search icon
என் மலர்tooltip icon
    • கடல் நீர் உள்வாங்கிய 100 அடி தூரம் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
    • பருவநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. நேற்று அதிகாலை முதல் மழை ஓய்ந்த நிலையில் பனிப்பொழிவு தொடங்கியது. இந்த நிலையில் வேதாரண்யம் சன்னதி கடல் காலை முதல் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியது.

    கடல் நீர் உள்வாங்கிய 100 அடி தூரம் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்களும், பொதுமக்களும் கடலில் இறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும், அலைகள் எதுவும் இன்றி கடல் அமைதியாக காணப்பட்டது. கடல் நீர் உள்வாங்கியுள்ளதால் மீனவர்களும், பொதுமக்களும் அச்சம் அடைந்தனர். பருவநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    கடல் உள்வாங்கி சேறும், சகதியுமாக காணப்படும் நிலையில் இன்னும் ஓரிரு நாளில் காற்று அதிகமாக வீசினால் அலைகள் எழுந்தவுடன் கடல் ஓரத்தில் உள்ள சேறு கரைந்து சீராகும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

    • பெரம்பூர் கிழக்கு பகுதி செயலாளராக செந்தில் குமார், தெற்கு பகுதி செயலாளராக மணல் ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • குவைத் நாட்டுக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட மகளிர் அணி செயலாளராக டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் வடக்கு பகுதியை சேர்ந்த வக்கீல் நாகரத்தினம், அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளராக பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த எஸ்.ஆர்.ஏ.பாபு ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

    எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட தலைவராக பெரம்பூர் வெற்றி வேந்தன், செயலாளராக தண்டையார் பேட்டை ஜனார்த்தனன், புரட்சி தலைவி பேரவை மாவட்ட தலைவராக கொருக்கு பேட்டையை சேர்ந்த ரவி என்கிற சின்னா, செயலாளராக சரவணன் ஆகியோரும், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளராக டேனியல் சச்சின் மணி, மகளிர் அணி மாவட்ட தலைவராக கொருக்குப்பேட்டை பிரேமா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேற்கண்ட அணிகளுக்கு மாவட்ட துணைத்தலைவர்கள் இணை செயலாளர்கள், துணை செயலாளர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

    மாணவர் அணி மாவட்ட தலைவராக புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சரவணகுமார், செயலாளராக கொடுங்கையூரை சேர்ந்த கவுரி சங்கர், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை தலைவராக வியாசர்பாடியை சேர்ந்த மணிகண்டன், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவராக சரவணன், மருத்துவ அணி மாவட்ட செயலாளராக டாக்டர் ஜெய் விக்னேஷ் ராஜன், அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி மாவட்ட செயலாளராக பவானி வெங்கடேசன், இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாவட்ட தலைவராக டில்லி கணேஷ், வர்த்தக அணி மாவட்ட துணை தலைவராக சுரேஷ், அண்ணா தொழிற் சங்க மாவட்ட தலைவராக பாஸ்கரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அண்ணா ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட தலைவராக குப்புசாமி, செயலாளராக கவுனர்கான், பொதுக்குழு உறுப்பினராக ஐயப்பா வெங்கடேசனும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதிக்கான முக்கிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

    பெரம்பூர் கிழக்கு பகுதி செயலாளராக செந்தில் குமார், தெற்கு பகுதி செயலாளராக மணல் ரவிச்சந்திரனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    குவைத் நாட்டுக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவைத் தலைவராக ஷேக் அக்பர், செயலாளராக மோகன் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் பொறுப்பில் இருக்கும் பெரம்பூர் எம்.சேகர் இவர் ஏற்கனவே வகித்து வரும் பெரம்பூர் தெற்கு பகுதி, 44 மேற்கு வட்டக் கழகச் செயளலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார். மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.ஆர்.அன்பு ஏற்கனவே வகித்து வரும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தெற்கு பகுதி, 42 வடக்கு வட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்.

    மாவட்ட கழகத் துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஒய்.கே.செந்தில் குமார், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும். எஸ்.முத்துச்செல்வம், மாவட்ட புரட்சி தலைவி பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.ஆர்.ஏ.பாபு, மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் பொறுப்பில் இருக்கும் எம்.கவுனர்கான், மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.பொன்னுசாமி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அன்னை காமாட்சி எழுந்தருளி, நமக்கெல்லாம் அருள்புரியும் திருத்தலமான காஞ்சிபுரம் பெரும் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது.
    • காஞ்சிபுரத்தில் நூற்றிஎட்டுச் சிவத்திருத்தலங்களும், பதினெட்டு வைணவத் திருத்தலங்களும் அமைந்துள்ளன.

    அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை காமாட்சி.

    காம என்றால் அன்பு, கருணை. அக்ஷ என்றால் கண். எனவே, காமாக்ஷி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்று பொருள்.

    காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில்

    அன்னை காமாட்சி எழுந்தருளி, நமக்கெல்லாம் அருள்புரியும் திருத்தலமான காஞ்சிபுரம் பெரும் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது. அன்னை பராசக்தி தேவியின் அருள் நிறைந்து விளங்கும் முக்கிய திருத்தலங்கள் மூன்று. அவை: காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி திருக்கோவில்களே அவை. அவற்றில் காஞ்சி காமாட்சி அன்னை ஆலயம் தனிச்சிறப்பு பெற்று விளங்குகின்றது.

    முக்தியை அளித்திடும் தெய்வத் திருத்தலங்கள் ஏழு. அவை, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, பூரி, துவாரகை என்பவையாகும்.

    காஞ்சிபுரத் திருத்தலத்துக்கு காஞ்சிபுரம், பிரளயசித்து, சிவபுரம், விண்டுபுரம், மும்மூர்த்தி வாசம், பிரமபுரம், காமபீடம், தபோமயம், சகலசித்தி, கன்னிகாப்பு, துண்பீரபுரம், தண்டகபுரம், காஞ்சினபுரம், கச்சி, சத்தியவிரதரேத்திரம் என்னும் பதினைந்து திருநாமங்கள் உண்டு.

    இத்திருத்தலத்தில் முற்காலத்தில் சண்பக மரங்கள் நிறைந்திருந்ததால், சண்பகாரண்யம் என்னும் திருப்பெயரும் உண்டு.

    காஞ்சிபுரத்தில் நூற்றிஎட்டுச் சிவத்திருத்தலங்களும், பதினெட்டு வைணவத் திருத்தலங்களும் அமைந்துள்ளன.

    ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி

    ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் பூரண பிம்ப சொரூபிணியாகத் திகழ்வது, அருள்மிகு அன்னை காஞ்சி காமாட்சியின் மூல விக்கிரகம் ஒன்றுதான். அன்னை காமாட்சி கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லக்ஷ்மி) தன் இரு கண்களாகக் கொண்டவள்.

    இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது.

    பந்தகாசுரன்

    முன்னொரு காலத்திலே, பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் (= அரக்கன்) வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான். அந்த வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான்.

    பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள்.

    பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், "அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குத்தான் உள்ளது" என்று கூறி, அவர்களை பராசக்தியிடம் அனுப்பி வைத்தார்.

    அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானை குறித்துத் தவம் செய்து கொண்டிருந்தாள்.

    தேவர்களும், முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்துக்கு வந்து, அவளை வழிபட்டு தங்கள் துயரங்களைக் கூறினார்கள்.

    அவர்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கிய அன்னை, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்தாள்.

    அத்தருணம், பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை, பதினெட்டுக் கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள். பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும், மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து, அவனது தலையை அறுத்து, ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தடைந்தாள்.

    சிறு பெண்ணின் உருவத்தில்

    உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர். அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை, உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள்.

    அத்தரிசனம் கண்டு, மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்த தேவர்களும், முனிவர்களும் அவளைப் பலவாறும் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்தார்கள்.

    அப்போது, அன்னை அவர்களைப் பார்த்து, அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டுமாறும், பந்தகாசுரனை அந்தப் பள்ளத்தில் இட்டுப் புதைத்து, புதைத்த இடத்தில் வெற்றித்தூண் ஒன்றை நிறுவுமாறும் கூறினாள்.

    அன்னையின் கட்டளைப்படி தேவர்கள் அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டியபோது, மல்லகன் என்ற கொடிய அரக்கன் அங்கே மறைந்திருப்பதைக் கண்டார்கள். அந்த அரக்கனை அழித்துத் தங்களைக் காக்கும்படி, மகாவிஷ்ணுவிடம் வேண்டினார்கள்.

    தேவர்களின் கோரிக்கையை ஏற்று, மகாவிஷ்ணு மல்லகனுடன் போரிட்டார். ஆனால், மல்லகனின் உடலிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு துளி இரத்தமும் ஒரு அரக்கனாக உருமாறி போர் புரிந்தது. இவ்வாறு அங்கே மாபெரும் அரக்கர் படையன்று உருவாக்கி மகாவிஷ்ணுவுடன் கடுமையான போர் புரிந்தது.

    அரக்கனின் உடலிலிருந்து வெளிவரும் இரத்தத் துளிகள் ஒவ்வொன்றும் ஒரு அரக்கனாக உருவெடுப்பதைக் கண்ட மகாவிஷ்ணு, தம் உதவிக்கு சிவபெருமானை அழைத்தார். சிவபெருமான் போர்க்கோலத்தில், ருத்ர மூர்த்தியாக அங்கே வந்தார். அவர் இரண்டு பூதங்களை உருவாக்கி, மல்லகனின் உடலிலிருந்து வெளிவரும் இரத்தத் துளிகள் எல்லாவற்றையும் பூமியில் விழாதபடி குடிக்கும்படி கட்டளையிட்டார். பூதங்கள் அப்படியே செய்தன.

    இவ்வாறு, மேலும் அரக்கர்கள் தோன்றாமல் தடுத்ததும், மகாவிஷ்ணு தம் சக்கராயுதத்தால் அந்த அரக்கனை அழித்தார்.

    அதன்பின், அன்னை கட்டளையிட்டபடி, பந்தகாசுரனைப் புதைத்த இடத்திற்கருகில், இருபத்து நான்கு தூண்களை நிறுவி, காயத்ரி மண்டபம் அமைத்து, அந்த மண்டபத்தினுள்ளே, அழகிய பீடம் அமைத்து, அன்னையின் உருவம் ஒன்றைச் செய்து வைத்து வணங்கினார்கள். பின்னர், கதவை மூடிவிட்டு வெளியில் இருந்து அன்னையைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.

    மறுநாள் அதிகாலை, சூரியன் உதய வேளையில், மிகுந்த பயபக்தியுடன் அவர்கள் அந்தக் கதவைத் திறந்தார்கள். என்ன ஆச்சரியம்? அங்கே அவர்கள் கண்ட அற்புதமான காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்து, மகிழ்ந்து நின்றார்கள்.

    அன்னை காமாட்சி தேவி

    ஆம், அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில், அவர்கள் நிறுவிய சிலை உருவத்துக்குப் பதிலாக, அன்னை காமாட்சி தேவி அழகிய திருக்கோலத்தில் காட்சியளித்தாள். அந்த நன்னாள், ஸ்வயம்பு மனுவந்திரத்தில், கிருத யுகத்தில், ஸ்ரீமுக வருஷம் பங்குனி மாதம் கிருஷ்ண பட்சத்தில், பிரதமை திதியும், பூர நட்சத்திரமும் கூடிய ஒரு வெள்ளிக்கிழமை நாள் ஆகும்.

    எல்லையில்லாக் கருணை வடிவம் கொண்ட ராஜ ராஜேஸ்வரியாக காமாட்சி அன்னை காட்சியளித்தாள். அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில் அன்னை தென் கிழக்காக, நான்கு கரங்களுடன், பத்மாசன கோலத்தில் காட்சியளித்தாள். அவளது நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், மலர் அம்பு, கரும்பு வில் முதலியன காணப்பட்டன.

    அன்னையின் அழகையும், கருணையையும் கண்டு பக்திப் பரவசமாகி மகிழ்ந்த தேவர்களும், முனிவர்களும், அன்னையை நோக்கி, அங்கேயே அமர்ந்து உலகம் உய்ய அருள் புரியுமாறு வேண்டிக்கொண்டார்கள்.

    அவர்களின் பிரார்த்தனைக்கிணங்கி, காமாட்சி அன்னை, இருபத்து நான்கு தூண்களாலான அந்தக் காயத்ரி மண்டபத்தின் மத்தியில் அமைந்த அழகிய பீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்கின்றாள்.

    தற்போது, அன்னை காமாட்சி திருக்கோவில் காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில், ஐந்து நிலைகளைக் கொண்ட அழகிய ராஜகோபுரத்துடன், கண்களையும், உள்ளத்தையும் பக்திப் பரவசமாக்கும் ஓர் அழகிய, கம்பீரமான ஆலயமாக எழுந்து நிற்கின்றது.

    • பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது.
    • ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம்.

    ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.

    மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன் போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர். முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    வரலாறு:

    முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோவிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புனரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது. மேலும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் திருக்கச்சிஏகம்பம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தது.

    இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரம், 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி. 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார். இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

    ஸ்தல விருட்சம்:

    ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன.

    தல வரலாறு:

    பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவறால் பார்வதியை பூலோகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார்.

    பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில். பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர்.

    சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்தபோது "உன்னைப் பிரியேன்" என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம் பாடி பெற்றதாக வரலாறு உண்டு.

    விழாக்கள்:

    இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக்கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.

    கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

    எப்படி செல்வது:

    1) காஞ்சிபுரம் சென்னைக்கு அருகில் உள்ளதால், சென்னை மற்றும் தமிழக்த்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

    2) காஞ்சிபுரத்திற்கு சென்னை, திருப்பதி, அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து பயணிகள் ரெயில் இயக்கப்படுகின்றன.

    3) அருகில் உள்ள விமான நிலையம் - சென்னை 56 கி.மீ தொலைவில்.

    • அத்தி வரதர் எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.
    • திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.

    திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் என்பது பெருமாள் கோவில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.

    வரலாறும் சிற்பக்கலையும்

    இக்கோவில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி.பி. 1053 இல் சோழகளால் வேழமலையில் குகைவரைக் கோவில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோவிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.

    கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்கு பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லால் ஆன தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும். தூண்களில் யாளி, போர்க்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கபடுகிறது. இதன் நன்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.

    மூலவராகிய தேவராஜப் பெருமாள், வேழமலை (அத்திகிரி) மீது நின்ற திருக்கோலத்தில் மேற்கே திருமுகமண்டலமுடன் நாற்கரத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோவிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார். பெருமாளை காண்பதற்கு இருப்பதிநான்கு படிகளை ஏறிச்செல்லும்போது காணப்படும் தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி, இக்கோவிலில் பிரசிதம். மூலவரை நோக்கியபடி தென்மேற்கே பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதியும், திருக்குளத்தின் எதிரே சக்கரதாழ்வர் சன்னிதி உள்ளது. கோவில் வெளி பிரகாரத்தில் கண்ணன், ராமர், வராஹா பெருமாள் சன்னதிகளும், ஆண்டாள், ஆழ்வார்கள், களியமானிக்க பெருமாள், ஆச்சார்யர்கள் சன்னதிகளும் மற்றும் நம்மாழ்வார் சன்னதியும் உள்ளன. இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது.

    அத்தி வரதர் எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுவதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியெடுத்து, கோவிலில் பள்ளிகொள்ள வைத்து ஒருமாத காலத்திற்கு உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும். அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு ஆகையால், எங்கிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருமாளைத் தரிசிப்பர்.

    திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

    பாடல்கள்

    மங்களாசாசனம், திருமங்கையாழ்வார்

    என்னெஞ்சம் மேயான் என் சென்னியான், தானவனை-

    வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்-

    ஊழியான் ஊழி பெயர்த்தான், உலகேத்தும்-

    ஆழியான் அத்தியூரான்.

    அத்தியூரான் புள்ளை ஊர்வான், அணிமணியின்-

    துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ-

    மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்

    இறையாவான் எங்கள் பிரான்.

    திருவிழாக்கள்

    வைகாசி மாதத்தில் உற்சவத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும். இவ் உற்சவத் திருவிழாவில் கருடசேவையும், தேரும் மிகப்பிரபலம்.

    போக்குவரத்து

    காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் - செங்கற்பட்டு சாலையில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு நகர பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்திற்கு சென்னையிலிருந்து எண்ணற்ற பேருந்துகளும் ரெயில்களும் உள்ளன.

    • எண்ணூர் பகுதியில் சுகாதாரமற்று குடிநீர் கேன்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
    • 19 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் தரமில்லாத குடிநீர் கேன்கள் விநியோகம் செய்த 6 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

    சென்னை:

    எண்ணூர் பகுதியில் சுகாதாரமற்று குடிநீர் கேன்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து இன்று காலை உணவு பாதுகாப்பு கமிஷனர் லால் வினா தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது எண்ணூர் பகுதியில் உள்ள குடிநீர் ஆலையில் ஆய்வு செய்தபோது உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அபராதம் விதித்து, சுகாதாரமற்று விற்பனைக்கு வைத்துதிருந்த 200 குடிநீர் கேன்களை பறிமுதல் செய்தனர்.

    19 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் தரமில்லாத குடிநீர் கேன்கள் விநியோகம் செய்த 6 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

    உரிய ஐ.எஸ்.ஐ. தரச்சான்று இல்லாமல் கேன் வாட்டர் சப்ளை செய்து வந்த கடைகளுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

    உரிய அனுமதியுடன் கேன் வாட்டர் விநியோகம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

    இதையடுத்து கடைகளில் விற்பனை செய்யப்பட்ட குடிநீர் மாதிரியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பினர்.

      சென்னை:

      சென்னை சூளையில் உள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த ஹஜ் யாத்ரீகர்களுக்கான தமிழ்நாடு மாநில ஹஜ் குழு புத்தறிவுப் பயிற்சியை, அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

      தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு 4,074 ஹாஜிக்கள், சென்னையில் இருந்து விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதில் ஜூன் 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தினமும் இரு விமானங்கள், ஜூன் 11-ந் தேதி முதல் 21-ந்தேதி வரை தினமும் ஒரு விமானம் மூலம் பயணம் மேற்கொள்வார்கள்.

      நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலர் முகமது நசிமுதின் மற்றும் ஹஜ் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை நடைபெற்றன.
      • மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

      சென்னை:

      தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற்றது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.40 லட்சம் மாணவ- மாணவிகளும், பிளஸ்-1 பொதுத்தேர்வை 7.70 லட்சம் மாணவ- மாணவிகளும் எழுதினார்கள். இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை நடைபெற்ற நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

      காலையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பிற்பகல் 2 மணியளவில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.

      மாணவ- மாணவிகள் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரங்களை www.tnresults.nic.in, www.dge.in.gov.in ஆகிய இணையதளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

      அதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை அலுவலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவ- மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

      • இந்திய அரசு, இலங்கையுடன் செய்த 3 ஒப்பந்தங்கள் நம் இனத்துக்கு செய்த மிகப்பெரிய துரோகம்.
      • பாராளுமன்ற தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவோம்.

      தூத்துக்குடி:

      நாம் தமிழர் கட்சி சார்பில் இனஎழுச்சி பொதுக்கூட்டம் தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் விலக்கு அருகே நேற்று நடந்தது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

      இந்திய அரசு, இலங்கையுடன் செய்த 3 ஒப்பந்தங்கள் நம் இனத்துக்கு செய்த மிகப்பெரிய துரோகம். தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்.

      விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும், அதனை விற்றவர்களுக்கும் நிவாரணம் வழங்குகிறார்கள். இதை கேட்டால் குற்றவாளிகளுக்கும் குடும்பம் இருக்கிறது என்கிறார்கள். அப்படி என்றால் எல்லா குற்றவாளிகளுக்கும் நிவாரணம் கொடுத்து விட வேண்டியதுதானே. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?.

      ஆனால், மக்களின் நலனை நோக்கித்தான் நாம் தமிழர் கட்சியின் சிந்தனை, செயல்பாடு இருக்கிறது.

      பாராளுமன்ற தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவோம். வருகிற ஜூன் 13-ந் தேதி முதல் எனது சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறது. டிசம்பரில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும். அதில் சட்ட விதிமுறைகள் வெளியிடப்படும். ஜனவரி முதல் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வோம்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்பவர்கள் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வர வேண்டும்.
      • மணமக்களும், சாட்சிகளும் பதிவாளர் முன்பு நேரடியாக ஆஜரானால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும்.

      திருவனந்தபுரம்:

      சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்பவர்கள் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வர வேண்டும். மணமக்களும், சாட்சிகளும் பதிவாளர் முன்பு நேரடியாக ஆஜரானால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும்.

      இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா மார்ட்டின் என்பவர் திருவனந்தபுரம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தான் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய மனு அளித்து உள்ளேன்.

      ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் உள்ள தனது காதலனால் உடனடியாக ஊருக்கு வர முடியாது என்பதால் காணொலி மூலம் திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். வேறு சிலரும் இதேபோல காணொலி மூலம் திருமணத்திற்கு அனுமதி கோரி கேரளாவில் உள்ள பல்வேறு கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்தனர்.

      அதை ஏற்க மறுத்த கோர்ட்டுகள் இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டின் பரிசீலனைக்கு மனுக்களை அனுப்பி வைத்தன. இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் முகமது முஷ்டாக், சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணங்களை காணொலி மூலம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. 2000-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி மின்னணு ஆவணங்களுக்கு சட்டத்தில் அனுமதி உண்டு என்பதால் காணொலி மூலம் திருமணம் நடத்துவதில் தவறில்லை என்று நீதிபதிகளின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • 3718 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 1026 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
      • மாற்று திறனாளி மாணவர்கள் 10808 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 9703 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

      சென்னை:

      தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியானது.

      10-ம் பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 9,14,320 மாணவ-மாணவிகள் எழுதினர். மாணவர்கள் 4,59,303 பேரும், மாணவிகள் 4,55,017 பேரும் தேர்வு எழுதினார்கள்.

      இதேபோல மார்ச் 14-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வை 7.73 லட்சம் பேர் எழுதினர். தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றப்பட்டன.

      இந்த நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கும், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் இணையதளத்தில் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்தது.

      அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன.

      10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 4,30,710 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.66 சதவீதம் ஆகும். மாணவர்கள் 4,04,904 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 88.16 சதவீதம் ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 6.50 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

      கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் நடந்த பொதுத்தேர்வில் மொத்தம் 9,12,620 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 8,21,994 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 90.07 ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகமாகும்.

      இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,638 ஆகும். இவற்றில் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 7,502, உயர்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 5136 ஆகும்.

      3718 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 1026 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

      அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் 87.45 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24 சதவீதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.38 சதவீதமும், இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 91.58 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 94.38 சதவீதமும், ஆண்கள் பள்ளிகள் 83.25 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

      தமிழ் பாடத்தில் 95.55 சதவீதம் மாணவ-மாணவிகளும், ஆங்கிலத்தில் 98.93 சதவீத மாணவ-மாணவிகளும், கணிதத்தில் 95.54 சதவீத மாணவ-மாணவிகளும், அறிவியல் பாடத்தில் 95.75 சதவீத மாணவ-மாணவிகளும், சமூக அறிவியல் பாடத்தில் 95.83 சதவீத மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

      ஆங்கில பாடத்தில் 89 பேர் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதத்தில் 3649 பேரும், அறிவியல் பாடத்தில் 3584 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 320 பேரும் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

      மாற்று திறனாளி மாணவர்கள் 10808 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 9703 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 89.77 ஆகும். சிறை கைதிகள் 264 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 42.42 ஆகும்.

      பொதுத்தேர்வில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 97.67% பெற்று முதலிடம் பெற்றது. 2வது இடத்தை சிவகங்கையும் 97.53%, விருதுநகர் மாவட்டம் 3ம் இடத்தையும் 96.22% பிடித்தது.

      மாணவர்கள் http://www.tnresults.nic.in, http://www.dge.tn.gov.in ஆகிய இணைய தள முகவரிகளில் தங்களது தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.

      பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம். மேலும், மாணவர்களுக்கு பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித் தேர்வர்களுக்கு, இணைய வழியில் விண்ணப்பித்தபோது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி தகவல் தெரிவிக்கப்பட்டது.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • 1020 அரசு பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
      • வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

      சென்னை:

      2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.

      10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1020 அரசு பள்ளிகளில் மட்டும் அதாவது கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

      மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.39% ஆகும். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16%. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

      10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

      பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.inமற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

      ×