search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமதாஸ்"

    • சமூகநீதிதான் எங்களது லட்சியம். அதற்காக எந்த கூட்டணியில் இருந்தாலும் போராடுவோம்.
    • அ.தி.மு.க.தான் எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அளித்துள்ள ஒரு பேட்டியில் தி.மு.க.-அ.தி.மு.க. இரு கட்சிகளையும் கடுமையாக தாக்கி உள்ளார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டணி அமைத்து இருப்பதாகவும் அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கேள்வி:- கூட்டணி அமைப்பது தொடர்பாக உங்களுக்கும், உங்களது தந்தைக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதே?

    பதில்:- அது அ.தி.மு.க. உருவாக்கிய புரளி. நானும், எனது தந்தையும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பதை எப்போதோ தீர்மானித்து விட்டோம். அ.தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவே இல்லை.

    எனது தந்தையை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசிய பிறகுதான் இந்த புரளி கிளம்பியது.

    கேள்வி:- பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க என்ன காரணம்?

    பதில்:- 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் கூட்டணி அமைத்து பட்டதுபோதும். இதை கருத்தில் கொண்டுதான் பாரதிய ஜனதா கட்சியுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

    கேள்வி:- அடிக்கடி கூட்டணி மாறுவதால் உங்கள் கட்சி மீது குற்றச்சாட்டுகள் எழுப்பபடுமே?

    பதில்:- எந்த கூட்டணி என்றாலும் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக பாடுபட்டு உள்ளது. இதை எந்த கட்சியும் மறுக்க இயலாது. நாங்களாக ஒருபோதும் கூட்டணியை மாற்றிக் கொள்வது இல்லை. உண்மையில் தி.மு.க., அ.தி.மு.க.வால்தான் நாங்கள் கூட்டணியில் மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.

    தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.தான் எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுள்ளது. எங்களது கூட்டணி நிச்சயம் அதிகாரத்துக்கு வரும்.

    கேள்வி:- மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக உள்ளது. அது உங்கள் கொள்கைக்கு மாறுபட்டதாக கருதப்படுகிறதே?

    பதில்:-சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருப்பதாக மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிதான் சில மாநிலங்களில் ஆதாயத்துக்காக கணக்கெடுப்பு பற்றி பேசியது.

    தற்போதைய கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் தான் மூத்த தலைவர். அவர் பிரதமரிடம் பேசி சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி நல்ல தீர்வு காண்பார்.

    சமூகநீதிதான் எங்களது லட்சியம். அதற்காக எந்த கூட்டணியில் இருந்தாலும் போராடுவோம்.

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    பதில்:- எங்களது கூட்டணிக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். அது 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மாற்று அணி உருவெடுக்க வாய்ப்பை ஏற்படுத்தி தரும். அந்த தேர்தலின் போது நாங்கள் மிக பிரமாண்டமான அணியை உருவாக்குவோம்.

    2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக இப்போதே என்னால் சொல்ல முடியும்.

    கேள்வி:- பா.ம.க. உங்களை முன் நிறுத்தினாலும் தமிழகம் முழுக்க ஆதரவு கிடைக்குமா?

    பதில்:- வன்னியர் சங்கம் அடிப்படையில்தான் பா.ம.க. உருவானது. ஆனால் நாளடைவில் அதில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு தலித்தான் பொதுச் செயலாளராக இருக்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டது.

    இப்போது பா.ம.க. மீதான மக்கள் எண்ணம் மாறி வருகிறது. தமிழக மக்கள் அன்புமணியை ஒரு வன்னியர் தலைவராக மட்டும் பார்ப்பது கிடையாது. படித்தவர், டாக்டர், நாட்டுக்கு நல்லது செய்பவர் என்ற கோணத்தில்தான் பார்க்கிறார்கள்.

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்பட்சத்தில் மேல்சபை எம்.பி.யாக இருக்கும் நீங்கள் மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளதா?

    பதில்:- இல்லை. பா.ஜ.க. தலைவர்களுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசிய போது மத்திய மந்திரி பதவி பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை. அது அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் மாநில அரசியலில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன்.

    எனது மனைவி சவுமியா தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். அவர் மிக சிறந்த எம்.பி.யாக திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நமது கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.
    • இனிவரும் நாட்களில் கடுமையாக உழைத்து வெற்றிகளை சாத்தியமாக்குங்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றிகளைக் குவிப்பதற்காக களத்தில் நீ கொடுக்கும் உழைப்பையும், நீ காட்டும் உறுதியையும் நினைத்து மனம் நெகிழ்ந்து போய், உன்னை மேலும் ஊக்கப்படுத்துவதற்காகத் தான் இந்த மடலை நான் வரைகிறேன்.

    பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை கண்ட மக்களவைத் தேர்தல்களில் இருந்து இந்தத் தேர்தல் முற்றிலும் மாறானது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை நாங்கள் தான் நிர்ணயிப்போம் என்று மார்தட்டி வந்த அ.தி.மு.க.வையும், திமுகவையும் ஒதுக்கி வைத்து விட்டு, புதிய அணியை அமைத்து, புதிய பயணத்தை நாம் தொடங்கியிருக்கிறோம்.

    இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று நான் கூறுவதற்கு பதவிகளை பிடிக்க வேண்டும் என்ற ஆசை காரணமல்ல. மாறாக, தடைப்பட்டுக் கிடக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்ற வேட்கை தான் காரணம் ஆகும்.


    தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையில் தான் போட்டி என்று இரு கட்சிகளும் மூச்சுக்கு முந்நூறு முறை கூறிக்கொள்கின்றன. ஆனால், அவர்களின் அடிமனதில் பா.ம.க. மற்றும் பாரதிய ஜனதா கூட்டணியைக் கண்டு பெரும் அச்சம் நிலவுகிறது. அவர்களின் அச்சத்தை நிரந்தரமாக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்; நமது கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இதுவே நமது இலக்கு.

    அந்த இலக்கை அடைவதற்காக இப்போது கடுமையாக உழைக்கும் பாட்டாளி இளஞ்சிங்கங்கள் அனைவரும் இனி இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். நமது வேட்பாளர்களாலும், கூட்டணியின் வேட்பாளர்களாலும் அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கும் செல்வது சாத்தியமல்ல. நீங்கள் தான் காடுகளையும், மேடுகளையும், ஆறுகளையும், மலைகளையும் கடந்து சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும்.

    அந்த ஆதரவின் உதவியுடன் 40 இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது என்ற செய்தி தேனாக நம் செவிகளில் பாய வேண்டும். அதற்காக இனிவரும் நாட்களில் கடுமையாக உழைத்து வெற்றிகளை சாத்தியமாக்குங்கள். அது தான் எனது 45 ஆண்டுகால பொதுவாழ்க்கைப் பணிகளுக்கு நீங்கள் அளிக்கும் அங்கீகாரமாக அமையும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதை கலைஞர் எதிர்க்காமல் இருந்ததற்கு காரணங்கள் உள்ளன.
    • இந்த சிக்கலில் தி.மு.க. மற்றும் காங்கிரசின் நிலைப்பாடுகள் முரண்பாடுகளின் மூட்டையாகவே உள்ளது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்தது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இதை ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நடத்த நிகழ்வாக கடந்து சென்று விட முடியாது. கச்சத்தீவு அன்று தாரை வார்க்கப்பட்டதன் விளைவுகளை இன்று வரை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த 800-க்கும் கூடுதலான மீனவர்கள் இலங்கைப் படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், 6184 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும், 1175 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதற்கும் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது தான் காரணம். அதற்கு காரணமானவர்களை எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாது.

    கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதை அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி, தெரிந்தே அனுமதித்தார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் முடிவை இந்திரா தலைமையிலான மத்திய அரசு எடுத்தபோது கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் தான் கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந்தேதி இலங்கையிலும், 28-ந்தேதி டெல்லியிலும் கையெழுத்திடப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி இதைத்தடுக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    ஆனால், இந்த முடிவை திமுக எதிர்ப்பதாக காட்டிக் கொள்வதற்காக, கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கு அடுத்த நாள் 29.6.1974 அன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி பெயருக்கு ஒரு தீர்மானம் நிறைவேற்றினார். அதன்பின் 21.8.1974 அன்று தமிழக சட்டசபையில் கச்சத்தீவு தொடர்பாக மத்திய அரசுக்கு வலிக்காமல் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதை கலைஞர் எதிர்க்காமல் இருந்ததற்கு காரணங்கள் உள்ளன. அப்போதைய கலைஞர் அரசு மீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டன. எம்.ஜி.ஆரும், இடதுசாரிகளும் கலைஞருக்கு எதிராக ஊழல் புகார்களை மத்திய அரசிடம் அளித்து அதனடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதனால் கருணாநிதி அரசை எந்த நேரமும் கலைத்து விட்டு ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்துவோம் என மத்திய அரசு மிரட்டி வந்தது. அதற்கு பயந்து தான் கருணாநிதி மவுனமாக இருந்து விட்டார் என்று அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றை இப்போதும் மறுக்க முடியாது.

    இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி இப்போதும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அது நல்லுணர்வுடன் கூடிய பரிமாற்றம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகிறார். ஆனால், கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதை எதிர்ப்பதாக இப்போதும் தி.மு.க. கூறுகிறது. இந்த சிக்கலில் தி.மு.க. மற்றும் காங்கிரசின் நிலைப்பாடுகள் முரண்பாடுகளின் மூட்டையாகவே உள்ளது.

    நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டது, கல்வி உள்ளிட்ட மாநில அரசுப் பட்டியலில் இருந்த அதிகாரங்கள் காங்கிரஸ் அரசால் பொதுப்பட்டிய லுக்கு மாற்றப்பட்டது, 1½ லட்சம் அப்பாவித் தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டது என பல விவகாரங்களில் தி.மு.க.-காங்கிரசின் நிலைப்பாடுகள் முரண்பாடுகளின் உச்சமாகவே உள்ளன. ஆனாலும், கூடா நட்பு கேடாய் முடியும் என்று விமர்சிக்கப்பட்ட காங்கிரசுடன் தி.மு.க. இப்போதும் கூட்டணி வைத்திருப்பதன் மர்மம் என்ன? மு.க. ஸ்டாலின் விளக்குவாரா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் தனக்குத் தானே வினா எழுப்பி விடை காண வேண்டும்.
    • வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சமூகநீதி குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடி ஏற்றுக்கொள்வாரா? அதற்கான உத்தரவாதத்தை நரேந்திர மோடியிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பெற்றிருக்கிறதா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வினா எழுப்பியிருக்கிறார்.

    2004-ம் ஆண்டில் சமூகநீதிக் கொள்கையில் பாட்டாளி மக்கள் கட்சி எந்த அளவு உறுதியுடன் இருந்ததோ, அதே உறுதியுடன் தான் இப்போதும் உள்ளது. பாராளுமன்றத்தில் அப்போதிருந்த அளவுக்கு வலிமையை இப்போதும் பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கொள்கை வலிமையையும், அதிகார வலிமையையும் பயன்படுத்தி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்ய பா.ம.க.வால் முடியும்.

    பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நீதிபதி ரோகிணி ஆணையத்தை அமைத்து, அதன் அறிக்கையை பெற்ற பிரதமர் நரேந்திர மோடி இக்கோரிக்கையையும் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.

    இது ஒருபுறம் இருக்க, சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் தனக்குத் தானே வினா எழுப்பி விடை காண வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக அளித்த உத்தரவாதத்தை இரு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றினோமா? என்பதை நேர்மையுடனும், மனசாட்சியுடனும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால் வன்னியர்களுக்கு எப்போதோ இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், பிற சமூகங்களின் கோரிக்கைகளைக் கேட்டுக் கேட்டு நிறைவேற்றும் மு.க. ஸ்டாலினுக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் மனம் வரவில்லை. ஆனால், மேடைகளில் மட்டும் சமூகநீதியில் அக்கறைக் கொண்டவர் போல நடிக்கிறார். மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி விட்டு, அதன்பிறகு சமூகநீதி பற்றி பேச வேண்டும்.

    ஒருவரை ஒரு முறை ஏமாற்றலாம்... சிலரை சில முறை ஏமாற்றலாம். ஆனால், வன்னியர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்ற முடியாது. வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர். அதை தி.மு.க. விரைவில் உணரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக ஆறுகள் சீரமைக்கப்படும்.
    • தங்கம் இறக்குமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ம.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:-

    * சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்.

    * தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீத பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வரப்படும்.

    * மாநிலங்களுக்கு தன்னாட்சி குறித்து பரிந்துரைக்க வலியுறுத்தப்படும்.

    * மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதம் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    * வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்கப்படுவது உழவர்களின் உரிமையாக்கப்படும்.

    * 60 வயது கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

    * பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட ரூ.1 லட்சம் வரையிலான பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    * நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்கப்படும்.

    * கடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 3 நிலக்கரி திட்டங்கள் கைவிடப்படும்.

    * மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி மற்றும் உணவு தானியங்களுக்கு தடை விதிக்கப்படும்.

    * குறிப்பிட்ட காலத்துக்குள் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    * தமிழ்நாட்டை அணு உலை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    * கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

    * மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை திரும்ப பெறப்படும்.

    * தமிழக ஆறுகள் சீரமைக்கப்படும்.

    * தமிழகத்தில் 3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    * பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

    * கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால மருத்துவ உதவி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    * மூத்த குடிமக்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    * பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற தேவைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்பீடு கொடுக்கப்படும்.

    * அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தப்படும்.

    * அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * சென்னையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்படும்.

    * அனைத்து வட்ட தலைநகரங்களிலும் அறுவை சிகிச்சை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகள் தொடங்கப்படும்.

    * சென்னையில் ரூ. ஆயிரம் கோடியில் தேசிய புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும்.

    * நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * போதைப் பொருட்களை ஒழிக்க சட்டத்திருத்தம் செய்யப்படும்.

    * மது விலக்கை நடை முறைப்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * புகையிலை பொருட்கள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும்.

    * தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 7 லட்சமாக உயர்த்த வலியுறுத்தப்படும்.

    * ஜி.எஸ்.டி. வரி 2 அடுக்குகளாக குறைக்கப்படும்.

    * பெட்ரோல்-டீசல் மீதான வரி குறைக்கப்படும்.

    * தங்கம் இறக்குமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும். இதனால் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 6 ஆயிரம் வரை குறையும்.

    * தொழில் தொடங்க மாணவர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்படும்.

    * தருமபுரி-மொரப்பூர் இடையே புதிய ரெயில் பாதை அமைக்கும் பணியை ஒரு ஆண்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    * தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

    * தமிழை தேசிய அலுவல் மொழியாக்க வலியுறுத்தப்படும்.

    * திருக்குறளை தேசிய நூலாக்க வலியுறுத்தப்படும்.

    * மது விலக்கு சட்டம் இயற்ற வலியுறுத்தப்படும்.

    * பாட திட்டங்களில் விளையாட்டு சேர்க்கப்படும்.

    * இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்படும்.

    * புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வலியுறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பு வரை தேர்தலில் போட்டியிட நமச்சிவாயம் தயக்கம் காட்டி வந்தார்.
    • கடந்த 2 நாட்களாக அமைச்சர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை வீடு தேடிச்சென்று சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

    வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பு வரை தேர்தலில் போட்டியிட அமைச்சர் நமச்சிவாயம் தயக்கம் காட்டி வந்தார். பா.ஜனதா மேலிடத்தின் உத்தரவை ஏற்று வேட்பாளராக களம் இறங்கியவுடன் தேர்தல் பணிகளில் அசுர வேகம் காட்டி வருகிறார்.

    கடந்த 2 நாட்களாக புதுச்சேரி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தொகுதி பிரமுகர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை வீடு தேடிச்சென்று சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார்.

    சென்னைக்கு சென்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார்.


    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசையும் சந்தித்து நலம் விசாரித்து, ஆசி பெற்றார். தொடர்ந்து தனக்காக புதுச்சேரிக்கு வந்து பிரசாரம் செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாசிடம் கேட்டுக் கொண்டார்.

    அதற்கு ராமதாஸ் பதிலளிக்காவிட்டாலும், கடலூர், விழுப்புரம் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இதனால் புதுச்சேரியிலும் அவர் பிரசாரம் செய்ய வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேநேரத்தில் புதுவை மாநில பா.ம.க. தலைவர் கணபதியிடம், நமச்சிவாயத்தை வெற்றி பெறச் செய்து எம்.பி.யாக பாராளுமன்றத்துக்கு அனுப்ப தீவிரமாக பணியாற்றும்படி உத்தரவிட்டுள்ளார்.

    • கூட்டணி கட்சிகளின் கொள்கை வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதே.
    • பல கட்சிகள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பிரமாண்ட மேடைகள் அமைத்து பிரசாரம் மேற்கொள்வார்கள்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கோவடி கிராமம் என்னுடைய தாய் கிராமம். நான் சிறுவனாக இருந்தபோது இந்த ஊர் வழியாக தான் திண்டிவனம் செல்வேன். இந்த கிராமத்திற்கு நான் ஒவ்வொரு முறை வரும்போதும் மக்கள் என்னை ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள்.

    ஆகவே நான் எனது தாய் கிராமமான கோவடியில் இருந்து பாராளுமன்ற தேர்தல் பரப்புரையை முதல்முறையாக தொடங்கியுள்ளேன். இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஜவஹர்லால் நேரு 3 முறை பிரதமராக இருந்துள்ளார். அவரது மகள் இந்திராகாந்தியும் 3 முறை பிரதமராக இருந்துள்ளார். தற்போது நரேந்திர மோடி 2 முறை பிரதமராக இருந்துள்ளார். மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக போகிறார்.


    தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி சார்பில் 10 தொகுதிகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும். இந்த கூட்டணி கட்சிகளின் கொள்கை வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதே. குடிசையிலே வாழ்கின்ற மக்கள் நமது மாவட்டத்தில் தான் உள்ளார்கள். விவசாயிகளுக்காக கடந்து 32 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வைத்து விவசாயிகளுக்கு என்று தனி பட்ஜெட்டை அறிவித்து வருகிறோம். மேலும் நாட்டில் குடிப்பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும். அவரிடம் பல்வேறு திட்டங்களை பெறுவதுடன், அதில் முதல் திட்டமாக கோதாவரி கங்கை ஆகியவற்றை இணைக்கும் திட்டத்தை பெற்று அதனை செயல்படுத்த வேண்டும்.

    மேலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வாக்காளர்களாகிய நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். பல கட்சிகள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பிரமாண்ட மேடைகள் அமைத்து பிரசாரம் மேற்கொள்வார்கள். ஆனால் நான் அவையெல்லாம் இல்லாமல் என்னுடைய மக்களுடன் அமர்ந்து உரிமையோடு வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற நோக்கிலே இங்கு வந்து உங்களிடம் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுள்ளேன். வெற்றி தோல்வியை தீர்மானிப்பது பெண்கள்.

    எனவே பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது கிராமத்தில் மட்டுமில்லாமல் தங்களது அருகே உள்ள கிராமங்களுக்கும் சென்று, அங்குள்ள பெண்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். முக்கனிகளில் முதல் கனி மாம்பழம். அதற்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

    • தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் மகளிருக்கு இந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை.
    • பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    2024 பாராளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர்களில் சவுமியா அன்புமணி (தருமபுரி), கவிஞர் திலகபாமா (திண்டுக்கல்), ஜோதி வெங்கடேசன் (காஞ்சிபுரம்) ஆகிய மூவர் பெண்கள். மொத்த தொகுதிகளில் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தான் மகளிருக்கு அதிகாரம் வழங்குதல், இது தான் சமூகநீதி.

    தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் மகளிருக்கு இந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. அதனால் தான் சொல்கிறோம் பாட்டாளி மக்கள் கட்சி தான் சமூகநீதிக் கட்சி என்று!

    அதேபோல், பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தலித் கட்சிகளைத் தவிர, திமுகவோ, அதிமுகவோ அல்லது வேறு எந்தக் கட்சியுமோ பட்டியலினத்தவருக்கு 20% பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. இது தமிழ்நாட்டின் மொத்த தொகுதிகளில் பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டுள்ள தனித்தொகுதிகளின் பிரதிநிதித்துவத்தை விட அதிகம் ஆகும். இது தான் பட்டியலினத்தவருக்கு அதிகாரம் வழங்குதல், இது தான் சமூகநீதி.

    இதற்கு முன் 1999 பாராளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்ட போதே சிதம்பரம், ராசிபுரம் ஆகிய இரு தொகுதிகளை, அதாவது 28.70% தொகுதிகளை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கிய வரலாறு பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. இது தான் நாங்கள் விரும்பும் சமூகநீதி! என கூறியுள்ளார்.

    • சவுமியா அன்புமணி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.
    • கடந்த தேர்தலில் தனது கணவர் அன்புமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    முதலில் வெளியான பட்டியலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவதாக அரசாங்கம் என்பவரின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவருக்கு பதிலாக சவுமியா அன்புமணி அறிவிக்கப்பட்டார்.

    சவுமியா அன்புமணி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. அரசியல் குடும்பத்தில் இருந்தாலும் தீவிர அரசியலில் வெளிப்படையாக இறங்கியது இல்லை. பசுமை தாயகம் அமைப்பின் தலைவராக இருந்து சுற்றுச்சூழல் ஆர்வலராகவே இருந்து வந்தார்.


    கடந்த தேர்தலில் தனது கணவர் அன்புமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

    சவுமியாவின் தந்தை கிருஷ்ணசாமி முன்னாள் காங்கிரஸ் தலைவர். எம்.பி.யாகவும் இருந்தவர். அதே போல் சவுமியாவின் சகோதரர் டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி.யாக இருப்பவர். எனவே சிறு வயதில் இருந்தே அரசியல் சூழலுக்குள் வளர்ந்தவர்.

    அதே போல் மாமனார் டாக்டர் ராமதாஸ் பா.ம.க. நிறுவனராகவும், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் தலைவராகவும் இருப்பவர். கணவர் மத்திய மந்திரியாக இருந்தவர்.


    இப்படி அரசியல் சூழ்ந்த குடும்ப சூழலுக்குள் இருக்கும் சவுமியாவும் தேர்தலில் போட்டியிட விரும்பி இருக்கிறார். மனைவி போட்டியிட விரும்பியதால் தான் போட்டியிட்ட தர்மபுரி தொகுதியில் போட்டியிட அன்புமணி ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

    முக்கியமாக அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றதும் 100 சதவீதம் தேர்தலில் குதிக்க தயாராகி இருக்கிறார். கடைசியில் கூட்டணி மாறியதால் போட்டியிட தயங்கியதாக கூறப்படுகிறது.

    ஒருவேளை கடைசி நேரத்தில் மனம் மாறினால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் தான் கட்சி மேலிடமும் பிரபலமில்லாத அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அறிவித்ததாகவும், எதிர் பார்த்தது போலவே சமியா போட்டியிட தயார் என்று அறிவித்ததால் அரசாங்கத்தை மாற்றி விட்டு சவுமியாவை அறிவித்ததாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • பிரதமர் நரேந்திர மோடி கரங்களை வலுப்படுத்தவும், தேசத்தின் நலன் காக்கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய, பா.ம.க. முடிவெடுத்துள்ளது.
    • பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர வேண்டும் என்று, தேச நலன் சார்ந்து முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி கரங்களை வலுப்படுத்தவும், தேசத்தின் நலன் காக்கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய, பா.ம.க. முடிவெடுத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்று, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் நானும் தைலாபுரம் இல்லத்திற்குச் சென்று, ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாசை நேரில் சந்தித்து மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தோம்.

    தமிழகத்தில், கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, எளிய மக்களுக்கான உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் ராமதாஸ் வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர வேண்டும் என்று, தேச நலன் சார்ந்து முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமதாஸ் மூத்த தலைவராக இருப்பார்.
    • தமிழகத்தில் இந்த கூட்டணி வலுவான அணியாக களம் இறங்குகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் அதிரடி திருப்பமாக பாரதிய ஜனதா கட்சியுடன் பா.ம.க. கூட்டணி அமைத்துள்ளது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் தைலாபுரம் தோட்டத்தில் இதற்கான ஒப்பந்தம் இன்று காலை கையெழுத்தானது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதைத்தொடர்ந்து தைலாபுரம் தோட்டத்தில் வைத்து பேட்டி அளித்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில்,

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பாட்டாளிகளால் உருவாக்கப்பட்ட கட்சியான பா.ம.க. மிக முக்கியமான முடிவை இன்று எடுத்துள்ளது. பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் மூத்த அரசியல் தலைவரான டாக்டர் ராமதாஸ் இந்த முடிவை எடுத்திருப்பதை பாரதிய ஜனதா கட்சி மனமுவந்து வரவேற்கிறது.

    400 இடங்களுக்கு மேல் பாரதிய ஜனதா கட்சியை வெற்றி பெற வைப்பதற்காக நாங்கள் வேள்வியோடு களம் இறங்கியுள்ளோம்.

    தமிழக அரசியலில் டாக்டர் ராமதாஸ் பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளார். மேலும் அவர் போராடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு உரிய மரியாதையை பாரதிய ஜனதா கட்சி அளிக்கும்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமதாஸ் மூத்த தலைவராக இருப்பார். வாஜ்பாய் காலத்தில் இருந்தே ராமதாஸ் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருக்கமாக அன்பு பாராட்டி வருகிறார். அந்த வகையில் இந்த நேரத்தில் மீண்டும் வலுவான கூட்டணியை அமைத்திருக்கிறோம்.

    பா.ம.க. தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் புதிய விடியலுக்காக, மாற்று அரசியலுக்காக குரல் கொடுத்து வருகிறார். அதனை முன்னெடுத்து செல்லும் தலைவராகவும் அவர் விளங்கி வருகிறார்.

    தமிழகத்தில் இந்த கூட்டணி வலுவான அணியாக களம் இறங்குகிறது. இதற்காக டாக்டர் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

    பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பா.ம.க. எடுத்துள்ள முடிவால் நேற்று இரவில் இருந்து தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெற உள்ள பாராளு மன்ற தேர்தல் மட்டுமின்றி 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி நிச்சயம் அர சியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.

    கூட்டணியை இறுதி செய்து சேலத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் டாக்டர் ராமதாசையும், அன்புமணி ராமதாசையும் மேடை ஏற்றுவதற்கு முடிவு செய்தோம். இதற்காக இரவோடு இரவாக கோவையில் இருந்து புறப்பட்டு தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தோம்.

    டாக்டர் ராமதாஸ் எங்களுக்கு சிற்றுண்டி கொடுத்து வரவேற்றார். பிரதமர் மோடியுடன் கூட்டத்தில் பங்கேற்பதற்கு இருவருமே இசைவளித்துள்ளார்கள். பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. 2014, 2019-ம் ஆண்டு தேர்தல்களிலும் இணைந்து போட்டியிட்டுள்ளது.

    நடைபெற உள்ள தேர்தலில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கைகோர்த்துள்ளோம்.

    60 ஆண்டுகளாக தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அனைவருமே விரும்புகிறார்கள். டாக்டர் ராமதாசும் அதையே கூறி வருகிறார். அவர் தமிழக அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் வலு சேர்க்கப்போகிறார். அவருக்கு நாங்கள் முழு மரியாதையை அளிப்போம். இந்த நேரத்தில் வேறு அரசியலை பேச விரும்பவில்லை.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    இதைத்தொடர்ந்து அவரிடம், எந்தெந்த தொகுதியில் பா.ம.க. போட்டியிடும் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதுபற்றி விரைவில் அறிவிப்போம் என்று அண்ணாமலை தெரிவித்தார். பா.ம.க.வுக்கு மேல்சபை எம்.பி. அளிக்கப்படுமா? என்கிற கேள்விக்கு அன்புமணி, ராமதாஸ் இருவருமே பதில் அளிக்காமல் சென்று விட்டனர்.

    • தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆள்பவர்களை மாற்ற வேண்டும் என்று மக்கள் ஆழமாகவே எண்ணுகிறார்கள்.
    • எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் இல்லத்தில் இன்று காலை இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில் பா.ஜனதா- பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ஜனதா கூட்டணியில் பாமக-வுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பா.ஜனதாவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி வருமாறு:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று பா.ம.க. முடிவு செய்துள்ளது. நாட்டின் நலன் கருதியும், பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக வேண்டும் என்கிற எண்ணத்திலும், தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரவுமே இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆள்பவர்களை மாற்ற வேண்டும் என்று மக்கள் ஆழமாகவே எண்ணுகிறார்கள். அதனை கருத்தில் கொண்டு நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

    இதையடுத்து தமிழகத்தில் மாற்றம், முன்னேற்றம் அன்புமணி என்கிற கோஷத்தை முன்வைத்தீர்களே? அது என்ன ஆனது? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அன்புமணி பதில் அளிக்கவில்லை.

    ×