என் மலர்
நீங்கள் தேடியது "பங்குனி உத்திரம்"
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.
- அதிகாலையில் 20-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்:
பங்குனி உத்திரம் என்பது தமிழ் கடவுளாகிய முருகப் பெருமானுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் விரதம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினால் வாழ்க்கை சிறக்கும் என்பதுடன், திருமண தடைகள் அகலும் என்பதும் ஐதீகம்.
அந்த வகையில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. அப்போது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தற்போது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் சன்னதி உள்ளிட்ட இடங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டு அங்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.
எனவே மூலஸ்தானத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யாமல் அதற்கு பதிலாக சண்முகர் சன்னதியில் அத்தி மரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர்களை பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உற்சவர் சன்ன தியில் சண்முகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதைத் தொடர்ந்து காலை ஐந்து மணி முதல் வழிபாட்டிற்காக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். தொடர்ந்து அவர்கள் வேண்டுதலுக்காவும், வேண்டுதல்கள் நிறை வேறியமைக்காகவும் காவடி சுமந்தும், பால்குடம் ஏந்தியும் அவர்கள் கொண்டு வந்த பால் மூலம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

சுவாமிமலை
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் அமைந்துள்ள முருகப்பெருமானின் 4-ம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் குவிந்தனர்.
முன்னதாக அதிகாலை மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுவாமிநாத சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
மேலும், பங்குனி உத்திரத்தன்று முருகனை காண அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தீபம் ஏற்றியும், அர்ச்சனை செய்தும் மனமுருகி முருகப்பெருமானை வழிபட்டனர்.

வயலூர் முருகன்
குமார வயலூர் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பால்குடம், காவடி, அழகு குத்தி வந்தூம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு 9 மணியளவில் முருகப்பெ ருமா ன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதிவுலா நடைபெறுகிறது.
நாளை (சனிக்கிழமை) உபய அபிஷேகங்களும், 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் வள்ளி தினைப்புனம் காத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந் தேதி வேலன் வேடனாக விருத்தனாக வருதல் மற்றும் யானை விரட்ட நிகழ்ச்சி பின் முருகப்பெருமானாக காட்சியளித்தலும் நடைபெறுகிறது.

15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் மிதுன லக்னத்தில் ஸ்ரீ வள்ளி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்காக கடந்த இரண்டு வருடங்களாக பாலாயம் செய்யப்பட்டு மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறாதால். இந்த பங்குனி உத்திரத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
- முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
- 16 வகை தீபாராதனை நடந்தது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் பங்குனி உத்திரம் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழாவையொட்டி பல்லாயிரகணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 5-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 6-ம் நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக காலை 9 மணிக்கு சன்னதி வீதி, கிரிவீதிகளில் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவர நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் மாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்ணியாக வாஜனம், கலசபூஜை, மாங்கல்ய பூஜை, கந்த யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. அதையடுத்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மாலை 6 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா', 'தண்டாயுதபாணிக்கு அரோகரா' என்று விண்ணே அதிரும் வகையில் கோஷமிட்டனர். தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனை நடந்தது. பின்னர் ஓதுவார்கள் தேவாரம் பாடினர்.
பங்குனி உத்திர திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு பழனி கிரிவல பாதையில் நடைபெறுகிறது. தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்து அருள்பாலிக்க உள்ளார். தேரோட்டத்தையொட்டி காவடி எடுத்து பக்தர்கள் பழனி நோக்கி படையெடுத்து வருகின்றனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பு எதிரொலியாக பழனியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காதணி விழா நடத்துவது வழக்கம்.
- குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவர் முருகப்பெருமான்.
திருச்செந்தூர்:
ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் சாஸ்தா கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்துக்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடும் சாஸ்தா கோவிலுக்கு சென்று பொங்கல் வைப்பது, குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காதணி விழா நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று ஏராளமானவர்கள் திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள குன்றுமேலய்யன் சாஸ்தா, இல்லங்குடி சாஸ்தா, அல்லி ஊத்து கல்லால் அய்யனார், கலியுக வரதர் சாஸ்தா, கற்குவேல் அய்யனார், மருதமலை அய்யனார், அருஞ்சுனை காத்த அய்யனார், தலையூன்றி சாஸ்தா போன்ற தங்கள் குலதெய்வமான சாஸ்தா கோவிலில் வழிபாடு செய்தனர்.
குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானை வழிபாடு செய்தால் சாஸ்தாவை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
உத்திரத்தை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6மணிக்கு வள்ளியம்மை தபசு காட்சிக்கு எழுந்தருளுதல் நடைபெற்றது.
மாலை 3மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் புறப்பாடு, மாலை 6 மணிக்கு தோள் மாலை மாற்றுதல், இரவு 10 மணிக்கு வள்ளி திருக்கல்யாணம் கோவில் வளாகத்தில் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- சாஸ்தா அவதரித்த நாளாக பங்குனி உத்திரம் கருதப்படுகிறது.
- அனைத்து சாஸ்தா கேவில்களிலும் கூட்டம் அலைமோதியது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முருகப்பெருமானுக்கு உகந்த இந்த நாளில், முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நாளில் வள்ளியை முருகப்பெருமான் திருணம் செய்தார் என்பதால் பக்தர்கள் 3 மாவட்டங்களிலும் உள்ள முருகன் கோவில்களில் வழிபடுவார்கள். இதையடுத்து இன்று பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன.
தென் மாவட்டங்களில் குலதெய்வமாக வணங்கப்படும் சாஸ்தா அவதரித்த நாளாக பங்குனி உத்திரம் கருதப்படுகிறது. இதனால், இந்த நாளில் பக்தர்கள் தங்கள் குலதெய்வமான சாஸ்தா கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். இதனால் அனைத்து சாஸ்தா கேவில்களிலும் கூட்டம் அலைமோதியது.
நெல்லை மாவட்டத்தில் கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், சேரன்மகாதேவி செங்கொடி சாஸ்தா, நெல்லை சந்திப்பு மேகலிங்க சாஸ்தா, பூதத்தான் குடியிருப்பு பொன் பெருமாள் சாஸ்தா, கல்லிடைக்குறிச்சி மலையன்குளம் பாடக மகாலிங்க சாஸ்தா, பிராஞ்சேரி வீரியபெருமாள் கரையடி மாடசாமி சாஸ்தா, நெல்லை டவுன் முருங்கையடி சாஸ்தா, சீவலப்பேரி மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா, வள்ளியூர் அருகே பூசாஸ்தா கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதனால் நேற்று மாலை முதலே ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் வந்து தங்கினர். குழுவாக இருந்து கோவில் வளாகத்தில் சமைத்து சாப்பிட்டு பேசி மகிழ்ந்தனர். தொடர்ந்து இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அப்போது நேர்த்திக்கடனாக பலரும் முடி காணிக்கை செலுத்தினர். மேலும் நேமிதமாக ஆடுகளையும் பலியிட்டனர்.
பெரும்பாலான பக்தர்கள் இன்று காலை முதல் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இதனால் காலை 7 மணி முதலே முக்கிய சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நிறைந்து காணப்பட்டது. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலிலும் இன்று பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி கை கொண்டார் சாஸ்தா, கடையம் சூட்சமடையார் சாஸ்தா, பாப்பான்குளம் பூரண பெருமாள் சாஸ்தா, களக்கோட்டீஸ்வரர் சாஸ்தா கோவில் உள்ளிட்ட ஏராளமான சாஸ்தா மற்றும் அய்யனார் கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
கடையம் தோரணமலை முருகன் கோவிலில் முருகன்-வள்ளி திருக்கல்யாண திருவிழா இன்று நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். அவர்கள் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கோவிலில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு மாலையில் வீடு திரும்பினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அருஞ்சுனை காத்த அய்யனார், கற்குவேல் அய்யனார், பூலுடையார் சாஸ்தா, இலங்குடி சாஸ்தா ஆகிய கோவில்களில் இன்று பங்குனி உத்திரத்தையொட்டி பந்தல்கள் அமைக்கப்பட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை செய்யப்பட்டி ருந்தது.
விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடை பெற்று வருகின்றன. பக்தர்கள் பொங்கலிட்டும், சைவ படையலிட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இரவு 12 மணிக்கு பிறகு, கருப்பசாமி மற்றும் பிற பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு, கிடா வெட்டி அசைவ படையல் போட்டு பக்தர்கள் வழிபடுவார்கள்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி யில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பக்தர்கள் சிரமமின்றி சாஸ்தா கோவில்களுக்கு சென்றனர். மேலும் வாடகை ஆட்டோ, வேன் உள்ளிட்டவற்றிலும் குடும்பம் குடும்பமாக சென்றனர்.
இந்த திருவிழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். கோவில் திருவிழாக்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பங்குனி உத்திர திருவிழாவால் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பூட்டிக்கிடந்த கோவில்கள் வர்ணம் பூசப்பட்டு பளிச்சென காட்சியளிக்கிறது. மேலும் இரவு நேரத்தில் பல வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
- இன்று முதல் 5 நாட்களுக்கு தங்கரத புறப்பாடு ரத்து
- தேரோட்டம் நாளை மறு நாள் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 6-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
திருவிழாவின் சிறப்பு அம்சமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நாளை (10-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருஆவினன்குடியில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மணக்கோலத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளித் தேரில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பங்குனி உத்திர தேரோட்டம் நாளை மறு நாள் 11-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
பக்தர்கள் தங்கள் கைகளால் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தில் பங்கேற்கின்றனர்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 10-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தீர்த்த காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு மட்டும் சிறப்பு கவுண்டரில் அனுமதிக்கப்படுகிறது.
நாளை முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் வருகிற 13-ந் தேதி வரை 5 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைக்கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் வசதிக்காக நெரிசலை தவிர்க்க குடமுழுக்கு நினைவரங்கு வழியாக யானைப்பாதையை இணைத்து ஒரு வழிப்பாதையாகவும், மலைக்கோவிலில் இருந்து இறங்குவதற்கு வசதியாக படிப்பாதை ஒரு வழிப்பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் வசதிக்காக கிரி வீதி, குடமுழுக்கு நினைவரங்கு, யானைப்பாதை, இடும்பன் கோவில், படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் போதுமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியே நவீன வசதிகளுடன் கூடிய கட்டணமில்லா கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் இரு பாலருக்கும் தனித்தனியாக சுகாதாரமான முறையில் கழிப்பிட வசதி செய்து தரப்பட்டுள்ளது. இடும்பன்குளம், சண்முகாநதியில் பக்தர்கள் நீராடும் போது விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடமாடும் மருத்துவக்குழு வசதி செய்யப்பட்டுள்ளது.
கிரி வீதியில் 28 பேட்டரி கார் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பழனி நோக்கி தீர்த்த காவடியுடன் குவிந்து வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
- பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி கோவிலில் 10 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
- சென்னிமலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் அந்த வழியாக பக்தர்களை அனுமதிக்காமல் உள்ளனர்.
சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய, சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, தைப்பூசத்திற்கு முருகன் கோவில்களில் 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனம் அனுமதி அளிக்கப்பட்டது போல், பங்குனி உத்திரத்திற்கு இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி கோவிலில் 10, 11, 12 ஆகிய 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவசமாக தரிசனம் செய்யலாம் என்று அறிவித்தார்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி கோவிலில் 10 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இதேபோல் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேசும்போது பங்குனி உற்சவத்தையொட்டி எங்கள் பகுதியில் இருந்து நிறைய பேர் சாலை மார்க்கமாக செல்கிறார்கள். ஆனால் சென்னிமலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் அந்த வழியாக பக்தர்களை அனுமதிக்காமல் உள்ளனர்.
இதை அமைச்சர் கவனத்தில் கொண்டு அந்த பகுதியில் இன்றும் நாளையும் 2 நாட்கள் பக்தர்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு அப்பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து கொண்டிருந்தாலும் துறை செயலாளர் மற்றும் கலெக்டர் இடம் கலந்து பேசி இரண்டு நாட்கள் அங்கு சாலை பணிகளை நிறுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
- கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 10-ந் தேதி திருக்கல்யாணம், 11-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற உள்ளது.
பழனி:
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா திருஆவினன்குடி கோவிலில் கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வருகிற 10-ந் தேதி திருக்கல்யாணமும், 11-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டமும் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து ஊர்வலமாக வந்த வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து அ திக அளவு பக்தர்கள் வருவதால் கிரிவலப்பாதையில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அதிகாலை முதலே தீர்த்தக்காவடிகளுடன் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
அவர்களுக்கு மட்டும் மலைக்கோவிலில் ரூ.300 கட்டண தரிசன பாதை வழியாக இலவசமாக சென்று சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருஆவினன்குடி கோவில் சாலை, சன்னதி வீதியில் தேர் உலா வரும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் உத்தரவின்படி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர் வரும் வழியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
பங்குனி உத்திர திருவிழாவுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் தற்போதே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு அதிக அளவு பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பழனியில் பாரம்பரிய முறையில் பஞ்சாமிர்தம் தயாரித்து சுவாமிக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழங்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்துவார்கள். இதற்காக கொடைக்கானல், தாண்டிக்குடி, ஆடலூர், பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலை வாழைப்பழங்கள் இங்கு அதிக அளவில் கொண்டு வரப்பட்டுள்ளன.
பழனி அய்யம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதியில் சாலையோரங்களில் தற்காலிக வாழைப்பழ கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரத்து குறைவால் விலை அதிகரித்து ஒரு பழம் ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பக்தர்கள் மொத்தமாக வாழைப்பழங்களை வாங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து பிரசாதமாக வழங்குகின்றனர். இந்த ஆண்டு வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாகவும், தற்போது 50 டன் வாழைப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர கோவில் நிர்வாகம் சார்பில் தட்டுப்பாடின்றி பஞ்சாமிர்தம் கிடைக்கவும், அனைத்து ஸ்டால்களிலும் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
- பங்குனி உத்திர தேரோட்டம் 11-ந் தேதி நடைபெறுகிறது.
- பங்குனி உத்திர தீர்த்தக் காவடி எடுத்து வந்தனர்.
பழனி:
தமிழ்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். முக்கிய திருவிழாக்களான பங்குனி உத்திரம், தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி தைப்பூச திருவிழா முடிந்த நிலையில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி, தந்த சப்பரம், வெள்ளி காமதேனு, யானை, ஆட்டுக்கிடா, தங்கமயில், தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் 4 ரதவீதிகளில் உலா வருவார். 10-ந் தேதி திருக்கல்யாணமும், முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் 11-ந் தேதியும் நடைபெறுகிறது.
2ம் நாளான இன்று பழனி ஸ்ரீ தண்டாயுதம் சுவாமி பக்தர்கள் பேரவை சார்பாக 16-ம் ஆண்டு பங்குனி உத்திர தீர்த்தக் காவடி எடுத்து வந்தனர். பழனி முருகனுக்கு கொடுமுடியில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்டோர் தீர்த்தக்காவடி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்று மதியம் ஸ்ரீ சண்முகசுவ மண்டபத்தில் புது அன்னதானம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பழனி ஸ்ரீ தண்டாயுதம் பேரவை பக்தர்கள் பேரவை சார்பாக அழகர் செய்திருந்தார்.
மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பாதயாத்திரையாக பழனிக்கு வரத்தொடங்கி உள்ளனர். பால், பன்னீர், பறவை காவடி எடுத்துவந்து கிரிவீதிகளில் ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர்.
கேரளாவில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வந்திருந்ததால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, ரோப்கார் நிலையம், மின்இழுவை நிலையம் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலில் தண்டாயுதபாணி சாமியை தரிசனம் செய்தனர்.
- பழனி முருகப்பெருமான் சிலை நவபாஷாணத்தால் ஆனது.
- ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.
பழனி:
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் பழனிக்கு வருவது சிறப்பு அம்சமாகும்.
பழனி முருகப்பெருமான் சிலை நவபாஷாணத்தால் ஆனது. எனவே கோடைகாலமான பங்குனி, சித்திரை மாதங்களில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து பக்தர்கள் பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா, பழனி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் நடந்தது.
பின்னர் சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிப்படம் கொடிமரம் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகை பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து முத்துக்கு மாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளினார்.
அதையடுத்து அஸ்திரதேவர், விநாயகர் சிலை முன்பு மயூர யாகம், வாத்திய பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 11 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா என சரண கோஷம் எழுப்பினர்.
பின்னர் ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகருக்கு காப்புக்கட்டு நடந்தது. அதைத்தொடர்ந்து சண்முகர், உற்சவர், துவார பாலகர்கள், மயில்வாகனம் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் சோமாஸ்கந்தர், சிவன், பெரியநாயகிஅம்மன், நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு காப்புக்கட்டு நடைபெற்றது.
பழனி பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வருகிற 10-ம் தேதி இரவு 5.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. அடுத்த நாள் 11-ம் தேதி பங்குனி உத்திரம் அன்று பழனி கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் கோவில் தேவஸ்தானம் இணைந்து செய்து வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் போது தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவையொட்டி வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 5 நாட்கள் தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுகிறது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, சித்தனாதன் சன்ஸ் உரிமையாளர்கள் சிவனேசன், பழனிவேலு, ராகவன், கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வக்குமார், நவீன், நரேஷ், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, ஸ்ரீபெரியநாயகி அம்மன் கல்வி அறக்கட்டளை தலைவர் சுந்தரம் மற்றும் நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் சாலையில் கோவில் அமைந்துள்ளது.
- ஆலயத்தில் பங்குனி உத்திர திருநாள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தான், சேதுக்கு வாய்த்தான் என்னும் மிகப் பழமையான கிராமம். தாமிரபரணி ஆற்றங்கரையில் மிகவும் ரம்மியமான தோற்றத்தில் காணப்படும் அற்புதமான ஊர்.
ராம காவியத்தில் ராமபிரானும் வானர வீரர்களும், சீதா தேவியை தேடி இலங்கைக்கு செல்கிறார்கள். அப்போது அவர்கள் குரங்கணி, குரங்கன் தட்டு மற்றும் அதன் சுற்றுப்பகுதியான சேதுக்கு வாய்த்தான் உள்பட பல தாமிரபரணி கரை கிராமத்தில்தான் அணிவகுத்து நின்றுள்ளனர்.
அதன் பிறகு 'சற்று தெற்கே வந்து விட்டோம்' என ராமேஸ்வரம் நோக்கிச் சென்றதாகவும், ராமேஸ்வரத்தில் இருந்து சேது சமுத்திரத்தில் ராமர் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
அப்படி ராமபிரானும், வானர வீரர்களும் தங்கி இருந்த இந்த கிராமம் 'சேது பூமி' என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் சேதுக்குவாய்த்தான் என்று மருவியது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க சேதுக்குவாய்த்தான் ஊரில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார், சூலுகாத்த சூலுடைய அய்யனார் சாஸ்தா.
கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர், சேதுபதி நாதன் என்னும் குறுநில மன்னன். இவர் சேதுக்கு வாய்த்தான் பகுதிகளை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தார். நீதி தவறாமல் நடந்து வந்த இவரது ஆட்சி காலத்தில், மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தனர்.
மாதம் மும்மாரி மழையும் பெய்தது. வருடம் முழுவதும் மூன்று வேளை விவசாயம் செழிப்பாக விளைந்தது. மக்களும் மன்னனின் ஆணைக்கு கட்டுப்பட்டு மிகவும் மகிழ்ச்சியாக ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தனர்.
சேதுபதிநாத மன்னனின் ஆட்சிக்குட்பட்ட சேதுக்கு வாய்த்தான் கிராமத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அழகான சோலை ஒன்றில் தர்ம சாஸ்தாவான அய்யனார் அருள்பாலித்து வந்தார்.

அப்போது அவர் ஓலைக்குடிசலில் தான் அமர்ந்திருந்தார். இவ்வூரில் நல்லதாய் என்ற பெண் வசித்து வந்தாள். ஏழைப்பெண்ணான இவளது கணவன் சின்னத்துரை.
கணவன்- மனைவி இருவரும் தினமும் சேதுக்குவாய்த்தானில் இருந்து குரங்கணி வரை தாமிரபரணி கரையோரமாகச் சென்று விறகு பொறுக்கி வருவார்கள். பணி முடிந்து வீடு திரும்பும்போது, அய்யனாரை வணங்கத் தவறுவது இல்லை. விறகை விற்று அதன் மூலம் பொருளாதாரம் ஈட்டி வந்தனர்.
இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. தங்கள் மனக்குறையைப் போக்க தினமும் குழந்தை வரம் வேண்டும் என ஓலைக்குடிசையில் இருந்த அய்யனாரை வணங்கி நின்றார்கள். அய்யன் இவர்களது கோரிக்கைக்கு செவி சாய்த்தார்.
நல்லதாய் கர்ப்பமானாள். நல்லதாய்க்கு கணவனைத் தவிர சொந்தம் என்று யாரும் இல்லாததால், முன்பு போலவே, கணவன் தன்னுடனேயே மனைவியையும் விறகு பொறுக்கும் பணிக்கு அழைத்துச் சென்று விடுவான். 10 மாதம் கடந்த நிலையில், வயிறு பெருத்து நடக்க முடியாமல் தவித்தாள், நல்லத்தாய். இன்றோ, நாளையோ அவளுக்கு பிரசவம் ஏற்படும் என்ற நிலை.
ஆதரவாக யாரும் இல்லாததால் கணவனுடன் பணிக்குச் சென்றாள். பணி முடிந்து தலையில் பாரம் சுமந்தபடி வந்தபோது, பாதி வழியில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் துடிதுடித்துப் போனாள். சின்னத்துரை மனைவியின் நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தான்.
அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அய்யனார்கோவில் அருகில் மனைவியை அமர வைத்தான். "அய்யனே என் மனைவியை பார்த்துக்கொள்" என அய்யனாரிடம் ஒப்படைத்தான்.
பின்னர் மனைவியிடம், "ஊருக்குள் போய் உதவிக்கு மருத்துவச்சியை கூட்டி வருகிறேன்" என கூறிவிட்டு அவசர அவசரமாக ஊருக்குள் ஓடினான். அங்கே இருந்த மருத்துவச்சியிடம் தனது மனைவிக்கு பேறு காலம் பார்க்க வரும்படி கோரினான்.
அந்த நேரம் பார்த்து பெருங்காற்றும், தொடர் மழையும் பெய்யத் தொடங்கியது. மருத்துவச்சி வயதானவர் என்பதால், அவரால் அந்த புயல் மழையில் வெளியே வர முடியவில்லை. இதனால் மனம் வருந்திய சின்னத்துரை, "அய்யோ மனைவியை தனியாக விட்டு விட்டு வந்து விட்டோமே" என மீண்டும் கோவிலை நோக்கி ஓடினான்.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. அந்த வெள்ளம் இவனையும் சூழ்ந்தது. எனவே மனைவியை காணச் செல்ல முடியாமல் பாதி வழியில் பறிதவித்து நின்றிருந்தான். அப்படி நின்ற இடத்தில் இருந்து அய்யனை நோக்கி கை கூப்பி வணங்கினான். "அய்யனே என் மனைவியையும், குழந்தையையும் காப்பாற்று" என்று மன்றாடினான்.
இவனின் குரல் அய்யனாரின் காதுகளில் விழுந்தது. தனது கோட்டைக்குள் மனைவியை கொண்டு வந்து விட்டுச் சென்ற கணவனின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பிய அய்யனார், மருத்துவச்சி வடிவத்தில் அங்கு தோன்றி, நல்லதாய்க்கு பிரசவம் பார்த்து, அவள் நல்ல சுகப் பிரசவத்துடன் ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.
வீசி அடிக்கும் காற்றையும், பேய் மழையையும் தன் கண் அசைவில் நிறுத்தினார் அய்யனார். அதன் பின் அய்யனாக சென்று கோவிலுக்குள் ஐக்கிய மானார்.
மழை நின்றவுடன் மருத்துவச்சியை அழைத்துக்கொண்டு ஓடியே வந்தான் சின்னத்துரை. இதற்கிடையில் மயக்கம் தெளிந்த நல்லதாய் குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தாள். "இந்த மருத்துவச்சித் தான் எனக்கு பேறுகாலம் பார்த்தாள்" என்று மருத்துவச்சிக்கு நன்றி கூறினாள்.
மருத்துவச்சியும், அவளது கணவரும் அதிர்ச்சி அடைந்தனர். "என்னம்மா சொல்கிறாய்.. நான் இப்போது தானே வருகிறேன்" என்றாள் மருத்துவச்சி. அப்போதுதான் அவர்கள் மூவருக்கும் ஒரு உண்மை புரிந்தது, அந்த அய்யனாரே, மருத்துவச்சியாக வந்து பிரசவம் பார்த்துச் சென்றிருக்கிறார். இதனால் அவர்கள் மனம் நிறைந்து அய்யனுக்கு நன்றி செலுத்தினர்.
நிறைமாத கர்ப்பிணியான நல்லதாய், பிள்ளைபெற மருத்துவச்சியாக உதவி செய்ததால், இத்தல அய்யனாரை 'சூலுடையார் அய்யனார்' என்று அழைத்தனர். இவர் தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு, அருளை அள்ளித்தந்து மகிழ்கிறார்.
இவரின் அருள் பரவிய காரணத்தால், இங்கு வழிபட வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனால் ஓலை குடிசையில் இருந்த அவர், பின்னர் பெரிய கல் கட்டிடத்திற்கு மாறினார்.
இந்த ஆலயத்தில் அரசு வேலை கிடைக்கவும், இழந்த பொருளை மீட்கவும், கடன்தொல்லை நீங்கவும் நேரில் வந்து தரிசனம் செய்கிறார்கள். குழந்தை வரம் வேண்டுபவர்களும், சுகப் பிரசவம் வேண்டுபவர்களும் இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்.
இந்த திருக்கோவில் வெளிப் பிரகாரத்தில் சங்கிலி பூதத்தாரும், பேச்சியம்மன், சுடலைமாடசாமி என பரிவார தெய்வங்களும், உள் பிரகாரத்தில் விநாயகரும், வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணியரும் காட்சியளிக்கின்றனர். வெளிப் பிரகாரத்தில் வன்னிய ராஜா கோவில் உள்ளது.
இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர திருநாள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இந்த சாஸ்தாவை குலதெய்வமாக கொண்டவர்கள் தேடிவந்து வணங்கி நிற்கிறார்கள். இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.
இந்த ஆலயம் ஏரலுக்கு மறுகரையில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூரில் இருந்து ஏரலுக்கு பேருந்து வசதி உண்டு.
- பங்குனி உத்திரம் அன்று மேற்கொள்ளும் விரதத்தை ‘கல்யாண விரதம்’ என்று அழைப்பார்கள்.
- பங்குனி உத்திர விரதத்துக்கு பல கதைகள் உண்டு.
பங்குனி மாதத்தில் உத்திரம் நட்சத்திரம் வரும் நாளில், பல்வேறு சிறப்புமிகு நிகழ்வுகள் நடைபெற்றிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த சிறப்பான நாளில்தான், பல தெய்வத் திருமணங்கள், தெய்வ அனுகூலம் ஏற்பட்ட பல காரியங்கள் நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
மாதம் தோறும் உத்திரம் நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம்தான் 'பங்குனி உத்திரம்' என்று சிறப்பித்து கூறப்படுகிறது. மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருமணம், ஆண்டாள்- ரெங்கநாதர் திருமணம், ராமர்- சீதை திருமணம் உள்ளிட்ட பல தெய்வங்களின் திருமணங்கள் இந்நாளில் நடந்தேறி இருக்கின்றன. எனவே பங்குனி உத்திர நாளில் மேற்கொள்ளும் விரதத்தை 'கல்யாண விரதம்' என்றும் அழைப்பார்கள்.

இந்த சிறப்புமிக்க நாளில் சிவபெருமானையும், அவரது மகன் என்று புராணங்கள் சொல்லும் முருகப்பெருமானையும் விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நிற்கும் வேளையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. திருமணம் தடைப்படுபவர்கள், இந்த நன்னாளில் ஆலயங்களுக்குச் சென்று சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.
பக்தர்கள் வேண்டும் வரங்களைத் தந்தருளும் தெய்வங்களை, தேவர்கள் பலரும் இந்த பங்குனி உத்திர நாளில் வழிபட்டு வரம் பெற்றுள்ளனர். விஷ்ணுவின் திருமார்பில் திருமகள் இடம் பிடித்தது, இந்த விரதத்தை கடைப்பிடித்துதான்.
தேவர்களின் தலைவனான இந்திரனும் இந்த விரதத்தை மேற்கொண்டு, இந்திராணியை கரம் பிடித்திருக்கிறான். பிரம்மன் சரஸ்வதியை தன் நாவில் குடிகொள்ளச் செய்ததும், சந்திரன் இருபத்து ஏழு அழகு வாய்ந்த நட்சத்திரப் பெண்களை மணம் முடித்ததும் கூட இந்த விரதத்தை மேற்கொண்டுதான்.
இந்த விரதத்தை கடைப்பிடித்தவர்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் எண்ணிலடங்காதவர்கள். திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இன்பம் தரும் இனிய விரதம் இது.
பங்குனி உத்திர விரதத்துக்கு பல கதைகள் உண்டு. அவற்றில் பார்வதி விரதம் இருந்து சிவபெருமானை மணாளனாக அடைந்தது முக்கியத்துவம் வாய்ந்தது.
ஒருமுறை சாபம் காரணமாக, தக்கன் என்பவனுக்கு மகளாகப் பிறந்தாள், உமாதேவி. தாட்சாயணி என்ற பெயருடன் சிறுவயது முதலே சிவனின் மீது விருப்பம் கொண்ட அன்னை, தவம் இருந்து சிவனை மணம் செய்து கொண்டாள்.
ஆனால் தக்கன், சிவபெருமானுக்குரிய மரியாதையை வழங்கவில்லை. அவருக்கு சேரவேண்டிய அவிர்பாகத்தைக் கூட கொடுக்காமல், மற்ற தேவர்கள், முனிவர்களை அழைத்து யாகம் செய்தான். இதனால் வெகுண்டெழுந்த தாட்சாயிணி யாக குண்டத்தில் விழுந்து, அந்த யாகத்தை பலனற்றதாக மாற்றினாள்.
தக்கனுக்கு மகளாக பிறந்த காரணத்தினால் ஏற்பட்ட களங்கத்தை போக்கி கொள்வதற்காக, பார்வதி என்ற பெயருடன் மலையரசன் இமவான் மகளாக தோன்றினாள். காஞ்சிபுரத்தில் கம்பை ஆற்றில் மணலால் சிவலிங்கம் பிடித்து வைத்து வழிபட்டார்.
திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. ஆற்று நீரில் மணல் லிங்கம் சிதைந்து விடுமே என்று, அந்த லிங்கத்தை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். பார்வதியின் அன்பை பார்த்து வியந்த பரமேஸ்வரன், சிவலிங்கத்தில் வெளிப்பட்டு அவளை திருமணம் செய்து கொண்டார். அந்நாளே பங்குனி உத்திர திருநாள் ஆகும். பங்குனி உத்திரத்தன்று சிவாலயங்களில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

விரதம் இருக்கும் முறை
பங்குனி உத்திர விரதத்தை 8 வயதில் இருந்து 80 வயது உள்ளவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். பங்குனி உத்திரம் அன்று விரதம் இருப்பவர்கள் காலை எழுந்து நீராடி விட்டு, சிவபெருமானுக்கும் உமையன்னைக்கும் அபிஷேக, ஆராதனை செய்து தூப - தீபம் காட்டி, நைவேத்தியங்களை படைத்து வழிபட வேண்டும்.
அந்த பூஜை நேரத்தில் ஒரு தம்பதியினரை அழைத்து வந்து, அவர்களை வணங்கி தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்க வேண்டும். வயிறு நிரம்ப அன்னம் படைக்க வேண்டும்.
பின்னர் சிவ பெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக்கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும். விரதத்தின் போது மவுனமாக இருப்பது சிறப்பு.
அன்று முழுவதும் இறைவனைப்பற்றிய சிந்தனையில் மூழ்கி சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றைப் படிக்கலாம். இறைவனின் நாமாவளிகளைக் கூறலாம். பட்டினி கிடந்து பசித்திருக்க வேண்டும்.
துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று வணங்கி இரவில் பால், பழம் உண்டு படுக்கையில் படுக்காமல் தரையில் துணி விரித்துப்படுக்கவேண்டும்.
தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் இந்த விரதத்தை அனுஷ்டித்து வந்தால் அடுத்த ஜென்மத்தில் தெய்வீகப் பிறவியை பெறுவார்கள் என்கின்றன புராணங்கள்.
- பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமானோர் கோவில்களில் ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள்.
- கிடா வகை ஆடுகள் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தை தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற எட்டையபுரம் சந்தைக்கு அடுத்து பெரிய சந்தையாக விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் விற்பனை நடந்து வருகிறது.
இங்கு ஆடுகள் மட்டுமின்றி மாடு, கோழி, கருவாடு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படும். அதனை வாங்க அண்டை மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் வருவார்கள்.
இதனால் இங்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் விற்பனை நடைபெறும். ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இந்த சந்தையில் கூடுதலாக விற்பனை நடக்கும்.
இந்த நிலையில் பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமானோர் கோவில்களில் ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள். தற்போது பங்குனி உத்திரம் வருகிற 10-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்த நாளில் ஏராளமான பக்தர்கள் கோவில்களில் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் ஆடு, கிடாய் உள்ளிட்டவற்றை பலியிடுவார்கள். இந்த திருவிழா நெருங்கி வருவதால், இன்று மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.
இதற்காக நேற்று இரவு முதலே வியாபாரிகள் தங்களது ஆடு, மாடுகளுடன் சந்தைக்கு வந்தனர். வியாபாரிகள், பொதுமக்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் சந்தையில் குவிந்தனர். மேலும் விற்பனைக்காக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன. அவை தரத்துக்கு ஏற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது. கிடா வகை ஆடுகள் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. பெரும்பாலானோர் கிடாய்களை தான் கோவில்களில் நேர்த்திக்கடனாக பலியிடுவார்கள் என்பதால் இன்று கிடாய்களுக்கு மவுசு ஏற்பட்டது.
அதே நேரம் இளம் ஆடுகளின் கறி சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும் என்பதால் குட்டி ஆடுகளையும் ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். ஆடுகள் விற்பனை கோடிக்கணக்கில் அமோகமாக நடந்ததால் மேலப்பாளையம் சந்தை களைகட்டி காணப்பட்டது.