search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruchendur"

    • பவுர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள்.
    • திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆச்சரியமாக பார்த்து அதன் மீது நின்று “செல்பி” எடுத்து மகிழ்கின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள்.

    மேலும் பவுர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளியே சீற்றம் அதிகமாக காணப்பட்டும் வருகிறது.

    கடந்த 31-ந்தேதி அமாவாசையாக இருந்ததால் 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் இருப்புபாதை, வினோதம் பாலம் போன்ற கல்சாலைகள் போன்ற அமைப்பு காணப்படுகிறது. அந்த சாலை நீண்ட தூரத்திற்கு காணப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதியினர் கூறும்போது, இது பண்டைய கால மன்னர்கள் ஆட்சி செய்தபோது திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினத்தில் உள்ள துறைமுகத்திற்கு பொருட்கள் ஏற்றிச் செல்ல பயன்படுத்திய சாலை அல்லது ஆங்கிலேயர் காலத்தில் கடற்கரை வழியாக போடப்பட்ட ரெயில் இருப்புபாதையாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே மதுரைக்கு தெற்கே பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த போது குலசேகரபட்டிணம் ஒரு துறைமுகமாக இருந்து இங்கிருந்து ஜாவா, சுமத்திரா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு முத்து, உப்பு, போன்றவை ஏற்றுமதி செய்ய கப்பல் போக்குவரத்து இருந்துள்ளதாக இந்த பகுதியில் உள்ள கோவில் கல்வெட்டு மூலம் தெரிகிறது.

    அதே போல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குலசேகரன்பட்டினத்தில் துறைமுகம் இருந்ததாகவும், இந்த துறைமுகத்திற்கு திருச்செந்தூர் கடற்கரை வழியாக ரெயில் பாதை இருந்ததாகவும் அங்கு சீனி ஆலைகள் இருந்ததாகவும் ரெயிலில் பொருட்களை ஏற்றி வந்து கப்பல் வழியாக ஏற்றுமதி நடந்துள்ளது என கூறப்படுகிறது.

    பின்னாளில் கடல் சீற்றம் ஏற்பட்டு ரெயில் போக்குவரத்து, துறைமுகம் காணாமல் போயிருக்கலாம் என தெரிகிறது.

    அதற்கான தடயங்கள் தான் தற்போது கடல் உள்வாங்கிய போது கடற்கரை வழியாக குலசேகரன்பட்டினந்திற்கு ரெயில் பாதை அல்லது சாலையாக இருந்த அடையாளம் அதாவது சாலை போன்று காணப்படுகிறது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் இந்த வினோத பாதையை திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆச்சரியமாக பார்த்து அதன் மீது நின்று "செல்பி" எடுத்து மகிழ்கின்றனர்.

    • கோவில் சார்பில் நடைபெற்று வருகின்ற பணிகள் 43 சதவீதத்தை தாண்டியுள்ளது.
    • பணிகள் அனைத்தும் விரைவாக நடைபெற்று வருகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்தார். அவர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    கோவில் வளாகத்தில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாக பணிகளை அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. நடைபெற்று வரும் பெருந்திட்டவளாக பணிகளில் 20 பணிகளை ஹெச்.சி.எல். நிறுவனம் செய்து வருகின்றது. அதில் மூன்று பணிகள் நிறைவுற்று திறப்பு விழா நடைபெற்று உள்ளது.

    அதேபோல் ராஜகோபுரம் பணி முடியும் தருவாயில் உள்ளது. வருகிற 20-ந் தேதி 7 கோபுரங்களுக்கு பாலாலயம் நடைபெற உள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வரைவு திட்டத்தின் படி பக்தர்கள் தங்க 122 அறைகள் கட்டப்பட உள்ளன. இதில் 56 பக்தர்கள் தங்கும் அறைகளை ஆய்வு செய்தோம். இந்தப் பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிவுற்று தமிழக முதலமைச்சரால் திறக்கப்பட உள்ளது.

    மொத்தம் 43 பணிகள் என்றாலும் அவை ஒவ்வொன்றாக முடிந்ததும், பக்தர்களின் தேவையை கருத்தில் கொண்டு திறப்பு விழாக்கள் தொடர்ந்து நடைபெறும். வருகிற ஜூலை மாதம் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது ஹெச்.சி.எல். நிறுவனம் எடுத்துக்கொண்ட பணிகள் 60 சதவீதத்தை தாண்டியுள்ளது. கோவில் சார்பில் நடைபெற்று வருகின்ற பணிகள் 43 சதவீதத்தை தாண்டியுள்ளது. பணிகள் அனைத்தும் விரைவாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் 2025-ம் ஆண்டுக்குள் முடிந்துவிடும்.

    இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

    • மழையை பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர்.
    • மழையில் நனைந்தபடியே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காயாமொழி, பரமன்குறிச்சி, தளவாய்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் மழை பெய்தது.

    இதனால் இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.


    கோவில் நடை இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கோவிலில் குவிந்தனர். அவர்கள் மழையை பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர். பின்னர் மழையில் நனைந்தபடியே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    • யானை கட்டப்பட்டிருந்த அறைக்கும், சம்பவம் நடந்த இடத்திற்கும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
    • யானை சகஜ நிலையில் இருப்பதாகவும் விரைவில் பக்தர்களுக்கு ஆசி வழங்க வரும் என கூறப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 18-ந் தேதி கோவில் யானை தெய்வானை தாக்கி யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.

    சம்பவம் நடந்த 10 நாட்களாக அறையில் யானையை கட்டி வைத்து மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று 11-வது நாள் யானையை அறையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். இதற்காக யானையை அதிகாலையிலே குளிப்பாட்டி நவதானிய உணவுகள் வழங்கப்பட்டது.


    யானை விரும்பி சாப்பிடும் பச்சை நாற்று வகை புல் உணவாக கொடுக்கப்பட்டது. அதை தெய்வானை யானை ருசித்து சாப்பிட்டது.

    முன்னதாக யானைக்காக கோவில் ஆனந்த விலாச மண்டபத்தில் சிறப்பு யாகசலை பூஜைகள் நடந்தது. யாக பூஜையில் வைக்கப்பட்ட கலத்தில் உள்ள புனிதநீர் கோவில் யானை தெய்வானை மீது தெளிக்கப்பட்டது. மேலும் யானை கட்டப்பட்டிருந்த அறைக்கும், சம்பவம் நடந்த இடத்திற்கும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    தற்போது யானை சகஜ நிலையில் இருப்பதாகவும் விரைவில் பக்தர்களுக்கு ஆசி வழங்க வரும் என கூறப்படுகிறது.

    • ஆவணி திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களிலும், சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.

    7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.1.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையின் கட்டளை மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

    அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    8-ம் திருவிழாவான நாளை(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    பகல் 10.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வருகின்ற 2-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞான சேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

    • 10-ம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் அம்மன் பூஞ்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிய ருளினார்.

    நிறைவு நாளான 10-ம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    காலை 5.35 மணிக்கு அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளி நான்குரதவீதிகள் வழியாக வலம் வந்து காலை 6.35 மணிக்கு நிலைக்கு வந்தது.

    நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், கண்காணிப்பாளர் அஜித், தலைமை கணக்கர் அம்பலவாணன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், பணியாளர்கள் ஆவுடையப்பன், செல்வகுத்தாலம், முருகேசன், கார்த்திகேயன், பால்ராஜ், மாரிமுத்து, ஜெகன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

    • பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகியது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இன்று ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், விடுமுறை தினத்தையொட்டியும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்த வகையில் இன்று வழக்கமான ஞாயிற்றுக்கிழமை வரும் கூட்டத்தை விட சற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனால் தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகியது.

    வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

    பக்தர்கள் வந்த வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலிசார் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலை ஓரத்திலும், கோவில் அருகில் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் இடத்திலும் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • கடல் அலை கரையை தாண்டி தொட்டு சென்றது.
    • கோவில் முதல் உதவி சிகிச்சை மையத்தில் முதல் சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை நாளான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

    இந்நிலையில் கோவில் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதாரபதி வரை கடல் அலையின் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. கடல் அலை கரையை தாண்டி தொட்டு சென்றது.

    இருந்தபோதிலும் பக்தர்கள் அச்சமின்றி வழக்கம் போல் புனித நீராடினர். இந்நிலையில் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த சேலத்தை சேர்ந்த தங்கம் (52), புதுக்கோட்டையை சேர்ந்த பாகாம்பிரியா (39), கோயம்புத்தூரை சேர்ந்த வெங்கடேசன் (56) ஆகியோர் கடலில் நீராடிய போது அலையின் சீற்றத்தில் சிக்கினர்.

    இதில் அவர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். அவர்களை, கடற்கரை பாதுகாப்பு பணியில் இருந்த சிவராஜா, சுதாகர், ஆறுமுக நயினார், இசக்கிமுத்து, ராமர் ஆகியோர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில் முதல் உதவி சிகிச்சை மையத்தில் முதல் சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான இன்று திருக்கல்யாணம்.
    • அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று மாலையில் நடைபெற்றது.

    சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்திற்கு சென்றார். அங்கு சினம் தணிந்த முருகனுக்கும், வள்ளி-தெய்வானை அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளி, கிரி வீதிவழியாக வலம் வந்து கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதியில் எழுந்தருளினார்.

    அங்கு இருந்த கண்ணாடியில் தெரிந்த சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம் (சாயாபிஷேகம்) நடந்தது. பின்னர் விரதம் இருந்த பக்தர்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தகடுகள் வழங்கப்பட்டன.

    கந்த சஷ்டி திருவிழா 7-ம்நாளான இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 5 மணிக்கு தெய்வானை அம்பாள் கோவிலில் இருந்து தபசு காட்சிக்கு புறப்பட்டார். காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சுவாமி மாலை மாற்றும் நிகழ்ச்சிக்கு புறப்படுகிறார். தெப்பக்குளம் நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்தில் இருந்த அம்பாளுக்கு, சுவாமி காட்சி கொடுக்கிறார். பின்னர் தெற்கு ரதவீதி, மேல ரதவீதி, தெப்பகுளத்தெரு சந்திப்பில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுக்கு ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    நாளை (திங்கட்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம் பல்லக்கிலும் பட்டின பிரவேசமாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    21, 22, 23 ஆகிய 3 நாட்கள் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது. 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • கடற்கரையில் 5அடி உயரத்தில் மணலால் சிவலிங்கம் செய்து சிவ பூஜை.
    • பசுமை சித்தர், வைத்தியலிங்க சுவாமி தலைமையில் நடைபெற்றது.

    உலக மக்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டியும், நல்ல பருவ மழை பெய்ய வேண்டியும், கந்த சஷ்டி திருவிழா மிக சிறப்பாக நடைபெற வேண்டி தீர்த்தமலையை சேர்ந்த பசுமை சித்தர் என்று அழைக்கப்படும் வைத்தியலிங்க சுவாமி தலைமையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் 5அடி உயரத்தில் மணலால் சிவலிங்கம் செய்து சிவ பூஜை செய்யப்பட்டது.

    • திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
    • பக்தர்கள் கடலில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    இலங்கை அருகே கடல் பகுதியில் இன்று நண்பகல் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கொழும்புவில் இருந்து தென்கிழக்கே 1,326 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கொழும்புவிலும் நன்கு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவில் பகுதியில் குவிந்துள்ளனர்.

    இந்நிலையில், கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் கடலில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முருகன் என்றால் 'அழகன்' என்று பொருள்.
    • கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம்.

    முருகன் என்றால் `அழகன்' என்று பொருள். கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம். அழகென்ற சொல்லுக்கு முருகா! உந்தன் அருளின்றி உலகத்தில் பொருளேது! முருகா! என்று ஒரு அற்புதமான பாடல் உண்டு. முருகா என்று ஒருமுறை அழைத்தால் உருகாத மனமும் உருகும், பெருகாத செல்வம் பெருகும்.

    இந்த மாதத்தில் ஆறுபடை வீட்டு முருகனை வழிபட்டால் அளவற்ற அருள் கிடைக்கும். ஆறுபடை வீட்டிற்கும் செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் ஒரு படை வீட்டுடிற்காவது சென்று ஆறுமுகனை வழிபட்டு வரலாம். முருகப்பெருமான் ஆறுமுகங்களைப் பெற்றிருப்பதால் ஒரே நேரத்தில் ஆறு பேருடைய பிரச்சினைகளை அழிக்க வல்லவன். பனிரெண்டு கரங்களை பெற்றிருப்பதால் அள்ளிக்கொடுக்ககும் ஆற்றலைப் பெற்ற வள்ளல். அதனால் தான் நாம் கேட்ட வரத்தை கேட்ட நிமிடத்திலேயே பெற முடிகிறது.

    வேலோடும், மயிலோடும் வந்து நம் வேதனைகளை எல்லாம் மாற்றி, சாதனைபுரிய வைப்பவன் முருகப்பெருமான் என்பதை கும்பிட்டவர்கள் அனுபவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பறந்து வந்தது. அந்த தீப்பொறிகள் கங்கையில் பறந்த போது கங்கையே வற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே ஈஸ்வரனின் ஆணைப்படி சரவண பொய்கையில் ஆறு தாமரை மலர்களின் மீது ஆறு தீப்பொறிகளையும் விட்டனர். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்து விசாகத் திருநாளில் அவதரித்தவன் முருகப்பெருமான்.

    கங்கையில் தோன்றியதால் 'காங்கேயன்' என்ற ஒரு பெயர் வந்தது. சரவண பொய்கையில் தோன்றியதால் தான் 'சரவண பவன்' என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால் 'கார்த்திகேயன்' என்றும் திருநாமம் உண்டாயிற்று.

    திருப்பரங்குன்றம்

    இது முதல் படைவீடாகும். தேவர்களின் துயரம் நீக்கிய முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையைத் திருமணம் செய்து வைத்த இடம் திருப்பரங்குன்றம்.

    திருச்செந்தூர்

    அடுத்ததாக சூரபத்மனை சம்ஹாரம் செய்து முருகப்பெருமான் வெற்றிகண்ட இடம் திருச்செந்தூர். மாமரமாக நின்ற சூரனை முருகப்பெருமான் வேலாயுதத்தால் இரண்டாகப் பிளந்தார். ஒரு பகுதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார் முருகப்பெருமான். சேவலை கொடியாக்கிக்கொண்டான்.

    பழனி

    இது மூன்றாவது படைவீடாக உள்ளது. மாம்பழத்திற்காக மயிலேறிப் பறந்து சென்று உலகைச்சுற்றினார்கள் பிள்ளையாரும், முருகனும். ஆனால் முன்னதாகவே `அன்னையும் பிதாவும் அகிலம்' என்று சொல்லி சிவன்-பார்வதியை சுற்றி வந்து பழத்தை வாங்கிக்கொண்டார் ஆனைமுகப் பெருமான். எனவே கோபத்தோடு முருகன் மலையேறி நின்ற இடம் தான் பழனி.

    சுவாமிமலை

    நான்காம் படை வீடு சுவாமிமலை. தந்தைக்கு மந்திரத்தை உபதேசித்த இடமாகும். பொதுவாக உபதேசிப்பவர்கள் உயர்ந்த இடத்திலும், உபதேசம் பெறுபவர்கள் அதற்கு கீழும் தான் இருக்க வேண்டும். முருகப்பெருமான் சிவபெருமானின் மடியை ஆசனமாக்கிக் கொண்டு அதில் அமர்ந்து சிவன் காதில் உபதேசிப்பது புதுமை. பிரணவத்தின் பொருளை உபதேசித்ததால் தான் `சுவாமிநாதன்' என்ற பெயர் உண்டாயிற்று.

    திருத்தணி

    ஐந்தாம் படை வீடு திருத்தணி. முருகப்பெருமானுக்கு கோபம் தணிந்த இடம் திருத்தணி. சினம் இருந்தால் பணம் வராது. எனவேதான் மனிதர்கள் சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும். என்பார்கள். சிரித்த முகத்தோடு இருந்தால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே கோபம், படபடப்பு இருப்பவரிகள் அது நீங்க இத்திருத்தலம் சென்று வழிபடுவது நல்லது.

    பழமுதிர்சோலை

    ஆறாவது படை வீடு பழமுதிர்சோலை. அவ்வை பாட்டிக்கு அறிவுரை கூறிய இடம் என்பார்கள். 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்று தமிழ்ப்புலமை பெற்ற அவ்வையிடம் வாதிட்ட இடம்தான் இது. இங்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் அறிவாற்றல் பெருகும். ஆராய்ச்சி பட்டம் பெற விரும்புபவர்கள் இங்கு சென்று வந்தால் வெற்றியை வேகமாகப் பெற முடியும்.

    "வேலும் மயிலும், வேலும் மயிலும்` என்று சொல்லி அந்த வேலவனின் ஆறுபடை வீட்டிற்கும் சென்று வாருங்கள். முருகப்பெருமானைக் கைகூப்பித்தொழுதால் நலம் யாவும் வந்து சேரும். படைவீடு செல்லுங்கள். பகை வெல்லும்! பணம் சேரும்!

    ×