத்தலத்திற்கும் ரசிக்கும்படியான, சுவையான புராணக்கதைகள் உண்டு. இந்து சமயத்திலே பல பிரிவுகள் உண்டு. வேற்றுமைகள், கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் ஒற்றுமை இருப்பதாலே உலகிலேயே மிகவும் தொன்மையான பெரிய சமயம் ஆக இருக்கின்றது.

    வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் வாதங்கள் உண்டாயிற்று. மஹா விஷ்ணு பெரியவரா, சிவபெருமான் பெரியவரா என்பது குறித்து பக்தர்கள் சர்ச்சையில் ஈடுபட்டனர். இருவரும் ஒன்றே என்பதை உணர்த்த சங்கரனாகவும், நாராயணராகவும் இணைந்து தோன்றி, ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை புரிய வைத்தனர்.

    இங்குள்ள பெருமானார் பாதி உருவம் சந்தனம், பாம்பு, மான் ஆகியவற்றுடன் சிவபெருமான் ஆகவும், மறு பாதி உருவத்தில் சங்கு, சக்கரத்துடனும் நாராயணராகவும் காட்சி தருகிறார். ஆனாலும், இதை ஒப்புக்கொள்ளாத வைணவர்கள் இந்த தலத்திற்கு வந்து வழிபடுவதை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை என கூறுகின்றனர்.

    ஒரு காலத்தில் தேவர்களில் ஒருவரான மாணிக்கிரீவன் என்பவர் பார்வதி தேவியின் சாபத்தினாலே பூமியிலே மானிடனாகப் பிறந்து ஒரு தோட்டத்தில் தோட்டக்காரானாக வேலை செய்து வந்தார். அந்த தோட்டத்தில் இருந்து மலர்கள் அரண்மனைக்கு தினமும் அனுப்பப்பட்டு வந்தது.

    வன்மீகநாதன் பெயர் எப்படி?

    ஒரு நாள் தோட்டத்தில் ஒரு பாம்பு புற்று இருப்பது கண்டு அதை அகற்ற மாணிக்கிரீவன் முயன்றபொழுது அதில் இருந்த பாம்பின் வால் வெட்டப்பட்டது. அதன் அடியில் ஒரு சிவலிங்கம் இருப்பதை பார்த்து அரண்மனைக்கு வந்து மன்னனிடம் கூறினார். அப்பொழுது அரசனாக இருந்த மன்னன் உக்கிரம பாண்டியன் இது சிவபெருமானின் இருப்பிடம் தான் என்று தீர்மானித்து, அந்த லிங்கத்தை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து ஒரு கோவிலை நிர்மாணித்தார்.

    அந்த புற்று வன்மீகம் என்று அழைக்கப்பட்டதால் அந்த இறையனாருக்கு வன்மீகநாதர் என்று பெயரிட்டனர். அந்த புற்றை இப்பொழுதும் கோவிலிலுள்ள ஒரு பெரிய தொட்டியில் வைத்துள்ளனர். அந்த புற்று மண்ணை சகல நோய்களையும் தீர்க்கும் மருந்தாக பூசி வருகின்றனர். பாம்பு கடித்தல், தோல் நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

    சிவபெருமானின் துணைவியார் பார்வதி தேவி சிவபெருமானையும், தன் அண்ணன் மஹாவிஷ்ணுவையும் ஒன்று சேர காண விரும்பி, அதற்காக புங்கவன யாத்திரை சென்றாராம். ஆடி மாதம் ஒன்பது நாட்கள் விரதமிருந்து பூஜைகள் செய்தார். பவுர்ணமி அன்று அவர் விருப்பம் நிறைவேற பூஜையின் முடிவில் சங்கரரும், மஹாவிஷ்ணுவும் இணைந்து, சங்கர நாராயணராக காட்சி அளித்து ஆசி கூறியதால், இந்த இடம் சங்கர நாராயணர் கோவில் ஆயிற்று.

    சிவபெருமான்-விஷ்ணுவை வழிபட்ட நாக அரசர்கள்

    நாகங்களின் அரசர்கள் சம்பா, பத்ம இருவரும் முறையே சிவபெருமானையும், மஹாவிஷ்ணுவையும் தெய்வமாக வழிபட்டு வந்தனர். இருவரும் போட்டியில் யாருடைய இறைவன் பெரியவர் என்று வினா எழுப்பியதற்கு விடை தரும் வகையில் சிவனும் மஹாவிஷ்ணுவும் இணைந்து, சங்கர நராயணராக காட்சி அளித்ததாகவும் மற்றொரு புராண வரலாறு கூறுகிறது.

    உக்கிர பாண்டிய மன்னன் யானை மீது ஏறி, மீனாட்சி அம்மனை தரிசிக்க புறப்பட்டபொழுது யானை ஒரு குழியில் விழுந்து அதனால் அந்த குழியில் இருந்து எழ முடியவில்லை. அதுசமயம், ஒரு குடியானவன் அரசனிடம், காட்டில் உள்ள ஒரு எறும்பு புற்றின் மேல் ஒரு சிவலிங்கம் உள்ளது என்றும் அந்த லிங்கத்தை ஒரு பாம்பு சுற்றி இருப்பதாகவும் கூறினான். அங்கு விரைந்து சென்று அந்த அதிசயத்தை கண்ட மன்னன், இது இறைவனின் ஆணை என்று தீர்மானித்து கட்டியது தான் இந்த தலம் என்றும் கூறுகின்றனர்.

    இப்படி பல புராண கதைகள் இத்தலத்தை பற்றி உள்ளது.

    இத்திருத்தலத்தை சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு உக்கிர பாண்டிய மன்னன் கட்டியுள்ளார். இங்கு மூன்று கருவறைகள் உள்ளன. ஸ்ரீ சங்கரேஸ்வரர், அன்னை கோமதி அம்மன், மற்றும் ஸ்ரீ சங்கரநாராயணன் ஆகியோர் முறையே உள்ளனர்.

    புற்று மண்ணே அருள் பிரசாதம்

    இங்குள்ள புற்று மண்ணை அருள் பிரசாதமாக நோய் தீர்க்கும் நிவாரணி என்று பக்தர்கள் நம்புகின்றனர். தங்கள் வீடுகளில் பாம்பு இருப்பதை கண்டால் சங்கரன் கோவிலுக்கு வருவதாக நேர்ந்து கொண்டால் அதன் பின்பு எந்த பாம்பும் அந்த வீட்டுக்கு வருவதில்லை என்பது இப்பகுதி பக்தர்களின் நம்பிக்கை.

    இங்குள்ள திருக்குளம் நாகசுனை என்பது ஆகும். இதை நாகதேவதைகளான பதுமன்-சங்கம் தோண்டியதாகவும், இந்த சுனையில் உள்ள நீருக்கு அதிக சக்தி உள்ளது என்று பக்தர்கள் நம்புகின்றனர். தினமும் இந்த சுனை நீர் கொண்டுதான் இங்குள்ள சிலைகளுக்கு ஆராட்டு செய்யப்படுகின்றது.

    இங்குள்ள அம்மன் விரதம், பூஜைகள் செய்து அமைந்த கோவில் என்பதால் இந்த அம்மன் மிகவும் சக்தி பெற்றவள் என்கின்றனர். அம்மன் கருவறைக்கு முன்பு சக்கரம் போன்ற ஒரு சிறிய குழி இருக்கின்றது. மன நோய் உள்ளவர்களும், மன அழுத்தம் உள்ளவர்களும் இந்த இடத்தில் அமர்ந்து அம்மனை வழிபட சகலமும் தீர்ந்திடும், வாழ்வு வளம் பெறும், மன நிம்மதி கிடைக்கும் என்பது உண்மை ஆகும்.

    ஆடித்தபசு அன்று திருக்குளத்தில் சர்க்கரையையும் உப்பையும் கலந்து வீசி எறிந்து வேண்டினால் கேட்டது கிடைக்கும் என்றும். சகல துன்பங்களும் அவை நீரில் கரைவது போன்று கலந்து போய்விடும் என்பது ஐதீகம்.

    சித்திரை பிரம்மோத்சவம் ஏப்ரல் மாதம் 10 நாட்களும், ஆடித்தபசு ஆகஸ்ட் மாதத்தில் 12 நாட்களும், தெப்பத்திருவிழா தை மாதக் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஆடித்தபசு விழா சமயத்தில் சுற்றி உள்ள அனைத்து ஊர்களிலுமிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கி பக்தர்களுக்கு வசதி செய்யப்படுகின்றன. அந்த அளவிற்கு கூட்டம் அதிகமாக கூடுவர்.

    வளர்ந்து வரும் பெரிய நகரம்

    சங்கரன் கோவில் வளர்ந்து வரும் ஒரு பெரிய நகரம் ஆகும். இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். பருத்தி, மிளகாய் வத்தல், நெல், வாழை, கரும்பு ஆகியவை முக்கிய பயிர்கள் ஆகும். மேலும் இதை சுற்றி, நூற்பாலைகளும், 4000 விசைத்தறி ஆலைகளும், கைத்தறி நெசவுத் தொழிலும் இருக்கிறது.

    இங்கு உற்பத்தி ஆகும் பருத்தி சேலைகள், பாலி பருத்தி சேலைகள், துண்டுகள், டெரிதுவாலை துண்டுகள் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருப்பதால் மிகவும் பிரசித்தி பெற்றவை.

    உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

    நிலவு லாவிய நீர்மலி வேணியன்

    அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்

    மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்

    சென்னையில் இருந்து தினமும் வரும் பொதிகை விரைவு ரெயில் மூலம் வரலாம். இங்கு ரெயில் நிலையம், பேருந்து நிலையமும் உண்டு.

    தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்து ஆகம பூஜைகளும் பக்தர்களுக்காக தவறாமல் செய்யப்பட்டு வருகின்றது.

    • ஈசன் தன் மேனியின் ஒரு பாதியை நாராயணருக்கு தந்தார். எனவே அம்மன் ஈசனை மணம் புரிய முடியவில்லை.
    • சங்கர நாராயணர் சன்னதியில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை.

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது சங்கரன்கோவில். திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு சிவஸ்தலம். ஈஸ்வரன் திருநாமம் சங்கரலிங்கம். அம்மன் திருநாமம் கோமதி. அம்மனுக்கு இன்னொரு திருநாமம் ஆவுடை அம்பாள். அரசு ஆவணங்களில் இந்த ஊர் பெயர் சங்கர நைனார் கோவில் என்று தான் உள்ளது. காலப்போக்கில் மருவி சங்கரன்கோவில் என்று தற்பொழுது அறியப்படுகிறது.

    மதுரை ஆண்ட உக்கிரமபாண்டிய மன்னரால் பதினொன்றாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோவில் இது. இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு இங்கு சங்கரநாராயணன் சன்னதி உள்ளது. சிவபெருமானும் விஷ்ணுவும் சரிபாதியாக அமைந்துள்ள சன்னதி இது. லிங்கோத்பவர் தோன்றிய புற்று இந்த சுவாமி சன்னதியில் வட மேற்கு பகுதியில் காணலாம்.

    சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கும் பிரம்மாவுக்கும் தனி சன்னதிகள் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூவரும் எழுந்தருளியுள்ள ஸ்தலம் சங்கரன்கோவில்.

    தல வரலாறுபடி ஆடி மாதம் கோமதி அம்மன் புன்னைவனத்தில் தவம் செய்தாள். ஆனால் ஈசன் தன் மேனியின் ஒரு பாதியை நாராயணருக்கு தந்தார். எனவே அம்மன் ஈசனை மணம் புரிய முடியவில்லை. அம்மன் ஐப்பசியில் மீண்டும் தவம் இருந்து சங்கரலிங்க சுவாமியை மணம் புரிந்தார் என்பது ஸ்தல புராணம். எனவே தான் இந்த கோவிலில் ஆடி தபசும் ஐப்பசி தபசும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    கோமதி அம்மன் சன்னதியில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை உள்ளது. சங்கர நாராயணர் சன்னதியில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை. இந்த கோவிலில் தினமும் ஏழு கால பூஜை நடைபெறுகிறது. அர்த்த ஜாம பூஜையின்போது அம்மன் சன்னதியில் பால் நிவேதனம் செய்யப்படுகிறது. அந்த பால் பருகினால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் அருளுகிறாள் அன்னை கோமதி. இங்குள்ள புற்றுமண் சகல நோய்களை தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.

    • குளிர்ந்த கண்ணன் ஈசன் திருமேனியில் எழுந்தருளியதால், அபிஷேகப் பிரியன் சிவபெருமானுக்கு அபிஷேகம் கிடையாது!
    • உடல் உபாதைகளுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    மூன்று சந்நிதிகள்

    சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கரலிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், ஒரே உருவில் வலப்பக்கம் ஈசனாகவும், இடப்பக்கம் திருமாலாகவும் வீற்றிருப்பார்.

    மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவியர் கோமதி அம்மனாக வீற்றுள்ளார். அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம்! பொதுவாக ஸ்ரீசக்ர பிரதிஷ்டை காலடிகளில் தான் இருக்கும்! ஆனால் இங்கு சன்னிதி முகப்பில் பெரிதாக ஸ்ரீசக்ர அமைப்பு! மன மாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட, அதில் உட்கார்ந்தும் தியானித்துக் கொள்ளலாம்!

    அபிஷேகம் கிடையாது

    குளிர்ந்த கண்ணன் ஈசன் திருமேனியில் எழுந்தருளியதால், அபிஷேகப் பிரியன் சிவபெருமானுக்கு அபிஷேகம் கிடையாது! அலங்காரம் மட்டுமே!

    அதனால் சந்திர மௌலீச்வரர் என்னும் லிங்கத்தை முன்னே நிறுத்தி, அதற்கு மட்டும் திருமுழுக்காட்டுதல், அன்னாபிஷேகங்கள் உண்டு!

    சன்னிதியில் விபூதிப் பிரசாதம், துளசி தீர்த்தம் உண்டு!, வில்வார்ச்சனை, துளசி அர்ச்சனை இரண்டுமே உண்டு! இரண்டையும் இணைக்கும் அம்பாளின் குங்குமார்ச்சனையும் உண்டு!

    நோய் தீர்க்கும் புற்றுமண்

    ஐம்பூதங்களில் இந்தக் கோயில் நிலம் சம்பந்தமான மண் தலமாகத் திகழ்கிறது. இதனால், இக்கோயிலில் உள்ள 'புற்றுமண்' வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகும். மருத்துவ குணமுடைய புற்று மண்ணை உடலில் பூசியும், தங்கள் வயல்கள், வீடுகளில் தெளித்தும் சுகம் காண்பார்கள். இதனால் உடல் நோய்கள், பூச்சிக்கடியின் தாக்கம், சரும நோய்கள் நீங்கும் என்பதும், வயல், வீடுகளில் விஷ ஜந்துக்கள் வராது என்பதும், வயல், வீடுகளின் செல்வம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.

    கோமதி அம்மன் சந்நிதி முன்பு உள்ள ஸ்ரீசக்கரத்தில் பிணியாளர்கள், செய்வினைகளால் பாதிக்கப்பட்டோர் அமர்ந்து அம்மனை நோக்கி தவம் செய்தால் அவை நீங்கும். அதே பகுதியில் உடல் உபாதைகளுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    வீட்டிலும் கனவிலும் விஷ ஜந்துக்கள் அச்சுறுத்தல் தென்பட்டாலும், விபத்து போன்றவற்றில் காயம், உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட்டால், இக்கோயிலில் விற்கப்படும் உலோகத்தினால் செய்யப்பட்ட தகட்டால் ஆன பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் உருவம், மனித கை, கால், மார்பு, தலை போன்ற உறுப்புகளின் தகட்டை வாங்கி உண்டியலில் செலுத்தி வணங்குவதன்மூலம் பாதிப்புக்கள் நீங்கும், நிவர்த்தி கிட்டும் என்கின்றனர்.

    பன்னிருநாள் திருவிழா

    ஆடித் தபசின் பன்னிரண்டு நாளும், ஊர் மக்கள் தங்கள் வீட்டு விழாவைப் போல் கொண்டாடுகின்றனர்! உலக நன்மைக்காகத் தன் இடப்பாகத்தையே அன்னை விட்டுத் தந்தாள் அல்லவா? அதனால் அவளுக்கென்று தனித்தேர்! அவள் மட்டுமே சிறப்பாக வலம் வருவாள்!

    இறுதி நாளன்று, ஆடித் தபசு மண்டபம் மண்டபத்தில் அவள் தவம் நடித்துக் காட்டப்படுகிறது! ஒரு கையில் விபூதிப் பை! ஒரு காலில் தவம்! சங்கர நாராயணர் அவள் முன் தோன்றி வரம் அருளும் காட்சி!

    அம்பாளின் தபசுக் காட்சியின்போது பக்தர்கள் பருத்தி, மிளகாய் வத்தலையும், விவசாயிகள் நெல், சோளம், கம்பு, மிளகாய்வத்தல், பஞ்சு, பூ என வயலில் விளைந்த பொருட்களை 'சூறை விடுதல்' என்ற பெயரில் அம்பாள்மீது வீசியெறிந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.

    அம்பாளின் வேண்டுதலின்படி சங்கரலிங்கமாக யானை வாகனத்தில் சிவபெருமான் அம்பாளுக்குக் காட்சியருள்வார்.

    பக்தர்கள் சுற்றும் ஆடிச்சுற்று

    ஆடித் தபசு கொடியேறிய பின் 'ஆடிச்சுற்று' என்ற பெயரில், பக்தர்கள் கோயிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையில் சுற்றி நேர்ச்சை செலுத்துவார்கள். அதிக எண்ணிக்கையில் சுற்ற விரும்புவோர் ஆடி மாதம் முழுவதும் காலை, மாலை என சுற்றி வருவர். ஆடிச்சுற்று சுற்றுவதால், ஒரு காலில் நின்று தபசு காட்சி காணும் அம்பாளின் கால் வலியை தாம் ஏற்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

    ×