என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruchendur murugan temple"

    • 100-க்கும் மேற்பட்ட ஜப்பான் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர்.
    • நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்ச கொட்டையுடன் கோவிலுக்குள் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்த சிறந்த பரிகார தலமாகாவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். திருவிழா காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் இன்று ஜப்பானிய ஆன்மீக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியன் தலைமையில் முருகன் மற்றும் பழனி புலிப்பாணி ஆசிரமம் கவுதம் கார்த்திக் ஒருங்கிணைப்பில் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜப்பானிய சிவா ஆதீனம் பாலகும்ப குரு முனி மற்றும் அவர்களது சீடர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர்.

    ஜப்பான் நாட்டை சேர்ந்த முருக பக்தர்கள் கடந்த கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பழனி, ராமேஸ்வரம் உட்பட 128 கோவில்களுக்கு ஆன்மிக பயணமாக சென்று தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்று திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த முருக பக்தர்கள் நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்ச கொட்டையுடன் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

    மேலும் கோவிலுக்கு வெளியே வந்த ஜப்பான் நாட்டு முருக பக்தர்கள் ஒன்று கூடி தமிழில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா, ஞானவேல் முருகனுக்கு அரோகரா, கந்தவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் முழங்க முருகனை வழிபட்டு சென்றனர்.

    • சென்னை எழும்பூர் டூ செங்கோட்டை இடையே வரும் 6ம் தேதி மற்றும் 7ம் தேதி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • குடமுழுக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

    திருச்செந்தூர் முருகன் கோவில் குடுமுழுக்கு வருகிற 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. குடமுழுக்கை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடமுழுக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

    இந்நிலையில், திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவின்போது ஏற்படும் கூடுதல் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை எழும்பூர் டூ செங்கோட்டை இடையே வரும் 6ம் தேதி மற்றும் 7ம் தேதி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    வரும் 6ம் தேதி சென்னை எழும்பூர்- செங்கோட்டை வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    வரும் 7ம் தேதி செங்கோட்டை- சென்னை எழும்பூர் வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இதற்கான முன்பதிவுகள் 04.07.2025 அன்று காலை 08:00 மணிக்கு தொடங்கும் எனவும், பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும்படியும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    • 2 ஆயிரம் சதுர அடியில் பக்தர்கள் அமரும் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.
    • தெய்வானை, பெருமாள் ஆகிய சன்னதி விமான கலசங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 7-ந்தேதி வெகு விமர்சையாக நடக்கிறது.

    இதற்காக எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடியிலும், கோவில் நிதியில் இருந்து ரூ.100 கோடி என ரூ.300 கோடி திட்டமதிப்பில் மெகா திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பதிக்கு இணையாக பக்தர்கள் எளிதாக நீண்ட வரிசையில் வெகு நேரம் நிற்காமல் அமர்ந்து ஒய்வு எடுத்து அகன்ற திரையில் படம் பார்த்து தரிசனம் செய்யும் வகையில் பொதுத் தரிசன மண்டபம், நிர்வாக அலுவலக கட்டிடம், கலையரங்கம், பயணிகள் தங்கும் விடுதிகள் என முடிவுற்ற பணிகளை சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    தொடர்ந்து மற்ற பணிகளுடன் ராஜ கோபுர பணிகள், விமான தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் ஆகிய விமான கலசங்களில் தங்க தகடு பதிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. மெகா திட்ட வளாக பணியில் 90 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. மீதம் உள்ள பணிகள் கும்பாபிஷேகத்திற்கு பிறகு முடிவுறும் என கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்காக ராஜகோபுரம் கீழ்பகுதியில் 8 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் சதுர அடியில் பக்தர்கள் அமரும் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.

    யாகசாலையில் 76 ஓம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. யாகசாலையில் வேள்விசாலை வழிபாடு நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 64 ஓதுவார் மூர்த்திகளை கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நாளை (1-ந்தேதி) முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகப் பணி தொடங்குகிறது. 12 கால யாகபூஜைகள் நடக்கிறது. வருகிற 7-ந்தேதி காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் கும்பாபிசேகம் நடைபெற்று சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகிய சன்னதி விமான கலசங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்படுகிறது. பின்னர் புனித நீர் டிரோன் மூலம் பக்தர்கள் மீது தெளிக்க படுகிறது.

    ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காதணி விழா நடத்துவது வழக்கம்.
    • குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவர் முருகப்பெருமான்.

    திருச்செந்தூர்:

    ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் சாஸ்தா கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்துக்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடும் சாஸ்தா கோவிலுக்கு சென்று பொங்கல் வைப்பது, குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காதணி விழா நடத்துவது வழக்கம்.

    அந்த வகையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று ஏராளமானவர்கள் திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள குன்றுமேலய்யன் சாஸ்தா, இல்லங்குடி சாஸ்தா, அல்லி ஊத்து கல்லால் அய்யனார், கலியுக வரதர் சாஸ்தா, கற்குவேல் அய்யனார், மருதமலை அய்யனார், அருஞ்சுனை காத்த அய்யனார், தலையூன்றி சாஸ்தா போன்ற தங்கள் குலதெய்வமான சாஸ்தா கோவிலில் வழிபாடு செய்தனர்.

    குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானை வழிபாடு செய்தால் சாஸ்தாவை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.


    அந்த வகையில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    உத்திரத்தை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6மணிக்கு வள்ளியம்மை தபசு காட்சிக்கு எழுந்தருளுதல் நடைபெற்றது.

    மாலை 3மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் புறப்பாடு, மாலை 6 மணிக்கு தோள் மாலை மாற்றுதல், இரவு 10 மணிக்கு வள்ளி திருக்கல்யாணம் கோவில் வளாகத்தில் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • நாழிக்கிணறு தீர்த்தம் உள்பட 24 தீர்த்த கட்டங்கள் உள்ளன.
    • 4 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் மற்றும் கடலுக்கு அருகில் நாழிக்கிணறு தீர்த்தம் உள்பட 24 தீர்த்த கட்டங்கள் உள்ளன. தற்போது நாழி கிணறு தீட்டத்த கட்டம் மட்டும் பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது.

    பொதுவாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவதும் வெளியே வருவதும் இயல்பு. இந்த நேரங்களில் கடலில் இருந்து ஏதாவது கல்வெட்டுகள், மற்றும் பாறைகள் வெளியே தெரியும்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல் கரையில் சுமார் 4 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.

    அதனை அங்கிருந்த பவுர்ணமி சித்தர் என்பவர் அதை கண்டு கல்வெட்டு மீது திருநீறு பூசி அதில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துக்களை பார்த்த போது கந்த மாதன தீர்த்தம் என்று எழுதப்பட்டிருந்தது.

    இந்த கல்வெட்டு 24 தீர்த்த கட்டங்களில் ஒன்றாகும். இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்கள் பாவங்களை நீக்கி அவர்களை பரிசுத்தமாக்கும் என்பது ஐதீகம். இதுவும் அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவில் நிர்வாகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகத்தினர் வந்து கல்வெட்டை எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர்.இந்த கல்வெட்டை ஏராளமான பக்தர்கள் பார்த்து வணங்கி சென்றனர்.

    திருச்செந்தூர், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம், காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தேவையான முகாம்கள் அமைத்து பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    திருச்செந்தூர்:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இதுவரை இல்லாத அளவில் கனமழை கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக காயல்பட்டினம், திருச்செந்தூர், ஆறுமுகநேரி, தூத்துக்குடி நகர பகுதிகளில் காலை முதல் இடைவிடாது பெய்த கனமழையால் பல்வேறு இடங்களிலும் சாலைகளில் வெள்ளம் தேங்கியது.

    திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் கோவில் கிழக்கு பகுதியில் கிரிபிரகாரத்தில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது.

    பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கோவிலில் தேங்கிய மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் சுவாமி மூலவர் இருக்கும் மகாமண்டபத்திற்குள் மழைநீர் செல்லவில்லை.

    அதேநேரம் நாழிக்கிணறு கார்நிறுத்தும் இடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்துநின்று தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர் பஸ்நிலைய பகுதி, டி.பி.ரோடு, காமராஜர் சாலை, ரதவீதிகள், அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள சாலை, தினசரி மார்க்கெட் பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    திருச்செந்தூர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் மின்மோட்டார் மூலமும், பொக்லைன் எந்திரம் மூலமும் வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிலமணி நேரங்களில் வெள்ளம் வடிய தொடங்கியது.

    குறிப்பாக கோவிலை சுற்றி தேங்கிய மழைவெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதன் காரணமாக சுப்பிரமணிய சுவாமி கோவிலை சுற்றி தேங்கிய வெள்ளம் சிறிது நேரத்தில் முழுமையாக வடிந்தது.

    இதனால் இன்று காலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனம் செய்தனர். மேலும் திருச்செந்தூர் நகரப்பகுதிகளிலும் தேங்கி நின்ற மழைநீர் முழுமையாக வடிந்ததால் இன்று திருச்செந்தூர் இயல்பு நிலைக்கு திரும்பியது.

    இதற்கிடையே திருச்செந்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று இரவு நேரில் பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிகப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருச்செந்தூர், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம், காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தேவையான முகாம்கள் அமைத்து பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் வளர்க்கக் கூடிய கால்நடைகள் மற்றும் வீட்டு விலங்குகளுக்கு தனியே முகாம்கள் அமைக்கப்பட்டு விலங்குகளையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தில் கார் மிதந்து சென்றதை படத்தில் காணலாம்

    இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதையடுத்து தாழ்வான பகுதிகளில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரி- குளங்கள் கண்டறியப்பட்டு மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

    2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாகத் திருவிழா மிகவும் சிறப்புமிக்கதாகும். திருச்செந்தூர் கோவிலில் இத்திருவிழா, வசந்த விழாவாக கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் கோவிலில் உச்சிகால தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோவிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிறைவு நாளை வசந்த திருவிழாவாக கொண்டாடும் விதமாக, சனிக்கிழமை இன்று வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.

    இதையொட்டி கோவிலில் அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனையாகிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோவிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வருதலும், முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னர், தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோயில் சேர்கிறார்.

    வைகாசி விசாக திருவிழாவையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். ராமநாதபுரம், மதுரை, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோயிலில் பொது தரிசன வழி, சிறப்பு வழிகளில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

    அதனை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் ஆகியவை நடக்கிறது.

    தொடர்ந்து 18-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

    பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    தொடர்ந்து 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் ஆகியவை நடக்கிறது.

    திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் முருகனை வழிபட வருவார்கள்.

    ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 8-ம் திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதிகாலையில் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வெள்ளை சாத்தி கோலத்தில் 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார்.

    அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலை 11.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை, மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி பச்சை சாத்தி கோலத்தில் 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்த சுவாமியை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு 10-ம் திருநாள் தேரோட்டம் நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) 11-ம் திருநாள் இரவு சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடந்தது.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    5-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலையில் சாயரட்சை தீபாராதனை நடந்தது.

    இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. அந்த வாயிலின் முன்பு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளினர். பின்னர் இரவு 7.35 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலின் பிரதான வாயில் திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது.

    அப்போது கீழ ரத வீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எட்டு வீதிகளிலும் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    6-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வருகிறார். இரவு 8 மணிக்கு மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், தெய்வானை அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    4-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    மாலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பால்குடம், புஷ்ப காவடி எடுத்து வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நேற்று ஏராளமான பக்தர்கள் புஷ்ப காவடி, பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.

    5-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி, குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தச‌ஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை காண்பதற்காக திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். #Soorasamharam #ThiruchendurMurugan
    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான‌ கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிலில் விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர். விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலைக்கு புறப் பாடு, உச்சிகால தீபாராதனை ஆகியவை நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூர‌சம்ஹாரம் 6-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    இதன்பிறகு காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடந்த‌து. இதையடுத்து யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளிதெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.


    கோவில் முன் திரண்ட பக்தர்கள்.

    மதியம் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்கிறார்.

    பின்னர் சிங்கமுகமாகவும், தன்முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை சுவாமி வதம் செய்கிறார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி அருள்கிறார். சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோ‌ஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமிஅம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலை சேர்கின்றனர். இரவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயாபிஷேகம் (கண்ணாடி யில் தெரியும் சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்) நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப் பட்டு உள்ளது. சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்த வந்த வண்ணம் உள்ளனர்.

    கடலில் புனித நீராட கடற்கரையில் திரண்ட பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

    சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப‌ட்டுள்ளது. சுமார் 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பக்தர்கள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு வசதியாக 10 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 300 துப்புரவு பணியாளர்கள் பணியில் உள்ளனர். 100 தற்காலிக கழிப்பறைகள், 8 தற்காலிக தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தூத்துக்குடி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோன்று தற்காலிக வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்காக 15 மினி பஸ்கள் இயக்கப்படுகின்றது. சூரசம்ஹாரம் முடிந்ததும் ஊர் திரும்பும் பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு மாலை 6.30 மணி, இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றது.

    கோவில் கிரிபிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள்.

    சூரசம்ஹார நிகழ்ச்சியை பக்தர்கள் எளிதில் காணும் வகையில், கடற்கரை முழுவதும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் நகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து, அதில் இருந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    திருச்செந்தூர் - பாளையங்கோட்டை ரோடு, தூத்துக்குடிரோடு, கன்னியாகுமரி ரோடு, சாத்தான்குளம் ரோடு ஆகியவற்றில் புறநகர் பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். #Soorasamharam #ThiruchendurMurugan
    ×