search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லிகார்ஜுன கார்கே"

    • இந்திரா காந்தி மிகத் திறமையான நிர்வாகி, நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர்.
    • நாட்டுக்கான அர்ப்பணிப்பு குறித்து அவர் கற்றுத்தந்த பாடங்களே எனது ஒவ்வொரு அடியையும் வலுப்படுத்தி வருகிறது.

    புதுடெல்லி:

    இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாளையொட்டி புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

    இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கார்கே பதிவிட்டுள்ளதாவது,

    "இந்திரா காந்தி மிகத் திறமையான நிர்வாகி, நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர். இந்தியாவின் முதல் பெண் பிரதமரான அவர் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். அவரது பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    அதேபோல் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    இந்திய மக்களின் தலைவர் இந்திரா காந்தி, நாட்டுக்கான அர்ப்பணிப்பு குறித்து அவர் கற்றுத்தந்த பாடங்களே எனது ஒவ்வொரு அடியையும் வலுப்படுத்தி வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
    • இதில் வெற்றிபெற பா.ஜ.க.வும், காங்கிரசும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

    பெங்களூரு:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து, 5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    5 மாநில தேர்தல் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. 5 மாநிலங்களிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

    பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் எரிச்சலடைந்துள்ளனர். பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

    அசோக் கெலாட்டும், பூபேஷ் பாகேலும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

    சிவராஜ் சிங் சவுகான் காரணமாக எம்.பி.யில் பிரச்சினைகள் உள்ளன. மக்கள் அவருக்கு எதிராக உள்ளனர்.

    எனவே, 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் அரசு நிச்சயம் அமையும் என எதிர்பார்க்கிறோம், அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும் என தெரிவித்தார்.

    • 2022 அக்டோபரில் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    • பிரியங்கா உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் அங்கமான செயற்குழு முக்கிய விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மிக்கது. அக்கட்சியின் புதிய தலைவராக 2022 அக்டோபரில் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய செயற்குழுவில், மல்லிகார்ஜுன கார்கே, சோனியாகாந்தி, ராகுல் காந்தி, மன்மோ கன்சிங் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரியங்கா காந்தி வதேராவும் இடம் பெற்றுள்ளார். இதையடுத்து அவர் உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஏ.கே.அந்தோனி, அம்பிகா சோனி, திக்விஜய் சிங், அஜய் மாக்கன், ப.சிதம்பரம் ஆகியோரும் புதிய செயற் குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

    தீபாதாஸ் முன்ஷி, சையத் நஸீர் ஹுசைன், ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக், சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்ட புதிய முகங்களுக்கும் செயற்குழுவில் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. சோனியாவின் தலைமைக்கு எதிராக விமர்சனங்களை எழுப்பிய சசி தரூர், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலட்டுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் சச்சின் பைலட் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    • தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மேலும் சீரமைக்க வேண்டும் என்று கார்கே கேட்டுக்கொண்டார்.
    • இந்தியாவிலேயே சிறந்த கூட்டணி தமிழகத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    2024 பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கும வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    கர்நாடகா, கேரளா மாநில காங்கிரசாருடன் ஆலோசனை நடத்தி முடிந்த நிலையில் நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் 27 பேர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கார்த்தி சிதம்பரம், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் மற்றும் எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதால் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கார்கே கேட்டுக்கொண்டார். இதற்காக பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மேலும் சீரமைக்க வேண்டும் என்று கார்கே கேட்டுக்கொண்டார். புதிய நிர்வாகிகளை நியமித்து, புதிய வியூகங்களை வகுத்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    ராகுல்காந்தி பேசுகையில், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை பார்த்து அவர் உங்கள் மாநிலத்தில் ஆண்டுக்கு ஆண்டு காங்கிரஸ் வாக்குகள் குறைந்து வருவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

    இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்றும் ராகுல் கேட்டுக் கொண்டார். இதையடுத்து சுமார் 3 மணி நேரம் பல்வேறு விஷயங்கள் குறித்து மேலிட தலைவர்களுடன் தமிழக காங்கிரசார் விவாதித்தனர்.

    கூட்டத்துக்குப் பிறகு கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அனைவரின் கருத்தையும் கேட்டறிந்தனர். வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி, தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அவர்களின் கருத்தாக இருந்தது.

    இந்தியாவிலேயே சிறந்த கூட்டணி தமிழகத்தில் உள்ளது. அந்தக் கூட்டணியை மேலும் வலுப்படுத்தி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என அறிவுரை வழங்கினர். 'இந்தியா' கூட்டணியின் வெற்றியை தடுக்க முயலும் பா.ஜ.க.வின் முயற்சியை தகர்க்கும் வகையில் தேர்தலை எதிர்கொள்வது, பரப்புரையை எந்த வகையில் மேற்கொள்வது, செய்த சாதனைகளை எடுத்துரைப்பது ஆகியவை தொடர்பாக கூட்டத்தில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

    3 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து பிரச்சினைகளையும் திறம்பட கையாண்டு தேர்தலில் வெற்றி பெறுவது தான் நோக்கமாக இருந்தது.

    தமிழகத்தில் கட்சியின் வட்டாரத் தலைவர்கள், நகரத் தலைவர்கள் மாநாட்டையும், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைவர்கள் மாநாட்டையும் நடத்தி, இறுதியாக மாநில மாநாடு நடத்தவும், இந்த நிகழ்வுகளுக்கு தலைவர்கள் ராகுல் காந்தியும், கார்கேவும், நேரில் வரவும் கோரிக்கை வைத்தேன்.இவ்வாறு செய்தால் இயக்கம் மேலும் வலுவடையும் என்றும் கூட்டதில் யோசனை வைத்தேன்.

    அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கொடியை பறக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடைபயணம் செய்வதாகக் கூறிக்கொண்டு வாகனத்தில் செல்கிறார். அது நடைப்பயணம் அல்ல, சொகுசுப் பயணம், தமிழகத்தில் பா.ஜ.க. காகிதப் புலியாகத்தான் உள்ளது. மக்கள் ஆதரவு அவர்களுக்கு இல்லை.

    வேட்பாளர் தேர்வு குறித்து பேசப்பட்டதா என்று கேட்டதற்கு அதை காங்கிரஸ் மேலிடம் பார்த்துக்கொள்ளும் என்றார்.

    இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியானது. அதை காங்கிரஸ் மேலிடம் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் கூட்டத்தில் அது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    • ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது.
    • இது ராகுல் காந்தியின் வெற்றி மட்டுமல்ல, இந்திய மக்களின் வெற்றி என்றார் காங்கிரஸ் தலைவர் கார்கே.

    புதுடெல்லி:

    மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார்.

    சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய மறுத்துவிட்டது.

    இதையடுத்து, 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ஏன்? தண்டனை விதிக்கப்பட்டதால் தனிநபரை தேர்ந்தெடுத்த தொகுதி வாக்காளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச 2 ஆண்டு சிறை தண்டனை குறித்த விளக்கம் இல்லை எனக்கூறி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

    2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் ராகுல் காந்தி நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளது. மேலும் மக்களவை தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு உருவாகியுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள். ஜனநாயகம் வென்றது. அரசியல் சாசனம் வென்றுள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறேன். இது ராகுல் காந்தியின் வெற்றி மட்டுமல்ல, இந்திய மக்களின் வெற்றி.

    உண்மைக்காகவும், நாட்டின் நலனுக்காகவும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4,000 கிலோமீட்டர்களுக்கு மேல் நடந்து சென்று அனைத்துத் தரப்பு மக்களையும் ராகுல் காந்தி சந்தித்தார். அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு உண்டு.

    ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய 24 மணி நேரமே ஆனது. இனி எப்போது அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

    • கடினமான காலங்களில், மதச்சார்பற்ற கூட்டணிக்காக ஒருமித்த கருத்தைக் கொண்ட கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் உங்கள் தலைமைத்துவம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
    • உங்கள் பரந்த அனுபவமும், நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பும் எங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பிறந்தநாளையொட்டி அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மல்லிகார்ஜூன கார்கே அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த கடினமான காலங்களில், மதச்சார்பற்ற கூட்டணிக்காக ஒருமித்த கருத்தைக் கொண்ட கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் உங்கள் தலைமைத்துவம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. உங்கள் பரந்த அனுபவமும், நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பும் எங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறது. வலிமையான "இந்தியா"வை உருவாக்குவதற்கான உங்கள் முயற்சிகள், நமது மகத்தான தேசத்தை வடிவமைத்த மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான சிந்தனைகளுடன் நம்மை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லட்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • பீகார் தலைநகர் பாட்னாவில் வருகிற 12-ந் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள்.

    பாட்னா:

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போட்டியிட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தலைவர்கள், கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லவும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தை பீகாரில் நடத்த மம்தா பானர்ஜி பரிந்துரைத்து இருந்தார். அதன்படி பீகார் தலைநகர் பாட்னாவில் வருகிற 12-ந் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் 12-ந் தேதி இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

    தற்போது இந்த கூட்டம் 23-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பீகார் துணை முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் இதை அறிவித்தார்.

    நிதிஷ்குமாருடன் இணைந்து பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறுகையில், 'காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளனர்' என தெரிவித்தார்.

    மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின்

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து இந்த தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என தெரிகிறது.

    முன்னதாக எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்தந்த கட்சிகளின் தலைவர்கள்தான் பங்கேற்க வேண்டும் எனவும், பிரதிநிதிகளை அனுப்புவதை ஏற்க முடியாது என்றும் நிதிஷ்குமார் கூறியிருந்தார்.

    அதன்படி இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களே நேரடியாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு உபகரணங்களை அமைக்க வேண்டும்.
    • ரெயில்வேயில் உள்ள காலி பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்?

    புதுடெல்லி:

    ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்திய வரலாற்றில் மிக மோசமான ரெயில் விபத்தாக பாலசோர் ரெயில் விபத்து உள்ளது. இந்திய ரெயில்வேயில் 4 சதவீத வழித்தடங்களில் மட்டுமே 'கவாச்' பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டு இருப்பது ஏன்? ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு உபகரணங்களை அமைக்க வேண்டும். ரெயில்வேயில் உள்ள காலி பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, "ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் ரெயில் விபத்தை சதி எனக்கூறிய பிரதமர் மோடி இப்போது என்ன சொல்லப் போகிறார்" என்று கூறினார்.

    • ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகிறார்கள்.
    • பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்தால் விளக்கம் அளிப்பேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    இந்திய ஜனநாயகம் அச்சுறுத்தலில் இருப்பதாகவும், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் இதில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகிறார்கள்.

    அதேநேரத்தில் ராகுல் காந்தி தான் அப்படி பேசவில்லை என்றும், இது தொடர்பாக பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்தால் விளக்கம் அளிப்பேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார். காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார் என்று திட்டவட்டமாக தெரிவித்தது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் நாளை பேசுவதற்கு நேரம் கேட்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனகார்கே தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு அவர் இதுதொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசுவதற்கு நாளை நேரம் கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தால் அவர் பேசுவார். ஜனநாயகத்தில் எங்களை பேசக்கூட அனுமதிப்பது இல்லை. இதுதான் பிரச்சினையாகும். மைக்கை அணைத்து விடுவார்கள்.

    நாங்கள் எழுப்பும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது.பாதயாத்திரை முடிந்து 40 நாட்கள் கழித்து இப்போது யாரை சந்தித்தீர்கள் என்று கேட்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரையின் போது ராகுலை சத்தித்தனர்.

    எங்களை குறிவைத்து துன்புறுத்துவதற்கான முயற்சி இதுவாகும். எங்களை மிரட்டி பலவீனப்படுத்த விரும்புகிறார்கள். நாங்கள் பயப்படமாட்டோம். பலவீனமும் அடையமாட்டோம்.

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்.

    • உத்தரகாண்ட், நாகாலாந்து, திரிபுரா, அசாம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்பட 13 மாநில காங்கிரஸ் தலைவர்களை மாற்ற திட்டமிட்டுள்ளார்.
    • புதிய தலைவர்களின் கீழ் மாநிலங்களில் புதிய நிர்வாக குழுவை ஏற்படுத்தவும் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசித்து வருகிறார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மல்லிகார்ஜுன கார்கே இதற்காக பல புதிய திட்டங்களையும் வியூகங்களையும் அமல்படுத்த ஆலோசித்து வருகிறார்.

    அதன் ஒருபகுதியாக குஜராத், மராட்டியம், டெல்லி, உத்தரகாண்ட், நாகாலாந்து, திரிபுரா, அசாம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்பட 13 மாநில காங்கிரஸ் தலைவர்களை மாற்ற திட்டமிட்டுள்ளார். புதிய தலைவர்களின் கீழ் மாநிலங்களில் புதிய நிர்வாக குழுவை ஏற்படுத்தவும் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசித்து வருகிறார். புதிய நிர்வாக குழுவில் அனைத்து தரப்பினரும் இடம் பெறச்செய்ய வேண்டும் என்பதிலும் அவர் ஆர்வம் காட்டுகிறார். அதுபோல 9 பொதுச் செயலாளர்களையும் மாற்ற ராகுலிடம் அவர் அனுமதி கேட்டுள்ளார்.

    இவை தவிர மாநில பொறுப்பாளர்களையும் கூண்டோடு மாற்றிவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறார். சோனியா, ராகுல் இருவரும் ஒப்புதல் அளித்த பிறகே புதிய மாநில தலைவர்கள் பட்டியலை கார்கே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சமூக நீதியை காப்பதில் காங்கிரசும் திமுகவும் இணைந்து செயல்படும் என கார்கே பேச்சு
    • அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பு சட்டம் விழுமியங்கள் திமுகவின் அடிப்படையாக உள்ளன.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசியதாவது:-

    என்னை ஒப்பிடுகையில் நீங்கள் இளமையானவர், நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். தமிழ்நாடு எப்போதும் முன்னோடியான மாநிலம், சிறந்த தலைவர்கள், அதிகாரிகள், எழுத்தாளர்களை உருவாக்கிய மாநிலம். தமிழ்நாடு தான் கட்டாய கல்வியை முதலில் கொண்டு வந்தது. சமூக நீதியை காப்பதில் காங்கிரசும் திமுகவும் இணைந்து செயல்படும்.

    தமிழ்நாடு மதிய உணவுத்திட்டம், அனைவருக்கும் கல்வி, தொழில்துறை வளர்ச்சி என அனைத்து திட்டங்களையும் அறிமுகப்படுத்தியதில் முன்னணியில் உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமரான நேரு நாட்டில் அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்த விரும்பியதை மு.க.ஸ்டாலின் பின்பற்றுகிறார். அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பு சட்டம் விழுமியங்கள் திமுகவின் அடிப்படையாக உள்ளன.

    எங்களது திமுக-காங்கிரஸ் கூட்டணி அடுத்த மக்களவைத் தேர்தலிலும் தொடரும் என்பதை இந்த மேடையில் அறிவிக்கிறேன். இக்கட்டான நிலையில் நாடு தற்போது உள்ள இந்த சூழலில் எங்களது கூட்டணி தொடரும். தமிழ்நாடு பாஜகவிற்கு ஒரு இடத்தைக் கூட கொடுக்கவில்லை.

    தமிழ்நாடு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் பாஜக அரசியல் செய்கிறது. நீதித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்திலும் பாஜக தலையீடு செய்து வருகிறது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். மக்களை வேற்றுமைப்படுத்துபவர்களுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். யார் நாட்டை வழிநடத்தப் போகிறார்கள் என நான் தெரிவிக்கவில்லை. அது முக்கியமல்ல. நாம் இணைந்து செயல்பட வேண்டும். பாஜகவிற்கு எதிரான இந்த போராட்டம் முக்கியமானது. நாம் இதில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    • யாராவது உண்மையைப் பேசினாலோ, அதைப் பற்றி எழுதினாலோ அவர்களை சிறைக்கு அனுப்புகிறார்கள்.
    • பிரதமர் அதானிக்காக பணியாற்றுகிறார், ஏழை மக்களுக்காக அல்ல என கார்கே விமர்சனம்

    ராஞ்சி:

    மத்திய அரசின் கொள்கைகள் மக்கள் விரோதமானவை என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாக சென்று மக்களிடையே எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சாகேப்கஞ்ச் மாவட்டம் பாகூரில் காங்கிரஸ் கட்சியின் இந்த பிரசார பயணத்தை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தொடங்கி வைத்தார்.

    இக்கூட்டத்தில் பேசிய கார்கே, பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடியதுடன், நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று குற்றம் சாட்டினார். அவர் பேசியதாவது:-

    பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும் பேச்சு சுதந்திரம் கிடையாது. யாராவது உண்மையைப் பேசினாலோ, அதைப் பற்றி எழுதினாலோ அவர்களை சிறைக்கு அனுப்புகிறார்கள்.

    பிரதமர் நரேந்திர மோடியின் நண்பரான அதானியின் சொத்து மதிப்பு 2019ல் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது, 13 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பிரதமர் அதானிக்காக பணியாற்றுகிறார், ஏழை மக்களுக்காக அல்ல. அதானி குழுமத்திற்கு எல்ஐசி ரூ.16,000 கோடியும், பாரத ஸ்டேட் வங்கி ரூ.82,000 கோடியும் வழங்கி உள்ளது. இந்த விஷயத்தை ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் எழுப்பினார். அது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×