search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruchendur"

    • கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான இன்று திருக்கல்யாணம்.
    • அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று மாலையில் நடைபெற்றது.

    சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்திற்கு சென்றார். அங்கு சினம் தணிந்த முருகனுக்கும், வள்ளி-தெய்வானை அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளி, கிரி வீதிவழியாக வலம் வந்து கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதியில் எழுந்தருளினார்.

    அங்கு இருந்த கண்ணாடியில் தெரிந்த சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம் (சாயாபிஷேகம்) நடந்தது. பின்னர் விரதம் இருந்த பக்தர்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தகடுகள் வழங்கப்பட்டன.

    கந்த சஷ்டி திருவிழா 7-ம்நாளான இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 5 மணிக்கு தெய்வானை அம்பாள் கோவிலில் இருந்து தபசு காட்சிக்கு புறப்பட்டார். காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சுவாமி மாலை மாற்றும் நிகழ்ச்சிக்கு புறப்படுகிறார். தெப்பக்குளம் நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்தில் இருந்த அம்பாளுக்கு, சுவாமி காட்சி கொடுக்கிறார். பின்னர் தெற்கு ரதவீதி, மேல ரதவீதி, தெப்பகுளத்தெரு சந்திப்பில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுக்கு ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    நாளை (திங்கட்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம் பல்லக்கிலும் பட்டின பிரவேசமாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    21, 22, 23 ஆகிய 3 நாட்கள் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது. 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • கடற்கரையில் 5அடி உயரத்தில் மணலால் சிவலிங்கம் செய்து சிவ பூஜை.
    • பசுமை சித்தர், வைத்தியலிங்க சுவாமி தலைமையில் நடைபெற்றது.

    உலக மக்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டியும், நல்ல பருவ மழை பெய்ய வேண்டியும், கந்த சஷ்டி திருவிழா மிக சிறப்பாக நடைபெற வேண்டி தீர்த்தமலையை சேர்ந்த பசுமை சித்தர் என்று அழைக்கப்படும் வைத்தியலிங்க சுவாமி தலைமையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் 5அடி உயரத்தில் மணலால் சிவலிங்கம் செய்து சிவ பூஜை செய்யப்பட்டது.

    • திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
    • பக்தர்கள் கடலில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    இலங்கை அருகே கடல் பகுதியில் இன்று நண்பகல் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கொழும்புவில் இருந்து தென்கிழக்கே 1,326 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கொழும்புவிலும் நன்கு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவில் பகுதியில் குவிந்துள்ளனர்.

    இந்நிலையில், கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் கடலில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முருகன் என்றால் 'அழகன்' என்று பொருள்.
    • கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம்.

    முருகன் என்றால் `அழகன்' என்று பொருள். கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம். அழகென்ற சொல்லுக்கு முருகா! உந்தன் அருளின்றி உலகத்தில் பொருளேது! முருகா! என்று ஒரு அற்புதமான பாடல் உண்டு. முருகா என்று ஒருமுறை அழைத்தால் உருகாத மனமும் உருகும், பெருகாத செல்வம் பெருகும்.

    இந்த மாதத்தில் ஆறுபடை வீட்டு முருகனை வழிபட்டால் அளவற்ற அருள் கிடைக்கும். ஆறுபடை வீட்டிற்கும் செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் ஒரு படை வீட்டுடிற்காவது சென்று ஆறுமுகனை வழிபட்டு வரலாம். முருகப்பெருமான் ஆறுமுகங்களைப் பெற்றிருப்பதால் ஒரே நேரத்தில் ஆறு பேருடைய பிரச்சினைகளை அழிக்க வல்லவன். பனிரெண்டு கரங்களை பெற்றிருப்பதால் அள்ளிக்கொடுக்ககும் ஆற்றலைப் பெற்ற வள்ளல். அதனால் தான் நாம் கேட்ட வரத்தை கேட்ட நிமிடத்திலேயே பெற முடிகிறது.

    வேலோடும், மயிலோடும் வந்து நம் வேதனைகளை எல்லாம் மாற்றி, சாதனைபுரிய வைப்பவன் முருகப்பெருமான் என்பதை கும்பிட்டவர்கள் அனுபவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பறந்து வந்தது. அந்த தீப்பொறிகள் கங்கையில் பறந்த போது கங்கையே வற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே ஈஸ்வரனின் ஆணைப்படி சரவண பொய்கையில் ஆறு தாமரை மலர்களின் மீது ஆறு தீப்பொறிகளையும் விட்டனர். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்து விசாகத் திருநாளில் அவதரித்தவன் முருகப்பெருமான்.

    கங்கையில் தோன்றியதால் 'காங்கேயன்' என்ற ஒரு பெயர் வந்தது. சரவண பொய்கையில் தோன்றியதால் தான் 'சரவண பவன்' என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால் 'கார்த்திகேயன்' என்றும் திருநாமம் உண்டாயிற்று.

    திருப்பரங்குன்றம்

    இது முதல் படைவீடாகும். தேவர்களின் துயரம் நீக்கிய முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையைத் திருமணம் செய்து வைத்த இடம் திருப்பரங்குன்றம்.

    திருச்செந்தூர்

    அடுத்ததாக சூரபத்மனை சம்ஹாரம் செய்து முருகப்பெருமான் வெற்றிகண்ட இடம் திருச்செந்தூர். மாமரமாக நின்ற சூரனை முருகப்பெருமான் வேலாயுதத்தால் இரண்டாகப் பிளந்தார். ஒரு பகுதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார் முருகப்பெருமான். சேவலை கொடியாக்கிக்கொண்டான்.

    பழனி

    இது மூன்றாவது படைவீடாக உள்ளது. மாம்பழத்திற்காக மயிலேறிப் பறந்து சென்று உலகைச்சுற்றினார்கள் பிள்ளையாரும், முருகனும். ஆனால் முன்னதாகவே `அன்னையும் பிதாவும் அகிலம்' என்று சொல்லி சிவன்-பார்வதியை சுற்றி வந்து பழத்தை வாங்கிக்கொண்டார் ஆனைமுகப் பெருமான். எனவே கோபத்தோடு முருகன் மலையேறி நின்ற இடம் தான் பழனி.

    சுவாமிமலை

    நான்காம் படை வீடு சுவாமிமலை. தந்தைக்கு மந்திரத்தை உபதேசித்த இடமாகும். பொதுவாக உபதேசிப்பவர்கள் உயர்ந்த இடத்திலும், உபதேசம் பெறுபவர்கள் அதற்கு கீழும் தான் இருக்க வேண்டும். முருகப்பெருமான் சிவபெருமானின் மடியை ஆசனமாக்கிக் கொண்டு அதில் அமர்ந்து சிவன் காதில் உபதேசிப்பது புதுமை. பிரணவத்தின் பொருளை உபதேசித்ததால் தான் `சுவாமிநாதன்' என்ற பெயர் உண்டாயிற்று.

    திருத்தணி

    ஐந்தாம் படை வீடு திருத்தணி. முருகப்பெருமானுக்கு கோபம் தணிந்த இடம் திருத்தணி. சினம் இருந்தால் பணம் வராது. எனவேதான் மனிதர்கள் சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும். என்பார்கள். சிரித்த முகத்தோடு இருந்தால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே கோபம், படபடப்பு இருப்பவரிகள் அது நீங்க இத்திருத்தலம் சென்று வழிபடுவது நல்லது.

    பழமுதிர்சோலை

    ஆறாவது படை வீடு பழமுதிர்சோலை. அவ்வை பாட்டிக்கு அறிவுரை கூறிய இடம் என்பார்கள். 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்று தமிழ்ப்புலமை பெற்ற அவ்வையிடம் வாதிட்ட இடம்தான் இது. இங்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் அறிவாற்றல் பெருகும். ஆராய்ச்சி பட்டம் பெற விரும்புபவர்கள் இங்கு சென்று வந்தால் வெற்றியை வேகமாகப் பெற முடியும்.

    "வேலும் மயிலும், வேலும் மயிலும்` என்று சொல்லி அந்த வேலவனின் ஆறுபடை வீட்டிற்கும் சென்று வாருங்கள். முருகப்பெருமானைக் கைகூப்பித்தொழுதால் நலம் யாவும் வந்து சேரும். படைவீடு செல்லுங்கள். பகை வெல்லும்! பணம் சேரும்!

    • குழந்தை வரம் கொடுப்பதில் பேச்சியம்மன் முதன்மையான தெய்வம்.
    • 21 பந்தி தெய்வங்களில் சுடலைமாடன் இடம் பெறுவதில்லை.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காயாமொழி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற சுடலை மாடன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பேச்சியம்மன், குளிக்கரை பேச்சியம்மன், பிரம்ம சக்தி, இசக்கியம்மன், முண்டன்சாமி. செங்கடசாமி, கட்டேரி பெருமாள், வைணப்பெருமாள், ஐயம்பந்தி, சிவனந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலின் தலவிருட்சம் காரை மரமாகும்.

    தல வரலாறு

    ஒரு காலத்தில் பாண்டிய நாட்டை சேர்ந்த வல்லராஜா என்ற மன்னன். தன்னுடைய ஆட்சியில் பலரையும் கொடுமைப்படுத்தி வந்தான். மக்கள் மட்டுமின்றி, ரிஷிகளும், முனிவர்களும் கூட அவனால் துன்பப்பட்டனர். இந்த நிலையில், ஒரு முனிவர் மூலம் வல்ல ராஜா சாபத்தைப் பெற்றான்.

    இவனுக்கு பிறக்கும் குழந்தை பிரசவம் ஆனதும். அந்த குழந்தையின் உடல் உடனே பூமியைத் தொட்டு விட்டால் அவன் அழிந்து விடுவான். அவனது நாடும் அழிந்துவிடும். மாறாக அந்த குழந்தை பூமியைத் தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால், அதற்கு பிறகு ஒன்றும் ஆகாது என்பது மன்னனுக்கு ஏற்பட்ட சாபம்.

    இதற்கிடையே கர்ப்பவதியான வல்லராஜாவின் மனைவிக்கு பிரசவ வலி உண்டானது. மன்னனுக்கு இருந்த சாபத்தால், அவன் மனைவிக்கு பிரசவம் பார்க்க எவரும் முன்வரவில்லை. பிறக்கும் குழந்தையும் நலமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தானும் அழியாமல் இருக்க வேண்டும் என கவலை அடைந்த மன்னன், தானே ஊருக்குள் சென்று பிரசவம் பார்க்கும் பெண்ணைத் தேடினான்.

    அப்போது அவன் முன்பாக வயதான பெண் வடிவத்தில் பேச்சியம்மன் தென்பட்டாள். அவள் தெய்வப் பிறவி என்பதை அறியாத மன்னன். அவளது உதவியை நாடினான். அதற்கு அந்த அன்னை, நான் உன் மனைவிக்கு பிரசவம் பார்த்து அந்த குழந்தை பூமியை தொடாதபடி பார்த்துக் கொள்கிறேன். அதற்கு எனக்கு தேவையானதை தர வேண்டும்` என்றாள். மன்னனும் கேட்டதைத் தருவ தாக வாக்களித்தான்.

    அதன்படி மன்னனின் மனைவிக்கு பிரசவம் பார்த்த பேச்சியம்மன். அந்த குழந்தை பூமியை தொடாதபடி பார்த்துக் கொண்டார். ஒரு நாள் முடிந்ததும், மன்னன் தன் வேலையை காட்டினான். பேச்சியம்மன் கேட்ட எதையும் கொடுக்காமல், அவரை கொல்ல முயன்றான்.

    ஆனால் தன் சுய உருவத்தை காட்டிய பேச்சியம்மன், மன்னனையும் அவன் மனைவியையும், வம்சாவளியையும் அழித்து அங்குள்ள மக்களை காப்பாற்றினாள். இதனால் மக்கள் அனைவரும் அந்த அன்னையை கைகூப்பித் தொழுதனர்.

    இதையடுத்து பேச்சியம்மன் தன்னுடைய கோபம் தணிந்து சாந்தமானாள். பின்னர், 'நான் காளியின் அவதாரம். என்னை வணங்கி வந்தால், நான் குடிகொள்ளும் ஊரை காப்பேன், அவரவர் வீடுகளில் உள்ள கர்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகவும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் நன்கு வளரவும் உதவுவேன், அனைவருக்கும் பாதுகாவலாக இருப்பேன்' என்று உறுதியளித்தாள் என்கிறது தல வரலாறு.

    21 பந்தி தெய்வங்கள்

    21 பந்தி தெய்வங்களில் பேச்சியம்மன் மிக முக்கியமான வன தேவதையாக விளங்குகிறார். சில கோவில்களில் 21 பந்தி தெய்வங்களில் சுடலைமாடன் இடம் பெறுவதில்லை. ஆனால் கண்டிப்பாக பேச்சியம்மன் இடம் பெறுகிறார். ஏனெனில் சக்தி அம்சத்தில் சிவன் அடக்கம் என்பதால். பேச்சியம்மன் எல்லா 21 பந்தி தெய்வங்களில் முதன்மையான காவல்காரியாக மக்களுக்கு அருள்புரிகிறார்.

    உருண்ட கண்களும், நீண்ட நாக்கும். விரித்த சடையும். தலையில் அக்னி கிரீடமும் கொண்டு பேச்சியம்மன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மேலும், இவரது கையில் திரிசூலம், பிரம்பு, கபால பாத்திரம், கத்தி, வாள், சீலைப்பிள்ளை, கிலுக்கு, உடுக்கை, மண்டை ஓடு, சாட்டை இருக்கும்.

    21 பந்தியில் உள்ள மற்ற தெய்வங்கள் இந்த பேச்சி அம்மனின் உத்தரவை ஏற்று நடப்பார்கள். சுடலைமாடன் தனது தாயான பேச்சியம்மனிடம் உத்தரவு பெற்று தான் வேட்டைக்குச் செல்வார். பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றை கருவறுக்க உருவானவள் தான் வனப்பேச்சியம்மன். பல கோவில்களில் வனப்பேச்சி அம்மனுக்கு காவலாக சுடலைமாடனும், கருப்பனும் தான் இருக்கிறார்கள்.

    குழந்தை வரம் கொடுப்பதில் பேச்சியம்மன் முதன்மையான தெய்வமாக விளங்குகிறார். எனவே தான் குழந்தை இல்லாத தம்பதியினர் பேச்சியம்மனை மனமுருகி வணங்கி குழந்தை பிறந்தவுடன் நேர்த்திக்கடனாக மரத்தொட்டில் கட்டி சீலைப்பிள்ளை மற்றும் குழந்தை பொம்மை வாங்கி வைக்கின்றனர். குழந்தைகள் பேச்சாற்றல் மிகுந்து விளங்க நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவும் பேச்சியம்மனை வழிபடுகின்றனர்.

    • நட்சத்திர விரதம் இருந்தால் உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும்.
    • திதி விரதமிருந்தால் விதி மாறும்.

    பொதுவாகவே விரதங்கள் மூன்று வகைப்படும். ஒன்று வார விரதம், மற்றொன்று திதி விரதம். மூன்றாவது நட்சத்திர விரதமாகும். 'வார விரதத்தை மேற்கொண்டால் சீரான வாழ்க்கை அமையும். நட்சத்திர விரதம் இருந்தால் உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும். திதி விரதமிருந்தால் விதி மாறும். எனவே ஒருவருக்கு விதிக்கப்பட்ட "விதி" மாற வேண்டுமானால் திதி பார்த்து விரதம் இருந்து அதற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.

    மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு என்று, விதியை இறைவன் மாற்றியமைத்த கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதைப்போல நமக்கு விதிக்கப்பட்ட விதி எதுவாக இருந்தாலும் அதை மாற்றக்கூடிய ஆற்றல் விரதங்களுக்கு உண்டு. உண்ணா விரதம் இருந்து இந்த நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் மகாத்மா காந்தி, உண்மையாக நாம் விரதம் இருந்து உள்ளன்போடு வழிபட்டால் சுகங்களை வழங்குவார் முருகப்பெருமான்.

    "சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்பது நம் முன்னோர் வாக்கு. உடல் ஆரோக்கியத்திற்கு சுக்கு மருந்தாக இருப்பது போல உள்ளம் சீராக இருக்க வள்ளல் முருகனின் வழிபாடு நமக்கு கைகொடுக்கின்றது. அந்த முருகப்பெருமானை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். இருந்தாலும் அவருக்கு உகந்த நாளில் வழிபடுகின்ற பொழுது எண்ணற்ற நற்பலன்கள் இதயம் மகிழும் விதம் நமக்கு வந்து சேருகின்றது.

    மனித வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுவது இரண்டு விழாக்கள். ஒன்று திருமண விழா, மற்றொன்று வாரிசு பிறக்கும் திருநாள். அங்ஙனம் வாரிசு உண்டாக வள்ளல் முருகனை விரதம் இருந்து வழிபட வேண்டிய திருநாள் கந்தசஷ்டி விழாவாகும். முருகனுக்கு உகந்த விரதங்களில் ஒன்று சஷ்டி விரதமாகும். அந்த சஷ்டியை கந்த சஷ்டி என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது கந்தனுக்குரிய சஷ்டி, கந்தசஷ்டி ஆகும்.

    முருகனுக்குரிய திதி விரதங்களில் முக்கியமானது சஷ்டி திதி. "சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பது பழமொழி. இந்த பழமொழிதான் நாளடைவில் மருவி "சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்று மாற்றம் பெற்றுவிட்டது.

    திருமண வீடுகளில் உணவு பரிமாறும் பொழுது சாம்பார், கூட்டு, போன்றவைகள் குறைவாக இருந்தால் கரண்டியில் எடுக்கும் போது குறைவாகவே வரும். அப்பொழுது சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்று சொல்வதை நாம் கேட்கலாம். ஆனால் அதன் உண்மையான விளக்கம். `சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால் 'அகப்பை எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதைக் குறிப்பதாகும்.

    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர். கந்த சஷ்டி விழாக்காலத்தில் ஆறு நாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள் சஷ்டியன்று முழுமையாக விரதம் இருப்பது நல்லது.

    இந்த ஆண்டு தீபாவளிக்கு அடுத்த நாள் கந்த சஷ்டி ஆரம்பமாகின்றது. பிறகு ஆறாவது நாள் கார்த்திகை 2-ந்தேதி (18.11.2023) சூரசம்ஹார நிகழ்வு அதாவது கந்த சஷ்டி விழா வருகின்றது. அன்றைய தினம் சூரசம்ஹாரம் முடித்து வெற்றிக் களிப்போடு இருக்கும் முருகப்பெருமானை வழிபட்டு இனிப்பு பொருள் உண்டு விரதத்தை நிவர்த்தி செய்வது நல்லது.

    முருகப்பெருமான் செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக புராண வரலாறு சொல்வதால், அன்றையதினம் திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட செல்கின்றனர். திருச்செந்தூரின் கடல் ஓரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம். தேடித் தேடி வருவோர்க் கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் என்று கவியரசு கண்ணதாசன் வர்ணித்திருப்பார்.

    எனவே அப்படிப்பட்ட தெய்வாம்சம் நமக்கு கிடைக்க திருவருள் கைகூட, குருபீடமாக வீற்றிருக்கும் திருச்செந்தூருக்கு சென்று வழிபட்டு வரலாம். அங்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் முருகப்பெருமான் ஆலயங்களுக்குச் சென்று ஆறுமுகப்பெருமானை வழிபட்டு வரலாம்.

    வீட்டிலுள்ள பூஜை அறையிலும் ஆறுமுகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் கூடிய தெய்வ படத்தை வைத்தும் வழிபட்டு வரலாம். புத்திரப்பேறு மட்டுமல்லாமல் புகழ், கீர்த்தி, செல்வாக்கு, போன்ற பதினாறு பேறுகளும் பெற்று செல்வ வளத்தோடு வாழ இந்த வழிபாடு கைகொடுக்கின்றது.

    கந்தன்பெயரை எந்தநாளும் சொல்லிப் பாருங்கள்

    கவலையெல்லாம் தீரும் இது உண்மைதானுங்க!

    செந்தில்வேலன் புகழ்படித்தால் செல்வம் சேருங்க!

    தேசமெல்லாம் கொடிபறக்கும் வாழ்வைப் பாருங்க!

    என்று கவிஞர் பெருமக்கள் வள்ளி மணாளனை வர்ணித்து கவசம் பாடியிருக்கின்றார்கள்.

    • சுப்பிரமணிய சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா.
    • தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    விழாவின் 7-ம் திருநாளன்று சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார். மாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    8-ம் நாள் திருவிழாவில் காலையில் சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாகவும், பிற்கபலில் பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாகவும் எழுந்தருளினார். 9-ம் திருநாளான நேற்று மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது.

    பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் புறப்பட்டு வெளிவீதி நான்கிலும் பவனி வந்து நிலையை வந்து சேர்ந்தது. அதைத்தொடர்ந்து வள்ளியம்மாள் எழுந்தருளிய தேர் வெளிவீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேர்ந்தது.

    இதில் திருச்செந்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி வஷித்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், செந்தில் முருகன், கோவில் கண்காணிப்பாளர்கள் ஆனந்தராஜ், செந்தில் வேல்முருகன், டாக்டர் பாலசுப்ரமணிய ஆதித்தன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலை அடைகிறார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • இங்குள்ள கடல் தீர்த்தத்தில் “கங்கை பூஜை” நடைபெறும்.
    • திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார்.

    திருச்செந்தூரில் தினமும் செந்திலாண்டவரை, உச்சிக்காலத்தில் கங்காதேவி வழிபடுவதாக ஐதீகம்.

    இந்த வேளையில் இங்குள்ள கடல் தீர்த்தத்தில் "கங்கை பூஜை" நடைபெறும்.

    முருகனுக்கு பூஜை முடிந்ததும், ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் நைவேத்திய அன்னத்தை எடுத்துக் கொண்டு, மேள தாளம் முழங்க கடற்கரைக்குச் செல்லும் அர்ச்சகர்கள், அன்னத்தை கடலில் கரைத்து விட்டு சந்நிதி திரும்புபவர்.

    கடல் தீர்த்தத்தில் ஆவிர்பவித்திருக்கும் கங்காதேவிக்கு, முருகப் பெருமானே இவ்வாறு பிரசாதம் கொடுத்து அனுப்புவதாகச் சொல்கின்றனர்.

    தீபாவளிப் பண்டிகை அன்று நாம் புத்தாடை அணிந்து கொண்டாடுவது போல், திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார்.

    தீபாவளி அன்று காலையில், முருகனுக்கும், கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தனக் காப்பு இடுவார்கள்.

    ஸ்ரீ கிருஷ்ணர், நரகாசுரனை அழித்த நாளில் உடலும் உள்ளமும் குளிர வேண்டும் என்பதாலும், தீபாவளிக்கு மறுநாள் சஷ்டி விரதம் துவங்குவதாலும், இவ்வாறு சந்தனக் காப்பு இடுகிறார்கள்.

    இந்த தினத்தில் முருகன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான புத்தாடைகளை, வெள்ளிப் பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அணிவிக்கிறார்கள்.

    திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த முருகனுக்கு,

    இந்திரன் தன் மகள் தெய்வானையை திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொடுத்தார்.

    திருச்செந்தூர், தன் மருமகன் போரிட்டு வென்ற தலம் என்பதால் இங்கு இந்திரனே, தீபாவளிக்கு புத்தாடை சீர் கொடுப்பதாக ஐதீகம்.

    • ஆறு விதமான ஆதாரங்களை நமக்கு வழங்கும் என்பது நம்பிக்கை.
    • பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆறு விதமான ஆதாரங்கள் தேவை.

    நமக்கு வீடு இருப்பது போல முருகனுக்குப் படை வீடுகள் இருக்கின்றன. அவற்றை ஆறுபடை வீடு என்று வர்ணிப்பது வழக்கம். அந்த ஆறுபடை வீடுகளும் ஆறு விதமான ஆதாரங்களை நமக்கு வழங்கும் என்பது நம்பிக்கை. வாழ்க்கை வளம்பெற பொருளாதாரமும், அருளாதாரமும் நமக்குத் தேவை. அருணகிரிநாத பெருமான் முருகப்பெருமானை நோக்கிப் பாடும்பொழுது, 'அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியால் இடைஞ்சல் களைவானேய' என்று குறிப்பிடுவார்.

    ஒரு மனிதன் பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆறு விதமான ஆதாரங்கள் தேவை. அவை ஆரோக்கியம், நல்ல உறவு, பொருளாதாரம், அபயம் எனப்படும் பாதுகாப்பு ஆற்றல், ஆளுமைத்திறன், நிறைவான ஞானம். இந்த ஆறு ஆதாரங்களையும் முறையாக சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர், திருத்தணி, பழநி ஆகிய ஆறுபடை வீடுகளுக்கும் ஜென்ம நட்சத்திரமன்று அல்லது செவ்வாய்க்கிழமை அன்று சென்று வழிபட்டு வந்தால் பெறலாம்.

    • திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது.
    • ஏராளமானவர்கள் திருப்புகழைப் பாராயணம் செய்து நல்ல வரன் பெற்றுள்ளனர்.

    திருப்புகழ் பாடினால் திருமணம்

    திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது.

    இதில் "விறல் மாரனைந்து" எனும் திருப்புகழை தினமும் 6 தடவை பாராயணம் செய்து வந்தால் உடனே தடைகள் விலகி திருமணம் நடைபெறும்.

    திருமுருக கிருபானந்த வாரியார் அறிவுறுத்தலின் பேரில் ஏராளமானவர்கள் தினமும் திருச்செந்தூர் திருப்புகழைப் பாராயணம் செய்து நல்ல வரன் பெற்று கல்யாணம் செய்துள்ளனர்.

    சிறப்புமிகு அந்த திருப்புகழ் இதோ

    விறல் மாரனைந்து மலர்வாளி சிந்த

    மிகவானி லிருந்து வெயில் காய

    மிதவாடை வந்து தழல்போல வொன்ற

    வினைமாதர் தந்தம் வசை கூற

    குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட

    கொடி தான துன்ப மயில்தீர

    குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து

    குறை தீர வந்து குறுகாயோ

    மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து

    வழிபாடு தந்த மதியாளா

    மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச

    வடிவேலெ றிந்த அதிதீரா

    அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு

    மடியாரி டைஞ்சல் களைவோனே

    அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து

    அலைவாயு கந்த பெருமாளே!


    • ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.
    • குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை கொள்ளவேண்டும்.

    சஷ்டி விரத நியதிகள் II

    இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது.

    மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப "கந்தசஷ்டி" விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.

    விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கல்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.

    ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் இன்ன நோக்கத்துக்காக இன்னமுறைப்படி இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகின்றேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம் செய்து) ஆலயம் சென்று சங்கல்பப்பூர்வமாக அர்ச்சினை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும்.

    குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை கொள்ளவேண்டும்.

    உரிய காலம் முடிந்ததும் விரத உத்தியாபனம் செய்து விரதத்தை நிறுத்த வேண்டும்.

    • “ஓம்‘ என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும்.
    • பானகமென்பது சர்க்கரை, தேசிக்காய், இளநீர், முதலியன கலந்து தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம் ஆகும்.

    சஷ்டி விரத நியதிகள்

    கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன.

    இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் அதிகாலை எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக் கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாபட்சர மந்திரத்தை எழுத வேண்டும்.

    "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும்.

    கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும்.

    தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும்.

    தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் மட்டும் அருந்தி இருப்பது மிகவும் சிறப்பான விரதமாகும்.

    பானகமென்பது சர்க்கரை, தேசிக்காய், இளநீர், முதலியன கலந்து தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம் ஆகும்.

    பட்டினி கிடக்கும் வயிற்றினுள் வெளிப்படும் அதிக சக்திமிக்க வெப்பம், வாய்வு, பித்தம், இவற்றைத் தணித்து உடற்சமநிலையைப் பேணுவதற்கும், பசி, தாகம், இவற்றை ஓரளவு தணிக்கவும் இது உதவுகிறது.

    ×