search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் கைது"

    • கல்லூரி மாணவர்களிடையே ராகிங் நடக்காதபடி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளவற்றை கருத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டது.
    • ராகிங் நடைபெறுவதற்கு முன்பே எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை:

    கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர் ஒருவரை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குனர் கீதா, அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கல்லூரி மாணவர்களிடையே ராகிங் நடக்காதபடி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளவற்றை கருத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டது. தற்போது நடப்பு கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் சுயநிதி கல்லூரி முதல்வர்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    அதன்படி ராகிங் நடைபெறுவதற்கு முன்பே எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு அமைத்தல் வேண்டும், ராகிங் பற்றி உடனடியாக புகார் செய்ய வேண்டிய ஆசிரியர்களின் பெயர், முகவரி, செல்போன் எண்கள் அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும்.

    ராகிங் புகார் பெட்டி, ஆலோசனை பெட்டியை அமைத்து ராகிங் கொடுமையை அறவே ஒழிக்க முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வரும், துறை தலைவர்களும் கூடி ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் கடந்த 2019-ம் ஆண்டின் அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு மகாராஷ்டிர அரசின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இருக்கும் ராகிங் தடுப்பு குழுக்களில் அக்கல்லூரியின் தலைமை மற்றும் துறைசார்ந்த தலைவர்கள், பொதுத்துறை முக்கிய தலைவர்கள், போலீஸ் துறை, செய்தித்துறை, மாணவர்களின் பெற்றோர், மாணவர் இருப்பது போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் ராகிங் குழுக்கள் அமைக்க வேண்டும்.

    இதுதொடர்பாக ஆய்வு செய்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகளிடம் இருந்து ராகிங் குறித்த அறிக்கை ஒரு வாரத்துக்குள் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மாணவர் தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த ராகிங் கொடுமைகளை கூறி கதறி அழுதார்.
    • ராகிங் கொடுமை நடந்த கல்லூரி விடுதிக்கு கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    கோவை:

    கோவை பீளமேட்டில் தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த 18 வயது மாணவர் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து கல்லூரியில் படித்து வந்தார்.

    கடந்த 6-ந் தேதி மாணவர் விடுதியில் உள்ள அறையில் இருந்தார். அப்போது அதே கல்லூரியில் 3-ம், 4-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 7 பேர் வந்தனர். அவர் 2-ம் ஆண்டு மாணவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 7 மாணவர்களும் 2-ம் ஆண்டு மாணவரை யாரும் இல்லாத அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து 7 பேரும் சேர்ந்து 2-ம் ஆண்டு மாணவரை நிர்வாணப்படுத்தி, மொட்டை அடித்து ராகிங் செய்தனர்.

    மேலும் மாணவரை நிர்வாணப்படுத்தி அவர்களது செல்போன்களில் வீடியோ எடுத்து பணம் கொடுக்கவில்லை என்றால் நண்பர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டினர். மேலும் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி சென்றனர்.

    இது குறித்து மாணவர் தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த ராகிங் கொடுமைகளை கூறி கதறி அழுதார். மாணவரின் பெற்றோர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    விசாரணையில் 2-ம் ஆண்டு மாணவரை ராகிங் செய்தது அந்த கல்லூரியில் 3-ம், 4-ம் ஆண்டு படிக்கும் மணிகண்டன் (வயது 20), நித்யானந்தன் (20), ஐயப்பன் (21), தரணிதரன் (20), சந்தோஷ் (21), வெங்கடேஷ் (20), யாஜீஸ் (21) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பீளமேடு போலீசார் 7 மாணவர்கள் மீதும் ராகிங் செய்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் 7 பேரையும் போலீசார் கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கைதான மாணவர்கள் 7 பேரையும் வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க நீதிபதி செந்தில்ராஜா உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் 7 மாணவர்களையும் கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    ராகிங் கொடுமை நடந்த கல்லூரி விடுதிக்கு கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் தடுப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களை இதுபோன்ற ராகிங் செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதேபோல ராகிங் தொடர்பாக மாணவர்கள் புகார் தெரிவிக்கும்போது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றால் கல்லூரி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் விசாரணையில், முதலாம் ஆண்டு மாணவரை, 2-ம் ஆண்டு மாணவர்கள் தாக்கியது உறுதியானது.
    • போலீசார் மாணவரை தாக்கி மொட்டையடித்து ராகிங் செய்து மிரட்டிய 2-ம் ஆண்டு மாணவர்கள் 7 பேரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த மாணவர்களுக்காக கல்லூரி வளாகத்தில் விடுதி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த 18 வயது மாணவர். இவர் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரி முடிந்ததும் தனது அறைக்கு சென்றார். இரவில் இவரது அறைக்கு அதே கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு மாணவர்கள் வந்துள்ளனர்.

    அவர்கள், மாணவரை தங்கள் அறைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்தார். இருந்தபோதிலும் சக மாணவர்கள், அவரை வலுக்கட்டாயமாக தங்கள் அறைக்கு இழுத்து சென்றனர்.

    பின்னர் அறைக்குள் பிடித்து தள்ளிவிட்டு அறையை அடைத்தனர். தொடர்ந்து 2-ம் ஆண்டு மாணவர்கள் 7 பேரும் சேர்ந்து, முதலாம் ஆண்டு மாணவரிடம், எங்களுக்கு மது குடிக்க பணம் வேண்டும். நீ பணம் வைத்திருக்கிறாய். உடனே பணத்தை தா என்றனர்.

    அவர் அதற்கு என்னிடம் பணம் இல்லை என கூறியதுடன், நான் எதற்கு தர வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 2-ம் ஆண்டு மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவரை சரமாரியாக தாக்கினர். மேலும் அங்கிருந்த கத்தியை எடுத்து வாலிபருக்கு மொட்டையடித்து, அவரது உடைகளை களைந்து நிர்வாணப்படுத்தினர்.

    பின்னர் அதனை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து கொண்டனர். தொடர்ந்து அதிகாலை வரை தங்கள் அறையில் அடைத்து வைத்து மாணவரை தகாத வார்த்தைகளால் பேசியும், தாக்கியும் உள்ளனர்.

    அதிகாலைக்கு பிறகு அறையை திறந்து விட்டு, இங்கு நடந்தவற்றை வெளியில் சொல்லக்கூடாது. அப்படி கூறினால் உன்னை கொன்றுவிடுவோம் என மிரட்டலும் விடுத்தனர்.

    அவர்களிடம் இருந்து தப்பித்தால் போதும் என மாணவர் அங்கிருந்து தனது அறைக்கு ஓடி வந்தார். பின்னர் தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் போனில் கூறி அழுதார்.

    இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர்கள், உடனடியாக கல்லூரிக்கு விரைந்து வந்தனர். தங்கள் மகன் மொட்டை தலையுடன், காயத்துடன் இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் பீளமேடு போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், முதலாம் ஆண்டு மாணவரை, 2-ம் ஆண்டு மாணவர்கள் தாக்கியது உறுதியானது. இதையடுத்து போலீசார் மாணவரை தாக்கி மொட்டையடித்து ராகிங் செய்து மிரட்டிய 2-ம் ஆண்டு மாணவர்கள் 7 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது ராக்கிங் சட்ட பிரிவுகள் உட்பட சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவையில் கல்லூரிகளில் ராகிங் என்பது பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 7 மாணவர்கள் சேர்ந்து முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்து தாக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளி மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
    • கைதான 4 மாணவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த மாதம் பள்ளி மாணவர், சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசாரும், கல்வி அதிகாரிகளும் அங்குள்ள பள்ளிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நாங்குநேரியில் உள்ள சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்பறை சுவரில் சாதிய வன்முறையை தூண்டும் வகையில் அவதூறு வாசகங்களை எழுதியிருந்தனர்.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் நாங்குநேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்று பார்வையிட்டனர்.

    அங்கு சுவரில் எழுதப்பட்ட அவதூறு வாசகங்களை அழித்தனர். பின்னர் பள்ளி மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    இந்த விசாரணையில் 4 மாணவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான 4 மாணவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். பள்ளிக்கூட வகுப்பறை சுவரில் சாதிய வன்முறையை தூண்டும் வகையில் அவதூறு வாசகங்கள் எழுதிய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிளாஸ்டிக் பைப்புகளுடன் வந்த நந்தனம் கல்லூரி மாணவர்கள் பிரேம்குமாரை சுற்றிவளைத்து தாக்கினர்.
    • மாணவர்கள் 7 பேரையும் சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

    போரூர்:

    சென்னை நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரேம் குமார். மாநிலக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை அவர் கல்லூரி செல்வதற்காக வடபழனி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது அங்கு பிளாஸ்டிக் பைப்புகளுடன் வந்த நந்தனம் கல்லூரி மாணவர்கள் பிரேம்குமாரை சுற்றிவளைத்து தாக்கினர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் இளங்கனி மற்றும் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு பிரேம்குமார் மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர்களான தீப கணேஷ், நவீன்குமார், தமிழ்செல்வன், அரசு, கிரிதரன், சதிஷ், அபிஷேக் ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ்வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாணவர்கள் 7 பேரையும் சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வேல்ராஜ் மாணவர்கள் 7 பேரையும் ஜாமீனில் விடுவித்தார். மேலும் அவர்களை 30 நாட்கள் நல்லொழுக்க பயிற்சி வகுப்பில் சேர்க்க உத்தரவிட்டார்.

    அதன்படி கல்லூரி மாணவர்கள் 7 பேரும் இன்று முதல் 30 நாட்களுக்கு கல்லூரி முடிந்து மாலை 4 மணி முதல் 6 மணி வரை சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் நல்லொழுக்க பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள உள்ளனர்.

    அங்கு சிறைத்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி மீண்டும் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடாமல் நல்வழிப்படுத்தும் வகையில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களின் பெற்றோரை நேரில் வரவழைத்து பிள்ளைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க அறிவுறுத்துவதுடன் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்க வடபழனி போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    • கல்லூரியில் இருந்த மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • கல்லூரிக்குள் நாட்டுவெடிகுண்டுகளை வீசி மாணவர்கள் மோதிக்கொண்டதாக முதலில் தகவல் வெளியானது.

    வேளச்சேரி:

    வேளச்சேரியில் தனியார் கல்லூரி உள்ளது. நேற்று காலை கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் எதிர்தரப்பினர் மீது 2 பட்டாசுகளை வீசினர். இதில் அந்த பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரியில் இருந்த மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதையடுத்து கல்லூரிக்குள் நாட்டுவெடிகுண்டுகளை வீசி மாணவர்கள் மோதிக்கொண்டதாக முதலில் தகவல் வெளியானது. தகவல் அறிந்ததும் கிண்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்கு வெடித்து சிதறி கிடந்த பாகங்களை ஆய்வு செய்தனர். இதில் மாணவர்கள் வீசியது திருவிழாகாலத்தில் பயன்படுத்தப்படும் பூண்டு பட்டாசு என்பது தெரிந்தது.

    கல்லூரியில் பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வரும் தனுஷ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை கானாபாட்டு பாடல் பாடிய தாவரவியல் படிக்கும் மாணவர்களை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இந்த தகராறில் தாவரவியல் படிக்கும் மாணவர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர். இந்த மோதலின் தொடர்ச்சியாக நேற்று காலை கல்லூரிக்கு வந்த தனுஷ் மற்றும் உடன் படிக்கும் நண்பர்கள் எதிர்தரப்பு மாணவர்கள் மீது பூண்டு பட்டாசை கொளுத்தி போட்டு இருப்பது தெரிந்தது.

    இந்த மோதல் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் 18 மாணவர்களை நேற்று அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. இதில் 3-ம் ஆண்டு மாணவர்கள் 9 பேர், 2-ம் ஆண்டு மாணவர்கள் 9 பேர் ஆகும். இதற்கிடையே மோதலில் ஈடுபட்டதாக 10 மாணவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கல்லூரிக்குள் கோஷ்டிகளாக மோதலில் ஈடுபட்ட மற்ற மாணவர்கள் யார்?யார்? என்ற விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    • ராஜேசை கத்தியால் குத்திவிட்டு கல்லூரி மாணவர்கள் ஓடிவிட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த ரஜினி என்பவரின் மகன் ராஜேஷ் ஆனந்த் (வயது 18). பச்சையப்பன் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று பஸ்சில் வரும் போது இவருக்கும் மாநிலக் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் ராஜேசை கத்தியால் குத்திவிட்டு மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஓடிவிட்டனர். சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரே நடந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவின் மூலம் துப்புத் துலங்கி அரக்கோணத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி (20). திருத்தணியை சேர்ந்த பூபதி (19), ஆகாஷ் (18) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மாநிலக் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.

    • வாகன பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • மாணவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சா, 2 செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போரூர்:

    சென்னை சாலிகிராமம், கே.கே. சாலை முத்துராமலிங்கம் தெருவில் விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகன பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    கஞ்சா கடத்தி வந்தது மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களான ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பால் மாத்யூ மற்றும் திருவள்ளூர் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சா, 2 செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவரும் அதே கல்லூரியில் படித்து வரும் "சீனியர் மாணவர்" ஒருவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கொடுத்து கஞ்சா பொட்டலங்கள் வாங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • பஸ் புறப்பட்ட போது பீர் பாட்டிலை பஸ்சின்படிக்கட்டில் விசி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
    • கண்டக்டர் சிவசங்கரன், தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ராயபுரம்:

    பிராட்வேயில் இருந்து ஐ.ஓ.சி. நோக்கி நேற்று முன்தினம் மாநகர பஸ் (எண்44) சென்றது. தண்டையார்பேட்டை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் பஸ்நின்றபோது தண்டையார்பேட்டை, காசிமேடு பகுதியை சேர்ந்த 10 மற்றும் 11-ம் மாணவர்கள் சிலர் ஏறி பின்புற படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்தனர். இதனை கண்டக்டர் சிவசங்கரன் கண்டித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் தண்டையார்பேட்டை மெட்ரோ ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது சாலையில் இருந்த பீர் பாட்டிலால் தாக்க முயன்றனர்.

    பின்னர் பஸ் புறப்பட்ட போது பீர் பாட்டிலை பஸ்சின்படிக்கட்டில் விசி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து கண்டக்டர் சிவசங்கரன், தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக போலீசார்கள் 6 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    • ரெயிலில் பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் சில மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
    • மாணவர் ஒருவர் ரெயில் பெட்டியின் படிக்கட்டில் தொங்கியபடி கையில் பெரிய பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு நடைமேடையில் தீப்பொறி பறக்க உரசியபடி சென்றனர்.

    ஆவடி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் ரெயிலில் தினந்தோறும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்வது வருகின்றனர்.

    இந்த நிலையில் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி நேற்று முன்தினம் காலை மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் சில மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், ஆவடி இந்து கல்லூரி ரெயில் நிலையம் அருகே சென்ற போது, மாணவர் ஒருவர் ரெயில் பெட்டியின் படிக்கட்டில் தொங்கியபடி கையில் பெரிய பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு நடைமேடையில் தீப்பொறி பறக்க உரசியபடி சென்றனர். அவரை சுற்றி நின்று கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாங்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், எங்களிடம் வம்பு செய்யாதே என கூச்சலிட்டபடி சென்றனர்.

    இதனால் ரெயிலில் பயணம் செய்த சக பயணிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். சிலர் தங்களது செல்போனில் இந்த காட்சிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்ட நிலையில், கல்லூரி மாணவர்கள் ரெயிலில் பட்டா கத்தியுடன் செல்வது போன்ற காட்சிகள் வைரலானது, இது குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான திருவள்ளூர், ஈக்காட்டை பவுண்ட்டை சேர்ந்த அபிஷேக் (வயது 20), சரண்ராஜ் (20), ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இதுசம்பந்தமாக திருநின்றவூரை சேர்ந்த மனோஜ் (23) உள்ளிட்ட மேலும் சில மாணவர்களை தேடி வருகின்றனர்.

    • ரமேஷ் மண்டல் வேளச்சேரி வி.ஜி.பி. செல்வா நகரில் தொழிலாளர்களுடன் தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார்.
    • கைதான மாணவர்கள் 7 பேரையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    வேளச்சேரி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ் மண்டல் (வயது29). இவர் வேளச்சேரி வி.ஜி.பி. செல்வா நகரில் தொழிலாளர்களுடன் தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார்.

    கடந்த 27-ந்தேதி மாலை ரமேஷ் மண்டல் சக தொழிலாளர்களுடன் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டு வந்தார். அப்போது வாலிபர்கள் சிலர் சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நடனமாடினர்.

    அப்போது ஒருவரது கால் அவ்வழியே வந்த தொழிலாளி ரமேஷ் மண்டல் மீது பட்டது. இதனை அவர் கண்டித்து பையில் வைத்திருந்த முருங்கைக்காயால் நடனம் ஆடியவர்களை தாக்கியதாக தெரிகிறது.

    இதனால் கோபம் அடைந்த வாலிபர்கள் ரமேஷ் மண்டலை உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் மண்டல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை தொடர்பாக வேளச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ரமேஷ் மண்டலை தாக்கிய பள்ளி மாணவர்களான 16 வயதுக்குட்பட்ட 7 பேர் மற்றும் தரமணியை சேர்ந்த கோகுல கிருஷ்ணன், கல்லுக்குட்டையை சேர்ந்த அரிகரன் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

    கைதான மாணவர்கள் 7 பேரையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மற்ற 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×