search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்ரா பௌர்ணமி"

    • பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது.
    • ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம்.

    ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.

    மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன் போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர். முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    வரலாறு:

    முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோவிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புனரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது. மேலும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் திருக்கச்சிஏகம்பம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தது.

    இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரம், 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி. 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார். இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

    ஸ்தல விருட்சம்:

    ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன.

    தல வரலாறு:

    பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவறால் பார்வதியை பூலோகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார்.

    பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில். பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர்.

    சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்தபோது "உன்னைப் பிரியேன்" என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம் பாடி பெற்றதாக வரலாறு உண்டு.

    விழாக்கள்:

    இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக்கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.

    கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

    எப்படி செல்வது:

    1) காஞ்சிபுரம் சென்னைக்கு அருகில் உள்ளதால், சென்னை மற்றும் தமிழக்த்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

    2) காஞ்சிபுரத்திற்கு சென்னை, திருப்பதி, அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து பயணிகள் ரெயில் இயக்கப்படுகின்றன.

    3) அருகில் உள்ள விமான நிலையம் - சென்னை 56 கி.மீ தொலைவில்.

    • வேள்வி பூஜை கடந்த ஏப்ரல் 26 -ந் தேதி சித்தர் பீடத்தில் குருபூ ஜையுடன் தொடங்கியது.
    • சித்தர் பீட வளாகம் முழுவதும் சூல வடிவிலான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    மேல்மருவத்தூர் ஆதிப ராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி குரு பங்காரு அடிகளார் 1008 யாக குண்டங்கள் அமைத்து கலச விளக்கு வேள்வி பூஜை நடத்தினர்.

    இந்த வேள்வி பூஜை கடந்த ஏப்ரல் 26 -ந் தேதி சித்தர் பீடத்தில் குருபூ ஜையுடன் தொடங்கியது.சித்ரா பவுர்ணமியான நேற்று மாலை 5 மணி அளவில் கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக குரு பங்காரு அடி களார் தொடங்கி வைத்தார்.

    இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் செஞ்சி மஸ்தான், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு, முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன், பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடி களார், துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், தலைமை செயல் அதிகாரி அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆதிபராசக்தி அம்மன் கருவறை முன்பு குரு மேடை, மற்றும் அதற்கான குரு யாக குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது.தொடர்ந்து அதற்கு முன்பாக ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83 வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 83 எண் வடிவில் சக்கரம் அமைத்து அதில் 4 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    கருவறை முன்பாக பஞ்சபூத சக்கரம் அமைத்து ஐந்து தலை நாகம் படம் எடுக்க அதனுள் கலசம் நிறுவப்பட்டு 5 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. புற்று மண்டபத்தின் முன்பாக வெற்றிலை அலங்காரத்தில் 3 நாகங்கள் பின்னிப் பிணைந்து அமைக்கப்பட்டு அதில் டைமண்ட் வடிவில் யாக குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது.

    புற்று மண்டப முன்புறத்தில் சமபக்க முக்கோண சக்கரங்கள் அமைத்து அதில் 9 முக்கோண வடிவிலான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    ஓம் சக்தி மேடை முன்பாக பிரபஞ்ச சக்கரம் அமைத்து அதில் ஒன்பது படிகள் அமைத்து அதில் 27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் 8 திசைகள் வடிவில் சக்கரங்கள் அமைக்கப்பட்டு அதனுள் நவதானியம் பரப்பப்பட்டு சதுரம், வட்டம், டைமண்ட், ஐங்கோணம், முக்கோணம் ஆகிய வடிவங்களில் 12 யாக குண்டங்கள் அமைக்கப் பட்டு இருந்தது. மேலும் சித்தர் பீட வளாகம் முழுவதும் சூல வடிவிலான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த யாக குண்டங்களில் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் வேள்வி பூஜை செய்தனர்.

    • வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் செய்தும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.
    • கேமரா காட்சிகளை கொண்டு சிறுத்தையின் நகர்வுகளை கண்காணித்து வருகின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் ஊதியூர் மலையடிவாரப் பகுதியில் கடந்த 1½ மாதமாக சிறுத்தை பதுங்கியிருந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் செய்தும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.

    ஒரு மாதத்திற்கு மேலாக சிறுத்தை பிடிக்கப்படாத நிலையில் ஊதியூர் பகுதியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    சிறுத்தையை பிடிப்பதற்கான தொடர் முயற்சியில் வனத்துறை சார்பில் 20 வனத்துறை பணியாளர்கள் , 10 வனச்சரகர்கள், 10 வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் 3 பழங்குடியின மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். கேமராக்கள், கூண்டுகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் இன்னும் சிறுத்தை பிடிபடவில்லை.

    மேலும் சிறுத்தை மலையடிவார பகுதியில் பதுங்கி உள்ளதா அல்லது இடம் பெயர்ந்து சென்று விட்டதா? என்ற குழப்பத்தில் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் வனத்துறை பணியாளர்கள் நேற்று ஊதியூர் மலைப்பகுதியில் ரோந்து சென்ற போது கொங்கண சித்தர் குகை அருகே சிறுத்தை அமர்ந்துள்ளதை பார்த்தனர். அப்பகுதியில் குரங்குகள் அதிகமிருப்பதால் அவற்றை வேட்டையாட வந்திருக்கும் என தெரிகிறது.

    கேமரா காட்சிகளை கொண்டு சிறுத்தையின் நகர்வுகளை கண்காணித்து வருகின்றனர். மேலும் சிறுத்தை ஊதியூர் மலைப்பகுதியில் பதுங்கியிருப்பது உறுதியாகி உள்ளது.

    இதையடுத்து இன்று சித்ரா பவுர்ணமியையொட்டி கொங்கண சித்தர் குகை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சித்ரா பவுர்ணமியையொட்டி அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட செல்வார்கள். சிறுத்தை நடமாட்டத்தின் காரணமாக கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • இந்த கோவிலில் சித்ராபவுர்ணமி தினத்தன்று வருடத்தில் ஒருநாள் மட்டும் திருவிழா நடத்தப்படுகிறது.
    • அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட இந்த கோவில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி தினத்தன்று வருடத்தில் ஒருநாள் மட்டும் திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி மங்கலதேவி கண்ணகி கோவிலில் இந்த ஆண்டு சித்ராபவுர்ணமி திருவிழா இன்று நடைபெற்றது.

    கோவிலுக்கு வருகை தருவதற்கு ஏதுவாக இடுக்கி, தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் இருந்த முட்செடிகள் அகற்றப்பட்டு பாதை சீரமைக்கப்பட்டது. சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் கோவிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கினர்.

    கோவில் வாசலில் வாழை, மா இலை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. மங்கல தேவி கண்ணகிக்கு பச்சை பட்டு உடுத்தி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலை 6 மணிக்கு பள்ளி உணர்த்துதலுடன் விழா தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மலர் வழிபாடு, மங்கல இசை, பொங்கல் வைத்தல், பக்தர்களுக்கு அமுதசுரபியின் அவல் பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் கண்ணகி தேவியை வழிபட்டனர். விழாவுக்கு வந்த பக்தர்கள் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்திலான ஆடைகள் அணிந்து வந்தனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இரு மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டு இருந்தது. மாலையில் பூமாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சென்னை, காவேரி பட்டினம், பூம்புகார், பாண்டிச்சேரி உட்பட தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் கம்புகள் கட்டப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு இருந்தது. பெண்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்ட பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் உள்ள இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் தமிழக-கேரள வனத்துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலுக்கு பக்தர்களை ஏற்றி வந்த ஜீப்புகளின் பதிவு எண்களை வனத்துறையினர் பதிவேட்டில் பதிவு செய்து கொண்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு அனுப்பி வைத்தனர்.

    கம்பம் பகுதியிலிருந்து குமுளி மற்றும் பளியன்குடி வரை அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் சென்ற பக்தர்கள் பளியன்குடியில் இருந்து 6 கி.மீ தூரம் நடந்து கோயிலுக்கு சென்றனர். இதேபோல் கேரள மாநிலம் குமுளியிலிருந்து ஏராளமானவர்கள் மலை பாதையில் நடந்து சென்றும், ஜீப்களிலும் சென்றும் கண்ணகி தேவியை வழிபட்டனர்.

    • தொடர் மழை காரணமாக பக்தர்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • இரவில் மலைப்பகுதிகளில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிர தோஷம், பவுர்ணமி, அமாவாசையையொட்டி 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கடந்த 3-ந்தேதி முதல் நாளை (6-ந்தேதி) வரை அனுமதி வழங்கப்பட்டன.

    இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பறை மலைப்பாதை வழியாக மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக பக்தர்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் கோவிலுக்கு செல்லக்கூடிய மலைப் பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்தவுடன் தாணிப்பறை அடிவார பகுதிக்கு வந்து விட வேண்டும் எனவும் பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

    இரவில் மலைப்பகுதிகளில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.
    • அம்மனுக்கு பல வகையான மலர்களால் புஷ்பாபிஷேகம் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும், அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

    ஸ்ரீபலி பூஜையும், 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், அம்மனுக்கு பல வகையான மலர்களால் புஷ்பாபிஷேகமும், இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வர செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • தீப தூபம் காட்டி சித்ரகுப்தனை மனதார வழிபட வேண்டும்.
    • நைவேத்திய பிரசாதங்களை பசித்தோருக்கு தானமாக கொடுத்தால் புண்ணியம் சேரும்.

    5-5-2023 சித்ரா பவுர்ணமி

    சித்திரை மாதத்தில் உச்சம் பெறுபவர், சூரியன். அதேபோல் அந்த மாத பவுர்ணமி அன்று முழு மதியாக திகழ்பவர் சந்திரன். ராஜகிரகங்களான சூரியனும், சந்திரனும் முழு பலத்துடன் இருக்கும் மாதம் என்பதால் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி சிறப்புக்குரியதாக மாறுகிறது. இந்த நாளில் கிரிவலம் வருவது சிறப்பான பலனைப் பெற்றுத் தரும். எமதர்மனின் கணக்காளராகவும், பாவ-புண்ணிய கணக்குகளை பாரபட்சம் இன்றி எழுதும் பணியைச் செய்பவருமான சித்ரகுப்தர் அவதரித்த நாள், இந்த சித்ரா பவுர்ணமி. எனவே இந்நாளில் சித்ரகுப்தரை வழிபாடு செய்வதும் நன்மைகளை வாரி வழங்கும்.

    ஒரு முறை கயிலாயத்தில் இருந்த பார்வதிதேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் உருவத்தை, சித்திரமாக வடித்தாள். அப்போது உலகிற்கு படியளக்கும் பணியைச் செய்துவிட்டு வந்த ஈசனிடம், தான் வரைந்த சித்திரத்தை பார்வதிதேவி காட்டினாள். அந்த ஓவியம், சிவபெருமானை கவர்ந்தது. அப்போது அவருக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. விதிமுடிந்த மனித உயிர்களின் உயிரைப் பறித்து, பூமித்தாயின் பாரத்தைக் குறைக்கும் பணியைச் செய்பவர் எமதர்மன்.

    அவர் அதிக வேலைப்பளு காரணமாக, தனக்கு ஒரு உதவியாளரைத் தரும்படி, ஈசனிடம் கேட்டிருந்தார். அதுபற்றிய நினைவு வந்ததும், பார்வதிதேவி வரைந்த ஓவியத்தை கையில் எடுத்து அதில் தன்னுடைய மூச்சுக்காற்றை செலுத்தினார், ஈசன். உடனே அந்தச் சித்திரம் உயிர்பெற்றது. சிவசக்தியின் அம்சமாக, சித்திரத்தில் இருந்து உயிர்பெற்றதால், 'சித்ரகுப்தன்' என்ற பெயர் வந்தது. 'சித்' என்பது 'மனம்' என்பதையும், 'குப்த' என்பது 'மறைவு' என்பதையும் குறிக்கும். அதாவது மனித மனங்களில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களை கவனித்து, அதற்குத் தகுந்தாற் போல் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுபவர் என்பதால் இந்தப் பெயர் வந்தது. சித்ரகுப்தன் பிறக்கும்போதே, தனது கையில் ஏடு மற்றும் எழுத்தாணியோடு பிறந்தவர்.

    விரதம் இருந்து வழிபாடு செய்வது எப்படி?

    சித்திரா பவுர்ணமியன்று பூஜையறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படத்தை தெற்கு திசையில் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சந்தனப்பொட்டு வைத்து, பழங்கள்- காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசி வெல்லத்துடன் இனிப்புகள் மற்றும் கலவை சாதங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை புகுத்தி தீப தூபம் காட்டி சித்ர குப்தனை மனதார வழிபட வேண்டும்.

    சித்ரா பவுர்ணமியன்று களங்கமில்லாத முழுநிலவின் அழகைக் கண்டு ரசிக்க, கடற்கரை, பூங்கா போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடுவார்கள். அவரவர் வீடுகளில் செய்த 'சித்ரா அன்னம்' எனப்படும் கலவை சாதங்களை எடுத்து வந்து, நிலாச்சோறு உண்ணும் வழக்கம் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையையும், அன்பையும் பெருக வைக்கும் என்பதால் நம் பெரியோர்கள் கடைப்பிடித்த நல்வழி இது.

    சித்ரா பவுர்ணமியின் சிறப்புகளாக பல ஆன்மிக வழிபாடுகளும், பூஜைகளும் ஆலயங்கள்தோறும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டு தோறும் நிகழும் சிறப்புமிக்க வைபவமாகிறது. கன்னியாகுமரியில் அன்று மட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டுமகிழலாம்.

    திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் நிகழ்வு பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. இந்த தினத்தில் சித்ரகுப்தனை வேண்டி, வருட பலாபலன்களை அறிந்து கொள்ளும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில் நீராடுவதும் வாழ்வில் சுபீட்சத்தை அருளும். அன்றைய தினம் சித்ராதேவிக்கு (அம்பிகை) தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப்பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவைகளைப் படைத்து வழிபட வேண்டும்.

    பின்னர் அந்த நைவேத்திய பிரசாதங்களை, பசித்தோருக்கு தானமாக கொடுத்தால், புண்ணியம் சேரும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், முழுமையாக விரதம் மேற்கொண்டு, சித்ரா பவுர்ணமி அன்று இரவு நிலவு பார்த்த பின் உணவருந்த வேண்டும். சித்ரகுப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனிக்கோவில் உள்ளது. அதேபோல் அருப்புக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோவிலில், சித்ரகுப்தனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. சித்ரா பவுர்ணமி அன்று, இந்த ஆலயங்களுக்குச் சென்றும் வழிபாடு செய்து வரலாம். சித்ரகுப்தனை வழிபடுவதோடு நில்லாமல், இனி பாவச் செயல்கள் செய்யாமல், புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும் என்ற உறுதியையும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

    சிதம்பரம் சித்ரகுப்தர்

    'கோவில்' என்றாலே அது சிதம்பரம் நடராஜர் கோவிலைத் தான் குறிக்கும். அந்த அளவுக்கு மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது. காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனிக் கோவில் அமைந்திருப்பது போல, சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் சித்ரகுப்தருக்கு தனிச் சன்னிதி அமைந்திருக்கிறது. நடராஜர் ஆலயத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு வடக்கே சிவகாமி அம்பிகைக்கு தனிச் சன்னிதி உள்ளது. இதனை 'சிவகாமக் கோட்டம்' என்று அழைப்பார்கள். இதன் வெளிச்சுற்று பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் சித்திரகுப்தருக்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள இந்த சன்னிதியில், சித்ரகுப்தர் அமர்ந்த நிலையில் கையில் எழுத்தாணியுடன் காட்சியளிக்கிறார். இவருக்கு அருகில் சனீஸ்வர பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியன்று, இங்குள்ள சித்ரகுப்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் சித்ரகுப்தர் அவதரித்த தினமாகவும் கருதப்படுகிறது. சித்ரா பவுர்ணமியில் சித்ரகுப்தரை வழிபட்டால் ஆயுள் விருத்தியும், செல்வ விருத்தியும் உண்டாகும். எமதர்மனின் கணக்கராக இருந்து, உலக உயிர்களின் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுபவர் சித்ரகுப்தர். எனவே அவர் அவதரித்த நாளில் அவரை வழிபடுவதால், நம்முடைய பாவங்கள் குறையும் என்பது நம்பிக்கை. சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தருக்கு விழா எடுப்பது சிறப்புக்குரியது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சித்ரகுப்தர் சன்னிதியில் சித்ரா பவுர்ணமியன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் சித்ரகுப்தர் சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம்.

    • 4-ந்தேதி ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும்.
    • ஆன்மிக குரு பங்காரு அடிகளார் 1008 கலச விளக்கு வேள்வி பூஜையை தொடங்கி வைக்க உள்ளார்.

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நேற்று முக்கோணம், சதுரம், சாய் சதுரம், ஐங்கோணம், அறு கோணம், எண் கோணம், வட்டம், சூலம் ஆகிய வடிவங்களை உள்ளடக்கிய யாக குண்டங்கள் அமைப்பதற்காக குருபூஜை நடைபெற்றது.

    அதில் குரு போற்றி, விநாயகர் போற்றி, சக்தி மந்திரங்கள் படிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து 1008 யாக குண்டங்கள் அமைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான செவ்வாடை தொண்டர்கள் பணி செய்து தொண்டாற்றி வருகின்றனர்.

    இந்த சித்திரை பவுர்ணமி வேள்வி பூஜையானது மே 4-ந்தேதி காலை 3 மணி அளவில் மங்கள இசையுடன் தொடங்கி ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இதனைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில் பங்காரு அடிகளாருக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்ட மன்றங்களின் பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    மே 5-ந்தேதி சித்ரா பௌர்ணமி அன்று மாலை 5 மணி அளவில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உலக நன்மைக்காக 1008 கலச விளக்கு வேள்வி பூஜையை தொடங்கி வைக்க உள்ளார். நிகழ்ச்சியில் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர்கள் செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், வாசன், ஜெயராமன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×